புதிய ஆத்திச்சூடி
அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..
- விபாகை
அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..
- விபாகை
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.
அழ.வள்ளியப்பா.
-- விழியன்
http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html
அசைந்தா டம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு
உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஔவிய மின்றி அசைந்தாடு
-சாரணா கையூம்
சாஞ்சாடம்மா சாஞ்சாடு
தங்கக் குடமே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
காவேரித் தாயே சாஞ்சாடு
- பாஸிடிவ் ராமா
பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா
உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா
ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா
இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.
-- தேன் துளி
ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.
விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்.
பழக்க மில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.
-சாரணா கையூம்
துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!
துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள்!
வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!
சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே!
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!
(எழுதிய கவிஞருக்கும் அதை எனக்கு அனுப்பி வைத்தவருக்கும் நன்றி)
-- பாஸிடிவ் ராமா
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை
நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)
அ, ஆ சொல்லலாம்
அரிசி பொறி திங்கலாம்
இ, ஈ சொல்லலாம்
இடியாப்பம் திங்கலாம்
உ, ஊ சொல்லலாம்
உளுந்து வடை திங்கலாம்
எ, ஏ சொல்லலாம்
எள்ளுருண்டை திங்கலாம்
ஐ எழுத்து சொல்லலாம்
ஐங் கரனை வணங்கலாம்
ஒ, ஓ சொல்லலாம்
ஓமப் பொடி திங்கலாம்
ஔ எழுத்து சொல்லலாம்
ஔவையாரை வணங்கலாம்.
அக் என்று சொல்லலாம்.
அக்தோட முடிக்கலாம்
- பாசிட்டிவ்ராமா
தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது
சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே
-- பாசிட்டிவ்ராமா
(நன்றி : இதை அனுப்பிய என் அன்பு நண்பருக்கு)
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகைச் சிறகை அடித்து வா
கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்திக் கொத்தித் தின்னவா
ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய்
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய்
உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயரச் செல்லணும்
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு
-- பாசிட்டிவ்ராமா
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்
ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்
குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?
சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!
தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை
சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை
அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது
நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்
கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
காம்பு நீண்ட கத்திரிக்கா
புத்தம் புது கத்திரிக்கா
புதுச்சேரி கத்திரிக்கா
நாராயணன் தோட்டத்துல
நட்டுவச்ச கத்திரிக்கா
பறிச்சு நீயும் கொண்டு வா
கூட்டு பண்ணி தின்னலாம்
நன்றி: சகோதரி தேன் துளி
வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்
ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.
ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்
கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.
பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.
'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ
நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3)
நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்
சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!
தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!-
-- பெருஞ்சித்திரனார்
மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து...
நன்றி: பாஸிடிவ் ராமா– நம்பிக்கை கூகிள் குழுமம்
தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.
பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை.
-சாரண கையூம்
எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை
எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை
பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை
தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை
நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை
காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை
பகை = பகைவனான காட்டுப் பூனை :)
சகோதரி பொன்ஸ் (http://www.blogger.com/profile/650829) தன் வீட்டு பூனையின் புகழ் பாடி எழுதிய பாடல்.