Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜோர்ஜ் ஹப்பாஷ், 81 வயதில் மாரடைப்பால் 2008 ஜனவரி 26 ல் காலமான செய்தி பல பலஸ்தீன மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளின் புரட்சிக்காரர்களுக்கும், பழைய இனிய நினைவுகளை கிளறி விட்டது. இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஷ், அதே நேரம் பலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார்.

அவரது வாழ்க்கை பலஸ்தீன போராட்ட வரலாற்றின் ஒரு பகுதி. PLFP என்ற பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் வரலாறு ஜோர்ஜ் ஹப்பாஷின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தது.

1948 இஸ்ரேல் என்ற நாடு, பலஸ்தீன மாநிலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. கிரேக்க கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த, ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஜோர்ஜ் ஹப்பாஷ், பின்னர் லெபனானில் அகதியாக இருந்த போது, பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றாலும், பலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் எகிப்திய நாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கிய ஹப்பஷும் தோழர்களும், பின்னர் மார்க்ஸ்சிய-லெனினிய தத்துவங்களால் கவரப்பட்டு, PLFP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பஷின் தனித்துவ அரசியல் உலகம் முழுக்க பிரபலமானது.

20 ம் நூற்றாண்டில் உருவான அரசியல் அமைப்புகள் யாவும், ஏதாவதொரு சர்வதேசியத்தை முன்னெடுக்க தவறவில்லை. இன்று ஹமாஸ், இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக தன்னை பார்ப்பது போல, அன்று ஹபாஷ் ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஓர் அங்கமாக தனது இயக்கத்தை நிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர்களில் கணிசமான அளவு தொகையில் உள்ள (கிரேக்க பிரிவு) கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப்பட்ட போது, யூத காடையர்கள் தமது குடியிருப்புகளையும் தாக்குவார்கள் என்று கருதவில்லை. வழக்கமாகவே மூன்றாம் உலக கிறிஸ்தவர்களிடம் காணப்படும் மேற்குலக சார்பு தன்மை, அந்த என்னத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் சியோனிச பேரினவாத வெறியர்களின் நோக்கம், ஒரு மொழி(ஹீப்ரு) பேசும், ஒரே யூத மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இஸ்ரேல் சொந்தம் என்று தீர்மானித்து விட்டதால், வன்முறையை பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PLFP யாக இருந்தாலும் மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க முயன்றது, பூர்வீக மக்களின் தார்மீக உரிமை சார்ந்ததாகும். இன்று ஹமாஸ் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள், சியோனிசத்தின் எதிர் பிம்பமாக உள்ளன. இஸ்ரேலும், மேற்குலக நாடுகளும் அப்படியான எதிரிகளையே எதிர்பார்ப்பர்களாயின், அப்படியே ஆகட்டும்.

அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்த போது வரவேற்ற ஜோர்ஜ் ஹப்பாஷ், பின்னர் அந்த "அரபு யூனியன்" சுயநல அரசியலால் சீர்குலைந்த போது விரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்த PLFP முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்து தகர்த்தத்தின் மூலம், பலஸ்தீன பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றனர். அப்படியான நடவடிக்கை ஒன்றில் பங்கு பற்றிய உலகப்புகழ் பெற்ற இளம் பெண் போராளி லைலா காலித், இன்று PLFP யின் தலைவர்களில் ஒருவராக ஜோர்டானில் வசிக்கிறார். இத்தகைய விமானக்கடத்தல் நடவடிக்கைகள் சில பின்னர் ஹோலிவூட் திரைப்படங்களில் எதிர்மறையாக, தோல்வியில் முடிந்த சாகசங்களாக திரிபுபடுத்தி சித்தரிக்கப்பட்டன. என்ன செய்வது? அமெரிக்க சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்தும் போது, மக்களிடம் இப்படியான பிரச்சாரங்களை எடுத்துச்செல்வது இலகுவாக உள்ளது.

PLFP யின் அதிரடி நடவடிக்கைகள் சர்வதேச ஆர்வலர்களின் உதவியின்றி சாத்தியமாகியிருக்காது. லத்தீன் அமெரிக்க தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின் போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேல், டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீன போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர். எழுபதிகளில் இடம்பெற்ற இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்கு செயல் வடிவம் கொடுத்தன. அது எப்படி சாத்தியமானது?

அன்று எதிரணியில் இருந்த சோவியத் யூனியன், பலஸ்தீன போராட்டத்தை (அமெரிக்கா) ஏகாதிபத்திய எதிர்ப்பு போராக கணித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனிலும், சோஷலிச கிழக்கைரோப்பாவிலும் கல்வி கற்ற பலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீன பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவை சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற "சர்வதேச பயங்கரவாதியாகி", தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PLFP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக யோர்தான் அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களுக்கான உத்தரவு வரும் வரை தங்கவைக்கப்பட்டனர்.

1967 ம் ஆண்டு, PLFP ஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு, ஐரோப்பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியை கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Birigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் PLFP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. சோவியத் யூனியன் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்து போவோருகெல்லாம், இராணுவப்பயிற்சி தாராளமாக கிடைத்தது.

ஈழ விடுதலை போராளிகளும் இந்த சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டு யுத்தம், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/இராணுவ கட்டுபட்டு பிரதேசங்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது போல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பெகா பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும் அந்தப்பகுதியில், PLFP உட்பட அனைத்து பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லப்பகுதகளில் இருந்தும் வந்த தீவிரவாத இளைஞர்கள் அங்கே புகலிடம் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர் தான், அந்த புகலிடம் பறிபோனது.

அந்த சமயம் தான் யாசிர் அரபாத்தின் தேசியவாத PLO, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஜ், இந்த சமரசத்திற்கு கடைசி வரை உடன்படாமல், தனது தோழர்களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது விட்டுக்கொடா தன்மை, அனைத்து பலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. ஹப்பஷின் இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டு விட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மதவாத அமைப்புகளுடன், போது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது. மதச்சார்பற்ற PLFP யும், மதவாத ஹமாசும் ஒன்றாக வேலைசெய்வது, பலருக்கு நம்பமுடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது. அண்மையில் கூட PLFP யும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணைக்குதங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முற்றுகையின் கீழ் உள்ள காசா பகுதிக்கு காஸ், பெட்ரோல் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் என்பன, பழிக்கு பழி வாங்கும் அரசியலை நடத்திக்கொண்டிருந்த காலத்தில், PLFP மட்டுமே அரசியல், பொருளாதார இலக்குகளை தாக்கும் பாடத்தை பலஸ்தீனியர்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஒரு காலத்தில், PLO வின் தேசியவாதத்தால் கவரப்பட்ட பெரும்பான்மை பலஸ்தீனிய மக்கள், அது சர்வதேச மூலதனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவுடன் மயக்கம் தெளிந்தனர். பின்னர் இஸ்லாமியவாத ஹமாசிற்கு ஆதரவளித்து, அவர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் நகரமுடியாது என்பதைக் கண்டுகொண்டனர். வழிதெரியாமல் இருட்டுக்குள் தடுமாறும் மக்களுக்கு PLFP புதிய பாதையை காட்டுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜோர்ஜ் ஹப்பாஷ் என்ற புரட்சிவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சர்வதேச பலஸ்தீன ஆதரவாளர்கள், PLFP க்கு தமது ஆதரவை தொடர்கின்றனர். பலஸ்தீன விடுதலைக்கான போராட்டம் 21 ம் நூற்றாண்டிலும் முன்னெடுக்க அடுத்த தலைமுறை தன்னை தயார்படுத்திக்கொள்கின்றது. இந்தக்கட்டுரை ஜோர்ஜ் ஹப்பாஷின் மறைவையொட்டி "உயிர் நிழல்"(ஜன.-ஜுன் 2008) இதழில் பிரசுரிக்கப்பட்டது.
__________________________________________________________

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது