Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

june_2007.jpg

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

 

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை

 செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர். தனியார்மயம்தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 15 ஆண்டுகளில், நாடெங்கிலும் ஏறத்தாழ 1 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போய்விட்ட கசப்பான உண்மையை, அரசாங்கமே இப்பொழுது வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது.

 

எனினும், விவசாயிகளின் இந்தத் தற்கொலைச் சாவுகள் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் எவ்விதமான கலக்கத்தையோ, பதற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்குத் தரப்படும் அரசியல் முக்கியத்துவம், சந்தை பயங்கரவாதத் தாக்குதலால் நடந்து வரும் இத்தற்கொலைச் சாவுகளுக்குத் தரப்படுவதில்லை. ""அவன் விதி, செத்தான்'' என இலகுவாக, வெறும் புள்ளிவிவரமாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது.

 

""இந்தத் தற்கொலைச் சாவுகள் இறந்து போனவர்களைப் பற்றி அல்ல; அந்த இழப்பைச் சகித்துக் கொண்டு வாழ்க்கையோடு போராடும் உயிருள்ள விவசாயிகளைப் பற்றித்தான் பேசுகிறது'' என்கிறார் ஏழை விவசாயியான கமலாபாய் குதே. இவர் வசித்து வரும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் 6,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுள், கமலா பாயின் கணவர் பலசுராமும் ஒருவர்.

 

பலசுராமின் தற்கொலைக்கு நட்டஈடாக அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்ச ரூபாயை, கந்துவட்டிக்காரர்கள் பறித்துக் கொண்ட பிறகும், கமலாபாய்க்கு ரூ. 50,000/ கடன் பாக்கி இருந்தது. கடந்த ஆண்டு, அவர் தனது ஆறு ஏக்கர் நிலத்தில், மகாராஷ்டிர மாநில அரசு விளம்பரப்படுத்திய பி.டி. பருத்தியினைப் பயிர் செய்தார். ஆனால், விளைந்ததோ வெறும் 2 குவிண்டால்தான். இப்பொழுது கடன் ஒன்றுக்கு இரண்டாகி விட்டது. ஆறு ஏக்கர் நிலம் இருந்த போதிலும், கமலாபாய் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். பணப் புழக்கம் அதிகம் இருக்கும் நாட்டில், 12 மணி நேரம் வேலை செய்யும் கமலாபாய்க்குக் கிடைக்கும் கூலி, 25 ரூபாய் பெறுமான சோளம்தான்.

 

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் வாழும் பந்தி இலட்சுமம்மாவின் கணவர் பந்தி நரசிம்மலு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பொழுது, இலட்சுமம்மாவிற்கு ஆறுதல் சொல்ல ஓட்டுக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓடிவந்தனர். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""இலட்சுமம்மாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்க வேலை அளிக்கப்படும்'' என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் இலட்சுமம்மாவிற்கு, கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் கூட வேலை கிடைக்கவில்லை.

 

இலட்சுமம்மா, தனது கிராமத்தில் இருந்து 18 கி.மீ. அப்பால் உள்ள நகரத்தில் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இதற்கு அவருக்கு கிடைக்கும் கூலி 60 ரூபாய்தான். இதில் 10 ரூபாய் போக்குவரத்து செலவுக்குப் போய்விடும். அவரது மகன் கோபால், உள்ளூரில் உள்ள வங்கியில் 1,500 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் கணினி இயக்குநராக வேலை பார்க்கிறார். மூன்று பேர் கொண்ட இலட்சுமம்மாவின் குடும்பம், மாதந்தோறும் கிடைக்கும் 3,000 ரூபாய் கூலியில், குடும்பச் செலவுகளை மட்டும் ஈடு கட்டாமல், விவசாயத்தையும் நடத்த முயன்று வருகிறது. ""விளைச்சல் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் போதும், நாங்கள் பிழைத்துக் கொள்வோம்'' என நம்பிக்கையோடு சொல்கிறார், இலட்சுமம்மா.

 

விவசாயம் சூதாட்டமாக மாறிப் போன பிறகும், அத்தொழில் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கும் இலட்சுமம்மா போன்ற விவசாயிகளுக்கு அரசு பெரிதாக உதவி எதுவும் செய்வதில்லை. மாறாக, ""வங்கிக் கடனைத் திருப்பித் தருகிறாயா, இல்லை கம்பி எண்ணப் போகிறாயா?'' என மிரட்டத் தொடங்கியிருக்கிறது.


ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை விவசாயி நல்லப்ப ரெட்டி, சமீபத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். வங்கிக் கடனை உரிய காலக் கெடுவுக்குள் அடைக்கத் தவறியதுதான் இவர் செய்த குற்றம்.

 

நல்லப்ப ரெட்டி விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடன் 24,000/ ரூபாய் தான். கந்துவட்டிக்காரர்களிடம் 34,000/ ரூபாய் கடன் வாங்கி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றார், அவர். ஆனால், வங்கியோ, வட்டியோடு சேர்த்து ஒரு இலட்ச ரூபாய் கட்டத் தவறியதற்காக அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டது.

 

கதிரி மண்டலைச் சேர்ந்த கெங்கி ரெட்டி, ""கடனுக்கு ஈடாக தனது ஆறு ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு'' வங்கி அதிகாரிகளிடம் மன்றாடினார். ஆனால், அதிகாரிகளோ, ""பணம் இல்லையென்றால், ஜெயில்'' எனக் கறாராகச் சொல்லி, அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை வாங்கித் தந்துவிட்டனர். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பாசன வசதிமிக்க தனது ஆறு ஏக்கர் நிலத்தை விற்று வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தினார், கெங்கி ரெட்டி.

 

மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் (ஒருவர் தாழ்த்தப்பட்டவர்; மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்) இந்திய அரசு வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக, சாதி வேறுபாடு பார்க்காமல், அதிகாரிகளால் சிறைக்குள் தள்ளப்பட்டனர். உலக வங்கிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கை, காங்கிரசு ஆட்சியில் தீவிரம் அடைந்திருப்பதாகக் குமுறுகிறார்கள், ஆந்திர விவசாயிகள்.

 

விவசாயத்தில் இருந்து போதிய வருமானம் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், சட்டமும், நீதிமன்றமும் தங்களின் கடமையைச் செய்வதைத் தடுக்க முடியாது என அதிகாரிகள் நியாயவான்களைப் போலப் பேசுகிறார்கள். ஆனால், இந்தச் சட்டமும், நீதிமன்றமும் வங்கிக் கடனை வாங்கி ஏப்பம் விட்ட எத்தனை தொழில் அதிபர்கள் மீது பாய்ந்திருக்கிறது? ஆந்திராவைச் சேர்ந்த 200 முக்கிய புள்ளிகள் வங்கிகள் மூலம் 1,000 கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம் விட்டிருப்பதை ஆந்திர அரசே அம்பலப்படுத்திய பிறகும், அவர்களுள் ஒருவர்கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை.

 

""அரசாங்கம், விவசாயத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்க விரும்புகிறது'' என்கிறார், சாய்நாத் ரெட்டி என்கிற விவசாயி. இதற்காகத்தான், ஒப்பந்த விவசாயம், விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; ஏற்றுமதிக்காக பழச் சாகுபடி செய்தால் 70 சதவீத மானியம்; மல்பெரி சாகுபடிக்கு மானியம்; ரிலையன்ஸ், வால் மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் குத்தகைதாரர்களாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.

 

ஏழை நடுத்தர விவசாயிகளை தரகு முதலாளிகளின் பிடியில் சிக்க வைக்கும் இக்கவர்ச்சித் திட்டங்களுக்கு மயங்காமல், தன் சொந்தக் காலில் நின்று விவசாயம் செய்யத் துணிந்தால், அவர்களை அச்சுறுத்துவதற்காகவே, ""கடன் வசூல், கைது, சிறைத் தண்டனை'' என்ற குண்டாந்தடிகளைத் தூக்கிக் கொண்டு திரிகிறது, ஆளும் வர்க்கம்.


· இரணியன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது