பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.
1983 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி சுமார் 40,300 கோடி ரூபா எனறு இலங்கை மத்திய வங்கியே 2003-இல் அறிவித்துள்ளது. அதாவது வருடாந்தர இலங்கையின் தேசிய வருமானத்தை விட இது அதிகமாகும். இது அழிந்த சொத்து இழப்பை மட்டும் குறிக்கின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 1983-1987-க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994-க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2,265 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் மற்றும் பல்துறை சார்ந்து 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு) மிக விரிவானது.