Language Selection

பி.இரயாகரன் -2020

இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் -  படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.

 

"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.

இலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாது இருப்பது ஏன்? இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது "துரோகமாக" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.

 

அமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.

பிரான்சில்; வெளியான முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதமானது தொடர் பயங்கரவாதத்தை ஏவிவருகின்றது. இந்த பின்னணியில் துருக்கி உள்ளிட்ட நாடுகள், சுதந்திரமான கருத்துரிமைக்கு சவால் விடுத்திருக்கின்றன.

இலங்கைக்கு என்று இறையாண்மை கிடையாது. எந்த நாட்டு மூலதனம் இலங்கையை கட்டுப்படுத்துகின்றதோ, அந்த நாட்டுக்கு இலங்கை அடிமை. இது பொதுவான அரசியல் உண்மை. இது சீன மூலதனத்தின் விதியல்ல, உலக மூலதனத்தின் பொது விதி. இதுவரையான உலகம் மேற்கு மூலதனத்தினால் கட்டுப்படுத்தபட்ட சூழல், இன்று மாறி வருகின்றது.


வெள்ளாளிய புலித் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழகத்து சங்கிகளும் (ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையல்ல – ஓடுக்கும் தமிழனை), புலிப் பணத்தை தமதாக்கிய புலத்துப் புலிகளும், பிரிட்டிஸ் நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அளவுக்கு, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எந்த வித நன்மையுமில்லை.


20வது திருத்தச் சட்ட மூலம் சட்டமாகிவிட்டது. இதன் மூலம் அதிக அதிகாரங்களைக்  கொண்ட ஒரு நபர் நாட்டை ஆளப்போகின்றார். இந்தச் சர்வாதிகாரம் மூலம் நாட்டில் ஜனநாயகமும், நீதியும் கொண்ட, மகிழ்ச்சியான ஒரு நாட்டை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் பிரகடனம் செய்கின்றனர்.


தில்லையில் ஒடுக்கப்பட்ட தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய சமஸ்கிருதம். கிளிநொச்சியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்துகின்றது வெள்ளாளியம்.

ஈழத்து வெள்ளாளியத் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி - அதை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் திருமுருகன் காந்தியின் (மே 17யின்) அரசியல், பார்ப்பனியமல்லாது வேறு எதுவாகவும் இருக்க முடியாது. வெள்ளாளியம் என்பது பார்ப்பனியத்தின் மற்றுமொரு முகமே. அது, தானல்லாத அனைத்தையும் "துரோகி" என்று கூறும், அதிகாரம் இருந்தால் கொல்லும்.

பார்ப்பனிய சங்கிகள் எப்படி அரசியலை அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாது மொட்டையாக "இந்து விரோதி", "தேச விரோதி".. என்று தங்கள் இந்து பாசிச மொழியில் கூறுகின்றனரோ அப்படியேதான், இனவாதம் பேசும் தமிழ் சங்கிகள் "தமிழினத் துரோகி" என்று தங்கள் இனவாத தமிழ் பாசிச மொழியில் புலம்புகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

மாநில அமைப்புக் கமிட்டியில் நடப்பது, கீழ் இருந்து மேலாக, மேல் இருந்து கீழான விவாதமல்ல. மாறாக மேல் இருந்து கீழாக முடிவுகளை முன்நகர்த்தும் நபர்களுக்கு இடையிலான - அதிகாரத்துக்கான முரண்பாடுகளே.

மறுபக்கம் தலைமை மட்டத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகி இருக்கின்றது. முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி அணிகள், அரசியலற்ற வன்மங்களை எதிர்தரப்பின் மீது கொட்டுவதுடன் - தனிநபர்களின் பிறப்பிலான சாதியை முன்னிறுத்தி வசைபாடுவதே அரசியலாக அரங்கேறுகின்றது.

தமிழக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களே!, இக்கருத்துகளை முன்னிறுத்தும் தனிநபர்களே!!

நீங்கள் புலிகளையும், இனவாத வெள்ளாளிய தமிழ் தேசியத்தையும் ஆதரிக்கின்ற, கொண்டாடுகின்ற அரசியலின் சாரம் என்ன?

வரலாற்றைப் புரட்டிப் போட்டால் வன்முறையும் – வெள்ளாளியத் தமிழ் தேசியத்தின் பெயரில் ஒடுக்கிய வக்கிரமுமே, வரலாறாக இருப்பதைக் காணமுடியும். அமைதிவழி, ஜனநாயகவழி போராட்டமெல்லாம் - வன்முறை அடிப்படைகள் மீதுதான் நடந்தேறுகின்றது.

ஜனநாயகம் இன்று நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம், தனிநபர் சர்வாதிகாரம் மூலம் தீர்வைக்; காணமுடியும் என்கின்றனர். மனித வரலாற்றையும், அதில் மனித அவலத்தையும் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

முன்னாள் வடமாகாண ஆளுநரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், தொடர்ச்சியாக இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவது குறித்து பேசி வருகின்றார். அரசு அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வந்த நோக்கம் எது

எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை.

மாடு "புனிதமானது" என்பது பகுத்தறிவின்றி மூளை முடங்கிவிட்டவர்களின் நம்பிக்கையே. இந்த நம்பிக்கையை முழு மக்களினதும்; புனிதமாக கட்டமைக்கின்ற – காட்டுகின்றதன் மூலம், மத அடிப்படைவாதமானது மேலேழுகின்றது. இதன் மூலம் நாளைய ஒடுக்குமுறைகளுக்கும் - மத வன்முறைகளுக்குமான விதைகள் இடப்படுகின்றது.

தனிமனிதன் மாட்டு இறைச்சியை உண்பதும் உண்ணாமல் விடுவதும் அவரவர் தேர்வு. அதை நீயும் உண்ணக் கூடாது என்பது, மற்றவர் உணவுச் சுதந்திரத்தில் தலையிடுவது. இந்த தலையீடு ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மனித உணவிலும் மனிதர்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற செயற்பாடானது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற அரசியல் செயற்பாட்டின் ஒரு தொடர்ச்சியே. இது இலங்கையின் இன-மத ஒடுக்குமுறையின் நீட்சியாகவே மேலெழுகின்றது.

"இலங்கையின் சுதேச குடிமக்களின் முதல் மொழி தமிழாக" இருக்கும் போது, அதே சுதேச குடிமக்களின் முதல் மதம் பவுத்தமே. 2000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இதைத் தான் கூறுகின்றது. தமிழ் மொழியை குறிப்பிடும் விக்கினேஸ்வரன், பவுத்தத்தை குறிப்பிடத் தவறியதன் மூலம், இனவாதத்தைத் தூண்டி தனது அடிப்படைவாத மதவாதத்தையே முன்னிலைப்படுத்தி உள்ளார். வரலாற்றைக் குறுக்கியும் - திரித்தும் பொய் பேசுவதே – மதவாதிகளினதும் இனவாதிகளினதும் அடிப்படைக் குணம்.

விக்கினேஸ்வரன் போட்டுத் திரியும் பட்டை நாமம், இலங்கை மண்ணின் சுதேச குடிகளின் வரலாற்றுக்;கே சொந்தமல்ல. மாறாக பார்ப்பனிய வழிவந்த வெள்ளாளிய ஆறுமுகநாவலர், வெள்ளாளருக்கு புகுத்திய சாதிய அடையாளங்கள். இன்று அது வெள்ளாளியமாக சமூகத்தில் வக்கிரமடைந்து - இந்துத்துவம் என்ற இந்திய பார்ப்பனிய வெள்ளாளியமாக புளுக்கத் தொடங்கி இருக்கின்றது.

"புத்திஜீவிகள்" "முற்போக்காளர்கள்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் - காட்டிக் கொள்ளும் தமிழர்களின் சிந்தனை முறை, வெள்ளாளியமாக இருக்கின்றது. வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையில் வாழும் மக்களிலிருந்து இந்த "புத்திஜீவிகள்" வெள்ளாளியத்துக்கு எதிரான நடைமுறைகள் மூலம் வாழ்வதற்கும் – அதற்காகப் போராடுவற்கும் தயாரில்லை. முன்னுதாரணமான நடைமுறையைக் காணவும், காட்டவும் முடியாது உள்ளனர். இதை மூடிமறைக்க

1.எங்கள் பிறப்பு எங்கள் குற்றமா என்று கேட்டு, பிறப்பைக் கொண்டு வெள்ளாளியத்தை, ஆணாதிக்கத்தை.. எல்லாம் குறுக்கி விளக்க முற்படுகின்றனர்.

2.தங்கள் மனிதாபிமான செயலைக் கொண்டு, தம்மை முன்னிறுத்துவது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடனான உதவி மற்றும் நடத்தையைக் கொண்டு தன்னை வெள்ளாளியத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும்.. எதிரானவனாக நிறுவ முனைவது.

3.தங்கள் முரண்பட்ட கருத்துக்கள் - எழுத்துக்களைக் கொண்டு தங்களை வெள்ளாளியத்துக்கு, ஆணாதிக்கத்துக்கு எதிரானவராக முன்னிறுத்துவது

தண்ணி அடிக்க ஊறுகாய் தேவைப்படுவது போல், அரசியல் - இலக்கியம் பேசும் அக வெள்ளாளியத் தனத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழ் அரசியல் இலக்கிய உலகில் இந்த வெள்ளாளிய நரித்தனமே, பகல் வேசம் போட்டு நிற்கின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல், இலக்கிய சிந்தனை முறைகள் அனைத்துமே வெள்ளாளியமாக இருப்பதுடன், அதையே "முற்போக்கு" என்றும் "புத்திஜீவித்தனம்" என்றும் பீற்றுகின்ற – நம்புகின்ற மனநிலையும் காணப்படுகின்றது. கடந்தகால போராட்டம் மட்டுமல்ல போராட்டம் குறித்த விமர்சன அரசியலும் வெள்ளாளியக் கண்ணோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது.

2009 வரையான யுத்தகாலத்தில் புலிகளின் வெள்ளாளியச் சிந்தனையிலான சமூக வாழ்வியல் முறை மட்டும் எம்மை அழிக்கவில்லை, புலிக்கு வெளியில் செயற்பட்ட புலம்பெயர் அரசியல் இலக்கியமும் முரண்பட்ட அக வெள்ளாளியத்தையே மாற்றாக முன்வைத்தது. இதுதான் அன்றைய அழிவுக்கும், இன்றைய சமூக பின்னடைவுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

இந்த வகையில் கடந்தகாலம் குறித்த விமர்சன அரசியல் முதல் இலக்கியம் வரை, வெள்ளாளிய சமூக உள்ளடக்கத்தை காய்வெட்டித்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. நிகழ்கால அறிவியல் இதற்குள் புளுக்கின்றது.

தோற்றுப்போன போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக ஓடுக்குமுறைகள் வரை, இந்த வெள்ளாளியச் சிந்தனையிலான வாழ்க்கை முறைக்குள் குறுகிக் கிடக்கின்றது. இதனால் தமிழ் சமூகம் முன்னுதாரணமிக்க சமூகமாக முன்னிறுத்த முடியாத சிந்தனை முறையில் சிக்கி, பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

கிழக்கு பிரிவினைவாதமானது, தமிழ் தேசிய பிரிவினைவாதத்துக்கு நிகரான வெள்ளாளியமே. மக்களை ஒடுக்கும் தரப்புடன் ஒன்றிணைந்த மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கத்துக்குப் பதில் கிழக்கு மேலாதிக்கமானது, மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியத்தின் இரு முகங்கள்.

தமிழ் பேசும் மக்களை ஒடுக்குகின்ற பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் தொடங்கி தமிழ் மக்களைப் பிளக்கின்ற பிரிவினைவாதிகள் வரை, யாழ் மேலாதிக்கம் குறித்து பேசுவது ஒடுக்கும் தேர்தல் அரசியலில் நடந்தேறுகின்றது. தமிழ்தேசியம் மட்டுமல்ல அதற்கு எதிரான கிழக்கு பிரிவினைவாத அரசியல் கூட, மக்களை பிளக்கின்ற - பிரிக்கின்ற அரசியல் தான். தங்கள் கிழக்கு ஒடுக்குமுறைக்காக யாழ் மேலாதிக்கத்தை கையில் எடுக்கின்றனர். இது எந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது?

இலங்கைப் பாராளுமன்றத்தில் "தேசம்" குறித்தும் - "சுயநிர்ணயம்" குறித்தும், யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள் தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். காலாகாலமாக "தமிழனை" ஏமாற்றும் இந்த அரசியல் மோசடிகள் - புது வேசம் போட்டுக் கொண்டு பொம்மலாட்டமாக மேடை ஏறியிருகின்றது. மூச்சுக்கு மூச்சு தமிழ் இனவாதம் பேசும் கூட்டம், அதற்கு ஒளிவட்டம் போட்டு - கும்மி அடிக்கின்றது.

இன – தேச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது என்பது நடைமுறை சார்ந்தது. அதிலும் தேசம், சுயநிர்ணயம் என்று அரசியல் ரீதியான உள்ளடக்கத்துடன் போராடுவது என்பது, வர்க்க அடிப்படையிலானது.

இந்த வகையில் சுயநிர்ணயத்துக்கு உரிய தேசமானது, அடிப்படையில் அக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுகின்ற – வர்க்க அரசியல் இயக்கமாகவே இருக்க முடியும். இதை விடுத்து வெற்றுக் கோசங்களைப் போடுவது என்பது அரசியல்ரீதியாக போலியானதும், புரட்டுத்தனமானதுமாகும்.

சிவகுமாரன் தொடங்கி பிரபாகரன் வரை முன்னெடுத்த தனிநபர் பயங்கரவாத அரசியலானது, தாமல்லாத அனைவரையும் "துரோகியாக்கியது". ஜனநாயகத்தை ஒடுக்கியதன் மூலம் - ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனையை உருவாக்கினர். இதில் தேர்தல் ஜனநாயகம் விதிவிலக்கல்ல. 1970 களின் பின்னான வரலாறும் - தமிழ் அடையாளங்களும், ஜனநாயக மறுப்பில் எழுந்த வன்முறையிலான வலதுசாரிய வெள்ளாளிய வக்கிரங்களே.

1970க்கு பின்னான இன்றைய தமிழ் தேர்தல் அரசியலின் எதார்த்தம் என்ன? வன்முறை மூலம் போலித் தமிழ் தேசியத்தை பாதுகாத்த துப்பாக்கிகளில்லை, துரோகிகளைச் சுட்டுக்கொல்ல தனிநபர் பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபட்ட லும்பன்கள் இல்லை.

50 ஆண்டுக்குப் பின்பாக, அதாவது 1970க்கு முந்தைய தேர்தல் அரசியல் வரலாறு தெரியாத தலைமுறைக்கு, இன்றைய தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்து இருக்கின்றது.

தமிழரின் ஒற்றுமை, தமிழ் வாக்குகள் சிதறாமை, பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் .. என்று 1970க்கு பின் வன்முறை மூலம் கட்டமைக்கப்பட்ட, தமிழ் தேசிய சிந்தனை முறையை, 2020 தேர்தல் தகர்த்திருக்கின்றது.

"துரோகிகள்" குறித்தும், ஒன்றுபட்ட "தேசியம்" குறித்தும் புலம்பும் அளவுக்கு, ஜனநாயக மறுப்பு "மனநோயாக" முற்றி இருக்கின்றது. முன்பு துப்பாக்கி முனையில் சாதித்த தங்கள் ஜனநாயக விரோத சிந்தனைமுறையானது, இன்று நடைமுறையிழந்து நிற்கின்றது. தாங்கள் விரும்புவதும், தங்கள் விருப்பே துரோகமல்லாதவொன்று என கட்டமைத்த தங்கள் சுய விம்பங்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால்களில் புதைந்தது போக – எஞ்சியது 2020 தேர்தலில் பின் தனிப்பட்ட மனிதனின் மனநோயாகிவிட்டது. தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு முரணாக - தங்கள் மனநோய் கண்ணோட்டத்தையே - தமிழனின் கண்ணோட்டமாக்க புலம்புகின்றனர்.

சுமந்திரனுக்கு எதிராக களமிறங்கியுள்ள கூட்டம், அயோக்கியர்களில் அயோக்கியர்கள். இவர்கள் கடந்தகாலத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இரத்தத்தைக் குடித்து, சதையை உண்ட பாசிட்டுக்களுடன் கூடி, அவர்கள் போட்ட மனித எலும்புகளை கடித்துக் குதறியவர்கள். இன்று போலி "ஜனநாயகம்" பேசுகின்றனர்.

வாக்குப் போடுவதில் மோசடி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி, தேர்தல் முடிவுகளில் மோசடி.. என்பவை எல்லாம் தேர்தல் «ஜனநாயகத்»தில் உள்ளார்ந்த விதி. அரசே ஊழலும்;, லஞ்சமயமாகியும் விட்ட சமூக அமைப்பில், மக்களுக்கு சட்டத்தையும் - நீதியையும் மறுப்பதே «ஜனநாயக»மாகிவிட்டது. இதுவே இன்று அனைத்துமாக சமூகத்தில் புளுத்துக் கிடப்பதால் - தேர்தல் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாயகத்;தின் பெயரில் மக்களுக்கு ஜனநாயக மறுப்பு என்பதே எங்குமான எதார்த்தம்;. இந்த வகையில் தேர்தல், தேர்தல் நடைமுறைகள், தேர்தல் முடிவுகள்.. இதற்கு எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல. எல்லாம் சாத்தியமானது.

இதற்கும் சுமந்திரன் விடையத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. "பெண்" "பெண்ணியம்" {ஜனநாயகம்" என்று கண்ணீர் விட்டுப் புலம்ப, அதை வீடுவரை சென்ற "ஜனநாயக" செத்துவிட்டதாக கூடி செத்த வீPடு நடத்தும் கூட்டத்தின் கடந்த காலம் என்ன?

எத்தகைய தேர்தல் முடிவுகள் வந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை. இதுதான் தேர்தல் ஜனநாயகத்தின் விதி. சாதிய ஒடுக்குமுறை, இனவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை முதல் ஆணாதிக்கம், சுரண்டல் என எல்லாம் அப்படியே நீடிக்கும். எல்லாம் மாறிக்கொண்டு இருக்கும் இயங்கியல் விதிக்கமைய, ஒடுக்குமுறையும் நேர்கோட்டில் ஒரேவிதமாக பயணிப்பதில்லை. மாறாக நெளிவு சுழிவுடன் - நாணயத்தின் எந்த பக்கம் ஆள்வது என்பதையே தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கின்றது.

இந்த தேதுதல் அரசியல் விதிக்கமைய திடீரென தோன்றிய புதிய கட்சிகள் வெற்றி பெற்று இருக்கின்றது. கடந்த காலத்தில் மாறி மாறி ஆட்சியமைத்த பாரம்பரிய கட்சிகளோ, தேர்தல் அரசியலில் காணாமல் போய் இருக்கின்றனர். "புதிய மொந்தையில் பழைய கள்ளு போல்" புதிய கட்சிகள் ஆனால் பழைய முகங்கள்.

பழையபடி இனவாத, பிரதேசவாத, மதவாத, சாதியவாத.. கொள்கைகளைக் கொண்ட நவதாராளவாத ஆட்சியாளர்களையும் - அதற்கு ஏற்ப எதிர்கட்சிகளையும் கொண்ட, அதிகார குட்டை.

தமிழினவாதத்தையும், வெள்ளாளிய (இந்து, கத்தோலிக்க) மதவாதத்தையும் முன்வைத்து மக்களை ஒடுக்க முரண்பட்ட தமிழ் தரப்புகள். ஒரே குட்டையில் இருந்து தோன்றியவையே. இன்று ஆளுக்கொரு பக்கமாக, "துரோகி - தியாகி" என்ற புது வேசங்களுடன் - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்ற பாராளுமன்ற சாக்கடையில் களமிறங்கி இருக்கின்றனர். வென்றவர்களுக்கான விருப்பு வாக்குகளோ, தீவிர இன - மதவாத கோசங்களால் பிரிந்து நின்று - ஆளுக்காள் புடுங்குகின்றனர்.

தீவிர பிரதேசவாதத்தை முன்வைத்து கிழக்கின் "உதயத்தையும்" தமிழனுக்கு தீர்வு என்று வடக்கில் "வசந்தத்தையும்" முன்வைத்து, இரு வேறுபட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் - தமிழ் மண்ணில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

தனிமனித நம்பிக்கையைப் பாதுகாக்கும் பிரதிநிதிகளாக காவி பாசிட்டுக்களை உருவாக்குவீர்களேயானால் அல்லது அதை அனுமதிப்பீர்களேயானால், உங்கள் கருத்து எவ்வளவு முற்போக்காக இருந்தாலும் பாசிட்டுகளுக்கு உதவுகிறீர்கள் என்பதே பொருள். தனிமனித நம்பிக்கை என்பது தனிமனித சுதந்திரம், ஜனநாயகத்துடன் தொடர்புபட்டு இருப்பதால், அது எவ்வளவு பிற்போக்கான கருத்தாக இருந்தாலும், அதற்கான ஜனநாயக உரிமையை மறுப்பவராக இருக்க முடியாது. மாறாக தனிமனித நம்பிக்கையின் பெயரில் காவி பாசிட்டுகளின் மனிதவிரோத ஜனநாயக விரோத நடத்தையை எதிர்த்துப் போராடுவதன் மூலம், தனிநபர் நம்பிக்கையைத் தகர்ப்பதற்கு பதில் - அந்த உரிமையை பாசிட்டுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

இல்லாத வரட்டுப் பகுத்தறிவுவாதம், நாத்திகவாதம் கழுத்தை நெரிக்கவும் - மக்களை ஒடுக்கவுமே, பாசிட்டுகளுக்கு உதவும் கருவிகளாக மாறுகின்றது. காவிப் பார்ப்பனிய பாசிட்டுகளை எதிர்கொள்வதற்கு, வரட்டுத்தனங்கள் உதவாது. மாறாக வரட்டுத்தனமான அணுகுமுறை ஒடுக்கவே உதவும். பெரியார் மண் என்று கூறிக் கொண்டு, பெரும்பான்மையானவர்கள் பெரியாரை எப்படி அணுகுகின்றனர்?

பெரியாரை திராவிடத் தமிழனாக குறுக்குவது, பகுத்தறிவுவாதியாக முடக்குவது, நாத்திகராக கட்டுவதென்பது அடிப்படையில் திரிபே. வெறும் பார்ப்பான் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு.. என்பது, பெரியாரியமல்ல. பெரியாரை திரிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே குறுக்கிக் கொண்ட "முற்போக்கு" சிந்தனை முறை, பார்ப்பனியத்துக்கான நெம்புகோலாக மாறி விடுகின்றது. இன்று இதுவே "மார்க்சியம், அம்பேத்கரியத்தின்" பெயரிலும் நடக்கின்றது.

2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.

தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சாரம் இதுதான்.

தமிழ் இனவாதிகள் கடந்த 70 வருடமாக முன்னிறுத்தி பயணித்த அதே இனவாதக் கனவுகளுடன் - தீர்வுகளை கண்டடைந்ததான போலிக் பிரமிப்புகளுடன், கொழுப்பேறிய மண்டைக் கனத்துடன் கம்பு சுத்துகின்றனர். வழமை போல் இம்முறையும் பெற்றி பெற்று, தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை, மறுபடியும் கோருகின்றனர்.

ஒடுக்கப்பபட்ட தேசம், தேசியத்தின் அழிவைத் தவிர, வேறு எதையும் இந்த யாழ் மையவாத இனவாதச் சிந்தனைமுறை - தேர்தல் மூலம் கடந்த காலத்தில் உருவாக்கவில்லை. தேர்தல் அரசியல் முதல் ஆயுதப் போராட்டம் வரை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதே ஒழிய, விடுதலைக்கு வழிகாட்டியது கிடையாது. விடுதலை என்பது இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், சாதி வாதம் மூலம் சாத்தியமில்லை.

நான் ஒரு "வெள்ளாடிச்சி" என்பதை தலித்தியமாக நிறுவ, "வெள்ளாளனின்" முயற்சி தான், "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்க வைக்கின்றது. டானியலின் இலக்கிய மொழியில் இத்தகைய வெள்ளாளர்களை குறித்து எழுதிய போது, வெள்ளாளிய "மார்க்சியவாதிகள்" கொதித்துப் பொங்கிய அரசியல் விமர்சனங்களே - இன்று நுண் அரசியலில் வேசம் போடுகின்றது.

இந்த நுண் அரசியலின் உத்தி என்ன? தன்னை எல்லாமாக நிறுவிக் காட்டுவது. இது போன்று தான் தலித்தியத்தின் பெயரில், அரசியல் முதல் இலக்கியம் வரை அரங்கேறுகின்றது. ஒரே விதமான உத்தி. மொழிகளில் எல்லா ஒடுக்குமுறைகளை பேசுவதன் மூலம், தன்னை ஒடுக்கப்பட்டவனின் அணியாக காட்டிக் கொண்டு - ஒடுக்குபவனுடன் நடைமுறையற்றுக் கூடிக் குலாவுவது.

ஆனந்தசங்கரியின் மொழியில் சொன்னால், நான் ஒடுக்கப்பட்டவனின் வீட்டில் சாப்பிட்டவன் என்று கூறுகின்ற, அதே வெள்ளாளிய நரித்தனம்;. சாப்பிட்டால் என்ன, திருமணம் செய்தால் என்ன, நீ ஒடுக்கப்பட்டவனுடன் நடைமுறையில் இருக்கின்றாயா இல்லையா என்பது மட்டும் தான் ஒடுக்கப்பட்டவனின் அளவுகோல். இதைவிடுத்து ஒடுக்கப்பட்டவனுடன் நிற்பதாக எழுதுவது, பேசுவது, அறிக்கை விடுவது, நடிப்பது எல்லாம் சாதி சமூக அமைப்பில் வெள்ளாளியம். மொழிக் கோர்வைகள் - மொழிப் பூச்சாண்டிகளோ, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையுடன் பயணிப்பவனுக்கு தேவையற்றது. நடைமுறையில் வாழாதவன் கையாளும் உத்திதான், நடிப்பு முதல் ஒடுக்குமுறை பற்றி நடைமுறைக்கு வெளியில் எழுதுவது.

"முன்போல் சாதி ஒடுக்குமுறை இல்லை" முதலாளித்துவ வெள்ளாளியத்தால் இப்படித்தான் புலம்ப முடியும். முன்போல் எதுதான் இருக்கின்றது!? எல்லாம் இயங்கிக் கொண்டு மாறிக்கொண்டு இருக்கின்றது. இதுதான் இயங்கியல் விதி, இது சாதிக்கு விதிவிலக்கல்ல. இதை மறுக்கிறவர்கள், நாங்கள் முன்போல் உங்களை ஒடுக்குவதில்லை என்று கூறுகின்றதன் பொருள், நவீன வெள்ளாளிய ஒடுக்குமுறை பூசிமெழுகுவதைத் தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவம், ஆணாதிக்கம், நிறவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை .. என எதுவும் முன்போல் இருப்பதில்லை. இதனால் இதை இல்லை என்று கூற ஒருவன் முற்படுவானேயானால், அவன் ஒடுக்குமுறையாளனாக இருக்கின்றான் என்பதுதான் பொருள்.

இது இன்று சாதி எப்படி, எங்கே இயங்குகின்றது என்பதைக் காட்டு என்று கேட்பதற்கு நிகரானது. பாரம்பரிய சாதிய சுடலையில் தான் எரிப்போம் என்பதும், யார் தேர் தடத்தை பிடிக்கலாம் என்பதை வரையறுப்பதாகட்டும், யார் பூசாரி என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயில் எங்கே - எது வரை யார் நுழைய முடியும் என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரமாகட்டும், கோயிலில் பெண்களின் எல்லை என்ன என்பதை வரையறுக்கும் ஒழுக்க விதியாகட்டும், சேட்டைக் கழற்று - செருப்பை கழற்று என்ற அதிகாரமாகட்டும் இவற்றின் பின்னால் சாதிய அதிகாரமும் - ஒடுக்குமுறையுமே இயங்குகின்றது. இது இன்று வெளிப்படையாகவும் - மறைமுகமாகவும் இயங்குகின்றது.

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரின் தலைமையில் திறப்பதை தடுத்து நிறுத்திய வெள்ளாளியம், இன்று திடீரென தோன்றி நாங்கள் அதை சாதி அடிப்படையில் தடுக்கவில்லை என்று புதிய பித்தலாட்டத்தை தொடங்கினர். இதையடுத்து அன்று யாரை தலைமை தாங்கக் கூடாது என்று கூறினரோ, அந்த செல்லன் கந்தையாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியொன்று வெளியாகியுள்ளது. வரலாற்று மோசடி - தொடரும் ஒடுக்குமுறை சார்ந்த ஆவணமாகிவிட்டது.

இந்த பேட்டி குறித்தும், வடிவம் குறித்தும், நோக்கம் குறித்துமான வெள்ளாளியப் புலம்பல்கள் எல்லாம், தங்கள் சாதிய ஒடுக்குமுறை சமூகத்தின் பெருமிதங்களை பாதுகாக்கவே ஒழிய உண்மையை தரிசிப்பதறகாக அல்ல..

இந்தப் பேட்டியானது அரசியல்ரீதியாகவும் – அனுபவரீதியாகவும் நாம் முன்வைத்த உண்மையை உறுதி செய்கின்றது. புலிகளின் தேசியம் வெள்ளாளிய தமிழ் தேசியமல்ல, சாதி ஒழிப்பைக் கொண்டது என்ற மாயைகளை, மீளத்; தகர்த்து இருக்கின்றது. செல்லன் கந்தையா போன்றோர் ஒடுக்கும் வெள்ளாளிய சமூக அமைப்பைப் பாதுகாக்கும் அரசியல் பயணத்தின் போது, சாதி எப்படி குறுக்கிடும் என்பதற்கான உதாரணமாகி விடுகின்றது.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எந்த உயரத்தில் பறந்தாலும், சாதிய சமூகம் குறுக்கிடுகின்ற தருணங்கள் தற்செயலானதல்ல. பறக்கும் உயரங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தின் கீழ் தான் பறக்க முடியும். சமூகத்தின் மேலாக பறப்பதாக நினைப்பது, வெள்ளாளிய மயமாக்கம் தான். வெள்ளாளிய வாழ்க்கையை உயரமாகக் கருதி, அதை எட்டிப்பிடிப்பது அல்லது அதற்கு மேலாக தன்னை கருதுவது, வெள்ளாளிய மயமாக்குவது.

பொருளாதார ரீதியாக மேலே சென்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடும் அல்லது ஒழிந்துவிட்டது என்று கருதுவது, ஒடுக்கும் தனியுடமைவாதக் கண்ணோட்டமே. இது சாதிய சமூக அமைப்பில் வெள்ளாளியமாகும்.

இப்படி தாங்கள் «மேலே» வந்துவிட்டமாக நம்புபவர்கள் சாதிய சமூக அமைப்பின் சடங்குகள் பண்பாடுகளை பின்பற்றுவது மட்டுமின்றி, அதை முன்னின்று செய்பவராக மாறிவிடுகின்றனர். சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் வெள்ளாளிய அரசியல் - இலக்கியத்துக்குள்; சங்கமித்து, சாதியில்லை என்று கூவுவதன் மூலம் நவீன வெள்ளாளியத்தின் பாதுகாவலாராகி விடுகின்றனர். சமுதாயத்தின் வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளியானது, ஒடுக்குமுறையின் வடிவங்களை சூட்சுமாக நுணுக்கமாக வேறுவிதமாக மாற்றுகின்றது. இதை அடிப்படையாக கொண்டு, இன்று வெள்ளாளிய ஒடுக்குமுறையே கிடையாது என்று கூறுவது தான் நவீன வெள்ளாளியம். இந்த ஒடுக்குமுறையை செய்பவர் வெள்ளாளனாக கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக தடுத்தனர் என்பது குறித்தான இன்றைய சர்ச்சை, யுத்தத்தின் பின்னான வெள்ளாளிய சாதி எழுச்சியுடன் தொடர்புபட்டது. சமூகம் சாதியமாகவும், அதேநேரம் இந்துத்துவ சாதியமாகவும் பரிணாமமடைந்து வரும் இன்றைய சமூகப் போக்கை, தமிழ் தேசியமாக நிறுவ "சாதியற்ற" புலிகள் தேவைப்படுகின்றது.

புலிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தை மறுத்து ஒடுக்கும் தேசியத்தை முன்னிறுத்தியதன் மூலம், சமூகத்தை பின்நோக்கி இழுத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக எழுச்சிபெற்று வரும் சாதியத்தை, புலித் தேசியத்தின் நீட்சியாக காட்ட முற்படுகின்றனர்.

இதனாலேயே புலிகளின் காலத்தில் சாதி இருக்கவில்லை என்கின்றனர். இப்படி நிறுவுவதன் மூலம் சாதிய ஒடுக்குமுறை கூர்மையடைந்து வரும் இன்றைய சூழலை, மறுக்கவும் - மறைக்கவும் முனைகின்றனர்.

இதற்காக வெள்ளாளிய ஒடுக்குமுறையே இல்லை என்று கூறுமளவுக்கு, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை களத்தில் இறக்கி இருக்கின்றது வெள்ளாளியம். அது வெள்ளாளிய ஒடுக்குமுறையா! அது என்ன? என்று கேட்குமளவுக்கு வெள்ளாளியம் தன்னை மூடிமறைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய எங்களைப் பாருங்கள், நாங்கள் உயரத்தில் பறந்து கொண்டு இருக்கின்றோம், என்று வெள்;ளாளியத்தைப் பாதுகாக்கும் அற்பனத்தனங்களை முன்தள்ளுகின்றது.

இப்படி நவீனமாகும் வெள்ளாளிய ஒடுக்குமுறையைக் கூர்மையாக்க புலிப் பின்புலத்தைக் கொண்ட அறிவுத்துறையினரையும், ஒடுக்கும் சாதிக்காக உழைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த புத்திஜீவிகளையும் களத்தில் இறக்கி இருக்கின்றது. இதற்காக கடந்த வரலாறுகள் திரிக்கப்படுகின்றது, புனையப்படுகின்றது. எதையும் மறுக்க, கடைந்தெடுத்த மோசடிகள்.

யாழ் நூலகத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறை குறித்து..

யாழ் நூலக திறப்புவிழா மீதான ஒடுக்குமுறை சாதி அடிப்படையில் நடந்தது என்று 2003 இல் கூறப்பட்ட போது, வெள்ளாளிய பாசிச தேசியவாதிகள் யாரும் களத்தில் இறங்கவுமில்லை, கொடுக்குக் கட்டவுமில்லை. புலிகள் மறுக்கவுமில்லை, புலிகளின் பெயரில் இயங்கிய புலிப் பினாமிகள், 300 வெகுஞன அமைப்புகளின் பெயரில் மிரட்டல் கலந்த வெளியிட்ட அறிக்கையோ, புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை பூசி மெழுக முடியவில்லை.

தினக்குரல் முன்பக்கத்தில் புலியின் வெள்ளாளிய சிந்தனைக்கு – புலியின் நாடித் துடிப்புக்கு ஏற்ப வெளியிட்ட கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக, புலிகள் யாரையும் தண்டிக்கவுமில்லை, 300 வெகுஞன அமைப்பின் அறிக்கையோ – போராடும் தமிழ் மக்களை சாதிரீதியாக பிரித்த வெள்ளாளிய அயோக்கியத்தனத்தை உச்சிமோந்;தது. சாதிரீதியாக ஒடுக்கியதாக கூறியதற்;கு எதிராக மிரட்டலும் - சாதிரீதியாக பிளந்து காட்டியதை கொண்டாடும் வெள்ளாளிய மனப்பாவம், புலிச் சிந்தனைக்கும் – செயலுக்கும் முரணாக நிகழவில்லை.

ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்திலிருந்தபடி, சாதி சமூக அமைப்பை எதிர்த்து போராடாது, எதை எப்படி புரட்டிப்போட்டு சிந்தித்தாலும் அது சாதியக் கண்ணோட்டம் கொண்டதே. யாழ் நூலகம் மீள திறப்பதை புலிகள் தடுத்த விடையத்தை ஓட்டிய கண்ணோட்டம், சாதி கடந்து புனிதமாகிவிடுவதில்லை.

ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான ஓட்டுமொத்த சமூகப் பின்புலத்தை எதிர்த்துப் போராடாத எவருடைய சிந்தனையும் - கருத்தும் சாதிய சிந்தனைமுறைதான்;. இந்த சாதிய சிந்தனைமுறைக்கு ஓடுக்கும் சாதியில் பிறக்க வேண்டும் என்பதல்ல, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவனின் சிந்தனைமுறையும் சாதிய சிந்தனைமுறை தான். இது இருக்கும் வரை தான் - சாதிய சமூக அமைப்பு நீடிக்கும்.

யாழ் நூலகம் குறித்த அண்மைய சர்ச்சையின் போது சிவா சின்னப்பொடி "விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உயர்மட்ட தளபதிகள் நிலையில் 12 பேரும், இடைநிலைத் தளபதிகளாக 56 பேரும், அதற்கு அடுத்த மட்டத்தில் 164 பேரும் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சார்ந்தவர்களாக" இருந்த புலிகள் இயக்கத்;தை, எப்படி சாதி இயக்கம் என்று கூற முடியும் என்ற தர்க்கமே – புலிக்கு பின் சாதியை பாதுகாக்கும் நவீன சிந்தனைமுறை. இந்தியா காவி காப்பரேட் பார்ப்பனியப் பாசிசம், நாட்டின் ஜனாதிபதியாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை முன்னிறுத்தியே, இன்றைய சாதிய ஒடுக்குமுறை சமூகத்தை பாதுகாக்கின்றது. முன்பு ஒடுக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி, முஸ்லிம்களை ஒடுக்குகின்ற இந்துத்துவ அமைப்பை பாதுகாத்தது. இங்கு அடிப்படையில் பாசிச சிந்தனைமுறை இருக்கின்றது. புலிகளின் பாசிச சிந்தனைமுறை இதைக் கடந்ததல்ல.

புனைபெயரில் இனம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்களைக் கொண்ட புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களின் சொந்தப் பெயரைக் கண்டுபிடித்து, அவர்களின் சாதி என்னவென்று கண்டுபிடிக்க முடிகின்றது என்றால் - புலிகள் ஓடுக்கும் சாதி இயக்கமாக இருந்தால் தான் அது சாத்தியமானது. புலியெதிர்ப்பில் உள்ள வலதுசாரிய பிரிவானது ஒடுக்கப்பட்டவர்களாலேயே இயக்கம் தோற்றது என்றும், இயக்கம் செய்த மக்கள் விரோதமானவற்றுக்கு இயக்கத்தில் இருந்த ஒடுக்கப்பட்டவர்களே காரணமென்றும், புலித்தலைமைக்கு தெரியாதவையே புலிகளின் விமர்சனத்துக்குரிய விடையங்கள் - என்று பல வடிவங்களில் புலம்புவதை காணமுடியும். இப்படி சாதியை அடிப்படையாக கொண்டு 2000 ஆண்டுகளில் வெளியான 'மறைவில் ஜந்து முகங்கள்" மீதான எனது விமர்சனமான "அரசியல் படுகொலைகளை சாதியமாக திரிக்கும் வலதுசாரிய மனுதர்மம்" இதற்கு பொருந்தும்.


பிரான்சில் புலித்தலைமை சிவா சின்னப்பொடியை ஓடுக்கும் சாதி அடிப்படையில் தனிமைப்படுத்தி ஒடுக்கியதற்கு எதிராக குமுறுகின்ற உங்கள் நியாயங்கள், வன்னிக்கும்  அங்கும் பொருந்தும். வெளிநாட்டு புலித்தலைமை வேறு, களத்தில் இருந்த தலைமை வேறு என்று கூறுவது, இன்றைய உங்கள் தனிப்பட்ட இருப்புடன் தொடர்புடையது.  வெளிநாட்டு புலித்தலைமையிலும் ஓடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர் இருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.

 

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இனம், மதம், சாதி.. என்று மக்களைப் பிரித்து – அவர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தி ஒடுக்குவதே, அரசுகளாக இருக்கின்றது. வர்க்கங்களுக்கு இடையில் சமரசம் செய்து சொத்துடமை வர்க்கத்தை பாதுகாக்க உருவான அரசுகள், இன்று மக்களிடையே இன, மத, சாதி பிரிவினையை உருவாக்கி, சொத்துடமை வர்க்கத்தைப் பாதுகாக்க முனைகின்றது.

உழைப்பைச் சுரண்ட பண்ணை அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்களை, முதலாளித்துவ உற்பத்திக்கு தேவையான உழைப்பு சக்தியை திரட்டுவதற்கு ஏற்ற «சுதந்திர» மனிதனாக கறுப்பின மக்களை மாற்றியது. அதேநேரம் முதலாளித்துவ வர்க்கச் சுரண்டல்முறைக்கு எதிராக கறுப்பின வெள்ளையின மக்கள் அணிதிரண்டுவிடாத வண்ணம், நிறவொடுக்குமுறையாக மாற்றியது.

இந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவினைவாத நிறவொடுக்குமுறையை எதிர்த்து, நிறபேதமற்ற மக்கள் போராட்டமாக எழுந்திருக்கின்றது. அமெரிக்க மக்களின் முன்மாதிரியான போராட்டத்தை போல், இன-மத ஒடுக்குமுறை மூலம் ஆளப்படும் இலங்கை மக்கள் கற்றுக் கொள்ளவும் - போராடவும் வேணடும். அமெரிக்க நடைமுறைகள் எமக்கு முன்மாதியாக இருக்கின்றது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவன் கொல்லப்பட்ட போது, வெள்ளையின மக்கள் அலைஅலையாக அணிதிரண்ட நிகழ்வுதான், அமெரிக்காவின் நிறவெறி அதிகார வர்க்கத்தை திணறடித்திருக்கின்றது. அதிகார வர்க்கத்தின ஒரு பகுதி மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்திருக்கின்றது. கையை குலுக்குகின்றது, கட்டி அணைக்கின்றது.

பேரினவாத அரச ஒடுக்குமுறையாளர்களால் 1981 யூன் 1ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. மாவட்டசபையை ஏற்று தேர்தலில் பங்குகொண்டோரை தனிநபர் பயங்கரவாதம் மூலம் கொன்றதற்கு பதிலடியாக, அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று எரிக்கப்பட்ட - உடைக்கப்பட்ட – கொல்லப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில், எரிந்த யாழ் நூலகமும் அடங்கும்.

இதில் யாழ் நூலகமானது இனவொடுக்குமுறையின் வரலாற்று அடையாளமாகிப் போனது. இச் சம்பவம் மூலம் ஓடுக்கப்பட்ட தமிழ் தேசமும், அதில் வாழும் தேசிய இனங்களும், தனிமனிதர்களும் எதைக் கற்றுக்கொண்டு, எதை மீள உருவாக்கினர்!?

சமூகம் சார்ந்த வரலாற்று அழிவை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பணியை - ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவில்லை. பதிலுக்கு யாழ் நூலகத்தை எரியூட்டியவனின் அதே இனவாத உணர்வுக்கு நிகராக - தமிழினவாதத்தை பேசுகின்றதைத் தாண்டி, எதையும் சமூகத்துக்காக உருவாக்கவில்லை, எதையும் கற்றுக்கொள்ளவுமில்லை.

1981 இல் எரிக்கப்பட்ட நூலகத்துக்கு மாற்றாக, இன்று எத்தனை நூலகங்களை உருவாக்கி இருக்கின்றனர். ஏத்தனை தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நூலகங்களை வைத்திருக்கின்றனர். வாசிப்பைத் தூண்டும் வண்ணம் எத்தனை சமூக ஊக்குவிப்புகளை சமூகம் வழங்குகின்றது? எதுவுமில்லை.

அன்று எம்மிடம் யாழ் நூலகம் மட்டும் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் பொது நூலகங்களும், நூல்களும் இருந்தன. வாசிக்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அறிவு வளர்ச்சியும் இருந்தது. புதிய அறிவுத்தேடல் சமூக அசைவின் உயிர் நாடியாக இருந்தது. இன்று எதையும் காண முடியவில்லை. நூலகங்களை உருவாக்கும் சமூக நோக்கு கொண்ட சமூகப் பார்வை கூட, சமூகத்திடம் காணாமல் போய் இருக்கின்றது.

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது. கொரோனாவால் வேலையிழந்த உழைக்கும் வர்க்கம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாக இதை ஒருங்கிணைத்துப் போராடுகின்றது. உதிரி வர்க்கங்களோ தமது வர்க்கக் கலகமாக - சூறையாடலாக நடத்துகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போராட்டத்தை பயங்கரவாதமாக அறிவித்ததுடன், இராணுவத்தையும் இறக்கியிருகின்றான். நாய்களை விட்டு கொல்லப்பட வேண்டிய  "பொறுக்கிகளே" போராடுவதாக கூறியதுடன், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் கொக்கரித்துள்ளான்பொலிசாரால் கொல்லப்பட்ட ஃபளாய்ட் உயிர் வாழும் தனது இறுதிப் போராட்டத்தின் போது “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கூறிய வார்த்தை, அமெரிக்காவின் முதலாளித்துவ  "ஜனநாயகத்தில்' வாழமுடியாத மக்களின் பொதுக் கோசமாக மாறியிருக்கின்றது. அமெரிக்க சொர்க்கத்தில் மனிதனாக வாழ்வதற்காக - சுவாசிக்கும் உரிமைக்காக போராடுவதன் அவசியத்துடன் - மக்கள் வீதிகளில் இறங்கி இருக்கின்றனர்.

அமெரிக்காவே முதலாளித்துவத்தின் சொர்க்கம்; என்று நம்பும் உலகின் பொதுப்புத்தி நாற்றங் கண்டு - அம்மணமாகி நிற்கின்றது. ஏகாதிபத்திய ஊடகங்களால் உலகச் சிந்தனைமுறையாக்கப்பட்ட, முதலாளித்துவ சொர்க்கத்தை - மக்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் தலைகீழாக மாற்றி காட்சியாக்கி இருக்கின்றனர்.

இந்த நவீன அமெரிக்காவில் வன்முறை நிறவெறிப் படுகொலைகள் முதல் மருத்துவமற்ற கொரோனாப் படுகொலைகள் வரை அரங்கேறுகின்றது.

அதிகாரம் கொண்டு கறுப்பின மனிதனை நிறவெறி கொலைவெறியுடன் கொல்லும் காட்சிகள், உலகெங்கும் அதிர்வாகியுள்ளது. அமெரிக்கா முழுக்கவே, இந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும்;, ஆங்காங்கே கலகங்களும் வெடித்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற்கை விதிக்குள் நிகழவில்லை. மாறாக மனிதனின் எதிர்வினைக்கு உட்பட்டு, நாட்டுக்கு நாடு வேறுபட்ட அளவில் நடந்தேறுகின்றது. கொரோனா விளைவுகளையும் - மரணங்களையும், நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் அரசியலே தீர்மானிக்கின்றது.

கொரோனாவுக்கு எதிரான பொது மருத்துவக் கொள்கைக்கு அமைவாக உலகமும் - மனிதனும் இயங்க முடியாத வண்ணம், அரசுகளின் தன்னிச்சையான முடிவுகளையே, உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் தொடர்ச்சியாக நிகழும் மரண எண்ணிக்கைகளை, இரண்டு அடிப்படைக் காரணங்களே பொதுவாகத் தீர்மானிக்கின்றது.

1.ஆட்சியாளர்களின் அரசியல் எந்தளவுக்கு வலதுசாரித் தன்மை கொண்டதாக இருக்கின்றதோ -  அந்தளவுக்கு அந்தந்த நாடுகளில் மரண எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதேநேரம்  சாதி, வர்க்கம், இனம், நிறம், மதம் .. அடிப்படையிலும், கொரோனா கையாளப்படுகின்றது. அதாவது வேறுபட்ட அணுகுமுறை, ஒடுக்கப்பட்டவர்களிடையே அதிக மரணங்கள் நிகழக் காரணமாகின்றது.

2.முதலாளித்துவமே அனைத்துக்குமான சமூக இயங்குவிதியாக கருதுகின்ற ஆட்சியாளர்களின் முதலாளித்துவத் தூய்மைவாதமும் – வரட்டுவாதமும் - மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமும் (பிரோகிராஸ்சி) எந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்டுள்ளதோ – அந்த நாடுகளில் மரணங்கள் அதிகமாகி வருகின்றது.

"தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நாங்கள் பூச்சியம்" என்று கூறுவதே, யாழ் மையவாதச் சிந்தனை முறை.  இப்படி "தமிழ் தேசியவாத ஆய்வாளராக" முன்னிறுத்தப்படும் ஜோதிலிங்கம் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கின்றார்.

சுமந்திரனுக்கு எதிரான "தமிழ்த் தேசியம்" இப்படித்தான், முனங்கி, முழங்குகின்றது. சுமந்திரனின் அரசியலென்பது "தமிழ் தேசியம்" நீக்கம் செய்யப்பட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியல் அல்லது அதன் அங்கம். அது மேற்கு நாட்டு "லிபரல்" அரசியலாம். அதாவது யாழ் மைய்யவாத வெள்ளாளிய சிந்தனைக்கு பொருந்தாத ஜனநாயக  - விடுதலை அரசியலாம்.

இப்படி மேற்கு ஏகாதிபத்தியத்தின் மடியில் படுத்துக் கிடந்து கனவு காண்கின்ற "தமிழ் தேசியமானது", ஐக்கிய தேசிய கட்சி ஊடாக மேற்கு ஏகாதிபத்தியத்தை சுமந்திரன் அணுகுவதை துரோகம் என்கின்றனர். எதிர்ப்பு அரசியல் - இணக்க அரசியல் என்று, ஓடுக்கும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி மோதுகின்ற பிழைப்புவாதம்.

1975 இல் "தந்தை" செல்வா முன்வைத்த "தமிழ் தேசியத்தை" சுமந்திரன் கைவிட்டுவிட்டார் என்று வரலாற்று ரீதியாக ஆய்ந்து கூறும் ஜோதிலிங்கம், தன் வரலாற்றில் தான் கைவிட்டு – காட்டிக் கொடுத்த வரலாற்று திரிபுகள் மீதேறி புலம்புகின்றார்.
1985 - 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் நாங்கள் முன்னின்று எடுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நீங்கள், வரலாற்றுக்கு முரணாக புலம்பவது எந்த அடிப்படையில்? யாருடைய நலனுக்காக?

1985 இல் புலிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கி – மாணவர் சமூகத்தையே  ஒடுக்கிய போது - அதை எதிர்த்து நின்றவர்களில் நீங்களும் ஓருவர். மறந்து விட்டீர்களா!?  மாணவர்களை ஓடுக்கிய புலிகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் சங்கம் போராட மறுத்து, புலிப் பினாமியாக இயங்கிய சூழலில், மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய மாணவர் அமைப்பின் தலைவராக உங்களை நாங்கள் தெரிவு செய்தோம். நினைவு இருக்கின்றதா? ஆம், அன்று புலிக்கு எதிராக, புலி அரசியலை எதிர்த்து தலைமை ஏற்றீர்கள். அப்படித்தானே.

 

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.

இதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த சூழலை முதலாளித்துவமானது

1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை  தவிர்க்க முனையும்.

2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.

3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.

இந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.

பாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும்.    இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக    உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் முடக்கி - உலகெங்கும் பரவுவதை தடுத்திருக்க முடியும் என. இது அமெரிக்கா கூற்று மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனைமுறையில் சிந்திக்கின்ற, மனிதர்களின் பொதுக் கருத்தியலுமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ்சை தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி இருக்கும் ஆற்றலையும், அது உலகெங்கும் பரவுவதை தடுக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது. சமூகத்தை முன்னிறுத்தி அறிவியல்ரீதியாக அணுகினால் சாத்தியமானாக இருந்த போதும், பொருளாதாரரீதியான சிந்தனையும் நடைமுறையும் அதை சாத்தியமற்றதாக்கியது.

சீனாவைக் கடந்து வைரஸ்சின் பரவலை சீனா கட்டுப்படுத்தத் தவறியது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை ஆராய முன்பு – அனைத்து நாடுகளும் பதில் சொல்ல வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றது

1.சீனாவை விட்டு வைரஸ் நாடு கடந்த பின் - சீனா போல் அல்லது உங்கள் வழியில் ஏன் உங்கள் நாட்டில் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை? எது தடுத்தது? அனைத்து நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2.வைரஸ் பரவலைத் தடுக்க அரையும் குறையுமாக முடக்கி – மீளவும் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க இயல்பு வாழக்;கைக்கு திரும்பும் உங்கள் நடவடிக்கை - வைரஸ் தொற்றை மீள பரவலாக்கும் நடவடிக்கையாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் நடத்தைகள் ஒருபுரும் இருக்க மறுபக்கம் உங்களையே கட்டுப்படுத்த முடியாதபோது, சீனாவை குறிவைத்து அரசியல் நடத்துவது ஏன்? சீனா கட்டுப்படுத்தத் தவறிய விடையத்தைப் பார்ப்போம். சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற குற்றச்சாட்டை, அறிவியல் அடிப்படையின்றி அமெரிக்கா அவதூறாகவே முன்வைத்து வருகின்றது. மேற்கு ஆதரவு முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தக் குற்றச்சாட்டையே மீள முன்வைக்கின்றனர். இப்படி அரசியலாகும் இந்தப் பின்னணியில் - என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

சீனா உலகெங்கும் பரப்பியது என்பது பொய். உலகெங்கும் திட்டமிட்டோ அல்லது சீன சுற்றுலாப் பயணிகள் மூலமே, கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் நிகழவில்லை. முhறாக சீனா அல்லாத அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே, சீனாவில் இருந்து கொரோனாவைக் காவி வந்தனர். இவர்கள் சீனா சென்ற சுற்றுலாப் பயணிகளுமல்ல.

அப்படியானால் கொரோனா வைரஸ்சை காவி வந்தவர்கள் யார்? இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்;கு (சீனாவுக்கு) இருந்ததா? இதை ஏன் இன்று வரை (சீனா உட்பட) யாரும் பேச மறுக்கின்றனர்?

அமெரிக்காவின் (முதலாளித்துவத்தின்) மருத்துவக் கொள்கையென்ன? "நோய் என்பது மனிதன் தனக்குத் தானே - தன் நடத்தைகள் மூலம் தேடிக் கொள்ளுவதே. இதற்கு அரசு – சமூகம் எந்தவகையிலும் பொறுப்பேற்க முடியாது" மருத்துவம் தேவையென்றால், பணத்தைக் கொடுத்து வாங்கு - மருத்துவ காப்;புறுதியை செய்து கொள். இதுவே அமெரிக்க அரசினதும் - ஆளும் வர்க்கங்களினதும் கொள்கையாகும். மருத்துவத்தில் அரசு தலையிட முடியாது. அதாவது மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வரியை - மருத்துவத்திற்கு செலவிட முடியாது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட கொள்கையல்ல, அமெரிக்க அரசின் பொதுக் கொள்கை. ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனைமுறை. உலக முதலாளித்துவத்தின் பொது வழிமுறையுமாகும்.

இன்று அமரிக்காவில் நோயை எதிர்கொள்ளுவதும் - மருத்துவத்தைப் பெறுவதும் என்பது, தனிப்பட்ட அந்த நபரின் பொறுப்பாக இருக்கின்றது. அரசு அதற்கு உதவுவதில்லை. நோயாளி பணத்தைக் கொடுத்தால் மட்டுமே, நோயை எதிர்கொள்ளமுடியும். பணமில்லாதவன் நோயுடன் வாழ்வதும், செத்துப் போவதும் .. அவரவர் தேர்வாகவும், அதில் அரசு தலையிடுவதில்லை. இதற்கு அமைவாக சமூகம் இதற்கு பொறுப்பல்ல என்ற முதலாளித்துவச் சிந்தனை முறையில், சமூகத்தை சுயநலமாக சிந்திக்கவும் - செயற்படவும் வைத்திருக்கின்றது.

 

சமூகமாக மனிதன் வாழ்தல் என்பது தனியுடமை சமூகத்தில் இருக்க முடியாது. இதுதான் முதலாளித்துவ சிந்தனைமுறை. அதாவது பொருளை முதன்மையாகக் கொண்ட உலகத்தில் இயற்கை எப்படி இருக்க முடியாதோ, அதுபோல் சமூகம் என்பது தனியுடமைச் சமூகத்தில் இருக்க முடியாது. இயற்கை, சமூகம் தொடங்கி மனிதம், அறம் வரை அனைத்தும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே - முதலாளித்துவம் கருதுகின்றது.

இங்கு அரசு என்பது சொத்துடமைச் சமூக அமைப்பைப் பாதுக்காகும் உறுப்பாக இருக்க முடியுமே ஒழிய, அதற்கு முரணாக செல்வத்தை பகிர்ந்தளிக்கும் உறுப்பாக இருக்க முடியாது என்கின்றது முதலாளித்துவம். கல்வி, மருத்துவம், உணவு, நீர், இருப்பிடம் .. என எதுவும், மக்களின் அடிப்படை மனித உரிமையில்லை, மாறாக இவை அனைத்துமே சந்தைக்குரிய முதலாளித்துவப் பொருள். முதலாளித்துவத்தில் மனிதவுரிமை என்பது செல்வந்தர்களின் செல்வக் குவிப்பிற்கு தடையான எதுவும் மனிதவுரிமையல்ல, மாறாக செல்வக் குவிப்பிற்கு உதவுவது மட்டும் தான் மனிதவுரிமை.

இந்த அடிப்படையில் தேர்தல் மூலம் வாக்கு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க ஜனநாயகவாதிகளின் மருத்துவக் கொள்கை என்பது, பணத்திற்கு விற்கும் - வாங்கும் பொருள். அமெரிக்காவில் இது வெளிப்படையாக வெளிப்பட்டாலும் - உலகெங்குமான உலக முதலாளித்துவத்தின் பொதுக் கொள்கையும், நடைமுறையும் இதை நோக்கித்தான் பயணிக்கின்றது.

 

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது கால் தூசு. இது தான் இயற்கை மீதான முதலாளித்துவ அரசுகளின் கொள்கைகள். இப்படித் தான் கொரோனா வைரஸ் குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கருதியதுடன் - அதையே நடைமுறையாக்கினர்.

ஆனால் இயற்கையும், இயற்கை விதியும் இதைக் கடந்தது என்பதையும் - கொரோனா வைரஸ் தன் வழியில் மனிதனை கொல்லத் தொடங்கிய போது - மனிதனுக்கு புரியத் தொடங்கியது இயற்கை முதலாளித்துவ அதிகாரத்தையும் கடந்ததென்று. தங்கள் வர்க்க அரசியல் அதிகாரங்கள் மூலமும், நவீன தொழில்நுட்பம் மூலமும், வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா மரணங்கள் தங்கள் வர்க்க சர்வாதிகார தனியுடமை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்ற பொது நெருக்கடியை அடுத்து, வைரஸ் தொற்றினை இயற்கை வடிவத்தில் முடக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, மெதுவாகவும் -  அரைகுறையுமாக தொடங்கினர்.

மூலதனத்தை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் முடிவுகளால் ஏற்பட்ட தயக்கம், தாமதம் கொரோனா மரணங்களாகவும் – மரண எண்ணிக்கை அதிகரிப்புமாகவும் பரிணமித்தது. மரணம் இன்று அரசியலாகியுள்ளது. இந்த அரசியலானது வர்க்க அரசியல் முரண்பாடாக மாறவில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தினுள்ளான முரண்பாடாக மட்டும் - குறுகி வெளிப்படுகின்றது. வர்க்கரீதியாக ஓடுக்கப்பட்ட வர்க்கமோ, வர்க்க அரசியலுக்கு பதில் பொருளாதாரவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. வர்க்க அரசியல் கோரிக்கைக்கும் - பொருளாதார கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை மார்க்சியம் மிகத் தெளிவாக கொண்டிருந்த போதும், பொருளாதார கோரிக்கைக்குள் அல்லது எதுவுமற்ற கொரோனா அரசியலாக சர்வதேசியம் குறுகிக் கிடக்கின்றது.

2009 இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளும் - அரசும் தத்தம் மக்களை ஒடுக்குகின்ற, தங்கள் சொந்த இன அதிகாரத்துக்காகவே நடத்தினர். யுத்த நிறுத்தம் - பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய  புலிகள், வலிந்து தொடங்கிய யுத்தத்தில் தோற்றுப்போக, பேரினவாத அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம் அரசு ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்தப் வரலாற்றுப் பின்னணியில் உருவான முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்பது
1.தங்கள் சொந்தப் பிழைப்புக்காக தமிழினவாதத்தை முன்னிறுத்துகின்றவர்கள்,  புலிகளுக்கான அஞ்சலியாக அரங்கேற்றுகின்றனர்.

2.ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை முன்னிறுத்தி, தங்கள் மனிதவுணர்வுகளை வெளிப்படுத்தும் சமூக அஞ்சலியாக செய்கின்றனர்.

இப்படி இரு வேறுபட்ட பின்னணியிலேயே, வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவுகள் பல்வேறு இழுபறிகள் - முரண்பாடுகளுடன் நடக்கின்றது.  2009 இல் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய இறுதி யுத்தமானது, புலிகள் பலி கொடுக்க பேரினவாத அரசு பலியெடுத்;தது. இதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பலியெடுக்கப்பட்டனர். இப்படி பலி கொல்லப்பட்டவர்களை இன்று நினைவுகொள்வதன் மூலம், பலிகொடுத்தவர்களுக்கும் - பலியெடுத்தவர்களுக்கும் எதிரான உணர்வு தான் - முள்ளிவாய்க்கால் அஞ்சலியின் பொதுச் சாரமாக இருக்க முடியும். இவை இரண்டையும் உள்ளடக்கி செய்யாத அஞ்சலிகள் போலியானது, எதாhர்த்தத்தில் சொந்த பிழைப்புக்கானதாகவே அரங்கேறுகின்றது.

 

செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்பது, முதலாளித்துவத்தின் இதயமே நின்று போவதற்குச் சமமானது. உழைப்பு முடக்கமானது, உழைப்பிலான கூலியை நம்பி வாழும் மனிதர்கள் சந்திக்கின்ற பொது நெருக்கடியை விட, உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவத்தின் நெருக்கடிதான் - அரசுகளின் முடிவுகளாக இருக்;கின்றது.

உழைப்பினால் குவிந்த செல்வத்தை (உபரியை) பறிமுதல் செய்தோ அல்லது அதை அரச உடமையாக்கியோ, கூலியை நம்பி வாழும் மனிதர்களுக்கு பகிரவில்லை. உபரியை (குவிந்த செல்வத்தை)பறிமுதல் செய்யுமாறு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை முன்வைத்து, பாட்டாளி வர்க்கம் உலகெங்கும் அதை அரசியலாக்கவுமில்லை. முதலாளித்துவம் எந்த வர்க்க அரசியல் நெருக்கடியுமின்றி இருக்க, அரசுகள் மனித உழைப்பினால் செல்வந்தர்களிடம் குவிந்துவிட்ட செல்வத்தின் ஒருபகுதியை வட்டிக்கு எடுத்து, அதையே நிவாரணமாக வழங்கியது. மறுபக்கம் அதையும் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான இரு பொது வழிமுறைகளை கையாண்டது.

அதாவது அரசுகளின் உத்தரவுக்கு ஒடுங்கி வாழ்தல் காலத்தில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை சில அரசுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைக்க - வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாக மக்களுக்கு கைகொடுப்பதை மறுதளித்தது. உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளை கையாளும் அரசு வடிவங்கள் வேறுபட்டு, ஒருபுறம் பள்ளத்தை தோண்ட மறுபக்கமோ மலையாகக் காட்சியளிக்கின்றது.

இதனால் முதலாளித்துவம் கொந்தளிப்பற்ற வர்க்க அமைதியைப் பெற்ற போதும், செல்வத்தை தொடர்ந்து குவிக்க முடியாத முதலாளித்துவ சுய நெருக்கடியை எதிர் கொள்கின்றது. இதில் இருந்து மீள, நோயும் - மரணம் தொடர்கின்ற சூழலில் - மீண்டும் செல்வத்தை குவிக்கும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கோருகின்றது.

தமிழ் தேசியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ நவதாராளவாதிகளிடையே சுமந்திரன் மட்டுமே - எதார்த்தம் சார்ந்து உண்மையைப் பேசுகின்றவராகவும், நேர்மையாகவும் இருக்க முனைகின்றார். இடதுசாரிகள் தவிர எவரும் அவர் முன்மொழியும் வழியையும் - தீர்வையும் மறுத்து, இதுதான் சரியான மாற்று வழி என்ற ஒன்றை முன்வைக்க முடிவதில்லை. அவதூறுகளும், சம்மந்தமில்லாமல் பேசுவதுமே எதிர்வினையாக இருக்கின்றது. இதுதான் சுமந்திரனுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற பொதுப் பின்னணியாகவும் - இதுவே புலி அரசியல் சாரமாகவும் உள்ளது.

சுமந்திரன் இலங்கையில் இரண்டு தேசங்கள் உண்டு என்றும், அதை அவர் சிங்கள – தமிழ் தேசம் என்றும் கூறுகின்றார். மிகச் சரியான கருத்து. இந்த தேசத்துக்கு சுயநிர்ணயம் உண்டு என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், இலங்கையின் எதார்த்தம் சார்ந்து சமஸ்டியை முன்வைப்பதாகக் கூறுகின்றார். இங்கு இனவொடுக்குமுறையை சந்திக்கும் மலையக, முஸ்லிம் மக்களையும், அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றார். சிங்கள மக்களைச் சார்ந்து நிற்க வேண்டும் என்கின்றார். இங்கு அவர் மக்களாகக் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களையல்ல, அந்த மக்களின் வாக்கு மூலம் வென்ற ஒடுக்கும் பாராளுமன்றவாதிகளையே.

அவரின் இந்தக் கோட்பாடுகள் - நடைமுறைகள் அனைத்து நவதாராளவாத தேர்தல் கட்சிகளைச் சார்ந்து, பேரம் பேசுவதன் மூலம் இனவொற்றுமையையும் – தீர்வு குறித்தும் பேசுகின்றார். அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பேச வேண்டும். தேர்தல் கட்சி வழிமுறைகளில் இருக்கக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை குறித்து பேசுகின்றார். இதை கடந்து தேர்தல் அரசியல் வழிமுறையில் வேறு மாற்று எதுவுமில்லை. இருக்கிறது என்பவர்கள் எதையும் முன்வைக்க முடியாது.

கொரோனா நோய் தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட, ஒரு மாதம் கடந்துவிட்டது. உடலின் ஏற்பட்ட வலிகள் படிப்படியாக குறைந்து, நோயிலிருந்து மீண்டு தேறியிருக்கின்றேன். இது மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதல்ல, எனது உடல் மற்றும் மனவுணர்வு சார்ந்தது.

இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்தில் ஒருவர் இறக்கின்றனர். இது தான் அதிகாரபூர்வமான தரவு. உடல் மற்றும் மருத்துவ உதவி சார்ந்து நிகழ்கின்றது. நான் தேறிய போதும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றது. இன்று உழைப்பு முடக்கப்பட்ட போது, புதிதாக நோய்த்தொற்று பத்தாயிரக்கணக்கில் (சில நாட்கள் இலட்சம் வரை) நிகழ்கின்றது. அதேநேரம் இதற்கான மருத்துவரீதியான தீர்வுகள் - அணுகுமுறைகள் ஒன்றுபட்டனவல்ல, அவையும் தொடர்ந்து வேறுபடுகின்றன. இதுதான் எதார்த்தம்.

எனக்கு மனவுறுதியைத் தந்தது நான் போராடிய வாழ்க்கையும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனவுறுதியும் தான். எனக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு மருத்துவரீதியாக காய்ச்சல் - உடல் வலியைப் போக்க டொலிப்பிரான் தரப்பட்டது. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கினை நிறுத்த மருந்தும், சளியை வெளியேற்ற வழமையாக பாவிக்கும் சிராப்பு மருந்தும் மருத்துவரால் தரப்பட்டது. இதைத் தவிர வேறு எதையும் பாவிக்கவில்லை. நோய் எதிர்ப்பு சத்தியை பலப்படுத்த தோடம்பழச்சாறு (விற்றமின் சி) குடித்தேன். மற்றும்படி வழமையான உணவு தான். இதுதான் கொரோனாவுக்கு எதிரான எனது மருத்துவம் மற்றும் உணவாக நான் கையாண்டது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவும் முடியாது.

உண்மையில் இயற்கை ஆற்றலே, நோயில் இருந்து என்னை மீள வைத்தது. தனிப்பட்ட ரீதியில், நான் இந்தப் பூமிக்கு ஒரு விருந்தினர் - அவ்வளவுதான். அப்படிப்பட்டதே இயற்கையின் விதி. இந்த இயற்கையின் ஆற்றலே, மீண்டும் எனக்கு உயிர் வாழ்க்கையைத் தந்தது.

நோய்த்தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட போது, 10 நாள் உயிர் வாழ்வதா அல்லது இன்னும் 10 வருடம் உயிர் வாழ்வதா என்பதையே, என் பகுத்தறிவு கேள்விக்குள்ளாக்கியது. அதேநேரம் அறிவு மரணத்துக்கு என்னை தயார் செய்தது. மரணம் குறித்த பொதுவான உளவியல் அச்சம் - என்னை அதிரவைக்கவில்லை, மரணம் என்பது, என்னுடைய 40 வருட பொது வாழ்வு சார்ந்து - எப்போதும் தரிசித்து வந்த ஒன்று தான். என் கண் முன் பலதரம் நிழலாடிய மரணம் - எனக்குப் புதிதல்ல. மரணத்தின் விளிம்பில் இருந்து, பலதரம் தப்பியும் இருக்கின்றேன். எனக்கு ஏற்கனவே பொது வாழ்வு சார்ந்து கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றது.