முன்னுரை : ஆணாதிக்கமும் பெண்ணியமும்
ஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.