தமிழர் விடுதலைக் கூட்டமைப்பைத் தடைசெய்ய முனையும் பௌத்த பேரினவாதம்
தாமல்லாத அனைத்தையும், இல்லாதொழிப்பதே மகிந்த சிந்தனை. இது இன்று இலங்கை பௌத்த பேரினவாத பாசிசக் கட்டமைப்பின் அரசியல் அடித்தளமாகும். அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்ள, குறுகிய சமூகப் பிளவுகளை முன்தள்ளுகின்றது. பௌத்தம் முதல் சிறுபான்மை இனங்களை முன்னிலைப்படுத்துகின்றது. இதைப் பிரதான பொருளாக்கி, இதற்குள் கைதுகள் முதல் தடை செய்தல் வரையான ஒரு சட்டவரம்பைக் காட்டுகின்றது. மறுதளத்தில் சட்டத்துக்கு புறம்பாக கடத்தல், காணாமல் போகப்பண்ணுதல், இனம்தெரியாத படுகொலை, மிரட்டல், விலைக்கு வாங்குதல், அதிகாரத்தை பயன்படுத்தல் மூலம், நாட்டில் பொதுவான அச்சத்தையும் பீதியையும் விதைத்து எதிர்ப்பை அடிபணிய வைக்கின்றது. இதுதான் மகிந்த சிந்தனை. இந்த வகையில் தான் புலிகள், தங்கள் பாசிச அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இலங்கை மகிந்த அரசு, அதையே நடைமுறைப்படுத்தி வருகின்றது.