Language Selection

பெரியார்

தோழர்களே!

கடவுள், மதம், ஜாதீயம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.


தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும், ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும், அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.


தேசம் என்றால் எது? உலகப்பரப்பு அய்ந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்துக்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.தேசம் என்பவற்றில் சில கண்டத்தை விட பெரிதாகவும், பல மதங்களாகவும் பல பிறவிகளாகவும், பல மொழி, பல நாகரிகம், பல கலை ஆகவும் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்ப்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும், தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாதது என்றும் இவற்றில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்கவேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவையாகும்.


இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கிறோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்தஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகிறவன் - கஷ்டப்படுத்துகிறவன், முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தைப் பிரித்தக்கொண்டு தங்களுக்கெனத் தனித்த தேசம், தேசியம் என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை, நமது தேசம் என்ற விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதுதான் மற்ற எந்தக் கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறார்களோ அவ்வளவு நிலையில்தான் மற்ற தேசத்தார் என்கிற மக்களும் இருந்து வருகின்றார்கள்.

 

நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கிறோமோ, அவ்விதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கிப் பட்டினிபோட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ, அது போலதான் அந்நிய தேசமென்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் ஒரு பிரிவார் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக் கொண்டு, எந்த இலட்சியத்தைக் கொண்டு உலகப்பரபில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.


துருக்கி தேசத்துக்கும், இந்திய தேசத்துக்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதராபாத்துக்கும், மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால், ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே, ‘தேசம்’ ‘தேசாபிமானம்’ என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பது போன்ற ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்க்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்ற சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்றத் தேச முதலாளிகளுடன் சண்டைபோட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களை - பாமரர்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்ப்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

 

உதாரணமாக, இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா தேசமுதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றுத் தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால் அல்லது அமெரிக்க முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேச முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்பதாயிருந்தால், இங்கிலாந்து தேச முதலாளிகள் இங்கிலாந்து தேச ஏழை மக்களையும் பாமரமக்களையும் பார்த்து, “ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே, தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள்; ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை அமர்த்தியும், வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரச்சாரம் செய்விப்பார்கள்.

 

இதுபோலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடியில் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமரர்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும் கூவிக்கொண்டு கூலிகொடுத்துப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழைகளும் மற்றும் சாப்பாட்டிற்க்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொள்ளுவார்கள். சிறைப் பிடிப்பதன் மூலம் இரு தேசச் சிறைகளையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால், இரு கட்சிகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் இராஜியாகப் போயோ யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.


ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும் அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்குச் சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்குச் சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசிதததுப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நடாத்துவதற்க்கும் அந்நிய ஆட்சியைத் துரத்துவதற்க்கும் அமெரிக்க ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்று அமெரிக்க விடுதலைச் சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்க்கும் குறைந்ததல்ல.


அது போலவே இந்தியத் தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களை தூண்டிவிட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்ற முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்த இந்தியத் தேசியத்தால் ஏழை மக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்.


தோழர்களே ! அமெரிக்கத் தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்க அந்நியப் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய ஆட்சியை ஒழித்தாலும், ஓர் அரசனையே விரட்டிவிட்டுக் “குடிகளின் ஆட்சி” ஏற்படுத்திக் கொண்டதாலும், ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப் பாருங்கள்.


இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேரும் 100 -க்கு 90-பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தைச் சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளுமாய் இருப்பவர்களுமாவர்.


இலேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பாராக்கிக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கைப் பூமிகளை ஏராளாமாய்க் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்துப் பொருள் சேர்த்துக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டுப் பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம்பிடித்த வன்னெஞ்சப் பார்ப்பானார்களுமாகக் கூடிக்கொண்டு இந்தியத் தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.


வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால், கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால், கருப்பன் ஏழைகளிடம்-கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப்படுத்துகிறான்.


இந்தப்படி மக்களைச் சந்தித்துக் கொள்ளை அடிபவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள்.


ஆகவே, இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம் என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்துவிடுங்கள். அவை ஒரு நாளும் க ஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை, பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் ஏழைகளை தொழிலாளிகளைப் பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.


தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.


(1932 - ஒக்ரோபர் பயணத்தில் இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_26.html

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை மகா மகாகனம் பொருந்திய சிறீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி 'இந்து' பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

சிறீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படியிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் சிறீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே சிறீமான் சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல்நாட்டுக்குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத் தையும், வருகை வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விஷேசங்களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற்காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

சிறீமான் சிறீவிஜய ராகவாச்சாரியார் என்கிறவரும், ஒரு பார்ப்பனரும் சர்க்கார் ஊழியர் என்கிற முறையில் மேல்நாட்டுக்குப் போயும் சுயராஜ்யத்திற்கு இந்துக்கள் இன்னும் பக்குவம் இல்லை என்றுகூடச் சொல்லியும் சுயராஜ்யக் கட்சி துவேஷத்திற்கு விரோதமாய்ப் பேசியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இந்தியாவின் பாக்கியம் என்றும், கடவுள் அருள் என்றும் பேசியும், பிரிட்டிஷாரின் பெயரை இந்தியர்கள் பெறும் குழந்தைகளுக்கு வைக்கவேண்டிய மாதிரிக்கும், தான் நிர்வாக சபை மெம்பர் வேலை பெறத்தக்க அளவுக்கும் ராஜபக்தி காட்டியுமிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரது பிரயாணத்தையும் வரவையும் அங்கு போய் செய்ததையும் பேட்டி கண்டு பேசியதையும் படம் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

கோயமுத்தூர் சிறீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் பார்ப்பனரல்லாத கட்சியிலிருந்து விலகி பார்ப்பனர் கட்சியான சுயராஜ்யக் கட்சியினராயும், அக்கட்சியில் முக்கிய கொரடாவாயுமிருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயிருந்தும் பார்ப்பனர் சொல்லுகிற பக்கங்களிலும் கூட்டங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதைகளையெல்லாம் தான் முன்னிருந்து காப்பாற்றியும் பார்ப்பனர் "தங்கள் கட்சியிலும் ஒரு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்" என்று சொல்லிக் கொள்ளுவதற்கு உடைத்ததாயிருந்திருப்பதுமல்லாமல் ஆஸ்ட்ரேலியா பார்லிமெண்ட் கான்பரன்ஸ் என்கிற ஒரு முக்கிய கூட்டத்திற்கு இந்தியாவின் பொது மக்கள் சார்பாய் பொதுமக்கள் பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்டும் போயிருக்கிறார்.

 

இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவர் பார்ப்பன ரல்லாதார் என்கிற காரணத்தினாலேயே பிரயாணமும் இல்லை, உபசரிப்பும் இல்லை, அவரது படமும் இல்லை அங்குபோய் சேர்ந்தாரா? இல்லையா? அது விபரமும் இல்லை. அவர் ஆஸ்ட்ரேலியாவில் என்ன செய்கிறார் என்ற தகவலும் இல்லை. ஒன்றும் இல்லாமல் ஏதோ ஒரு அநாமதேயம் போல் கொஞ்சம் கூட கணக்கிலேயே சேர்க்காமல் வேண்டுமென்றே அடக்கி வைத்து அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள். தங்கள் சுயநலத்திற்காக "சுயராஜ்யக் கட்சிக்கு மற்றொரு மெம்பர் போட்டியில்லாமல் தெரிந்தெடுக்கப்பட்டார்" என்று சொல்லிக்கொள்ள மாத்திரம் அவரது பெயரை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். மற்றபடி வெகு ஜாக்கிரதையாய் விலகிக்கொண்டு வருகிறார்கள்.

 

இந்தப்படி இவர் நடந்து கொண்டு மற்றவர்களை மாத்திரம் வகுப்புத் துவேஷம் வகுப்புத் துவேஷம் என்று சொல்லிக் கொள்ளுகிற இந்தப் பார்ப்பனர்கள் தங்களது நடவடிக்கைகளையும் தங்களிடம் இருக்கும் வகுப்புத் துவேஷத்தையும் பிறத்தியார் அறிய மாட்டார்கள் என்று பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் முட்டாள்கள், இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்றவர்கள் பார்ப்பனரல்லாப் பத்திரிகைகளும் எல்லாம் சுத்தப் பயங்கொள்ளிகள் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு தாராளமாய் தங்கள் வகுப்புப் பிரசாரம் செய்கிறார்கள். இதிலிருந்தாவது வகுப்புத் துவேஷக்காரர்கள் பார்ப்பனர்களும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? அல்லது பார்ப்பனரல்லாதாரும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? என்று பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். அதோடு வரப்போகும் தேர்தலிலும் இப்பார்ப்பனர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுகிறோம்.

 

(குடிஅரசு 24.10.1926)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_27.html

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

 

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா? வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.

 

வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன்.

 

இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

 

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

 

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

 

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

 

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

 

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

 

(29.08.1973 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_28.html

பேரன்புமிக்க நாயுடுகாரு அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!

இன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும், உயர்திரு. காந்தியார் பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும் இந்த விழாவை நாயுடு அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். நாயுடு அவர்கள் மிக முக்கியமான காரியங்களில் விளையாட்டாக நடந்து கொள்வார். என்னையும் நடத்துவார். நான் நாயுடுகாருக்கு எப்போதும் கட்டுப்பட்டவன். அவர் என்னிடத்தில் மிக்க அன்பு கொண்டவர். நாயுடு அவர்கள் தன் உரையில் எனக்கும், காந்தியாருக்கும் பிறந்தநாள் விழா என்று கூறினார். காந்தியாருக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை வட துருவமும், தென் துருவமும் போன்றது.

 

நான் காந்தியாருக்கு முக்கிய சீடனாக அன்பிற்குப் பாத்திரமானவனாகவும் இருந்து வந்தவன். அவர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் உன்னைப் போல் 3-4 பேர்கள் இருந்தால் நாடு எவ்வளவோ முன்னுக்கு வந்து விடுதலை அடைந்துவிடும் என்று எழுதி இருக்கிறார். மற்றும் ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி சமாதான மாநாடு கூட்டி, சங்கர நாயர் காந்தியாரிடம் சட்ட மறுப்புப் போரை நிறுத்திவிட்ட பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது காந்தியார் சொன்னார், "சட்ட மறுப்புப் போரை நிறுத்துவது என் கையில் இல்லை ஆனால் அது தமிழ்நாட்டிலே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மனைவி, தங்கை ஆகியோர் கையில் உள்ளது" என்று கூறினார். அந்த அளவுக்கு நானும், எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங்களுக்காகச் சிறை சென்றவர்கள். பிறகு காந்தியார் மிகவும் பிற்போக்குவாதி என்பதையும், காங்கிரஸ் நம் மக்களுக்குக் கேடுபக்கக்கூடிய ஸ்தாபனம் என்பதையும் உணர்ந்து வெளியே வந்தவன் ஆவேன்.

 

"காந்தியார் சுயராஜ்யம் கேட்பது வர்ணாசிரம தருமத்தைக் காப்பாற்றவே" என்று கூறியவர் ஆவார். இன்றைக்கு அரசியல் ஒழுக்கம், நாணயம் கெட்டு ரொம்ப காலித்தனத்தில் இறங்கி இருக்கின்றது என்றால், இதற்கு வாத்தியார் காந்தியார் தான். அவர் ஆரம்பித்தது தான் வெடிகுண்டு. அவர் ஏற்படுத்தியது தான் சத்தியாக்கிரகம், சண்டித்தம், ரகளை முதலியவை எல்லாம். எனவே எனக்குக் காந்தியார் மீது மிகவும் வெறுப்பு ஏற்பட்டுக் கொண்டே வந்துவிட்டது. என்னுடைய தீவிர பிரச்சாரம் கண்டு ஒரு சமயம் என்னைப் பெங்களுருக்கு அழைத்து சமாதானம் பேசினார். நீ என்னமோ இப்படி மதத்தை முன்னோர் நடப்பை எல்லாம் கண்டித்துப் பேசிக் கொண்டு வருகின்றாயாமே? ஏன் என்று கேட்டார். நமது இழிநிலைக்கும், மடமைக்குக் காரணம் நமது கடவுள்களும், இந்து மதமும் தானே? இவைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை முதுகில் தட்டிக் கொடுத்துக் கூறினார். நீ வேறு மதம் மாறி இந்து மதத்தைப் பற்றி பேசினால் உனக்கு ஆதரவு இருக்காது. உன்னைப் பொறுத்துக் கொள்ளவும்மாட்டார்கள். இந்துமதத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கண்டித்துப் பேசினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று கூறினார்.

 

காந்தியார் கடைசிக் காலத்தில் நானே திருப்தி அடையும் அளவுக்கு மாறினார். அவர் கடைசியிலே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று அவர் வாயினாலேயே சொல்லிப் போட்டார். நாம் எந்தக் காரியத்திற்காக காங்கிரஸ் ஏற்படுத்தினோமோ அந்த சுதந்திரம் வந்துவிட்டது. இனி காங்கிரஸ் தேவையில்லை என்று கூறினார். பிறகு கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி என்று கூறினார். விஜயராகவாச்சாரி போன்றவர்கள் எல்லாம் அவரைக் கண்டித்தார்கள். அது மட்டும் அல்ல. அரசியலில் மதம் கூடாது அரசாங்கக் காரியங்களில் மதத்தைக் கலக்கக்கூடாது என்று துணிந்து கூறினார்.இப்படி அவர் கூறி 53 - ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் மிக விசனப்பட்டேன். அவருக்கு நல்ல புத்திவந்த காலத்திலா அவருக்கு இந்த கதி என்று கூறி வருந்தினேன். இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் காந்தியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் காந்தியைப் பாராட்டவில்லை. அவர் பேரைச் சொன்னால் பாமர மக்கள் ஏமாறுவார்கள் என்ற கருத்தில் அல்லாமல் வேறு இல்லை.

 

தோழர்களே! நாயுடுகாரு அவர்கள் என்னைப் பற்றி ஏதேதோ கூறினார். எறத்தாழ அவ்வளவும் உண்மையாகக்கூட இருக்கக்கூடும். என்னைக் கஞ்சன் என்று பலர் கூறுவது உண்டு. நமது நாட்டில் அநேகர் ஏதோ செலவு செய்ய வேண்டும் என்று செலவு செய்கின்றார்களே ஒழிய அவசியம் கருதிச் செய்வதில்லை. எனது தொண்டு மனித சமூதாயத் தொண்டு ஆகும். மனித சமூதாயத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றுதலும் இருக்கக்கூடாது. கடவுளிலோ, மதத்திலோ, சாதியிலோ, மொழியிலோ, நாட்டிலோ பற்று வைப்பவர்களால் எந்தவிதமான சமூதாயத் தொண்டும் செய்ய முடியாது. இப்படிப்பாடுபட்டால் வேகமாகப் பலன் கிட்டாவிட்டாலும் ஏதோ சிறிதளவாவது ஏற்பட்டே தீரும். என் கொள்கையில் இருக்கின்ற பெரிய வெற்றி என்ன என்றால் கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, சாதியைக் கண்டிக்கக் கூடிய எனக்கு இப்படி பெரிய மரியாதை ஏற்பட்டு இருக்கின்றது என்றால் அதுவே எனது கொள்கைக்குப் பெரிய வெற்றி என்று நானே திருப்தி அடைகின்றேன்.

 

எனது தொண்டு எப்படிப்பட்ட பிடிவாதக்காரர்களையும் ஓரளவுக்கு மாற்றித்தான் இருக்கின்றது. வெள்ளைக்காரன் இன்னும் 25 - ஆண்டுகள் இருந்து இருப்பானேயானால் இன்னும் எவ்வளவோ மறுதல்கள் எல்லாம் அடைந்து இருப்போம். உலகமே இன்றைக்கு விஞ்ஞான அதிசய அற்புதங்களால் எவ்வளவோ முன்னுக்கு வருகின்றது. ஆனால், மேனாட்டானின் விஞ்ஞானச் சாதனங்களை இந்த நாட்டுக்காரன் அனுபவிக்கிறானேயொழிய இவனாக ஒன்றும் கண்டுபிடிக்கவே இல்லையே. இந்த நாட்டில் தோன்றிய மகான் மகாத்மாக்கள், ஆனந்தாக்கள் எவனும் இந்த நாட்டின் சாதி இழிவின ஒழிக்கவே இல்லையே. நான் ஆரம்பத்தில் கூறிய பற்றுகள் அனைத்னைத்தையும் ஒழித்தவனால் தான் முடியும். தோழர்களே! இந்த நாட்டில் பணக்காரனுக்கு வீடு வந்தால் போதுமா? குச்சு வீட்டில் இருக்கின்றவர் கதி என்ன என்று எந்த அரசியல்வாதி சிந்திக்கின்றான். எனவே அடிதளத்தில் உள் மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேட முற்பட வேண்டும்.

 

(02-10-1968 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28-10-1968) (பெரியார் களஞ்சியம் தொகுதி 18)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post.html

தோழர்களே!

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 

தோழர்களே! இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா?அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.

 

ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?

 

முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார்கள். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார். ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளால் மேற்கண்ட பிரச்சனையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிற்க,ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவபேதம் மனிதத்தன்மையைப் பாதிக்கக் கூடியதல்ல. மனிதவர்க்கத்தில் புத்திக்குறைவு, பலக்குறைவு என்பது இயற்கையில் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஓன்றுபோலவே தான் இருக்கிறது. அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவே தான் அடைகிறார்கள். ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்ட குணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல் தான் பெண்களிலும் இருக்கலாம்.

 

மேல்கொண்டு ஏதாவது இருந்தால் அது செயற்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களைக் குழந்தைப்பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்து விட்டதால் ஏற்பட்டதே ஒழியவேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள். ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவமில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடைய அறிவு வீரம் பராக்கிரமம் எல்லாம் எப்படி இருக்கிறது?

 

வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களைச் சரியாய் செய்யவில்லையா? உபாத்தியார் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்யவில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்? ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே அவர்களுக்கு ஆண்மை, வீரம், பராக்கிரமம், சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?

 

இந்தியாவில் கிருஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்க தாளாரமாய் வசதி அளிக்க வேண்டும். 18-வயது 20-வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத்தகுந்த ஒரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்குத் தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். இவை செய்து விட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய் சுதந்திரம் கொடுக்க அலைய வேண்டாம். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று இம்மாதிரி கூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

 

இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள் தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல. இன்றைய வீட்டு வேலை இனி 20- வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும். உலக முற்போக்கு வீட்டு வேலைகளைக் குறைத்து வருகிறது. நம்முடைய அர்த்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது. கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல. கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப்போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம்.

 

பெண் அடிமையல்ல, அவளுக்கு நாம் எஜமானல்ல கார்டியன் அல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப்பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்கும் தான். ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்து விடும். ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.

 

(18.10.1935 - அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர் சங்க கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை, குடிஅரசு - 03.11.1935 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_02.html

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த ஊருக்கு (மதுக்கூர்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன் இந்த ஊரில் கழகம் சரிவர இயங்கவில்லை என்று விசுவநாதன் (பட்டுக் கோட்டை) கூறினார். இருந்து இருக்கலாம். இங்கு திராவிடர் கழகம் முயற்சி எடுத்துக் கொண்டாலும் மக்கள் ஆதரவு அவ்வளவாக ஏற்படுவது இல்லை. காரணம் கழகக் கொள்கைகள் அவ்வளவு கசப்பானவை. எங்களுடைய செய்திகளை இந்த நாட்டுப் பத்திரிகைகள் சரிவரவெளி இடுவதுமில்லை என்றார். சி.என். விசுவநாதன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்தார். தி.க. மாநில அமைப்பாளர் அது உண்மைதான். இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன் பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். காந்தியே பத்திரிக்கைக்காரனிடம் கெஞ்சியது எனக்குத் தெரியும்.

 

அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் - திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன. திலகர் செத்த பிறகு கூட காந்தியை எதிர்த்துக் கொண்டே வந்தார்கள். இந்த இரு கட்சிகளில் சென்னையில் ஒரு கட்சிக்குக் கஸ்தூரி ரெங்க அய்யங்கார் தலைவர்! கஸ்தூரி ரெங்க அய்யங்கார் முதலிய பார்ப்பனர்களுக்கு இராஜாஜியைப் பிடிக்காது. அந்தக் கோபத்தில் காந்தியையே தாக்க ஆரம்பித்து விட்டனர். இந்து பத்திரிகை போன்றது காந்திக்கு விரோதமாக இருந்தது கண்டு காந்தியே பயந்து கஸ்தூரி ரெங்க அய்யரையே அணுகிக் கேட்க வேண்டியதாகிவிட்டது. நான் காந்தி சீடனாக இருந்த காரணத்தினால் இவை எல்லாம் நன்கு தெரியும். நான் மட்டும் காங்கிரசில் இருந்த காலம் கொண்டு பத்திரிகைகளைக் கண்டித்து வருகின்றேன். காந்தியார் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சரணாகதி அடைந்து அவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையே விட்டார். எனக்குச் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு. நான் ஒரு இந்து. வருணா சிரமத்தில் நம்பிக்கை உடையவன். மோட்ச நரகத்திலும் முன்பின் ஜென்மத்திலும் (பிறப்பிலும்) நம்பிக்கை உடையவன் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு கஸ்தூரி ரெங்க அய்யங்காரிடமும் தூது அனுப்பிச் சிநேகம் பண்ணிக் கொண்டார். பிறகு தான் பத்திரிக்கைகள் ஆதரிக்கத்தொடங்கின. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் பத்திரிகைக்காரர்கள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.

 

நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல் எங்களைப் பற்றிக் கட்டுப்பாட்டாகவும் தவறாகவும் புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரேமாதிரியாகவே புளுகுவான். தோழர்களே! நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்றேன். வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள். பொப்பிலிராஜா ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக இருந்தாலும் கூடப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டு இருந்தார். கஸ்தூரி ரெங்க அய்யங்காருக்கு உடம்புக்கு அசவுக்கியம் என்றால் போய்ப் பார்த்து வருவார். இது அன்பால் அல்ல- தங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்ற பயத்தால் ஆகும். நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10.000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே!

 

நான் மக்களிடம் பேசும் போது கூட நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள் என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும் தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை.எங்கள் ஆள்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்பவர்களே ஒழிய பொதுவாழ்வு பேரால் வாழ்பவர்கள் அல்லர். இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்?

 

இந்தப் பத்திரிக்கைத் துறை அனைத்தும் பார்ப்பான் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தன. தமிழன் தலை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் (திராவிடர்) நடத்த முன் வந்தவர்கள் எல்லாரும் ஒழிந்தே போனார்கள். ஜஸ்டிஸ் கட்சி பத்திரிகை நடத்தியது- மாதம் ரூ.5000- நஷ்டத்தில் நடத்தியது. நஷ்டத்தைச் சரிக்கட்டத் தலைவர்கள் எல்லாரும் பகிர்ந்து கொள்ளுவார்கள். கடைசியில் நஷ்டத்தை ஈடுபண்ண முடியாமல் பத்திரிக்கை ஆஃபீஸ் ஏலத்தில் போனது. நான் தான் அந்த மெஷினை (இயந்திரம்) ஏலத்தில் எடுத்தேன். அதுதான் இன்று விடுதலையில் (நாளிதழ்) ஒடுகிறது.பத்திரிக்கைத் துறையில் பார்ப்பானுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் சுதேசமித்திரன் ஒன்று தான் இருந்தது. பிறகு தினமணி இந்தப் பத்திரிக்கைகள் தான் நல்ல மனிதனையும் பொதுவாழ்வில் அயோக்கியனாக ஆக்க உதவி வந்தன.காங்கிரசிலேயே சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் நம்பிக்கை இல்லாது தேசபக்தன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தது. நானும் ரூ.1000- கொடுத்து மேலும் 1000 -வசூல் பண்ணிக் கொடுத்தேன். திரு.வி. கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு அது நடந்து வந்தது. அவருக்குச் சம்பளம் 80- ரூபாய் தான். பார்ப்பனர்கள் அதனை வளர விடவில்லை. ஒழிக்க முயன்றார்கள். கல்யாண சுந்தர முதலியாரை ஒழித்து விட்டு வ.வெ.சு. அய்யர் என்ற பார்ப்பானைக் கொண்டு வர பாடுபட்டார்கள். கடைசியில் அந்தப் பத்திரிக்கை ஒழிந்தே போயிற்று. பிறகு நானும் பத்திரிக்கை ஆரம்பித்தேன் - என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிறகு நமது பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சிலர் தலை எடுக்கும் நிலை ஏற்பட்டது. நண்பர் ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரும் மிகவும் கஷ்ட நஷ்டப்பட்டார். இன்று இந்த நாட்டிலேயே அதிகம் விற்பனை ஆவது அவரது பத்திரிக்கை தான்! அது தலை எடுக்க ஆரம்பித்த பிற்பாடு - பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிப் போட்டது. இன்று அவருக்கு 6 – 7 பத்திரிக்கை (என்று) ஆகிவிட்டன. சென்னையில் ஒரு தினத்தந்தி திருச்சியில் ஒரு தினத்தந்தி மதுரையில் ஒரு தினத்தந்தி நடக்கின்றன. இவை அல்லாமல் மாலைமுரசு என்ற பேரில் திரு நெல்வேலியில் ஒன்று கோவையில் ஒன்று நடைப்பெறுகின்றன. இந்தப் பத்திரிக்கையில் வரும் செய்திகளை எல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

 

தினத்தந்தி மிகவும் கீழ்த்தரமான பத்திரிக்கைத் தான் என்றாலும் அது பார்ப்பானுடைய பத்திரிக்கைகளின் செல்வாக்கை அடக்கிப் போட்டதே என்று தான் ஆதரிக்கிறேன். எவனை எடுத்தாலும் காலையில் எழுந்திருந்த உடனே தினத்தந்தியின் முகத்தில் தான் விழிக்கின்றான். எனவே இன்று ஆதித்னாருக்கு 7- பத்திரிக்கைகள், கோவையில் இராம கிருஷ்ணன் என்ற நாயுடுவுக்கு "நவ இந்தியா" என்று கோவையில் ஒன்றும் நடக்கின்றன. கருமுத்து தியாகராய செட்டியாருக்கு தழிழ் நாடு என்ற பத்தரிக்கை மதுரையில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் தனிஅரசு பத்திரிகையானது மதுரையில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. அடுத்து கோசல்ராமுக்கு தினச்செய்தி என்ற ஒரு பத்திரிக்கை கண்ணீர்த் துளிகளில் கருணாநிதிக்கு ஒரு பத்திரிக்கை சம்பத்துக் கட்சிக்கு விடிவெள்ளி என்ற பத்திரிக்கை. இப்படி 20- பத்திரிக்கைகளுக்கு மேல் இன்று பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கைகள் ( நாளிதழ்கள்) நடக்கின்றன. இவை போடுகின்ற போட்டியில் பார்ப்பான் பத்திரிக்கைகள் இன்று ஓங்க முடியவில்லை.இப்படிப் பார்ப்பனர் அல்லாதவர் பத்திரிகைகள் நடந்து வருகின்றன என்றாலும் இவைகளும் நம்மைப் பற்றிப் பார்ப்பானுக்குப் பயந்து நம் செய்திகளை இருட்டடிப்பு செய்வதும் கட்டுப்பாடாகத் தவறான செய்தியைப் போடுவதிலும் தான் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இவை பற்றிக் கவலைப்படுவது இல்லை.

 

நாங்கள் மற்றக் கட்சிக்காரன்கள் மாதிரி மக்களிடத்தில் ஓட்டுக்கோ வேறு தயவுக்கோ எதிர் நோக்கி இருக்காத காரணத்திலும் எங்கள் சொந்த வாழ்வில் எவனும் குற்றம் (குறை) சொல்ல முடியாத அளவு (நாங்கள்) நடந்து வருவதனாலும் எங்கள் மீது எவனும் குற்றம் சொல்ல முடியவில்லை. மாறாக நாங்கள் தமிழ் காங்கிரசை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கின்றோமே - இதனைப் பற்றி உங்களிடத்தில் தப்பான முறையில் செய்தி வெளியிட்டுக் காட்டுவான். நான் கழக ஆதரவாளர்கள் அனுதாபிகள் என்பவர்களை அவர்கள் வேண்டுமானால் அவர்கள் இஷ்டப்பட்டால் - காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியதை தான் திராவிடர் கழகத் தோழர்களிடையே காங்கிரசில் சேரச் சொன்னதாகப் பெரிய எழுத்தில் கட்டுப்பாடாக வெளியிட்டு உள்ளன.நம் தமிழர்கள் நடத்தும் பத்திரிகைகள் என்பவைகள் கூட உண்மைக்கு மாறாக வெளியிட்டு உள்ளன. நாங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் பற்றிப் பேசுகின்றோம். இவற்றைப்பற்றி நான்கு வரி போடமாட்டான்.

 

வடநாட்டில் - பார்லிமெண்டில் ஓர் ஆள் நாங்கள் இராமனையும் சீதையையும் குறை கூறிப் பேசுவதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டித்துப் பேசியதைக் கொட்டை எழுத்துகளில் போட்டு இந்தியா எங்கும் உள்ள மக்கள் அறியும்படிச் செய்கின்றன. ஆனால் இராமன் சீதை விபச்சாரி என்பதற்கு நாங்கள் எடுத்துக்காட்டும் அநேக ஆதாரங்கள் பற்றி ஒரு பத்திரிக்கையில் கூடப் போடமாட்டார்கள். தோழர்களே! உலகத்தில் மற்ற நாட்டில் எல்லாம் அந்த நாட்டுப் பத்திரிகைகள் அந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் - அந்த நாட்டு மக்களை அறிவாளிகள் ஆக்கவும் நல்வழிப்பத்தவும் பயன்படுகின்றன. இந்த இந்திய நாட்டுப் பத்திரிக்கைகள் தான் மனிதனை மடையனாகக் காட்டுமிராண்டிகளாக ஆக்கப் பயன்படுகின்றன. இந்த நாட்டில் பொது வாழ்வின் பேராலும் மக்கள் மத்தியிலும் பொது ஒழுக்கக் கேட்டுக்குப் பெரிதும் இந்த நாட்டுப் பத்திரிக்கைகளே பயன்படுகின்றன. இந்த நாட்டுப் பத்திரிக்கை ஸ்தாபனங்கள் எல்லாம் தேசத்துரோக ஸ்தாபனங்கள் என்று கருத வேண்டியவைகள் ஆகும்.நான் கூறுவது உண்டு.

 

இந்த நாட்டினைப் பிடித்துள்ள 3 பேய் - அய்ந்து நோயில் இந்தப் பத்திரிக்கையும் ஒரு நோய் என்றே கூறி வந்திருக்கின்றேன்.பார்ப்பனர்கள் பம்பாய் டெல்லி (என்று) எங்கு எடுத்துக் கொண்டாலும் பத்திரிகைத் துறையையைத் தங்கள் கையிலேயே வைத்து இருப்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் பத்திரிகை என்ற ஆயதத்தைக் கொண்டே இந்த நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டே வந்து இருக்கின்றனர். எவனை எடுத்துக் கொண்டாலும் பொதுவாழ்வின் பேரால் ஈடுபடுபவர்கள் இவர்களுக்கு (பத்திரிக்கைகளுக்கு) அடக்கியே- அஞ்சியே வந்து இருக்கின்றனர்.தோழர்களே! நாங்கள் காமராசரை ஆதரிப்பது பற்றி இந்தப் பத்திரிகைகள் ஆத்திரப்படுகின்றன. மெயில் பத்திரிகை காமராசர் ஆட்சிக்கும் காங்கிரசிற்கும் நாட்டில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்தக் காமராசரைத் திராவிடர் கழகத்துக்காரர்கள் போன்ற வகுப்புவாதிகள் ஆதரிக்கிறார்கள். இதன் காரணமாகக் காங்கிரசுக்குச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசுச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசு தோற்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்? ஏன் இந்தக் காமராசர் திராவிடர் கழகத்துக்காரர்களைப் பார்த்து உங்கள் பிரச்சாரம் எங்களுக்குத் தேவை இல்லை. ஆதரிக்க வேண்டாம் என்று கூறக்கூடாது என்று எழுதியது.

 

இப்படி மெயில் ( ஆங்கில நாளிதழ்) பத்திரிக்கை எழுதிய உடனே இந்தப் பத்திரிகையினைக் கண்டித்து ஊர்வலம் நடத்திப் பீச்சில் (சென்னை – கடற்கரையில்) பெரிய கூட்டம் போட்டோம். இந்தச் சேதி தெரிந்து எனது வீடு தேடி அதன் ஆசிரியர் வந்து தவறாக எழுதி விட்டோம் - இனிமேல் அப்படி எல்லாம் ஏற்படாது என்று கேட்டுக் கொண்டார். இந்த நாட்டுப் பத்திரிகைகள் நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஏன் ஆதரிக்கின்றேன். காமராசர் ஆட்சியில் இன்ன இன்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புள்ளிவிவரங்களுடன் எடுத்துப் போட்டுப் புத்தகம் போட்டு இருக்கின்றோம். இவற்றைப் பற்றி எல்லாம் எழுதமாட்டார்கள். அதுபோலவே ஆச்சாரியார் ஆட்சியில் அவர் பண்ணிய கேடுகள் பற்றி எல்லாம் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி எதிர்க்கின்றோம். இவற்றைப் பற்றியும் ஒருவரிகூடப் போடமாட்டார்கள். இந்தக் காங்கிரஸ்காரர்களுக்கும் தாங்கள் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லை.

 

நாங்கள் இன்ன காரியம் செய்து உள்ளோம் - கல்வியில் உத்தியோகத்தில் இன்ன இன்னபடித் தமிழர்களுக்குச் செய்து இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது. சொன்னால் அது பார்ப்பானுக்கு விரோதமாக ஆகிவிடும். எனவே அவர்களால் எடுத்துச் சொல்ல முடியாது. நாங்கள் தான் எடுத்துச் சொல்கின்றோம். காமராசருக்கு நாம் இவ்வளவு நன்மைகளி செய்து இருக்கிறோம்? என்று அதிசயமாக இருக்கும். ஆச்சாரியாரின் கொடுமைகள் பற்றியும் எடுத்து நாங்கள் தான் பேசுகின்றோம். ராஜாஜிக்கும் நாங்கள் எடுத்துக் காட்டுவதில் இருந்து நாம் இவ்வளவு கொடுமைகளா செய்து இருக்கின்றோம் என்று வருத்தப்படுவார்.

 

(06-09-1961 அன்று மதுக்கூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 01-10-1961)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_03.html

சூத்திரர்களுக்குத் திருமணம் கிடையாது. எனவே சூத்திரனுக்குத் திருமணம் பார்ப்பான் செய்து வைக்க வேண்டுமானால் பூணூல் போட்டுத் தான் செய்து வைப்பான். காரணம் நான் முன் சொன்னபடி நாம் சூத்திரர்கள். நமக்கு சாஸ்திரப்படி திருமண உரிமை கிடையாது. கீழ்ச்சாதிக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தால் பார்ப்பானுக்கு தோஷம் என்று வேறு எழுதி வைத்து இருக்கிறான். அதாவது உரிமை இல்லாதவனுக்கு உரிமை செய்து வைத்தால் பார்ப்பானுக்குத் தோஷம் ஆகும்.சூத்திரன் படிக்கக் கூடாது. சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பார்ப்பான் நரகத்துக்குப் போவான் என்று மனுநீதி கூறுகின்றது.இடைக்காலத்தில் தான் நான்காம் சாதியாருக்கு திருமணச் சடங்கு புகுத்தப்பட்டது. முன்பு மேல் மூன்று வருணத்திற்கு மட்டும் தான் இருந்து வந்தது.தமிழனுக்கு பழைமையான நூல் என்று பெருமை பாராட்டுகின்றார்களே அந்தத் தொல்காப்பியத்திலேயே உள்ளது.பார்ப்பான் தனது வருமானத்தைப் உத்தேசித்தே நமக்குத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்கிறான். நாமும் மேல் சாதிக்காரன் வந்து பண்ணினால் தான் பெருமை என்று எண்ணி அழைக்கின்றோம். இதன் மூலம் இழிந்த சாதி என்பதை ஒத்துக் கொள்ளுகின்றோம் என்பது தானே பொருள்.சமூதாயத்துறையில் நம் இழிநிலைக்குக் காரணமான கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். மணமக்கள் பகுத்தறிவுடனும், சிக்கனமாகவும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடனும்- வாழ வேண்டியது அவசியம்.

 

(16-09-1962- அன்று இராமநத்தம் திருமணத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- “விடுதலை” – 26-09-1962

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_04.html

பேரன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! மணமக்களே!

நாம் ஏன் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றோம்? முன்னோர்கள் முறையினை விலக்குகிறோம் என்றால் நம் ஜாதி இழிவு ஒழிக்கவும், கடவுள் மதம் சாஸ்திரங்கள் பேரால் கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், பெண்ணடிமையினை நீக்கவும், ஆணுக்குப் பெண் அடிமை அல்ல, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை- நிலைநாட்டவுமே இத்தகைய திருமணமுறையைக் கையாளுகின்றோம். இவற்றிற்காகப் பாடுபட முன் வந்தவர்கள் நாங்கள் தான்.

 

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது. இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ, பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும் மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள். இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள் நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம். இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன. மற்றப்படி நம் தமிழ்நாட்டில் நடைப்பெறும் திருமணச் சடங்குகள் எல்லாம் சாதியைப் பாதுகாக்க சாதிக்கு ஒருமுறையாக ஏற்பட்டுள்ளது. தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று ஆக்கி வைக்கப்பட்டவர்கள் வரவர மேல்சாதிக்காரர்களைப் பார்த்து இப்படிப்பட்ட அர்த்தமற்ற சடங்குகளை எல்லாம் கைக்கொள்ளவும் முற்படுகின்றனர்.

 

இம்மாதிரியான திருமணங்கள் நடைபெற நாங்கள் முயற்சி எடுத்துக் கொள்ளாமலும் சுயமரியாதையைப் பிரச்சாரங்கள் நடத்தப்படாலும் இருந்து இருக்குமானால் பெண்கள் மிகமிகக் கேவலமான நிலையிலேயே வைக்கப்பட்டு இருப்பார்கள்.பெண்களுடைய இழிநிலை அடிமைத் தன்மை இவற்றைப் போக்க இந்த நாட்டில் எந்த மகானோ, மகாத்மாவோ, அவதார புருஷர்களோ- கவலை எடுத்துக் கொள்ளவே இல்லை. மாறாக இவற்றை நிலைக்க வைக்கவே பாடுபட்டு வந்து இருக்கிறார்கள்.நமது புராணங்கள் எல்லாம் கூட நமது மடமையையும், இழிவையும் பாதுகாக்கவே ஏற்பட்டவையாகும். நம் கடவுளின் அவதாரங்கள் எல்லாம் மக்கள் அறிவு பெற்று விழிப்படையாமல் மடைமையிலும், இழிவிலும், ஆழ்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டனவாகும்.

 

இந்த நாட்டில் இந்தக் கடவுள் மதம் சாஸ்திரம் இவற்றை எல்லாம் எதிர்த்து ஒர் அளவு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் ஒன்றே தான்.எங்கள் இயக்கம் தோன்றிய பிறகு நாங்கள் சமூதாயத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கூறினோமோ, எங்கள் செங்கள்பட்டு மாநாடு போன்றவற்றில் என்ன தீர்மானங்கள் எல்லாம் போட்டோமோ, அவற்றில் பகுதிக்கு மேல் இன்று சட்டமாக்கி அமலிலும் இருக்கின்றதைக் காண்கிறோம்.

 

பலதார மணம் இன்று சட்ட விரோதம் செல்லுபடியாகாது.ஒர் ஆண் ஒரு பெண்ணுடன் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று அமலில் இருப்பதைக் காண்கிறோம்.பெண்களுக்கு தகப்பன் சொத்தில் ஆண்களைப் போல பங்கு இன்று இருப்பதைக் காண்கிறோம்.பெண்களும் ஆண்களைப் போல அரசியல், உத்தியோகம், முதலியவற்றில் பங்கு பெற்று வருவதை நாம் இன்று காண்கிறோம்.

 

(07-06-1962- அன்று மேலவாளாடி திருமணத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை – 09-06-1962)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_5952.html

அவ்வாறு அவர்களை (தமிழர்களை) முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான். உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்! இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம். குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.

மனித வாழ்க்கையில் இன்று நாம் மடமை நிறைந்தவர்களாக இருக்கிறோம். அப்படி இருக்கக் காரணம் நமக்கு நோய் வந்தது தான். பார்ப்பான் புகுத்திய இந்த நோய் நம்மை ஷயரோகக்காரனாக ஆக்கி விட்டது. எவனும் தைரியமாக வெளியில் வந்து கூறமுடியவில்லை. அப்படிப் பேசினாலும் உடனே அவனைப் பார்ப்பான் ஒழித்துக் கட்டி விடுகிறான். பார்ப்பானுடைய தயவிலே தான் வாழ வேண்டியுள்ளது. கலியாணம், கருமாதி என்று பிறப்பு முதல் இறப்பு வரை நடைப்பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லாத் துறைகளிலும் பார்ப்பான் புகுந்து விடுகிறான். பத்து வருடங்களாக நாங்கள் போர் நடத்தி வருகிறோம்.

நல்ல தமிழ் இருக்கையிலே தமிழ் நாட்டில் தெலுங்கு சங்கீதம் ஏன் இருக்க வேண்டும்? எதற்காக இருக்கணும் என்று கேட்டுப் போராட்டம் துவக்கினது நாங்கள் தான். நம்மிலேயே சில பேர் என்ன சங்கீதத்திலே கூடவா வகுப்பு வாதம் பேசுவது? என்று எங்களைக் கிண்டலும், கண்டிப்பும் செய்தார்கள். எப்படியோ நமக்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. சமூதாயத் துறையிலும் நமக்கு இழிவு தேடும் மற்ற வகையிலும் கேடுகளும் இருக்கின்றன. அப்படியே தான் காலம் கடந்து போகிறதே தவிர ஏன் இப்படி என்று கேட்க ஆள் இல்லையே? நாங்கள் தான் எவனுடைய நிஷ்டுரம் (இடையூறு) தொல்லை வந்தாலும் சரி வரட்டும் என்று துணிந்து என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து நாம் கூறுவோம். கேட்டால் கேட்கட்டும். விட்டால் விடட்டும் என்று கருதி பாடுபட்டு பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இந்த வேலைக்கு வேறு யாரும் முன் வராததற்கும் நாங்கள் ஒருவர் முன்வந்ததற்கும் காரணங்களை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் இந்த வேலைக்கு வராததோடு மட்டுமல்ல! எங்களை முன்னோர்கள் சொல்லுக்கு கட்டளைக்கு மாறானவர்கள் நாஸ்திகர்கள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். தன்னையும் வேசி மகன், சூத்திரன் என்று கூறுகிறானே! என்று சிறிதும் கவலையில்லாமல் மானம், ஈனம் அற்றுப் போய் அவனும் பார்பானுடன் சேர்ந்து கொண்டு தன் வயிறு வயிறு கழுவ, பொறுக்கித் தின்ன, அவனது அடிமையாக ஆகி நமக்குத் தொல்லையும் தந்து வருகிறான். இப்படி 2000-3000 வருஷங்களாகவே இந்நிலை இருந்து வருவதால் தான் நாம் இன்னும் வளரவில்லை. நம் நாட்டில் நாம் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ஒலிபெருக்கி ரயில் கப்பல் மின்சாரம் போன்றவற்றை தினமும் அனுபவிக்கிறோம். அவன் தினமும் ஒவ்வொன்றைப் புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் நம்மவன் குழவிக் கல்லைத் தவிர வேறு என்ன கண்டு பிடித்து இருக்கிறான்? ஏதாவது கண்டுப்பிடித்தான் என்று கூற முடியுமா?

காலையில் ஏறினால் மாலையில் பம்பாய், மறுநாள் லண்டன், அமெரிக்கா என்று செல்ல வழி கண்டுப் பிடித்து விட்டான். ஏழரை மணிநேரத்தில் 16 தடவைகள் உலகத்தைச் சுற்றுகிறான். சந்திரமண்டலம் வரை செல்கிறான். தனிப்பட்ட மனிதன் ஆகாயத்திலே பறக்கிறான். இந்த அளவுக்கான சாதனங்களை அவன் கண்டுப் பிடித்ததோடு அல்ல. மேன்மேலும் பல அற்புதங்களைக் கண்டுப் பிடிக்க ஆராய்ச்சியும் செய்து வருகிறான்.ஆனால் நம்மவனோ தகப்பனைக் கொன்று விட்டுத் தாயிடம் படுத்த பாவம் தீர எந்தக் குளத்தில் குளித்தால் பாவம் தீரும் என்று ஆராய்ந்து புராணம் எழுதுகிறான். எப்படியோ பார்ப்பான் நம் சமூதாயத்தை நாசம் செய்து விட்டான். சாஸ்திரப்படி நமக்கு திருமணம் கல்யாணம் கிடையாது. அது மாத்திரமில்லை. நாம் எல்லாரும் சூத்திரர்கள்- வேசி மகன். நம் தாய்மார்கள் எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கிறான்.

ஆதாரங்கள் இருக்கின்றன. கடவுள் புத்தகங்களை, அவதாரங்களை, புராணங்களை- எல்லாம் எடுத்தால் அசிங்கம் இல்லாதது ஒன்று கூட இல்லை. இவற்றை எல்லாம் எடுத்துக் கூற ஒரு புலவனும் முன் வரவில்லை. பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பவன் தான் பெரிய புலவனாக இருக்கிறான். "திரவுபதி" என்பவள் 5- பேருக்கு மனைவியாக இருந்தாளாம். அதுவும் பத்தாமல் ஆறாவதாக கர்ணன் என்பவன் மீது வேறு ஆசைப்பட்டாளாம். அவள் பதிவிரதையாம்! பார்ப்பான் கட்டுப்படாகக் கதை எழுதி வைத்திருக்கிறான். ஆனால் நம்மவன் அப்படி இருந்தால் "குச்சிக்காரி" என்று கூறுவான்.மற்றும் இராமன் சீதை இவர்களைப் பற்றி எவன் உண்மையைக் கூறியிருக்கிறான். இராமன் புரோகிதனுக்கு சினையாகிப் பிறந்தவன். அப்படித்தான் புராணத்திலே எழுதியிருக்கிறான். ஒழுக்கம் என்பதே அயோக்கியதனமும், நடத்தையில் பித்தலாட்டமும், புரட்டும் தான் உள்ளது. வால்மீகி இராமாயணத்திலே பார்த்தால் தெரியும். சீதை ஒரு பெரிய "காலாடி பொம்பளை" என்று கூறும் தன்மையில் தான் இருந்திருக்கிறாள்.இந்தச் சர்க்காருக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என்றே கூறலாம். சிறிதாவது பொறுப்பு இருந்தால் இந்த மாதிரியான கதைகள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்காமல் தடை செய்திருக்க வேண்டாமா? இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் திருட்டுப் பசங்கள் தான். பார்ப்பானுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்து, வயிறு கழுவி, பெருமை சம்பாதிக்கணும் என்று கருதித் தான் அதற்கு ஏற்ப வாழ்ந்தர்களே! தவிர, மக்களின் உண்மையான நலன் கருதி மக்களுக்குள்ள இழிவு, கேடு ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூட நினைக்கக் கூட இல்லை.

இந்த "மாடாதிபதிகள்" என்பதே பார்ப்பான் என்பவனுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது தான். ஆனால் பார்ப்பான் காலில் கடைசியில் வீழ்ந்து விட்டான். தலை எடுக்கும் போது நம் பெயரால் தலை தூக்குவது பிறகு பார்ப்பான் காலில் விழ்ந்து விடுவதுமாகவே இருக்கிறார்கள்.கல்யாணம் என்ற வாத்தையே தமிழ் வார்த்தை அல்ல. விவாகம் என்றால் அதுவும் வடமொழி தான். ஏன் தமிழில் இல்லை என்றால் கல்யாணம் என்பது பார்ப்பானுக்குத் தானே ஒழிய தமிழனுக்கு சூத்திரனுக்குக் கிடையாது. அதனால் தான் அதற்கேற்ற வார்த்தையும் தமிழில் இல்லை. மிகவும் சிறப்பான முறையில் நடத்துபவர்கள் கன்னிகாதானம், விவாகோற்சவ பத்திரிக்கை, தாரா முகூர்த்தம் என்று போட்டு நடத்துவார்கள். இவை எல்லாம் வட மொழிதான்! தமிழ்ச் சொற்கள் இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு அவனுடைய இல்வாழ்க்கையில் இன்றியமையாது நடைப்பெறும் முக்கிய நிகழ்ச்சிக்கு அவனுடைய தாய்மொழியில் பெயர் இல்லை என்றால் என்றால் என்ன அர்த்தம்?

திருமணம் என்று கூறுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அழகிய இடம் என்று தானே பொருள்படும்? நமக்குப் பார்ப்பான் வந்து கல்யாணம் செய்து விடுகிறான்- கருமாதி செய்து வைக்கிறான் காசுக்காக! நமக்கு செய்து விட்டுச் சென்ற பிறகு அதற்கு – அதாவது நமக்குச் செய்ததற்காக அவன் பிராயச்சித்தம் செய்து கொள்கிறான். சூத்திரனுக்கு இவையெல்லாம் கிடையாது. தமிழனுக்கு நடைபெறும் திருமணம் போன்ற இன்றியமையாத காரியங்களும் திவசம் சிரார்த்தம், கருமாதி போன்றவையும், வடமொழியில் இருப்பதன் காரணம் தமிழனுக்கு… சூத்திரனுக்கு இவை எல்லாம் கிடையாது என்பதையே ருசுப்படுத்தும். பார்ப்பான் வந்து தான் இவற்றை நம்மிடையே புகுத்தியுள்ளான். அவன் வந்து நமக்கு சடங்கு செய்ய வந்தவுடன் நம்மை முதலில் பார்ப்பனனாக ஆக்குவான். நமக்குப் பூணுலூம் மாட்டி அதற்கு மந்திரம் செய்து அதற்குப் பிறகு தான் நமக்குத் திருமணம் செய்து வைப்பான்! சடங்கு முடிந்ததும் பூணூலை அவிழ்த்து ஆற்றில் போட்டு விடு என்பான்.

மேலோர் மூவர்க்கும் அதாவது பார்ப்பனர்- சத்திரியர்- வைசியர் மூவர்க்கும் உள்ளவற்றை கீழோராகிய சூத்திரர்க்கும் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். எதற்காக என்றால் காசுக்காக. எப்படியோ திருமணம் என்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சரித்திர ஆதாரப்படி கூறட்டும். நான் படித்த புலவர்களையே கேட்கிறேன். அம்முறைக்கு நம்மிடம் என்ன பெயர் வழங்கி வந்தது? என்ன முறை இருந்தது? இருக்க வேண்டுமே ஒரு முறை. .. இருந்ததா? இருக்கிறதா? கூறுங்கள் பார்க்கலாம். தமிழர்களுக்குத் திருமண முறை எது என்ற ஆதாரம் சொல்ல முடியுமா? புலவர்களைக் கேட்டால் புராணத்தைக் காட்டுவார்கள். பரமசிவனுக்கும்- பார்வதிக்கும் நடந்தது, இராமனுக்கும்- சீதைக்கும் நடந்திருக்கிறது என்பார்கள். நேற்று நான் மாயவரத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் பேசிய போது இதைத் தான் கூறினேன். தமிழனுக்குத் திருமண முறை என்று இருந்ததா என்றால் எதிலேயும் தென்படவில்லையே என்று.

அடுத்துப் பேசிய தவத்திரு "குன்றக்குடி அடிகளார்" அவர்கள் திருமண முறை இருந்தது. அகநானூறு புறநானூற்றைப் பார்த்தால் தெரியும் ஒத்த காதல் நடந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலே கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடந்திருக்கிறது என்று கூறினார். இந்தப் புராணங்கள் எல்லாம் நமக்கு ஏது? அதுவும் எப்போது வந்தது? எப்படி வந்தது? 1000-2000-3000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்கள் தானே இவை? நாம் 10 - ஆயிரம் 20- ஆயிரம் வருஷத்திற்கு முந்திய மக்கள் ஆயிற்றே! நமக்கு இது இப்போது எப்படி பொறுந்தும்? 20 - ஆயிரம் வருஷங்களுக்கு முன் என்ன முறை நமக்கு இருந்தது என தெரிய வேண்டாமா? இம்முறைக்குக் கூறப்படும் வார்த்தைகளிலாவது சிறிதாவது மரியாதை இருக்க வேண்டாமா?

வாழ்க்கை ஒப்பந்தம் என்ற ஒரு வார்த்தையும், முறையும் ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை வேலைக்காரியாக அடிமையாக பிள்ளை பெறும் ஒரு ஜந்துவாக சேர்ப்பது என்பது தான். எல்லா முறைகளும் பெண்களை அடிமை ஆக்குகிற முறை தான். "கன்னிகாதானம்" என்பார்கள். கன்னிகாதானம் என்றால் கன்னியை அதாவது பெண்ணை ஓர் ஆணுக்குத் தானமாகக் கொடுத்து விடுவது ஆகும். இதை இப்போது மணமக்களாக இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?நாம் தமிழர்கள். இந்தத் தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகள். நமது மொழியான தமிழ் மொழிச் சொல்லை விட்டு விட்டு வேறு ஒருவனுடைய மொழிச் சொல்லை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவ்வாறு அவன் சொல்லை ஏற்றுக் கொண்டால் நாம் எல்லோரும் வேசி மக்கள் என்று சொல்லுகின்ற அவனது சம்பிரதாயங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிவிடுகிறோமே?

"கன்னிகாதானம்" என்ற சொல் வட மொழிக்காரனுடையது. அதனுடைய பொருள் பெண்களை ஜீவனற்ற ஒரு பொருளாக வைத்து தானமாக்கிக் கொடுப்பதாகும்.தாராமுகூர்த்தம் என்றால் பெண்களை ஆணுக்குத் தாரை வார்த்து தானமாக் தருவது என்பதாகும். தானம் என்ற சொல் தமிழிலேயே இருக்கிறதா என்றால் இல்லை. பிச்சை என்று தான் இருக்கிறது. தானம் வாங்கிய பொருளை தம் இஷ்டம் போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதோடு மட்டுமல்ல. தாரை வார்த்து வாங்கியவன் வாங்கிய பெண்ணை யாருக்கு வேண்டுமானலும் கொடுத்து விடலாம். அடகு வைக்கலாம். அதற்கெல்லாம் அவனுக்கு உரிமை இருக்கிறது. ஏன் என்று யாரும் கேட்க முடியாது? இவ்வாறாக புராண இதிகாசங்களில் நடந்திருக்கிறது.

தருமன் திரவுபதியைப் பணயம் வைத்து சூதாடியிருக்கிறான். அரிச்சந்திரன் தன் மனைவியை வேறு ஒருவனிடம் விற்று இருக்கிறான்.இயற்கை நாயனார் என்பவர் தன்பெண்டாட்டியை ஒரு பரதேசியிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். மற்றும் பெண்களைக் கணவன் எந்தவிதக் கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றவனோ பெண்ணோ ஏன் என்று கேட்கக் கூடாது. திருமணம் நடக்கையிலேயே தாசியின் மேல் ஆசைப்பட்டு அவளுடன் போய் விட்டான் கோவலன். திரும்பி வரும் வரையில் கண்ணகி தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. உப்பில்லாத உணவு உண்டு பாயில் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அப்படியே இருந்தாளாம்! அந்த ஸ்தானத்தில் ஓர் ஆணை வைத்துப் பார்த்தால் அப்படி நடக்குமா? மனைவியானவள் கணவனை விட்டு வேறு ஓர் ஆணுடன் போய் விட்டால் கணவன் அவள் வரும் வரையில் இப்படி உப்பில்லாத உணவு சாப்பிடுவானா? பகவான் பார்த்து நம்மிடம் நம் மனைவியைக் கொண்டு வந்து சேர்க்கும் வரை நமக்கு சுகம் தேவையில்லை என்று கவலையுடனிருப்பானா? இருக்க மாட்டான். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று சிலப்பதிகாரத்திலும் கூடக் கூறப்பட்டிருக்கின்றது.கண்ணகி கதையை உதாரணம் காட்டிப் பேசுகிறவர்களுக்காகத்தான் இதைக் கூற ஆசைப்பட்டேன்.

ஆண் உயர்வு – பெண் தாழ்வு என்று தானே ஆகிறது. பெண் ஆணுக்கு அடிமை. கணவனால் விரட்டப்பட்டு பிறகு ஜீவனாம்சம் என்று கோர்ட் மூலம் கேட்டால் கூட இவள் "அவுசாரியாக"ப் போய் விட்டாள். ஆதலால் இவளுக்கு வாழ்க்கைப்பணம் கிடையாது என்பான்.பெரிய இலட்சாதிபதி ஆனாலும் ஜீவனாம்சம் என்னும் போது விலைவாசி பார்த்து மாதச் செலவுக் கணக்குப் பார்த்து அதன்படி தான் தருவான். கல்யாணம் என்றால் சாதி பார்த்து, புராணம் பார்த்து, வகுப்பு பார்த்து, காலம் நேரம் பார்த்துத் தான் நடக்கும். நம்மை நிரந்தர அடிமையாக்கும் நிகழ்ச்சியின் தத்துவப்படி தான் நடக்கும்.

நாமே பார்ப்பானை உயர் சாதி என்று ஒத்துக் கொள்கிறோம். அவர் அய்யர் மேல்சாதி. அவர் நம் வீட்டில் சாப்பிட மாட்டார் என்று கூறி அதற்குப் பதிலாக நம் வீட்டில் திருமணம் திவசம் செய்ய வரும் அய்யருக்கு நாம் பச்சை அரிசி, பச்சை காய்கறி, நெய், பால், தயிர், இலை இவற்றையெல்லாம் தந்து உங்கள் வீட்டில் போய் நீங்கள் சமைத்துச் சாப்பிடுங்கள் என்று தருகிறோம். அவன் வந்து நெருப்பை மூட்டி ஓமம் என்று வளர்க்கிறான். அதோடு விடுகிறானா என்றால் இல்லை. அந்த நெருப்பிலே நெய்யை வார்க்க விடுகிறான். நமக்கு சாப்பாட்டிற்கு கலப்பட நெய் போடுவார்கள். ஓமத்தில் ஊற்ற பார்ப்பான் கேட்டால் அசல் நெய் தருவார்கள்!

அரசாங்கம் யோக்கியமான அரசாங்கமாக இருந்தால் இவர்களையெல்லாம் உணவுப் பொருள்களை – பண்டங்களை நாசம் செய்கிறார்கள் என்று பிராசிகியூஷன் (குற்ற வழக்கு) செய்து தண்டித்திருக்க வேண்டும். மற்றும் பானையைக் கொண்டு வந்து ஆள் உயரம் அடுக்குவது போன்ற பல மூடத்தனமான காரியங்களைச் செய்வான். புதிய முறையில் இவை எல்லாம் கிடையாது. எதற்காக நம்மில் சாதி தொடர்ந்து வரணும்? கல்யாணம், கருமாதி போன்ற சமூதாயத்துறையில் சாதியைப் புகுத்துகிறான். இந்த சாதி ஒழிய வேண்டுமானால் சாதி வளரும் துறைகளை நாம் ஒழித்தால் தானே சாதி ஓழிப்பு? சாதியை வளர்க்கும் கடவுள்- மதம்- சாஸ்திரம்- புராணம்- பார்ப்பான்- அரசாங்கம் எதுவுமே வேண்டாம் எங்களுக்கு (தமிழர்களுக்கு) போடா முட்டாளே! என்று தூக்கி எறிந்து உடைத்தால் தானே சாதி ஒழிப்பு? இந்தத் தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருக்கிறதே. இதை யார் கட்டியது? யார் வீட்டுப் பணம்? இவற்றிற்கு உள்ள நிலங்கள், நகைகள் எல்லாம் யார் வீட்டு உடைமை? நம்முடையது தானே! பார்ப்பான் காசு ஒரு செப்புகாசாவது இருக்கிறது என்று கூற முடியுமா? இவ்வளவும் செய்து வைத்த நம்மைப் பார்த்து பார்ப்பான் "பிள்ளைவாள் உள்ளே வராதேயும், வெளியிலேயே நில்லுங்கோ தீட்டுப் பட்டு விடும். இது கர்ப்பகிரகம்" என்று கூறுகிறான். பார்பான்கிட்டே இல்லாத "துர்நாற்றமா" நம்மிடையே இருக்கிறது? தினம் 6 - வேளை பூசை செய்து சோறு படைக்கிறாயே அது பகவானா தின்னுது? கடவுளா சோறு கேட்குது? பார்ப்பான் வயிறு தானே வெடிக்குது? உலகத்தையே பெரிதும் நாசம் செய்து விட்டான் பார்ப்பான்.

இந்தப் பார்ப்பானின் கொடுமையை எதிர்த்து புத்தர் ஒருவர் தான் 3000 -ஆண்டு காலத்தில் தோன்றினார். அவரையும் இந்தப் பார்ப்பனர்கள் ஒழித்துக் கட்டி விட்டனர். புத்தரை ஒழித்துக் கட்டி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், சைவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தயவை நாடி அவர்களுக்கு ஆதரவாக இருந்து சென்றவர்கள் தான். புத்தருக்குப் பிறகு எங்களைத் தவீர ஒருவர் கூட இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்கத் தோன்றவில்லை. அவர்களுடைய இழிவு பற்றி பேசக்கூட பயம். எங்கே பார்ப்பான் நம்மைக் கொன்று விடுவானோ? என்று!

காந்தியை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர் ஒரு சாதாரணமான அன்னக்காவடி. அவரைப் பயன் படுத்திக் கொண்டனர் பார்ப்பான். அவரும் பார்ப்பனருக்கு ஆதரவாகவே நடந்தார். உடனே பார்ப்பனர்கள் அவரை "மகாத்மா"வாக்கி நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி விட்டனர். அவரும் சாதி இருக்க வேண்டும். விக்ரக ஆராதனை தேவை. நான் கடவுள் நம்பிக்கைக்காரன் என்றெல்லாம் பேசினார். நல்ல விளம்பரம் அதிலே மயங்கி அவரை எதிர்க்க ஆளே இல்லை. நாங்கள் தான் மகாத்மாவை "துர் ஆம்மா" என்றோம். மற்றும் பல காரியங்களை எல்லாம் செய்தோம். எப்படியோ அவருக்குப் புத்தி வந்தது. தான் முட்டாள்தனமாக பார்ப்பனருக்கு ஆதரவாக நடந்து இந்த மாதிரி நடந்து விட்டோமே என்றும், தான் பல தவறுகள் செய்து விட்டோம் என்பதையும் உணர்ந்தார். எல்லோரும் சமம், கீழ்ச்சாதி- மேல்சாதி என்பது கூடாது என்று பேச ஆரம்பித்தார். அவ்வளவு தான் பார்ப்பான் பார்த்தான். இனி இவரை விட்டால் ஆபத்து என்று கருதி எட்டே நாளில் சுட்டுக் கொன்று விட்டான். இந்த ஆள் கதியே இப்படி என்றால் பிறகு யார் வருவார்கள் பார்ப்பானை எதிர்த்து?ஆட்சி, சட்டம், கோர்ட், புராணம்- எல்லாம் அவன் கையிலே இருக்கிறது. யார் என்ன செய்ய முடியும்?

கோர்ட், கடவுள், மத, புராணம்- இவற்றை விளக்கணும். மோட்சம், நரகம் என்ற நம்பிக்கையை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். சிந்திக்க ஆரம்பிக்கணும். மக்கள் திருந்தி சிந்தித்துப் பார்த்து மாறினால் தான் முன்னேற முடியும். நாம் மாற்றம் அடைய வேண்டும். அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நடக்க ஆரம்பித்தால் பார்ப்பான் ஓடி விடுவான்.


(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_05.html

தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகே நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோகமாய் அமர்ந்திருப்பதின் மமதையினாலும் பார்ப்பனரல்லாதாரில் சில பதர்கள், வயிற்றுக் கொடுமையாலும், பேராசையினாலும் சுயமரியாதையற்று பார்ப்பனர்கள் பாதம் வருடித் திரிவதினாலும் வேறு பல வழிகளிலும் பார்ப்பன மாய்கையில் பல உணர்ச்சியற்ற ஜமீன்தார் மிராஸ்தார் முதலிய செல்வந்த வாலிபர்கள் அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும், பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் அறிவீனத்தால் கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள் முதலியவைகளினால் பார்ப்பனர்களுக்கு அடிமைப் பட்டு கிடப்பதினாலும், பாமர மக்கள் உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சிப் பிரசாரங்களாலும் சமீப தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வெற்றி கிடைப்பதாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இவ்வெற்றி நிலையைத் தாங்க முடியாமல் நமது பார்ப்பனர்கள் தலைக்கு கொழுப்பேறி தலை கால் தெரியாமல் ஆடுவதை நாம் வரிசையாகப் பார்த்து வருகிறோம்.

 

உதாரணமாக, இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு அகந்தையும் ஆணவமும் கொண்ட செய்கைகள் பார்ப்பனர்களால் நடத்தப் பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்தவர்களுக்கு பார்ப்பனர்களின் தலை கொழுப்புத் தன்மை விளங்காமல் போகாது. கார்பொரேஷன் சென்னை கார்பொரேஷனில் கவுன்சிலர்கள் என்கிற பெயர் வைத்துக் கொண்டு கார்பொரேஷனில் நடத்தும் குறும்புத் தனத்திற்கு அளவே இல்லை. குழந்தை பாதுகாப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று, அங்கு அவ்வாஸ்பத்திரியின் தலைவி இல்லை என்பதை அறிந்தும் அங்குள்ள மருத்துவப் பெண்களிடம் அடாபிடியாய் நடந்து கொண்டதும், அருவருக்கத் தகுந்த கேள்விகள் கேட்டு அப்பெண்களை அவமானப்படுத்தியதும் இவ்வளவும் செய்துவிட்டு பின்னும் அவ்வுதவியற்ற பெண்களை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று கொடுமை செய்ததையும் பார்க்கிற போது சிறீமான் கோபதி நாராயணசாமி செட்டியார் என்கின்ற நாயுடு கார்பொரேஷன் பிரசிடெண்டாய் வந்து விட்டாரே என்கின்ற ஆத்திரத்தினாலும் தாங்கள் ஆட்டுகிறபடி ஆடக்கூடியவர் வரவில்லையே என்கின்ற ஆத்திரத் தினாலும் கார்பொரேஷனில் நடந்து கொள்ளும் யோக்கியதையும் மீன் கடை, கள்ளுக் கடை, குச்சுக்கார வீதி இதுகளில் நடப்பது போன்ற இழிவான வாக்கு வாதங்களும் மானங்கெட்ட வெளியேற்றங்களும் அதிகபிரசிங்கித்தனங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பதும் பத்திரிகைகள் தங்கள் வசம் இருக்கின்றன என்கின்ற காரணத்தால் நடந்த விஷயங்களைத் திரித்தும் பொய்களைச் சேர்த்தும் ஜனங்கள் தப்பாய் நம்பும்படியாக பிரசுரித்து வருவதும் மற்றும் காங்கிரஸ் என்னும் பேரால் காலிகளையும், அன்னக் காவடிகளையும், பேராசைக்கார களிமண் தலைகளையும் சேர்த்துக்கொண்டு அவர்களை விட்டு ஈனத் தனமாய் பார்ப்பனரல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் வையும்படி செய்வதும், அடிக்கும்படி செய்வதுமான காரியங்கள் செய்வதும் சகிக்க முடியாததாயுமிருப்பதும் பார்த்து வருகிறோம்.

 

சிறீமான் பக்கிரிசாமிப் பிள்ளை பொது ஜனங்கள் பனகால் ஆட்சியை மறுக்கிறார்களென்று கட்டி விடுவதற்காக பொது ஜனங்கள் பேரால் தங்களிலேயே சில காலிகளை விட்டு மீட்டிங்கு கூட்டச் செய்து அம் மீட்டிங்குகளில் தாங்களே போய் இருந்து கொண்டு இரணியனைப் போல் தன்னையே தலைவரென்று சொல்ல வேண்டுமென்று "சீனிவாசய்யங்காருக்கு ஜே" என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினதும் அப்படிச் சொல்ல மறுத்ததும் சிறீமான் பக்கிரிசாமி என்கின்ற வாலிபரைப் பிடித்து போக்கிரிகளை விட்டு கடுமையாய் அடிக்கச் செய்ததும், அவர் தான் செத்தாலும் சரி யென்று சீனிவாசய்யங்காருக்கு ஜே! சொல்லாமல் அடிபட்டு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் பட்டதும், தமிழ் மகாநாடு என்கின்ற பெயரால் கோகலே ஹாலில் நடத்தப்பட்ட ஐயங்கார் கூட்டத்திற்குச் சென்றிருந்த சிறீமான் தண்டபாணி பிள்ளை அவர்களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி விட்டால் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பயந்து பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமலிருக்கச் செய்துவிடலாமென்கிற எண்ணத்தின் பேரில் அவரை இப் பார்ப்பனர்கள் கூலிகளை விட்டு உபத்திரவித்ததைப் பார்க்கும் போதும் சுத்தமான பார்ப்பனரல்லாதார் ரத்த ஓட்டமுள்ள எந்த மனிதனுடைய ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

 

சிறீமான் தண்டபாணி பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளை ஆகஸ்டு 23 - யிலேயே 4 - அணா சந்தா கொடுத்து காங்கிரஸ் மெம்பராகச் சேர்ந்து 15,223 நெம்பர் ரசீது வாங்கியிருக்கிறார். சிறீமான் தண்டபாணி பிள்ளை உண்மையான சுயராஜ்யத்திற்கு ஒரு நாளும் எதிரியல்ல. ஆனால் பார்ப்பனர் ஆதிக்கம்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படும் சுயராஜ்யத்திற்குத் தான் எதிரியாயிருக்கிறார். பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யத்தின் சூழ்ச்சிகளை தாராளமாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார். இதற்காகத்தான் அவரைப் பார்ப்பனர்கள் ஒழிக்கப் பார்க்கிறார்கள். அதற்கு அவர் பயப்படுவதில்லை. ஆதலால் தமிழ்நாடு மகாநாட்டிற்கும் ஒரு பிரதிநிதியாய்ப் போக ஆசைப்பட்டார். பிரதிநிதிப் பத்திரம் பெற்றார். பிரதிநிதிக் கட்டணம் ரூ 2 - ம் செலுத்தினார். காங்கிரஸ் கமிட்டி குமாஸ்தாவிடம் 61 - நெ பிரதிநிதி டிக்கெட்டும் பெற்றார். இதன் பயனாய் தாராளமாய் உள்ளே விடப்பட்டார். உள்ளே போய் தனது சகாக்களிடம் உட்கார்ந்தார். இதைப் பார்த்த பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

 

ஏனெனில் காங்கிரஸ் என்பதும் கான்பரன்ஸ்கள் என்பதும், நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தாய் தகப்பன்மார்கள் தங்களது ஆதிக்கத்திற்குத் தேடிவைத்த சொத்துக்களாக நினைத்துக் கொண்டிருப்பதால் தங்கள் குண்டியைத் தாங்கி பூட்ஸைத் துடைத்து காலைக் கழுவி சாப்பிட சம்மதித்த ஆள்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என்கின்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு. அதனால் சிறீமான் தண்டபாணி பிள்ளையைக் கண்டு ஆத்திரப்பட்டது ஆச்சரியமல்ல. வெளியாக்க சூழ்ச்சி ஆதலால் சிறீமான் பிள்ளையை வெளியாக்க எண்ணி சிறீமான் ரெங்கசாமி அய்யங்காரால் பாவலர் என்கின்ற ஒரு பார்ப்பனரல்லாதாரை ஏவி விடப்பட்டது. அவர் முதலாவதாக சட்டப்படி சிறீமான் பிள்ளை உள்ளே வந்தாரா? அல்லது சட்ட விரோதமாய் வந்தாரா? என்பதைக் கவனிப்பதற்காக பிரதிநிதி ரிஜிஸ்டரை பரிசோதித்தார்; அதில் 61 -வது நெம்பர் பிரதிநிதியாக பதிவு செய்யப்பட்டு கட்டணமும் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் ஒன்றும் செய்ய முடியாமல் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை யோசனை கேட்டார்.

 

சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ஒரு யுக்தி செய்தார். அதென்னவென்றால் சிறீமான் தண்டபாணி பிள்ளைக்கு பிரதிநிதி சீட்டுப்பெற பிரதிநிதி சர்டிபிகேட் கொடுத்த தஞ்சை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியான சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை என்கிற ஒரு பார்ப்பனரல்லா தாரைப் பிடித்து அவ்வுரிமைச் சீட்டை எப்படியாவது ரத்து செய்வித்து சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டை மெல்ல ஏமாற்றி வாங்கிக் கொண்டு டிக்கெட்டில்லாமல் வந்தார் என்கிற பெயரை வைத்து வெளியிலனுப்பிவிட தோது சொல்லிக் கொடுத்தார். ஆனால் சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டைப் பெற பல வழிகளில் முயன்றும் முடியாததால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் வேறு வழியில் சிறீமான் பிள்ளையை வெளியாக்க யோசனை செய்ய வேண்டியதாய் விட்டது.

 

மறுநாள் சம்பவம் இந்த நிலையில் அன்றைய மகாநாட்டின் விஷயம் முடிந்து விட்டதால் மகாநாடு கலைக்கப்பட்டு விட்டது. சிறீமான் பிள்ளையவர்கள் அதே டிக்கெட்டைக் கொண்டு மறுநாள் மகா நாட்டிற்கும் சென்றிருக்கிறார். டிக்கெட் பரிசோதகர்கள், சிறீமான் பிள்ளையின் டிக்கெட்டை பரிசோதித்து மறுநாளும் உள்ளே விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்க மறுபடியும் முதலாவதாக ஒரு பார்ப்பன வாலண்டியர் சிறீமான் பிள்ளையின் பக்கத்தில் போய் அவரை வெளியில் போகும்படி சொல்லச் செய்தார்கள். பிள்ளை மறுத்தார். டிக்கெட்டைப் பிடுங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் டெலிகேட் டிக்கெட்டை காட்டும்படி கேட்டார்கள் . சிறீமான் பிள்ளை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் பரிசோதித்தால் நானும் காட்டுவேன் என்றார். பிறகு அவரை மேடை மீது உட்காரக் கூடாது என்று சொன்னார்கள். பிள்ளை அலட்சியமாயிருக்கவே சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்கள் சிறீமான் குழந்தை என்கிற ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூப்பிட்டு சிறீமான் பிள்ளையை வெளியாக்கக் கட்டளையிட்டார்கள். அவர் பல பார்ப்பனத் தொண்டர்களை அழைத்து வந்து சிறீமான் பிள்ளையை தூக்கச் சொன்னார். தொண்டர்கள் அடியோடு தூக்கவே சிறீமான் பிள்ளை மேல் கிளம்பிய நிலையில் சபையோர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இந்த சமயத்தில் சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் தன் கைத்தடியால் குத்தினார். உடனே மற்ற பார்ப்பனர்களும் கிளம்பி இவரை வெளியாக்கும்படி சத்தம் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் உதறித் தள்ளிவிட்டு மறுபடியும் கொஞ்சம் முன்னேறி உட்கார்ந்து கொண்டார்.

 

இந்த சமயத்தில் சிறீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுந்து அவனுக்கு இங்கு வேலையில்லை; வெளியில் பிடித்துத் தள்ளுங்கள் என்றும், சிறீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து என்னை வைதவனுக்கு இங்கு என்ன வேலை, வெளியில் தள்ளுங்கள்; முடியாவிட்டால் இவன் டெலிகேட் அல்லவென்று சொல்லி விடும் என்று சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு உத்திரவு போடவும், சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "சிறீமான் தண்டபாணி பிள்ளை காங்கிரஸ் மெம்பரும் அல்ல டெலிகேட்டும் அல்ல" என்று விளம்பரம் (டிக்ளேர் ) செய்யவும், கூட்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் "அவனுக்கு (சிறீமான் பிள்ளைக்கு) சிறீமான் என்று சொல்லக் கூடாது" என்று கத்தியும் கடைசியாக தங்களால் சிறீமான் பிள்ளையை வெளியேற்ற முடியாமல் போனதால் சிறீமான் எ. ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "கீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை" என்பது போல் "சிறீமான் தண்டபாணி பிள்ளை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்" என்று சொல்லி தங்கள் பிகுவைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பின்னர் அக்கிராசனர் இதைக் கவனித்து சிறீமான் பிள்ளையைப் பக்கத்தில் அழைத்து விபரங்களைக் கேட்டு அவருக்கு அங்கிருக்க உரிமை உண்டென்று தனது பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டார். இவ்வளவையும் நடக்கும் போது பார்த்திருந்த பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு "தண்டபாணி பிள்ளை திருவிளையாடல்" என்று தலையங்கமிட்டு பொய்யும் புரட்டும் எழுதி இருக்கின்றன.

 

சிறீமான் குழந்தையினிடம் அபயம் மறுபடியும் சிறீமான் குழந்தை என்னும் ஒரு பார்ப்பனரல்லாத கிறிஸ்தவர் பேரால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு கடிதம் பிரசுரித்திருக்கின்றன. இதை குழந்தைகள் நம்ப முடியாது. என்ன வென்றால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சிறீமான் குழந்தையை அபயமடைந்து அவர் காலுக்குள் புகுந்து "எங்களப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் பார்ப்பனர்கள் இச்சம்பவத்திற்குப் பொறுப்பாளிகள் அல்ல என்று அவர் பேரால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாமலும் சிறீமான் தண்டபாணி பிள்ளை ஒழுங்கு முறைப்படி பிறப்பிக்கப்படாத டிக்கெட்டுடன் வந்தார் என்றும், தான் தான் அவரைத் தூக்கிச் செல்ல தொண்டர்களை ஏவினதாகவும் அவர் சரியானபடி டிக்கெட்டை வைத்துக் கொண்டிருந்ததாகவும் காங்கிரசுக்கு விரோதியானதாலும், மகாத்மா காந்தியை மோசக்காரர் என்று சொன்னதாலுமே பிள்ளை அங்கு இருக்கக் கூடாதென்று கருதி அம்மாதிரி செய்ததாகவும் வீரமாய் எழுதிவிட்டு இது போலவே மற்றவர்களுக்கும் நடக்கும் என்றும் ஒரு சிறீமான் குழந்தையின் பேரால் எழுதியிருக்கிறார்கள்.

 

இவைகளையெல்லாம் கவனிக்கும் போது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தலை கொழுத்திருக்கிறது? பார்ப்பனரல்லாதவர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள்? சீர்காழி சிறீமான் சாமிநாத செட்டியார் தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள் என்றால் இதற்கு எதை சமாதானமாகச் சொல்லுவது. மானம், வெட்கம், சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை கையைப் பிடித்து இழுப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. இச்சம்பவம் இதற்கு சமானம் அல்ல என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களுடைய சமூகம் சுயராஜ்யத்திற்கு லாயக்கா? என்று கேட்கிறோம். சுயமரியாதை இல்லாமல் சுயராஜ்யம் சம்பாதிப்பது சுயமரியாதை அற்றவன் கலியாணம் செய்து கொண்டால் அப் பெண்ணின் கதி என்னவோ அதுபோல்தான் முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் முதல் முதல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் அதிலேயே சுயராஜ்யமிருக்கிறது. ஆதலால் பார்ப்பனர்களுக்கு குலாமாகவும் கால் வருடிகளாகவும் இருந்து வயிறு வளர்ப்பதை விட மானக் கேடானதும் சுயமரியாதையற்றதுமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்பதாக உணர்ந்து ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாத சுயமரியாதைச் சங்கத்தை ஆதரித்து முதலில் சுயமரியாதையை அடைவார்களாக.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_07.html

"திராவிடன்" பத்திரிக்கை கோயில்களைப் பற்றி ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் எழுதியதற்கு சமாதானம் எழுதுவதாவது :

 

ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் கடும் வர்ணாசிரமக்காரர். பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்று கருதிக் கொண்டிருக்கிறவர். எனவே அவர் மகாத்மானவைக் கண்டிப்பதில் அதிசயமில்லை. அன்றியும் இவர் கோவில்களின் மூலம் பார்ப்பனர்களின் வாழ்வு இன்னது என்று தெரிந்தவர். இந்து மதம் என்கின்ற பெயர் இல்லாவிட்டால் இந்நாட்டில் பார்ப்பனருக்கு எவ்வித மரியாதையும் இல்லாததோடு குணத்தைப்பற்றி மக்களை வகுப்பதின் மூலம் பார்ப்பனர்கள் தீண்டாதவர்களாகி விடக் கூடும் என்பதையும் உணர்ந்தவர். ஆதலால் இவர் தன் சமூகத்தின் வாழ்வுக்காக அப்புக் கட்டுவதில் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது இவர் கடமை. ஆனால் நாம் அக்கோவில்கள் விபச்சார விடுதிகள் என்பதை விளக்க இதை உபயோகித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

 

மகாத்மா காந்தி இப்போதைய கோயில்களின் நிலைமையைப் பற்றித்தான் அவ்விதம் கூறுகிறார் போல் தோன்றுகிறது. ஆனால் நாம் ஆதியில் உள்ள கோயில்களைப்பற்றியும், அதிலுள்ள சுவாமிகளைப்பற்றியும் அங்கு நடக்கும் அக்கிரமங்களைப்பற்றியும், அவைகள் ஆதியில் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியுமே கவனித்து அப்படிச் சொல்லுகிறோம். உதாரணமாக ஆரிய சமாஜத் தலைவர் அதாவது வேகத்தைக் கூட ஒப்புக் கொள்ளுகிறவரான சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியிருக்கும் சத்தியார்த்தப் பிரகாசத்தில் இவ்விஷயத்தை நன்றாய் விளக்கி இருக்கிறார். மற்றும் சைவக் கடவுளைப்பற்றி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும், வைணவர்களையும், வைணவக் கடவுள்களைப்பற்றி அதே இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும் கேட்டாலும் அல்லது அவரவர்கள் வேதசாஸ்திர புராண ஆதாரங்களைக் கொண்டு எழுதி முழங்கியிருக்கும் சைவ மத கண்டனம் என்னும் புஸ்தகங்களைப் பார்த்தாலும் தெரியவரும். அன்றியும் அந்தக் கடவுள்கள் அன்னிய ஸ்திரீகளிடம் தினமும் அக்கோவில்களில் படுப்பதும், அக்கடவுளுக்கு வைப்பாட்டிகளாக, விபச்சாரப் பெண்கள் ஏற்படுத்தப்படுவதும் அவர்கள் சுவாமிக்குத் தொண்டு செய்வது என்னும் பேரால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தினமும் கோவிலுக்கு வருவதும், அவர்களைப் பார்க்கவிட புருடர்கள் பக்தியின் பேரால் சாமி கும்பிட என்று அங்கு வந்து சம்மதம் ஏற்படுத்திக் கொள்ளுவதும், இவர்களைப் பார்த்து குல ஸ்திரீகளும் அலங்கரித்துக் கொண்டு வருவதும், அவர்களைப் பார்த்து நிஜமாகவே பக்திக்காக வந்த புருஷர்களும் பக்தி கெட்டு அக்குலப் பெண்களை சுவாதீனம் செய்ய முயற்சிப்பதும், ஒருவருக்கொருவர் காதல் ஏற்பட்டு தினப்படி முக தரிசனத்திலேயே ஒருவித காதல் திருப்தியை அடையக் கருதி இருவரும் பெரிய பக்தர்களாகி தினமும் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்து கொள்ளுவதுமான காரியங்களை ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் தங்களுடைய வாலிப பருவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டால் இவை கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும் என்றே சொல்லுவோம்.

 

இது தவிர, சுவாமி வீட்டுக்குப் போதல், வேறு பெண்களை சிறையெடுத்து வருதல், வேறு பெண்கள் மீது காதல் கொண்டு மாறு வேஷம் போட்டுக் கொண்டு போய் அப்பெண்களை கற்பழித்து விட்டு வருதல், ஆண்சாமிகளிலேயே ஒரு சாமிக்கு மற்றொரு சாமி மேல் மோகம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கலந்து பிள்ளை உண்டாக்குதல் முதலான இந்து மத வேத சாஸ்திர புராணங்களைக் கொண்டு கோவில்கள் கட்டி இம்மாதிரி சாமிகளை அவைகளில் வைத்திருத்தல், இம்மாதிரி நடவடிக்கைகளை உற்சவமூலம் நடத்தல் ஆகிய காரியங்களை கோவிலின் தத்துவங்களைப்பற்றி நாமும், மகாத்மாவும் கூறுவதை நன்றாய் ருஜீ செய்யும். அன்றியும் கோவில் யோக்கியதை இப்படியானால், உற்சவங்கள் என்பவைகள் எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் அதிலும் கோவில்கள் எவ்வளவு தூரம் விபசாரம் விடுதி என்பது புலப்படும்.

 

மேலே சொல்லப்பட்ட மாதிரியான கருத்துக்கள் கொண்ட உற்சவத்திற்குப் போகும் பெண்ணும், ஆணும் தங்களை அலங்கரித்துக் கொண்டு போவதும் ஒருவரை ஒருவர் நாடித் திரிவதும், அன்னிய ஸ்திரீகள் சினேகமும் அன்னிய புருஷர்கள் சினேகமும் கொண்ட ஆண், பெண்கள் கோவில்களையும், உற்சவங்களையும் சங்கேத ஸ்தலங்களாக உபயோகித்துக் கொண்டு போவதும் யாவரும் அறியாமலிருக்க முடியாது. சிற்சில ஊர்களில் உற்சவக் காலங்களில் கோவில்களுக்கு வெளியில் உள்ள சுற்று விடுதிகளுக்கு விபசாரத்தின் பொருட்டு வாடகைகள் அதிகம் ஏற்படுத்துவதும் யாவரும் அறிந்ததே. அதாவது சுகாதார வசதிக்கு ஆக ஏற்படுத்திக் கொள்ளப்படும் நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு எப்படி ஒரு வருஷத்திய வாடகை இரண்டு மாதங்களுக்கு வாங்கிக் கொள்ளப்படுகிறதோ அதுபோலவே ஒரு சிறு அறைக்கு ஒரு வாரத்திற்கு 10 - 15 ரூபாய் வீதம் குடக்கூலி ஏற்படுகிறது. இந்த வாடகைகள் கோவிலுக்கு வரும் ஆண் பெண் பக்தர்களாலேயே சரிகட்டப்பட்டும் 100 - 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டும் போகப்படுகிறது.

 

உற்சவ காலங்களில் சுவாமி கோவில்கள் மாத்திரமல்லாமல் அர்ச்சகர்கள் வீடுகளிலும், சில விபசார வீடுகளாக ஆக்கப்பட்டுவிடுகின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. நல்ல அழகிய பெண்ணை மணந்த அர்ச்சகர்களிடமே அதிக யாத்திரைக்காரர்கள் போய்ச் சேருகிறார்கள். அதிக கட்டளைக்காரர்களும் ஏற்படுகிறார்கள். இதன் காரணம் என்ன? நமக்குத் தெரிய பல சமயங்களில் யாத்திரைக்காரர்களை தங்கள் வீட்டின் நடையில் படுக்க விட்டு விட்டு, பெண்களை கூப்பிட்டு "இன்று ராத்திரி எனக்கு கோவிலில் படுக்கை முறை, ஆதலால் காலையில் தான் வருவேன் வீதிக்கதவை ஜாக்கிரதையாக தாள் போட்டுக் கொள்! என்று சொல்லிப் போகிற அர்ச்சகர்களையும் நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். இவைகளில் எதை நமது ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் மறுக்கிறார்கள் என்றும் கேட்கிறோம். இவர்களை கோவிலை விட்டுத் தள்ளுவதற்கு என்ன சட்டம் இருக்கிறது என்று கேட்கின்றோம். இவைகளை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் அவர்களைப்பற்றி ஜனங்களுக்கு சாமி, பூதம், பேய், பிசாசு, கோயில், குளம் முதலியவைகளிடம் அதிலும் பாமர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையை ஆதாரமாய் உபயோகித்துக் கொண்டு "கோவிலைத் திட்டுகிறார்கள், நாஸ்திகம் கேசுகிறார்கள்" என்று தூற்றி மனதறிந்து அக்கிரமமாய்ப் பேசி பாமர மக்களை ஏமாற்றுகிறார்களே ஒழிய அவர்கள் இம்மாதிரியான அக்கிரமங்களை மறுக்க காரணம் காட்ட முடியுமா என்று மறுபடியும் கேட்கிறோம்.

 

கோவில்களில் கட்டளைகள் ஏற்படுத்துவதின் யோக்கியதைகள் அநேகமாய் என்ன என்று பாருங்கள்! கட்டளைக்காரன் பணம் கொடுப்பதும், வருஷத்திற்கு மும்முறை அர்ச்சகர் வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்திருந்து போவதுமல்லாமல் மற்றபடி 100-க்கு 75 – கட்டளைகளின் கருத்தும், தத்துவமும் என்ன என்று கேட்கிறோம். கட்டளைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறபடி கட்டளை "பூஜை" நடக்கின்றதா? "அர்ச்சனை" நடக்கின்றதா? அஷ்டோத்திரம் நடக்கிறதா? மண்டல பூசை நடக்கின்றதா? என்றும் கேட்கின்றோம். கட்டளை அர்ச்சகர் ஊரெல்லாம் பணம் வசூலிக்கப்போவதும் அர்ச்சகர் வீட்டில் அவரது சம்சாரம் வீட்டுக்கு தூரமாகி அதாவது பகிஷ்டையாகி வேறு வேலை இல்லாமல் இருக்கும் காலத்தில் விபூதி, குங்குமம், வில்வம், மஞ்சள், நாமக்கட்டி, திருச்சூரணம், துளசி இலை இவைகளை தனித்தனி சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டி விலாசமெழுதி வைத்திருக்கும் காகிதத்துடன் போட்டு தபாலில் போடுவதுமல்லாமல் வேறு என்ன காரியம் நடக்கின்றது? இவ்வர்ச்சனைகளுக்கு பலன் என்ன என்றும் கேட்கின்றோம்?

 

இந்தக் கோவில், சாமி, உற்சவம், கட்டளை இவைகளுக்கு யாருடைய பணம் போகிறது? எவ்வளவு பணம் போகிறது? இவ்வளவு பணங்களும் எதற்கு உபயோகப்படுகிறது? என்று பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதுடன் இதனால் சுவாமிக்காவது பக்தனுக்காவது என்ன காரியம் உண்டாகிறது என்பதையும், வாஸ்தவத்திலேயே கோவிலில் கடவுள் இருப்பாரானால் இவ்வக்கிரமங்கள் ஒரு இடத்திலாவது ஒருவராலாவது செய்ய இடம் ஏற்படுமா என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.இவைகள் தவிர கிராமக் கோவில்களில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றியோவென்றால் அது சொல்லத் தொலையாது. அர்ச்சகர் குடி இருப்பு படுக்கை சாப்பாடு முதலியவைகள் கோவில்களிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரமான பெண்களும் அங்கேயே படுக்கிறார்கள். சுவாமி பேரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் இந்த தூரமான பெண்கள் துணிகள் துவைக்கப்படுகின்றன. ஸ்நானபானமும் செய்யப்படுகிறது. சுவாமிகள் தீர்த்தம் முதலிவைகளும் அதிலிருந்தே எடுத்து சாமிக்கு ஸ்நானமும் சமையலும் செய்யப்படுகின்றன.

 

இவைகளில் எதை ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் மறுக்கிறார் என்று கேட்கிறோம். இது விஷயத்தில் மாத்திரம் எங்கும் சுவாமி இருப்பதாக ஒப்புக்கொள்ளும் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் "தீண்டாதவர்கள்" கோவிலுக்குப் போக ஏன் சம்மதிப்பதில்லை என்று கேட்கின்றோம்? சிங்கம், கரடி, நாய், நரி, பன்றி, பாம்பு, தேள், பூச்சி, புழு, மலம் முதலியவைகள் மலிந்து கிடக்கும் மலைமேல் கூட ஏறக்கூடாது என்கிறார்களே! அது ஏன் என்று தான் கேட்கின்றோம்?

 

(09-10-1927 "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் எழுதியது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2…. பக்கம்:130)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_30.html

உண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால் அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான். 2500 - ஆண்டுகளாக மக்கள் மடமையை ஒழிக்க, மக்கள் இழிவை ஒழிக்க, எவருமே முன்வரவே இல்லை. சரித்திரம் சம்பந்தமாக யாரையாவது கூற வேண்டுமானால் மக்களை மக்களாக மதிக்கச் செய்ய, இழிவு கொடுமைகளை ஒழிக்க முன்வந்தவர் புத்தர் தான்.அவர் அரச வாழ்வைத் துறந்தவர். அவரது போக்கில் சந்தேகம் இல்லாததனால் மக்கள் அவரது கொள்கையை எளிதில் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் கொள்கை பரவி இருந்தது. ரோடு வசதி இல்லாத காலம், காடும் மேடுமாக இருந்த காலம், போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் தோன்றிய அவனது அறிவுப் பிரச்சாரமானது நாடெங்கும் பரவி இருந்தது.

 

புத்தருடைய புரட்சிகரமான கொள்கை பரவி வருவது கண்டு பார்ப்னர்கள் நம் மடராஜாக்களை வசப்படுத்திக் கொண்டு அந்த அறிவுமார்க்கத்தை ஒழித்து (புத்த) ஸ்தாபனங்களை எல்லாம் தரை மட்டமாகி விட்டார்கள்.புத்தர் வேறு எதுவும் சொல்லவில்லை. உன் அறிவுப்படி சிந்தித்து அதன்படி நட! மகான் சொன்னார்! ரிஷி சொன்னார்! பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை நம்பாதே! உன் புத்தியின்படி நட! என்று தான் சொன்னார். புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த முடியாதது கண்டு தான் பார்ப்பனர்கள் தந்திரமாக புத்த மார்க்கத்தில் பிட்சுக்களாக சேர்ந்து, அந்த மார்க்கத்தில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தி நாசப்படுத்தி விட்டார்கள். புத்த மடாலயங்கள், கோயில்கள் இருந்ததை எல்லாம் தரைமட்டமாக்கி அங்கெல்லாம் ஆரிய மதக் கடவுள்கள், கோயில்களை எழுப்பினார்கள்.

 

இராமன், கிருஷ்ணன் அவதாரங்களைக்,கூட எல்லாம் புத்தனுக்குப் பிறகு புத்த மார்க்கத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அவதாரங்களேயாகும். இராமாயணம் விஷ்ணு புராணம் முதலியவைகளில் புத்தனைப் பற்றிய சங்கதிகள் வருகின்றன. நம் மக்களுக்கு எல்லோருக்கும் பாகவதம் தெரியும், இராமாயணம் மற்ற புராணங்கள் தெரியும், இந்த சங்கதிகள் அதில் உள்ளதை எவன் கவலையோடு சிந்தித்துப் பார்க்கிறான்? இந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர். இந்து என்று கூறிக் கொள்ளும் எந்த ஆளுக்கு வேதம் தெரியும்? சங்கராச்சாரியே சொல்லுகிறார் இந்து என்பது தப்பு. "வேதமதம்" என்று சொல்லுவது தான் சரி என்கிறார்.

 

வேதமே தெரியாத நமது முண்டங்கள் நான் இந்து என்று கூறிக் கொள்ளுகின்றார்களே? முஸ்லிம் இருக்கிறான் உன் மதம் எது என்றால் இஸ்லாம் மதம்…. அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது? 1400 - ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்கிறான்.கிறிஸ்தவன் என் மதம் கிருஸ்தவம் எனது வேதம் பைபிள் என்கிறான். ஏற்பட்டு 1962 - ஆண்டுகள் ஆகிறது என்கின்றான். இந்து என்கின்ற உன் மதத்துக்கு ஆதாரம் எது? எப்போது ஏற்பட்டது? வேதம் என்றால் நீதான் வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறாயே இப்படி இருக்க நீ ஏன் இந்து என்று கூறிக் கொள்கின்றாய்? இப்படிக் கேட்டு அறிவுப்படி சொந்தப் புத்திப்படி நட என்று கூறுகின்றவர்களை எல்லாம் பார்ப்பான் நாஸ்திகர்கள் என்று எழுதி வைத்து விட்டார்கள்.

 

"சைவன்" எல்லாரும் சிவன் தென்னாட்டுக் கடவுள், தென்நாடு உடைய சிவன் தான் எந்நாட்டுக்கும் கடவுள் ஆனான் என்று பீற்றிக் கொள்ளுகின்றனர். இந்த சிவன் இந்நாட்டுக் கடவுளும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளைக்கார நாட்டான் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்படுத்திய கடவுளாகும். மேல்நாட்டுக்காரன் காட்டுமிராண்டிக் காலத்தில் உண்டாக்கிய கடவுளை மாட்டு மேல் ஏற்றி வைத்துக் கொண்டு காண்பித்தான். இதற்குப் பேர் (Father God) என்று அழைத்தான். அதுபோலவே தான் மாட்டு மேல் ஏற்றி வணங்குகின்றோம். நாம் சிவன் மனைவி காளி என்கிறோம். இந்தப் பெண் பிள்ளைக் கடவுளைத் தான் வெள்ளையன் (Mother God) என்று அழைத்தான். சிங்கத்தின் மேல் ஏற்றி அதன் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறான். அதைத்தான் நம் நாட்டில் காளி என்று பெயர் இட்டு சிங்கத்தில் ஏற்றி சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையன் "Father God, Mother God" என்று அழைத்ததைத் தான் நமது சைவன் அம்மையே! அப்பனே! என்று பாடித் திரிகிறான். வெள்ளையன் காட்டுமிராண்டிக் காலத்திய கடவுள்களை எல்லாம் விட்டு விட்டு இன்று ஒரே கடவுள் என்ற நிலைக்கு வந்து விட்டான். நாசமாப் போன நம் நாட்டவர்கள் தான் இந்தக் காட்டுமிராண்டிக் காலத்துகடவுள்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

 

ஒரு கடவுள் இரண்டு கடவுளா? ஆயிரக்கணக்கான கடவுள்கள். பல உருவங்கள் கழுகு, குரங்கு, பன்றி, பாம்பு, இவை எல்லாம் கடவுள்.முஸ்லிமும் கிறிஸ்தவனும் ஒரே கடவுள் ஒன்றும் வேண்டாதவர். உருவமற்றவர். அருளானவர்! அன்பானவர்! என்கின்றான். உன் கடவுள் அப்படியா? 6 - வேளை சோறு! வருஷா வருஷம் கல்யாணம்!கருமாதி, வைப்பாட்டி இவை எல்லாம் செய்து கொடுக்கின்றானே! அன்பே சிவம் வெங்காயம் என்று கூறிக் கொண்டு கடவுள் கையில் அரிவாள் கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம்,இவற்றைத் தானே கொடுத்து இருக்கின்றாய்? அருளும் அன்புமானகடவுளுக்கு இவை ஏன்? கடவுளுடைய அருமை என்னடா என்றால், எங்கள் கடவுள் 1000 - பேரைக் கொன்றது 2000 - பேரைக் கொன்றது என்று கூறுவது தான்.

 

(19-07-1962 அன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு."விடுதலை"- 26-07-1962)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_31.html

"கிறிஸ்தவ மதப் பிரசாரமா?" என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 05-07-1926-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் சிறீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய சிறீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்குமுகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக்குறிப்பில் அயோக்கியத்தனமும், சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது.

 

யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி "தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?" என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொதுமக்க ளிடையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத்தனமும், சூழ்ச்சியுமானதென்று கவனியுங்கள். மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரஹங்களிலும் அடங்கிக்கிடக்கவில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறிஸ்துவ மதமோங்கிவிடாது.

 

இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறையனாயிருக்கும் கோவிந்தனை பக்கத்தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோசஸ் ஆகிவிட்டால் கைலாகு கொடுப்பான். ஆகவே கிறிஸ்தவ மதத்தை இப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது சிறீமான் ஆரியா ஆதரிக்கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பனனுடைய வாய் வேதாந்தத் தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

 

(குடிஅரசு 11.07.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_08.html

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

பொதுவாகத் திராவிடர் கழகத்தார் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுபவர்களும் அல்ல. அரசியலில் தலையிடுபவர்களும் அல்ல. தேர்தலில் நிற்கக்கூடாது என்பது எங்கள் கொள்கையாகும். எங்கள் கொள்கை மக்கள் சமூதாயத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம், இழிவு, மடமையைப் போக்கி விழிப்பு அடையச் செய்ய வேண்டும் என்பதுதான்.

 

முதலாவது நமக்கு நெடுநாள்களாகக் கல்வி இல்லை. நம் மூவேந்தர்கள் காலம் முதல் இந்த நிலை. நாம் சாதியிலோ இழிமக்கள் - காட்டுமிராண்டிகள் நமக்கோ புத்தி இல்லை, மடையர்களாக இருக்கின்றோம். இவைபற்றி எவனும் கவலைப்படுவது இல்லை. எடுத்து விளக்குவதும் இல்லை. இப்படி நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம் என்றால் இது பார்ப்பானுடைய அயோக்கியத்தனம் மட்டும் அல்ல -நமது மடத்தனமும் கூட ஆகும். இந்த விஷயங்களில் எங்களுக்கு ஏற்பட்ட கவலை, வெட்கம், ரோஷம் இவற்றின் காரணமாக இந்தக் கொடுமைகள் எல்லாம் ஒழிக்கவே இப்படிப் பாடுபடுகிறோம்.

 

எங்களால் மற்றவர்கள் மாதிரி சட்டசபைக்கு நின்று வெற்றி பெற்று மந்திரி பதவிக்கோ, பார்லிமென்டுக்கோ போகத்தெரியாதா? நாங்கள் உட்கார்ந்தால் சட்டசபை நாற்காலி முள்ளு மேல் முள்ளு குத்துமா? நாங்கள் மற்றவர்கள் மாதிரி சம்பளம் வாங்கித் தின்றால் கசக்குமா? நான் மட்டும் தொடர்ந்து அரசியலில் இருந்தால் நான் தின்ற மிச்சம்தானே இன்று மற்றவர்களுக்கு. நண்பர் வீரமணி கூறியதுபோல நான் காந்தியுடனேயே சட்டசபைக்குப் போகக் கூடாது என்று வாதாடியவன். சட்டசபை என் காலடியில் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு. நண்பர் ஆச்சாரியார் அவர்கள் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு.

 

நண்பர் ஆச்சாரியார் இன்று உயிருடன்தான் இருக்கின்றார். நான் காங்கிரசை விட்டு வெளிவந்த பிறகும்கூட எங்கள் வீடு தேடி வந்து அவர் கூறினார் நாயக்கரே நீங்கள் இல்லாமல் சட்டசபைக்குச் செல்லுவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டப் (துன்பமும் - இழப்பும்) பட்டவர் காங்கிரசில் சேர வேண்டாம். கதர் போட வேண்டாம். நீங்கள் பாட்டிலே கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருங்கள். உங்களுக்குச் சட்டசபை மெம்பர் வேலை பண்ணி வைத்து விடுகின்றோம் என்றார். நான் மிகவும் அவர் மீது அனதாபப்பட்டு உங்கள் அழைப்புக்கு மிகவும் தலைவணங்குகின்றேன். என்னால் ஒத்துக் கொள்ள இயலாது என்று மறுத்து விட்டேன். நான்கு நாள் அவகாசம் கொடுத்து யோசனை பண்ணிச் சொல்லுங்கள் என்றார். அப்பவும் மறுத்துவிட்டேன். அவருடன் நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் எங்கள் ஊர் காங்கிரஸ்காரர். நண்பர் ஈஸ்வரன் அவர்களும் வந்து இருந்தார். அவர்களுக்கும் நான் கூறுவது பொய் அல்ல என்று தெரியும். இருவரும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

அடுத்து ஆச்சாரியார் 1937 - இல் மந்திரி பதவிக்கு வந்தாரே அந்த சமயத்திலேயே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே என்னிடம் அனுப்பி மேல்சபை நாமிநேஷன் இரண்டு காலியாக வைத்துள்ளேன். அது உங்களை உத்தேசித்தே நீங்கள் எப்படியும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தூது அனுப்பினார். நான் மறுத்துவிட்டேன். பிறகு அவர் நான் வெளியில் இருந்து ரகளை பண்ணுவேன் என்று எங்கள் கூட இருந்த இராமநாதனைக் கூப்பிட்டு மந்திரி பதவி கொடுத்தார். ஆச்சாரியார் அவர்கள் மந்திரிப் பதவி ஏற்றவுடன் இந்தியைக் கட்டாயமாக ஆக்கியபோது நாங்கள் எதிர்த்துப் போராடினோம்.

 

அப்போது தான் நம் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்ச்சி வந்தது. நமது தமிழ்ப் புலவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி வந்தது. புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் தனித்தமிழ் புத்தகம் போட ஆரம்பித்தார்கள். 2000 - பேர்களுக்கு மேல் சிறைக்கு அனுப்பினார். என்னை மூன்று வருஷம் தண்டித்தார். இதன் காரணமாக எதிர்ப்புகள் உண்டாகி சமாளிக்க முடியாமல் அவர் மந்திரி பதவியை விட்டுப் போகும்படி நேர்ந்தது. அப்போததான் என்னைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கும்படி இரண்டு கவர்னர் மட்டும் அல்ல - கவர்னர் ஜெனரலே சொன்னார். நண்பர்களை எல்லாம் விட்டுக் கூறச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். இந்த இராஜா சர் முத்தையா செட்டியார் எவ்வளவோ வற்புறுத்தினாரே!

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல காலம் வருவதைத் தவற விட்டுவிடாதீர்கள் என்று வற்புறுத்தினார். எனக்கு எவ்வளவோ உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் இதன் காரணமாக என் மீது கோபித்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியையே விட்டுவிட்டுப் போய்விட்டார்களயே! இந்த இராஜாஜியே என்னிடம் வந்து கெஞ்சினார் நாயக்கரே மந்திரி பதவியை ஒத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ்காரனால் தொல்லை வராமல் நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். காந்தியிடம் வேண்டுமானாலும் சம்மதம் பெற்று வருகின்றேன். நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரியாக இடம் கொடுங்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து உதவுகின்றேன் என்றார். அப்போது இந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி யாரும் இருந்தார். நாங்கள் இரகசியம் பேச ஆரம்பித்ததம் நடைக்குப் போய்விட்டார். நான் ஒரு வாரத்தில் பதில் சொல்லுவதாகத் தட்டிக் கழித்து ஒரு வாரம் ஆனதும் மறுத்துவிட்டேன்.

 

தோழர்களே! நாங்களே (திராவிடர் கழகத்தின்) நின்றால் எங்களால் வெற்றி பெற முடியாது என்று உங்களால் சொல்ல முடியாது. 1952 - இல் காங்கிரஸ் ஆட்சியை ஆறவுன்ஸ் அரசாங்கம் அராஜக அரசாங்கம் என்று எல்லாம் கூறித் தோற்கடித்தேனே. 375 - சட்டசபை ஸ்தாபனத்தில் 175- பேர்களே காங்கிரசும் பாக்கி 200 - எதிர்கட்சியும் வரும்படியாகச் செய்தேனே!

 

இப்படி நாங்கள் ஜெயிக்க வைத்து இருக்கும் போது நாங்கள் நின்றால் 6-7 பேராவது ஜெயிக்கமாட்டோமா? இந்த கம்யூனிஸ்ட்கள் எங்கள் வீட்டு வாசலில் அல்லவா காத்துக் கொண்டு கிடந்தார்கள்? இப்படி மெஜாரிட்டியாக வந்ததும் என்னை அல்லவா மந்திரி சபை அமைக்கும்படி இவர்கள் எல்லாரும் கூறினார்கள். நான் கூறினேன், மந்திரிசபை அழைப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் என்ன திட்டம் என்று வகுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு இந்தக் கம்யூனிஸ்ட்கள் பார்ப்பனர்களுடன் சேர்ந்த கொண்டு முதலில் மந்திரி சபையை ஏற்றுக் கொள்வோம். பிறகு திட்டங்கள் வகுக்கலாம் என்றார்கள். நான் கூடாது முதலில் தான் திட்டம் வகுக்க வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க இடம் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வற்புறுத்தினேன்.

 

இந்தக் கம்யூனிஸ்ட்கள் தந்திரமாகப் பார்ப்பனர்களுடன் உறவு கொண்டு கொலைகாரப் பார்ப்பான்களான பிரகாசத்தை முதன் மந்திரியாகவும் அடுத்த மந்திரியாகவும் அடுத்த மந்திரியாக தென்னேட்டி விஸ்வநாதம் ஆகியவர்களைக் கொண்டு வர முயற்சித்தார்கள். நான் உடனே பத்திரிகையில் எழுதினேன். வெற்றி பெற்ற இந்த அய்க்கிய முன்னணிகள் மந்திரிசபை அமைப்பைதைவிட தோற்றுப்போன காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் பரவாயில்லை என்று எழுதினேன். உடனே இராஜாஜி தாம் முன்னுக்கு வந்து கவர்னரிடம் தம்மை நாமிஷேனில் மெம்பராக ஆக்குங்கள். என்னிடம் பொறுப்பைக் கொடுங்கள். நான் எப்படியும் சரி பண்ணி மந்திரிசபை அமைத்த விடுகிறேன் என்று கேட்டார். பிரகாசா என்ற கவர்னரும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களைப் பார்த்து மெஜாரிட்டியாக நீங்கள் வந்தபோதும் நீங்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம் குறைவாக இருந்தாலம் ஒரே கட்சிக்காரர்கள் என்று கூறி ஆச்சாரியாரைக் கூப்பிட்டு அவரை மேல்சபை மெம்பராக நாமிநேஷன் செய்து மந்திரிசபை அமைக்க அவருக்கு அனுமதி அளித்தார்.

 

இராஜாஜி (மந்திரி சபை) பொறுப்பை ஏற்றுக் கொண்டு படையாச்சிக்கு ஒரு மந்திரி தருகின்றேன் என்றார். அவர்கள் 10-12 பேர்கள் வந்து சேர்ந்தார்கள். வெள்ளாளருக்கு ஒரு மந்திரி என்றார். வெள்ளாளர்கள் எல்லாம் அவருடன் போய்ச் சேர்ந்தனர். மற்றும் பர்மிட் லைசென்ஸ் இப்படிக் கூறிப் பலரைச் சேர்த்து மந்திரிசபை அமைத்துவிட்டார். பதவிக்கு வந்தவுடனே நாம் எந்த உணவுக் கன்ட்ரோலையே காரணம் காட்டி காங்கிரசை எதிர்த்தோமா அந்த உணவுக் கண்டிரோலை எடுத்தார். நாங்கள் இராஜாஜியைப் பாராட்டி எழுதினோம். பிறகு பலமாக அமர்ந்து கொண்டோம் என்ற கருத்தில் பேயாட்டம் ஆட ஆரம்பித்தார். நமது கல்வியில் கைவைத்து 6000- பள்ளிகளை ஒரு நேரம் தான் படிக்க வேண்டும் - பாக்கி நேரம் அவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

 

பிறகு நாங்கள் தான் (திராவிடர் கழகத்தினர்) பலாத்காரத்தில் இறங்குவோம் என்று அச்சுறுத்தி ஒழித்தோம். கண்ணீர்த்துளிகள் நாளை ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என்பதற்கு கார்ப்பரேஷனே (மாநகராட்சி) போதுமே. கார்ப்பரேஷன் இன்று கழுதை பரண்ட களமாக அல்லவா உள்ளது? இவர்கள் நாளை பதவிக்கு வந்தால் எவ்வளவு விபரீதமாகப் போய்விடும்இ ஆச்சாரியார் அவர்கள் கூறுகின்றார். தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும். வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.

 

இப்படிப்பட்டவர்களை உள்ளே விட்டால் ஆபத்து நம்மை முன்னேறாமல் மட்டம் தட்டுவார் என்று எதிர்க்கின்றோம். இந்தக் கண்ணீர்த் துளிகள் யோக்கியமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்னிடமல்லவா வர வேண்டும். நீங்கள் ஆச்சாரியார் ஆட்சி ஒழிய வேண்டும் என்று கூறும் காரணம் எல்லாம் சரி. எங்களுக்கு 5-6 பேர்களுக்கு எப்படியாவது வகை செய்து கொடுங்கள். நாங்களும் உங்களோட கூடிக் கொண்டு ஆச்சாரியாரை எதிர்கின்றோம் என்று அல்லவா வரவேண்டும்? அதனை விடுத்து நமக்குக் ( தமிழர்களுக்கு) கேடு செய்வதே தொழிலாகக் கொண்ட ஆச்சாரியாரிடமா சென்று அவர் காலடியில் விழுவது?

 

ஆச்சாரியார் வருணசிரம தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்றார். அவன் அவன் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று பொம்மை போட்டுக் காட்டி இருக்கின்றார். நீ போய் அவரை (இராஜாஜியை) ஆதரிக்கின்றாய் என்றால் என்ன நியாயம்? ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தால் தவில் அடிக்க வேண்டியவன் தவில் அடிக்கவும், தாளம் போட வேண்டியவன் தாளம் போடவும், பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பவர்கள் பொட்டுக் கட்டிக் கொள்ளவும், பரியாரி (முடிதிருத்துநர்) சிரைக்கவும், வண்ணான் வெளுக்கவும் வேண்டும் என்று தானே சட்டம் போடுவார்?

 

எவன் எவன் என்ன சாதித் தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பரவாயில்லை. நமக்குப் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நீங்கள் (கண்ணீர்த்துளிகள்) பின் எதைச் செய்யத் துணியமாட்டீர்கள்? நேற்று சொன்னாரே பறையன் இனத்தில் வந்த திரு.சண்முகம் பிள்ளை எங்கள் நிழல் பட்டாலே குளிக்க வேண்டும். இத்தனை அடி தூரத்தில் இருக்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்த நிலை மாறி நாங்கள் நாற்காலியில் (பதவியில்) உட்காரும் வாழ்வு பெற்றோம் என்கின்றாரே? பறையருக்கே அந்த நிலை என்றால் மற்ற நமது (மற்ற தமிழர்) நிலை எப்படி உயர்ந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

 

இப்படிப்பட்ட பாதகர்களை இந்த சென்னைவாசிகளான பைத்தியக்காரர்கள் தானே ஓட்டுப் போட்டுத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். மற்றப்படி கிராமத்தில் உள்ள மக்கள் எல்லாம் கூட இவர்கள் வண்டவாளங்களை எல்லாம் உணர்ந்து உள்ளார்கள். இந்தப் பட்டணத்து மக்கள்தானே உணர்ந்து கொள்ள முடியாத நிலை. மற்ற ஊர்க்காரன் இந்த கண்ணீர்த்துளிகள் போய் ஓட்டு கேட்டால் என்ன கூறுகின்றார்கள்? என்ன எங்களை பட்டணத்துக்காரர்கள் என்றா நினைத்துக் கொண்டு பேசுகின்றாய் என்றல்லவா கேட்கின்றார்கள்? நீ பதவிக்குப் போய் நாசமாய்ப் போவதற்கு மூன்று கோடி தமிழ் மக்களையும் அல்லவா காட்டிக் கொடுக்கின்றாய். நீ சொந்தத்தில் தயாரான அண்ணா துரையாக இருந்து செய்தாயானால் எனக்குக் கவலை இல்லை.

 

எங்களிடம் (திராவிடர் கழகத்திடம்) இருந்து தயாரான அண்ணதுரை என்று கூறிக்கொண்டல்லவா இப்படிப்பட்ட பாதகத்தை நீ செய்கின்றாய்? வேறு நாடாக இருந்தால் இவர்களைத் தூக்கில் அல்லவா போடுவார்கள்? பர்மாவில் எட்டு மந்திரிகளை சுட்டுக் கொன்றது போலக் கொன்று போடாமல்) இந்த நாட்டில் இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணுகிறவர்களுக்கு அல்லவா இங்கு மரியாதை நடைபெறுகின்றது?

 

(16-11-1961 அன்று சென்னை - இராயபுரத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு விடுதலை 18-11-1961) பெரியார் களஞ்சியம் பொகுதி : 9 பக்கம் : 85)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_09.html

நாங்கள் சாதி ஒழிய வேண்டும் என்று போராடுகின்றோம். சாதி ஒழிப்புக்காகவே 3000 – 4000 பேர்கள் சிறைக்குச் சென்று பல கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஏற்று வெளி வந்து இருக்கிறோம். அதன் காரணமாகவே நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, எங்களைக் கேலி செய்த அரசாங்கத்தாரிடையே கூட மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நீ இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் உருவாகியுள்ளதை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் ஆச்சாரியாருக்குத் துணை போகிறாய் என்றால் என்ன அர்த்தம்? சாதியைப் பாதுகாக்க இழி தன்மையை ஒழிய விடாமல் கட்டிக் காக்க உதவுகின்றாய் என்பது தானே பொருள்?

நீங்கள் உங்கள் 5 - ஆண்டு காலச் சட்டசபை வாழ்வில் தான் ஆகட்டும், வெளியில் தான் ஆகட்டும், என்றேனும் சாதி ஒழிய வேண்டும் என்று மறந்தும் பேசியிருக்கின்றீர்களா? எங்களது சட்ட எரிப்புச் சிறைவாசத்துக்குப் பிறகு இந்த நாட்டு முதல் அமைச்சர் காமராசர் சாதி ஒழியாத சுயராஜ்ஜியம் என்ன சுயராஜ்ஜியம்? மக்களுக்கு எல்லாம் படிப்பு கொடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போகிறேன் என்கிறார்.

இந்தியப் பிரதமர் நேருவும் சாதி ஒழியாவிட்டால் வந்த சுதந்திரத்தினால் என்ன பலன்? வெளிநாட்டில் தலை நீட்டவே முடியவில்லையே! எப்படியும் இந்தச் சாதியை ஒழித்தாக வேண்டும் என்றார்.நீங்கள் என்றாவது சாதி ஒழிப்புப் பற்றி ஒரு வார்த்தை பேசியதுண்டா? சாதியை ஒழிக்கக் கூடாது, கட்டிக் காக்க வேண்டும் என்று கூறும் இராஜாஜிக்குத் துணை போவது தானே (கண்ணீர்த்துளிகளின்) வேலையாக உள்ளது. சாதி ஒழிய வேண்டும் என்பதில் எங்களை விட இந்தக் கண்ணீர்த்துளிகளுக்குத் தானே நியாயமாக அக்கறை இருக்க வேண்டும். சாதி ஒழிந்தால் பலன் பெறுபவர்கள் அவர்கள் தானே! அதை விட்டு விட்டு சாதி ஒழிப்பு உணர்ச்சி பெருகிக் கொண்டு இருக்கும் இந்தப் பொற்காலத்தை ஒழிக்க பார்ப்பானுக்குத் துணை போகிறாய் என்றால் உன்னை என்ன என்று அழைப்பது?வாக்காளப் பெருமக்களுக்கு நான் பணிவுடன் கூறிக் கொள்ளுகின்றேன்.

நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாலும் சரி பார்ப்பானுக்குப் போட்டாலுங் கூடப் பரவாயில்லை. இந்தப் பாவிகளுக்கு (கண்ணீர்த்துளிகளுக்கு) ஒரு போதும் ஓட்டுப் போடாதீர்கள். இந்தக் கண்ணீர்த் துளிகள் இன்று நமது சமூதாயம் வரலாறு கண்டிராத முன்னேற்றம் அடைந்து வருவதை அரித்து ஒழிக்கின்ற தொழுநோய் போல் உள்ளார்கள். இவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வந்தால் எவ்வளவு மோசமாகப் போகும் என்பதற்கு உதாரணம் சென்னை கார்ப்ரேஷனே போதுமே!

சர்வமும் லஞ்சம், ஊழல்- இதுதானே தாண்டவமாடுகின்றது? "மதராஸ் கார்ப்பரேஷன்" சங்கதி கண்டு நாடே சிரிக்கின்றதே. நான் மதராஸ் (சென்னை) மக்களுக்கு கூட்டங்களிலே கூறினேன். நீங்கள் மதராஸ் கார்ப்பரேஷன் ஊழலாக உள்ளது என்று அதிருப்தி அடைந்து இந்தக் கண்ணீர்த்துளிகளுக்கு ஒட்டுப் போட்டீர்களே பலன் என்ன? சாணியிலே கால் வைத்து விட்டோமே! என்று அஞ்சி எட்டிக் குதிக்கப் போய் மலத்தில் அல்லவா கால் வைத்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டேன். அது போலவே இந்தக் காஞ்சிபுரம் வாசிகளுக்கு நான் கூறுகின்றேன்.

நீங்கள் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்காமல் கண்ணீர்த்துளிகளை வெற்றி பெறச் செய்தீர்கள். இப்படி நீங்கள் செய்ததன் மூலம் நீங்கள் அடைந்த பலன் என்ன?உங்கள் தொகுதியில் குறைப்பாட்டை எடுத்துச் சொன்னார்களா?அல்லது நாட்டுக்காவது நலன் பயக்கும் பல திட்டங்களைப் பற்றி விவாதித்தார்களா? நான் தான் முதலில் சொன்னேன். இவர்களின் சட்டசபை யோக்கியதைப் பற்றி. இப்படிப்பட்டவர்களையா மீண்டும் தேர்தலில் வெற்றி அடையச் செய்யப் போகிறீர்கள்?

எனவே காஞ்சிபுரத்துக்கு இருக்கக் கூடிய பழியைத் தீர்க்க சமூதாய நலனிலும் சாதி ஒழிப்பிலும் அக்கரையுள்ள காங்கிரசுக்கே நீங்கள் வேலை பண்ண வேண்டும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக ஆங்காங்கு கமிட்டிகள் அமைத்துக் கொண்டு காமராசர் தலைமையில் இயங்கி வரும் இந்தக் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை எல்லாம் எடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுபோலவே ஆச்சாரியார் காலத்தில் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் மீண்டும் அவர் பதவிக்கு வருவரானால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் முதலியவைகள் பற்றியும் விளக்க வேண்டும்.

(26-11-1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை"- 04-12-1961)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_10.html

குறிப்பாகவும், சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப்பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப்பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப்பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக்கள் என்போர்களின் ஆயிரத்திற்கொருவருக்குக்கூடக் குறைந்த அளவு ஞானமும் இல்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜனசமூகத்திற்குக் கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

 

கடவுள் நம்மைப்போல் மனித உருவத்தோடு இருப்பதாயும், அதற்குப் பெண்டாட்டி, பிள்ளை, தாய், தகப்பன், வீடு, வாசல், சொத்து, சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுவதைத்தான் இந்துமதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும், தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.


இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையேதான். இந்தப்பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்பதும், நமது தேவைகளையெல்லாம் நமது பிரயத்தனமில்லாமல் கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பைத்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதனைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார். அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, தேங்காய்பழம் உடைத்துப் பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்குச் செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது. மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப் போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமே இல்லை.

 

மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார்! அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான்.

 

கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருவிதமாக இருந்துவருவதை நாம் காண்கிறோம். இவை எப்படிக் கடவுள் - கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ- புண்ணியம் என்பது தேசத்திற்கொருவிதமாகவும், மதத்திற்கொருவிதமாகவும், ஜாதிக்கொருவிதமாகவும் தான் கருதப்படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம், சிலர் தனது சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள். சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்.

 

ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக்கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும் இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும் நடந்தபடியும் நடக்க வேண்டியதுதானே என்றும் சொல்லிவிடுவார்கள்.

 

பெரியவர்கள் யார் என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ்டத்திற்கு அளவேயில்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும், நடந்ததையும் கவனிக்கப்போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் விவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாகச் சிலர் "வேதம்" என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லாரும் நடக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது நான் பார்க்கலாமா? என்றால் அது கடவுளால் சொல்லப்பட்டது அதை நீ பார்ப்பது பாவம் நான் சொல்வதைத் தான் நம்பவேண்டும் என்பார்கள்.

 

உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள்! ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறிஸ்து மகம்மது முதலிய மதங்கள் இந்தியா தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக்கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் உடனே அவனை வேதப்பிரஷ்டன் என்று சொல்லிவிடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திரமானதும், இயற்கைக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசியமாய் செலவாகியும் வருகின்றன.

 

மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு வேதமா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது.

 

பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும் போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைக்கூப்பிக் கும்பிடுகிறதோ அதுபோலவே நமக்குத் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே பக்தி – தொண்டு அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள பக்தி செய்யத்தக்க கடவுள் அவர்களுக்குச் செய்யும் தொண்டதான் கடவுள் தொண்டு. அம்மக்களின் விடுதலை தான் மோட்சம் ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப்படாமலிருப்பதும் தான் அகிம்சை.

 

மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சையதகாது. பகுத்தறிவுள்ள மக்களைக் கஷ்டப்படுத்தாமல் அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும், அடிமைத்தனத்தையும் நீக்க உழைப்பதும் தான் அகிம்சையாகும். "மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு மாட்டை வண்டியில் கட்டி சுமக்கமாட்டாத பாரம் வைத்துத் தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அகிம்சையாகாது."

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பது தான் அகிம்சை. மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம்! தெருவில் நடப்பது பாவம்! என்று சொல்லிக் கொண்டு பட்டை நாமம் போட்டுக்கொண்டும், பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டும், வாயால் ராம்.. ராம்.. என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆசாரமும் பக்தியுமாய்விடுமா?

 

நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒரு வேளைகூட சாப்பிடச் சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக் கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும்படி மடங்களும், சத்திரங்களும் கட்டுவதும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு பாயசத்திற்குப் குங்குமப்பூ போடவில்லை, பொங்கலுக்கு பாதாம் பருப்பு போடவில்லை என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்குப் பொங்கிப்போடுவதும் சமாராதனை செய்வதும் தர்மமாகுமா?

 

இவற்றை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக் கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம். இந்துக்கள் என்போர்களோ, இந்து மத ஆச்சார்யர்கள் என்போர்களோ சற்றும் கவலையற்று தங்களது வாழ்வுக்குச் சிலதைத் தொழிலாய் வைத்துக் கொண்டு காலங் கழித்து வருகிறார்கள்.

 

இப்படி நடந்து வருவதால் தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப்பட்ட வகுப்புகளுக்கும் அனுகூலமாயிருப்பதால் இவ்வா பாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு இவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும், மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்பந்தமான சடங்குகள் பெயராலும், மதப் பெயராலும் தெய்வங்கள் பெயராலும் வருடம் ஒன்றுக்கு 10 - கோடி ருபாய்க்கு அதிகமாகச் செலவாகி வருகிறது என்று சொல்வது அதிகமாகாது.

அதாவது எவ்வளவு யாத்திரை, ஸ்தலம், எவ்வளவு வேண்டுதல், ஸ்தலம் எவ்வளவு, உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச் சடங்குகள் இவற்றுக்கேற்படும் செலவு மௌனக்கேடு இவற்றைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 - கோடி ருபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும் தானே நம் மக்கள் இவ்விதக் கஷ்ட நஷ்டமெனக் கேடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது? அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது? இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும், இம்மாதிரிக் கஷ்ட நஷ்ட மௌனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்ககத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைப்பெறச் செய்தல் என்பது.

 

இவற்றை உத்தேசித்தே இந்து மத பரிபாலனைச் சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம்கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவு – செலவுகளைத் தணிக்கைப் பார்க்கக்கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

 

ஸ்ரீமான்கள் எஸ். சீனிவாசய்யங்கார் சி.இராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சுயராஜ்யக் கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டும் கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக் கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான் நமது மதத்தின் பெயரால் நம் மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்குக் கணக்குக் கேட்பதுகூட நமது அய்யங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்குக் கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும்.

 

ஆதலால் தர்ம பரிபாலனமென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப்படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் அய்ந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே உங்கள் சங்கம் நீடுழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறித் தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

 

(23.05.1926 ஏழாயிரம் பண்ணையில் நடந்த ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையுரை. குடிஅரசு 30.05.1926)

http://thamizachi.blogspot.com/

ஏதோ சில சந்தர்ப்பங்களில் மணமான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்சமும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04-02-1946- இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். இந்த உரிமைக் கூட பெண்களுக்குத் தரக்கூடாதென இந்து மகா சபைக்காரரும் சனாதனிகளும் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார்களாம். இந்த சட்டத்தைச் சட்டசபை நிராகரித்து விட வேண்டுமெனத் தேசபக்த மாளவியாவும் கேட்டுக் கொண்டாராம்.

பெண்களுக்குக் கலியாணம் விடுதலைக்கு அனுமதியில்லாமலும், ஒரு கணவன் இருக்கும் போது மற்றொரு கணவனை மணந்து கொண்டு வாழ உரிமையில்லாத பொழுது கணவனுக்கு மாத்திரம் மற்றொரு மனைவி கட்டிக் கொள்ள அனுமதியிருப்பதுமான சட்டம் எவ்வளவு புரச்சிதரமான மாறுதலானது என்று பேசப்பட்டாலும் அது உண்மையில் பயனற்றது என்பதே நமது கருத்து. இந்தச் சட்டமானது இதுவரையிலும் காந்தியாரும், காங்கிரசுக்காரர்களும் இந்து சீர்திருத்தக்காரரும்- தீண்டாமையைப் பற்றிப் பேசி வந்த சூழ்ச்சியைப் போலும், சூழ்ச்சி இல்லாவிட்டால் அறியாமையைப் போலும் ஒரு வீண் வேலையைப் போல் தான் ஆயிற்றே ஒழிய வேறொன்றுமில்லை. நிறைவேறியிருக்கும் புதிய சட்டத்தில் பெண் தனித்திருக்கலாம் என்றிருக்கிறது. இதனால் பெண்ணுக்கு இலாபமென்ன? தனியே இருந்து வேதனைப் பட வேண்டியது தவிர அல்லது புருஷனால் கருதப்படும் கெட்டகாரிமென்னும் விபச்சாரமென்று சொல்லப்படும் குற்றத்திற்குப் பெண்களை ஆளாக்கக் கணவன் உள்பட மற்றவர்கள் ஆதாரங்கள் கவனிப்பதைத் தவிரவேறென்ன முடியும்?

ஜீவனாம்சம் என்று சொல்லுவதும், இதற்கு முன் இருந்து வருகிற ஜீவனாம்சம் ஒன்றும் இல்லை. ஜீவ சுபாவங்களின் இயற்கை உணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சி திருப்திக்கு வசதியில்லாத கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் வைத்துக் கொண்டு எந்தவிதமான மாறுதல் செய்தாலும் வருணாசிரமத்திற்குப் புதிய பாதுகாப்பு வியாக்கியானமும் ஏற்படுவது போலும் புராணங்களுக்குத் தத்துவார்த்தம் சொல்வது போலுந்தான முடியுமே தவிர வேறில்லை. ஆகவே பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காகத் தாங்கள் முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளைத் தகர்த்தெறிய முற்பட்டாலொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும்- உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டு வரும். ஆண்களாலும் எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய புரச்சியாலும் விடுதலை ஏற்படாது என்பது எமது கருத்து.

(06-04-1946- "குடிஅரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எமுதிய துணைத் தலையங்கம்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_12.html

நான் சொல்வதற்கு முன்பு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன் படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கிவிடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதைச் சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்று கிறதோ அதைச் செய்ய வேண்டும். நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன் என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஏன் சிந்திக்க வேண்டும்?

ஏன் என்பதை வலியுறுத்தி முதலில் சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம் பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள் அல்ல; கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதாயங்களைப் பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள் சொல்லுகிறோம்.

எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள். இந்த உணர்ச்சி வந்து இருந்தால் மக்களுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உணர்ந்திருப்பார்கள்.

சொந்தப் புத்தி!

இதே மாதிரி உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட இடமில்லாமலும் ஏற்பட விடாமலும் நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் சொன்னார்; நான் கடவுள் அவதாரம்; நான் கடவுளாக இருக்க வேண்டும்’’ என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தைப் புகுத்திய தன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல; 2000, 3000 வருஷங்களாக இப்படி, மனிதன் என்பவன் அருமையான அறிவைப் படைத்தவன்; அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத் தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ள வேண்டியவனாக ஆகி இருக்கிறான். பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு ஆரம்பமாகிறது. பகுத்தறிவாளர் கழகம் ஆரம்பமாகிறது என்று சொன்னால் மனிதர்களுடைய கழகம் இன்று ஆரம்பமாகிறது என்று அர்த்தம். மனிதர்கள் என்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதைப் பற்றி இன்றைக்குப் பேசப்படுகிறது.

மனிதனும் மிருகமும்!

பகுத்தறிவு சிந்தனையே இல்லாதவர்களுக்கு மிருகம் என்றுதான் பெயர். ஏன்? அறிவிலே பகுத்தறிவு இல்லாத ஜீவன் மிருகம், பகுத்தறிவுடையவன் மனிதன். அறிவிலே பிரிவுபட்டிருக்கிறபடி ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நாலறிவு, அய்ந்தறிவு, ஆறறிவு என்பது புல்பூண்டுகளையெல்லாம் ஓரறிவு என்று சொல்லலாம். அதற்கு ஒன்றும் தெரியாது. உண்ண வேண்டியது தான். பூச்சிப் புழுக்கள் அப்புறம் மூன்றறிவு என்பார்கள். குணம் கொஞ்சம் கொஞ்சம் மாறும். சிலதுக்கு நாலு அறிவு இருக்கும். சிலதுக்கு அஞ்சு அறிவு இருக்கும்.

ஆனால் சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய ஜீவன்கள் உண்டு. நம்மால் செய்ய முடியாத காரியங்கள் எல்லாம் சில ஜீவன்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், நம்மால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் நாம் தாவமுடியாத அளவுக்குத் தாவும். யானையை அடிக்கும் சிங்கம். இப்படி இந்த மாதிரி மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில விஷயங்கள் மற்ற அறிவுள்ளவைகளுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனித னுக்குத்தான் உண்டு. வேறு யாருக்குமே இல்லை.

மதியை இழந்த மனிதன்!

அப்படிப்பட்ட மனிதன் மதியை இழந்துவிட்டான். அதைப் பயன்படுத்தாமல் போய்விட்டான். பல காலங்களில், அதனால் மனிதன் வளர்ச்சியடையவில்லை. ஆனால் மனிதன் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் மான உணர்ச்சியைப்பற்றிக்கூட லட்சியம் பண்ண முடியவில்லை. சாதாரணமாக நாம் பகுத்தறிவுடையவர்கள். உலகத்தை எல்லாம் கூட தெரிந்திருக்கிறோம். பார்க்கிறோம். செய்தி எல்லாம் வருகிறது. நாம் மாறவில்லை.

நாம் சூத்திரர்களா?

நமக்குப் பெயர் சூத்திரன், நாம் என்றால் - சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்; எப்படி என்றால், சாத்திரப்படி! யாரோ சொன்னாங்கன்னா என்றால், கடவுள் சொன்னார். இதை எல்லாம் நம்புவதன் மூலம் மானம் ஈனம் எல்லாம் இழந்துவிட்டு நம்முடைய வளர்ச்சியைப் பாழாக்கிவிட்டோம்; வயிற்றுப் பிழைப்பைத்தான் பிரமாதமாக எண்ணி விட்டோம். அது மிருகங்களுக்குத் தான் உண்டு. நாம் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கிறோம். இது வரைக்கும் முன்னால் பேசிய நண்பர் கூட சொன்னார்.

சிந்தனையும் பகுத்தறிவும்!

இந்த நாட்டில் எவனுமே பகுத்தறிவைப் பற்றிப் பேசவே இல்லை. இன்றைய தினம் வரைக்கும். யாராவது பேசினார்களென்றால் 3000, 2000 வருடங்களுக்கு முன்னே அதுவும் அந்தக் காலத்துப் பகுத்தறிவுதான். அதுவும் இன்றைக்குச் சரியானபடி பின்பற்றுவது இல்லை. வேறு யாரும் இவைகளைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. ஏன் அப்படி ஆகிவிட்டது என்றால் அவைகள் பகுத்தறிவுக்கு விரோதமான கொள்கைகள், செயல்கள், கடவுள்! அவர் உண்டாக்கினார்; அவர்தான் சக்தி உடையவர்; அவர் இப்படிச் சொன்னார்; அப்படிப் பண்ணினார்! அவருடைய மகன் இப்படிச் சொன்னார்; அவருடைய தூதன் இப்படிச் சொன்னார்.

அவருடைய அவதாரம் அப்படிச் சொன்னது! இந்த மாதிரி புத்திகளைக் கொண்டு வந்து மக்களுக்கிடையே புகுத்தியதால் இவனுடைய அறிவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அவர்களே எல்லாம் சொல்லிவிட்டார். அந்தப்படியே நடந்தால் போதும்; அதனாலே மனி தன் வளர்வதற்கு வாய்ப்பில்லை. எப்படி வாய்ப்பில்லை என்று கேட்பீர்கள். பகுத் றிவைப் பயன்படுத்த முன் வந்தவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக் றார்கள்! மற்ற நாட்டார் இன்றைய தினம் ஆகாயத்தில் 2 லட்சத்து 30,000 மைல் தாண்டி சந்திர மண்டலம் என்ற ஒரு உலகத்திலே உலாவிவிட்டு வருகிறார்கள். மணிக்கு 5000 மைல் 6000 மைல் பறக்கிறார்கள். இதில் எதைப் பண்றான் நம்மவன்?

ரிஷிகள், முல்லாக்கள், பாதிரிகள்

நமக்கு நண்பர்கள், கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள், அறிவைச் சொல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான ரிஷிகள்; ஆயிரக்கணக்கான முல்லாக்கள்; ஆயிரக்கணக்கான பாதிரிகள்; ஆயிரக்கணக்கான பண்டார சன்னிதிகள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதங்கள் இருந்தும் நாம் அடைந்த பயன் என்ன? ஒன்றும் முடியவில்லையே! காரணம் மனுஷன் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்! நம்மாலே கணக்கு எடுக்க முடியவில்லை. எவனோ ஆராய்ச்சிக்காரன் கணக்கெடுக்கிறான்; ஒருத் ன் லட்சம் வருஷங்கள் என்கிறான். ஒருத்தன் 18 லட்சம் வருஷங்கள் என்கிறான்.

அதற்கு முன்னே “உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றே மனிதன் தோன்றி னான்’’ என்கிறான். கடவுள் உண்டாக்கினான் என்கி றான். அன்று முதல் இன்று வரைக்கும் கண்ட பலன் என்ன? சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது. நம் நாட்டிலேயே எவ்வளவு வளர்ச்சிக்கான சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 100, 105 வருஷத்திலேயே இவ்வளவு வளர்ச்சியிருந்தால் மனுஷன் தோன்றிய லட்சக்கணக்கான வருஷத்திலே அல்லது 3000, 4000 வருஷத்திலே எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும்? ஏன் வளரவில்லை? நம்ம நாட்டில் என்ன கடவுள் இல்லை? பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. மகான்கள் இல்லையா?

மூடநம்பிக்கை!

ஏராளமான மகான்கள், நினைச்சவனெல்லாம் சாமியார்; நினைச்சவன் எல்லாம் மகாத்மா; நினைச்சவனெல்லாம் அந்த பக்தன்; இந்தப் பக்தன். இத்தனை பேர் இருந்தும் ஒரு சாதனை கூட நம்மால் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லையே! அவதாரங்களும், அதிசயங்களும் நாம் இன்றைக்கு அனுபவிக்கின்ற அதிசயமான பொருளெல்லாம் மற்றவன் செய்து நாம் அனுபவிக்கிறோம். உங்க கடவுள் மகனும் பொறந்தான்; கடவுள் தூதன் பொறந்தான்; கடவுள் அவதாரங்கள் ஒரு வண்டி பொறந்தார்கள்; தினமும் மாட்டு ரிஷி களென்றும், முனிவர்கள் என்றும் நினைச்சா சாபம் கொடுக்கிறவனும் நினைச்சா மலையைத் தூக்கி மலை மேல் போடறவனும், எவ்வளவு அற்புதமான மனிதர்களெல்லாம் தோன்றினார்கள்! அப்பொழுதும் ஒரு அற்புதம் கூட இன்னும் நடக்கவில்லையே.

அறிவின் மேன்மை!

நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா? இருட்டில்தான் உட்கார்ந்திருப்போம். சிக்கிமுக்கிக் கல்லில்தானே நம்ம வாழ்வு இருக்கும். பூமியில் எருமையில் ஏறி சவாரி செய்து வந்தவனுக்கு ஆகாசக் கப்பல் வந்தாச்சு. இதெல்லாம் எப்படி வந்தது? தொழுதா வருமா? ஜபம் பண்ணினா வருமா? இல்லை. யாகம் பண்ணினா வருமா? இல்லை, கடவுளே என்று சொன்னா வருமா? ஆகவே மனிதன் மனிதனாக இருந்து அதனாலே அடைய வேண்டிய காரியங்களைச் செய்து, கொள்ள முடியாமல், கடவுள், மதம், சா° திரம், வேதம், தர்மம், பெரிய வர்கள், மகான்கள், இந்த மாதிரியான முட்டாள்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாம் காது கொடுத்து இன்றைய தினம் நாம் மிருகமாக இருக்கிறோம் எப்படீன்னு கேட்பீங்க!

மூட நம்பிக்கையும், முட்டுக்கட்டையும்!

எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள் - “நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது?’’ எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனை குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியா இல்லை என்பான். காக்கா கத்துதுன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான். குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான். முன்னெச்சரிக்கையாக ஒருத்தனையும் தொடமாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான்.

மனுஷன்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது! மற்றும் இந்தக் கிழமையாகாது. அந்தக் கிழமையாகாது; இந்த நேரம் தப்பு; இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது? அறிவைப் பற்றிப் பேசறதுக்கே ஆள் இல்லை. அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.

அன்னியராட்சி!

இப்பத்தான் நல்ல வாய்ப்பா நம்ம நாட்டுக்கு அன்னியன் வந்தான். சில மாறுதலைப் பண்ணினான். அவனை நம்ம மதத்துக்கு விரோதி என்று விரட்டி அடிச்சிட்டாங்க. அப்புறம் வெள்ளைக்காரன் வந்தான்; அவன் பல மாறுதல்களை உண்டு பண்ணினான். அவனையும், மதத்திலே பிரவேசித்தான். சாத்திரத்திலே பிரவேசித்தான். அதுலே அப்படி இப்படின்னு அவனை ரகளை பண்ணினாங்க; அதோட நின்னு போச்சே தவிர அதுக்கு மேலே ஏறலே; நம்ம நாட்டில் இதுவரைக்கும் அவன் இல்லாதிருந்தால் ரொம்பப் பின்னேறி இருப்போம்.

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவனாலே அமைப்பு கெட்டுப் போகுதுன்னு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அயோக்கியர்கள். அவன் இருந்தால் நாம், வாழ முடியாதென்று அவனுக்கு மோசமெல்லாம் பண்ணினாங்க. அப்புறம் எவனுமே தோணல்ல! துணிஞ்சு நாங்கதான் தோன்றினோம். துணிஞ்சு தோன்றினோம். இருக்கிற கொடுமையைப் பார்த்து அரசியலின் பெயராலே மதத்தின் பெயராலே மக்களுக்குச் செய்யும் கொடுமையைப்பார்த்து நம்ம மக்களுக்குப் புத்தி இல்லாமல் அவர்கள் மடையர்களாக இருக்கிறதைப் பார்த்து, இதற்கு ஒரு பரிகாரம் பண்ண வேண்டும். இந்த முயற்சியைப் பண்றவன் தான் மனுஷன். மத்த முயற்சி பண்றவனெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காரன் அப்படீன்னு முடிவு பண்ணி நாங்கள்தான் ஆரம்பிச்சோம்.

சுயமரியாதை இயக்கம்!

என்ன ஆரம்பிச்சோம்? சுயமரியாதை இயக்கம் என்றுதான். மனுஷனுக்கு மானம் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டுமென்று! எத்தனையோ பேர் எல்லாம் எங்களோட சண்டை போட்டாங்க; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது ஒரு பெரிய மந்திரியே என்னிடம் வந்து, “என்னையா சுயமரியாதைன்னா நமக்கெல்லாம் மானமில்லை, மரியாதை இல்லை என்றா அர்த்தம்? இந்தப் பேரே வெட்கக்கேடா இருக்குது! எவனாவது கேட்டா கேலி செய்யமாட்டானா?’’ அப்படி என்று என்னை வந்து கேட்டார். அப்புறம் திருப்பிச் சொன்னேன்; “வருத்தமாக இருக்குது எங்களுக்கு, தயவு செய்து சொல்லுங்க. நீங்க யாரு? எனக்குத் தெரியணும்’’ “என்னத்துக்காகக் கேட்கிறீர்’’ என்றார். கேட்கிறேன்,

சமுதாயத்திலே நீங்க யாரு? எத்தனாவது? உங்க அந்தஸ்து என்ன? உங்க தொழில் என்ன? ‘ரெட்டியாருன்’’னாரு, “மந்திரியா இருந்தா என்ன? நீங்க யாரு? ரெட்டியாருங்கறது. சும்மா நாம் வெச்ச பேரு. நாம் ஏற்படுத்திக்கிட்ட பேரு. சும்மா கவுண்டன், செட்டியார் இந்த மாதிரியெல்லாம். பொதுவாக சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, மதப்படி, சமயத்துப்படி, நீங்க யாரு? எத்தனையாவது ஜாதி?’’

அவர் ஒன்றும் பேச முடியவில்லை. சிரிச்சிட்டாரு. “சிரிக்காதீங்க! நீங்க எத்தனாவது ஜாதி?’’ 4-ஆவது ஜாதிதானே; அது சாத்திரப்படி நீண்ட நாளாக இருக்குது.’’ நாமெல்லாம் அந்த நீண்ட நாளாக இருக்கறதைத்தான் ஒழிக்கணும்னுதான், உங்களுக்கு மானம் வரவேண்டுமென்று தான் இதை நாங்க ஆரம்பித்தோம்.

மேல்ஜாதியும், கீழ்ச் ஜாதியும்!

“அப்படீன்னா உங்க ஜாதி என்ன?’’ “சூத்திரன்’’, சூத்திரன்னா என்ன? “பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்.’’ எத்தனாவது ஜாதி, 4-ஆவது ஜாதி உங்களுடையது! நீங்க பி.ஏ., பி.எல்., படிச்சீங்க. நீங்க மூன்று வருஷம் மந்திரியாப் பார்த்துட்டீங்க! இப்ப மறுபடியும் மந்திரியா இருக்கீங்க! நீங்க மந்திரிப் பதவியில் இருந்தும் இப்ப சூத்திரன், தேவடியா மகன்! ஆனா, உங்ககிட்டே பிச்சை எடுக்கிறவன், உங்களுக்கு வேணும்னாலும் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறவன், அவன் தன்னை மேல் ஜாதிங்கறான். நீங்களும் அவனை மேல் ஜாதின்னு ஒத்துக்கறீங்க! நீங்க அவன் காலில் விழுகறீங்க! அவன் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிக்கிறீங்க?’’ இதற்குப் பதில் இதைத்தான் சொன்னார்.

அதனால்தான் இவ்வளவு கடுமையான முயற்சி நாம் செய்யவேண்டி இருக்கிறது. இன்று ஏற்பட்ட புண்ணா இருந்தா ஒரு கட்டுப்போட்டால் போதும், வெகு நாளா ஏற்பட்ட புண்ணு! நாத்தமும் எடுத்து புழுத்தும் போயிருக்கிறது! அந்தப் புண்ணை அறுத்துத்தானே ஆகணும். அதனால்தான் ரொம்ப நாளாச்சுங்கறதுனால இப்ப அறுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’, அப்படின்னு சொல்லி அந்த மாநாட்டை நடத்தினோம்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்

அப்ப அதுக்கு என்ன கொள்கை? சுயமரியாதை இயக்கம் - அது என்ன? மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும். மதத்தினால் ஏற்பட்டது; அதனால் மதத்தை ஒழி! காங்கிரசினால் ஏற்பட்டது; அதனால் காங்கிரசை ஒழி! காந்தியினாலே; காந்தியை ஒழி! பார்ப்பானாலே பார்ப்பானை ஒழி!

இந்த அய்ந்தையும் ஒழிக்கிறதுதான் சுயமரியாதைச் இயக்கத்தின் கொள்கை. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை - கடவுள், மதம், காங்கிரசு, காந்தி, பார்ப்பான் இவங்களை ஒழிக்கிறது. இவங்கள்ளாம் சுயமரியாதை இயக்கத்துக்குக் கேடான கொள்கைப் பிரச்சாரம் பண்ணி மக்களுக்குள்ளே புகுத்தி, மக்களுடைய ரத்தத்திலே புகுத்தி வச்சுட்டாங்க! ரத்தத்தோட கலக்கி வச்சுட்டாங்க!

அதை ஒழிக்கணும்னா இந்த அய்ந்தையும் ஒழிச்சாலொழிய முடியாது. இதிலொன்றறும் அரசியலைப் பத்தி பேசணும்னு அல்ல. அரசியலே இங்கே வரக் கூடாதுதான். ஆனால், அது இந்தக் காரியத்திற்குத் தேவைங்கறதுனாலே அதைப்பற்றி நான் எடுத்துச் சொல்கிறேன். காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், மதத் தைக் காப்பாத்தணும், ஜாதியைக் காப்பாத்தணும், அந்தஸ்தைக் காப்பாத்தணும், இன்றைக்கு அதனுடைய கொள்கை அதுதான். அதுக்கு முந்திப் பிடிச்சுவச்சாங்க காந்தியை!

அந்த ஆளு ஒரு களிமண் மூளைக்காரன்! அவன் என்னமோ சாமி, பூதம், பக்தி, அது, இது என்று பேசினதுனாலே பிடிச்சுவச்சுட்டாங்க. அவனை மகாத்மான்’னு! அவனும் பயித்தியக்காரனுக்குக்கள் ஊத்துனாப்போல என்னேரம் பார்த்தாலும் கடவுள், கடவுள்’’ என்று, “இராமன், சா°திரம், வர்ணாசிரமம், இந்துமதம்’’ அப்படின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் பிரச்சாரத்துக்கு நல்ல பலம் இருந்தது. பார்ப்பான்கிட்டதான் எல்லாப் பத்திரிகையும் நம்மாள்கிட்டே ஒன்றும் இல்லை. அவங்க பேரைச் சொன்னாலே ஜனங்களெல்லாம் கும்பிடற அளவுக்குப் பிரச்சாரமாயிருக்கு! அதனாலே அவனை ஒழிக்கணும்னு ஆரம்பிச்சோம். கடவுள், மதம் ஒழிக்கணும், வர்ணாசிரமத்தைப் பிரச் சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும். இதை எல்லாம் காப்பாத்தறதுக்காக அடிப் படைச் சட்டம் வச்சுக்கிட்டிருக்கிற ஆட்சி செய்கிற அரசாங்கத்தை ஒழிக்கணும்; இதுக்கெல்லாம் கர்த்தாவாக இருக்கிற பார்ப்பானை ஒழிக்கணும், அதன்படிதான் நடந்து வருகின்றது.

நாளுக்கு நாள். காரணம், அதையே எடுத்துக்காட்றேன். நான் சொல்றேன் கேளுன்னு அல்ல! அந்தப் புத்தகத்திலே இருக்கு. இந்த வேதத்திலே இருக்கு. அந்த சாஸ்திரத்திலே இருக்குன்னு அல்ல, எனக்குத் தோணுது என் அறிவுக்குத் தோணுது. அது மாதிரி உன் அறிவுக்குத் தோன்றினா ஒத்துக்க; இல்லாட்டி வேண்டாம். நான் ஒண்ணும் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்கவேண்டாம்! உங்களை ஏய்க்கறதாக நினைக்கவேண்டாம்! உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! உங்களுக்கு இவ்வளவு சக்தியுண்டு! உங்களால் இந்தக் காரியம் செய்ய முடியும்! இந்தப் பாவிக் கடவுள், மதம், சா°திரங்களாலோ, மற்ற உபதேசம் செய்யறதாலோ பார்ப்பான்களினாலோ நம்ம சக்தி இந்த மாதிரி அடிமையாச்சு!

இதைத்தான் சொல்றோம். மாத்தியாகணும் என்று; மாறாது இருக்கிற ஆளுக உலகத்திலே நாம் தான்! மற்றவன் எல்லாம் மாறிவிட்டான். நாம்தான் இன்னும் மாறவில்லை.

பகுத்தறிவுக் கழகம்

நம்ம நாட்டுக்கு இப்ப வேண்டியிருக்குத் தீவிரமான கொள்கைகள்! பகுத்தறிவுவைப்பற்றிய கொள்கைகள்! அந்தக் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்த முயற்சி பண்றோம். ஆகவேதான் பகுத்தறிவுக் கழகம் வைக்கிறோம். இது இதுக்கு விரோதமோ, அதுக்கு விரோதமோ அப்படியாகுமோ, இப்படியாகுமோ? என்று யாராவது சொல்லக் கூடும்! எதுக்கு விரோதமாக இருந்தாலும் நியாயத்துக்கு விரோதமல்ல!

நாம் பகுத்தறிவுக் கழகம் என்று ஏன் சொல்கிறோம்! உன் அறிவைக் கொண்டு சிந்தனை பண்ணிப்பாரு! அதுதான் பொருத்தம் என்று சொல்கிறோம்! மிருகத்தோடு சேர்ந்த மத்த பசங்க என்ன பண்ணுறாங்க? வர்ணாசிரம தர்ம சபைன்னு வைக்கிறாங்க! சாதியைக் காப்பாத்தற சபையென்றும் வைக்கிறாங்க! சனாதன தர்மசபையென்கிறான். சாதியைக் காப்பாத்த வேண்டும். முன்னோர்கள் சொன்னதைக் காப்பாத்த வேணு மென்கிறான்.

கடவுள் கதை என்கிறானே! ராமன் இப்படிப் பண்ணினான்; கிருஷ்ணன் இப்படிப் பண்ணினான் என்று இதையெல்லாம் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது! எதைப் பார்த்துச் சொல்றேன்னா ஆதாரத்தைப் பார்த்துச் சொல்றேன். உன் புத்தி என்னடான்னா? புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது; மதம், கடவுள், சாஸ்திரம் முன்னோர்கள், பெரியோர்கள், மதத் தலைவர்கள் இவர்கள் சொன்ன காரியத்துக்குப் புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது - படுத்தினா அவர்களுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம் என் மனம் புண்ணாகுது என்பானுக.

இவனும் இவன் மதமும் இவன் மதத்தலைவனோ, வெங்காயமோ மனம் புண்ணாகுமோ? நாசமாகப் போகட்டும்! என் கதி என்னாகிறது? நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது? மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா? அதனாலே உன் புண்ணில் புழுக்கட்டும், எங்கதி எனக்கல்ல; என்னை விடவா உன் மனசு பெரிசு? என் மானத்தைவிடவா உன் மனசு பெரிசு? ஆனதனாலே நம்ம கடமையை நாம் செய்யவேணும். ஆபத்து வரும்; பயப்படாதீங்க. வந்தா என்ன?

நாளைக்குச் சாகிறவன் இன்றைக்கே சாகிறான். கஷ்டம் வரும். இந்த மாதிரி தான் இந்த நாட்டிலேயே மாறுதலே ஏற்படாமல் இருக்கும்படியாகச் செய்ததுக்குக் காரணம் எல்லாம் பலாத்காரம்; படிச்சவன் எல்லாம் அயோக்கியப் பயலாக இருந்தது; காலிப்பசங்கள் எல்லாம் சேர்ந்து மதத்தைக் காப்பாத்தணும்னு பலாத்காரம் பண்ணியது தான் காரணம். இல்லாட்டி, இதெல்லாம் மாறி இருக்குமோ! ஏதாவது ஒண்ணு சொன்னால் கிருத்துவன் வந்தர்றான் சண்டைக்கு. ஏன் என் மதத்தைத் தாக்கு கிறேன்னு? நாசமா போன்னு விட்டுட்டா? இன்னொன்று சொன்னா முஸ்லிம் வந்துடுறான் சண்டைக்கு; ஏன் எங்க மதத்தை இந்த மாதிரி சொல்றேன்னு. இரண்டு பேரும் தொலைஞ்சு, நாசமாகுன்னு விட்டுவிட்டு நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.

அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான். இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான்.

இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம். பெலமா அறுத்தாதானே அது அறும்; அது சொத்தை வச்சிட்டுதே, புழுத்துகிட்டே போகுதே; அதனாலேதான் அடியில் இருந்து ஆரம்பிக்கிறான். அந்த மாதிரி சொன்னால் ஒழிய மாறாது! ஆகவேதான் இந்த இயக்கம் ஆரம்பித்ததற்குக் காரணமும் இன்னும் சில தன்மைகளும், கொள்கைகளும் இதுதான். மதத்தை ஒத்துக்கிட்டா நான் மேல் சாதி, கீழ்ச் சாதின்னு ஏத்துக்கத்தானே வேணும்!

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக ணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

 

http://karuppupaiyan.blogspot.com/2008/01/119.html

திருவாரூர் மகாநாட்டைப் பற்றியும் என்னைப் பற்றியும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பேரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை பல பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. அதை முழு விரிவாக பொது மக்களும் அநேகமாய் பார்த்திருக்கக் கூடும். அதன் முக்கியமான சாரம் எனக்குப்பட்ட வரையில்,

1. இந்தியாவையும், இந்து, பார்ப்பனர்கள் ஆகியவர்களையும் நான் தாக்கி பேசுவதாயும் அதற்காக ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் என்னை எதிர்க்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ் சர்க்கார் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை அடக்க வேண்டுமென்றும் இக்காரியங்கள் செய்யப்பட அவர் தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்ய முனைந்து நிற்பதாயும் கூறுவது.

2. திராவிட மக்களுக்கு ஆகவும் திராவிட நாட்டுக்கு ஆகவும் நான் செய்து வரும் தொண்டிற்கு எப்படியாவது கேடு ஏற்படும் படியாகச் செய்து திராவிட நாடும் திராவிட மக்களும் என்றென்றும் ஆரிய நாட்டிற்கும் ஆரியர்களுக்கும் அடிமையாகவே இருக்கும்படி செய்ய வேண்டுமென்ற கருத்தாய் இருக்க வேண்டுமென்பது.
இவைகளுக்கு நான் சமாதானம் சொல்ல கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் திராவிட மக்கள் நலனுக்கு ஏற்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குத் தலைவனாயிருப்பதாலும் விவாத விஷயங்கள் அந்த ஸ்தாபனத்தின் மாநாட்டு விஷயங்களைப் பற்றியிருப்பதாலும் தோழர் நாயுடுவின் அறிக்கையால் பொது மக்களுக்குத் தப்பப்பிராயம் ஏற்படாமல் இருகக்ச் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்.

டாக்டர் நாயுடு காட்டும் காரணங்கள்

டாக்டர் நாயுடு அவர்கள் மேற்கண்ட சாரம் பொருந்திய தனது அறிக்கைக்குக் காரணமாக என் திருவாரூர் மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் சில குறிப்புகளும் கருத்துகளும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவையாவன:-

1. ஆதி திராவிடர்களுக்குத் தனி தொகுதி வேண்டும்.
2. பார்ப்பனரல்லாதாருக்குத் தனித் தொகுதி வேண்டும்.
3. முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும் ஒரே ஜாதி (திராவிடர்கள்) அவர்கள் சமயத்துறையிலும் அதிக வித்தியாசமில்லை.
4. திராவிட நாட்டுக் கிறிஸ்தவர்களும் திராவிடர்களே. ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக நான் பேசியிருப்பவைகளை எடுத்துக் காட்டுகிறார்.

மற்றும் அவர் அடுத்தாற்போல் காட்டும் காரணங்கள்:

அ. திராவிடர்கள் இந்துக்களல்ல.
ஆ. இந்து மதம் ஆரியர் மதம்.
இ. திராவிடர் - ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லீம்கள், கிறி°தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந் நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.
ஈ. இந்திய தேசியம் என்பது திராவிடர்களுக்குக் கேடானது.
உ. திராவிட நாட்டில் இந்து மகாசபைக்கு வேலை இல்லை என்கின்றவைகளான இவைகள் எனது தலைமை உரையில் காணப்படுவது மற்றொரு காரணமாகும்.

ஆம்; சென்ற வருஷத்திய சென்னை மாநாட்டு தலைமை உரையிலும் இவ்வருஷத்திய மாநாட்டு தலைமை உரையிலும் இக்கருத்து கொண்ட வாசகங்கள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்.

இதற்கு பதினாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட அம்மாநாட்டில் ஏகமனதான பல தீர்மானங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. அவையாவன:-

வரப்போகும் சென்சசில் திராவிடர்கள் தங்களை இந்தியர்கள் என்றோ இந்துக்கள் என்றோ சொல்லக் கூடாது. திராவிடர் என்றே சொல்ல வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் திராவிட மதம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்து மதம் என்று சொல்லக் கூடாது. - என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறி இருக்கிறது.

மற்றும் - “இப்போது உள்ள இந்துலா என்னும் உரிமை சட்டமானது திராவிடர்களுக்கு ஏற்றதல்ல. அதை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதான திராவிட உரிமைச் (திராவிட லா) சட்டம் என்பதாக ஒன்று திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்றும், “திராவிடர்களுக்கு மரியாதையாக ஸ்ரீ என்கின்ற ஆரிய வார்த்தையை ஏற்படுத்தி இருப்பதை எடுத்துவிட்டு திரு என்று போட வேண்டும் என்று சர்க்கார் உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும்” என்றும், “சமய ஒற்றுமை விஷயத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற வார்த்தை நம் நாட்டுக்கு பொருத்தமற்றதாதலால் இனி மேல் திராவிடர் முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற பெயராலேயே சொல்லப்பட வேண்டும்” என்றும், “திராவிட மக்களுக்குள் இனி இந்து மகாசபை பிரசாரத்திற்கு இடம் கொடுக்காமலும் செவி சாய்க்காமலும் இருக்க வேண்டும்” என்றும், “ஆதி திராவிடர்களுக்கு ஆரிய மதப் பெயரான ஹரிஜனம் என்கின்ற பெயர் கூடாது, ஆதி திராவிடர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்றும், “ஆரிய சூழ்ச்சியாலும், ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடையே நுழைக்கப்பட்டுள்ள சமுதாய உயர்வு தாழ்வு வேற்றுமைகள் வேரோடு களைத்தெறியப்பட வேண்டும்.” “திராவிடர்களுக்குள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டும்.”

“இவைகள் காரியத்தில் நடைபெறுவதற்கு அவசியமான வழிகளை வகுத்து கையாளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
என்றும் ஆரிய திராவிட தேச சமய சமூக கலப்பினால் ஏற்பட்ட துன்பங்கள் ஒழிவதற்கு ஆக “திராவிடர்களின் கலை, நாகரிகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகள் காப்பாற்றப்படவும், முன்னேற்றமடைவதற்கும் ஆக திராவிட நாடாகிய சென்னை மாகாணத்தை நேரே பிரிட்டிஷ் சென்னை சம்மந்தம் இருக்கும்படியான ஒரு தனி நிர்வாக நாடாக பிரிக்கப்பட வேண்டும்” - என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறி இருக்கின்றன.

ஆதலால் எனது கொள்கையும் எனது கட்சியின் கொள்கையும் டாக்டர் வரதராஜலு வாதங்கள் செய்தார்கள். இதற்கு காந்தியார் ஒவ்வொரு இடத்திற்கு ஒரு மாதிரி பதில் சொன்னார். திருப்பூரில் வருணாச்சிரம தர்மம் தான் தனது இந்துமத கொள்கையென்றும், வருணப்படிதான் அவனவன் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அப்போது ஒருவர், “அப்படியானால் நான் எந்தக் காலத்திற்குத்தான் இந்த சூத்திர இழிவிலிருந்து நீங்குவது” என்று கேட்டு விட்டார். அதற்கு காந்தியார், “ஏழு தலைமுறை பிராமண சம்பந்தமாகவே பிறந்தால் பிராமணனாகலாம்” என்று பதில் சொன்னார். அதனால் கோயமுத்தூரிலும் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது.
அங்கு காந்தியார், சர்.ஆர்.கே. ஷண்முகம் வீட்டில் இறங்கி இருந்தார். இந்த கிளர்ச்சியைப் பற்றி தோழர்கள் காந்தியாரும், சி. ராஜ கோபாலாச்சாரியாரும் பேசும்போது ஆச்சாரியார், “சண்முகம் செட்டியாரும் அந்தக் கொள்கைக்காரர்தான்” (இந்து மத விரோதிதான்) என்று சொன்னார். அதற்குக் காந்தியார் “என்ன சண்முகம் நீங்களும் அப்படியா?” என்று கேட்டார். அதற்கு ஆர்.கே. சண்முகம், ”ஆம்” என்றார். அப்படியானால் உங்களுக்கு யார் குரு என்றார். அதற்கு உடனே அவர், “ஈ.வெ.ராமசாமி தான்” என்றார். காந்தியாருக்கு தூக்கிப் போட்டதுபோல் ஆகி, “நம்ம ராமசாமி நேற்றல்்ல அவரை எனக்கு தெரிந்த காலம் முதலே அதாவது 1915 ஆம் வருஷம் முதலே அவர் லோகாயுதவாதி” (மெட்டீரியலிஸ்ட்) என்று சொன்னார். “அப்படியானால் அவரைக் கண்டு இது விஷயமாக பேச வேண்டும்” என்றார் காந்தியார். தோழர் எஸ். ராமநாதன் அவர்கள் காந்தியார் கூப்பிடுவதாக சொல்லி என்னை பெங்களூருக்கு அழைத்துப்போய் இதைப் பற்றி காந்தியாருடன் பேசவும் வைத்தார்.

மற்றொரு சம்பவம் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் பேசும் போது “நான் சாவதற்கு முன் சடங்குகளை ஒழிப்பேன். ஒழிக்க முடியாவிட்டால் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன்; சடங்கில்லாத மதக்காரனாகத்தான் சாவேன்” என்றும் சொல்லி இருக்கிறேன். ஆதலால் இந்துமத எதிர்ப்புக்கோ இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பன துவேஷம் காரணமல்ல என்பதையும் மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம் என்பதையும் இவற்றிலிருந்தாவது மக்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.

நாயுடு அவர்கள் “நாயக்கர் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்” என்று சொல்லுகிறார். என்றுமே “இந்துக்களுக்கு எதிரான அபிப்பிராயங்களையே கொண்டு இருக்கிறவன்” ஆன “நான் முஸ்லிம்களோடு சேர்ந்திருக்கிறேன்” என்று நாயுடுகார் சொல்லும் வார்த்தைக்கு ஒன்றும் அர்த்தம் இருப்பதாய் எனக்கு விளங்கவில்லை. ஏனெனில் அவுரங்கசீப்பை சேர்ந்த ஜின்னாக்கள் வெகு நூற்றாண்டுகளாகவே இந்துக்களுக்கு விரோதியாகவும் இருந்தார்கள் என்றால் ராவணனைச் சேர்ந்த ராமசாமிகள் அதற்கு முன்பு இருந்தே இந்துக்களுக்கு விரோதிகளாய் இருக்க வேண்டியவர்களல்லவா?

இந்நிலையில் இருவருக்கும் இந்துக்களுக்கு விரோதமான ஒரு இடம்தான் இருக்க முடியுமே தவிர வேறு வேறு இடம் எப்படி இருக்க முடியும்? இது மாத்திரமா? ஆதி திராவிடருக்கும், கிறஸ்தவர் களுக்கும் எனக்கும்கூட ஒரு இடம் தானே இருக்க முடியும்? நான் எதற்காக முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ, ஆதி திராவிடர்களையோ விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. அரேபியாவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈஜிப்டிலும் இருக்கும் முஸ்லிம்களுடன் நான் சேர்ந்து கொண்டு அவர்களை இந்நாட்டுக்கு வந்து கொடி போடும்படி நான் கூப்பிட்டால் அது தவறாகலாம்.

திராவிட நாட்டிலே இருக்கும் திராவிட இனத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் நான் ஆரிய வர்த்தத்திலே இருக்கும் ஆரிய சமயத்தவரான இந்துவுக்காக சண்டை போட வேண்டுமென்று நாயுடு கருதுகிறாரா என்பது எனக்கு விளங்கவில்லை.
மற்றும் “இந்து மகாசபையை நாயக்கர் எதிர்க்கிறார்” என்கிறார். இங்கு சில வரிகளுக்குக் கீழாகவே நாயுடுகார்,

“இந்து மகாசபை மாநாடுகள் கூட்டி ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் லீக்கினுடையவும் கோரிக்கைகளை எல்லா வகையாலும் எதிர்த்து நிராகரிக்க வேண்டும்” என்கிறார். ஆகவே இப்படிப்பட்ட காரியத்திற்காக நிறுவப் போகும் இந்து மகாசபையை எதிர்க்காமல் அதற்கு நான் இடம் கொடுக்க வேண்டியது அவசியந்தானா? இதற்காக கூட்டப்படும் மாநாடு ஒழுங்கான மாநாடு ஆகுமா? என்று பொது மக்களைக் கேட்கிறேன்.
மற்றும் நாயுடு அவர்கள், “பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தர்க்கம் திராவிடர் ஆரியர் என்கின்ற யுத்தமாக மாற்றப்படுகிறது. சரித்திரத்திலேயே இந்தக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை” என்று தனது அறிக்கையில் எழுதுகிறார்.
இது நாயுடு ஏதாவது தேச ஜாதி (தேசிய) சரித்திரங்களைப் பார்த்து இப்படி எழுதுகிறாரா அல்லது “பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிறது” என்று பழமொழி போல் உலக மக்களை மூடர்கள் என்று கருதிக் கொண்டு இப்படி எழுதுகிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை.

ராவணன் கதையையும், காலத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு தனது வாதத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாருக்கு ஆரியர் - திராவிடர் என்பதற்குச் சரித்திரத்திலேயே இடம் காணப்படவில்லை என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி பொது மக்கள் தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ராமேஸ் சந்திரதத் எழுதிய “புராதன இந்தியா”, “பண்டைய இந்தியாவின் நாகரீகம்”,
ராமேஸ் சந்திர மசும்தார் எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரீகமும்”, சுவாமி விவேகானந்தர் “ராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு, 1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’, ராஜகுமார் முக்கர்ஜி எழுதிய ‘இந்து நாகரீகம்’, ஜேம்ஸ்மர்ரே எழுதிய அகராதி, பண்டர்கார் கட்டுரைகள், டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென்னிந்தியாவும் இந்திய கலையும்”,
பி.டி. ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”, ஜெகதீச சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்”, ஏ.சி. தாஸ் எழுதிய “வேத காலம்”, சி.எஸ். சீனிவாசாச்சாரியார் எழுதிய “இந்திய சரித்திரம்”, “இந்து இந்தியா”, எச்.ஜீ. வெலஸ் எழுதிய “உலக சரித்திரம்”,

மேலும் சகல கலா பொக்கிஷம் என்னும்் “நியு ஏஜ் என்சைக்ளோ பீடியோ”,
சி.ஜெ. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திர பாகுபாடு”, ஹென்றி பெரிஜ் 1865-ல் எழுதிய “விரிவான இந்திய சரித்திரம்”, இ.பி. ஹாவெலஸ் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி.” ஜி.எச். ராலின்சன் எழுதிய “இந்தியா”.
நாகேந்திர நாத் கோஷ்் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்”,
வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய “ஆகஸ்போர்ட் இந்திய சரித்திரம்”, “இம்பிரியல் இந்தியன் கெஜட்”, சர் வில்லியம் வில்சன் “இந்திய மக்களின் சரித்திரம்”,
ராகோசின் எழுதின “வேத கால இந்தியா”, பால்மாகின் கவர்செல் எழுதிய “புராதன இந்தியா நாகரீகம்”, சர். என்றி ஜான்ஸ்டன் எழுதிய “இந்தியாவில் அன்னியர்”,

இவைகள்அறிவு, ஆராய்ச்சி திறம், கல்விப் பட்டம் பெற்ற ஆங்கிலேயராலும் வங்காளிகளாலும் பல ஆரியர் (பார்ப்பனர்)களாலும் எழுதப்பட்டவைகளாகும். திராவிடர்களால் எழுதிய எதையும் இங்கு குறிப்பிடவில்லை. இதுபோல் இன்னமும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் ஆதாரங்கள் கன்னிமேரா லைபெரரியில் மாத்திரம் இருக்கின்றன. சாவகாசப்பட்டால் நாயுடுகார் தயவு செய்து போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.

மற்றும் “பல யுகங்களாகத் திரண்ட ஞானத்தின் அஸ்திவாரத்தைக் கொண்டது இந்துக் கலாச்சாரம்” என்று நாயுடு எழுதுகிறார். பல யுகம் என்பதே ஒரு புரட்டான வார்த்தையாகும். ஏனெனில் இந்து கலாச்சாரக் கதைகள் அல்லது இந்து சரித்திரங்களிலுள்ள விஷயங்களைப் பார்த்தால் அவை ஒரு யுகத்தில் நடந்த விஷயம் பல யுகங்களாக நடந்தவைகள் என்று காணப்படும். ரிஷியோ முனியோ ஆகிய ஒரு மனிதன் பல யுகங்களில் நடந்த பல சம்பவங்களில் இருந்தனவாக இருப்பான்.
அகஸ்தியர், நாரதர், விசுவாமித்திரர், பராசாரர், வசிஷ்டர், யக்கியவல்கியர் முதலிய நபர்கள் தான் கருதி, °மிருதி ஆகியவைகளுக்கு ஆதார புருஷர்களாக இருக்கிறார்கள். இவர்களில் எவருடையதும் பகுத்தறிவுக்குச் சம்பந்தப்பட்டது அல்ல. ‘அராபியன் நைட்ஸ்’ போன்ற கதையாகவே ஒவ்வொரு விஷயமும் காணப்படும்.
மற்றும் இந்து மதம், இதிகாசம் ஆகியவைகளும் பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாகவே இருக்கும். ‘இந்து’ இந்து கலாச்சாரம், இந்து சமயம், இந்தியா என்கின்ற வார்த்தைகள் எந்த இந்து ஆதாரங்களிலாவது இருப்பதாகக் காட்ட முடியுமா என்று கேட்கிறேன்.

இந்து என்கின்ற வார்த்தை ஒரு நாட்டான் என்பதைக் குறிக்கிறதா? ஒரு மதத்தான் என்கின்றதைக் குறிக்கின்றதா? என்று கேட்கின்றேன்.

 

http://karuppupaiyan.blogspot.com/2008/01/118.html

“இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும் வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதில் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்குமேல் ஒருவன் வீரனாகவோ மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும்.

ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். எத்துறையிலும் நான் இருந்து பார்த்து விட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்ட விரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல் கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன். வீரப்பட்டமும் பெறுவேன்.

சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும், “வீர”ப் பட்டத்தையும் தியாகம் செய்துவிட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.

- ‘குடி அரசு’ 29.3.1936 ‘பெரியார்’

http://karuppupaiyan.blogspot.com/2008/01/117.html