Language Selection

அம்பேத்கார்

Ambedkar மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். திரண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம் அரசியலே வேண்டாம் என்று சபதம் எடுத்துக் கொள்வதால், அந்த வர்க்கமே அழிந்து போகும் என்றுதான் சொல்வேன். நாம் இதுவரை சமூக சீர்திருத்தத்தை நோக்கியே நமது முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அவற்றைப் பொருளாதாரச் சீர்திருத்தம் நோக்கியும் செலுத்த வேண்டிய அவசியத்தை நாம் மறந்திருந்தோம் அல்லது அரைகுறையாகக் கருத்தில் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் அனுபவித்த எல்லா கொடுமைகளுக்கும் மூல காரணம் பொதுவானது. நம்மீது சமூக, பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர்கள் நமக்குச் சொந்தமான, நம் கையில் இருக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதுதான் அந்த மூல காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அரசியலுக்கு வருவெதன்றால் கட்சி அமைத்துக் கொள்வது என்று பொருள். கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண் வேலை. சுயேச்சையாக இருப்பேன் என்று சில அரசியல்வாதிகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் நிலத்தை தனிமையில் உழுது கொண்டு இருக்க வேண்டியதுதான். அத்தகைய அரசியல்வாதிகளை நான் எப்போதுமே நம்புவது இல்லை. யாரோடும் சேர முடியாத ஓர் அரசியல்வாதி, எந்தப் பயன் நடைமுறை நோக்கத்துக்கும் பயன்பட மாட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில் ஒரு புல்கூட முளைக்காது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயேச்சையாக இருக்க நினைப்பது, அவர்களுடைய அறிவு நேர்மையால் அல்ல; தங்களுக்கு அதிக விலை நிர்ணயித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதற்காகத்தான். இதற்காகத்தான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலில் சுயேச்சை பற்றிய என் மதிப்பீடும், அனுபவமும் இதுதான்; கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்த முடியாது என்பதே என் கருத்து.

 

எந்தக் கட்சியில் சேருவது என்பது அடுத்த கேள்வி. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. காங்கிரசில் சேரலாமா? அப்படிச் சேர்ந்தால் தொழிலாளி வர்க்கத்துக்கு உதவிகரமாக இருக்க முடியுமா? காங்கிரஸ் அல்லாத ஒரு தனி அமைப்பு, சுதந்திரமான அரசியல் அமைப்பு தொழிலாளர்களுக்குத் தேவை. இக்கருத்தைத் தொழிலாளர் தலைவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்பவர்கள், சோஷலிஸ்டுக்கான தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும் என்னும் கருத்துடையவர்கள். அந்தத் தொழிலாளர் அமைப்பு காங்கிரசுக்குள்ளேயே செயல்படலாம் என்று அவர்கள் நினைக்கலாம். அதே போல் இன்னொரு பிரிவு, தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறது. அவர்களின் பிரதிநிதி திரு. ராய் அவர்களின் கருத்துப்படி, காங்கிரசுக்குள்ளேயும் சரி வெளியிலேயும் சரி, சொந்தமாகத் தனி அமைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பவர்கள் அவர்கள். இந்த இரண்டு பிரிவினரோடும் நாம் முற்றாக மாறுபட வேண்டும் எனக் கருதுகிறேன்.

 

நிறைய பேருக்கு திரு. ராய் ஒரு புதிர். எனக்கும் அப்படித்தான். ஒரு கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்குத் தனி அரசியல் அமைப்பு இருக்கக் கூடாது என்கிறார்! எத்தகைய மோசமான முரண்பாடு இது! இந்தக் கருத்து நிலையை கேள்விப்பட்டால், கல்லறையில் இருக்கும் லெனின்கூட புரண்டு படுப்பார். இந்திய அரசியலின் முழு முதல் நோக்கம், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது என்று சொல்லும் ராய் – இப்படி ஒரு கருத்து நிலைக்கு எப்படிதான் நியாயம் கற்பிப்பாரோ? அவரது கருத்தில் எந்தப் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏகாதிபத்தியம் மறைந்தால், இந்திய முதலாளித்துவமும் அடையாளம் தெரியாமல் நொறுங்கிவிடும் என்பதை நிரூபித்தால், ராயின் கருத்தை நாம் ஏற்க முடியும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுப் போய் விடுகிறார்கள் என்றாலும் இங்கிருக்கும் நிலப்பிரபுக்களும், ஆலை முதலாளிகளும் வட்டி வணிகர்களும் மக்களைச் சுரண்டுவது நின்று விடவா போகிறது? இந்த அடிப்படை எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. வெள்ளைக்காரன் போன பிறகும் தொழிலாளி தன்னுடைய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடித்தான் தீர வேண்டும். அதற்காக அவன் அமைப்பு அடிப்படையில் திரள்வது அவசியத்திலும் அவசியம். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

 

ஏகாதிபத்தியத்தைப் போலவே முதலாளித்துவத்தோடும் போரிட வேண்டும். அதற்காக ஒன்று திரள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படித் திரளும் தொழிலாளர் அமைப்பு, காங்கிரசின் உள் அமைப்பாகத்தான் இயங்க வேண்டும் என்னும் நிபந்தனையை யும் அவர்கள் விதிக்கிறார்கள். காங்கிரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தக் கட்டாயக் கூட்டணியின் அவசியம்தான் எனக்குப் புரியவில்லை.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

நன்றி:தலித்முரசு

1936 ஆம் ஆண்டு லாகூர் “ஜாத்பட்தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட -

ஆனால், பேசப்படாத உரை

இம்மாநாட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது

“உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
- புத்தர்

“பகுத்தறியாதவன் ஒரு மூட நம்பிக்கைவாதி
பகுத்தறிய முடியாதவன் ஒரு முட்டாள்
பகுத்தறியத் துணியாதவன் ஓர் அடிமை”
- எச். டிரம்மண்ட்

சாதியை ஒழிக்கும் வழி என்ன?
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

லாகூர் ஜாத்பட்தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த உரை, இந்துக்களை மனதில் இருத்தியே தயாரிக்கப்பட்டது. அதற்கு இந்துக்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் அச்சிட்ட 1500 படிகளும் இரண்டே மாதத்தில் தீர்ந்து விட்டன. குஜராத்தியிலும் தமிழிலும் உரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் பதிப்புக்கான தேவை இன்னும் குறையாமல் உள்ளது. இந்தத் தேவையை நிறைவு செய்வதற்காக, இரண்டாம் பதிப்பை வெளியிடுவது அவசியமாயிற்று. உரையை ஒரு வரலாற்றுப் பதிவு என்ற முறையிலும் உத்வேகத்துடன் வெளிப்பட்டுள்ள அதன் வடிவத்தைப் பாதுகாக்கவும், ஏற்கனவே இருந்த சொற்பொழிவு அமைப்பிலேயே வெளியிட்டு விட்டேன். பலரும் கேட்டுக் கொண்டது போல் நேரடி விவரண அமைப்புக்கு மாற்றவில்லை.

 

இந்தப் பதிப்பில் இரு பிற்சேர்க்கைகளை இணைத்துள்ளேன். முதல் பிற்சேர்க்கையில் என் உரையை மதிப்பிடும் முகமாக ‘அரிஜன்’ இதழில் திரு. காந்தி எழுதிய இரண்டு கட்டுரைகளையும், ஜாத்பட்தோடக் மண்டலைச் சேர்ந்த திரு. சான்ட் ராமுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் சேர்த்துள்ளேன். இரண்டாம் பிற்சேர்க்கையில், திரு. காந்தியின் மேற்படி கட்டுரைகளுக்கு என் கருத்துரைகளைப் பதிலாகத் தந்துள்ளேன்.

 

திரு. காந்தியைப் போலவே பலரும் என் உரையில் உள்ள கருத்துக்களை, எதிர் நிலையில் நின்று விமர்சித்துள்ளனர். ஆனால், திரு. காந்திக்கு மட்டும் நான் பதில் தந்துள்ளேன். ஏன்? பதில் தந்தாக வேண்டிய அளவுக்கு அவரது கட்டுரையின் செய்தி கனமுள்ளது அல்ல. ஆனால், இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள். அவர் தன் வாயைத் திறந்ததுமே எல்லோருமே தம் வாயை மூடிவிட வேண்டும்; தெருவில் போகும் நாய் கூட குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு - அவரது வார்த்தைகள் பொய்யா மொழியாக இந்துக்களால் கொள்ளப்படுகிறது.

 

ஆனால், கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் அல்ல என்று நேருக்கு நேர் நின்று வாதிடத் துணியும் கலகக் காரர்களுக்கு இந்த உலகம் கடமைப்பட்டுள்ளது. முற்போக்கான எந்தவொரு சமுதாயமும் தன் கலகக்காரர்களுக்கு தர வேண்டிய மதிப்பு குறித்து எனக்குக் கவலை இல்லை. இந்துக்கள் - இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும் படிச் செய்துவிட்டால், அதுவே எனக்குப் போதும்.

 

1937 பி. ஆர். அம்பேத்கர்

மூன்றாம் பதிப்பின் முன்னுரைஇந்த உரையின் இரண்டாம் பதிப்பு, 1937 இல் வெளியிடப்பட்டது. அது, மிகக் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. புது பதிப்பு வெளியிட வேண்டிய தேவை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 1917 ஆண்டு மே மாதத்தில், இந்திய அரும்பொருள் ஆய்வேட்டில் வெளியான என்னுடைய ‘இந்தியாவில் சாதிகள் : அவற்றின் அமைப்பியக்கம், தோற்றுவாய், வளர்ச்சி’ என்ற கட்டுரையையும் இதனுடன் இணைத்து - அதற்கேற்ப இந்த உரையை மாற்றி அமைக்க எண்ணி இருந்தேன். ஆனால், அதற்குரிய நேரமும் கிட்டவில்லை; செய்து முடிக்கும் நிலையிலும் நான் இல்லை. இந்நூலை உடனடியாக வெளியிடக் கோரி, பொது மக்களின் கோரிக்கை அதிகரித்து வந்தது. எனவே, இந்தப் பதிப்பு, இரண்டாம் பதிப்பின் மறுபதிப்பாகவே வெளிவருகிறது.இந்த உரையின் செய்தி, இவ்வளவு தூரத்துக்குப் பரவியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரை வெளியிடப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு இது உதவும் என்று நம்புகிறேன்.22, பிருதிவிராஜ் சாலை பி. ஆர். அம்பேத்கர்
புது டெல்லி

அமெரிக்காவில் இரண்டாயிரம் பவுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தில் மூன்று லட்ச ரூபாய் செலவில் பவுத்த விகார் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும்கூட மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பவுத்த நிறுவனங்கள் உள்ளன. புத்தரின் கொள்கைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. இது கடவுளின் மதம் என்று புத்தர் ஒருபோதும் சொன்னதில்லை. புத்தர் தனது தந்தையை சாதாரண மனிதர் என்றும், தாயை சாதாரண பெண்மணி என்றும் கூறியுள்ளார். நீங்கள் இதை உணர்ந்தால் இம்மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுடைய பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால், நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இத்தகைய பெருந்தன்மை எந்த மதத்திலும் இல்லை.

 

பவுத்தத்தின் உண்மையான அடித்தளம் என்ன? புத்தரின் மதத்திற்கும் பிற மதத்திற்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. பிற மதங்களில் எந்த மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில், அம்மதங்கள் எல்லாம் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை சொல்லுகின்றன. இயற்கையை உருவாக்கியது கடவுள்தான் என்று பிற மதங்கள் கூறுகின்றன. வானம், காற்று, நிலவு, சூரியன் என அனைத்தையும் கடவுளே உருவாக்கியதாக அவை கூறுகின்றன. நாம் எதையும் செய்யத் தேவையில்லாத வகையில் கடவுளே எல்லாவற்றையும் செய்துவிட்டார். எனவே, நாம் கடவுளை வணங்க வேண்டும்.

 

கிறித்துவ மதத்தின்படி, இறந்த பிறகு தீர்ப்பு சொல்லும் நாள் வரும். அந்தத் தீர்ப்பைப் பொறுத்து தான் எல்லாம் அமையும். பவுத்த மதத்தில் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் இடமில்லை. புத்தர் சொன்னார் : உலகம் முழுவதும் துன்பம் நிறைந்துள்ளது. 90 சதவிகித மக்கள் துன்புறுகின்றனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை துன்பத்திலிருந்து விடுதலை செய்வதற்கு முக்கிய காரணியாக பவுத்த மதம் இருக்கிறது. புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்? புத்தர் எதையும் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. சகோதரர்களே! நான் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்து வகையிலும் பவுத்த மதமே முழுமையானது. இந்து மதத் தத்துவத்தின்படி நீங்கள் புத்துணர்வை உருவாக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை ஒரு பட்டதாரியையோ, படித்தவரையோகூட இந்த சமூகம் உருவாக்கவில்லை.

 

மாரத்தா என்ற ஒரு பெண்மணி எங்களுடைய பள்ளியில் பெருக்குவார். அவர் என்னைத் தொட்டதில்லை. என்னுடைய தாய் மூத்தவர்களை மாமா என்று அழைக்கும்படி சொன்னார். நான் அஞ்சல்காரரை மாமா என்று அழைத்தேன். நான் குழந்தையாக இருந்தபோது பள்ளியில் தாகத்தால் தவித்தபோது என்னுடைய ஆசிரியரிடம் கூறினேன். அந்த ஆசிரியர் கடைநிலை ஊழியரை அழைத்து என்னைப் பாதுகாப்பாக குழாயின் அருகில் அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். நாங்கள் குழாய் அருகில் சென்றோம். அந்த உதவியாளர் குழாயைத் திறந்தார். நான் தண்ணீர் குடித்தேன்.

 

பள்ளிக்கூடங்களில் பொதுவாக எனக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அந்தப் பணியில் சேர விரும்பவில்லை. நான் அந்த வேலையில் இருந்தால், என்னுடைய சகோதரர்களை இந்த மாபெரும் பணிக்கு அழைத்துவர முடியாமல் போய்விடும்.

 

ஒரு தனி மனிதனாகப் பார்த்தால், இந்த நாட்டில் என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால், உங்கள் தலைமேல் உள்ள வைசியர், சத்ரியர் மற்றும் பார்ப்பனரை எப்படி கீழே வீழ்த்துவது என்பதுதான் என் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. எனவே, இம்மதத்தின் கொள்கைகளை உங்களுக்குச் சொல்லுவது என்னுடைய கடமை. நான் எழுதக் கூடிய புத்தகங்கள் மூலம் உங்களுடைய அனைத்து வகை சந்தேகங்களையும் தயக்கங்களையும் போக்கி விடுவேன்.

 

எனவே, அது வரையிலாவது என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய நடவடிக்கை, மற்ற மக்கள் உங்கள் மீது மரியாதை வைக்கும்படி இருக்க வேண்டும். நம் கழுத்தில் ஏதோ கடிவாளம் போட்டதாக நீங்கள் இம்மதத்தை நினைக்க வேண்டாம். பவுத்த மதத்தை சிறப்பான முறையில் பின்பற்ற முடிவெடுப்போம். மகர் மக்கள் புத்த மதத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று பெயர் எடுக்காத வண்ணம் நாம் உறுதியுடன் செயல்படுவோம். இதை நாம் நிறைவேற்றிவிட்டால், இந்த நாட்டை, ஏன் இந்த உலகையே நாம் ஆட்கொள்வோம். ஏனெனில், பவுத்த மதமே உலகைக் காப்பாற்றும். நீதியற்ற உலகில் அமைதி நிலவ முடியாது.

 

நாம் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய பாதை முழுக்க முழுக்க பொறுப்புகளையுடையது. இளைஞர்கள் நாம் மேற்கொண்ட சில தீர்மானங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிடக் கூடாது. நம்முடைய வருமானத்தில் இருபதில் ஒரு பகுதியையாவது நாம் அளிக்க முன் வர வேண்டும். நான் உங்கள் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த மதத்தைப் (பவுத்தம்) பரப்புங்கள்.

 

(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

சாதி அமைப்பு முறையில் வேறு சில தனித்த தன்மைகள் உள்ளன. இவை ஜனநாயகத்திற்கு எதிராக மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன. சாதி அமைப்பின் இத்தகைய தனித்த தன்மைகளில் ஒன்று, அதனுடைய ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.’ சாதிகள் சமமாக இல்லை. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பொறாமை கொள்கின்றன. சாதி, தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்குக் கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்தத் தன்மைதான் மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அது, மனமுவந்து உதவும் இணக்கமான சூழலை அழித்து விடுகிறது.

Ambedkar சாதியும் வர்க்கமும் எந்த இடத்தில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். சாதி அமைப்பில் இருப்பது போன்ற முழுமையான தனிமைப்படுத்துதல் வர்க்க அமைப்பில் இல்லை. சாதி அமைப்பில் சமமின்மையுடன் இணைந்த இரண்டாவது தீய விளைவு இது. இதன் மூலம் உள்ளார்ந்த உணர்வும், ஆதரவும் இரு சாதிகளுக்கிடையில் ஒருசார்புடையதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. மேலிருக்கும் சாதி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியிலும், கீழிருக்கும் சாதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வழியிலும் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சமமான வாய்ப்புகள் இல்லாததன் விளைவு சிலர் தலைவர்களாகவும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க அது கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை அனுபவங்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வியல் முறை தடுக்கப்படுகிறது.

 

இது, சமூகத்தை வாய்ப்புகள் பெற்ற வர்க்கமாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்க்கமாகவும் பிரிப்பதில் முடிவடைகிறது. இத்தகைய பிரிவினை, சமூக ஒருங்கிணைப்பைத் தடுக்கிறது. மூன்றாவதாக ஒரு தனித்தன்மை சாதி அமைப்பிற்கு இருக்கிறது. இது, ஜனநாயகத்தின் வேர்களையே நிர்மூலமாக்கும் தீய தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் குறிப்பிட்ட ஒரு தொழிலையே செய்ய வேண்டும் என்றும் அது நிர்பந்திக்கிறது.

 

சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது…

 

கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்’; அதே நேரத்தில் ‘இல்லை’! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

 

கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.

 

தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.

 

‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ 20.5.1956 ‘டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு’ : 17 பக் : 520

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Ambedkar பவுத்தம் தழுவிய பிறகும் நான் அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்காக நாம் கூடுதலாகப் போராட வேண்டும். பவுத்தத்தை தழுவிய பிறகு ஏற்படும் இன்னல்களை, எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு என்ன விதமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் நான் முழுமையாக சிந்தித்து விட்டேன். என்னிடம் ஏராளமான தீர்வுகள் உள்ளன. நான் எம் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். என்னிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்கு எதிரானப் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

 

ஒரு விஷயத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், நான் ஏன் பவுத்தத்தைத் தழுவினேன் என்று ஒருவர்கூட கேட்கவில்லை. நான் ஏன் இந்த மதத்தைத் தவிர வேறு மதத்தைத் தழுவவில்லை என்று எவரும் கேட்கவில்லை. இந்த முக்கிய அடிப்படைக் கேள்விதான் மதமாற்ற இயக்கத்திற்கு அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது, அது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எந்த மதம், ஏன் அது தழுவப்பட வேண்டும்? 1935 ஆம் ஆண்டு இயோலாவில் இந்து மதத்தை விட்டொழிப்பதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன் : ‘‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்” நேற்று அதை நிரூபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவை இல்லை. பவுத்தத்தை தழுவ விரும்புகிறவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுணர்வு அந்த மதத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும், ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அவர்கள் காலையில் எழுந்து காலை உணவை ரொட்டி, வெண்ணெய், கோழிக்கறி போன்றவைகளை சாப்பிட்டு நன்றாகத் தூங்கி, திரைப்படங்களைப் பார்த்து அத்துடன் அவர்களுடைய அந்த நாள் முடிவடைகிறது. இதுதான் அவர்களுடைய கொள்கை. என்னுடைய கொள்கை அதுவல்ல. என்னுடைய தந்தை ஏழை. எனக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் துன்புற்றதைப் போல யாரும் துன்புற்றிருக்க முடியாது. எனவே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வசதிகள் இல்லையென்றால், அவன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை என்னால் உணர முடியும். பொருளாதார மேம்பாட்டிற்கான ஓர் இயக்கம் தேவை என்பதை நான் அறிவேன். நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல. மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

 

ஆனால், இவ்விஷயத்தில் நான் ஒரு முக்கிய வேறுபாட்டைக் காண்கிறேன். எருமை மாட்டிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு. எருமை மாட்டுக்கு தினமும் புண்ணாக்கு தேவை. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், எருமைக்கு அறிவு இல்லை. மனிதனுக்கு உடலும் அறிவும் இருக்கிறது. எனவே, இவை இரண்டு குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும். அவனுடைய அறிவு பண்படுத்தப்பட வேண்டும். மனிதனுக்கும் பண்பட்ட மனிதனுக்கும், உணவைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று நினைக்கும் மக்களுடனும் நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மக்களோடு உறவு வைத்துக் கொள்ள மனிதனுக்கு நல்ல உடலும், அந்த உடலைப் பேணுவதற்கு அறிவையும் பண்படுத்த வேண்டும். இல்லையெனில் மனித இனம் முன்னேறியதாகச் சொல்ல முடியாது.

 

ஒரு மனிதனின் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது? ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும்? அவன் நோயுற்றே கிடக்கிறான். தன்னுடைய உழைப்புக்குரிய பயன் கிட்டும்போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.

 

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

காங்கிரஸ், பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பட்டியலின வகுப்பினருக்குப் பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயம், காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த முடிவு, தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க முடியும். இங்கு எழும் கேள்வி இதுதான்: பட்டியலின வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா? காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற காரணத்துக்காக, பட்டியலின வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை வெளிநாட்டினர் ஆதரிப்பது நியாயமல்ல. பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு வெளிநாட்டினர், பட்டியலின வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

Ambedkar இந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது. மாறாக, வயதுவந்தோர் வாக்குரிமை சக்திகளுக்குக்கூட அடிபணிந்து போகாத அளவுக்கு தம்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க வகுப்பு ஓங்கி வளர்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே. பட்டியலின வகுப்பு மக்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

 

உண்மையில், உலகின் பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை, இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள். இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு “ஹைபன்’ என்னும் கோடு போடுகிறோமே அது போன்றது இது. ஆனால், இந்தியாவிலோ, இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடைச்சுவரே எழுந்து நிற்கிறது. “ஹைபன்’ என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால், தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.

 

மற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டே வருகிறது. அவர்கள் அந்த வர்க்கத்தில் ஏற்கெனவே இடம் பெறாதவர்கள். ஆனால், அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள்; இப்போது இதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஆதிக்க வகுப்பினர், மற்றவர்களுக்கு கதவை ழுவதுமாக மூடிவிட்ட அமைப்பினராவர். அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ, அங்கு பாரம்பரியம், சமூக சித்தாந்தம், சமூகக் கண்ணோட்டம் உடைபடாதவையாகவே இருக்கும். முதலாளிகளுக்கும் அடிமைகளுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாரம்சத்தில் வலிமைமிக்கதாகவும் இருந்து வரும்.

 

ஆனால், அதேநேரம் ஆதிக்க வகுப்பினர், ஒரு மூடப்பட்ட காப்பிடம் போல் இல்லாமல், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூக ஒத்துணர்வு எங்கு நிலவுகிறதோ, அங்கு ஆதிக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாகவும், அவர்களது சித்தாந்தம், குறைந்த அளவு சமூக விரோதப் போக்குடையதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட வெளிநாட்டினர், பிற நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத்தகைய பலனை ஏற்படுத்த முடியாமல் போவதையும் காண்பார்கள்.

 

இதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாதுகாப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டத்தகாத மக்களும், இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தியாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட நினைக்கும் காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதி உடையவர்களாகின்றனர்…

 

ரத்தினச் சுருக்கமாகக் கூறினால், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும். ஆதிக்க வகுப்பினருடைய நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை, காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது…

 

“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 9 பக்கம் : 232

ஒரு பள்ளியின் ஆசிரியர், ஒரு ‘மகர்’ மாணவனைப் பார்த்து, ‘ஏய் யார் நீ? இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா? உனக்கு எதற்கு முதல் வகுப்பு? நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா?’ என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும்? அவன் எப்படி முன்னேற முடியும்? புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை அவனுடைய மனதில் உருவாக்கப்பட வேண்டும். உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து அதன் மூலம் துணிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெறும்போதுதான் அவன் புத்துணர்வு பெற முடியும். ஆனால், தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது. இத்தகைய தாழ்வு மனப்பான்மையும், புத்துணர்வின்மையும் பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் மீது திணிக்கக் கூடிய அளவுக்கு சூழல்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் ‘கிளார்க்’ வேலைகள் மூலம் தங்கள் வயிற்றைத்தான் நிரப்பிக் கொள்ள முடியும். வேறு என்ன நடக்கும்?

 

மனிதனின் புத்துணர்வுக்குப் பின்னால் இருப்பது அவனுடைய உள்ளம். ஆலைகளின் உரிமையாளர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தங்களுடைய ஆலைகளுக்கு மேலாளர்களை நியமித்து, தங்கள் ஆலைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலை உரிமையாளர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அவர்கள் பண்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். நாம் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், உங்கள் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை செய்கிறது. அதன் பிறகு கல்வி அளிக்கப்பட வேண்டும். நான் கல்வி கற்கத் தொடங்கியபோது கிழிந்த துணிகளையே உடுத்தியிருந்தேன். பள்ளியில் எனக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காது. பல நாட்கள் தண்ணீர் இன்றி நான் பள்ளியில் இருந்திருக்கிறேன். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் வேறு எந்த மாதிரியான நிலைமைகளை உருவாக்க முடியும்? வெறும் கிளார்க்குகளைத்தான் உருவாக்க முடியும்.

 

நான் டெல்லி வைசிராய் குழுவில் இருந்தபோது லின்லித்கோதான் வைசிராயாக இருந்தார். ‘முஸ்லிம்களுக்கு கல்வி அளிக்க அலிகார் பல்கலைக்கு வழக்கமான செலவுகளோடு கூடுதலாக மூன்று லட்சம் ரூபாய் செலவழியுங்கள். அதேபோல, மூன்று லட்ச ரூபாயை இந்து பனாரஸ் பல்கலைக்கு வழங்குங்கள். ஆனால், நாங்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு செய்ததைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாக செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு செய்கின்ற அளவுக்காவது எங்களுக்கு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு லின்லித்கோ, நீ என்ன சொல்வதாக இருந்தாலும் அதை எழுதிக் கொடு என்று சொல்லிவிட்டார். எனவே, அதை அப்படியே நான் ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்தேன். அந்த நகல் என்னிடம் அப்படியே இருக்கிறது. அய்ரோப்பியர்கள் மிகவும் கருணை உள்ளவர்கள். அவர்கள் என்னுடைய வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால், எந்த வேலைக்காக அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நமது பெண்கள் கல்வி கற்கவில்லை என்பதால், அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களுக்கென்று விடுதிகள் தொடங்கப்பட்டன. அதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. நம்முடைய பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் படித்த பிறகு, வீட்டில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பது யார்? அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன? அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை செலவழித்தது. ஆனால், கல்விக்காக பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை.

 

எனவே, நான் ஒரு நாள் லார்ட் லின்லித்கோவிடம் சென்று கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்று கேட்டேன். மேலும் நீங்கள் கோபப்படவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ‘நான் மட்டுமே அய்ம்பது பட்டதாரிகளுக்கு சமமானவன் இல்லையா?’ என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம்? ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை’ என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும்? நான் சொன்ன அந்த நிமிடமே லார்ட் லின்லித்கோ ஒப்புக் கொண்டு, பதினாறு மாணவர்களை உயர் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். இந்தப் பதினாறு பேரில் சிலர் அரைவேக்காடுகளாகவும் சிலர் முழு அறிவாளிகளாகவும் இருக்கக் கூடும். அது வேறு பிரச்சினை. ஆனால், அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி, இத்தகு உயர் கல்வித் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்.

 

(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

 

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

 

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

 

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

நன்றி:தலித்முரசு

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

 

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

 

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

 

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.’ இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

 

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.

நன்றி:தலித்முரசு

முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.

 

 பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய “மகர்’ படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு “இரக்கமுடன்’ நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?

 

தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது. முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் “பார்கவா’ மற்றும் “சச்சார்’ ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள். பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.

 

இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், “காங்கிரஸ்காரர்’ அல்லது “நாகரிக மனிதர்’ என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

 

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.

 

ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.

 

தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே, நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.

 

நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

நன்றி:தலித்முரசு

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.

 

ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.

 

தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும். காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.

 

இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும்.

 

அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.

 

ஆகவே, இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள் சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.

 

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி: தலித்முரசு

Ambedkar முதலில், ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும், வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன? சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, சொத்துமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மென்மேலும் பொருளாதாரத் தீங்குகளை, சீர்கேடுகளை, துயரங்களை இழைத்து வந்தது.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது சித்தாந்தம்: சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் மறுக்கக்கூடும். இதை மறுப்பவர்களிடம் ஓர் எதிர்க்கேள்வி கேட்க விரும்புகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதில் வீழ்ச்சி அடைந்தது? அதே நேரம், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்ந்து விடவில்லை? என்னைப் பொறுத்தவரை, இதற்கு ஒரு பதில்தான் இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட நாடுகளைவிட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும், சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

 

சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்புமும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

 

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்குத் தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால், அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும், மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் அய்யமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நிற்கவில்லை. இதிலுள்ள மிகவும் கேடான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும். இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

 

இதன் காரணமாக, மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து, அது தங்களை ஆள்வதற்கு விட்டு விடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. இதன் காரணமாக, அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், உண்மையில் அது வழிவழியாக ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையாக ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது.

 

அரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக் கேடாக, ஒழுக்கக்கேடாக, நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும், இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, நல்வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உறுதி செய்வதாகத் தான் அளித்திருந்த வாக்குறுதியை, நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

 

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி:தலித்முரசு

ஆதிக்க வகுப்பின் அதிகார வெறியைத் தடுக்க அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்- IX

Ambedkar

ஆதாயம் அதிகாரம் அளிக்கக்கூடிய பதவிகள், தமது வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் திருப்தியடையவில்லை. வெறும் ஒதுக்கீடு மட்டும் போதாது என்பதை அவர்கள் அறிவர். தன்னைப் போலவே இந்தப் பதவிகளை வகிப்பதற்கு - முற்றிலும் தகுதி படைத்தவர்கள், பார்ப்பனரல்லாத வகுப்பினரிடமிருந்து தோன்றி, இந்த ஒதுக்கீட்டு முறையையே அவர்கள் தகர்த்தெறிந்து விடாதபடி பார்ப்பனர்கள் தடுத்தாக வேண்டும். எல்லா அரசாங்க நிர்வாகப் பதவிகளும் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, கல்வி வசதி பெறுவதை பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக்குவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

 

நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த சட்டத்தின் படி, இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள சூத்திரர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது. இத்தகைய சலுகைகள் எல்லாம் இப்போது பார்ப்பனர்களுக்கு இல்லை என்று கூறி, காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சலுகைகள் இப்போது மறைந்து விட்டாலும், அவற்றின் மூலம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த சலுகைகள், இன்னும் நீடிக்கவே செய்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மிகவும் மோசமான வகுப்புவாத முறைகளைக் கைக்கொண்டுதான் பார்ப்பனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பதை முற்றிலும் அறிந்துள்ள காங்கிரஸ்காரர்கள், அடிமை வகுப்பினர் முன்வைக்கும் கோரிக்கையை வகுப்புவாதம் என்று கூறி நிராகரிப்பது நேர்மையாகுமா?

 

மேலும், அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று இன்று கோரும் நிர்பந்த நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றால், அதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்கள் தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அடிமை வகுப்பினர் கல்வி கற்பதையும், சொத்துகள் வைத்திருப்பதையும் குற்றமாக்கக் கூடிய சட்டங்களை இயற்றியதால்தானே அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்புகள் கோரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா, மறைக்க முடியுமா? தங்களது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் செய்ததுடன் ஒப்பிடும்போது, அடிமை வகுப்பினரின் கோரிக்கைகள் எவ்விதம் நியாயமற்றவையாக இருக்க முடியும்?

 

இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து ஆதிக்க வகுப்பினரின் தலைமையில் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் அடிமை வகுப்பினரின் கண்ணோட்டத்தில் ஒரு மோசடிப் போராட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு சுயநலப் போராட்டமாகவே அமைந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினரின் சுதந்திரப் போராட்டம், அடிமை வகுப்பினரை ஆள்வதற்கான சுதந்திரமேயாகும். அடிமட்டத்திலுள்ள இனத்தை, மேல் மட்டத்திலுள்ள இனம் ஆளும் சுதந்திரத்தையே அது விரும்புகிறது. இது, நலிவுற்றவனை வலிமை மிக்கவன் ஆளும் நாஜி அல்லது நீட்சேயின் சித்தாந்தமே தவிர வேறல்ல.

 

இந்திய அரசியலையும், அது செல்லும் திசைவழியையும் தெரிந்து கொள்ளவும், அதனால் எழக்கூடிய பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவ விரும்பும் அயல்நாட்டவர், இந்திய அரசியலுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான அம்சங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றை அவர் முழு அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளத் தவறினால், கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவரைப் போல் ஆகிவிடுவார்; அவரைத் தனது வலைக்குள் வீழ்த்துவோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுவார்; ஆட்டுவித்தபடி ஆடும் தலையாட்டி பொம்மையாகி விடுவார்.

 

இந்திய அரசியலின் அடிப்படையான அம்சங்கள் :

 

1. அடிமை வகுப்புகள் சம்பந்தமாக ஆளும் வகுப்பினர் கடைப்பிடிக்கும் சித்தாந்தம் கண்ணோட்டம்


2. ஆளும் வகுப்பினருக்கும் காங்கிரசுக்குமுள்ள உறவு


3. அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் வேண்டுமென அடிமை வகுப்பினர் முன்வைத்துள்ள அரசியல் கோரிக்கைகளுக்கான மூல காரணங்கள்.

 

முதல் அம்சத்தைப் பொறுத்தவரையில், அயல்நாட்டவர் இது குறித்து தனது சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு போதிய தகவல்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. அவசியமான தகவல்களுடனும் வாதங்களுடனும் இங்கே நான் முன்வைக்க முயலும் கோட்பாடு, மிக எளிதானது. அது பின்வருமாறு கூறுகிறது: முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியா, முற்றிலும் வேறுபட்டதொரு புதுமையான இந்தியாவாக, உலகமே வியந்து போற்றும் இந்தியாவாக இருக்க வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினருக்குத் தொண்டூழியம் புரியும் ஓர் அடிமைத்தனமான வகுப்பினர் இல்லாதிருக்கும் ஒரு புதுமையான இந்தியா பூத்து மலர வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்தக் கூடிய, இது சம்பந்தமாக முறையான பாதுகாப்புகளை அளிக்கக்கூடிய, ஆதிக்க வகுப்பினரின் கொள்ளைக்காரத்தனமான அதிகார வெறிக்கு “லகான்’ போடக்கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும். இதைத்தான் தீண்டத்தகாதவர்கள் நெடுகிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்; இதைத்தான் காங்கிரஸ் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது.

 

“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 9 பக்கம் : 230
http://ambedkarr.wordpress.com/

நாடாளுமன்ற அவைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினரைக் கேள்வி கேட்க ஒருவேளை பெருந்தன்மையாக அனுமதித்து விட்டாலும், அது அவைக் குறிப்பில் இடம் பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா அந்த உறுப்பினரிடம் பேசி, அக்கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்துவார். அதையும் மீறி ஒருவேளை அந்தக் கேள்வி பதிவாகிவிட்டால், அக்கட்சியின் கொறடா அந்த உறுப்பினரை அன்று மட்டும் ஊரைவிட்டே வெளியேறச் சொல்லி விடுவார். இக்கேள்விக்கான பதில் தேவைப்பட்டாலும், கேள்வி எழுப்பிய உறுப்பினர் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது. இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

Ambedkar நாடாளுமன்றத்தில் நிதிநிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது, எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நிதிநிலை குறித்துப் பேசலாம். தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும் எத்தகைய சிறப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரலாம். தேவையற்ற திட்டங்களுக்காக நிதியை வீணடிப்பதற்குப் பதில் முக்கியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரே ஒரு உறுப்பினர்கூட வெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதை நான் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளே காரணம். கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனில், முன்கூட்டியே அவர்கள் கட்சிக் கொறடாவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரசில் உள்ள தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் எவரும் எந்த சட்டவரைவையும் முன்மொழிந்ததில்லை.

 

தீண்டத்தகாத மக்கள், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கான சட்டரீதியான சிறப்புரிமைகளை / அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுடைய எதிரிகள் காங்கிரஸ் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவர்கள் எப்படி அதை அனுபவிக்க முடியும்?

 

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நம்முடைய சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்பியிருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டனர். அந்தக் காலம் கடந்து விட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்திலும் நாம் கவனமாக இல்லாமல், நம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், நாம் அழிந்து விடுவோம். இனிவரும் தலைமுறையினரும் நம்மைப்போல துன்பப்படக்கூடாது என நினைத்தால், நீங்கள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும்.

 

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் இடஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியாவில் தீண்டாமை நீடித்திருக்கும்வரை, இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்னை எதிர்த்தனர். எனவே, ஒன்றும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் ஏதாவது கிடைக்கட்டுமே என்ற வகையில், நான் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த இடஒதுக்கீடு இரண்டு தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கப் போகிறது. அதுவரை மட்டுமே காங்கிரஸ் போன்ற கட்சிகள், உங்களிடம் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்கும்.

 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்கும்படி உங்களுக்காக யாரும் கேட்கப் போவதில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, நீங்கள் அவர்களின் சார்பில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்குமா? கண்டிப்பாக வைக்காது. அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களைத்தான் முட்டாள்களாக்குவார்கள். எனவே, நீங்கள் இப்பிரச்சினை குறித்து சிந்தித்து, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

 

ஒவ்வொரு கட்சிக்கும் பணமோ, அதிகாரமோ இருக்க வேண்டும். நம் சமூகத்திடம் பணமோ, அதிகாரமோ இல்லை. ஆதிக்கச் சாதியினரின் கருணையால் நாம் கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பனியாக்கள் மற்றும் மார்வாரி போன்றவர்களிடம் அதிகாரம் இல்லை; ஆனால், அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தால் எதையும் வாங்க முடியும். எனவே, நீங்கள் உங்களுக்காக எதையாவது செய்து தீர வேண்டிய தருணம் இது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அனுப்பலாம். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின்’ கீழ் ஒன்றிணைந்து, நம் சமூகத்தை குழப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளும் உங்களிடம் வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்பார்கள். ஆனால், அவர்கள் காட்டும் தவறான பாதைக்கு நீங்கள் சென்றுவிடக் கூடாது.

 

தொடரும்

28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

நான் காங்கிரஸ் அரசில் ‘காபினட்’ அமைச்சராகப் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியிலேயே நான் சேர்ந்து விட்டதாகப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘அம்பேத்கரே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, பட்டியல் சாதியினர், இன்னும் ஏன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருக்கின்றனர்’ என்று சில விமர்சகர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இத்தகைய விமர்சனங்கள் குறித்து நான் லக்னோவில் தெளிவுபடுத்தினேன். பூமியும் பாறையும் இருவேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்று சேராது. பாறை, பாறையாகவும்; பூமி, பூமியாகவுமே இருக்கும். நான் பாறையைப் போன்று உறுதியானவன். நான் யாருடன் இருந்தாலும், என்னுடைய தனித்த அடையாளத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்.

Ambedkar எந்தவொரு நற்பணிக்காக, யார் என்னுடைய ஒத்துழைப்பை நல்கினாலும், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக என்னுடைய ஆற்றலை உண்மையுடன் பங்களிக்க, காங்கிரஸ் அரசுடன் நான்கு ஆண்டுகள் ஒத்துழைத்தேன். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் நான் காங்கிரஸ் கட்சியில் சங்கமமாகிவிட என்னை அனுமதித்தது இல்லை. சிந்தனையிலும் செயலிலும் என்னுடைய மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாத அனைவருடனும் நான் ஒத்துழைத்தேன்.

 

வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை பட்டியல் சாதியினர் வாழ்வா சாவா என்று எண்ணி செயல்பட வேண்டும். நம்டைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, நம்டைய அத்தனை திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்குப் பின்னால் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் கொண்டிருக்கும் வளத்தை வைத்துமே அவன் ஆற்றலைப் பெறுகிறான். நாம் சிறுபான்மையினர், நம்மிடம் பொருள்வளம் இல்லை. நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இந்து போலிஸ்கள், நாம் முன்வைக்கும் உண்மையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு மாறாக, குற்றம் சுமத்திய ஒரே காரணத்திற்காக நம்மை ஒடுக்குகிறார்கள். வறுமையில் உழலும் நம்மால், அரசு எந்திரத்தை நமக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை.

 

இருப்பினும், நம்மிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அதுதான் அரசியல் அதிகாரம். இதை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த அதிகாரத்தின் உதவியுடன் நாம் நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். விடுதலை பெற்ற இந்தியாவில், நம்டைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றீர்களா? நம்டைய நாடு விடுதலை பெறுவதை நாம் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கான நேரடியான பதிலையே நாம் எதிர்பார்த்தோம். விடுதலை பெற்ற இந்தியாவில் நம்டைய நிலை என்ன? காந்தியிடம் நான் இக்கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

 

சுயராச்சியத்தில் என் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் தற்பொழுது இருப்பது போல ‘பாங்கி’களாக, ‘சமார்’களாக நீடித்து இருப்போமா? இப்போது இருப்பது போலவே எங்களுடைய குழந்தைகள், பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுமா? கிராமங்களில் தற்பொழுது எங்கள் மக்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுமா? வட்டமேசை மாநாட்டிலும் நான் காந்தியாரிடம் இதே கேள்வியைத்தான் எழுப்பினேன்.

 

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டதைப் போல, எங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமா? ஆனால், பட்டியல் சாதியினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமைகள் 1932 இல் அளிக்கப்பட்டபோது, இந்த உரிமைகளை திரும்பப் பெறும்வரை, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் எங்களிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடக்கிறதோ, அது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திட்டத்திற்கு நேர் எதிரானது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

 

நம்டைய மக்களை தனித்தொகுதி மூலம் அனுப்ப நாம் விரும்பும்போது, அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. சுயநலன்களுக்காக செயல்படும் மூடர்களையும், காங்கிரசுக்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்களையும் காங்கிரஸ் தனித்தொகுதியில் வேட்பாளர்களாக்க முயல்கிறது.

 

தற்பொழுது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில், 30 பட்டியல் சாதி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பது பேரும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அங்கு அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை; எந்தத் தீர்மானத்தையும் முன்மொழிவதில்லை; நாடாளுமன்றத்தின் முன்பு எந்தச் சட்டவரைவையும் முன்வைப்பதில்லை. எனவேதான், நாம் நம்டைய உண்மையான பிரதிநிதியை அனுப்ப விரும்புகிறோம். அவர்கள்தான் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நம்டைய கோரிக்கைகளை முன்வைத்து, அதைத் தீர்க்க முயல்வார்கள்.

 

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

 இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.

ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.

அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை' என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.

எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். "அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்'' என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். "நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது' என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

- தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320

http://www.keetru.com/dalithmurasu/may08/ambedkar.php

 




ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .


பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும். ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர் கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொம்கையின் பலனேயாகும்.


பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்' என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்' என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

----------------டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?" என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216) (நூல்: "பெரியாரும் அம்பேத்கரும்" பக்கம் -12-15)

http://thamizhoviya.blogspot.com/2008/09/blog-post_7943.html

..........
நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

 

http://poar-parai.blogspot.com/2007/05/blog-post_2512.html

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

http://karuppupaiyan.blogspot.com/2007/07/blog-post_27.html