Language Selection

புதிய ஜனநாயகம் 2010

பிள்ளைகளைப் பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப்பிள்ளகளைச் சுமந்தபடி, சோற்றுக்கும் மருந்துக்கும் காசில்லாமல், 26 ஆண்டுகளாக இந்த இரக்கமற்ற அரசை எதிர்த்து நிற்கும் பெண்கள் - யாருக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தங்களுக்காகவா?

அந்த நள்ளிரவில் கொல்லப்பட்டவர்களுக்கு அது மரண தண்டனை. ஓடி உயிர் தப்பியவர்களுக்கு உயிர் மட்டுமே மிச்சம். உடல் முழுவதும் ஊனம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது சந்ததிகளுக்கும் இது ஆயுள் தண்டனை.

"போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை அல்ல, எதிர்பாராமல் நடந்த விபத்து'' என்றுதான் யூனியன் கார்பைடும் அரசும் நீதிமன்றமும் சாதிக்கின்றன. இல்லை, இது கொள்ளை இலாபத்திற்காக அமெரிக்க முதலாளி வர்க்கம் நடத்தியிருக்கும் படுகொலை.

1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம். மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நள்ளிரவு .....
நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3,828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த்திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக்குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல்வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆதிக்க சாதிவெறியர்களின் மனம் குளிரும்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது, உச்ச (அ) நீதிமன்றம். சுஷ்மா திவாரி என்ற இளம் பெண்ணின் கணவர், மாமனார் உள்ளிட்ட நான்கு பேர் பார்ப்பன சாதி கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அநீதியானது மட்டுமல்ல தீண்டாமைக்கும், ஆதிக்க சாதித் திமிருக்கும் வக்காலத்து வாங்கக் கூடியது. சமத்துவத்திற்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது.

 

மேற்கு வங்கத்தில், லால்கார் வட்டாரத்தின் காடுகளையும் கனிம வளங்களையும் சூறையாடக் கிளம்பியுள்ள தரகுப் பெருமுதலாளித்துவ ஜிந்தால் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றுக்கு அடிக்கல் நாட்ட, கடந்த 2008 நவம்பரில் மத்திய அமைச்சர் பாஸ்வான், மே.வங்க முதல்வர் புத்ததேவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது, லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இத்தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், உடனடியாக மே.வங்க போலீசின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. லால்கார் வட்டாரத்தின் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரைப் பிடித்து மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி, சித்திரவதை செய்யத் தொடங்கியது மே.வங்க போலீசு. போலீசு அடக்குமுறைக்கு எதிராக லால்கார் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி, ‘இடதுசாரி’ அரசின் யோக்கியதையை நாடறியச் செய்தனர். இப்போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் தலையிட்டு, அதைப் போர்க்குணமிக்கப் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குப் போதிய அதிகாரம் தனக்குத் தரப்படவில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாவோயிஸ்டுகளை ஒடுக்காததற்கு மைய அரசுதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதாவும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று காங்கிரசும் லாவணி பாடிக்கொண்டிருக்கின்றன.

இவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். "மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்" என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.

இராசஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ் வாய்ந்ததும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் சுஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் திருத்தல வளாகத்தினுள் உள்ள அஹத்-இ-நூர் தர்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொண்டதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி இது.

தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரரீதியில் முன்னேறுவதை ஆதிக்க சாதிகளால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலாது என்பதை விளக்க, "தீண்டப்படாதவர்கள்" எனும் நூலில், இராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாமர் சாதி மக்கள், தங்கள் வீட்டுத் திருமணத்தை சற்று விமரிசையாகக் கொண்டாடிய காரணத்திற்காக, ஜாட் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார், அம்பேத்கர். இது நடந்து 85 வருடங்களுக்கு மேலாகியும், இன்றும் பொருளாதாரரீதியில் முன்னேறும் தாழ்த்தப்பட்டோர், ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அரியானாவிலுள்ள மிர்ச்பூரில் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் 20 வீடுகள், 400 ஜாட் சாதிவெறியர்களால் கொளுத்தப்பட்டன. போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, தப்பிக்க முடியாதபடி தீயில் மாட்டிக்கொண்ட உடல் ஊனமுற்ற 18 வயதான இளம்பெண் ஒருவரும், அவரைக் காப்பாற்ற சென்ற, நோய்வாய்ப்பட்ட அவரது தந்தையும் எரிந்து சாம்பலாயினர். இதனைத் தொடர்ந்து ஜாட் சாதிவெறியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதைத் தங்களது பிறப்புரிமையாகப் பார்க்கும் ஜாட் வெறியர்கள், இந்தக் கைது நடவடிக்கையினை எதிர்த்து, "காப்" எனப்படும் 45 கிராமங்களின் பஞ்சாயத்தைக் கூட்டிக் கைதானவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவர் கலந்து கொண்ட இந்த சாதிக் கட்டப் பஞ்சாயத்துக்குத் தலைமை ஏற்றவரோ, அரசு பள்ளி ஆசிரியர்.

தாழ்த்தப்பட்டவர் வளர்க்கும் நாய் ஒன்று ஜாட் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பார்த்துக் குரைத்ததுதான் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமாம். ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்ட வால்மீகி மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டும், அவர்கள் மீதான ஜாட் சாதியினரின் ஆதிக்கப் பிடி தளர்ந்து வருவது கண்டும் பொறுக்கமாட்டாது, அவர்களைத் தாக்கத் தருணம் பார்த்திருந்த சாதி வெறியர்களுக்கு நாய் குரைப்பு ஒரு முகாந்திரம் மட்டுமே.

ஜாட்டுகளின் சாதிவெறி தாக்குதல்கள் இந்தப் பகுதிக்குப் புதிதல்ல. கடந்த வருடம் இதே பகுதியில், ஜாட் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். 1997-இல் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டுப் போராடிய பொழுது சமூகப் புறக்கணிப்பு செய்து, வீடுகளைத் தாக்கி எரித்துள்ளனர். 2005-இல் சோனாபட் மாவட்டம் கோஹனா நகரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சூறையாடி எரித்துள்ளனர்.

மிர்ச்பூர் கிராமத்தில் 300 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்கள் அனைத்தும் ஜாட்டுகளுக்கே சொந்தம். தாழ்த்தப்பட்டவர்கள் காலம் காலமாக ஜாட்டுகளின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். ஆயினும், அவர்களை ஜாட்டுகள் விருப்பம் போல ஆட்டிவைத்த நிலை இன்று இல்லை. ராம் அவதார் என்பவரது தலைமையில் விவசாயக் கூலிகள் அமைப்பாகியுள்ளனர். கொடுத்த கூலியைக் கைகட்டி வாய் பொத்தி வாங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், இன்று சுயமரியாதையுடன் தமக்கான நியாயமான கூலியைக் கேட்டுச் சட்டரீதியாகப் போராடி வாங்குகின்றனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் இன்று ஒப்பீட்டளவில் படிப்பறிவு பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். குடும்பத்துக்கு ஒருவராவது உயர்நிலைப் பள்ளி வரை படித்திருக்கிறார்.

முன்பு தாங்கள் ஆதிக்க சாதியினரை அண்டியிருந்தபோது பட்ட அவமானங்கள் பற்றிப் பேசும் போது, ஓவு பெற்ற கல்லூரி முதல்வரான ராம் குமார், 1995-இல் நடந்த ஒரு சாதிக் கலவரத்திற்குப் பிறகு, அமைதி திரும்புவதற்காக ஜாட் சாதியினர் முன் தாழ்த்தப்பட்டவர்கள் தமது தலைப்பாகையைக் கழற்றிய சம்பவத்தை நினைவு கூறுகிறார். ஆனால், இன்றைய தலைமுறையோ இது போன்ற அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை என அவர் கூறுகிறார். இப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்டோர் பலர் ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு உயரதிகாரிகளாகவும் உயர்ந்துள்ளனர். பலரும் கல்வியறிவு பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத காரணத்தால், ஜாட்டுகளின் நிலங்களில் இன்னமும் பலர் கூலிகளாகவே உள்ளனர்.

இவ்வாறு சுயமரியாதையோடு தாழ்த்தப்பட்டவர்கள் தமக்குச் சமமாக வாழ்வதைப் பொறுக்காத ஜாட்டுகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களைத் தாக்கி வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களை இழிவான பெயர் சொல்லி அழைத்து வம்புக்கிழுப்பது, கட்டிலில் உட்காரக் கூடாது என மிரட்டுவது, விவசாயக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பது என்று தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வருடமும் விவசாயக் கூலிகளுக்கு சரிவரக் கூலி கொடுக்காத வழக்குகள் மட்டும் 200 வரை பதிவாகின்றன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தர் சிங் என்பவர் ஆடு மேத்து சேர்த்த காசில், ஜாட்டுகள் மத்தியில் மாடி வீடு கட்டி, வீட்டிலேயே மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்தக் ‘குற்றத்திற்கு’த் தண்டனையாக, ஜாட் சாதியினர் அணிதிரண்டு அவரது வீட்டையும் கடையையும் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் அரியானாவைச் சேர்ந்த 23 வயதான மனோஜ் மற்றும் 19 வயதான பாப்லி ஆகியோர் தமது குடும்பத்தினரை எதிர்த்துக் காதல் திருமணம் செய்ததால், அவர்கள் பாப்லி குடும்பத்தினரால் கொல்லப்பட்டனர். அவர்கள் காதல் திருமணம் செய்ததற்காக மட்டுமல்ல, ஜாட் சாதியின் உட்பிரிவாகிய ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற சாதியக் கட்டுப்பாட்டை அவர்கள் மீறிவிட்டதற்காக - அதாவது, ஜாட் சாதிக் கௌரவத்தைக் கீழறத்துச் சிறுமைப்படுத்திவிட்ட ‘மாபெரும் குற்றத்திற்காக’ அவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்தில் அவர்கள் தப்பிச் சென்றபோது, அவர்களை வெளியே இழுத்துப் போட்டு பாப்லியின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்று, தமது ஜாட் சாதிக் கௌரவத்தைப் ‘பெருமையுடன்’ நிலைநாட்டினர்.

‘‘சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மெட்ரிக் கல்வி வாரியத்தைக் கலைக்க மாட்டோம்; ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைக் கைவிட மாட்டோம்; தமிழகத்தில் மையக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் (சி.பி.எஸ்.சி.) இயங்கும் பள்ளிகளில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகாது" - இப்படி பல சமரசங்களைச் செய்துகொண்டுதான் சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும், மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தால் கல்வியின் தரம் தாழ்ந்துபோகும் என ஒப்பாரி வைத்து, இத்திட்டத்தைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர்நீதி மன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்யும் வண்ணம் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள தனியார் "மெட்ரிக்" பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குக் கடிவாளம் போடப் போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

லாவாஸா கார்ப்பரேஷன் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகருக்கு அருகே "லாவாஸா" என்ற பெயரில் புதிய நகரமொன்றை வெகுவேகமாக அமைத்து வருகிறது. மும்பய்ப் பெருநகரம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிதுங்கி வழிவதைப் பார்க்கும்பொழுது, இப்புதிய நகர நிர்மாணம் நல்ல விசயம்தானே என நம்முள் பலரும் கருதலாம். ஆனால், இந்தப் புதிய நகரம் யாருக்காக நிர்மாணிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனியார்மயம் பெத்துப்போடும் புதுப் பணக்காரக் கும்பலுக்காக உருவாக்கப்படும் நகரம்தான் இந்த "லாவாஸா’’.

பியாங்கா ஜாக்கர், மத்திய அமெரிக்காவின் நிகராகுவா நாட்டில் பிறந்தவர். உலகின் பிரபல ராக் இசைக் கலைஞர் மைக் ஜாக்கரின் மனைவி. கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆர்வலர். ஐரோப்பிய நாடுகளுக்கான நட்புத் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ஒரிசா மாநிலம் நியம்கிரி மலைப் பகுதியில் வாழும் கோந்த் பழங்குடி மக்களிடையே பயணம் போவிட்டு சமீபத்தில் திரும்பிய பியாங்காவை "டெகல்கா" பத்திரிக்கையின் செய்தியாளர் சோமா சௌதுரி பேட்டி கண்டுள்ளார். நியம்கிரி பழங்குடி மக்கள் அடியோடு அழிந்து போகுமாறு அங்கு சுரங்கங்கள் தோண்டி, கனிமங்களைக் கொள்ளையிடும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பியாங்கா தனது நேர்காணலில் விளக்குகிறார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.

காட்டுவேட்டை எனப்படும் உள்நாட்டுப் போரை நிறுத்தவும் அமைதி மற்றும் நீதிக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி பேரணி நடத்துவதற்காக கடந்த மே 5-ஆம் தேதியன்று, ராய்ப்பூரிலிருந்து தண்டேவாடாவுக்கு பிரபல காந்தியவாதியான நாராயண் தேசாய், விண்வெளி அறிவியலாளர் யஷ்பால், முன்னாள் யு.ஜி.சி தலைவர் ராம்ஜி சிங், சுவாமி அக்னிவேஷ் முதலானோர் வந்தனர். அமைதிப் பேரணி நடத்த முற்பட்ட அவர்கள் ஒரு பொறுக்கி கும்பலால் முற்றுகையிடப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜீலானி தோல் தொழிற்சாலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது நச்சுவாயு தாக்கி சரவணன், சூரியமூர்த்தி, ஏழுமலை, ராமு, சென்றாயன் என ஐந்து கூலித் தொழிலாளர்கள் மாண்டு போயுள்ளனர். இதில் ஏழுமலை, ராமு, சென்றாயன் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள். அவர்களின் குடும்பம் மட்டுமின்றி, சகோதரர்களான மூவர் கொல்லப்பட்ட துயரத்தால் அவர்கள் வாழ்ந்த செங்கல்வராயன் பட்டறை கிராமமே வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறது.

ஒரிசாவின் கலிங்கா நகர் வட்டாரத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், போஸ்கோ மற்றும் டாடா நிறுவனங்களுக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் புதிய கலிங்கத்துப் பரணியை எழுதி வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது.