Language Selection

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்;
பரப்பியவன் அயோக்கியன்;
வணங்குகிறவன் காட்டுமிராண்டி -

என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

 

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்! மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

 

இப்போது நீ நினைத்துப்பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்! நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. "தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

 

ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14.-03-1970)

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள் தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

 

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்," "கருணையே வடிவானவர்," "அன்பு மயமானவர்," "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

 

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்? இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர். " அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

 

இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர்களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 -கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. படித்த மக்களும், புலவர்கள், வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண், பெண் கடவுள்களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம்.

 

அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! " கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள்.

 

" கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள், இவ்வளவு ஏன்?

 

நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள். உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள். எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14-04-1970)

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுதப்படுகிறேன். பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு, தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்து கொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான். இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

 

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

 

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி விளக்குகிறேன். நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்டவைகளையும் வணங்குகின்றான் என்பதே.

 

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும், ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன். மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன். மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய், அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன். மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - உண்மை 14-05-1970 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_05.html


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ