Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக
வந்து போகவில்லை நிலவு,
விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்
சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு
ஓரிடத்தில் உறையாமல்
பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்
தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!
வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!


கண்களால் காணும் கனவுகளை விடவும்
நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது
ஏன் தெரியுமா?
கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.
அனுபவிக்கிறோம்,
உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)
சிந்திக்கிறோம்!


உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே
பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.
இதில் உறங்காத கனவுகளை
இந்த ஊரே சொல்லும்படி
என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!


உறக்கம் கிடக்கட்டும்
சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே
எதையும் விளங்கிக் கொள்வதில்லை!
பாக்கி கடன் அடைக்க முடியாமல்
குடும்பத்துடன் விவசாயி
பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்
நோக்கியா வந்ததனால்
நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்
ஆமாம், ஆமாம் என்று
வேகமாய் தலையாட்டும்
சில விளங்காத ஜென்மங்கள்.
இப்படியொரு சூழ்நிலையில்...
உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை
நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட
மனிதக் கவிதைகளை
மனதாரப் பாராட்டுவோம்!
இது நிலா முற்றம்
குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல
இங்கே குறைகளும் கூட அழகாகும்.
சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்
பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?
பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?


பொய்நேர்த்தி காட்டாத
உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு
சேர்ந்து கொள்கிறேன், நானும்...


படுத்தால் கனவு பிடுங்குதென்று
பலர் சொல்லக் கேட்டதுண்டு
படுத்துத் தூங்கினால்
விழுந்து பாம்பு புடுங்குது
விழித்து எழுந்தால்
ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது
பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.


சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்
கனவு கண்டாலோ விபரீதம்
காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது
ஆட்டுப் பால் காலியானது
அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்
சாணிப்பால் நம் வாயில் போனது


அம்பானிகள் கண்ட கனவில்
பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது
களவாடிய அரசுப் பணத்தை
கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி
"ரிலையன்சின் ரிங்டோன்'
தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.


வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்
இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.
கோக்பெப்சியின் கனவு
பல குரல் வளையெங்கும் ஓடுது.
எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு
எலி செத்து நாறுது!
கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்
சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்
நீடித்த வியப்பளிக்கும்!
இரவு உணவின்றி படுக்கப் போவோர்
இந்தியாவில் இருபது சதவீதம்!
பிறப்பது பெண்பால் என்றால்
கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.
மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.
ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.
உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.
இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க
இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று
சிலர் பீதியூட்டும் அபத்தங்களை
கனவிலும் யாராவது காண முடியுமா?


கனவான்களே! கலாம்களே!
காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்
கடைசியில் எங்கள் கிட்னியும்
கழண்டு போனது.
இதயமும் வறண்டு போனது.


இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்
கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?


ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்
பிட்சா கார்னர்களுக்கும்
இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.
நடைபாதை இரவுகளோ
சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்
சில ஏழைகளின் உயிரையும்
செலவு செய்து விடுகிறது.


இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்
குளத்தின் பனிக்குள்
உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு
நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு
அறுக்கும் வயலின்
கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட
உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்
பனிக்கும் குளிர்விட்டுப் போகும்
நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!


தங்க நாற்கரச் சாலையில்
தடம் குலுங்காமல் விரைகின்றன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்
கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...
எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி
தயிர் விற்பவள் தடம் புரண்டு
மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!
தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்
புவியீர்ப்பு விசை கூட
பொதுவாய் இருக்குமா என்ன?


இனி கனவுகள் கூட
உனக்கு உரிமை இல்லை.
கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்
வெறும் "காண்டம்' மட்டுமே
இந்திய இளமைக்கு கைவசம்.


நீ ஒரு மாணவனா?
உனது கல்விக்கான மானியத்தை
வெட்டச் சொல்லுது
உலகவங்கியின் கவுச்சிக் கனவு.
அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை
தனது காலடியில் போடச் சொல்லி
விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.
நீ ஒரு விவசாயியா?
உனக்கான இலவச மின்சாரம், நீர்
அனைத்தையும் நிறுத்தச் சொல்லி
உனது கண்களை பறிக்கிறது
உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!
மண்ணை அகழ்ந்து
நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை
அன்னிய டப்பா உணவில்
அடைக்கப் பார்க்குது
இனி நம் அன்னையின் கருவிலும்
அன்னிய மூலதனம்!


பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக
பாதாளத்தில் மண் சரிந்து
மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?
வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க
உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே
இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்
ஒன்றா? இரண்டா?
மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க
மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே
இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு
போதும் எனக் கதற
உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி
உருவாக்கிய சந்தைகள் எத்தனை?
சத்தமில்லாமல் அத்தனையையும்
தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை
உங்கள் உறங்காத கனவுகள்
ஒழிக்காமல் விடுமா என்ன?
நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று
எதிரிகளின்
கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!


மாறாக!
இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...
இலவச டி.வி.யில் மயங்கி...
இழிவுகளோடு உறங்கி..னால்
என்ன கனவு வரும்?
""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்
நாயும் கூட கேவலம் பேசும்
பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,
எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து
எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''
இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்
விடுதலைக் கனவுகள் விதைப்போம்
கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல
கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...
மனிதர்களாக இருப்போம்!

துரை சண்முகம்

 

(1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் "உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது