"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற சிறுகதைத் தொகுப்பு மீதான அரசியல்
ஏதோவொரு காரணத்தால் நிறுத்தப்பட்ட எனது உரை!
கனடா சமவுரிமை வெளியிட்ட "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற நூல் மீது, 19.04.2026 யாழ்ப்பாண விமர்சனக் கூட்டம் நடக்கவிருந்தது. இறுதி நேரத்தில் எனது உரை கூட்ட ஏற்பாட்டாளர்களால்; நிறுத்தப்பட்டது. அங்கு ஆற்றவிருந்த எனது உரை, இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
கலை இலக்கியமானது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியும் என்று கூறி, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சமூகப் பிளவை யார் மறுக்கின்றனரோ, அவர்களே ஒடுக்கும் வர்க்கத்தினது கலை இலக்கியத்தைப் படைக்கின்றனர். இவர்கள் தங்கள் சமூகப் பார்வையை மூடிமறைக்க இலக்கியத்துக்குச் சமூக உள்ளடக்கமற்ற அழகியலாக, கலை உத்தியாகப் பூசி மெழுகுகின்றனர்.
தனிமனித முரண்களை, சமூக முரண்களை.. அனைத்தும் தழுவிய முரண்களிலிருந்து தனியாக்கி, முரணுள்ள சிந்தனைக்குள் - வாழ்வியலுக்குள் குறுக்கிக் காட்டி விடுகின்றனர்;. இது தான் ஒடுக்கும் தரப்பின் சிந்தனைமுறை. இரக்கம், அன்பு, பரிதாபம்… போன்ற மனிதவுணர்வுக்குள் ஒளித்துக்கொள்கின்றனர். முரணிலிருந்து விடுபடுவதற்கான வாழ்வியலைக் காட்டுவதில்லை.
வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அரசியலானது. அரசியல் கடந்த இலக்கியம் என்பது, வடிகட்டிய பொய். அழகியலே இலக்கியம் என்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அழகியல் என்பது, உள்ளடக்கத்தை முன்வைக்கும் வடிவங்களையே வேறுபடுத்துகின்ற உத்தியாகும். உள்ளடக்கத்தை வேறுபடுத்துவதல்ல உத்தி. உள்ளடக்கம் ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட, இந்த இரண்டில் ஒன்றாக இருக்க முடியும்.
"சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" எது சட்டியில் இருக்கின்றதோ, அதுவே அகப்பையில் வரும். இது தான் எங்கும் தளுவிய உண்மையாகும்.
வாழ்நிலை தான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறதே ஒழிய, உணர்வுகள் வாழ்நிலையைத் தீர்மானிப்பவை அல்ல! வாழ்க்கை கடந்த கற்பனையில் உணர்வுரீதியில் முற்போக்காக வாழவும் சிந்திக்கவும் முடியாது. போலியாகப், புரட்டுத்தனமாக ஏமாற்றுவது, கலை இலக்கியப் படைப்பிலும்; நடக்கின்றது.
படைப்பாளிக்குச் சமூகம் குறித்து என்ன சமூகப் பார்வை உள்ளதோ, அதுதான் அவரின் படைப்பாகின்றது. மனித சமூகம் ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட இரு முரண்கூறுகளுடன் இயங்குகிறபோது. படைப்பாளி இதில் எதைச் சார்ந்து நிற்கின்றார் என்பது, அவரின் படைப்பில் பிரதிபலிக்கும்.
அன்றாட மனித வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளும், அதற்கான தீர்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை சமூகத்தின் பொதுத் தீர்வாக இருக்க முடியுமா என்றால் இல்லை. உதாரணமாக கடவுளிடம் முறையிடுதல் மூலம் சுயதீர்வு காணுதல், தற்கொலை மூலம் தன்னை அழித்துத் தீர்வு காணுதல் … இதுபோன்றவை சமூகத் தீர்வாக இருக்க முடியாது. தீர்வு என்பது முழுமையில் முரணற்ற வகையில் அணுகுதலே. இதைச் சொல்லும் விதம் அழகியல் மற்றும் உத்தி.
இந்த வகையில் இந்தக் கதைகள் மீதான எனது விமர்சனங்கள், அரசியல் உள்ளடக்கம் மீதே. குறித்த கதைக்குரிய அழகியல்கள் மீதானதல்ல.
இங்கு உள்ளடக்கம், அழகியல்.. இன்றி இலக்கியம் கிடையாது. இரண்டும் இருந்தால், அதை விமர்சிக்கக் கூடாது என்பது இலக்கியவாதிகளின் பொதுப்புத்தியாகவும், சிந்தனைமுறையாகவும் இருக்கின்றது.
முரண்பாடுகளைக் கதைக் கருவாக்கிவிட்டால், முரண்பாடு குறித்த கதையாசிரியரின் பார்வையை அங்ககீகரிக்க வேண்டும் என்பது இலக்கியப் பொதுப் புத்தியாகும். கதை முன்னிறுத்தும் கருவுக்குரிய முரண்பாடு பற்றி, சமூகத்தில் பலவிதமான கருத்துகள் காணப்படும் என்பதை இலக்கியவாதிகள் மறுக்கின்றனர். அனைத்தும் தழுவிய வகையில் முரணற்ற வகையில் முரண்களைக் காணவும், காட்டவும் மறுக்கின்றனர். உதாரணமாக வர்க்கம், சாதி, இனம், பால்… உள்ள முரண்களை, முரணற்ற சமூகக் கூறாக மாற்றும் இலக்கியத்தை, அதாவது சமவுரிமையை கொண்ட மனிதத்தன்மையை மறுதளிக்கும் இலக்கியங்கள் இருப்பதை மறுதளிக்கின்றனர்.
இதனால் சமூக முரண்பாடு சார்ந்து கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. கதையின் உள்ளடக்கம் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க அழகியலையும், உருவத்தையும், உத்தியையும்.. முன்னிறுத்திப் பேசுகின்றனர். உள்ளடக்கத்தை விமர்சிப்பதை, இலக்கியம் மீதான வரட்டுப்பார்வை என்று கூறித் தப்பிக்க முனைகின்றனர்;.
இலக்கியக் கரு மூலம் முன்வைக்கும் சமூகப் பார்வை முரணுள்ளதாக இருக்க முடியாது. சமூகம் பொதுவாக ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட கூறாகப் பிளவுண்டுள்ளது. எந்தக் கருவாக இருந்தாலும், இதைத் தாண்டியிருப்பதில்லை. கருவை ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்பட்ட முரண்பாட்டுக்குள் பூசி மெழுகுவது என்பது, ஒடுக்கும் தரப்புக்கான இலக்கியமாகும்;.
மனித ஏற்றத்தாழ்வைப் போற்றுவது உன்னதமான அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஒடுக்கும் வர்க்கத்தின் கோட்பாடே!
மனிதனின் கண்ணுக்குத் தெரியும் புற - அக அழகைப் போற்றுவதும் - நியாயப்படுத்தும் கோட்பாடுகள், அனைத்தும் இந்தச் சுரண்டும் உலகின் வெவ்வேறு வடிவங்களாகும். உழைக்கும் மானிடப் பண்பை, சமூக இயக்கத்தை, சுயநலமற்ற வாழ்வியல் கூறை, மனிதநேயத்தை, மனிதப்பண்பை, வாழ்வியல் நேர்மையை, தன்மானத்தை, போராடும் பண்பை, சக மனிதனை மதிக்கும் பண்பை, அன்பை, ஆதரவை, அச்சமின்மையை, தேடும் பண்பை. முரணற்ற வகையில் இலக்கியத்தில் காண வேண்டும். பொதுப் புத்தியில் எதையும் காணவும், காட்டவும் கூடாது.
நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பிலும், சிந்தனைமுறையிலும் தனிமனித வாதமும், மனிதக் குரோதமும், தனிமனிதத் தீர்வுகளும், சுயநலமும், தான் அல்லாதவரைச் சுரண்டுதலும் ஒடுக்குதலும், தேசங் கடந்த நுகர்வுவெறியும், சமூக வெறுப்பும், தான் அல்லாத உயிர்களை வாழ் தகுதியற்றதாகக் கருதும் பொது மனப்பாங்கு.. கொண்ட பொதுப் புத்தியும், பொதுச் சிந்தனையும் சமூக ஓட்டத்தில் காணப்படுகின்றது. இதுவே கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது.
இதை மூடிமறைக்க முற்படும்போது உதாரணமாக இயக்க மற்றும் அரசு வன்முறைகளை எதிர்ப்பது, நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கலாச்சாரங்களை எதிர்ப்பது, ஏகாதிபத்தியம் சார்ந்த ஜனநாயகம், சுதந்திரம் என்ற மாமூல் முதலாளித்துவக் கண்ணோட்டத்தை முன்வைப்பதை.. கலை இலக்கியமாக்குகின்றனர். குறிப்பாக இலங்கைச் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுரத்துவ எச்ச சொச்ச முரண்பாடுகளை முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் அணுகுவது மூலம், தமக்குப் போலியான முற்போக்கு முகமூடியை அணிந்து கொள்கின்றனர்.
"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற சிறுகதை பிற்போக்கான யதார்த்தமான மாமூலை நிராகரித்து உண்மையான சமூகத்தைக் கண்டறிய முயலுகின்றனரா எனப் பார்ப்போம்.
