சிறுபான்மை மதங்களுக்கு எதிராக பௌத்த அடிப்படைவாதத்துடன் கைகோர்க்கும் பேரினவாதம்
சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் மூலம் தனிமைப்பட்டு வரும் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதத்துடன் கூட்டுச்சேர்ந்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை மதம், இனம் சார்ந்து தன்னை தக்கவைக்க முனைகின்றது. இலங்கை அரசு வேகமாகவே சர்வதேச அளவில் தனிமைப்பட்டு வரும் இன்றைய நிலையில், இதை எதிர்கொள்ள மத இன அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி சிறுபான்மையினரை மேலும் கூர்மையாக ஒடுக்கத் தொடங்கியுள்ளது. எல்லா மக்கள்விரோத சர்வாதிகார அரசுகள் போல் தான், இன்று மகிந்த குடும்ப சர்வாதிகாரமும் இதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இனம் சார்ந்த பிளவுகளும் மோதல்களும் நாட்டின் பிரதான முரண்பாடாக இருக்கின்ற நிலையில், மேலதிகமாக மதம் சார்ந்த மோதல்களையும் பிளவுகளையும் திட்டமிட்டு விதைத்து வருகின்றது.
இந்த வகையில் இலங்கை அரச இனரீதியாக மட்டுமல்ல, மதரீதியாகவும் தன்னை குறுக்கிச் செல்லுகின்றது. இந்த வகையில் அண்மையில் பேரினவாத அரசின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க இரு சம்பவங்கள் அரங்கேறியது.
1.முனீஸ்வரம் கோயிலில் மிருகபலி சடங்கு நடைபெற்ற நாள், அமைச்சர் ஒருவர் பௌத்தத்தை முன்னிறுத்தியபடி, மற்றயை மதங்களை நிந்தனை செய்தபடி காடைத்தனத்தைப் புரிந்துள்ளார்.
2. அனுராதபுரத்தில் மிகப் பழைமை வாய்ந்த தர்கா ஒன்றை, அரசின் துணையுடன் பௌத்த அடிப்படைவாதிகள் தகர்த்துள்ளனர்.