Language Selection

பி.இரயாகரன் -2011

ஐ.நா. அறிக்கை புலம்பெயர் தமிழர் மீது குற்றஞ் சாட்டியுள்ளது. இது முழுமையானதல்ல. சிலதை மூடிமறைத்து இருக்கின்றது. சிலதைத் திரித்தும் இருக்கின்றது.

1. இங்கு திரிபு என்னவெனில் புலம்பெயர் தமிழ் மக்கள் என்று கூறும் பொது வரையறுப்பு தவறாகும். இங்கு இந்தக் குற்றச் சாட்டுக்குரியவர்கள் புலத்து மாபியாப் புலிகள். சில மட்டும் தான், புலத்து தமிழ் மக்களைக் குறிக்கும்.

2.இங்கு மூடிமறைப்பு புலத்தில் அரசை சார்ந்து நின்று போர்க்குற்றத்துக்கு துணை போன புலியெதிர்ப்புப் பிரிவை குற்றஞ்சாட்டாமை.

இந்த வகையில் புலத்தில் போர்க்குற்றத்துக்கு துணை போன, இரண்டு பிரிவுகளை ஐ.நா அறிக்கை அடையாளம் காட்டத் தவறியுள்ளது.

தமிழ்மக்கள் பெயரால் தான், அனைத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரிப்பதால் என்ன நன்மை? இது இனத்துக்கு எதிரான முரண்பாட்டை கூர்மையாக்கும். அதனால் அரசுடன் இணங்கிப் போகும் வண்ணம், இதிலிருந்து அரசைப் பாதுகாக்க வேண்டும். இந்த வகையில் இலங்கை அரசைப் பாதுகாக்கும் வாதங்களும், தர்க்கங்களும் ஆங்காங்கே தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. "இவ் அறிக்கையை ஐ.நா. செயலர் குழு வெளியிடுவதன் மூலம், இலங்கைத் தேசத்தில் சரிசெய்யப்பட முடியாத ஒரு பாதிப்பை உருவாக்கும்" என்று இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூற்றை எடுத்துக் காட்டி, தமிழர்கள் தமிழரை மறைமுகமாக மிரட்டுகின்றனர். அரசுடன் சாணக்கியமாக இணங்கி, காரியமாற்ற வேண்டும் என்கின்றனர். அரசு தன் இராணுவ பலத்தால் தமிழ் மக்களை ஒடுக்கி அடிபணிய வைக்கும் உள்ளடக்கத்தைக் காணாதவாறு, இங்கு சாணக்கியமாக பலர் இக்கருத்துக்களை முன்வைக்கின்றனர். அரசுடன் மோதி சாதிப்பதைவிட, இணங்கி ராஜதந்திரமாக சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்கின்றனர். இதைப் பூசிமெழுக அரசியல் முலாம்கள்.

இனவொடுக்குமுறையின் ஒரு அங்கம் தான் போர்க்குற்றம். நீண்ட பத்தாண்டுகாலமாக நீடித்த இனவொடுக்குமுறையும், தீர்வைக் காணமறுக்கும் பேரினவாதத்தின் நீண்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் நடந்தேறியதுதான் இந்தப் போர்க்குற்றம். யுத்தத்தின் பின்பும் அரசியல் தீர்வை மறுத்து, இனவழிப்பு தொடருகின்றது. தமிழ் இனம் தன்னைத்தான் அடையாளப்படுத்த முடியாத வகையில், திட்டமிட்ட வகையில் அதன் சமூக பொருளாதார பண்பாட்டு அரசியல் தளம் தொடர்ந்து அழிக்கப்படுகின்றது.

இதற்கேற்ற வகையில் புலியெதிர்ப்பு அரசு ஆதரவு கோட்பாடுகள் முதல் இராணுவ நிர்வாகம் வரை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. புலத்தில் இலங்கை அரசு ஆதரவு கருத்தோட்டத்தை திட்டமிட்டு கொண்டு செல்லும் தேனீ முதல் தேசம் வரையான இணையங்கள், புலி எதிர்ப்பின் உள்ளடக்கத்தில் போர்க்குற்றத்தை அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இந்த வகையில் முன்பு (சண் காலத்தில்) மார்க்சியம் பேசிய பழசுகள், கனடா முதல் இலங்கை வரை புலியெதிர்ப்பில் நின்று அரசுக்கு குடைபிடிக்கின்றனர். இதை நாம் தனியாக ஆராய உள்ளோம்.

 

 

உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" தான், இந்த சத்யசாய்பாபா. இதனால் இந்தக் "கடவுளும்", பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரனான்.

இப்படி இன்றைய பொருள் உலகின் புத்திசாலிகளாக கருதும் முட்டாள்களின் ஒழுக்க கேடான வாழ்வுக்கு ஏற்ற ஆன்மீகம் மூலம், சத்யசாய்பாபா நவீன பொருள் நுகர்வு உலகுக்கு ஏற்ப "கடவுள்" அவதாரமானான். இந்தக் கடவுள் ஒரு குற்றவாளி. ஏய்க்கும் மோசடிகள், பாலியல் வன்முறைகள், கொலைகள் ஈறாக, இந்த நவீன உலகில் முறைகேடாக பணம் சம்பாதிக்கும் பொறுக்கிகள் போல் அனைத்தையும் செய்துதான், தன்னைத்தான் கடவுளின் அவதாரமாக்கினான். இந்தக் குற்றங்களில் இருந்தும் தன்னை பாதுகாக்கும் வண்ணம் கோடி கோடியாக செல்வத்தை தனதாக்கி வைத்திருந்தான். சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியம் உருவாக்கிய இந்து மதத்தைக் கொண்டு, தன்னை தற்காத்துக் கொண்டான்.

 

தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் நவீன மருத்துவம், கடவுளின் அவதாரத்தை இந்த உலகில் மீளவும் படைக்க முனைகின்றது. என்ன அற்புதங்கள்? ஏழை மக்களுக்கு உதவாத நவீன மருத்துவம் முதல், உழைத்து உருவாக்கும் எந்தப் பொருளையும் உருவாக்கும் மனிதத்தகுதி கூட இல்லாத (படைப்பாற்றலற்ற) ஆன்மீகம் பேசும் பொறுக்கி லும்பன்கள் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றனர்.

கடவுளின் அவதாரம் என்று கூறிய மோசடி தான் மூலதனம்;. இது 40000 கோடியாகியுள்ளது. இந்த மோசடி அற்புதங்களானது. இப்படி அற்புதங்கள் பெயரால் ஏமாற்றி வழங்கிய எவையும், இன்றைய மனித உழைப்பு சார்ந்த உற்பத்திக்கு வெளியில் எதையும் கொடுக்கவும், புதிதாக எதையும் படைக்கவும் முடியவில்லை. ஏழைக்கு என்று கூறி வழங்கும் எந்தச் சேவையையும், ஏய்த்துப் பிழைத்த மோசடிப் பணத்தில் இருந்து தான் உருவாகின்றது. கடவுளின் அற்புதங்களில் இருந்தல்ல. கடவுளின் படைப்பாற்றலில் இருந்ததல்ல. எதையும் கடவுளின் அவதாரமான சாயிபாபாவால் உருவாக்க முடியவில்லை. மனித உழைப்பு உருவாக்கிய பணமும், மீளவும் மனித உழைப்பும் தான் அனைத்தையும் படைக்கின்றது. இதுவல்லாதவை எதையும் படைக்க முடிவதில்லை.

 

பாலியல் உணர்வை நலமடிக்க மறுத்தால், அவர்களை கொல் என்கின்றது. இதைத்தான் யுத்தத்திற்கு பிந்தைய இன்றைய தமிழ் சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகும். கடந்தகாலத்தில் இந்த மலட்டுச் சிந்தனை முறைதான் எம்மை அழித்தது என்றால், யுத்தத்தின் பின் மனித உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத வன்முறையாக மாறுகின்றது.

"தாயின் ஈனச் செயலால் கொலையாளியான தனயன்" என்று, வன்னியில் நடந்த ஒரு கொலை பற்றிய செய்தியை பல ஊடகங்கள் 22.04.2011 வெளியிட்டு இருந்தது. குறைந்தபட்சம் கொலையாக கூட இதை பார்த்து அணுகவில்லை. தாயின் குற்றமாக, மகனின் தியாகமாக காட்டுகின்றது. குறுந் தமிழ் தேசிய பாரம்பரியம் இப்படித்தான் சமூகத்தை அணுகி, வழிகாட்டுகின்றது. சமூகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முனைந்த மகனும், அதை சீரழித்த தாயுமாக காட்சிகளை அரங்கேற்றினர்.

 

இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. புலிகளால் நலமடிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் சொந்த வாழ்வியல் அனுபவம் மூலம் இதை நன்கு அறிவார்கள். ஐ.நா மற்றும் மேற்கு அறிக்கைகள் தான், இதற்கு சான்று தர வேண்டும் என்று கனவு காண்பவர்கள் யார் என்றால், புலிதனத்தை அரசியலாகக் கொண்ட வலதுசாரிகள் தான். அரசு செய்தது போன்று பல போர்க்குற்றங்கள் செய்த கும்பல்தான், அதை ஆதரித்து நின்ற புலத்து புலிக் கும்பல் தான், தங்களை மூடிமறைத்து ஐ.நா அறிக்கை ஊடாக அரசியல் நடத்துகின்றனர்.

இறுதி யுத்தத்தில் மக்களை யுத்தப் பிரதேசத்தில் பணயம் வைத்தவர்கள் புலிகள். மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்காது மட்டுமின்றி, இதைக் காட்டி தம்மை பாதுகாக்க முனைந்தனர். உண்மையில் மக்களை கொல்வதை ஊக்குவித்ததன் மூலம், தாங்கள் தப்பிப் பிழைக்க முனைந்தனர். தம்மைத் தற்காத்துக்கொள்ள பிணத்தைக் காட்டி, புலிகள் அழுது புலம்பினர்.

 

இதைக் கோராத வரை, அதற்காக போராடாத வரை, ஜே.வி.பி.யும் மீண்டும் அது ஒரு இனவாதக் கட்சிதான் என்பதை நிரூபிக்கின்றது. தமிழ் மக்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யபட்ட நிலையில், அதை எதிர்த்துப் போராடாத எவரும் இனவாதம் கடந்து சிந்திக்கவில்லை என்பது தான் அதன் அரசியல் அர்த்தம். நாங்கள் தமிழருக்கு எதிரான இனகலவரத்தில் பங்கு கொள்ளவில்லை என்று கூறுவதால் மட்டும், ஜே.வி.பி. இனவாதமற்ற கட்சியாகிவிடுவதில்லை. மாறாக இனவாதத்தை எதிர்த்து போராடுவதன் மூலம்தான், இனவாதமற்ற கட்சியாக அது இருக்க முடியும். அதை என்றும், அதன் வரலாற்றில் ஜே.வி.பி. செய்தது கிடையாது.

அரசு-புலி யுத்தத்தின் பின்னணியில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதும், போர்க்குற்றம் இழைக்கப்பட்டதும் உலகமறிந்தது. இதைக் குறுகிய இனவாதம் மூலம் பாதுகாக்கமுடியாது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து அரசுடன் சென்ற வீரவன்சா மாதிரித்தான், தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியல் செய்கின்றது. போர்க்குற்ற அடிப்படையில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தாத அரசியல் நிலை இனவாதம் சார்ந்தது. மறுதளத்தில் இந்தப் போக்குதான் சர்வதேச தலையீடுகளுக்கு வழி சமைக்கின்றது. இதைத்தான் தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியலும் வழிகாட்டுகின்றது.

 

சொந்த மக்களைக் கொன்றதை சரி என்று கூறி, மக்களை அதற்காக போராடக் கோருகின்றது இலங்கை அரசு. நாங்கள் கொன்றது தமிழ் மக்களைத்தான், ஆகவே சிங்கள மக்கள் இனரீதியாக எமக்கு ஆதரவு தர வேண்டும் என்கின்றது இந்த பேரினவாத அரசு. மேற்கு மற்றும் ஐ.நா முதலானவை, தங்கள் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தலையிட்டு ஆதிக்கம் செய்யும் பொதுப் போக்கை, அரசு எதிர்நிலையில் முன்னிறுத்தி தன்னை தற்காக்க முனைகின்றது.

இங்கு இலங்கை அரசின் போர்க்குற்றத்தை முன்வைத்து அதற்கான சுதந்திரமான விசாரணையை கோரியபடி மேற்கு தலையீட்டை எதிர்த்தும் எந்த (சிங்கள) எதிர்க்கட்சியும் போராடவில்லை. அதே போல் மேற்கு தலையீட்டை எதிர்த்தபடி சுதந்திரமான விசாரணையைக் கோரி எந்த தமிழ் தேசியமும் போராடவில்லை.

 

மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் மூலம் தன் குழந்தைகள், தன் சகோதரர்கள், தன் உற்றார் உறவினர்களை நாட்டின் முன் அடையாளப்படுத்தி, அவர்களை ஆட்சியாளராக்கியுள்ளார். மறுபக்கம் இவர்களால் அடையாளம் இழந்து காணாமல் போனவர்களைத் தேடி அலைகின்றது மக்கள் கூட்டம்.

மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தின் விளைவு இப்படித் தான் பிரதிபலிக்கின்றது. ஒருபுறம் தம்மை முன்னிலைப்படுத்திய குடும்பப் பின்னணி, மறுபக்கம் குடும்ப உறவுகளைத் தேடியலையும் பின்னணி. இப்படித்தான் இலங்கையின் எதார்த்தம் இருக்கின்றது. நேரெதிரான காட்சிகள். நாட்டை ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு துல்லியமானது, இணக்கம் காண முடியாதவை.

 

எமக்கு தெரியாது என்று கூறி, இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளமுடியாது. மன்னிக்க முடியாத குற்றங்களின் பின்னனியில் இது தொடருகின்றது. கொடூரங்களிலும் கொடூரம். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் உயிருடன் மீள வருவோமா என்ற கேள்வியுடன் தான், மீன்பிடிக்க செல்லுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் கடலை வெறித்து பார்த்து காத்து நிற்கின்றனர். இதுவே கடலில் உழைத்து வாழும் மீனவர்களின் அன்றாட வாழ்வாகிவிட்டது.

உழைத்து வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படியாவது கடலில் மீன்பிடிக்க வேண்டிய மனித அவலம்;. மக்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, இயற்கை வளத்தை மேலும் அழித்து வாழ்வை நாசமாக்க வழிகாட்டுகின்றது. சுரண்டல், சூறையாடல் மட்டும் தான் அரசின் பொதுக் கொள்கை. இதற்குள்தான் மீனவர்கள் தொடர்ந்தும் பலிகொடுக்கப்படுகின்றனர்.

 

திடீர் இடதுசாரிகள் இப்படித்தான் திடீர் திடீரென புரட்சி செய்கின்றனர். அமெரிக்காவுடன் இந்தியாவுடன் நின்று அரசியல் செய்வதென்பதை நூறு கருத்துக்களாக காட்டி, இதன் மூலம் நூறு பூக்கள் மலர முடியும் என்கின்றனர். இப்படி 1983 களில் தொடங்கி 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிந்து போன தமிழ் தேசியத்தின் பின், இந்தியா முதல் அமெரிக்கா வரை வழிகாட்டி அழித்ததை நாம் மறக்கத்தான் முடியுமா? மீண்டும் அதையே இனியொருவும், புதியதிசையும் இடதுசாரியத்தின் பெயரில் புரட்டுத்தமாக முன்தள்ளுகின்றனர்.

தொடரும் புலத்து புலித் தேசியம், தமிழ் தேசியமாக புலத்தில் இவ்வாறு தொடர்ந்து முன்னேறுகின்றது. அன்று புலிகள் தாமல்லாத மாற்று இயக்கங்களை கொன்று குவித்து அதை தமிழ் மக்களின் தேசியமாக்கியது போல், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தமக்குள் மோதுகின்றன. ஆக மோதலை நியாயப்படுத்தி இதை சுற்றிக் கட்டமைக்கின்ற சுத்துமாத்து அரசியல் புலத்து தமிழ்தேசியமாக மாறுகின்றது.

இப்படி புலித்து புலிக் கோஸ்டிகள் வெளிப்படையான வன்முறையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் புலத்து தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தையும், புலிச் சொத்தை தனதாக்கி அதன் மேல் தமது நாட்டாமையையும் கோருகின்றனர். வன்னியில் புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்த போது, அதைத்தான் ஜனநாயக வழிக்கு வருதல் என்றனர். இப்படி தம்மை மட்டும் காப்பற்றிக்கொள்ள மே 15 2009 இரவு போட்ட ஜனநாயக வேசம் தான், ஆயுதத்தை கீழே வைத்தலாகும். இப்படி ஆயுதத்தை சார்ந்து கட்டமைத்து அதிகாரத்தை இழந்து வக்கற்றுப் போன புலத்துப் புலிகள், புலிச் சொத்தைக் கைப்பற்றும் முரண்பாடுதான் இரு பெரும் கோஸ்டியாக மாறியது.

 

இப்படியும் அப்படியும் கூறுகின்ற புரட்டுகள், நடந்த உண்மைகளைப் புதைப்பதில்லை. ரமேஸ் உள்ளிட்ட புலித்தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த உண்மையையும், இலங்கை அரசு அவர்களைக் கொன்றதையும் இந்த வீடியோ அம்பலம் செய்கின்றது.

பேரினவாத அரசு மீண்டும் மீண்டும் பொய்யை உரைக்கின்றது. விடுதலை புலிகளின் தலைவர்கள் எம்மிடம் சரணடையவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. நாங்கள் யாரையும் கொல்லவில்லை. இதையே தான் இந்தக் கொலைகார அரசு தொடர்ந்தும் சொல்லுகின்றது. காட்சிகள், படங்கள், ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானது, அவை அனைத்தும் திட்டமிட்ட புனைவுகள் என்கின்றது அரசு

 

இலவசமாக கோமணத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்குவதுதான் இலவசத்தின் மகிமை. ஈழத் தமிழனுக்கு இதைத் தருவோம், அதைப் பெற்று தருவோம் என்பது, ஈழத்தமிழனாக அவர்கள் தொடர்ந்து வாழும் உரிமையை இல்லாமலாக்குவது தான்.

1983 முதல் இவர்கள் செய்தது இதையே தான். இவர்கள் முதலில் செய்தது, ஈழ மக்களின் விடிவை குழிதோண்டிப் புதைத்ததுதான். எம்.ஜிஆர் கொடுத்த கோடிக்கணக்கான பணம் முதல் சீமானின் இன்றைய சினிமா வேசம் வரை, தமிழ்மக்களின் குரல்வளையைதான் அறுத்தது. அந்த மக்களின் சொந்த விடுதலை குழிதோண்டிப் புதைத்த அரசியல்தான், அன்று முதல் இன்று வரை இவர்கள் இட்ட நஞ்சு வித்தாகும்.

புலியிடம் இருந்து ஜனநாயகம் கேட்ட புலியெதிர்ப்பு மாமாக்கள் பேரினவாதத்தின் பின் வழிகாட்டினர். ஆயுதத்தை வழிபட்ட புலி மாமாக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொண்டு, தங்கள் சொத்தைப் பாதுகாக்க வழிகாட்டினர்.

ஆயுதம் ஏந்தாவிட்டால் அது ஜனநாயகம் என்று பொழிப்புரை எழுதிவைத்துக் கொண்டு, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தான் புலத்துப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தியும், நாடு கடந்த தமிழீழத்தை முன்னிறுத்தியும், புலத்து மக்களை கொண்டு தமக்கு தாமே வாக்கு போட வைத்ததை ஜனநாயகம் என்று கூறி தேர்தல் நாடகத்தை நடத்தினர். இப்படி புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், அடுத்தடுத்து ஜனநாயகத்தின் பெயரில் ஆளுக்கொரு போலித் தேர்தலை நடத்தி முடித்தனர்.

அணுவுலகம் என்பது ஏகாதிபத்தியதனமாகும். அணுக்குண்டு மட்டும் உலகை ஆளவில்லை, அணு கூட ஏகாதிபத்திய மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஏகாதிபத்திய தொழில் நுட்பமாகிவிட்டது. இதனால் உலகம் கதிர்வீச்சின் எல்லைக்குள் மிக வேகமான சுருங்கி வருகின்றது. மனிதனை வெடிகுண்டு மேல் மட்டும் ஏகாதிபத்தியம் நிறுத்திவிடவில்லை, இலாப வெறிக்காக அணுவுலைக்கு முன்னால் மக்களைக் கைகட்டி நிற்கவும் கோருகின்றான்.

உலகை ஆள அணுக் குண்டை செய்தாலும், இலாபத்திற்காக ஆக்கத்தின் பெயரில் அணு மின்சாரத்தை தயாரித்தாலும், இவை அனைத்தும் உலகை அடிமை கொள்ளும் ஏகாதிபத்தியத்தனமாகும். அணு வெளியிடும் கதிரியியக்கம், உடைப்பெடுக்கும் போது அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கிடையாது. கதிரியக்கத்தின் அளவைப் பொறுத்து, அது சில கணங்களில் மரணத்தையும் சில தலைமுறைக்கு பக்கவிளைவையும் தரக் கூடியது.

மக்கள் தமக்காக தாம் போராடாத வரை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மறுபடியும் புதிய அடக்குமுறையாளர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் எழுச்சியும் கிளர்ச்சியும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதே ஒழிய அந்த மக்களை விடுவிக்கவில்லை. மீண்டும் அதே அரசு இயந்திரம் தான், அதற்கு தலைமைதாங்கிய சில பொம்மைகள் தான் மாறியது.

இதுபோல் லிபியாவில் அமையவில்லை. மாறாக வன்முறை, சிவில் யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஊடாக, ஒரு இரத்தக் களரியை அது எதிர்கொண்டுள்ளது. பல ஆயிரம் லிபியா மக்களின் உயிரை பலிகொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாக மாறியுள்ளது.

லிபியாவில் கடாபி குடும்பம் நடத்தும் சர்வாதிகாரம், நாட்டை கொள்ளையிட்டும், மக்களை ஒடுக்கியும் தான் ஆண்டது. கொள்ளையிட்ட பணத்தை மேற்கத்தைய நாடுகளில் முதலிட்டும், லிபியா எண்ணை வயல்களை மேற்கத்தைய பன்னாட்டு எண்ணைக் கம்பனிகளிடம் தாரை வார்த்தபடி தான், தொடர்ந்து தானும் லிபியா கொள்ளையிட்டது. மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் மேற்கு சேவை செய்த அதேநேரம், தன்னை தக்கவைக்க அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தன்னை கட்டிக் கொள்ள முனைந்தது.

அரசும், கட்சிகளும் இனரீதியாக மக்களை பிரித்துவைத்துக் கொண்டு, நடத்தும் இனரீதியான அரசியல்தான் இலங்கையில் ஜனநாயகமாகின்றது. இனரீதியாக மக்களின் வாக்களிப்பு, இதை எதிர்மறையில் தீர்க்கக் கோருகின்றது. இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கூறும் செய்திகள் என்ன?

1. இலங்கையில் இனரீதியான பிளவுகளும், முரண்பாடுகளும் நான்கு முனையில் காணப்படுகின்றது.

2. அனைத்து மக்களையும் பிரநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் இலங்கையில் கிடையாது. அதாவது இனவாதம் கடந்த எந்தக் கட்சியும், இலங்கையில் கிடையாது. மக்கள் சமூக பொருளாதார நலனை முன்னிறுத்திய எந்த கட்சிகளும் இலங்கையில் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

யப்பான் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியும், இறுதியில் அணுவுலையில் வெடிப்புகளும் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுக்கும் மொத்தமாக இயற்கை மீது யாரும் குற்றஞ்சாட்டி விட முடியாது. அந்த உரிமை உனக்குக் கிடையாது. ஏனென்றால் நீ இயற்கையுடன் இ;ணங்கி, அதன் போக்கில் வாழ மறுப்பவன். செயற்கை அழிவுகள், இயற்கை அழிவை மீஞ்சியது. இயற்கை இயற்கையாகத்தான் இயங்குகின்றது. இதற்கு இணங்கி அதன் போக்கில்தான் மனிதன் வாழ முடியும். இதை மறுத்துத்தான், உன் உணர்வை ஆட்டிப்படைக்கும் மூலதனம் இயங்குகின்றது. இதற்கு ஏற்பவே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இயற்கையின் போக்கை மீறிய இயற்கை அழிப்பை, மனிதன் இயற்கை மேல் செய்கின்றான். ஒவ்வொரு இயற்கை அழிவிலும், மனிதன் ஒரு சமூக உயிரி என்ற அடிப்படையை, மூலதனம் மறுத்துத்தான் மனிதர்களின் வாழ்வை நரகமாக்குகின்றனர்.

உட்படுகொலை முதல் பலவிதமான மனிதவிரோத அராஜகத்தை செய்த குற்றவாளிகள் முதல், இதை எதிர்த்துப் போராடியவர்களை குற்றவாளியாக்குகின்ற இன்றைய வலதுசாரிய குப்பைகள் வரை, ஓரே அடிப்படையைக் கொண்டு அவர்கள் தம்மைத்தாம் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அவர்கள் தம்மை நியாயப்படுத்த, இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் தாம் அல்லாத எஞ்சிய உறுப்பினர்கள் பற்றி அக்கறைப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அதைச் சார்ந்து நின்றதாகவும், சார்ந்து நிற்பதாகவும் கூறிக்கொண்டு தான், தங்கள் அரசியல் வண்டவாளங்களை இன்றும் அரங்கேற்றுகின்றனர்.

ஏன் தாங்கள் கூட இயக்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுகொண்டது கிடையாது என்றும், எஞ்சிய உறுப்;பினர்களின் பாதுகாப்புக்காகத்தான் அங்கு தாம் தொடர்ந்து நீடித்ததாக கூறுகின்ற புரட்டுகளையும் கூட முன்வைக்கின்றனர். இப்படி இடதுசாரியத்தை எதிர்க்கின்ற வலதுசாரியக் கும்பல், எஞ்சிய உறுப்பினரைப் பற்றிய கவலையின்றி சென்றதாக இன்று குற்றஞ்சாட்டுகின்ற புரட்டுகளோடு, இங்கு ஒன்றாகக் கூடிக் கும்மியடிக்கின்றனர்.

விடுதலைப் போராட்டம் இதுவென நம்பிச்சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சொந்த அறியாமையில் இருந்து விடுபட்ட போது, அவர்கள் கண்டது தம்மீதான கோரமான கொடூரமான ஒடுக்குமுறையைத்தான். சிலர் இந்த ஒடுக்குமுறையைக் கண்ட போதுதான், தாம் போராடுவது விடுதலைப் போராட்டமல்ல என்பதைக் கண்டனர். இதனால் இதற்கு எதிராக போராட முற்பட்டபோது, சிலர் தம்மை பலிகொடுத்தனர். சிலர் தப்பியோடினர். சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கினர். சிலர் மௌனமாக விலகினர். இதைத்தான் குற்றம் என்கின்றனர் ஜென்னி முதல் பல்லி வரை.

அன்று இதை எதிர்த்துத்தான் அமைப்புக்குள்ளான எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாகின. அவர்கள் கொடுமைகளையும், கொடூரங்களையும் எதிர்கொண்டு, தாங்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பில் இருந்து விலகினர், ஒதுங்கினர், எதிர்த்துப் போராடினர்.

 

தாங்கள் யார் என்பதை மூடிமறைக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் அரசியலை மூடிமறைக்க முடியாது. தாங்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் நிஜவாழ்வு சார்ந்த அரசியல் முகம் அம்பலமாகிவிடும் என்று கருதுகின்றவர்கள் கூட, புனைபெயரில் தான் ஒளித்துக் கொள்கின்றனர். எதிர்ப்புரட்சி அரசியலின் ஒருபக்கம், இப்படி தன்னை ஓளித்து வைத்துக்கொண்டுதான், மக்களை மற்றொரு வடிவில் ஏய்க்க முடிகின்றது.

ஒரு கருத்தை முன்வைக்கும் நோக்கம் மக்கள் நலன் சாராத வரை, அதைச் சார்ந்து வெளிப்படையாக கருத்தை முன்வைக்;காத வரை, அவை அனைத்தும் மக்களைத் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழவைக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும்.

இந்தவகையில் உலகம் தளுவிய அளவில், மக்கள் விரோதிகள் தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவிடாது தடுக்க, அங்குமிங்குமாக அலையவைக்கும் வண்ணம் கருத்துக்களை உற்பத்திசெய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இந்த வகையில் அரபுலக சர்வாதிகாரிகள், இலங்கை அரசு எல்லாம் வெளிப்படையாகவே கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனர். இந்த வகையில் கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் இன்றைய உலகில் உள்ளது. கட்டுரைகள், ஆய்வுகள், அவதூறுகள் முதல் மக்கள் விரோதிகளின் நல்ல பக்கங்கள் என்று எடுத்துக்காட்ட முனையும் பிரச்சாரங்களைக் கூட, கூலிக்கு மாரடிக்கும் ஒரு உலகத்தில் நாங்கள் வாழ்கின்றோம். இப்படி தொழில் ரீதியான பிரச்சாரங்கள் கூட, இன்று நல்ல வியாபாரமாகிவிட்டது. இங்கு பிரச்சாரம் தான் விளம்பரமாகின்றது. மக்கள் இதன்பால் மந்தையாக்கப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழவைக்கப்படுகின்றனர்.

 

அன்று எந்த அரசியல் நோக்கில் சதிகார புளட் ஒரு பெண்ணை பாலியல் ரீதியான வக்கிரத்துடன், தனது சொந்த அசிங்கங்களுடன் அரங்கேற்றி நடத்திய கூத்தைத்தான், இன்று மீளவும் ஜென்னி அரங்கேற்றுகின்றார். சில பாத்திரங்களை மாற்றி, பல்லியின் பல்லவியுடன் அது அரங்கேறுகின்றது. இவர்கள் அரங்கேற்றும் கூத்தில் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அந்தப் பெண் இன்று ஒரு சாதாரண வாழ்வு வாழ்கின்ற ஒரு அப்பாவி அபலை. சமூகத்தின் பொது உளவியல் அரக்கத்தனத்துக்குள் வாழ்கின்ற ஒரு பெண்ணை, மறுபடியும் ஜென்னி தன் குறுகிய சுயநலனுக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்கியுள்ளார். இதற்கு ஏற்ப தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் தேசம்நெற் பல்லி, அதை நான் இப்ப சொல்லமாட்டேன் என்கின்றார். இப்படி பல்லியோ பொய் புரட்டுகள் மூலம் பல்லவி பாடி, ஒளித்திருந்து அரங்கேற்ற முனைவது வலதுசாரிய சதிதான். இதற்கு பலியாவது, மறுபடியும் அதே பெண்தான். வரலாற்றில் இரண்டாம் முறை, இவர்களால் அப்பெண் குதறப்படுகின்றாள்.

 

புலியைப் போல் தான் புளட்டும். புளட் உள்ளியக்கப் படுகொலையில் புகழ்பெற்றது. அதை அன்று முன்னின்று செய்த கூட்டம், இன்றும் அதை நியாயப்படுத்த களமிறங்குகின்றனர். 25 வருடங்களுக்கு முன் இதை எதிர்த்துப் போராடி வெளியேறியவர்களை மீண்டும் குற்றவாளியாக்கியபடி, 25 வருடங்களின் பின் அதே வக்கிரத்துடன் தம்மை மூடிமறைத்தும் நியாயப்படுத்தியும் வக்கிரமாகவே வாந்தியெடுக்கின்றனர்.

அன்றைய சதிகாரர்கள், கொலைகாரர்கள் பிரதிநிதியான ஜென்னி தேசம்நெற்றில், தாளம் போடுகின்றார். அன்றைய தங்கள் சதிகள் தான் உண்மையானவை நியாயமானவை என்று, மீளவும் கூறுகின்ற வரலாற்றுப் புரட்டை மூடிமறைத்தபடி முன்வைக்கின்றனர்.

தனிநபர்கள் தங்களை நியாயப்படுத்தியும், சிலரைப் பாதுகாத்தும் சொல்லுகின்ற கதைகளுக்கு அப்பால், புளட் என்னவாக இருந்தது? இது ஒரு மக்கள் இயக்கமா? இடதுசாரிய இயக்கமா? இல்லை. வலதுசாரிய பாசிச இயக்கம்;. புலிக்கு நிகரானது.  இதைத்தான் தனிநபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இங்குதான் எதிரும் புதிருமான போராட்டங்கள் நடந்தன. இது தான் வரலாறு.

உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் பங்கை மூடிமறைத்தபடி, செத்தவர்களின் பெயரில் மட்டும் குற்றங்களைச் சுமத்தியபடி சொல்லும் வரலாற்றுக்கு பெயர் சுயவிமர்சனமாம். கொலைகாரர்கள் சுயவிமர்சனம் என்றால், தங்களை மூடிமறைத்தல் தான் என்கின்றனர். யாரெல்லாம் அன்று புளட் உட்படுகொலைகளை முன்னின்று செய்தனரோ, யாரெல்லாம் இதற்கு துணை நின்றனரோ, அவர்கள் மறுபடியும் அதை திரித்து புரட்டியதை சுயவிமர்சனம் கொண்ட வரலாறு என்கின்றனர். அன்று இவர்கள் கொன்றவர்களை மறுபடியும் கொன்று, இதற்கு எதிராக போராடியவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் புரட்டுத்தனம் தான், இந்த வரலாறு. இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலின் மகுடிகள்தான் இவர்கள்.

அன்று தீப்பொறி, கொலைகாரர்களிடம் இருந்து தப்பி தலைமறைவான பின், அவர்களை கொல்ல அலைந்த கூட்டம் தான், தங்களால் கொல்லப்பட்ட அகிலன்-செல்வன் கொலை பற்றி திரித்து கதை சொல்லுகின்றது.

மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சார்ந்த ஒரு உண்மை, அண்மையில் தான் அம்பலமாகியது. ஆம், அன்று கிட்டுவுக்கு குண்டெறிந்தது யார் என்ற உண்மையினூடு தான். மார்க்சியம் பேசியபடி, தனிநபர் பயங்கரவாதத்தில் தீப்பொறி முடங்கிக் கிடந்த உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.

இதை இவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று கூறி, இன்று வகைதொகையற்ற தாக்குதலை தீப்பொறியின் வாரிசுகள் என்று இன்று கூறுகின்றவர்கள் தொடங்கியுள்ளார்கள். தீப்பொறியின் மற்றைய முக்கிய உறுப்பினர்களை வெளியேற்றிய போது, முன்வைத்த விமர்சன ஆவணங்களைக் கூட, வரலாற்றின் முன் திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். விமர்சனம், சுயவிமர்சனமற்ற வகையில் தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி தான், புதிய அரசியல் மோசடிகளில் மறுபடியும் ஈடுபடுகின்றது. அது தன்னை மறுபடியும் மே 18 நீட்சியாக கூறிக்கொண்டு, திடீரென அரசியலில் ஈடுபடுகின்றது. கேசவன் உட்பட சிலர் புலியால் கொல்லப்பட, முன்னணி தீப்பொறி உறுப்பினர்கள் தீப்பொறியின் தவறான அரசியலை விமர்சித்து விலகிய நிலையில், மார்க்சியத்தின் பெயரில் புலிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது எஞ்சிய தீப்பொறி. இறுதியில் புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக செயல்பட்டு, புலியுடன் சங்கமமாகிய வரலாற்றில் காணாமல் போனது. இன்றும் தாம் தான் தொடர்ந்து தீப்பொறியின் இன்றைய வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, மே18 நீட்சியாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றது.

 

இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழும் தமிழரும் சிங்களவரும் அப்படிக் கருதவில்லை. இங்கு அவர்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாக உள்ளது. அதேநேரம் இதே முரண்பாடு, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதே நிபந்தனையின் கீழ் உள்ளது. ஒரு நாட்டின் உள்ளான நிலைமை இது. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்குள் பிரதேச சாதிய வர்க்க முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது.

இந்த நிலையில் இதை எல்லாம் மறுத்து, இன முரண்பாட்டை மட்டும் முன்னிலைப்படுத்துவது யார்? வடக்கு கிழக்கில் உள்ள சுரண்டும் வர்க்கம்தான். அவர்கள் தான் பிரிவினையை முன்வைக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் சந்திக்கின்ற மேலதிகமான இனவொடுக்குமுறை, அந்த மக்கள் சந்திக்கின்ற வர்க்க ஒடுக்குமுறையை இல்லாததாக்கிவிடுவதில்லை. சாதிய பிரதேச முரண்பாடுகளை களைந்துவிடுவதில்லை.

பிரிவினையை முன்தள்ளும் சுரண்டும் வர்க்கம், இலங்கை தளுவிய வர்க்க முரண்பாட்டை மூடிமறைத்து, பிரிவினை மூலம் அதைப் பாதுகாத்து தன் சுரண்டும் உரிமையாக அதை மாற்றுகின்றது. இந்தப் பிரிவினைவாதத்தின் அரசியல் உள்ளடக்கம் இந்த அடிப்படையில் தான் கருக்கொள்கின்றது. ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் தன் இன மக்களையும் சுரண்டுகின்றது என்பதையும் மறுத்து அல்லது மூடிமறைத்து, அனைத்தையும் வெறும் இன ஒடுக்குமுறையாகக் காட்டுகின்றது. இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் தான் சுரண்டும் உரிமையை, முன்னிறுத்தி பாதுகாக்கின்றது.

 

இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் (பூர்சுவா வர்க்கத்தின்) பிரிவினையையோ, ஐக்கியத்தையோ குறிப்பதில்லை. அதனால்தான் அதை சுயநிர்ணய கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கின்றது. இதன் வர்க்க சாரம், சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கின்றது.

சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கும் சுயநிர்ணயம், பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் பிரிவினையையல்ல. இது சர்வதேசியத்தின் உள்ளார்ந்த அரசியல் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. இப்படியிருக்க ஒடுக்கப்பட்ட இரண்டு இன வர்க்கங்களுக்குள் பிளவை விதைப்பது, அதை நியாயப்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசியலல்ல. அது மார்க்சியமுமல்ல. பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை மறுப்பது என்பது, மார்க்சியத்தின் பெயரிலும், இடதுசாரியத்தின் பெயரிலும்; சுரண்டும் வர்க்கம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் பிளவுவாதமாகும். இந்த பிளவுவாதம் தான் "தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது" என்று கூறுகின்றது. இனங்கள் மத்தியில் பிளவுவாதத்தை முன்தள்ளிய சுரண்டும் வர்க்கத்தின் ஒடுக்கும் அதே அரசியலை, மீள முன்னெடுத்து பிளவுவாதத்தை அகலமாக்குவதாகும்;. இதற்கு எதிரான போராட்டத்தை மறுத்தலாகும்.

இன்று இலங்கையில் வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் பல. அதை யாரும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசோ இதைப் பயன்படுத்தி இதில் குளிர் காய்கின்றது. வடக்கு மீனவர்களின் இன்றைய நிலை என்ன?

1.தங்கள் சொந்தக் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடிவதில்லை.

1.1.அந்த வகையில் இலங்கை அரசு இராணுவ மற்றும் கடற்படையின் கெடுபிடி

1.2.இந்தியா றோலர்களின் அழிவுகரமான மீன்பிடி முறைமையும், நூற்றுக்கணக்கில் இலங்கையின் வடக்குக் கரையில் படையெடுத்து ஆக்கிரமித்து நிற்கும் முறைமையும்

2.வடக்கு மீனவர்கள் யுத்தத்தின் பின்னான சிறியளவிலான முதலீட்டைக் கொண்ட மீன்பிடி உபகரணங்களை கூட, இந்திய றோலரால் இழந்து விடுகின்ற பரிதாபம். இதன் மூலம் இலங்கைக் கடலை முழுமையாக, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமதாக்கி வருகின்றனர்.

இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறைக்கும், தேசியவாதிகளின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுப்பது தான், குறுகிய தேசியவாதமாகும். பாட்டாளிவர்க்கமோ இதில் இருந்து தன்னை தெளிவாக வேறுபடுத்தி நிற்கின்றது. லெனின் இதை மிகத் தெளிவாக 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." என்கின்றார். இதுவல்லாத அனைத்தும் மாக்சியமல்ல. இவை அல்லாத அனைத்தும், சுரண்டும் வர்க்கத்தின் கோட்பாடாகும்.

சோபாசக்தி ஒரு பெண்ணின் (தமிழச்சி) வாயை அடைக்க கையில் எடுத்த ஆயுதம், "நான் உன்னுடன் படுத்தேன்" என்ற கதை தான். கதையெழுதுபவராச்சே சோபாசக்தி. எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் கையாளும் அதே ஆயுதம் தான். தமிழச்சி நடந்தது என்ன என்று "சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!"என்ற கட்டுரை மூலம் பதில் அளித்துள்ளார்.

இது நடந்த காலகட்டத்தில் தமிழச்சி அவருடன் தன் உறவை முறித்தது மட்டுமின்றி, அன்று நடந்த நிகழ்வையும் தான் தாக்கியதையும் கூட எனக்குக் கூறியிருந்தார். தமிழச்சியின் இன்றைய எதிர்வினையின் உள்ளடக்கம், அன்று எனக்கு தெரிவிக்கப்பட்ட ஒரு உண்மை. இந்த நிகழ்வின் பின் தமிழச்சியின் உதிரியான எதிர்வினைகளையும், அவரின் கோபமான ஒழுங்கற்ற எதிர்த்தாக்குதலையும் தான் சோபாசக்தி தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் பொறுக்கித்தனத்தை சோபாசக்தியால் பாதுகாக்க முடிந்தது. இன்று ”நீ என்னுடன் இணங்கிப்படுத்தாய்” என்ற ஆணாதிக்க அயோக்கியத்தனத்தை கொண்ட கதையுடன், களத்தில் இறங்கியுள்ளார்.

இதற்கு தமிழச்சியின் பதில் போதுமானது. இதுபற்றி வேறு தோழர்களின் பதில்கள் பின்னிணைப்பில் பார்க்கவும்.

எல்லையைத் தாண்டிச் செல்வது எல்லை தெரியாததாலும், நீரோட்டத்தினாலும் தான் என்ற தர்க்கத்தை முன்தள்ளியவர்கள், விரித்த வலையை இழுத்துச்செல்லுதல் இந்தியாவில் நடப்பதுதான் என்று மற்றொரு தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர்.

உண்மையில் இதன் பின்னுள்ள பல வர்க்க சமூகக் கூறுகளை, இந்தத் தவறான தர்க்கங்கள் மூலம் தவிர்த்துச் செல்ல விரும்புகின்றனர். இதுவே தவறான அரசியலாக மாறுகின்றது.

1. வலையை விரித்து வைத்து மீன்பிடிக்கும் மீனவனுக்கும், வலையை இழுத்துச் செல்லும் மீனவனுக்கும் உள்ள அடிப்படையான வர்க்க முரண்பாட்டை, முதலில் இனம் காணத் தவறுகின்றனர். இது இரண்டு வர்க்கங்கள் கையாளும், வேறுபட்ட மீன்பிடி முறைமையுமாகும்.

2. இலங்கை மீன்பிடியில் மீன்வலையை இழுத்துச் செல்லும் ரோலர் வகைகள் உள்ளிட்ட மீன்பிடி முறைமை தடை செய்யப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வலையை விரித்து வைக்கும் மீன்பிடி முறைமையையே கையாளுகின்றனர். ஆயிரக்கணக்கில் உட்புகும் இந்திய ரோலர்கள், விரித்த வலைகளை இழுத்து செல்லும் மீன்பிடி மூலம், இலங்கை மீனவர்களின் வலைகளை அழித்துச் செல்லுகின்றனர். திரும்பி வரும்போது வள்ளத்தில் பிடித்த மீனின் பாரத்துக்கு ஏற்ப வள்ளம் கடல்நீரில் தாழப்பதிகின்ற போது, விரித்து வைத்த வலைகளை வள்ளமும் வெட்டியபடியும் திரும்புகின்றது. இப்படி இலங்கை மீனவர்களின் மீன்பிடி முறைமைக்கு எதிரான மற்றொரு மீன்பிடி முறைமை. இதனால் கூட, ஓரே கடலில் இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க முடியாது. இதுவும் கூட அடிப்படையான முரண்பாடு. இது இரண்டு வர்க்கங்கள் கையாளும் மீன்பிடி முறைமைசார் முரண்பாடு கூட. இலங்கைக் கடலில் விரித்து வைத்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. விரித்துவைத்து இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நாங்களும், இலங்கை மீனவர்களும் எதிர்க்கவில்லை.

 

இவை பற்றி பல்வேறு கட்டுரைகளில் (எமது தோழர்கள் உள்ளடங்க) நாம் மிகத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றோம். இருந்தும் குறிப்பாக

1."இலங்கை இறையாண்மை என்ற போதி மூட்டையின் பின் வைத்து சொல்லுவது ஏன்?"

நாங்கள் சர்வதேசியத்தைக் கடந்து, இதை அணுகவில்லை.

1.1.வாழ்வுக்காக மீன்பிடிக்கும் தமிழக, இலங்கை (தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள) மீனவர்கள் தம் எல்லை கடந்து மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியே வருகின்றோம். எமது முந்தைய கட்டுரைகளில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1.2.இலங்கையின் இறையாண்மை பற்றி நாம் பேசும் இடம் எப்போது என்னால், இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராகத்தான். மூலதனத்துக்காக அத்துமீறி மீன்பிடிக்கும் போக்கையும், அதை ஆதரிக்கும் அரசியல் போக்கை எதிர்த்துதான், நாம் இலங்கை மக்களின் இறையாண்மை பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்தவகையில் ஈழ தமிழினவாதிகளையும், இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துதான், இலங்கை மக்களின் இறையாண்மைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்த இடத்தில் இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் நிலை என்னவாக இருக்கின்றது என்பது இதுவரை புதிர்தான்.

2."ஒரு அடிப்படையான விசயத்தை மறந்துவிட்டு பேசுவதுதான் இவ்வாறு பார்ப்பதற்கு ஏதுவாகிறது. 40 கிலோ மீட்டரே உள்ள சிறு பிராந்தியத்தை நம்பி 2 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர் (இரு நாடுகளிலும் சேர்த்து, தோராயமாக) என்பதும் இரு நாட்டு மீனவர்களுமே பாரம்பரியமாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதும், எல்லைகள், இறையாண்மை போன்றவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகான விசயம் எனப்தையும், மீன்வர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்பதையும் ஏன் தோழர் ராயகரன் உள்ளிட்ட இலங்கை மார்க்ஸியர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்?"

இப்படி நாம் கூறுவதாக கூறுவது தவறானது. வாழ்வுக்காக மீன்பிடிக்கும் இந்திய இலங்கை மீனவர்களுக்கு எல்லை அவசியமில்லை. இது தான் எமது சர்வதேசிய நிலை. வாழ்வுக்காக மீன்பிடிப்பவர்கள் மீன்வளத்தை அழிப்பதில்லை. அதைப் பாதுகாத்து வாழ்பவர்கள்.

அரசியலில் திடீர் ஞானம். இது மீனவர் நலன் சார்ந்ததல்ல. மீனவர்களை ஏமாற்ற முனையும், சந்தர்ப்பவாத திருப்பம். எந்த சுயவிமர்சனமும் அல்லாத அரசியல் மோசடி.

இதை செய்வது வேறுயாருமல்ல, இதையே தொழிலாக செய்யும் இனியொரு புதியதிசையைச் சேர்ந்த நாவலன் தான். திடீரென ஒடுக்கப்பட்ட மீனவர் பக்கம் தான் நிற்பதாக, பச்சைக் கொடி காட்டுகின்றார். அறிவு மற்றவனை ஏமாற்றவும், ஏமாளியாக்கவும் தான் என்று நினைக்கின்ற அரசியல் போக்கிரித்தனம்.

அரசியல்ரீதியாக வக்கற்றவர்கள், மக்களை தலைமை தாங்க வேண்டிய அரசியலையும் பொறுப்பபையும் ஏற்காத கூட்டம், மக்களின் கிளர்ச்சியை ஏகாதிபத்திய - இராணுவ கூட்டுச்சதி என்கின்றனர். இப்படி அரசியல் ரீதியாக மக்களின் கிளர்ச்சியை கொச்சைப்படுத்துவது தான், ஏகாதிபத்திய சதி அரசியலாகும்.

மக்களின் கிளர்ச்சியை தொடர்ந்து அதிகாரம் ஏகாதிபத்திய கைக்கூலிகளிடம் மாற்றப்பட்டுவிட்டது. இது எதனால், எந்த சூழலில், யாரால் ஏற்பட்டது என்ற உண்மையை மூடிமறைக்க, இதைத் திரிக்கின்றனர். ஐயோ, இது அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய சதிப் புரட்சி என்கின்றனர். மக்கள் இந்தச் சதியில் ஈடுபடும் வண்ணம், ஏகாதிபத்தியங்கள் தான் அவர்களை இறக்கியது என்கின்றனர். இப்படி மக்கள் நடத்திய போராட்டத்தை ஏகாதிபத்திய சதி என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை முன்தள்ளுகின்றனர்.

 

தமிழக மீனவர் படுகொலை என்பது, எல்லை தாண்டுவதாலான ஒரு படுகொலையல்ல. இந்தியா கடல் எல்லைக்குள்ளும், படுகொலைகள் நடந்திருக்கின்றது. ஏன் இது இரு நாட்டு மீனவர் சார்ந்த முரண்பாட்டுக்குள்ளான ஒரு படுகொலையுமல்ல. இதனால் மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல.

இது போல் இன்று பேசப்படுவது, வெறும் மீனவர் படுகொலை பற்றியதல்ல. எல்லை கடந்த மீன்பிடி பற்றியும், எப்படி மீன்பிடிப்பது என்பது பற்றியும், யார் மீன்பிடிப்பது என்பது பற்றியதுமான பல தொடர் விடையங்கள்.

இதில் ஈழ தமிழினவாதம் முன்னிறுத்துகின்ற குறுகிய இனவாத அரசியல் முதல் அதன் திரிப்பு உள்ளடங்கிய வழியில், மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பின்பற்றுகின்ற கொள்கைகளும் கூட இங்கு விவாதத்துக்கு உள்ளாகின்றது. இலங்கை - இந்திய மீனவர்கள் நலன்கள் மறுக்கப்பட்டு, குறுகிய ஈழ அரசியல் இங்கு இதற்குள் புகுத்தப்படுகின்றது.

படுகொலைக்கான நோக்கங்கள், புலி இருந்த காலத்தில் இருந்து இன்று மாறுபட்ட காரணங்களை உள்ளடக்கியது. இப்படியான நிலையில், இதற்கு எதிரான போராட்டங்களும், விளக்கங்களும் கூட குறுகிய அரசியல் சார்ந்தது. ஈழ தமிழினவாத விளக்கங்கள், மீனவர் நலன் சார்ந்ததல்ல. அது குறுகியது. அனைத்தையும் அதற்குள் குறுக்கிக் காட்டுகின்றது.

 

 

அரபுலகில் தொடரும் மக்கள் கிளர்ச்சிகள், மக்களின் சொந்த அதிகாரத்தை நிறுவவில்லை. மறுபடியும் மக்களுக்கு எதிரான, ஏகாதிபத்திய தலைமையிலான சர்வாதிகாரத்தையே உருவாக்குகின்றது. இது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தலைமையையோ, இஸ்லாமிய அடிப்படைவாத தலைமையையோ உருவாக்கவில்லை. ஏன் முரணற்ற முதலாளித்துவ தலைமையையும் உருவாக்கவில்லை. மறுபடியும் மக்களை தொடர்ந்து ஒடுக்கும், புதிய ஏகாதிபத்திய தலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. மக்களே தங்களைத் தாங்கள் தலைமை தாங்கும் வண்ணம், தமக்கான ஒரு தலைமையை கொண்டிருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் தான், மக்களின் கிளர்ச்சிகள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றது. அடக்குமுறையும், வாழ்விழந்த மக்களின் எதிhப்புகளும் தான் ஆட்சியாளரை தூக்கியெறியும் கிளர்ச்சியாக மாறியது.

"முதலில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மீனவர்களின் பிரச்சனை என்னவென்பதை நாம் பார்த்து விடுவது நல்லது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போது அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் இந்திய மீனவர்களின் நலன்கள் எங்குமே பாதுகாக்கப்படவில்லை" இப்படி இனியொருவில் இனவாதிகள் வாதிடுகின்றனர். ஈழம் (புலியிசம்) சார்ந்த தமிழினவாதிகள், மீனவர் பிரச்சனையை கச்சத்தீவு தொடர்பான ஒரு பிரச்சனையாக சுருக்கிக் காட்டுகின்றனர். தமிழக மீனவர் படுகொலைகளை மட்டும் குறிப்பாக எதிர்த்தல் என்பதற்கு அப்பால், பல பரிணாமங்களில் தமிழினவாதிகள் தமது இனவாதத்துக்கு ஏற்ப குறுகிய அரசியல் தளத்தில் அனைத்தையும் திரிக்கின்றனர். இலங்கை கடலில் மீன்பிடித்தலை நீர் ஓட்டம், எல்லை தெரியாது செல்லுதல் என்று, எல்லை கடந்த மீன்பிடித்தலாக திரித்துக் காட்டியவர்கள் (வினவு உட்பட) தான், இதை கச்சத்தீவு பற்றியதாகவும் கூட திரிக்கின்றனர். கச்சத்தீவு இன்று இலங்கையின் பிரதேசம் என்பதை, இனவாதிகள் மறுப்பதன் மூலம் அத்துமீறி மீன்பிடிப்பதை இதனூடாக குறிப்பாக நியாயப்படுத்துகின்றனர்.

"சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது."என்ற உண்மை, இனவாதத்தை பேசுவதற்கும், அதனை பாதுகாப்பதற்குமான அரசியல் அரணல்ல. மக்களைச் சார்ந்து இருக்காத எல்லா நிலையிலும், இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கு எதிராகவே அது இருந்துள்ளது. "பிரிக்க முடியாத உறவு" மக்களின் வாழ்வை மேம்படுத்தி, அதை வாழவைக்கவில்லை. போராட்டத்தை வளர்க்கவில்லை. மாறாக அதை அழித்தது. "பிரிக்க முடியாத உறவு" வர்க்கம் கடந்ததல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் போராட்டம் நடந்து இருந்தால், பின்தளத்தை பயன்படுத்தல் என்பது வர்க்கம் சார்ந்து கேள்விக்குள்ளாகியேயிருக்கும். தமிழன் என்ற வர்க்கமற்ற நிலையில்தான் "பிரிக்க முடியாத உறவு" அரசியல் இனவாதத்தில் முகிழ்கின்றது.

எந்த ஒரு விடையத்தையும் தங்கள் குறுகிய அரசியலுக்கு ஏற்ப குறுக்கிக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால், உண்மை விடையம் திரிபடைந்துவிடும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். "கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள். ஈழ நிலவரம் இவ்வாறு இருக்க எஞ்சியிருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான். நீண்டகால அரசியல் நோக்கில் ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாகவும் இருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவுபடுத்தும் நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு." என்கின்றார் இனியொரு கட்டுரையாளர் அகில். இனியொரு சபா நாவலன் என்ன கூறுகின்றார் "தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று." என்கின்றார்.

இவர்கள் தொடர்ந்து சொல்ல வருவது எல்லை கடந்த இந்திய மீனவர்களினால், இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாகும்.

1. இது ஈழப் போராட்டத்துக்கு உதவிகரமானது.

2. எல்லை கடந்த தமிழக மீனவர்கள் என்ற வர்க்கமற்ற தங்கள் இனம் சார்ந்த இனவாதக் கொள்கை, பன்நாட்டு மீன்பிடிக்கு எதிரானது.

3. சிங்கள மீனவர்கள் இலங்கை தமிழர்களின் கடல்களில் மீன்பிடித்தல் என்பது, இலங்கை தமிழருக்கு எதிரானது. தங்கள் மீன்பிடித்தல் என்பது அப்படியல்ல. அப்படி இனவாத அளவுகோல்களை முன்னிறுத்திய தர்க்கங்கள்.

 

தமிழக மீனவர்கள் பிரச்சனையின் தனித்துவத்தை மறுப்பதுதான், தமிழக தமிழினவாத புலியிச அரசியல் உள்ளடக்கமாகும். இலங்கை இனப்பிரச்சனையை மீனவர் பிரச்சனைக்குள் உள்ளடக்கி, இலங்கை இனப்பிரச்சனையை முதன்மைப்படுத்திய தமிழினவாதம் தான் தமிழகத்து தமிழினவாதமாகும். குறிப்பாக தமிழக மீனவர்களின் (வர்க்க) அரசியல் மற்றும் சமூக பொருளாதார நலன் சார்ந்த, எந்த உள்நாட்டு அரசியலையும் கொண்டவாகள் அல்ல இவர்கள். மீனவர் படுகொலை அரசியலை முன்னிறுத்திய இனவாதம்தான், இலங்கை சார்ந்து அவர்கள் மூடிமறைத்து முன்தள்ளும் மக்கள் விரோத அரசியல். இப்படி ஒரு குறுகிய அரசியலையே, தமிழக தமிழினவாதம் முன்தள்ளுகின்றது. இது குறிப்பாக தமிழக தேசிய இன முரண்பாட்டை பேசாத, புலித்தேசிய தமிழினவாத அரசியலாகும். இந்திய மீனவர்களின் வர்க்க வேறுபாட்டையும், அவர்களின் குறிப்பான கோரிக்கையையும் மறுத்து முன்வைக்கும், குறுகிய இனவாத அரசியலாகும்.

 

"தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?" என்று தலைப்பிட்ட வினவு கட்டுரை, உள்ளடக்கத்தை குறுக்கிக் காட்டுகின்றது. இதே உள்ளடக்கத்தில் தமிழ் சிங்கள மீனவர்களின் மோதலா எனில் இல்லை. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ் - சிங்கள மக்கள் மோதலா எனின் இல்லை.

மோதல் மக்களின் வாழ்வுக்கு வெளியில் நடக்கின்றது. அவர்களின் கோரிக்கை அல்லாத தளத்தில் நடக்கின்றது. மக்களின் கோரிக்கையை தமது வர்க்க மற்றும் அரசியல் தேவைக்கு ஏற்ப குறுக்கியும் திரித்தும் முன்னிறுத்துகின்றனர்.

தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசும் சரி, அதைக் கண்டிக்கும் தமிழக தமிழ் தேசியமும் (புலித் தேசியமும்) சரி, சாராம்சத்தில் ஒன்றைத்தான் செய்கின்றனர். மீனவர்களின் நலனில் இருந்து இதை அணுகுவது கிடையாது. தங்கள் குறுகிய அரசியல் நோக்கில் இருந்து இதைத் திணிக்கின்றனர்.

 

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இவை. இலங்கை அரசு ஒரு பாசிச அரசு. அதற்கு பேரினவாதம் என்ற ஒரேயொரு இனவாதம் என்ற முகமூடி கிடையாது. ஆனால் எதிர்ப்பரசியல் ஒரேயொரு இனவாத முகமூடியைப் போட்டுக்காட்ட விரும்புகின்றது. ஆனால் உண்மை அப்படியல்ல.

இலங்கை பாசிச அரசுக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அது தமிழ் மக்களைக் கொல்லும், சிங்கள மக்களை கொல்லும், தமிழக மீனவர்களையும் கொல்லும்.

கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை முன்னிறுத்தி அரசியல் பித்தலாட்டங்கள், இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களின் உரிமைப் பறிப்பாக மாறிச்செலுகின்றது. இந்திய மீன்வளம் அழிந்துபோன நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வக்கற்ற இந்திய அரசு, மீன்வளத்தை அழிக்கும் பெருமூலதனத்தைக் கொண்ட மீன்பிடியை இலங்கையின் கடல் எல்லைக்குள் திணிக்கின்றது. தமிழினவாதிகள் இதையே மறைமுக அரசியலாகக் கொண்டு, இலங்கை மக்களுக்கு (வடக்கு தமிழ்மக்களுக்கு) எதிரான குறுகிய தங்கள் சுயநல அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய குழுக்கள் தமிழினவாதிகளை கடந்து, இதை வழிகாட்ட முடியாது திக்குத் தடுமாறி அங்குமிங்குமாக தடுமாறுகின்றனர்.

 

ஆம், மிகச் சரியான உண்மை. தமக்கு இடையிலான மோதலிலும், பழிவாங்கலிலும் கக்குகின்ற சரியான வார்த்தை. இதுபோல் யார் பாதுகாப்பு செயலாளராக இருந்து இருந்தாலும், யுத்தத்தை வென்று இருப்பார்கள். யுத்தத்தை வெல்லுதல் என்பது, யாருடன் யுத்தம் செய்தனரோ அவர்கள் தான் அதை தீர்மானிக்கின்றனர். யுத்தத்தை இதற்கு வெளியில் எவர் இருந்தாலும் வெல்ல முடியாது. தோற்றவர்கள் தான் தீர்மானிக்கின்றனர் வென்றவர்கள் யார் என்பதை.

 

தோற்றவர்கள் யாரிடம் தோற்றனர்? பேரினவாத படையிடமல்ல, தமிழ் மக்களிடம் தான் அவர்கள் முதலில் தோற்றனர். ஆனால் தமிழ்மக்களை வெல்ல அனுமதிக்கவில்லை. மாறாக பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அவர்கள் மேல் ஏவினர். இதைத்தான் பேரினவாதம் வென்றது.

 

புலிகள் பீரங்கிகள், விமானங்கள் மட்டுமல்ல பலநூறு கோடி பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, சில பத்தாயிரம் படையை குவித்து வைத்துக்கொண்டு தோற்றுப்போனார்கள். யார் தளபதியாக இருந்தாலும் வெல்லுமளவுக்கு, யார் புலிகளின் தலைவராக இருந்தாலும் கூட தோற்றுப் போகுமளவுக்கு புலிகள் தமிழ்மக்களிடம் தோற்றுப் போய் இருந்தனர்.

 

தமிழ் - சிங்கள் கைதிகளின் ஒன்றுபட்ட போராட்டம், தமிழ் - சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடுகின்றது. எதிர்காலத்தில் தமிழ் - சிங்கள மக்கள் இணைந்த போராட்டம் தான், அரசை எதிர்கொண்டு போராடுவதற்கு இப்போராட்டம் அறைகூவுகின்றது.

சிலர் கொல்லப்படவும், பலர் காயமடையவும் காரணமாக இருந்த சிறைக்கைதிகளின் போராட்டம், அடிப்படை வசதிகளைக் கோரியது. உணவு, நீர் மற்றும் இருப்பிட வசதியை கோரிய போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒத்துழையாமை போராட்டமாகவே நடந்தது. 500 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள் முன்னின்று போராட, தமிழ் கைதிகளும் அவர்களுடன் இணைந்து நடத்திய போராட்டம் இது. இனம் கடந்து, இனவாதம் கடந்து நடத்திய போராட்டம். தமிழ் இனவாதமோ கூனிக்குறுகி, இதை இனவாதமாக காட்ட முனைந்தது.

காலாகாலமாக கொலைகளை செய்தவர்கள், அதை மறுத்து வந்தவர்கள், அதற்கு இன்று ஆதாரம் கேட்கின்றனர். இதுவே கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இலங்கையின் பொது அரசியலாகிவிட்டது. இதுவே அவர்கள் தொழிலாகிவிட்ட பின், மறுப்பும் - மறுப்பறிக்கைகளும் அரசியலாகி விடுகின்றது.

தொடரும் இந்த இனப்படுகொலைக்கு பின்னால், இரண்டு பிரதான விடையங்கள் உள்ளடங்கியுள்ளது.

1. எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களைக் கொல்லும் இனப்படுகொலை சார்ந்த முறைமை

2. எல்லை தாண்டி, இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைக் கொண்டு மீன்பிடித்தல்

புலிக்கு "விசுவாச"மாக இருத்தலே போராட்டம் என்று கருதி தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்று அரசியல் அனாதைகளாகியுள்ளனர். மிகப்பெரிய அமைப்பு எப்படி தம் கண் முன்னாலேயே காணாமல் போனது என்று திகைத்து நிற்கின்றனர்.

"ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்தப் பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?" என்று கேட்கின்றனர். ஆனால் பதில் சொல்லத்தான் யாருமில்லை. புலியைக் கடந்த சிந்தனையை, சமூகத்தின் முன் கொண்டு செல்ல எம்மைச் சுற்றி எவரும் கிடையாது. இந்த உண்மை, எம்மைச் சுற்றிய சமூக அறியாமையாகின்றது.

"சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!"

என்ற தலைப்பில், மறுஆய்வு இணையத்தளத்தில் இப்பேட்டி வெளியாகியது. புலிக்காக சண்டை செய்தவர்களும், இந்த புலிப் போராட்டத்தை சுற்றி கற்பனையில் வாழ்ந்தவர்களும், புலி எதிர்ப்பு அரசியல் செய்தவர்களின் முன், புலிகள் இப்படி தோற்ற காரணத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் முடியாது உள்ளது.

 

மக்கள் தான் தங்கள் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள். இதற்காக போராடாதவர்கள், இந்த அரசியலை தங்கள் வாழ்வாகவும் எழுத்தாகவும் கொள்ளாதவர்கள் செயற்பாடுகளும் கருத்துகளும் குறுகிய கண்ணோட்டம் கொண்டது. அது மக்கள் செயல்பாடு சார்ந்து சிந்திப்பதில்லை. தன் குறுகிய வட்டம் சார்ந்தும், தன் நலன் சார்ந்தும் சிந்திக்கின்றது.

இந்த வகையில்தான் 5 வது இலக்கிய சந்திப்பு மீதான புறக்கணிப்பு முன்தள்ளப்படுகின்றது. "எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும்", புலத்து புலி "மதியுரை" பிரமுகர்களும் இணைந்து, இந்த 5வது இலக்கிய மாநாட்டை புறக்கணிக்கும் அறிக்கையை மக்களுக்கு எதிராகத் திணித்துள்ளனர். அதேநேரம் சர்வதேச பிரபலங்களுடன் தங்களை பெயர்களையும் இணைத்து இதை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் அதில் கையெழுத்திட்ட "சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, சேரன், டேவ் ரம்ரன்" பெயர்கள் குறிப்பாக வெளியாகியுள்ளது.

 

இதை பற்றி யார் உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுகின்றனர். இதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்தவர்கள் யார்? இப்படி தமிழ் சமூகத்தை இருட்டில் வைத்து செய்யும்   அரசியல், பொய்மையும் சூழ்ச்சியும் நிறைந்தது. ஆம் இடதுசாரியம் கூட இதை பேசவில்லை. சந்தர்ப்பவாத அரசியல் மூலம் அரசியல் செய்வதே, புரட்சிகர அரசியல் என்று கருதுகின்ற  எடுகோள்கள் உப்புசப்பு இல்லாத விளக்கங்கள் புளுத்துக் கிடக்கின்றது. எது உண்மையோ அந்த உண்மையைச் சொல்வதன் மூலம் தான், புரட்சிகர அரசியலை உருவாக்க முடியும்.  இதற்கு மாறாக மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலமே ஈழத்து அரசியல் நகர்த்தப்படுகின்றது. மண்ணில், புலத்தில், தமிழகத்தில் எங்கும் இதுதான் அரசியல். தங்கள் குறுகிய அரசியல் மூலம், (இலங்கை) பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்துகின்றனர்.

ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட அடுத்த நிமிடமே, கிழித்தெறியும் பேரினவாத பரம்பரையில் வந்தவர் தான மகிந்தாவும். அதன் தொடர்ச்சியில் பேரினவாதம் பாசிசத்தை தன் ஆதாரமாகக்கொண்டு, வேசம் கட்டி ஆட்டம் போடுகின்றார்.

யாழ்ப்பாணத்திற்கு பொங்கப்போன மகிந்த, பாசிட்டுக்கே உரிய நவீன மொழியிலும் தான் பொங்கினார். இவர்கள் கொன்று குவித்த கொடூரர்கள் மட்டுமல்ல, நஞ்சைக் கக்கி அழிக்கும் பாம்புகள் கூடத்தான். இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் ஒன்றைச் சொல்லி, மக்களை ஏய்கின்ற பச்சோந்திக் கூட்டம். பேரினவாத வரலாறு எங்கும், தமிழ்மக்களை ஏய்ப்பதன் மூலம் தங்கள் பேரினவாத ஆட்சியை தமிழ்மக்கள் மேல் திணித்தனர், திணித்துவருகின்றனர்.

தேசியம் முதலாளித்துவ கோரிக்கையல்ல என்று காட்ட, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையே திரித்துக் காட்டுகின்றனர். பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கப் போராட்டத்தில் முரணற்ற தேசியத்தை முன்னிறுத்தி நடத்திய போராட்டங்களைக் காட்டி, தேசியத்தை வர்க்கமற்றதாக காட்டமுனைகின்றனர். தேசியத்தை முதலாளித்துவ கூறு அல்ல என்று காட்டும் அக்கறை, முதலாளித்துவ நலன் சார்ந்தது. அதாவது பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ நலனுக்கு பயன்படுத்த முனைகின்ற அரசியலாகும். அதைப் பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் செய்வது தான், இங்கு அரசியல் சதியாகும்.

மனிதனின் இரக்க உணர்வையும் உதவும் மனித மனப்பாங்கையும் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் கூட்டம் மனித அவலத்தை தனது மூலதனமாக்குகின்றனர். கிழக்கு வெள்ளத்தைக் காட்டி தனிமனிதர்கள், வானொலிகள் முதல் அரச எடுபிடிகள் வரை கொய்யோ முறையோவென்று புலம்பிப் பணம் திரட்டுகின்றனர். வெளிப்படையான கணக்குவழக்கற்ற, அதே நேரத்தில் கடந்த காலத்தில் பணம் திரட்டிய கணக்கு எதையும் வெளிப்படையாக முன்வைக்காதவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களுடன் நிற்காதவர்கள், மக்களின் யுத்த துன்பங்களுக்கு காரணமானவர்களுடன் கூடி நின்றவர்கள், எப்படி பொதுநிதியை திரட்டி அதை மக்களுக்கு நேர்மையாக பயன்படுத்துவார்கள்?

ஒன்றில் நேர்மையற்றவர், மற்றதில் நேர்மையாக இருக்க முடியாது. யாரெல்லாம் மக்களுடன் இல்லையோ, அவர்கள் மக்களுக்கு குழிபறிப்பவர்கள்தான். மக்கள் விரோதமே இன்று ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில், மனித அவலங்கள் வருமானத்துக்குரியதாகின்றது.

 

தேசியம் "முதலாளித்துவ கோரிக்கையல்ல" என்று, காட்ட, மே18க்கு ஸ்ராலின் நிலைப்பாடு தேவைப்படுகின்றது. அதேநேரம் தேசிய இனம் என்றால் என்ன என்று ஸ்ராலின் வரையறுத்த கோட்பாட்டை மறுக்கின்றவர்கள் தான் இவர்கள். இப்படி நாணயத்தின் இரண்டு நேர் எதிர் பக்கமாக நிறுத்தி, அதை தம் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். நாணயத்தின் இரண்டு நேர் எதிர் பக்கமாக நிறுத்த, அதன் உள்ளடக்கத்தை மறுத்து திரித்துக்காட்டுகினர்.

சிங்களமயமாக்கல் பேரினவாதம் மட்டும் செய்வதல்ல, அதற்கு எதிரான தவறான குறுகிய அரசியலும் கூட அதனைச் செய்கின்றது. இதுபோல் கடந்தகாலத்தில் புலிகளை அரசு அழிக்கவில்லை, புலிகளின் அரசியல்தான் புலியை அழித்தது. இந்த உண்மைதான், வரலாற்றுக்கு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்;. யார் இதை கற்றுகொள்ளவில்லையோ, அவர்கள் மறுபடியும் முள்ளிவாய்க்கால்களில் அதை சந்திப்பார்கள். இது தவிர்க்க முடியாதது.

ஆம் இதுவும் "இன்னொரு" புனைவு என்கின்றனர் மே 18 காரர். அனைவராலும் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாட்டாளி வர்க்கம், அரசியல் ரீதியாக எதிர்கொள்கின்ற தொடர் அவலம் இது. இடதுசாரி வேசம் போட்டு, பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தையே குழிபறிக்க முனையும் சந்தர்ப்பவாதிகள் துணையுடன் அனைத்தும் இன்று அரங்கேறுகின்றது.

தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவு என்கின்றது "மே 18" வியூகம் இதழ். இதையே முன்பு இவர்கள் முன்வைத்தனர். இடதுசாரியத்தை புலிக்கு கூட்டிக் கொடுத்த தீப்பொறியும் அதன் ஒரு நீட்சியான தமிழீழக்கட்சியும், அது சார்ந்த வெளியீடுகளும் இதையே அன்று சொல்லித்தான் அனைத்தையும் அரங்கேற்றினர். இன்று அதன் நீட்சியாக வந்தவர்கள் தான் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் மே18, இன்று மீளவும் அதை முன்தள்ளுகின்றது. இதுபோல் அதில் இருந்து வந்த "புதிய திசை"களும், "தேசியம் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று எம்முடனான உத்தியோகபூர்வமான உரையாடல் ஒன்றில் முன்வைத்தனர்.

நாங்கள் எமக்குள்ளான சாதியை ஒழிக்க நாம் போராடவில்லை என்ற உண்மை போல்தான், சிங்கள மக்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடவில்லை என்ற உண்மையும் கூட. தமிழன் பெயரால் உயர் சாதியம் எப்படி தாழ்ந்த சாதிய சமூக அமைப்பை தக்கவைத்து ஒடுக்கி வாழ்கின்றதோ, அப்படித்தான் இனவொடுக்குமுறையும் கூட.

அரசியல் நிகழ்தகவுகளில் உள்ள உண்மைகள் இவை. இப்படி பல உண்மைகளை மறுப்பது தான், எமது பொய்மையான எமது கருத்தாகவும், உணர்வாகவும் உள்ளது. ஒற்றை உண்மைகளை மட்டும் காட்டி கோருவதன் மூலம், வெளிப்படுவது கபடம் நிறைந்த பொய்மைகளும் புரட்டுகளும் தான்.

எதிரி "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று கூறுவது, எதிர்மறையான இரண்டு திரிபை அடிப்படையாக கொண்டது. இதில் ஒன்றை மறுத்து அல்லது ஒன்றை மிகை அழுத்தம் கொடுப்பதன் மூலம் தான் இந்த திரிபு வெளிப்படுகின்றது.

1. அரசை மட்டும் தூக்கி எறியக் கோருவது. இதன் மூலம் அரச இயந்திரத்தை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாகக் காட்டுதல்

2. அரச இயந்திரத்தை மட்டும் தூக்கி எறியக் கூறுவது. அரசை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாக காட்டுதல்

பிள்ளையான், சித்தார்த்தன், கருணா, டக்கிளஸ் முதல் அரசு வரை, ஒரே குரலில் குற்றவாளிகள் எங்களோடு இருக்கவில்லை என்கின்றனர். அவர்களின் அடையாளத்துடன் குற்றவாளிகளாக குற்றவாளிகள் பிடிபட்டவுடன், அவர்கள் தங்களுடன் இருக்கவில்லை என்கின்றனர். இந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பிரபாகரன் சரணடைந்த பின் முல்லைத்தீவில் வைத்து சிறப்பாக குறிப்பாக வதைத்த போது, அவர்கள் அரசுடன் தான் இருந்தனர். இப்படி பல சந்தர்ப்பத்தில் அரசுடன் சேர்ந்து, இவர்கள் செய்யாத குற்றங்களே கிடையாது. மனிதர்களைக் கடத்தி, அதை தொழிலாக செய்தவர்கள் முதல் பெண்ணை கடத்தில் பாலியல் வல்லுறவு செய்து நுகர்வது வரை, இதுவே புலியொழிப்பின் ஒரு அங்கமாகக் கூட மாறியிருந்தது.

 

பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதாக கூறிய சர்ந்தர்ப்பவாதம், ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரம் பற்றிய ஒரு புரட்டைப் புகுத்த முனைந்ததைப் பார்த்தோம். முந்தைய மற்றும் பிந்தையதுக்குமான வரலாற்று ஒப்பீட்டைக் கொண்டு, நிலவும் சமூக அமைப்பின் "பொதுப்புத்தி" மூலம் இதனைத் திணிக்கின்றனர். இப்படி ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரத்தை பற்றிய பொது மாயையை "பொதுப்புத்தி" சார்ந்து உருவாக்க முனைகின்றனர். வெள்ளை ஆட்சியாளர்கள் (அன்னியர்), கறுப்பு ஆட்சியாளர்கள் (சுதேசிகள்) என்ற வேறுபட்ட அடையாளம் சார்ந்த "பொதுப்புத்தி" சார்ந்த அடிப்படை வேறுபாட்டைக் காட்டித்தான், சுதந்திரத்தை பற்றிய புரட்டை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் அன்று இந்த உள்ளடக்கத்தில் தான் காலனித்துவவாதிகள் ஆட்சியைக் கொடுக்க, காலனித்துவ எடுபிடிகள் ஆட்சியைப் பெற்றுக் கொண்டனர். இதைத்தான் சுதந்திரம் என்றனர். இப்படி நம்பும் சமூக கண்ணோட்டம் கொண்ட அமைப்புதான், இன்றைய ஆட்சியமைப்பு. இதுபோல் தான் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் திணிக்க பாராளுமன்ற வடிவம் சார்ந்த ஒத்த தன்மையைக்காட்டி நிற்கின்றனர். இப்படி இந்தச் சமூக அமைப்புக்கே உரிய அதன் பொதுப்புத்தியில்தான் 'மே18' தனது அரசியல் புரட்டை அரசியலாக்க முனைகின்றது. இது போல்தான் "மே18" என்ற பெயரும் கூட. பொதுப்புத்தி சார்ந்த அறியாமையை வைத்து, மோசடி அரசியல் செய்வதாகும்.

 

"ஆதரவு" அறிக்கையின் அரசியல் சாரம், புலியெதிர்ப்புத்தான். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இது வேறு ஒரு மக்கள் அரசியலை முன்வைத்துப் பேசவில்லை. இதன் எதிர்மறையான அரசியல் உள்ளடக்கம், அரசு சார்புதான். மாநாட்டுகாரர்கள் இதில் இருந்தும் கூட, விலகி நிற்கின்றனர். மாநாட்டுகாரர்கள் "எதிர்ப்பு ஆதரவு" உள்ளடக்கத்துக்கு வெளியில், கலைகலைக்காக என நிற்கின்றனர். இப்படி மொத்தத்தில் இதற்கு வெளியில் தான் மக்களின் நலன்கள் உள்ளது.

வடக்கில் நடப்பது அநேகமாக அரசியல் கொலைகள். இதற்குள் கடந்தகாலத்தில் இதைச் செய்தே, ருசி கண்ட கூட்டம் தன் பங்குக்கு மேலும் இதைச் செய்கின்றது. இதன் மீதான சட்ட நீதி விசாரணைகள் முதல் தண்டனைகள் எதுவும் கிடையாது. இன்று யாழ் அரச அதிபரின் தலைமையில் நடப்பது இராணுவத்துடன் கூடிய ஆட்சி. இரண்டும் கூட்டாக இயங்குகின்றது. இன்று இராணுவமற்ற சிவில் சமூகமல்ல வடக்கு கிழக்கு. கடந்தகாலத்தில் இரகசியமாக இயங்கிய கொலைகார கும்பல்கள் (போர்க் குற்றங்களைச் செய்த கூட்டம்) சுதந்திரமாக இயங்குகின்றது. இதுதான் இந்த சமூகத்தைக் கண்காணிக்கின்றது, தொடர்ந்தும் கொல்லுகின்றது.