Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
PJ_11_2007.jpg

"அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.


நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார்.

 எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.


பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது; இந்நிறுவனங்களில் பன்னாட்டு முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும், தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவ முயற்சிப்பது; நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.


சாவேசின் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுநிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்றபோதிலும், அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்கள் நலத் திட்டங்களையும் வைத்து அவரை ""சோசலிஸ்டு'' என்று மதிப்பீடு செய்கிறது ஆஸ்திரேலிய போலி சோசலிஸ்டுகளின் ""கிரீன் லெஃப்ட்'' பத்திரிகை. நம்நாட்டு போலி கம்யூனிஸ்டுகளோ, அவரை ""இடதுசாரி'' போக்குடையவர் என்றும், வெனிசுலாவில் புரட்சிகர மாற்றங்கள் நடந்து வருவதாகவும், தென்னமெரிக்க கண்டத்தில் ""இடதுசாரி அலை'' வீசுவதாகவும் சித்தரிக்கின்றனர்.


இப்படி ""சோசலிஸ்டு'', ""இடதுசாரி'' என்றெல்லாம் வெனிசுலா அதிபர் சாவேசை மதிப்பீடு செய்வதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவரது நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவைத் தகர்த்து, நாட்டு விடுதலையையும் சுயசார்பையும் நிறுவும் புரட்சிகர நடவடிக்கைகள்தானா? வெனிசுலாவின் பொருளாதாரமும் அதிபர் சாவேசின் நடவடிக்கைகளும் எந்த திசையில் செல்கிறது?


···


எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக சாவேஸ் செலவிடுகிறார். விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கப் போவதாகக் கூறுகிறார்; புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். எண்ணெய் விலையை உயர்த்துவது, எண்ணெய் உற்பத்தியை விரிவாக்குவது, புதிய சந்தைகளைத் தேடுவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களைச் சாதிக்க விழைகிறார்.


இதன்படி, வெனிசுலாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் (கஈஙகுஅ), தற்போதைய உற்பத்தியான நாளொன்றுக்கு 33 லட்சம் பீப்பாயிலிருந்து 2012ஆம் ஆண்டில் 58 லட்சம் பீப்பாயாக உற்பத்தியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஏறத்தாழ 7500 கோடி டாலர் தேவை என்று கடந்த ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களைப் பராமரித்து மேம்படுத்துதல், புதிய எண்ணெய் துரப்பண நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு இன்னும் பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவை. மேலும், வெனிசுலாவின் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் பழமையானவை; ஆண்டுக்கு 23% அளவுக்கு இக்கிணறுகள் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. எனவே, புதிய கிணறுகள் தோண்டப்பட்டால் மட்டுமே எண்ணெய் உற்பத்தியில் முன்னேற முடியும்; உலகளாவிய போட்டியில் ஈடுபடவும் முடியும்.


இதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது, வெனிசுலாவிலுள்ள அந்நிய எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ணெய்க்கு ஈடாக முன்பணம் பெறுவது, அந்நிய எண்ணெய் கம்பெனிகள் மீது புதிய வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டத் தீர்மானித்துள்ளார், அதிபர் சாவேஸ். எண்ணெய் மூலாதாரங்களும் உற்பத்தியும் அரசின் கையில் இருப்பதால், அன்னிய எண்ணெய் கம்பெனிகளும் நிதி நிறுவனங்களும் முந்தைய காலத்தைப் போல கொள்ளையடிக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முடியாது என்று கருதுகிறார்.


ஆனால், வெனிசுலா மட்டுமல்ல; உலகின் முக்கால் பங்கு எண்ணெய் எரிவாயு மூலாதாரங்களையும் உற்பத்தியில் பாதிக்கு மேலாகவும் சௌதி அரேபியாவின் ஆரம்கோ, குவைத் பெட்ரோலியம், அல்ஜீரிய எண்ணெய் கழகம் முதலான அரசுத்துறை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த அரசுத்துறை நிறுவனங்கள் சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்திருப்பதாலும், எக்சான் மொபில் முதலான பூதகரமான மேற்கத்திய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாலும், தமது வர்த்தகத்துக்கும் சந்தைக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாலும் உண்மையில் ஏகாதிபத்தியங்களே பல்வேறு வழிகளில் ஆதாயமடைகின்றன.


இப்படி பல்வேறு வழிகளில் ஆதாயமடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்கள் அனைத்திலும் அரசுத்துறையின் பங்கு 60%க்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிவித்த அதிபர் சாவேஸ், கடந்த மே முதல் நாளன்று இம்முடிவை ஏற்காவிடில், அன்னிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். தொடக்கத்தில், இதை ஏற்க மறுத்த அன்னிய எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் இதற்கு உடன்பட்டன. இதன்படி உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனங்களான ஷெல், செவ்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம் முதலானவற்றுடன் வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து இயங்கும்; இக்கூட்டுத்துறை நிறுவனங்களில் அரசுத்துறையின் பங்கு 60% ஆக இருக்கும். இதன் மூலம் முந்தைய காலத்தை விட வெனிசுலா அரசுக்கு எண்ணெய் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மறுபுறம், எண்ணெய் விலையை வெனிசுலா அரசு உயர்த்தியுள்ளதால், முந்தைய காலத்தைவிட, அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கூடுதல் ஆதாயமடைந்துள்ளன.


மேலும், சந்தைக்காகவும், முதலீட்டு ஆதாரங்களுக்காகவும், தொழில்நுட்பத்துக்காகவும் அமெரிக்காவையே வெனிசுலா பெரிதும் சார்ந்துள்ளது. இச்சார்பு நிலையிலிருந்து வெனிசுலா மீள்வதென்பது மிகவும் கடினம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், வெனிசுலாவின் பங்கு 12% தான். வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் தர மறுத்துவிட்டால், அதனால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. அதேசமயம், வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யாமல் போனால், அதன் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். ஏனெனில், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், 60%க்கு மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்க ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது.


அமெரிக்காவைச் சார்ந்திராமல் எண்ணெய்க்குப் புதிய சந்தைகளைத் தேட முயற்சித்தார், அதிபர் சாவேஸ். அமெரிக்காவுக்கு அடுத்து பெருமளவு எண்ணெயைக் கொள்முதல் செய்யும் நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால் சீனாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு பூதாகரமானதாக இருப்பதோடு, உடனடி சாத்தியமின்றியும் உள்ளது. ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பசிபிக் பெருங்கடலில் வெனிசுலாவுக்குத் துறைமுகம் இல்லை. வெனிசுலாவிலிருந்து பனாமா கால்வாய் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய முடியும் என்றாலும், பல்லாயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் செல்லுமளவுக்கு பனாமா கால்வாய் ஆழமானதல்ல. எனவே கொலம்பியாவின் ஊடாக பெரும் எண்ணெய்க் குழாய்களைப் பதித்து, அந்நாட்டு உதவியுடன் பசிபிக் பெருங்கடலிலுள்ள துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்குப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்க வேண்டும்.


மேலும், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெயில் கந்தகம் மிகுந்துள்ளது. அதைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் ஆலைகள் சீனாவில் இல்லாததால், வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க சீனா தயங்குகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற காஸ்பியன் கடல் பிராந்திய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதிலேயே சீனா ஆர்வம் காட்டுகிறது.


இதுவொருபுறமிருக்க, வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டியா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவேஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார். மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.


ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் ஒரு ஏழை நாட்டு நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும் அதன் பின்னணியில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும் வங்கிகளும்தான் உள்ளன. அவை முதலாளித்துவ முறைப்படி சுரண்டுவதும், முதலாளித்துவ முறைப்படி இலாப விகிதங்களை வலியுறுத்துவதும்தான் நடக்குமே தவிர, அவை அமெரிக்க எதிர்ப்பு கொண்ட தென்னமெரிக்க பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்க ஒருக்காலும் உதவி செய்யாது. மேலும் பூதாகரமான இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பாரதூரமான விளைவுகளையே தோற்றுவிக்கும். தென்னமெரிக்கக் கண்டத்தில் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் முதலிடம் வகிக்கும் வெனிசுலா நாடு, இத்தகைய பெருந்திட்டங்களால் இயற்கை முறை குலைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல்வாதிகள் அறதியிடுகின்றனர்.


எல்லாவற்றுக்கும் மேலாக, வெனிசுலாவின் எண்ணெய்த் துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. அரசுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரினோகோ எண்ணெய் வயலில் 380 கோடி டாலர்களை சாவெஸ் அரசு முதலீடு செய்தும்கூட, அத்திட்டம் நிறைவேறும்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளுக்கே வேலை கிடைக்கும். வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும். அதேசமயம் வெனிசுலாவின் வேலையில்லாதோர் விகிதம் ஏறத்தாழ 15% ஆக இருக்கிறது.
···
எண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் பொக்கிஷமோ, பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவிலிருந்து அல்ஜீரியா வரை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந்நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கிவிடவில்லை. சோசலிசம் என்பது எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதோ, எண்ணெய் வருவாயை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோ அல்ல.


வெனிசுலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.


சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் எண்ணெய் அல்ல; விவசாயம்! பின்தங்கிய ஏழை நாடான வெனிசுலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.


நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவேஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல். இதனாலேயே சோசலிசக் கனவுகளோடும், வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையோடும் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், முன்னேற முடியாமல் நிற்கின்றன.


சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை. ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவுடன் வெனிசுலாவின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய உலகிற்கு மாற்றாக, அதற்கு வெளியே புதிய உலகைக் கட்டியமைக்க விழையும் சாவேசின் இலட்சியக் கனவு நிறைவேற அடிப்படை இல்லை.


அதேசமயம் மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவேசின் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேநேரத்தில், வெனிசுலா அதிபர் சாவேசின் முதலாளித்துவ வழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையே ""மாபெரும் புரட்சி''யாகவும், சாவேசை ""இடதுசாரி'' என்றும் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிசவாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கிய கடமையாகும்.


· மனோகரன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது