Language Selection

பெரியார்

அக்கிராசனாதிபதியவர்களே! சகோதரர்களே! நேற்று நான் இங்கு வந்து பிரசங்கம் செய்தேன். இன்றும் என்னை வரும்படி சிலர் அழைத்தார்கள். நான் இன்று ஊருக்குப் போகிறபடியால் என்னால் அதிக நேரம் பேசமுடியாது. இன்றைய மாநாட்டில் சில தீர்மானங்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில் முதல் தீர்மானம் “ஆறரைக்கோடி ஆதிதிராவிட மக்களை இந்து மதஸ்தர்கள் என்று அரசாங்கத்தில் பதிவு செய்திருப்பதால் எங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவமில்லாததால் எங்களை இந்து மதத்திலிருந்து நீக்கிவிடும்படி சட்டசபை அங்கத்தினர்களை வேண்டிக் கொள்ளுகிறது.”

 

இத்தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன், எனக்கும் சம்மதம்தான். ஆதிதிராவிடர்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூட்டத்தார் எங்களை நாஸ்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கின்றனர். அதோடல்லாமல் இரத்தக் குறியிட்ட சிவப்புக் கடிதங்களும் எங்களுக்கு வருகின்றது. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்றால், “ஏ! ராமசாமி நாயக்கரே! நீ மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று பார்க்கிறாய். ஆகையால், உன்னைக் கொல்லப் போகிறோம்” என்று எழுதியிருக்கிறது. (வெட்கம், வெட்கம்) இப்பேர்ப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் வருகிறார்கள்; அனுப்பிக் கொண்டும் வருகிறார்கள். அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நான் ஒருவன் போய்விட்டால் ‘பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கு சிறிது பாரம் குறையும்’ என்றுதான் நினைக்கிறேன்!

 

நாம், தேசத்திற்கு நன்மை செய்வதற்காகவே இந்த இயக்கத்தைத் தோற்றியுள்ளோம். ஆகையால், இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் பயந்தவர்களுமல்லோம், சிறிதும் இளைத்தவர்களுமல்லோம், தேசியத் தலைவர்கள் நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பெருமையையோ, உரிமையையோ விட சுயமரியாதைக்காரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாதென்று நினைக்கிறார்கள். நாம் இதுவரை சுயமரியாதை என்னும் பெயரால் ஒரு கெடுதியும் ஜனங்களுக்குச் செய்ததாகத் தெரியவில்லை. ஜாதி வித்தியாசம் ஓட்டலிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும், மற்றும் ஒவ்வொன்றிலும் இருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், அவன் மதத்துரோகி, நாஸ்திகன் என்கிறார்கள்.

 

தற்காலம் வெள்ளையர்கள் ஆண்டு வரும் பொழுதுகூட நம் இந்துக்களில் உயர்ந்த ஜாதியெனப்படுபவர்கள் சிலர் வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லிவரும் பொழுது, வெள்ளையர்கள் நமக்கு சுய ஆட்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நாம் என்ன கதியாகுவோமென்பதையறிந்து கொள்ளுங்கள் (கரகோஷம்). வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு அவர்கள் நாளைப் போகட்டுமென்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், நான் இன்றே போகட்டும் என்று சொல்லுகிறேன். அதுவும் எனக்கு சம்மதம் (கரகோஷம்).

 

வெள்ளையருக்கு நாங்கள் உள்ளாளாக இருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். நாங்கள் உள் ஆளா? அவர்கள் உள் ஆளா? என்று கேட்கிறேன். நாங்கள் பிற மதஸ்தர்களுக்கனுகூலமாகப் பிரசாரம் செய்வதாகவும் சொல்கிறார்கள். நமக்கு நம் மதத்திலேயே சுயமரியாதையில்லையே. அப்படியிருக்க, அம்மதம் நமக்கு எதற்கு? ஒரு அப்துல் ரகிமானோ, ஜோசப்போ வந்துவிட்டால் தொலைந்துபோ என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் இந்து மதத்தில் உரிமை கொடு என்றால், மதத்துரோகி, தேசத்துரோகி என்கிறார்கள்.துரோகிகள் யார்? நாமா? அவர்களா? இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே! அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது?

 

ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமில்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் திரு. கண்ணப்பர் சென்று வழக்கு நடக்கும் போதுகூட ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் நீதிமன்றத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை என்றும், இந்து மதத்தை நம்புகிறவர்கள் இந்துக்கள் என்றும், ஆதிதிராவிடர்களும் இந்துக்களே என்றும், அவர்களும் கோயிலுக்குள் போக அனுமதியுண்டு என்றும் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதற்கும் தேசியப் பார்ப்பனர்கள் அவரைத் தூற்றினார்கள்.

 

வேதங்கள் அநாநிக் கடவுளால் சொல்லப்பட்டவைகளே என்றும், அதில் சொல்லியிருக்கும் சட்டங்கள் நியாயமானது என்றும், அவர்கள் கேட்டால் இனி பெண்களை சிறு வயதில் மணம் செய்து கொடுத்தல் கூடாது என்றும், 15 வயதிற்கு மேல்தான் மணம் செய்வித்தல் வேண்டுமென்றும், அதற்காக ஓர் கமிட்டியும் ஏற்படுத்தி விசாரணை புரிந்து வந்தனர். அக்கமிட்டியில் திரு. ஏ. ராமசாமி முதலியாரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில வருணாசிரம தர்மப் பார்ப்பனர்களும், தேசியப் பார்ப்பனர்களும் மதம் போச்சு; கடவுள் போச்சு; இது மத சம்பந்தமானது; இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூக்குரலிட்டனர். இதை நீங்கள் யோசித்து இம்மணத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் சுத்தமில்லாததாலும், மதுபானம், மாமிசம் முதலியவைகள் சாப்பிடுவதினாலும், அவர்களைத் தீண்டக் கூடாதென்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் மயிலாப்பூரும் உங்களோடு சேர வேண்டியதுதான். மயிலாப்பூரிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மது, மாமிசம் உண்ணாமலில்லை.

 

சமீபத்தில் கும்பகோணத்தில் யாகம் ஒன்று நடத்தினார்கள்; பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் ஆடு, மாடுகளின் பீஜத்தை நசுக்கி யாகத்தின் பேரால் சாப்பிட்டார்கள். அதைப்பற்றி பத்திரிகையில் எழுதினோம். அதற்காக நம்மை நாஸ்திகர்களென்றும், மதத்துரோகிகளென்றும் தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். இது என்ன அறிவீனம் பாருங்கள்.

 

(13-7-1929 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற ஆதிதிராவிடர்கள் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 16-07-1929 “திராவிடன்” நாளிதழில் வெளியானது)


http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_08.html

 

  பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

 

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

 

அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

 

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

 

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

 

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

 

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

 

முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

 

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

 

"Patriotism is the last refuge of a scoundrel'' -"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்

 

(கீழ்வெண்மணியில் 42 - தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_09.html

சென்னையின் யோக்கியதையை அறிந்து போக வெளியிடங்களிலிருந்து யார் வந்தாலும் அவர்களை நமது பார்ப்பனர்கள் எப்படியாவது மயக்கி குல்லாய் போட்டு தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளும் தந்திரமும் செளகரியமும் நம்மவர்களிடத்தில் இல்லை என்பதை எல்லோரும் அறிந்த விஷயம். தேவஸ்தான சட்ட சம்மந்தமாய் இந்தியா நிர்வாக சபை மெம்பர் சிறீமான் எஸ்.ஆர். தாஸ் இங்கு வந்த பொழுது அவருக்குப் பார்ப்பனர்கள் செய்த விருந்தும், பெண்களைக் கொண்டு ஆடல் பாடல் கச்சேரிகள் செய்ததும், மடாதிபதி மகந்துகளையும் கூட்டி அறிமுகம் செய்து வைத்ததும் அந்த விருந்துக்கு ஒத்துழையாத பார்ப்பனர் என்பவர்கள் முட்டுக்கட்டை பார்ப்பனர் என்பவர்கள், பூரண சுயேச்சை பார்ப்பனர் என்பவர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர்கள் ஆகியவர்களின் அரசாங்க சம்மந்தமான களியாட்டு காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பார்ப்பனர்களும், காந்தி குல்லாயும் தேசீயக் கொடியும் பிடித்து இரும்புச் சட்டத்தைத் துலைக்க வேண்டும் என்று சொல்லித் திரியும் பார்ப்பனரும், "அரசாங்கத்திற்கு குலாமல்லாத" பார்ப்பனர்களும் மற்றவர்களை நக்கிப் பொறுக்கி குலாம் சர்க்கார், பூஜாரி என்று சொல்லும் பார்ப்பனர்களும், சென்று நன்றாய் தின்று குடித்து களியாட்டத்தில் கலந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அது போலவே இம்மாதத்திலும் இந்தியா நிர்வாக சபையில் இருந்து சர் அலெக்ஸாந்தர் முட்டிமென் என்கிற ஒரு துரை மகன் வெள்ளைக்காரர் வந்ததற்கு அதே சிறீமான் ரங்காச்சாரியார் கொடுத்த விருந்திற்கு ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, சர்க்கார் சம்மந்த விருந்து பஹிஷ்காரம், பூரண சுயேச்சை ஆகிய பல பார்ப்பனர்களின் தத்துவ தலைவருமான சிறீமான்கள் எஸ்.சீனிவாசய் யங்கார், எ. ரெங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் போய் உண்டு, குடித்துக் களித்து புரண்டதோடு ஒன்றாய் உட்கார்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள் என்றால் இதன் அர்த்தமென்ன?

 

ஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா சிறீ ரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும் போது விதவா சம்மந்தம் கூடாது என்றும், அது இருவருக்கும் பாவமென்றும், மேல் லோகத்தில் நெருப்பில் காச்சிய இரும்புத் தூணைக் கட்டி பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும், அதனால் சிரேய்சு குறைந்து போகுமென்றும் இன்னமும் பலவிதமாக ஞானோபதேசம் செய்தார். சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டுக்கு வந்த உடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர்! இவ்வளவு பாவமும் தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இது வரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்மந்தத்தால் மோட்சம் புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்! போதும், போதும் எட்டி நில்லும் என்று சொல்லி விட்டாள். சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதை யானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா? 'புருஷன்தானாகட்டும் எப்படிப்பட்டவனானாலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா?" என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம்.

 

அது போல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு, தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள். என்ன செய்வது? வயிற்றுக் கொடுமையும் பேராசையும் நம்மவர்களைப் போட்டு நசுக்கும் போது எப்படி யோக்கியமாகவும் ஏமாறாமலும் இருக்க முடியும்.

 

(குடி அரசு 26.12.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_306.html

சென்னையில் தேர்தல் முழக்கம் தெருத்தெருவாய் முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக சிறீமான்கள் எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகள், எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார் முதலியவர்கள் மடாதிபதிகள் பணத்தாலும், மகந்துகள் பணத்தாலும் தெருத்தெருவாய், ஜில்லா ஜில்லாவாய்ப் பார்ப்பனரல்லாத சில கயவர்களையும் சேர்த்துக் கொண்டு தேர்தல் முழக்கம் செய்கிறார்கள். அம்முழக்கத்தில் உபயோகிக்கும் தந்திரங்கள் என்னவென்று பார்ப்போமானால், பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் இயக்கங்கள் மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும், தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் உழைத்து வரும் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும், பொல்லாப்புகளையும், பழிகளையும் சொல்லி அவர்களிடம் பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன.

 

இதன் பயனாய்ப் பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்டசபை முதலிய ஸ்தானங்கள் பெற்று அவற்றின் மூலம் ஏற்பட்ட உத்தியோகங்கள் அதிகாரங்கள் முழுவதையும் தங்கள் இனத்தவர்களாகிய பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்படிச் செய்து பார்ப்பனரல்லாதாரை நுழையக் கூடாதவர்களாகவும் மற்றும் நிரந்தர ஈனஸ்திதியிலேயே இருக்கும்படியானவர்களாகவும் செய்தும் வரப்போகிறார்கள். குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு உழைக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், அதன் தலைவர்களில் பிரமுகர்களான சிறீமான்கள் பனகால் அரசர், ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களையும் தான் இப்போது நமது பார்ப்பனர்கள் முக்கிய விரோதிகளாய் நினைத்துக் கொண்டு அவர்களை எந்த வழியிலாவது ஒழிப்பதே தங்கள் தங்கள் கடனாய் வைத்து 'காங்கிரஸ்' 'தேசம்' 'சுயராஜ்யம்' என்கிற ஆயுதங்களை அதற்காக உபயோகித்து வருகிறார்கள்.

 

அதோடு மாத்திரமல்லாமல் சிறீமான் பனகால் அரசர் மீதும் ஏ. ராமசாமி முதலியார் மீதும் சில ஈனத்தனமான பழிகளையும் சுமத்தி வருகிறார்கள் என்றும் அறிகிறோம். அவைகள் என்ன வென்றால் தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள காரியங்களைச் செய்வதில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லி வருவதோடு சில பார்ப்பனரல்லாத பதர்களையும் கொண்டு வெளியிடங்களிலும் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன், ஓட்டல்காரப் பார்ப்பனன், பொதுப் பெண்களிடம் தூது செல்லும் பார்ப்பனன் முதலானவர்கள் உட்பட பிரசாரம் செய்யவும் இரகசிய சுற்றுத் திரவுகள் பறந்து திண்ணைப் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.

 

அதோடுமாத்திரமல்லாமல் தங்கள் சுயநலத்தை மனதில் வைத்து வெளிக்குப் பார்ப்பனரல்லாதார்க்கு உழைப்பதாக வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து தங்கள் எண்ணம் ஈடேறாமல் ஏமாற்றமடைந்து வெளிவந்த சில பச்சோந்திகளும் இதற்குத் துணை புரிந்து வருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. யார் எப்படி கத்தினாலும் கத்தட்டும். இதைப் பற்றிப் பொதுஜனங்களுக்கு ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லுவோம். இவர்கள் சொல்லுகிற மாதிரி பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை சிறீமான் பனகால் அரசருக்கோ சிறீமான் ஏ. ராமசாமி முதலியாருக்கோ இருக்குமானால் மலையாளக் குடிவார மசோதாவினும் இந்துமத பரிபாலன மசோதாவினும் எவ்வளவு லட்ச ரூபாய் சம்பாதித்திருக்கக் கூடும் என்பதை பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தெரியவரும்.

 

உபயோகமில்லாத வெறும் பார்ப்பனர்களுக்கு பல மடாதிபதிகளும் மகந்துக்களும் மலையாள ஜமீன்களும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகத் தெரிகிறது. இந்தப் பார்ப்பனர்களால் இந்தக் காரியமாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் சூதாடுவது போல் இவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார்கள். சிறீமான் பனகால் அரசரோ சிறீமான் ராமசாமி முதலியாரோ இந்து மத பரிபாலன சட்டத்தை முழுவதும் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை; ஒரு கோவிலையும் நான்கு மடங்களையும் மாத்திரம் இச்சட்டத்திலிருந்து விலக்குவதானால் 7 - லட்ச ரூபாய் கொடுக்க ஆள்கள் இன்றைய தினமும் தயாராயிருக்கிறார்கள் என்றும், இதை முடித்துக் கொடுக்கும் தரகருக்கு பதினாயிரக்கணக்கான பொன்னும் பீதாம்பர சால்வையும் தயாராயிருக்கிறதென்றே நாம் கேள்விப்படுகிறோம்.

 

இதிலிருந்தே நூறு, இருநூறு, ஐந்நூறு வீதம் சிறு சிறு பதவிகளுக்கு பணம் வாங்குவது என்பது உண்மையானால் இந்த லட்சக்கணக்கான ரூபாயை வேண்டாம் என்று சொல்லுவார்களா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கமாட்டார்களா என்கிற ஞானம் கூட இல்லாமலே இவ்வித இழிவான தன்மையில் பிரசாரங்கள் செய்கிறார்கள். அல்லாமலும் இவர்களுக்கு எதிரிடையாய் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்களும் இவற்றையே வெளியில் பேசுகிறார்கள் என்றும் நமது காதுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதுதான். ஜமீன்தாரர்கள் மத்தியிலும் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் மத்தியிலும்தான் இவ்வித ஈனத்தனமான பிரசாரம் அதிகமாய் நடத்தப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம். பார்ப்பனரல்லாத மக்களுக்குள் கொஞ்சமாவது மூளை இருக்கிறது, பகுத்தறிவு இருக்கிறது என்பது வெளியாக வேண்டுமானால், அது முக்கியமாய் செங்கல்பட்டு ஜில்லாவாசிகளிடம் இருந்துதான் பார்ப்பனரல்லாதார் சமூகம் எதிர்பார்க்கிறதென்றே சொல்லுவோம்.

 

சென்னை சட்டசபைக்கு சிறீமான் ராமசாமி முதலியார் வரக்கூடாது என்கிற எண்ணங் கொண்டே நமது பார்ப்பனர்கள் செங்கல்பட்டு ஜில்லா தொகுதிக்குத் தங்கள் சார்பாகப் பார்ப்பனரல்லாதாரையே நிறுத்தி அவருக்கு எதிராய்ப் போட்டி போடச்செய்து தாங்கள் தங்கள் பணத்தைக் கொண்டும், மகந்துக்கள் பணத்தைக் கொண்டும் பிரசாரம் செய்து வருகிறார்கள். சென்னை சட்டசபையில் இப் பார்ப்பனர் போடும் கூச்சலுக்கும் அவர்கள் கிளப்பிவிடும் விவகாரங்களுக்கும், சட்ட சம்பந்தமான சிக்கல்களுக்கும் ஆப்படித்த மாதிரி பதில் சொல்லி அவர்களை அடக்கி வைக்கத் தகுந்த சக்தி சிறீமான் ஏ. ராமசாமி முதலியார் அவர்களிடம் இருப்பதினால் தான் நமது பார்ப்பனருக்கு அவர் எதிரியாய்த் தோன்றுகிறார்.

 

உதாரணமாக, சென்னை சட்டசபையில் கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பார்ப்பன சட்டசபை மெம்பர் ஒரு பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தரைக் கெடுக்க எண்ணங் கொண்டு அவர் பேரில் ஒரு பழியைச் சுமத்தி அதாவது குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் தேர்தல் விஷயத்தில் பிரவேசித்திருக்கிறார்; அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும்; ஆதலால் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இதைப்பற்றி பிரமாதமாய்ப் பேசி அந்த உத்தியோகஸ்தரைப் பற்றி கெட்ட அபிப்பிராயம் உண்டாகும்படி செய்தும் அவரை ஒழிக்க சட்ட மெம்பருக்கு அதிகாரம் கொடுக்கப்போகும் சமயத்தில் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் சட்டசபைக்கு வந்து விஷயம் இன்னதென்று தெரிந்ததும் உடனே ஆம், ஆம் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும்; இன்னும் இரண்டொரு உத்தியோகஸ்தர்களைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன் அவரையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு பார்ப்பன ஜில்லா கலெக்டர் பெயரையும் ஒரு பார்ப்பன சப் ஜட்ஜி பெயரையும் சூசனை காட்டினார். உடனே பார்ப்பன சட்ட மெம்பரே பார்ப்பன சட்டசபை மெம்பரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டு தன்னுடைய பிரேரேபணையை வாபீசு வாங்கிக் கொள்ளவே வெகு பாடுபடும்படி செய்து விட்டார்.

 

இம்மாதிரி அவர் ஒருவர் அங்கிருந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் விஷயத்திலும் எவ்வளவோ பாடுபட்டு வருவது பார்ப்பனர் கண்களில் ஊசி குத்துவது போல் இருப்பதால் அவருக்கு எதிரிடையாய் செங்கல்பட்டு ஜில்லா தொகுதி ஒரு பார்ப்பனரல் லாதாரையே நிறுத்தி முன் சொன்னது போல் மகந்துக்கள் பணத்தை செலவு செய்து சில பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பிரசாரம் செய்கிறார்கள். சிறீமான் எஸ். சீனிவாசய்யங்காரும் தான் தூங்கும் போதும் சாப்பிடும் போதும் மற்றும் ஒவ்வொரு சமயத்திலும் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் உருவமே தம் முன் தோன்றுவதாகவும் அவரை ஒழிப்பதே தமது வெற்றி என்றும் அந்த விஷயத்திலேயே தமது முழுக் கவனத்தையும் பலத்தையும் செலுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்காகவே இஜ்ஜில்லா மிராசுதாரர்களையும், ஜமீன்தாரர்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு உள்நாட்டு சண்டைகளையும், கட்சிகளையும் கிளப்பி விட்டுக் கொண்டும் வருகிறார்.

 

ஆதலால் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் இந்த சமயம் தங்கள் புத்திகளையும் மனசாட்சிகளையும் பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் தந்திரத்திற்கும் பறி கொடுத்து விடாமல் நமது நாட்டு நிலைமையும் நமது பார்ப்பனரல்லாதார் வகுப்பு நிலைமையையும் கவனித்து புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா ஜமீன்தாரர்கள் தங்களை எவ்வளவு பெரிய ஜாதியார் என்று சொல்லிக் கொண்டாலும் தாங்கள் எவ்வளவு பெரிய வர்ணாசிரம தர்மி என்று சொல்லிக் கொண்டாலும், பார்ப்பனர் அகராதியில் அவர்களை சூத்திரர்கள் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறதே அல்லா மல், ஜமீன்தார்கள் வேறு பிறவி என்று இல்லவே இல்லை. ஆகையால் உள்நாட்டு கட்சி விவகாரத்தின் பலனாய் பார்ப்பனர்களின் கையாளாயிருக்கக் கூடாது என்று ஜமீன்தாரர்களையும் மிராசுதாரர்களையும் மறுமுறை வேண்டிக் கொள்ளுகிறோம்.

 

(குடிஅரசு 19.09.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_11.html

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும், தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுப் படுத்தியும், அடிமைப்படுத்தியும், கொடுமைச் செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.

 

நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார் களேயல்லாமல், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்களில் தங்களுக் குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும் வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமேயென்கிற பயத்தால் அதற்கு வேண்டிய முட்டுக் கட்டைகளைப் போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில் ராஜீயவாதி களென்னும் பேரால் வாழ்ந்து வருகின்றார்கள்.

 

நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரியாதையா? சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். மகாத்மா காந்தி அவர்கள் சுமார் ஐந்து வருஷங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும் போது, "என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால், நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை" யென்று சொல்லியிருக்கிறார்.

 

மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதுதான் பிறப்புரிமையேயல்லாமல், அரசியலான ராஜீயமென்னும் சுயராஜ்யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜீயபாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும், விளக்கு போடுவதும், காவல் காப்பதும் எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொது நன்மைக்கும் எப்படி பல தொழில்கள் இருக்கின்றனவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத் தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத் தான் உரிமை என்றாவது 'கடவுள் என்பவரால்' யாருக்கும் பிரித்துக் கொடுக்கவே இல்லை. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள்தான். ஆதலால், இவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடைய வேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது.

 

மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும் பரோபகார மென்பதுமேதான். சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும் கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதை அற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது நமது தேசத்தில் சுயமரியாதை அற்று பூச்சி புழுக்கள் போலும், நாய்கள் பன்றிகள் போலும், பிசாசுகள் அரக்கர்கள் போலும் வாழும் ஜனங்கள் கோடிக் கணக்காய் இருக்கின்றனர். லட்சக்கணக்காய் தினம் பிறக்கின்றனர். இச்சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு?

 

உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதையுள்ளவனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்தான் அவர்களுக்கு கவலையென்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்யமடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்து இருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா? அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவேயில்லை.

 

எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால், இந்த சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக் கூட நமக்குச் செளகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத் தினாலேயல்லாமல், அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும்பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை, அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக் கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை. ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒரு நாளும் இவ்வித சுயமரியாதைக் கேடுக்கு அநுகூலமாய் இருப்பதில்லை. ஒரு தேசம் சுதந்திரமடைய வேண்டும் என்ற உண்மையான கவலை இருக்குமானால், அக்கவலைக்கு அவர்கள் அருகர்களா? இல்லையா வென்பதை பரீட்சிக்க வேண்டுமானால், அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும். அஃதில்லாமல் சுதந்திரத்திற்காக செய்யப்படும் எவ்விதி முயற்சிகளும் தனிப்பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலத்திற்கும், சுயமரியாதை இல்லாத நிலைமையை பலப்படுத்தவும்தான் ஆகுமேயல்லாமல் வேறொன்றுக்கும் உதவாது. அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும், சுதந்திரம் பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப் போட்டுவிட்டார்.

 

தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதும் கதர் அணிய வேண்டும் என்று சொல்லுவதும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதையின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத்தைக் கண்டு தரிசிக்கவும் முடியாமற்படி வைத்திருக்கிற வரையில் சுயமரியாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்கு சுதந்திரமென்பது ஒரு மனிதன் தன் உடலிற் போதிய சக்தியிருந்தாலும், ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதினால், அவன் எந்த விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத் திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார். மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதினாலேயே வாழ முடியும் என்கிற நிலைமையடைந்து நமது நாட்டில் உள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழயபடி தங்களுடைய ஆதிக் கத்தைப் பலப்படுத்திக் கொள்ளத்தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.

 

இந்நிலைமையில் 'சுதந்திரம்' 'சுயராஜ்யம்' 'உரிமை' என்கிற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும் கொடுமைக் கும், ஆதாரமானதுதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடைய பாடுபட வேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக் காகத்தான் முதலில் பாடுபடவேண்டும்.

 

(குடிஅரசு-24.01.1926)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_12.html

வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும், தோல்வியும் சிறீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவதோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர்களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டாரென்றும், சிறீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றி பெற்றுவிட்டாரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென்றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங்கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்ப னர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்களுக்கெல்லாம் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைப்பது கனவாகவே முடியும்.

தற்காலம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் சென்ற தேர்தலில் அதாவது சென்ற மூன்று வருஷ காலமும் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு எவ்வளவு பலமிருந்ததோ அதைவிட அதிகமாகவே குறிப்பிடத்தக்க பலமிருக்குமென்றே சொல்லத்தகுந்த மாதிரிக்கே வெற்றி கிடைக்குமென்றே சொல்லலாம். உதாரணமாக, ஆந்திர மாகாணத்தில் எவ்வளவு குறைந்தாலும் சென்ற வருஷத்தை விட சுமார் 10 -ஸ்தானங்களுக்குக் குறையாமலே ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்னிலும் அதிகமான நபர்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற உறுதி ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலும் ஆந்திர நாட்டைப் போல் அவ்வளவு அதிகமான நபர்கள் முன்னிலும் அதிகமாய் வெற்றிபெறுவது சந்தேகமேயானாலும், குறைந்தது 3, 4 நபர்களாவது அதிகமாக வெற்றி பெறுவதில் ஆட்சேபனையில்லை. உதாரணமாக, கோயமுத்தூர் ஜில்லாவில் சென்ற தேர்தலில் சுயராஜ்யக் கட்சிக்கு 3 - மெம்பர்கள் அநுகூலமாய் வெற்றி பெற்றார்கள். இவ்வருஷமோ சிறீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் ஒருவர்தான் பார்ப்பனக் கட்சியின் சார்பாக நிற்கிறார். அவருக்கு வெற்றி கிடைப்பது இப்போது பெரிய சந்தேகத்தில் வந்துவிட்டது. மீதி இரு ஸ்தானங்களில் வெற்றி பெறுகிறவர்களில் ஒருவர் கண்டிப்பாய் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர். மற்றவரும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையையே உடையவர். எப்படியானாலும், சுயராஜ்யக் கட்சி என்கிற பார்ப்பனக் கட்சிக்கு 2 - ஸ்தானம் இழக்கப்பட்டுப் போய்விட்டது என்பதும், ஒன்று கஷ்டத்தில் இருக்கிறது என்பதும், ஜஸ்டிஸ் கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு 2 ஸ்தானம் கூடுதல் என்பதும் உறுதியாகி விட்டதென்றே சொல்லலாம்.

இதுபோலவே தஞ்சை ஜில்லாவிலும் சென்ற தேர்தலில் பார்ப்பனக் கட்சிக்கே மூன்று ஸ்தானங்களும் அநுகூலமாக வெற்றி பெற்றிருந்தன. இவ்வருஷம் ஒரு ஸ்தானமாவது கிடைக்குமா வென்பதே சந்தேகமாயிருக்கிறது. அந்த ஜில்லாவிலுள்ள மூன்று ஸ்தானங்களுக்கு பார்ப்பனக் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கனவான்களுமே தங்களுக்குக் கிடைப்பது சந்தேகம் என்பதாய் கருதி தனித்தனியாய் கட்சியின் பெயரை விட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சிறீமான் முத்தையா முதலியாரவர்கள் தேர்தல் அறிக்கையில், காங்கிரசைப் பற்றியாவது சுயராஜ்யக் கட்சியைப் பற்றியாவது ஒரு வார்த்தைகூட குறிப்பிடவேயில்லை. தவிர பார்ப்பனக் கட்சித் தலைவர்களான சிறீமான்கள் எ. ரெங்கசாமி அய்யங்கார், சிறீநிவாச அய்யங்கார் அவர்களும், சிறீமான் முத்தையா முதலியார் அவர்களின் பேரில் சந்தேகப்பட்டுக் கொண்டு சிறீமான்கள் சிவசுப்பிரமணிய அய்யருக்கும் மருதவானம் பிள்ளைக்குமே ஓட்டுப் போடும்படிக் கேட்டு வருகிறார்கள்.

சிறீமான் முத்தையா முதலியாரும் தனக்குக் கட்டுப்பட்ட இடத்தில் தனி ஓட்டுகளே கிடைக்கும் படியாகவும் மற்றவிடத்தில் தனக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டு மற்றவைகளை வேறு யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் வேலைசெய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும் கண்டிப்பாய் பார்ப்பனர் கட்சியுடன் சேருவதில்லையென்றே சொல்லிவிட்டார். மற்ற இருவர்களோ சிறீமான் குன்னியூர் அய்யர் என்கிற கனவான் தனக்கு ஆனாலும் சரி , ஆகாவிட்டாலும் சரி என்கிற கவலையற்று இருக்கிறார். சிறீமான் மருதவானம் பிள்ளையோ சென்ற வருஷத்தில் செலவு செய்ததில் 4-ல் ஒரு பாகம் கூட இவ்வருஷம் செலவழிக்க மனமில்லாதவராய் நடக்கிறபடி நடக்கட்டும் என்றிருக்கிறார். மற்றபடி பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்த இரண்டு கனவான்களும், அதாவது சிறீமான்கள் பூண்டி வாண்டையார், நெடும்பலம் முதலியார் ஆகிய இருவர்கள் ஒற்றுமையாகவே வேலை செய்கிறார்கள். எவ்விதத்திலும் இவ்விரு வருக்கும் வெற்றிக் குறிகள் வெளிப்படையாயிருக்கின்றன. ஏனெனில் இவ்விருவர்களும் மற்ற அபேட்சகர்களைவிட பணக்காரர்கள்.

அதாவது ஒருவருக்கு சுமார் 1000 - வேலியும் மற்றவருக்கு சுமார் 500 -வேலியும் நிலம் உண்டு. அல்லாமலும் சென்ற தேர்தலில் செலவு செய்து சலிப்படையாதவர்கள் தங்கள் தங்களுக்கு கட்டுப்பட்டது என்று சொல்லும் படியாகவும் தனித்தனியாய் 2, 3 - தாலுக்காக்களில் செல்வாக்குள்ளவர்கள். தனி வோட்டுகள் வேண்டுமானால் 10,000 - கணக்கான ஓட்டுகள் பெறக் கூடியவர்கள். அல்லாமலும் நமது பார்ப்பனர்களின் வார்த்தையைக் கேட்டு அரசியல் கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இதுவரை எவ்வித நாணயக்குறைவான பெயர்களும் அடைந்தவர்களல்ல. தஞ்சை ஜில்லாவிலுள்ள பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஜில்லா போர்டு பிரசிடெண்டு நான்கைந்து தாலுக்கா போர்டு பிரசிடெண்டுகள் மற்றும் பல பெரிய கனவான்கள் ஆகியவர் கள் எல்லாம் இவ்விருவர்களுக்கே வேலை செய்கின்றார்கள். ஆதலால் இவர்களுக்கே வெற்றி கிடைப்பது உறுதியென்றே சொல்லி விடலாம். அதிலும், சிறீமான் வாண்டையாருக்கு இப்பொழுதே எழுதி வைத்து விடலாம். சுயேச்சைவாதியென்று சொல்லப்பட்ட சிறீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கும் வெற்றிக் குறிகள் பலமாகக் காணப் படுகின்றன. பார்ப்பனரல்லாதார் கட்சி அபேட்சகர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப் போக பாக்கியை சிறீமான் நாடிமுத்துப் பிள்ளைக்கே போடும்படி பிரசாரம் செய்கிறார்கள். சிறீமான்கள் மருதவானம் பிள்ளை, குன்னியூர் அய்யர் ஆகிய இருவர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப்போட்டு, மீதியை சிறீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கே போடும்படி சொல்லுகிறார்கள். சிறீமான் முத்தையா முதலியாரும் சிறீமான் நாடிமுத்து பிள்ளைக்கு அநுகூலமாயிருப்பதன் மூலம் அவருடைய சகாயமும் பெறலாமென்று கருதி அவருக்கு அநுகூலமாயிருக்கிறார்.

ஆகவே, பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு இரண்டு ஸ்தானமும், சுயேச்சைக் கட்சி என்கிற சிறீமான் நாடிமுத்து பிள்ளைக்கு ஒரு ஸ்தானமும்தான் கிடைக்கும். இதில் ஏதாவது தவறும் பட்சத்தில் ஒரே ஒரு ஸ்தானம் தான் மாறலாம். அதுவும் இப்போது சுயராஜ்யக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியிலிருந்து பிரிந்திருக்கும் சிறீமான் முத்தையா முதலியாருக்குத்தான் கிடைக்கலாம். அது தவறும் பட்சம் சிறீமான் மருதவானம் பிள்ளைக்கு கிடைக்குமேயல்லாமல் கண்டிப்பாய் அய்யருக்கு கிடைக்காது. அந்த ஜில்லாவைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி அவ்வளவு நன்றாக விளங்குகிறது. ஆதலால் சென்ற வருஷத்தைவிடப் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அதிக ஸ்தானங்களே கிடைக்கும். இதுபோலவே மற்ற ஜில்லாக்களிலும் இதை அநுசரித்தே தான் இருக்கிறது. அல்லாமலும் சென்ற இரண்டு தேர்தல்களிலும் பார்ப்பனர்கள் வார்த்தையை நம்பி ஏமாந்து போனவர்களும், தங்கள் நன்மையையும் நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்ட பலருக்கு இவ்வருஷம் புத்தி வந்துமிருக்கிறது. ஆதலால் எவ்வகையிலும் பார்ப்பனக் கட்சி தலையெடுப்பதற்கு இடமில்லாமல் இருப்பதோடு பார்ப்பனரல்லாதார் கட்சி மேலும் மேலும் உரம் பெற்று வருகிறது. தவிர, பனகால் ராஜா விஷயத்தில் வெற்றிக்கு எவ்விதத்திலும் சந்தேகமேயில்லை.

இதுவரை பதிவுசெய்து அனுப்பியிருக்கும் ஓட்டுக்களிலேயே மெஜாரிட்டி ஏற்பட்டிருப்பதாகவே தக்க ஆதாரத்தின் மீது நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சிறீமான் ஏ. ராமசாமி முதலியாரைப் பற்றியோவென்றால் வெற்றியைப் பற்றி எவ்விதத்திலும் ஆட்சேபனை சொல்வதற்கே சிறிதுமிடமில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு சூழ்ச்சியும், தந்திரமும் , வஞ்சகமும் கூடிய பிரசாரங்கள் செய்வதற்கு பல வழிகளில் சவுகரியமிருந்தது. அதுபோன்ற சவுகரியங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை.

உதாரணமாக, பார்ப்பனர் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் பனகால் ராஜா, சிறீமான் ராமசாமி முதலியார் போன்ற வர்கள் வெளியிடங்களுக்குப் போய் பிரசாரம் செய்வதற்கில்லாமல் அவர்கள் தொகுதிகளில் எதிர் அபேட்சகர்களை நிறுத்தி இவ்விருவர் களையும் அவரவர்கள் தொகுதியிலேயே கட்டிப்போட்டு விட்டார்கள். ஆனால் தாங்கள் மாத்திரம், அதாவது சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்க சாமி அய்யங்கார் இருவரும் தங்களது சூழ்ச்சிகளால் போட்டியின்றி தெரிந்தெடுக்கத்தக்க மாதிரி ஏற்பாடு செய்து கொண்டு மற்றத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு எதிராய்ப் பிரசாரம் செய்யத்தக்க இடம் செய்து கொண்டார்கள். அல்லாமலும், தேர்தலுக்கு சவுகரியமாய் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள இலாக்கா உத்தியோகஸ்தர்களை ஆங்காங்கு மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இரகசிய பிரசாரம் செய்ய சவுகரியம் செய்து கொண்டார்கள். தவிர செலவு செய்யவும், காங்கிரஸ் பணம், மடாதிபதிகள் பணம், மகந்துகள் பணம் முதலிய பல பொதுப் பணங்கள் லட்சக்கணக்காய் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. செல்வாக்கு பெற்று விட்ட பத்திரிகைகளாகிய 'இந்து', 'சுதேசமித்திரன்', 'சுயராஜ்யா' முதலிய பத்திரிகைகளும் அவர்கள் சுவாதீ னத்தில் இருக்கின்றன. மற்றும் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒவ்வொரு பார்ப்பனப் பத்திரிகையும் இருக்கிறது.

பார்ப்பனரல்லாத பல பத்திரிகைகளையும் விலை கொடுத்தும், மிரட்டியும், கட்டிப் போட்டு விட்டார்கள். இவ்விரண்டிலும் கட்டுப்படாத பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளிலும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பார்ப்பன ஒற்றர்களை அனுப்பித் தங்களுக்கு அநுகூலமாய் திருப்பி விட்டார்கள். மிகுதியும் பார்ப்பனரல்லாதார் கஷ்ட நஷ்டங்களாலும், தியாகத்தாலும் செல்வாக்கு பெற்றுவிட்ட காங்கிரஸ் முதலிய தேசீய இயக்கங்கள் என்பனவற் றையும் கைப்பற்றி மற்றவர்கள் உள்ளே நுழையாதபடி முற்றுகை போட்டுக்கொண்டார்கள். காங்கிரசின் மூலம் பொது ஜனங்களுக்கு அறிமுகமான தொண்டர்களையும் அவர்களது வயிற்றுக் கொடுமையின் காரணமாக பலவழிகளிலும் தங்களுடைய அடிமைகளாக்கிக் கொண்டார்கள். இனியும் இதில் எழுதத் தகாத பல வழிகளிலும் செல்வாக்குள்ளவர்கள் பிரபலஸ்தர்கள் என்கிற பேர் வழிகளையும் உள் சட்டப்பையில் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு சவுகரியங்கள் பார்ப்பனர்களுக்கு இருந்தும் ஒரு மயிர்க்காலாவது தங்கள் தங்களது நிலையை இருப்பிடத்தை விட்டு அசைக்க முடியாமல் போய் விட்டதோடு பார்ப்பனரல்லாதார் எவ்வளவோ முன்னுக்கு வர சவுகரியமும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டு விட்டதென்றேதான் சொல்ல வேண்டும். ஆதலால், பார்ப்பனர்களின் திண்ணைப் பிரசாரத்தை யாரும் நம்பி மோசம் போக வேண்டாம் என்று வேண்டிக் கொள்வதோடு எவ்விதத்திலும் பார்ப்பனர் தங்கள் கட்சி வெற்றி பெறுமென்று காணும் அவர்களது கனவு பலிக்காதென்றே உறுதி கூறுவோம்.

(குடி அரசு 31.10.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_13.html

மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி.ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்குவராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச்சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதாயிருந்தாலும் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவைகளைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படுமானால் பாக்கி இருக்கும் தேவஸ்தான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித்தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதிதான்.
(குடிஅரசு 07.11.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_14.html

மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி.ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்குவராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச்சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதாயிருந்தாலும் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவைகளைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படுமானால் பாக்கி இருக்கும் தேவஸ்தான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித்தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதிதான்.
(குடிஅரசு 07.11.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_14.html

இன்று அரசியல் துறையில் நமக்கு என்ன குறை உள்ளது? எழுதப் படிக்கத் தெரியாத, 21 வயது வந்த, தற்குறிகளுக்கு எல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இவன்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராக வரவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் அல்ல, இன்று பறையர், சக்கிலிகள் என்று இழிவுபடுத்தப்பட்டவர் எல்லாரும் கூட கலெக்டராக, ஜட்ஜாக, மந்திரியாக வர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. பெண்கள் எல்லாரும் சட்டசபை மெம்பராகலாம், மந்திரியாகலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு உரிமைகள் இருந்தாலும் கூட, நாம் இவற்றால் எந்தவித நன்மையும் அடையாததோடு தொல்லைகள் தானே அடைந்து வருகிறோம்?

 

தோழர்களே! 100 - க்கு 97 - நபர்கள் நாம். நாம் தான் இழிமக்களாக, சூத்திரர்களாக, பெரிய உத்தியோகம் பார்க்காதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். உழுவது, சிரைப்பது, வெளுப்பது, நெய்வது, கக்கூஸ் எடுப்பது முதலிய எல்லா அத்தியாவசியமான தொழிலும் செய்வது நாம் தான். இப்படிப்பட்ட நாம் இழிமக்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலை ஏன்? என்னையா! இன்றைய அரசியல் உரிமையைவிட இந்தக் கட்சிக்காரர்கள் வேறு என்ன வேண்டும் என்கின்றார்கள்? கழுதைக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்கின்றார்களா? இந்த நாட்டில் அரசியல் என்பதாக ஒன்று என்றுமே இருந்ததில்லை. புராண காலம் தொட்டு நான் கூறுகின்றேன். எவன், என்ன கொள்கைப் பேரில் மக்களுக்கு நன்மை ஏற்படும் முறையில் ஆட்சி செய்தான் என்று கூற முடியுமா? எல்லாம், அசுரன் ஆள்வதா? தேவர் (பார்ப்பான்) ஆள்வதா? என்ற போட்டிதானே இருந்தது?அடுத்து, சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாகக் கூறப்படுகின்றதே! இந்தப் பசங்களாவது மக்களுக்கு என்று ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே! இந்த ராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா? இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாடசாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்த காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?

 

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்காவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜா, தன் மனைவியை, தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே - வரகுண மகாராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன்தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான். இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் ‘இவன் மனு முறை தவறாது ஆண்டவன்' என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றது!

 

அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல. நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை. அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மையினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே! அடுத்து சுதந்திரம் - வெங்காயம் வந்தது என்று கூறிக் கொண்டார்களே - நடந்ததா? காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வரும்வரை 10, 12 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ததே, இவர்களாவது நமது தற்குறித் தன்மையினைப் போக்க முயன்றார்களா? இல்லையே! ஆனால், பார்ப்பான் மட்டும் எந்தக் காலத்திலும் 100 - க்கு 100 - படித்தவர்களாகவே ஆதிக்கக்காரர்களாகவே இருந்து இருக்கின்றனர். எனவே, இந்த நாட்டு மக்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும்; இழிவினைத் துடைக்க வேண்டும் என்ற கொள்கையின் பேரில் எந்தக் காலத்திலும் அரசியல் நடைபெறவே இல்லை.

 

(வட ஆற்காடு மாவட்டம் பேரணாம்பட்டில் 07.04.1961 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_3096.html

எனக்கு, "ஏதாவது எழுதலாமா" என்ற உணர்ச்சி வந்தது. உடனே, "என்ன எழுதலாம்?" என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்'' ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?'' என்பது பற்றி எழுதத் தோன்றிற்று."ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?'' என்று எழுதுகின்ற நான், "நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?" என்பதைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு முன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவது அவசியமாகும்.

 

நான் 1879-ல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு - குழந்தைப் பருவத்திலேயே - சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமயனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைச் சுவீகாரம் கொடுத்துவிட்டார்கள்.என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்த அம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.நான், சிறிது `சுறுசுறுப்பான சுபாவமுள்ள' சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும் படி பேசுகிறவன். சிரிக்கும் படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம்.நான் அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம், ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.

 

சுவீகாரத்தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், `சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே' என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள்.என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும் சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி, என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக் கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய் விடுவார்.

இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக் கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 - அடி நீளம், 8 - அடி அகலம் இருக்கும். அதில் சுமார் 50- பிள்ளைகள் படிப்பார்கள். 5- வயது முதல் 13- வயது வரை வயதுள்ளார்கள். வீட்டில் காலித்தனம், தெருவில் வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித் தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள்.இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்லவழி கிடைத்து விட்டால், அது எங்கு போய் நிற்கும்? சொல்ல வேண்டுமா? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக் கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு `ப்ரைமரி பரிஷை' அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக் கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்ட வேண்டும்.இந்த பரீட்சை பாசானால் கணக்குமணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.

 

நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசி பாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், `இதுவே போதும்' என்று கருதி எனது 10 - அல்லது 11- வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும் வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டு விட்டார்கள்.

 

எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் "குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்கு குறையாமல் 100 -வண்டி வரையில், மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல் வெல்லம், கருப்புக் கட்டி, (பனை வெல்லம்), முதலியவைகள் வரும்.இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது.

 

நான் மண்டி முதலாளி மகன் ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது.`இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்' என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக் காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கிய மானவரை என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான்.எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆக வேண்டுமென்பதற்காக, `வேண்டுமென்றே' குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்புப் பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது.

 

எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-ல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததாலும், வைணவ மத விசுவாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மதபக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள். வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப் போகவும், 4 நாள் 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல், ஆகிய வசதி அதிகமாகி விட்டது.

 

எனவே கடையில் கிராமத்தாருடனும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டு விட்டதால் பின் கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது.இதுவே, என்னை சாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது. இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டு விட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசௌகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன். சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர்-தமிழர்' என்ற உணர்ச்சியுண்டு. பேசும் போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.

 

(தந்தை பெரியார் - நூல்: "தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" பக்கம் 1-4 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_15.html

உங்களுடைய சங்கத்தின் ஐந்தாவது நோக்கம் மததர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இது தற்காலம் நாடார் சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் ஹிந்து மதத்திற்கே இந்தியாவிற்கே ஏன் உலகத்திற்கே மிகவும் அவசியமானது. கடவுள் என்றால் என்ன? குறிப்பாகவும் சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப் பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப் பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் ஹிந்துக்கள் என்போர்களில் ஆயிரத்திற் கொருவருக்குக் கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தில் இருப்பதாயும், அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய் , தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும்; அதற்கும் கல்யாணம் , ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும் அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஹிந்து மதம் எது? அதுபோலவே மதம் என்பதையும் நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவதுதான் ஹிந்துமதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லுவதைத் தான் ஹிந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்கு கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வித காரியத்தை பிரசாரம் செய்வதையும் இவ்வித காரியங்களை நிர்வகிப்பதையும் இதற்காகப் பொது ஜனங்கள் பொருளை சிலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.

 

கடவுளும், மதமும் ஹிந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம், நாம் கடவுளையும் மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையே தான். இந்தப் பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் 'கடவுள் செயல்' என்பதும் நமது தேவைகளையெல்லாம் நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதர்களைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக் கிறார், அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, தேங்காய் பழம் உடைத்து பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்கு செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது, மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப்போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமேயில்லை. மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுளை சரியானபடி உணராததும் உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர், கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட் டால் மன்னித்துவிடுவார் என்கிற நம்பிக்கையும்தான்.

 

கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே 1000-தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும் உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான். கடவுளின் கட்டளை எது? கடவுள் கட்டளை என்று சொல்லுவது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம் காண்கிறோம். இவைகளை எப்படி கடவுள் கட்டளையாக மதிக்கப்படும். அதுபோலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கு ஒரு விதமாகவும் மதத்திற்கொருவிதமாகவும் ஜாதிக்கொரு விதமாகவும்தான் கருதப்படுகிறது. நமது கலியாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக் கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள்.

 

ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள்; சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள்; சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள்; ஜெந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கலாம், ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள்; சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள்; சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம்போல் அநுபவிப்பதற்குத்தான் படைக் கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும் நடந்தபடியும் நடக்கவேண்டியதுதானே என்றும் சொல்லிவிடுவார்கள்.

 

பெரியவர்கள் யார்? என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ்டத்திற்கு அளவே இல்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும் நடந்ததையும் கவனிக்கப் போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் வியவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாக சிலர் 'வேதம்' என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லோரும் நடக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லி யிருக்கிறது நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப் பட்டது; அதை நீ பார்ப்பது பாவம்; நான் சொல்லுவதைத்தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா?

 

அப்படியானால், கிருஸ்து, மகம்மது முதலிய மதங்களும் இந்தியா, தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக் கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் என்பது பொய் என்று யாராவது சொன்னால் உடனே அவனை 'வேதப் பிரஷ்டன்' என்று சொல்லிவிடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திர மானதும் இயற்கைக்கும் அநுபவத்திற்கும் நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் ஹிந்து மதத்தின் பெயரால் இருந்துகொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படி செய்வதோடு இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும் அறிவும் பொருளும் அளவற்று அநாவசியமாய்ச் சிலவாகியும் வருகிறது. மதத்திற்கொரு கடவுளா? மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது. பெரியவர்கள் கோவிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம்-மதம்-தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்லுவதைக்கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்துவிட்டன.

 

இது போலவே பக்தி- தொண்டு - அஹிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள் ; அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் கடவுள் தொண்டு; அம்மக்களின் விடுதலை தான் மோட்சம்; அச்ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவைகள் வேதனைப்படாமலிருப்பதும்தான் அஹிம்சை. அஹிம்சை எது? மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அஹிம்சை யாகாது. பகுத்தறிவுள்ள மக்களை கஷ்டப்படுத்தாமல், அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும் அடிமைத் தனத்தையும் நீக்க உழைப்பதும்தான் அஹிம்சையாகும். மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு, மாட்டை வண்டியில் கட்டி சுமக்கமாட்டாத பாரம் வைத்து தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அஹிம்சையாகாது.

 

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பதுதான் அஹிம்சை. ஆச்சாரம் மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம், தெருவில் நடப்பது பாவம் என்று சொல்லிக் கொண்டும் பட்டை நாமம் போட்டுக் கொண்டும் பஞ்ச கச்சம் வைத்து வேஷ்டி கட்டிக்கொண்டும் வாயால் 'ராம் ராம்' என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆச்சாரமும் பக்தியுமாய்விடுமா? சத்திரமும், சாப்பாடும் நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒருவேளை கூட சாப்பிட சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக் கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும்படி மடங்களும் சத்திரங்களும் கட்டுவதும், வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பிபாயசத்திற்கு குங்குமப் "போட வில்லை", 'பொங்கலுக்குப் பாதாம் பருப்பு போதவில்லை' என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்கு பொங்கிப் போடுவதும், சமாராதனை செய்வதும் தர்மமாகுமா? இவைகளை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக்கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம்.

 

ஆச்சாரியார் கொடுமை இவற்றை ஹிந்துக்கள் என்போர்களோ ஹிந்து மத ஆச்சாரியார்கள் என்போர்களோ சிறிதும் கவலையற்று தங்களது வாழ்வுக்கு இதைத் தொழிலாய் வைத்துக்கொண்டு காலங்கழித்து வருகிறார்கள். இப்படி நடந்து வருவது சில தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப் பட்ட வகுப்புகளுக்கும் அநுகூலமாயிருப்பதால் இவ்வாபாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு அவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும் மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகிறது. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் ஹிந்து மத சம்மந்தமான சடங்குகள் பெயராலும், மதப் பெயராலும், தெய்வங்கள் பெயராலும் வருஷம் 1- க்கு 10 கோடி ரூ- க்கு அதிகமாக சிலவாகி வருகிறது என்று சொல்லுவது அதிகமாகாது. அதாவது எவ்வளவு யாத்திரஸ்தலம், எவ்வளவு வேண்டுதல் ஸ்தலம், எவ்வளவு உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச்சடங்குகள் இவைகளுக் கேற்படும் சிலவு, மெனக்கேடு இவைகளைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 கோடி ரூபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும் இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும் தானே நமது மக்கள் இவ்வித கஷ்ட நஷ்ட மெனக்கேடுகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது?

 

மத தர்ம பரிபாலனம் இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் இம்மாதிரி கஷ்ட நஷ்ட மெனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்கத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இவற்றை உத்தேசித்தே ஹிந்துமத பரிபாலன சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவுசிலவுகளை தணிக்கை பார்க்கக் கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்லமுடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

 

சிறீமான்கள் ந. சீனிவாசய்யங்கார், இ. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் 'சுயராஜ்யக் கட்சி' பெயரைச் சொல்லிக் கொண்டு கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக்கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான். நமது மதத்தின் பெயரால் நமது மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்கு கணக்குக் கேட்பது கூட நமது ஐயங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்கு கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும். ஆதலால் தர்ம பரிபாலன மென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப் படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் ஐந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே, உங்கள் சங்கம் நீடூழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறி தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

 

(ஏழாயிரம் பண்ணையில் 16.05.1926 -ந் தேதி நடைபெற்ற பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட சொற்பொழிவு- தொடர்ச்சி) (குடிஅரசு-30.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_17.html

கோவை சிறீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் 'குடி அரசில் வெளியானதினால் சிறீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர்களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட - கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வதாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்கமாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் - யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவேமாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநல வாதியுமே ஆவான்.

 

கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லாமலில்லை. உதாரணமாக, கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் சிறீமான்கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கனவான்கள் குடும்பம் இருந்து வருகிறது. அவர்கள் தக்க செல்வமுள்ளவர்கள். 20 - லட்ச ரூபாய் மூலதனமுள்ள ஒரு பெரிய நூல் மில்லை நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் பொதுஜன உபகாரத்தில் இறங்கினார்கள். 30,40 - ஆயிரம் ரூபாய் சிலவில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டினார்கள். அதற்கு பதினாயிரக்கணக்கான பூமி விட்டார்கள். மாணவர்களுக்கு விடுதி (ஹாஸ்டல்) ஏற்படுத்தினார்கள். இளைஞர்கள் விவசாயமும் கைத்தொழிலும் கற்க ஒரு தொழிற்சாலை யேற்பாடு செய்தார்கள். இதற்காக தங்கள் குடும்ப சொத்தில் ஒரு பாகத்தையும் தங்களுக்கு மில்லில் வரும் வருஷவாரி வரும்படியில் ஒரு பாகத்தையும் இத்தர்மத்திற்கு எழுதி வைத்தார்கள்.

 

இப்பொழுதும் கோயமுத்தூருக்கு யார் போனாலும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இரகசியம் ஒன்றுமில்லை. இந்த தர்மம் தாலுகா, ஜில்லா போர்டு எலெக்ஷனுக்காகவோ சட்டசபை எலெக்ஷனுக்காகவோ அவர்கள் செய்யவில்லை. இத்தர்மம் செய்ததைக் கூலி கொடுத்து ஆள் வைத்து விளம்பரப்படுத்தவில்லை. அவர்களது தர்மமும் தானாகவே வருஷக் கணக்காய் நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே வருகிறது.

 

சமீபத்தில் சென்னிமலை வேட்டுவபாளையம் பூசாரி என்கிற ஒரு பக்தர் பதினாயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்தை தர்ம சாஸனம் எழுதி அந்நியர் கையிலேயே ஒப்புவித்து விட்டார். அதற்கு ஒரு விளம்பரமும் அவர் செய்யவேயில்லை. இவற்றைவிட வெகு சமீபத்திலுள்ள கொடுமுடியில் சிறீமான் பெரியண்ணஞ் செட்டியார் என்கிற ஒரு கனவான் சில நாட்களுக்கு முன் 15,000 - ரூபாய் பெறுமானமுள்ள பூமியும், 8,000 - ரூபாய்க்கு கட்டடமும் கட்டிக் கொடுத்து, இப்போது மறுபடியும் 50,000 - ரூபாய்க்கு மேல் பெறும்படியான சொத்துக்களை கொடுமுடி சங்கர வித்தியாசாலை என்கிற பள்ளிக்கூடத்திற்கு செட்டில்மெண்ட் மூலம் எழுதி வைத்து சுவாதீனமும் செய்து விட்டார். மேற்கொண்டு ரொக்கப் பணமாக 12,000 - ரூபாய் ஸ்கூல் பண்டுக்குக் கொடுத்துமிருக்கிறார். இவர் எவ்வித திறப்பு விழாவும் அங்குரார்ப்பண விழாவும் செய்யவில்லை. விளம்பரமும் செய்யவில்லை. பத்திரிகைக்காரருக்குப் பணங்கொடுத்துப் போடச் சொல்லவுமில்லை.

 

மகாத்மா காந்தி, பண்டித நேரு, சிறீமதி சரோஜனி முதலிய பெரியோர்களுக்குத் தனது தர்மப் பெருமையை எழுதவுமில்லை. இப்படியெல்லாமிருக்க, கேவலம் ஒரு சட்டசபை ஓட்டுப் பெற எதிர் அபேட்சகரைத் தோற்கடிக்க இவ்வளவு தந்திரங்களும் மந்திரங்களும் செய்தால் செய்தவர் மிகப் பெரியவராய்ப் போய் விடுகிறார். அதை வெளியில் எடுத்துச் சொல்லுபவர்கள் அயோக்கியர்களாய்ப் போய்விடுகிறார்கள் என்றால் மக்கள் நிலையை என்ன வென்று சொல்லுவது. சிறீமான் ஐயங்காரைப்போல் தைரியமாய் தர்ம விளம்பரம் செய்ய எவராவது பின் வாங்கினால் அவர்கள் தோல்வியுற வேண்டியதா? இந்த தைரியத்திற்காக மாத்திரம் ஐயங்கார் வெற்றியுற வேண்டியதா? சட்டசபை மெம்பராவதற்கு இந்த தைரியம்தானா யோக்கியதை? சிறீமான் ஐயங்கார் இவ்வளவு விளம்பரம் ஏன் செய்ய வேண்டும்? இவரும் இரண்டு தடவை-ஆறு வருஷகாலம் சட்டசபைப் பதவியை அடைந்து அநுபவித்தாய் விட்டது; இனி வேறொருவர் தான் அநுபவிக்கட்டுமே; யார் வீட்டு சொத்து. இந்த ஜில்லாவில் 60,000 - ஓட்டர்கள் இருந்தால் சுமார் 3,000 - ஓட்டர்கள்கூட பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். 57,000 - பிராமணரல்லாத ஓட்டர்கள் இருக்கும் ஒரு ஸ்தானத்திற்கு 3,000 - ஓட்டுள்ள பிராமணர் எத்தனை தடவை அந்தப் பதவியை அநுபவிப்பது? ஆறு வருஷம் பார்த்தது போதுமென்று இவர் ஏன் கெளரவமாய் விலகிவிடக் கூடாது?

 

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைப் பதவியை அநுபவிக்க இவரைவிட வேறு நபர்கள் இல்லையா? கேவலம் இந்தப் பதவி பெற இவ்வளவு தந்திரம் செய்து 57,000 - பேரையும் ஏமாற்றி சட்டசபைக்குப் போகிறவர், போனபின் இவரால் ஜனங்கள் என்ன பலன் அடைய முடியும்? இம்மாதிரி பேராசையுள்ளவர்கள் எவ்வளவு காலத்திற்கு ஜனங்களை ஏமாற்ற முடியும்? சிறீமான் ஐயங்கார் விளம்பரமும் வெற்றியும் ஏதாவது சாமார்த்தியத்தையும், சக்தியையும், தேச பக்தியையும், நாணயத்தையும், தகுதியையும் பொறுத்திருக்கிறதா?

 

சிறீமான் ஐயங்கார் பணத்தையும், தந்திரத்தையும், விளம்பரத்தையும், பிராமணரல்லாதார் சமூகத் துரோகத்தையும் அவர்களது முட்டாள்தனத்தையும்தானே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதை உத்தேசித்துத்தானே அநுபவசாலிகள், அரசியலில் பணத் திமிரும், தந்திரமும், சூழ்ச்சி விளம்பரமும், சமூகத் துரோகமும், அறியாமை யால் நேரும் நஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டும் என்று கதறுகிறார் கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருந்தால் சிறீமான் ஐயங் கார் 6 - வருஷம் அநுபவித்துவிட்டு இன்னும் 3 - வருஷத்திற்கு இவ்வளவு விளம்பரம் செய்வாரா?

 

முதலாவது, ஒரு வருஷத்திற்கா வது இவருக்கு முறை வருமா? 30 - ஆயிரம் அல்லது 50- ஆயிரம் சிலவு செய்தாலும் கிடைத்து விடுமா? 2 - லட்சமல்ல 10 -லட்சம் என்று தர்ம விளம்பரம் செய்தாலும் ஆகிவிடுமா? கோயமுத்தூர் ஜில்லாவானது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜில்லா. சிறீமான் ஐயங்காரைப் போல் எத்தனையோ பணக்காரரும், பட்டக்காரரும், ஜமீன்தாரரும், சக்தியுள்ளவர்களும், அவரைவிட தகுதியும் உரிமையு முள்ளவர்களுமிருக்க ஐயங்காரே அடிக்கடி வரவேண்டுமென்பது "வேதக் கட்டளையா, சாஸ்திர சம்மதமா? மனுதர்மமா" இந்த ஒரு சிறு பதவியே பிராமணரல்லாதார் 100-க்கு 97 - பேர் உள்ள சமூகத்தை இவ்வளவு மோசம் செய்யுமானால் இன்னும் பெரிய பதவிகள் - சுயராஜ்யப் பரிபாலனம் போன்ற ராஜா மந்திரிப் பதவிகள் - இன்னும் எவ்வளவு மோசத்தை விளைவிக்காது? தவிரவும் இந்த நியாயமான சங்கதியை நாம் எழுதும் போதே சிறீமான் ஐயங்காருக்கும், அவரது சிஷ்யக் கோடிகளுக்கும், சிப்பந்தி கோடிகளுக்கும் இவ்வளவு ஆத்திரமும் கோபமும் மனவருத்தமும் வருமானால், தமிழ்நாட்டிற்கே ஏன் இந்தியா தேசத்திற்கே ராகு கேதுகள் போல் இருக்கும் பிராமணப் பத்திரிகைகளும், பிராமணப் பிரசாரகர்களும், அவர்களால் ஆட்கொள் ளப்பட்ட பிராமணரல்லாத பிரசாரகர்களும் உண்மைக்கு விரோதமாய் இரவும் பகலும் பிராமணரல்லாதார் மீது பொய்யும், பித்தலாட்டங் களும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்கின்றார்களே அதனால் பிராமணரல்லாதார்களுக்கு எவ்வளவு சங்கடமும், ஆத்திரமும், கோபமும் வராது?

 

'குடிஅரசு' போன்ற பத்திரிகையாவது சுமார் 10 - பிராமண சந்தாதாரர்களைக்கூட உடைத்தானதாயிருக்காது. அதிலும் 7 - பேர் கெளரவ சந்தாதாரர்களாயிருப்பார்கள். 'சுயராஜ்யா', 'சுதேச மித்திரன்' போன்ற பத்திரிகைகள் பிராமணரல்லாதார் பணத்திலேயே நடக்கிறது. பிராமணரல்லாதார் தங்கள் பணத்தையே கொடுத்து தங்கள் சமூகத்தையே பாழாக்குவதற்கு உடந்தையாயிருப்பது போல் அவைகளுக்கு சந்தாதாரர்களாயிருக்கிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு எவ்வளவு மனவேதனை ஏற்படும். ஒவ்வொரு நாளும் இந்தப் பிராமணரல்லாதார்களைப்பற்றி எழுதும் பொய்யும் புளுகும் கணக்கு வழக்கில்லை. அதைக் கவனிக்கவோ, திருத்தவோ, கோபப்படவோ, ஆத்திரப்படவோ ஆளில்லை. 'குடிஅரசு' உண்மையை- தன் மனதிற்கு உண்மையென்று பட்டதை எழுதினால் இதற்கு இவ்வளவு அடா துடியா? சிறீமான் ஐயங்காருக்குத்தான் பணமிருக்கிறது; பத்திரிகைகள் இருக்கின்றன; பணம் வாங்கிக் கொண்டு பேசவும் எழுதவும் ஆளுகள் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் தாராளமாய்ப் பெரிய மனிதராய் விடுகிறார். இவைகள் இல்லாதவர்கள் கதி என்ன ஆவது? எவ்வளவு யோக்கியர்களாயிருந்தாலும் தேசபக்தர்களாயிருந்தாலும் அவர்கள் யோக்கியதை வெளிவருவதற்கில்லை. வெளிவராவிட்டாலும் அவசியமில்லை. அவர்களுடைய தொண்டு தேசத்திற்குப் பிரயோஜனமில்லாததோடு அயோக்கியர்கள் செய்கையும் அயோக்கியத்தனமும் உலகத்தில் மதிக்கப்பட்டு மலிந்து போகிறதே என்பதுதான் நமது உண்மையான சங்கடம். அல்லாமலும் தென்னாட்டில் தென்னாட்டாரின் பிரதிநிதிகள் சிறீமான்கள் சென்னை ஏ. ரெங்கசாமி ஐயங்கார், எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே.ஆச்சாரியார், கோவை சி.வி. வெங்கிட்டரமணய் யங்கார், கும்பகோணம் சக்ரவர்த்தி ஐயங்கார் ஆகிய இவர்கள்தானா? இவர்களைவிட யோக்கியர்களும் தேச பக்தர்களும் வேறு எவரும் நமது நாட்டில் இல்லையா? இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களுந்தானா பிதேசத் தொண்டர், பிதேச பக்தர். இவர்களுக்கு எப்படி இந்தப் பதவி வந்தது? பணமும் பத்திரிகையும் தங்கள் கைவசமிருப்பதோடு யோக்கியமற்ற வழியில் சிலவிடுவதும் எழுதுவதுமான குணத்தினால்தானா அல்லவா?

 

தமிழ்நாட்டின் சார்பாக சபர்மதி ராஜி ஒப்பந்தத்திற்குப் போயிருப்பவர்கள் எத்தனை பேர்? சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், ரெங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி ஐயர் ஆகிய இவர்கள் செய்துவரும் ராஜியை ஒப்புக் கொள்ளவாவது இவர்களை யோக்கியர்கள் என்று சொல்லவாவது தமிழ் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் என்று சொல்லும் நமது சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரையே சத்தியமாய்க் கேட்போம். இவர்கள் தலைவர்களா? இவர்களை யோக்கியர்கள் என்று அவர் கருதுகிறாரா? இவர்கள் சொற்படி நடக்க தயாராயிருக்கிறாரா? ஒன்றிற்குமில்லை. இப்படியிருக்க இவர்கள் எப்படித் தலைவர்கள் ஆகி றார்கள்? பணமும் ஆளும் பத்திரிகையும்தான் காரணம்.

 

அநேக யோக்கியர்களும் உண்மை தேசபக்தர்களும் அவர்களது இன்றியமை யாத தொண்டும் தேசத்திற்கு உபயோகப்படாமல் ஏன் மறைந்து கிடக்கிறது. பணமும், ஆளும், பத்திரிகையும் இல்லாததால்தான். ஆதலால் பாமர ஜனங்கள், ஓட்டர்கள் இவ்விளம்பரங்களை நம்பி ஏமாறாமலும் அநாவசியமாய் அந்நியரை வைகிறார்கள் என்று நினைத்து நம்மீது அவசரப்பட்டு ஆத்திரப்படாமலும் உண்மையை அறியும்படி வேண்டுகிறோம்.

 

(தந்தை பெரியார் - 'குடிஅரசு' -09.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_18.html

"சுதேசமித்திரன்" என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத்தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலை திறந்து விடப்போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரையாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்?

 

ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது; ஒருவருக்கு அதுவும் தன்னோடு கூடத் தன்னைத் தலைவர் என்று சொல்லித் திரிய - அதுவும் வீட்டில் பட்டினி, சுத்தமாய் செலவுக்கில்லை என்று கேட்கும்போதும் - நீ கொடுக்கிறாயா ஜஸ்டிஸ் கட்சியில் சேரட்டுமா என்று மிரட்டும் போதும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் பிச்சை போடுவதுபோல் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஆதி திராவிடர்களுக்கு வகுப்புவாரி உரிமை வாங்கித் தர சம்மதிக்கிறார்களா?

 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னாலே சொல்பவனை, "ஜஸ்டீஸ் கட்சியில் சேர்ந்து விட்டான், பாவி, துரோகி" என்று சொல்லுகிறார்கள். இவர்களை நம்பி என்ன பலனை அடைய முடியும்? காஞ்சீவரத்தில் கூடிய பிராமணரல்லாதார்களாவது எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஏகமனதாய் ஆதி திராவிடர்களுக்கு, அவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவுக்கு மேலாகக் கூட சட்டசபை, கார்ப்பரேஷன், உத்தியோகம், பதவி எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதாய்த் தீர்மானித்தார்களே; அதைக் கெடுத்தவர்கள் யார்? சுயராஜ்யக் கட்சியின் "மாபெரும் தலைவரான" சிறீமான் சீனிவாசய்யங் காரும் "காந்தி சிஷ்யரும் ஒப்பற்ற தலைவருமான" சிறீ மான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் கூட சதியாலோசனை செய்து சிறீமான் கலியாணசுந்தர முதலியாரையும் கெடுத்து இத்தீர்மானம் காங்கிரஸ் மகாநாட்டிற்கே கொண்டுவரக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். தீர்மானம் கொண்டுவரக்கூட சம்மதிக்காத காங்கிரஸ் தலைவரும் தீர்மானத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்களா? என்பது ஆதி திராவிடர்களுக்குத் தெரிய முடியாமல் போகாது.

 

ஜஸ்டிஸ் கட்சியாராவது ஆதி திராவிடர்கள் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியானதென்றும், அதற்காக தாங்கள் போராடியும், அதை தங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூச்சல் போட்டதன் பலனாய்த்தான் சிறீமான்கள் எம்.சி.ராஜா, வீரய்யன் முதலிய மணிகள் ஆதி திராவிட வகுப்பில் இருக்கிறார்கள் என்றாவது பிறத்தியாருக்குத் தெரியும்படியாய் இருக்கிறது. அது இல்லாவிட்டால் இவர்களுக்கு சட்டசபை ஏது? கான்பரன்ஸ் ஏது? தீர்மானம் ஏது? "எங்கள் கட்சியில் வந்து சேருங்கள், நாங்கள் சாதித்து விடுகிறோம்" என்று பிராமணர்கள் கூப்பிடுவது ஏது? சிறீமான் சீனிவாசய்யங்கார் பணம் ஒன்றிரண்டு ரூபாய்கூட ஆதி திராவிடர்களுக்காவது கிடைப்பதேது?

 

(குடிஅரசு-23.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_19.html

வினா : ஆசிரமம் என்றால் என்ன?

விடை : காந்தர்வ விவாஹமும் ராட்சச விவாஹமும் நடக்குமிடங்கள்.

வினா : சுயராஜ்யம் என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் பெறுவது தான் சுயராஜ்யம்.

வினா : பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன?

விடை : அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அந்நிய ஆட்சி.

வினா : தேச சேவை யென்றால் என்ன?

விடை : பிராமணர்கள் பின்னால் திரிந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டுவது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை 'தலைவர்', 'தமிழ்நாட்டுக் கர்ணன்','கலியுகக் கர்ணன்', 'மகாத்மாவின் சிஷ்யர்' என்று சொல்லி பிராமணரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதுதான் தேச சேவை ஆகும்.

வினா : தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை : பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் தேசத் துரோகமாகும்.

வினா : பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை : பிராமணர்களுடைய சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளியிலெடுத்துச் சொல்லுவதும், எழுதுவதும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

வினா : மதுவிலக்குப் பிரசாரம் என்றால் என்ன?

விடை : தான் மதுவருந்திக் கொண்டும், தனது மரத்தில் கள்ளுமுட்டி கட்டித் தொங்கவிட்டுக் கொண்டும், தனது பத்திரிகைகளில் ஒவ்வொரு மனிதனும் வீட்டில் சாராயம் வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக் கொண்டும், தன்னை சட்டசபைக்கு அனுப்பினால் மதுவை ஒழித்துவிடுகிறேன் என்று சொல்லுவதும், இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லுவதும் மதுவிலக்குப் பிரசாரமாகும்.

வினா : சரியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : எல்லோரும் பிராமணர்களாய் அமர்ந்திருப்பதுதான் சரியான ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : அடுத்தபடியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்களும், அவர் சொல்படி கேட்கும் பிராமணரல்லாதார்களும் அமர்ந்திருப்பது இரண்டாந்தர ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : ஜனப்பிரதிநிதி இல்லாத சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் மெஜாரிட்டியாய் இல்லாத சபை எவ்விதத்திலும் ஜனப்பிரதிநிதி சபையாகமாட்டாது.

வினா : புத்தியுள்ள ஜனங்கள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யும், புளுகும் அளந்தாலும் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சரி சரியென்று பேசாமல் இருப்பவர்கள் புத்தியுள்ள ஜனங்கள்.

வினா : குழப்பக்காரர்கள், காலிகள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யையும், புளுகையும் அளக்கும்போது குறுக்கே யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் காலிகள், குழப்பக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

வினா : தேசீயப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் படம் போட்டுக்கொண்டும், பிராமணர்களைத் தலைவர் என்றும், பிராமணர்கள் கட்சிக்கு ஓட்டு கொடுங்கள் என்றும், பிராமணர்களைப் புகழ்ந்து எழுதிக்கொண்டும், தேவஸ்தான சட்டத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கண்டித்துக் கொண்டும் அல்லது அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டும் இருக்கிற பத்திரிகைகள்தான் தேசீயப் பத்திரிகைகள் ஆகும்.

வினா : தேசத்துரோகப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் தந்திரங்களை எடுத்து எழுதுவதும், பிராமணரல்லாதார்களின் பெருமையைப் பற்றி எழுதுவதும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள் தேசத் துரோகமான பத்திரிகைகள் ஆகும்.

 

(குடிஅரசு-02.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_20.html

இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது?

சுயநலம் கொண்ட பிராமணீயமே.

இந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது?

சுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே.

இக்காலத்தில் பார்ப்பன -பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண பூதமாய் நிலவுவதெது?

பாழான பிராமணீயமே.

எனவே என்ன செய்தல் வேண்டும்?

பிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும்.

தமிழர்களே! ஒன்று படுக! ஒருங்கு சேருக!

பிராமணீயத்துடன் போர் தொடங்குக! வீரர்கள் நம்மவரே!

ஆதலால் வெற்றியும் நம்முடையதே!

காகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர்.

ஆதலால் சேரவாரும் ஜெகத்தீரே!

(குடிஅரசு 25.07.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_21.html

(தற்கால காங்கிரஸால் பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி)

சகோதரர்களே!

இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார் என்கிற ஒரு வகுப்பு சம்பந்தமான கூட்டம். இக்கூட்டத்தில் நான் இன்று பிராமணரல்லாதார் வகுப்பு முன்னேற்றம் என்கிற விஷயத்தைப் பற்றி பேசப் போகிறேன். மாறுதல் வேண்டாதார் வகுப்பைப் பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை காங்கிரஸ்காரன், அதிலும் வைதீக ஒத்துழையாதாரன், மாறுதல் வேண்டாதவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் வகுப்பைப் பற்றி பேசுவது பொருந்துமா? என்று சிலருக்குத் தோன்றலாம்.

வைதீக ஒத்துழையாமைக்காரன் என்றால், ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பவனல்ல, ஒருவன் சொத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு போனால் வழியைத் திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அல்லாமலும் மகாத்மாவின் காங்கிரஸும் அவரது ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டமும் காங்கிரஸிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டு வருகிறது. நிர்மாணத் திட்டங்கொண்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் போது வகுப்பு விஷயத்தைப் பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதில் உயர்வு-தாழ்வு என்கிற வித்தியாசமேயில்லாமல் எல்லா வகுப்புக்கும் சமத்துவமும், சுயமரியாதையும், ஏழை - பணக்காரர் என்கிற வித்தியாசமேயில்லாமல் எல்லோருக்கும் ஆங்கிலம் படித்தவன்-படியாதவன் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சம யோக்கியதையும் உண்டாக செளகரியமிருந்ததால் என் போன்றவர்கள் வகுப்பு என்பதை மறந்து மகாத்மா காங்கிரஸிலும் ஒத்துழையாமையிலும் நிர்மாணத் திட்டத்திலும் உழைத்து வந்தோம்.

ஒத்துழையாமைக்கு முன்னும் வகுப்பிற்கே உழைத்தேன் மகாத்மா காங்கிரஸுக்கு முன்பே நான், வகுப்பு முன்னேற்றத் தில் கவலை உள்ளவனாகத்தான் இருந்தேன். அதாவது பிராமணரல் லாதாருக்காக இப்பொழுது உள்ள தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பது போன்ற ஏறக்குறைய இதே கொள்கை உடைய சென்னை மாகாணச் சங்கம் என்கிற ஒரு சங்கம் இருந்ததும், அதில் என் போன்றவர்கள் முக்கியப் பங்கெடுத்து உழைத்ததும் உங்களுக்குத் தெரியும். அது எதற்காகயிருந்தது? பிராமணரல்லாதார் முன்னேற்றத் திற்கு காங்கிரஸ் போதாது என்றும், நமக்கென்று ஒரு தனியான இயக்கம் இருக்க வேண்டுமென்றும், இப்பொழுது காங்கிரஸிலுள்ள பிராமணரல்லாதார் எல்லோரும் ஒன்று கூடித்தான் அச்சங்கத்தின் மூலம் பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்குழைத்ததும், நமது முன்னேற்றத்திற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலியவைகளை நாம் வலியுறுத்தி வந்ததும் உங்களுக்குத் தெரியும். காங்கிரஸினால் ஏற்பட்ட தீவினை இன்னும் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒரு இயக்கம் இல்லாவிட்டால் நமக்கு வகுப்பு முன்னேற்ற இயக்கமே தேவையில்லை என்றே சொல்லுவேன். நமது நாட்டில் என்று காங்கிரஸ் ஏற்பட்டதோ அன்றே பிராமணரல்லா தாருக்கு சனியன் பிடித்தது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் வருவதற்கு முன் பெரிய மனிதர்கள் என்போரும், படித்தவர்கள் என்போரும், தேசத் தலைவர்கள் என்போரும், தேச பக்தர்கள் என்போரும், பிராமணரல்லாதவர்களாகவேயிருந்தார்கள். ஜில்லா முனிசீபுகள், சிரஸ்தார்கள், தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய இவ்வுத்தியோகங்கள்தான் அக்காலத்தில் இந்தியர்களுக்கு அதிகமாய் வழங்கப்பட்டன. காங்கிரஸூக்கு முன் உத்தியோக யோக்கியதை இவைகளில் நூற்றுக்கு 99 - பேர் நாயுடு, முதலியார், பிள்ளை, சாயபு ஆகிய இவர்கள்தான் இருப்பார்கள். இவர்கள் உத்தியோக கண்ணியமும் தர்பாரும் இக்காலத்திலுள்ள ஒரு கலெக்டருக்காவது நிர்வாகசபை மெம்பருக்காவது கிடையாது. எனக்குத் தெரிய ஒரு நாயுடு இந்த ஜில்லா சிரஸ்தாராயிருந்தார். அவரை "கலெக்டர் கூப்பிடுகிறார்" என்று யாராவது கூப்பிட்டால் "பத்து நிமிஷத்தில் வருகிறேன்" என்றுதான் சொல்லுவார். 15 - நிமிஷம் கழித்து மெத்தைக்குப் போவார்; காலில் ஜோடும், ஒரு கையில் தடியும், மற்றொரு கையில் சுருட்டுமாய் மெத்தை ஏறுவார். கலெக்டர் முன்னால் மேஜையின் மேல் சுருட்டையும் தடியையும் வைத்து விட்டு "என்னைக் கூப்பிட்ட விஷயம் என்ன?" என்று கேட்பார். காரியம் முடிந்தவுடன் சுருட்டும் தடியும் எடுத்துக்கொண்டு வருவார். போலிஸ் ஹெட்குவார்ட்டர் இன்ஸ்பெக்டராக நாயுடு ஒருவர் இருந்தார். அவர் கலெக்டர், சூப்பிரன்டெண்ட் முதலிய வெள்ளைக்கார அதிகாரிகளுடன் சிநேகிதர்கள் போல பேசுவார், உறவாடுவார். நாயுடுவைத் திடீரென்று கூப்பிட முடியாது. நாயுடுவின் சந்தர்ப்பந் தெரிந்துதான் கூப்பிடவேண்டும்.

இதுபோலவே அக்காலத்தில் தக்க குடும்ப பரம்பரையும், யோக்கியமும், அந்தஸ்தும், கண்ணி யமும் உள்ளவர்கள் பெரிய உத்தியோகம் வகிப்பார்கள். அப்போதைய உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதை இவைதான். காங்கிரஸுக்குப் பின் உத்தியோக யோக்கியதை காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு உத்தியோகத்தின் யோக்கியதை அடியோடு மாறிவிட்டது. முனிசிபாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தவனானாலும் சரி, பஞ்சாங்கம் சொல்லி பிச்சை எடுத்தவன் மகனானாலும் சரி, தூது சென்று பிழைப்பவன் மகனானாலும் சரி, உருப்போடத் தெரிந்து கிராமபோன் மிஷின் போல பார்த்ததை உருப் போட்டு எழுதத் தெரிந்து, மற்ற விதத்தில் எப்படிப்பட்டவனானாலும் சரி, அவன்தான் உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவனாகப் போய்விட்டான். இதனால் தெருப்பிச்சை யெடுப்போரெல்லாம் உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவர்களாகி விட்டார்கள்.

பரம்பரையாய் பெருங் குடும்பமாய், தேசத்தையே கோட்டைக் கொத்தளங்களோடு அரசாண்டவர்களாய், சுயமரியாதையோடு வாழ்ந்தவர்களாய் உள்ள பிராமணனல்லாத குடும்பங்கள் பின்னடைய ஏற்பட்டு விட்டன. இதன் பலனாய் உத்தியோகங்களுக்கும் மதிப்பு குறைந்துவிட்டன. பிராமணர் உத்தியோகம் பெற்ற வழி காங்கிரஸின் ஆதி சூழ்ச்சியே பிராமணர்கள் எப்படி உத்தி யோகம் சம்பாதிப்பது என்கிற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட தாகும். அதற்கு ஏற்றாற்போல அந்த ஜாதிக்கு சுபாவமாய் உள்ள உருப்போடும் வித்தையையே உத்தியோகத்திற்கு யோக்கியதையாய் வைத்து, அதற்கேற்ற பள்ளிக்கூடங்களை விருத்தி செய்தார்கள். இதன் மூலம் உத்தியோகம் பெற்ற பிராமணர்களால் வெள்ளைக்காரர்களுக்குப் பல விதத்திலும் உபயோகமிருந்ததால் அவர்களும் இந்த பிராமணர்களுக்கு அநுகூலமான உத்தியோக யோக்கியதையையே பரப்பி விட்டார்கள்.

இப்போது வர வர மேற்படி உத்தியோகங்களின் யோக்கியதையும் குறைந்து விட்டது. பிராமண - பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களுக்குள்ள பேதம் பெரும்பாலும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்குள்ள சகல தேவைகளையும் நிறைவேற்றி வைக்கக்கூடியவர்களும், சுயமரியாதை அற்றவர்களும், மனச்சாட்சியை இழந்தவர்களும்தான் நல்ல டிப்டி கலெக்டர், நல்ல முனிசீபு, நல்ல தாசில்தார், நல்ல மேஜிஸ்ட்ரேட், நல்ல இன்ஸ்பெக்டர்களாய் விளங்குகிறார்கள்.

இந்த உத்தியோகத்திற்கே இவ்வளவு யோக்கியதை வேண்டுமானால் இன்னும் பெரிய உத்தியோகத்திற்கு எவ்வளவு யோக்கியதை வேண்டும்? இந்த முறை யில் பிராமணரல்லாத வகுப்பார் உத்தியோகம் பெற அஞ்சுகிறார்கள். துணிந்து யாராவது ஒப்புக்கொண்டாலும் மேற்படி யோக்கியதையில்லாத காரணத்தால் நல்ல உத்தியோகஸ்தர்களாக ஆவதில்லை. தமிழரின் தாழ்வுக்கு காங்கிரஸே காரணம் இம்மாதிரி காங்கிரஸ் நமது நாட்டில் ஏற்படாமலிருந்தால் நமது ஜனங்களின் யோக்கியதை இவ்வளவு கேவலமாய்ப் போயி ருக்காது; உத்தியோகங்களின் யோக்கியதையும் இவ்வளவு இழிவான நிலைமைக்கு வந்திருக்காது; வெள்ளைக்காரரும் இவ்வளவு கொடு மையான முறையில் ஆளத் துணியமாட்டார்கள். ஆதலால் பிராமண ரல்லாதார் நிலைமையை இவ்வளவு கேவலத்திற்குக் கொண்டுவந்து விட்டதற்கு முக்கியக் காரணங்களில் இந்த காங்கிரஸும் பிரதான மானது. காங்கிரஸ் என்பதே உத்தியோகம் பெற ஏற்பட்டதுதான். அது நமது நாட்டு பிராமணர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் பிராமணர்கள் உத்தியோகம் பெறத்தக்க வழியில் நிலை நின்று விட்டது. எந்த அந்தஸ்தும், எந்த உத்தியோகமும், எந்தப் பதவியும், எந்தப் பெரிய உத்தியோகஸ்தனையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர் களானால் அப்பதவியும் உத்தியோகமும் காங்கிரஸின் பலனாக ஏற்பட்டதாகத்தானிருக்கும்.

தமிழர் முன்னேற தற்கால காங்கிரஸ் அழிய வேண்டும். இனி பிராமணரல்லாதார் சமூகத்திற்கு ஏதாவது யோக்கியதை உண்டாக வேண்டுமானால் இந்த காங்கிரஸ் ஒழிய வேண்டும். இது உள்ள வரை பிராமணரல்லாதார் உருப்படியாக முடியாது. மகாத்மா காங்கிரஸ் ஏற்படவேண்டும். ஆனால் சிலர் என்னை இப்படிப்பட்ட காங்கிரஸில் நீ ஏன் இன்னமும் இருக்கிறாய் என்று கேட்கலாம். இப்பொழுது பிராமண உத்தியோகத்திற்கு உழைத்து வரும் காங்கிரஸை மகாத்மா காங்கிரஸைப் போல் அதாவது இரண்டொரு வருஷத்திற்கு முன் மூன்று நான்கு வருஷ காலம் இருந்து வந்த காங்கிரஸைப் போல் சகல வகுப்பாருக்கும் சமமான நன்மை வரும்படியாக உண்மையான ஒத்துழையாமைக் காங்கிரஸாக மறுபடியும் மாற்ற வேண்டும் என்கிற ஒரு ஆசையால்தானேயல்லாமல் வேறல்ல. அப்படி மாறும் பட்சத்தில் இப்போதுள்ள சுயநலத் தலைவர்கள் மறைந்து விடுவார்கள். சிற்சில சமயங்களில் மகாத்மா பேசுவதைப் பார்த்தால் ஒரு சமயம் மறுபடியும் அந்த நிலைக்குப் பாடுபடலாம் என்கிற நம்பிக்கை கொஞ்சங் கொஞ்சம் இருந்து வருகிறது. அந்த நம்பிக்கை ஒழிந்துவிட்டால் காங்கிரஸில் நான் இருக்க மாட்டேன்.

ஆதலால் பிராமணரல்லாதார் வகுப்பு நன்மையைப் பற்றி பேசுவதும் காங்கிரஸின் குற்றங்களை எடுத்துச் சொல்லுவதும் காங்கிரஸிலிருப்பதற்கு யோக்கியதை குறைவாகமாட்டாது. கூக்குரல் போடுவது யாருக்கு ஆபத்து? தவிர சிறீமான் ஆரியா பேசும்போது சில பிராமணர்கள் சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று கூச்சல் போட்டார்கள். அது ஒப்பத் தக்கதல்ல. பேசுவதைக் கேட்க வேண்டும்; பேசுவதில் குற்றமிருந்தால் அதற்கு சமாதானம் கேட்கலாம்; அப்படிக்கில்லாமல் கூச்சல்போட்டு கூட்டத்தைக் கலைக்கலாம் என்று எண்ணுவதுபயித்தியக்காரத்தனமாகவே முடியும். நான்கு நாளைக்கு முன் சிறீமான் சீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியும் இதே இடத்தில் அளந்து கொட்டின வசையும், திட்டும் கணக்கா? வழக்கா? பிராமணரல்லா தார்கள் பொறுமையுடன் அவ்வளவையும் சகித்துக்கொண்டிருக்கவில்லையா? அவர்களுக்கு இந்த சில பிராமணர்களைப் போல் கூச்சல் போடத் தெரியாமல் போய்விட்டது என்று நினைக்கிறீர்களா? எப்பொழுதும் பிரசங்க கூட்டத்தில் கூச்சல் போடுவது கெட்ட வழக்கம். நான் அடிக்கடி இதை கண்டித்தே வருகிறேன். இந்த வழக்கம் மிஞ்சி விட்டால் யாருக்கு ஆபத்து என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஐயங்காருக்கும் எனக்கும் வித்தியாசம் நான் எவரைப் பற்றியும் குற்றஞ்சொல்ல வேண்டுமென்கிற ஆசையுடையவனல்ல. நேற்று இங்கு வந்த சிறீமான் சீனிவாசய்யங் காரும் என்னைப் போல் சமூக ஊழியர்தான். எனக்கு அவரிடத்தில் வெறுப்பில்லை. நான் ஏதாவது என் சொந்தத்திற்கு உயில் எழுதுவதா யிருந்தால் அவரைத்தான் யோசனை கேட்பேன் . அவரும் என்னைப் பற்றி தனியாய்ப் பேசினபோது தனது நண்பர்களிடம் என்னை மிகவும் நம்புவதாகவும், என்னிடம் சூது வாது இல்லையென்றும் பேசியிருக்கிறார். நான் எப்படி பிராமணரல்லாதார் சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமென்று பாடுபடுகிறேனோ, அதுபோலவே அவர் பிராமண சமூகம் முன்னேற வேண்டுமென்று பாடுபடுகிறார். ஆகவே இரண்டு பேருடைய நோக்கத்திலும் உழைப்பிலும் வித்தியாசமில்லை. ஆனால் நான் உண்மையைச் சொல்லிக்கொண்டு எனது சமூகத்திற்குப் பாடுபடுகிறேன். அவர் பொய்யைச் சொல்லிக்கொண்டு அவருடைய சமூகத்திற்குப் பாடுபடுகிறார்.

அதாவது, நான் பிராமண ரல்லாதார் பெயரைச் சொல்லுகிறேன்; அவர் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, மகாத்மா, ஜெயிலுக்குப் போன தேசபக்தர்கள் என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணருக்குப் பாடுபடுகிறார். கொஞ்ச நாளைக்கு முன் சென்னைக்கு முனிசிபல் தேர்தலின் போது ஓட்டர்கள் விருப்பத்தின் பேரில் போயிருந்தேன். அங்கு நான் பேசிய இரண்டொரு கூட்டத்தில் " தேர்தலில் ஒரு பிரயோ ஜனமும் இல்லை அதனால் ஒரு பலனும் செய்ய முடியாது. அது ஒரு பதவி. அதில் உங்களுக்கு மோகமிருந்தால் பிராமணரல்லா தாருக்குக் கொடுங்கள்" என்று தைரியமாய்ச் சொல்லி வந்தேன். ஆனால் சிறீமான் சீனிவாசய்யங்கார் அப்படிச் செய்யவில்லை. ஒரு பிராமணரை நிறுத்தி, மறைமுகமாய் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு முனிசிபாலிடியில் ஏழைகளுக்கு அப்படிச் செய்கிறோம்; இப்படிச் செய்கிறோம்; வரியைக் குறைக் கிறோம் என்று பொய் சொன்னதல்லாமல்; மகாத்மா ஜெயிலுக்குப் போனார், வரதராஜுலு நாயுடு இரண்டு முறை ஜெயிலுக்குப் போனார், இராமசாமி நாயக்கர் மூன்று முறை ஜெயிலுக்குப் போனார், ஆனதினால் சிறீமான் இ.எல். ஐயருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று விளம்பரம் போட்டு ஓட்டு வாங்கினார். அவர்கள் ஜெயிலுக்குப் போனதன் பலனை இவர்கள் அடைய என்ன வார்சு பாத்தியம்? இதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். சமூகம் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பதா? அவரவர்கள் சமூகத்திற்கு அவரவர்கள் பாடுபடுவதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பொதுஜனங்களை - பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டும், சுயராஜ்யம், உரிமை என்று சொல்லிக் கொண்டும், பிராமணரல்லாத பிரமுகர்களை சர்க்கார் உத்தியோகம் பெறுகிறவர்கள் தேசத்துரோகிகள் என்று திட்டிக்கொண்டு வைவதற்கு பிராமணரல்லாதாரிலேயே வேறு வழியில் பிழைக்க முடியாத சில ஆளுகளுக்குப் பணம்கொடுத்து உத்தியோக ஆசைபிடித்த சில ஆள்களை ஆசை வார்த்தைச் சொல்லி தங்கள் வசப்படுத்திக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சி என்கிற பெயரால் பிராமணரல்லாத சமூகத்தையே அடிமையாக்க, தீண்டாதவர்களாக்கப் பார்த்தால் அதை எப்படி சகிக்க முடியும்? எந்த சமூகத்திலும் இப்படிப்பட்ட சுயநலக்கார ஆள்கள் இரண்டொருவர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆள்களை இவர்கள் உபயோகித்துக் கொண்டு ஒரு பெரிய சமூகத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள். காங்கிரஸ் பெயரால் உத்தியோகம் பிராமணர்களுக்கோ அல்லது அவர்கள் கட்சியான காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சிக்கோ, எதற்கு உத்தியோக ஆசையில்லை? பிராமண ஐகோர்ட் ஜட்ஜுகள் எல்லாம் காங்கிரஸின் பெயரால் உத்தியோகம் சம்பாதித்தவர்கள்தான்.

நிர்வாகசபை மெம்பர்கள் சிறீமான்கள் கிருஷ்ணசாமி ஐயர், சர்.சி.பி.ராமசாமி ஐயர் ஆகியவர்கள் காங்கிரஸின் பெயரால் உத்தியோகம் சம்பாதித்தவர்களேயாகும். பிராமணரல்லா தார் கட்சியாரை மாத்திரம் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்பதற் குப் பொருளென்ன? ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டார்கள் என்று பொறாமைப் பிரசாரம் செய்வதில் ஏதாவது அவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? கண்ணியமாய் சட்டசபை சென்ற ஜஸ்டிஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சிக்காரர் சுயராஜ்யக் கட்சியாரைப் போல் ஏதாவது பொய் சொல்லி ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குப் போனார்களா? ஒருக்காலும் இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் கண்ணியமாய் ஓட்டர் களிடம் சென்று "நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அல்ல; காங்கிரஸ் பிராமணர்களின் நன்மையின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது; நாங்கள் பிராமணரல்லாதார் நன்மையின் பொருட்டு பாடுபடுகிறோம்; நாங்கள் பொய்யான ஒத்துழையாமைக்காரரல்ல; சீர்திருத்தத்தை ஏற்று சட்டசபைக்குச் சென்று சர்க்காரோடு ஒத்துழைத்து சர்க்கார் உத்தியோகங்களை ஏற்று, பிராமணரல்லாதாருக்கும் தேசத்துக்கும் எங்களால் கூடியதைச் செய்வோம்" என்று சொல்லி சட்டசபைக்குள் நுழைந்தார்கள். ஓட்டர்களும் அதை ஏற்றுக்கொண்டு அவர்களையே அனுப்பினார்கள். அப்படி இருக்க அவர்கள் அனைவரும் சம்பாதித்துக் கொண்டார்கள் என்று சொல்லிப் பொறாமைப்படுவதில் என்ன பிரயோஜனம். சுயராஜ்யக் கட்சியார் பிரயாணப்படி கூட வாங்குவதில்லை என்று சொல்லி சட்டசபைக்குப் போய் தினக்கூலி பெறக்கூடிய கமிட்டி பதவியும், மாதச் சம்பளம் பெறக்கூடிய உத்தியோகமும் பிரயாணப்படியும் பெற்று, சர்க்காருக்கு அநுகூலமாயிருந்து சர்க்கார் எதிர்பார்த்ததற்கு மேல் ஒத்துழைப்பதைப் பற்றி கொஞ்சம் வெட்கப் படாமல் மேடைக்கு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டமான காரியம்? அதிகச் சம்பளம் சுயராஜ்யக் கட்சி உபதலைவர் சிறீமான் பட்டேல் மாதம் 4000 - ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இது யாருடைய பணம்? இது பொது ஜனங்களின் பணமல்லவா?

காங்கிரஸையும் ஒத்துழையாமையையும் சுயராஜ்யக் கட்சியையும் சேர்ந்த 'தேசபக்தர்' பட்டேலுக்கு மாதம் 4000 - ரூபாய் எதற்காக வேண்டும்? அவர் உடுத்திக் கொள்ள 6 முழக் கதர் போதும், குடியிருக்க ஒரு குச்சு வீடு போதும். இப்படிப் பட்ட தேசத் தொண்டருக்கு மாதம் ரூ 11-4-0 இருந்தால் போதும். இவருக்கு மாதம் 4000 - ரூபாய் எதற்கு? இது உத்தியோகம் பெறுவ தில்லை என்று போனவர் பெறும் சம்பளம். இவருக்கே மாதம் 4000 - ரூபாய் வேண்டியதிருந்தால் உத்தியோகம் பெறப் போனவர், பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் 4000 - ரூபாய் என்றால் எது அதிகம்? யாருக்கு உத்தியோக ஆசை? இதில் யார் யோக்கியர்கள்? என்பதை நீங்களே யோசியுங்கள். சம்பளம் குறைத்துக் கொண்டது யார்? அல்லாமலும் நமது பிராமணரல்லாத மந்திரிகள் "பணத்தாசை பிடித்தவர்கள்" என்று சொல்லுபவர்கள், தாங்களாகவே மாதம் 5000 - ரூபாய் சம்பளத்தை 4000- மாக ஆக்கிக் கொண்டார்கள். வருஷம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரம் ரூபாய் வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். 6 - வருஷத்திற்கு 7 - லட்ச ரூபாய் அவர்களுக்கு வருவதை வேண்டாமென்று காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தும் தேசத் தாருக்குப் பாடுபடுவதாய்ச் சொல்லியும், நமது ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் உத்தியோகம் பெற்ற பிராமணர் சர்.சி.பி.ராம சாமி ஐயர்...

பொது ஜனங்களுக்கு ஏழைகளுக்கு உழைப்பவர்கள் என்றும், தேச விடுதலைக்காக உழைப்பவர்கள் என்றும், பிரயாணப் படி வாங்குவதில்லை என்றும், சட்டசபைக்குப் போன சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் இவர்கள் எவ்வளவு படிப் பணமும் கமிட்டிப் பணமும் குறைத்துக் கொண்டார்கள்? பாமர ஜனங்கள் பயித்தியக்காரராய் இருப்பதால் இவர்கள் பிராமண ரல்லாதாரை கங்கணம் கட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறார்கள். இவர்கள் யார்? அல்லாமலும், ஜஸ்டிஸ் கட்சியார், தங்கள் இனத்தார்களுக்கு உத்தியோகம் கொடுப்பதாகவும் நாமிநேஷன் செய்வதாகவும் மந்திரி கள் பேரில் குற்றம் சுமத்துகிறார்கள். மந்திரிகள் பிராமணர்களுக்குக் கொடுக்கும் உத்தியோகத்தை இவர்கள் வெளியில் சொல்லுகிறார்களா? சிறீமான்கள் தணிகாசலம் செட்டியாருக்கும், சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியாருக்கும் நாமிநேஷன் செய்தால் அதிகாரத் துஷ்பிரயோகம் என்கிறார்கள். சிறீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு கோயமுத்தூர் ஜில்லா போர்டு மெம்பரும், டி.எம். நரசிம்மாச்சாரி யாருக்கு கடப்பை ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டும், சர்.டி.தேசிகாச் சாரியாருக்கு திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்டுமான பதவிகளுக்கு நாமிநேஷன் செய்தார்களே இவர்களெல்லாம் பிராமணரல்லாதார்களா? அல்லது பிராமணரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர்களா? இந்த பிராமணர்கள் மந்திரிகளிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டதைப் பற்றி எந்த பிராமணர்களாவது, பிராமணப் பத்திரிகைகளாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுகின்றதா? எலெக்ஷன் நாணயம் தவிர, இந்தக் காலத்து எலெக்ஷன்களாவது யோக்கியமாய் நடக்கின்றதா? எலெக்ஷன்களுக்கு நிற்கிற ஆள்கள் ஓட்டர்களுக்குப் பணங்கொடுத்துப் பழக்கி அவர்களின் நாணயத்தைக் கெடுத்து விட்டதால் யோக்கியர்கள் எலெக்ஷனில் வர யோக்கியமில்லாமல் போய்விட்டது. அப்படியானால் ஒவ்வொருவருக்கும் இருபது, முப்பதாயிரம் ரூபாய் செலவாகக் காரணமென்ன? அல்லாமலும் சட்டசபையில் நடக்கும் காரியந்தான் என்ன? எப்படியிருக்கிறது? எப்படியாவது பிராமணரல்லாதார் கெட்டவர்கள்-புத்தியில்லாதவர்கள் என்கிற பெயரை தேசத்தில் பரப்பி, பாமர ஜனங்களை வஞ்சிக்க வேண்டும்; பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களையும் கெடுக்க வேண்டும். இதுதான் சுயராஜ்யக் கட்சி என்கிற பிராமணர்களின் கட்சிக்கொள்கை.

திரு. இராமசாமி முதலியார் இல்லாவிட்டால் உதாரணமாக, ஒரு சமயம் சட்டசபையில் சிறீமான் எ.இராம சாமி முதலியார் இல்லாத சமயம் பார்த்து "சுதேசமித்திரன்" சிறீமான் சத்தியமூர்த்தி "வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு பிராமணரல்லாத உத்தியோகஸ்தர் எலெக்ஷனில் பிராமணரல்லாதாருக்காகப் பிரயத்தனப்படுகிறார். அவரைப் பற்றி விசாரித்து அவரைத் தூக்கில் போட வேண்டும். இது மகா முக்கியமான காரியம். ஆதலால் சட்ட சபையின் மற்ற காரியங்களை கட்டி வைத்துவிட்டு இதைக் கவனிக்க வேண்டும்" என்று ஒரு பெரிய தீர்மானம் கொண்டு வந்தார். தட்டிப் பேச அதுசமயம் அங்கு ஆளில்லை. பிரசிடெண்ட் இந்த தீர்மானம் ஒழுங்கானதா என்று கேட்டார். இருபதாவது நூற்றாண்டின் 'மனு' வான சர்.சி.பி. ராமசாமி ஐயர், "ஆஹா! மிகவும் ஒழுங்கானது" என்று சொல்லி விட்டார். சரியென்று சத்தியமூர்த்தி ஐயர் வாதம் தொடங்கிவிட்டார். பிராமணரல்லாத உத்தியோகஸ்தருக்கு சுருக்கு மாட்டியாய் விட்டது; இழுப்பதுதான் தாமதம். இந்த சமயத்தில் சிறீமான் எ. இராமசாமி முதலியார் சட்ட சபைக்குள் நுழைந்தார். என்ன நடக்கிறது என்று பார்த்தார். நடக்கிற விஷயத்தைத் தெரிந்து கொண்டார். உடனே சிறீமான் முதலியார் எழுந்து, "அது நிரம்பவும் முக்கியமான காரியம். இதைச் செய்து விட்டுத்தான் மற்ற காரியங்களைக் கவனிக்க வேண்டும். நானும் இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்றுதான் இருந்தேன். எனது நண்பர் சத்தியமூர்த்தி கொண்டு வந்ததற்கு வந்தனம் செலுத்துகிறேன். சட்டமெம்பர் அநுமதித்ததற்கும் வந்தனம் செலுத்துகிறேன்" என்று சொல்லிவிட்டு "இன்னும் இரண்டொரு நபர்கள் பெயரையும் அந்த ஜாப்தாவில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இரண்டொரு ஐயங்கார் ஜில்லா முனிசீப் பெயர்களையும், ஐயர் சப் ஜட்ஜு பெயர்களையும் சொன்னார். உடனே சட்ட மெம்பருக்கும் 'வீரருக்கும்' நாக்கு வறண்டுபோய் பேச வாய் வராமல் திக்குமுக்காடி 'வீரர்' சத்தியமூர்த்தி ஐயரை 'மனு' ராமசாமி ஐயர் பிரேரேபனையை வாபீஸ் வாங்கிக்கொள்ளும்படி பல்லைக் காட்டி கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். வீரரும் பின்வாங்கிக் கொண்டார். மற்ற பொம்மைக ளெல்லாம் சிரித்தனர்.

சிறீமான் எ. இராமசாமி முதலியார் அன்றையக் கூட்டத்தில் இல்லாதிருந்தால் அந்தப் பிராமணரல்லாதார் ஓலை 'மனு' ஐயரால் கிழிக்கப்பட்டே இருக்கும். இதுதான் சட்டசபை வேலை. மற்றொரு சமயம் அபிஷியல் ரெபரி (official reffery) என்கிற சுமார் மாதம் 1000 ரூபாய் சம்பளமுள்ள ஒரு உத்தியோகம் தற்கால சாந்தியாய் ஆக்கப்படும்போது, சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் ஆட்சேபித்தார்கள். அது சர்க்கார் மெம்பர்கள் தயவில் நிறைவேறி கடைசியாய் ஒரு பிராமணருக்கு அந்த உத்தியோகம் கொடுக்கப்பட்டு மறுபடியும் அது காயமாக்க சட்டசபைக்கு வரும்போது சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் தாராளமாய் நிறைவேறச் செய்தார்கள். ஏன்? அந்த உத்தியோகம் ஒரு பிராமணருக்குக் கிடைத்தது. சத்தியம் தவறிய திரு. சத்தியமூர்த்தி மற்றொரு சமயம் சிறீமான் சத்தியமூர்த்தியும் சிறீமான் எ.இராமசாமி முதலியாரும் சீமைக்குப் போயிருந்தபோது, சிறீமான் சத்தியமூர்த்தி, சிறீமான் இராமசாமி முதலியாரைப் பார்த்து "நம் நாட்டி லுள்ள பிராமணர் -பிராமணரல்லாதார் விஷயம் வெள்ளைக்காரர் களிடம் பேசக்கூடாது; அதைப்பற்றி நமது நாட்டில் பேசிக் கொள்ளலாம்; இங்கு பேசினால் எதிரிக்கு இளப்பமாய்ப் போய்விடும். நானும் ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி பேசுவதில்லை" என்று கேட்டுக் கொண்டாராம். சிறீமான் முதலியார் அதற்கிணங்கி அங்கு இருக்கும் வரை பிராமணரைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம்.

சிறீமான் முதலியார் சீமையை விட்டுப் புறப்பட்டு கப்பல் ஏறியவுடன் சத்தியமூர்த்தி ஐயர் தாங்கள் செய்துகொண்ட சத்தியத்தை மீறி மூட்டையை அவிழ்த்து விட்டாராம். இவற்றைப் பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இம்மாதிரி கூட்டத்துடன் போராடு வதென்றால் லேசான காரியமல்ல. ஆதலால் பிராமணரல்லாதார் இதுசமயம் சுயராஜ்யம், உரிமை, விடுதலை, முட்டுக்கட்டை என்கிற போலி வார்த்தைகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். சட்டசபையோ, முனிசிபாலிட்டியோ , இவைகளில் ஏதாவது தேசத்திற்கோ, சுயராஜ்யத்திற்கோ, ஏழை மக்களுக்கோ ஒரு பிரயோ ஜனமும் தராது. அது ஒரு பதவி. அல்லாமலும், தாழ்ந்து கிடக்கும், பிற்போக்கடைந்திருக்கும் வகுப்பார் உயர்ந்த வகுப்பார் என்பவர்கள் காலில் சிக்கி மிதிபடாமல் இருப்பதற்கு ஏதாவது வேண்டுமானால் உபயோகப்படலாம். அம்மாதிரி அதை உபயோகப்படுத்திக் கொள்ள நம்பிக்கையும் ஆசையும் உள்ளவர்கள், அப்பதவிகளை தங்கள் சமூகத் தில் அக்கறை உள்ள சமூகத்தார்களுக்கு கொடுக்க வேண்டுமேயல்லாமல் மற்றபடி சுயராஜ்யம், தேசம், உரிமை என்று எண்ணி ஏமாந்து சமூகக் கவலையில்லாதவர்களுக்கோ பிராமணர்களுக்கோ கொடுக்கக் கூடாது என்பதுதான் நீங்கள் கடைசியாக உணர வேண்டியது. சமூகமே பெரிது மெளலானாக்கள் மகமதலி, ஷவுகத்தலி, கிச்சிலு போன்ற வீரர்களின் அபிப்ராயமென்ன? அவர்களைப் பற்றி பிராமணப் பத்திரிகைகள் பலவாறு தூற்றினாலும் அவர்கள் பேரால் துவேஷம் உண்டாகும்படி எழுதினாலும் அவர்கள் தைரியமாய்ச் சொல்லுவது என்ன? நமது சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுயமரியாதை தான் முக்கியமானது என்கிறார்கள். அதுபோலவே பிராமணரல்லா தாராகிய நமக்கு சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுயமரியாதை தான் முக்கியமானது. உதாரணமாக, சட்டசபையில் பொதுத் தெருவில் மகாராஜா சக்கரவர்த்தியின் பிரஜைகள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்று தீர்மானம் நிறைவேறிற்று.

அடுத்த நாள் 'வேலை இருந்தால்தான் போகலாம்' என்று பிராமண சட்டமெம்பர் அத் தீர்மானத்திற்கு வியாக்கியானம் எழுதிவிட்டார். அந்த ஸ்தானத்தில் சிறீமான் ஆர். வீரய்யன் இருந்தால் இந்தப்படி வியாக்யானம் செய்திருப்பாரா என்று யோசித்துப் பாருங்கள். நமக்கு சுயராஜ்யம் வந்தாலும் இத்தகைய பிராமண சட்டமெம்பர்கள் இப்படித்தானே வியாக்கியானம் செய்வார்கள். ஆதலால் சுயராஜ்யம் இல்லா விட்டாலும் சிறீமான் வீரய்யன் போன்றவர்கள் இந்த உத்தியோகத் திற்கு வரும்படியான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தால் சுயமரியாதை ஏற்படுமா? இல்லையா? சுயமரியாதை ஏற்படாமல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் நம்பிக்கையும் ஏற்படாமல் நாம் எப்படி சுயராஜ்யத்தைப் பற்றி பேசமுடியும்? யார் சம்மதிப்பார்கள்? நம்மிடமே சகல அதிகாரங்களையும் சகல ராஜீயபாரத்தையும் யாராவது ஒப்புவித்து விடுவதாயிருந்தால் பெற்றுக்கொள்ள நாம் இப்போது தயாராயிருக்கிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

உதாரணமாக, இந்த நாட்டிற்கே இப்பொழுது வைஸ்ராயாக இருக்கும் லார்டு இர்வின் துரை பட்டாள முத்திரையையும் , கஜானா சாவியை யும் கொண்டுவந்து கொடுத்து நம்மை எடுத்துக் கொள்ளச் சொன்னால், நம்மில் எடுத்துக்கொள்ள யார் சம்மதிப்பார்கள்? முதலாவது பிராம ணர்கள் வந்து எடுப்பார்கள். அதனை பிராமணரல்லாத ஹிந்துக்கள் -ஆதிதிராவிடர்கள், மகமதியர்கள், கிறிஸ்தவர்கள் முதலான வகுப்பார் சம்மதிப்பார்களா? பிராமணரல்லாத ஹிந்துக்கள் எடுத்துக் கொள்ளுவ தாயிருந்தால் பிராமணர்கள் சம்மதிப்பார்களா? பிராமணரும் பிராமண ரல்லாதவர்களுமாகிய ஹிந்துக்கள் ராஜியாய் எடுத்துக் கொள்ளுவ தானால் மகமதியர் சம்மதிப்பார்களா? இந்த மூவரும் சம்மதித்து ஒப்புக்கொண்டாலும் கிறிஸ்தவர்கள் சம்மதிப்பார்களா? இந்த நால்வரும் ராஜியாய் விட்ட தெருவில் நடக்கவும் குடிக்கத் தண்ணீர் மொள்ளவும் கூட பாத்தியமில்லாமல் வைத்திருக்கும் ஆதி திராவிடர் என்கிற கூட்டத்தார் சம்மதிப்பார்களா?

ஒவ்வொரு கூட்டத்தாரும் இர்வின் பிரபுவின் காலைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர், "ஐயா! இந்தப் பாவிகளிடம் ஒப்புவித்துவிட்டுப் போனால் எங்கள் கதி என்னாவது என்றும் ஜாதி வித்தியாசமில்லாத ஜாதியாராகிய உங்கள் ராஜீய பாரத்திலே நாங்கள் 'மிலேச்சர்', நாங்கள் 'தாசி மக்கள்', நாங்கள் 'அஞ்ஞானி',நாங்கள் 'முரடர்கள்', நாங்கள் தெருவில் நடக்க- கண்ணில் பார்க்க - கிட்டவர - சுவாமியைக் கும்பிட முடியாத அவ்வளவு தாழ்ந்தவர்களாயிருக்கும் போது, ஜாதித் திமிர், கூட்டத் திமிர், ஒற்றுமைத் திமிர், அரசாங்கச் சலுகைத் திமிர் பிடித்த இவர் களிடத்தில் பட்டாளத்தையும், கஜானாச் சாவியையும் கொடுத்து விட்டுப்போனால் எங்களை நாய் பன்றிகளைவிட கேவலமாய் நடத்துவார்கள். கழுத்தில் கயிறு கட்டி சந்தையில் விற்பார்கள். ஆதலால், ஐயனே! நீங்கள் போய் விடாதீர்கள்" என்று ஒவ்வொரு வரும் குறுக்கே படுத்துக் கொள்வார்களா இல்லையா?

நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்களை ஏமாற்ற வாயில் சுயராஜ்யம், உரிமை, ஒற்றுமை என்று பேசுவதில் என்ன பிரயோஜனம்? மகாத்மா இதை அறியாமலா தன்னை ஒரு வைஸிராய் "சுயராஜ்யம் என்றால் என்ன? என்னதான் வேண்டும்?" என்று கேட்ட காலத்தில் "சுயராஜ் யம் அடைய என் ஜனங்கள் இன்னமும் தயாராக வேண்டும். அதற்குத்தான் நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். அந்தத் தயார்தான் என் நிர்மாணத் திட்டம்" என்று சொன்னார். நிர்மாணத் திட்டம் நிறைவேறாமல் மகாத்மாவினாலேயே பெறுவதற்குப் பாரமாயிருந்த சுயராஜ்யம், நிர்மாணத் திட்டத்தைப் புதைத்த நமது சீனிவாசய்யங்கார் கோஷ்டிக்கு மிக லேசாய்ப் போய் விட்டதென்றால் அதன் தத்துவத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள். சுயராஜ்யம் வந்தால் நமது நிலை என்ன? மகமதியர் நிலை என்ன? கிறிஸ்தவர் நிலை என்ன? என்பது தீர்மானமாகிவிட வேண்டும். இல்லாதவரை ஒருவரை ஒருவர் கொன்றுத் தின்பதுதான் நமது நாட்டில் நடைபெறும். உத்தியோகமும், அதிகாரமும், பதவியும் ஒருக்காலமும் சுயராஜ்யமாகாது.

சுயமரியாதையுடன் ஒற்றுமையால் தாங்கள் தங்கள் ஜீவனத்திற்காக தங்கள் தங்கள் மனசாட்சியையும் கற்பையும் விற்காமல் ஜீவனம் செய்வதுதான் சுயராஜ்யம்; இதற்கு நிர்மாணத் திட்டந்தான் முக்கியமானது. இவைகள் எல்லாவற்றிலும் கதரும், தீண்டாமை ஒழிப்பதும் மிகவும் முக்கியமானது. ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்துங்கள்; தீண்டாமையை அறவே ஒழியுங்கள்; வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி எல்லோருடைய நம்பிக்கையையும் பெறுங்கள். இல்லாதவரை துவேஷம் வளர்ந்து கொண்டுதான் வரும். இப்போது பாமர ஜனங்களை ஏமாற்றி சிலர் பதவிக்கு வந்துவிடுவதால் அதனால் ஏற்படும் பலன் பின்னால் அவர்கள் சந்ததியாருக்கு ஆபத்தாய் முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஆதலால் எல்லோரும் ஒன்று கூடி ஒரு திட்டம் போட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்கி பிற்கால வாழ்வை பயமற்றதாக்கிக் கொள்ளுங்கள்.

(கோயமுத்தூர் டவுன்ஹால் மைதானத்தில் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் சார்பில் 30.05.1926 இல் நடத்தப்பட்ட மகாநாட்டில் சொற்பொழிவு) ( குடிஅரசு-13.06.1926 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_5123.html

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப் படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல. சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10 - வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம் போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே. இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது. ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது. ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.

 

சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது. பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது. சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.

 

நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப்படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார். சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார். இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா? இது தருமந்தானா? என்று கேட்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்? பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும். சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம்.

 

இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு? துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது. இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது. ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.

 

( கட்டுரை : குடி அரசு 20.12.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_22.html

திராவிடர் கழகத்தின் இலட்சியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வரும் இழிவு, காட்டுமிராண்டித்தனம், தற்குறித்தன்மை இவற்றை நீக்கி மக்கள் மனிதத்தன்மை பெற்று வாழ வேண்டும் என்பது ஆகும். அதற்காகவே (திராவிடர் கழகம்) பாடுபடுகின்றது. இந்தத் தொண்டு செய்ய 2000 - ஆண்டுகளுக்கு மேலாக மட்டும் அன்று, இன்றும் கூட செய்ய வேறு ஆளோ, வேறு ஸ்தாபனங்களோ இல்லை. திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்தத் துறையில் இறங்கிப் பாடுபடுகின்றது. நம் தமிழ் மக்கள் எல்லாரும் இந்த நாட்டில் பரம்பரையாக வசித்து வருபவர்கள். இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள். உழைத்து மக்களுக்கு உதவுபவர்கள். இப்படிப்பட்ட நாம் 100 - க்கு 97 - பேராக உள்ள நாம் (தமிழர்கள்) இந்த நாட்டில் கீழ்ச் சாதி, பார்ப்பான் மேல் சாதி என்று ஆக்கி வைத்துள்ளார்கள். பாடுபடுகின்ற மக்கள் கீழ்சாதி என்பது உலகில் வேறு எங்குமே காண முடியாதது. இங்குதான் உள்ளது அதேபோலவே 100 -க்கு 3 -பேராக உள்ள பார்ப்பான் உடல் உழைக்காமல் ஊரார் உழைப்பிலேயே நோகாமல் உண்ணுபவன் மேல்சாதி என்று ஆக்கி வைத்து இருக்கின்றார்கள். இப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது. இதனை மாற்ற எவனும் முன்வரவே இல்லை! இதுபற்றி இந்த நாட்டில் தோன்றிய பெரியோர்களோ, அவதாரப் பருஷர்களோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ கவலைப்பட்டு எடுத்துச் சொன்னார்கள் - இவற்றை நீக்கப் பாடுபட்டார்கள் என்று சொல்லும்படியான ஆளைக் காட்டவே முடியாதே! தோன்றியவன் எல்லாரும் நமது இழிவை மாறிவிடாமல் ஆணி அடித்து நிலைக்கச் செய்தவர்களாகவே தானே இருந்தார்கள்?

100 - க்கு 97 - பேராக உள்ள தமிழ்மக்களை இழிமக்கள் - தாழ்ந்த சாதி மக்கள் என்று கூறிக் கொண்டு 100 - க்கு 3 - பேராக உள்ள பார்ப்பனர்கள் 1961 - லும் உயர்வாக வாழ்கின்றான் - மேல் நிலையில் இருக்கின்றான் என்றால் இது எதனைக் காட்டுகின்றது? நமது மான - ஈன நிலையைத்தானே காட்டுகின்றது? நமக்கு மானம் இருக்குமானால் நம்மை இழிமக்கள் என்று கூறுவதைப் பொறுத்துக் கொண்டு (நம் தமிழ் மக்கள்) இருப்பார்களா? 100 - க்கு 97 -பேராக உள்ள (தமிழர்களாகிய) நமக்குப் படிப்பு இல்லை காமராசர் பதவிக்கு வருவதற்கு முன் வரையில் 100 - க்கு 15 - பேர்களே படித்து இருந்தோம். இதில் பார்ப்பான் 3 - பேர் போனால் 12 - பேர்களே படித்து இருந்தோம். ஆனால் பார்ப்பானர் மட்டும் 100 - க்கு 100 - படித்து இருக்கின்றார்களே! இன்று ஏதோ காமராசர் ஆட்சியின் காரணமாக 100 - க்கு 32 - பேர்களாக உயர்ந்து உள்ளோம். இப்படி 100 - க்கு 97 - பேராக உள்ள தமிழ் மக்கள் மீது 3 பேராக உள்ளவன் (பார்ப்பான்) ஆதிக்கம் செலுத்திக் கொண்டு நம்மைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்து இருக்கின்றான் என்றால் நமக்குப் புத்தியும் இல்லை, மானமும் இல்லை. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட நிலையில் உள்ளோம். நம்மை (தமிழர்களை) அடிமைப்படுத்தும் பார்ப்பான் 100 - க்கு 3 -பேராக இருந்தாலும் 100 - க்கு 97 - பேராக உள்ள நாம் அடங்கிக் கிடக்கின்றோம் என்றால் காரணம் அவன் கையில் ஆயுதங்கள் உள்ளன. நாமோ நிராயுதபாணிகள் ஆவோம். எப்படி போலீஸ்காரர் நான்கு பேராக இருந்தாலும் அவர்கள் கையில் உள்ள துப்பாக்கி கண்டு பெரிய கூட்டமானாலும் பயந்து அவன் சொன்னவுடன் கலைந்து ஒடுகிறதோ, அதுபோல பார்ப்பான் கையில் உள்ள ஆயுதங்களான கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு முதலிய ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களின் காரணமாக நாம் (தமிழர்கள்) அடங்கிக் கிடக்கிறோம்.

நாம் இவற்றில் இருந்து விலகி மனிதத் தன்மை அடைய வேண்டுமானால் பார்ப்பான் கையில் உள்ள இந்த ஆயுதங்களைப் பிடுங்கி எறிய வேண்டியவற்றை எறிந்தும் பிடுங்க முடியாதவற்றை முனை மழுங்கச் செய்தும் ஆக வேண்டும். கடவுள் என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களையே ஆட்டுகின்றான். (தமிழர்களாகிய) நாம் கோயில், குளம் கட்டியவர்களாக இருந்தாலும் நாம் உள்ளே புக யோக்கியதை அற்றவர்கள் என்று கூறி வெளியே நிறுத்தி வைத்து இருக்கின்றான். எல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கிறதே ஒழிய ஒருவனுக்காவது கடவுள் என்றால் என்ன? என்று தெரியாது. கடவுளையும், கோயில், குளத்தையும் வளர்த்துக் கொண்டானே ஒழிய அறிவில் வளர்ச்சி அடையவேயில்லை. அதுபோலவே மதம் என்றால் என்ன? சாத்திரம் என்றால் என்ன? என்று எவனுக்காவது தெரியுமா? ஒருவனுக்காவது தெரியாது. ஆனால் அவ்வளவு பேரும் அவற்றைக் கட்டிக் கொண்டு அழுகின்றான். நம் ஆயுள் காலத்திலாவது இவற்றை ஒழித்துத் தீர வேண்டும். அப்போது தான் நாம் (தமிழர்) இழி மக்களாக இருந்தாலும் நாம் பிள்ளைக் குட்டிகளுக்காவது இழிபட்டம் இல்லாமல் முடியும்.

அரசாங்கம் என்றால் என்ன? என்று எவனக்காவது தெரியுமா? பார்ப்பான் தங்கள் வாழ்க்கை வசதிக்காகத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது தான் இந்த அரசாங்கம் என்று நான் 30 - ஆண்டுகளுக்கு மேலாகவே கூறி வந்திருக்கின்றேன். என்னை எல்லோரும் எதிர்த்தார்கள். நான் கவலைப்படாமல் என்றைக்குக் காங்கிரஸ் பார்ப்பானுடைய நலனுக்கும் வாழ்வுக்கும் தான் உள்ளது என்பதைக் கண்டு வெளியேறினேனோ அன்று மதல் காங்கிரஸ் ஒழிக! பார்ப்பான் ஒழிக! என்று கூப்பாடு போட்டு வந்து இருக்கின்றேன். இப்படி நான் போட்ட கூப்பாடானது வீண் போகவில்லை. இன்று நிலை எப்படியாகிவிட்டது தெரியுமா? பார்ப்பனர்கள் எல்லாரும் காங்கிரசை விட்டு ஒடும்படியாகிவிட்டது. "காங்கிரசே" இன்று தமிழர்கள் கைக்க வரும்படியான நிலைமையை இன்றுதான் காண்கிறோம்.

தோழர்களே! காங்கிரசின் காரணமாக வாழ்வு பெற்றவர்கள் இந்த இராஜாஜியும் மற்ற மற்றப் பார்ப்பனர்களும் தான். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குக் காங்கிரசில் இடம் இல்லை தமிழர்களுக்குப் பயன்படும்படியாக இருக்கின்றதே என்ற ஆத்திரத்தின் காரணமாகவே இன்று பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கின்றார்கள். தோழர்களே! என்றைக்குமே இல்லாத மாதிரி காங்கிரஸ் இன்றுதான் தமிழர்கள் கையில் வந்துள்ளது. தமிழர்களுக்குப் பயன்படும்படியான நிலையிலும் உள்ளது. இதை ஒழிக்கப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் முயற்சிக்கின்றார்கள். நம் மக்களின் கல்வி உத்தியோகம் பதவி முதலியவைகளிலும் மற்றும் விவசாயம் மின்சாரம் தொழில்துறை மற்ற மற்ற பல துறைகளிலும் காமராசர் ஆட்சி செய்துள்ள நன்மைகள் நிலைக்கவும் மேலும் வளரவும் வருகின்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டு அளிக்க வேண்டும்.

(03-11-1961 அன்று ஜெயங்கொண்டத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 23-11-1961)
(பெரியார் களஞ்சியம் ஜாதி - தீண்டாமை பாகம் -9 .... பக்கம் : 92)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_23.html

பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறை வாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது. நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும்போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக்கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதிமுறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 - ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.

இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்?

நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_24.html

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது ‘குடி அரசு’ தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு - தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.

 

உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும். தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்கவேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது; எவ்வித சட்டமும் செய்யக்கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும், இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.- ‘குடிஅரசு’, தலையங்கம், 19-5-1929 - வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான்.

 

ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்கும் தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம். இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின் மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும், மாடங்களும், மாளிகைகளும் நாசமானாலும் கூட, ‘ஓர் உயிர் உள்ளவரை போராடியே தீருவேன்’ என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும்.

 

நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ‘ஏன் சண்டை போட வேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே’ என்கின்ற ஞானமும், ‘யார் ஜெயித்தால்தான் என்ன?’ என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் - நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.

 

மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் ‘வகுப்புவாதி’ என்றும் - ‘தேசத் துரோகி’ என்றும் - ‘உத்தியோக வேட்டைக்காரர்கள்’ என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.

 

நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ‘ஆம்’ என்றே வைத்துக்கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால், யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்றுகூடச் சொல்லத் துணிவேன்.

 

ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும், அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்? உத்தியோகம் யார் அப்பன் வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய் - தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்க்கத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட் டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்கமாட்டானா என்று கேட்கிறேன்.


(சென்னையில், 08-09-1940 - இல் தந்தை பெரியார் சொற்பொழிவு. ‘விடுதலை’,29-08-1950)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_25.html