Language Selection

பெரியார்

தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்!’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு சாதி? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக் கொள்’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்படமாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? சாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை. சாதியைக் கைவிட்டு, சாதி ஆசாரத்தைக் கைவிட்டு, ‘அனைவரும் ஒன்றே’ என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை - நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம். தமிழர் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின் மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர் மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் ‘தாமும் தமிழர்கள்’ என்று கலந்து கொண்டார்களே? அப்படித் தானே நடக்கும்?... வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள். இதை நீங்கள் பெரிதும் மாணவ, மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.


(சிதம்பரத்தில், 29.09.1948-ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 05.10.1948)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_29.html

உலகில் மனிதர் பிறப்பதும், சாவதும் "கடவுள் செயலா?'' மனிதர் செயலா?'' என்பதைப்பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும். மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப்பற்றிய விஷயத்தில் சிறிதும் அறிவில்லாமல் "எல்லாம் கடவுள் செயல்'' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய கவலையற்றவர்களாக இருந்து வந்தார்கள்.

 

மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப்பற்றியும், சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 - வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில் இந்த உலக ஜனத்தொகையே சுமார் 20 - கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது. பிறகு, 1500 (ஆயிரத்து அய்நூறு) வருடம் கழித்து பிறகு உலக ஜனத்தொகை (கி.பி.1500-இல் 45 - (நாற்பத்து அய்ந்து) கோடி மக்களைத்தான் கொண்டிருந்தது. பிறகு, சுமார் 300 வருஷம் கழித்து கி.பி. 1800-இல் 70 (எழுபது) கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது.பிறகு 115 - வருஷம் கழித்து 1915-இல் இந்த உலகம் 165 (நூற்று அறுபத்தைந்து) கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது. அன்று மக்களுடைய ஆயுள் சராசரி 25 - வருஷமாக இருந்தது.பிறகு கி.பி. 1954-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை 326 - கோடி மக்களாக ஆகி அவர்களுடைய ஆயுளும் சராசரி 60-65 வருஷங்களாகவும், நம் நாட்டில் 37- வருஷங்களாகவும் ஆகி இருந்தது.

 

இன்று 1964-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை சுமார் 350 - கோடி என்பது மாத்திரமல்லாமல் மக்களின் ஆயுள்காலம் சராசரி மற்ற நாடுகளில் 60-க்கு 70 - என்பதாகவும், நம் நாட்டில் சராசரி 50 - வருஷமென்றும் ஆகி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இறப்பும் - பிறப்பும் பெருமளவிற்கு குறைந்து இருக்கிறது.மனிதநூல் ஆதாரப்படி மக்களுக்கு ஆயுள் 100 - வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் சராசரி ஆயுள் 20 - முதல் இன்று 50- வயது; மேல் நாடுகளில் 60-70 வயதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கடவுள் செயலா, மக்களின் அறிவு வளர்ச்சியும், வைத்திய வளர்ச்சியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

இங்கிலாந்து நாட்டு சரித்திரத்தைப் பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்! காரணம் "கடவுளால் உண்டாக்கப்பட்ட நோயை மனிதன் கடவுளுக்கு விரோதமாக மருந்து கொடுத்து சவுக்கியம் செய்வதா?'' என்ற கடவுள் பக்தி காரணத்தால் கொல்லப்பட்டார்கள். நமது நாட்டிலும் காலராவுக்கும், அம்மைக்கும் 1900-ஆம் வருஷம் வரை மருந்தே இல்லாமலிருந்தது, அப்போது காலரா 100 - பேருக்கு வந்தால் 90 - பேர் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 100-க்கு 10 பேர்களைக்கூட டாக்டர்கள் சாகவிடுவதில்லை.

 

அம்மைக்கு மேல் நாட்டார் அம்மை குத்தி அம்மை வராமல் தடுப்பது மாத்திரமல்லாமல், மேல் நாட்டில் வந்த பிறகு சவுக்கியம் செய்ய மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அது மாத்திரமல்லாமல், மக்கள் அதிகமாக பிள்ளை பெறாமல் இருப்பதற்கு மருந்து, இரண சிகிச்சை முதலிய காரியங்கள், மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணமென்று. மற்றும் மீன் பண்ணை வைத்து மீன்களை உற்பத்தி செய்கிறான் மனிதன். கோழிப் பண்ணை வைத்து முட்டைகளைப் பெருக்கி கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். இவற்றை தினம் கோடிக் கணக்கில் கொன்று தின்கிறார்கள் மனிதர்கள். இந்த ஜீவன்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணம் என்பதைச் சிந்தியுங்கள். தோட்டம் வைத்து காய்கறி, உணவுப் பொருள் உற்பத்தியாக்கி அறுவடை செய்து உண்பதற்கும் இதற்கும் என்ன பேதம்? சிந்தியுங்கள்! எனவே, கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, ஆபத்தானது, வளர்ச்சியைத் தடுப்பது என்பதை உணருங்கள். இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

 

(தந்தை பெரியார்- "விடுதலை"-21-05-1967)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_6544.html

இந்து மதத்தை ஒழிப்பதற்காகவாவது யூனியன் ஆட்சியை (மய்ய அரசை) ஓழிக்க இந்தியா படத்தைப் பொசுக்குங்கள்! தோழர்களே! இந்நாட்டுக் குடிமக்களான நாம் (தமிழ்த் திராவிடர்) 100- க்கு 90 - பேர் இந்து மதம், இந்துமதக் கடவுள், புராண, இதிகாச சாஸ்திர அமைப்புகள் ஆகியவற்றின்படி, ‘சூத்திரர்கள்’. அதாவது மேல் சாதிக்காரர்களாகிய பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகும். இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கும்வரை, இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள சூத்திரப் பட்டம் ஒழியாது; நிச்சயம் ஒழியாது.

 

ஆனால், இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன - மநு தர்மவாதிகளின் ஆட்சியில், இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் ‘மதம் மனிதனது சொந்த விஷயம்’ என்ற பாவனையில் கூட அரசாங்கம் நடப்பதில்லை. இதற்குப் பிரத்யட்சயமாகப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

 

1. இந்திய அரசமைப்புச் சட்டம் என்கிற பார்ப்பன நவீன மநுதர்மச் சட்டம், எல்லோருக்கும் மதச் சுதந்திர உரிமை அளித்திருக்கிறது. அதன்படி இந்து மதக்காரன் சுதந்திரமாக இன்னொருவனைப் பார்த்து ‘நீ கீழ் சாதி, இழி சாதிக்காரன், சூத்திரன், பஞ்சமன்’ என்று கூறினால், மற்றவனும் ஆம் என்று தலையசைப்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? கூறுவதற்கு உரிமையும் இல்லை (‘இந்து லா’வே (சட்டமே) இதற்கு ஆதாரம்)

 

2. இந்திய அரசாங்கத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இதை ஒரு ‘மதச்சார்பற்ற அரசாங்கம்' என்பதாகக் குறிப்பிடுவார்கள். அத்தகையோர்களைப் பார்த்து நான் வணக்கமாகக் கேட்டுக் கொள்வது எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஓர் இடத்திலாவது இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதா? சட்ட நிபுணர்களே ஆராய்ந்து பாருங்கள் (மதச்சார்பு ஆட்சி என்பதற்கு அரசமைப்புச் சட்டமே ஆதாரம்). மதப்பாதுகாப்பு என்றால் மநு தர்ம - வர்ணாசிரமப் பாதுகாப்பு அல்லாமல் வேறு என்ன?

 

3. இந்த ஆட்சியில் மதப் பண்டிகைகளுக்கு எல்லாம் அரசாங்க விடுமுறை.

 

4. கும்பமேளா போன்ற ஆபாச நிர்வாணப் பண்டிகைத் திருவிழாக்களில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளத் தவறுவது இல்லை.

 

5. 50,000 - ரூபாய் செலவில் வருஷா வருஷம் ராவணனை எரிக்கும் ‘ராமலீலா’' பண்டிகையில் ஆட்சி பீடத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மத உணர்ச்சியை நன்றாகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

 

6. ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் காசிக்குப் போய்ப் பார்ப்பனர்களது காலைக் கழுவிவிட்டு வருவதும், கன்னியாகுமரிக்கு வந்தாலும் பார்ப்பனர்களிடம் மண்டி போட்டு உட்கார்ந்து தர்ப்பணம் பண்ணுதலும் உலகப் பிரசித்தி பெற்ற விசயங்களாகும்.

 

7. அணைக்கட்டுகள் திறப்பதானாலும் சரி, கப்பல் கட்டி அதைக் கடலில் மிதக்க விடுவதானாலும் சரி, இந்து மத முறைப்படி, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தேங்காய் உடைத்து, மதச் சடங்குகள் முறையில் அர்ச்சனை செய்துதான் அரசாங்கக் காரியங்கள் நடைபெறுகின்றன.

 

8. சோமநாதபுரம் கோயிலைப் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து - அரசாங்க ஆதரவுடன் புதுப்பித்திருக்கிறார்கள்.

 

9. இந்து மதத்திற்கே சலுகையெனப்படும் முறையில் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய டெல்லி சர்க்கார் காட்டும் முயற்சி, ஆர்வம் அதிகம்.

 

10. வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் - டிட்டோ, குருஷ்சேவ் போன்றவர்கள் வரும்போது, இந்துக் கோயில்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று பூரண கும்ப மரியாதை செலுத்தி, நடராசன், சிவன் போன்ற கடவுள்களின் சிலைகளை அவர்களுக்குப் பரிசளித்தல்.

 

11. தபால் (அஞ்சல்) முத்திரையில் மும்மூர்த்தி உருவம் போட்டு அச்சடிப்பது.

 

12. அரசாங்க அலுவலகங்களில் இந்து மதக் கடவுள்களின் படத்தை வைத்து, அதற்கு அடிக்கடி பூசை நடத்துதல்.

 

13. ‘இந்து லா'வின்படி பவுத்தர்களையும் இந்துக்களாக எண்ணி இந்து சட்டத்தையே விவகாரத்திற்குப் பயன்படுத்திய போதிலும், பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வட நாட்டில் புத்த மார்க்கத்தைத் தழுவினார்கள் என்றவுடன், அவர்களை அதற்காகப் பழிவாங்கும் தன்மையில் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தந்து வந்த கல்வி, உத்தியோகச் சலுகைகள் இனி தரப்பட மாட்டாது என்று இந்திய யூனியன் (மய்ய ஆட்சி) மறுத்தது, இது இந்து மத சர்க்கார்தான் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த நிலையில், இவற்றை எல்லாம் துணிந்து எடுத்துக் கூறி, இத்தகைய வர்ணாசிரம தர்மப் பாதுகாப்பு ஆட்சியினின்று விடுபட்டால்தான், இந்து மதப் பிடிப்பிலிருந்து விலக முடியும். இந்து மதப் பிடிப்பு ஒழிந்தால்தான் மூவாயிரம் ஆண்டு காலத்து இழிவான சூத்திரப்பட்டமும் ஒழியும்.

 

(தந்தை பெரியார் - 'விடுதலை' தலையங்கம் 27-05-1960)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_31.html

*
நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமுமல்ல. கம்யூனிஸ்டுகள், ‘பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும், மக்களிடையே உள்ள பேதாபேதம் ஒழிந்துவிடும்’ என்று கருதி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்கள் கடவுள், மத, மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசாமலே இருந்து வருகிறார்கள்.

பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்த மானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லாருமே ஒரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப் பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பேதாபேதம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.

பணக்கார முதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன முதலாளிகளும், கல் முதலாளிகளும், மட முதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, முதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

(பம்பாயில்- 12-02-1950-இல் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 22-02-1950)

கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பேதம் கிடையாது. அதாவது, இன்றைய தினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன்,‘கம்யூனிஸ்ட் கட்சி என்றால் பணக்காரர்களை ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிக்கத்தில் ஆக்குவது’ என்றும்; ‘திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையனை உண்டாக்கிய சாமியை யும் ஒழிப்பதும், கோவில்களிலே அடைபட்டுக் கிடக்கும் குழவிக் கற்களை உடைத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக்கும், தொழிலுக்கும் ஆஸ்பத்திரிக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் கூறுவது’ என்றுந்தான் கூறுவான்.

அப்படியே தான் இன்றையதினம் பொதுமக்களும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது.

பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல் சாதி - கீழ் சாதித்தன்மையும், கடவுள் தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரையும், மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான், திராவிடர் கழகம், ‘பணக்காரத் தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை’ என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத் தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சுலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.

(தந்தை பெரியார் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 04-10-1951)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_03.html

மணி : ஏன்டா சேஷா! நம்ம தலைவர்களான சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச சாஸ்திரி, சிவகாமி அய்யர், இ.ட. அய்யர் மற்றுமுள்ள பிராமணத் தோமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ங.ஓ. ஆச்சாரியார், வெங்கிட்டரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடு பட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக்கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது.

சேஷன் : மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பனகால் ராஜாவை ஒழிச்சமே அது ஒன்றே போதுமே.

மணி : பனகால் என்ன அவ்வளவு மோசமான ஆசாமியா?

சேஷன் : அட பயித்தியமே! நம்ம கூட்டத்திற்கே இந்த ஆள் பெரிய எமனாகவல்லவா 6 -வருஷமாய் வந்து உட்கார்ந்துக் கொண்டு பிராமணாள் வாயில் நிரந்தரமாய் மண்ணை போடத்தக்க மாதிரி எவ்வளவோ வேலை செய்து சூத்திரர்களை யெல்லாம் கை தூக்கி விட்டார். நீயே நன்றாய் கவனித்துப் பார். பனகால் மந்திரியான பிறகு, சூத்திரன்களில் எவனாவது பிராமணனைக் கண்டால் சுவாமி என்கிறானா? கும்பிடுகிறானா? பிராமணன் என்கிற மரியாதை வைத்துப் பேசுகிறானா? இதை நினைத்தால் வயிறு எரிகிறதே.

மணி : நீ சொல்வது தப்பு. இன்னமும் கிராமாந்திரங்களில் எவ்வளவு பெரிய மிராஸ்தாரானாலும் ஒரு சின்ன பிராமணப் பையனைக் கண்டால் எழுந்து நிற்கிறான். வாங்க, வாங்க சாமி என்று குனிந்து கும்பிடுகிறான். இந்தப் பையன் அடே போடா வாடா என்று பேசினாலும் அவர்கள் அதை இழிவாய்க் கருதுவதில்லை. கிராமாந்திரங்களில் தாசிகள் பிராமணாளிடத்தில் பணமே வாங்குவதில்லை. பிராமணன் என்றால் இன்னம் எவ்வளவோ காரியங்கள் நடக்கின்றது. சும்மா பனகால் மீதில் வீண் பழி சுமத்துகிறாயே.

சேஷன் : அட மண்டூகமே! நீ பட்டிக்காட்டான் ஆனதினால் கிராமத்து சங்கதியை கட்டிக் கொண்டு அழுகிறாய். பட்டண வாசல்களில் நடக்கும் அபாயம் உனக்கு என்ன தெரியும்? காப்பிக்கடையில் போய் பார். முன்னெல்லாம் சுவாமி சுவாமி ஒரு இட்டெலி கொண்டு வாருங்கள் என்று வணக்கமாய் கேட்பார்கள். இப்போது ஓய் ஐயரே இட்டிலி கொண்டு வா என்று அதிகாரம் பண்ணுகிறான். வக்கீல்களைக் கண்டால் நடுங்குகிறவர்கள் இப்போது குடியானவன் கூட வாய்யா போய்யா என்கிறான். தாசி வீட்டிற்குப் போனால் பிச்சை எடுக்கிற பார்ப்பானுக்கு தேவடியா ஒரு கேடா என்கிறாள். பெரிய பெரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தில் எல்லாம் சூத்திரன்களே வந்துவிட்டார்கள். தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இதுகளில் சூத்திரன்களே நிறைந்து விட்டார்கள். ஒரு பிராமணன் அந்தஸ்துக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ திருப்தி செய்ய வேண்டியதாயிருக்கிறது. பனகாலினால் பிராமண னுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமோ? பட்டிக்காட்டான் நீ என்ன கண்டாய்!

மணி : நீ சொல்லுகிறபடி எனக்குத் தோன்றவில்லையே. எங்கு பார்த்தாலும் முனிசீப்புகள், ஜட்ஜூகள், அங்குள்ள குமாஸ்தாக்கள் எல்லாம் நம்ம பிராமணாளாகத்தானே இருக்கிறார்கள். நீ நன்றாய் கவனித்து பாரு.

சேஷன் : சரி! சரி!! அது ஒன்றுதான் நமது தலைவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சூத்திரன்கள் கைக்குப் போகாமல் வைத்திருக்கிறார்கள். அதுதான் உன் கண்ணுக்கு தெரிகிறதாக்கும். இதில் பனகாலுக்கு ஒரு அதிகாரமும் இல்லை தெரியுமா? அல்லாமலும் அந்த இலாக்கா சட்ட மெம்பர் என்கின்ற பேரால் நமது பிரம்மசிறீ சி.பி.ராமசாமி அய்யர்வாளண்டையில் இருக்கிறது. அல்லாமலும் அந்த அதிகாரமுள்ள ஐகோர்ட் ஜட்ஜிகளுக்கு எவ்வளவோ நல்ல பிள்ளையாய் நம்மவர்கள் நடந்து கொண்டிருப்பதால் அதில் நம்மிடவளே ரொம்பி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் எத்தனை சாயபு முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கிறிஸ்தவர் முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கவரை நாயுடு, முதலி, செட்டி, பிள்ளை முதலிய ஆள்கள் முனிசீப், ஜட்ஜிகளாக வந்து விடுவார்கள் தெரியுமா? ஒரு மலையாளி ஐகோர்ட்டுக்கு வந்ததில் எத்தனை ஜட்ஜி, முனிசீப்புகள் மலையாளிகளாக வந்து விட்டார்கள் பார். என்னமோ நம்முடைய நல்லவேளை சுயமரியாதை உள்ள சூத்திரன்கள் கோர்ட்டில் சரியானபடி இல்லாததால் நம்ம பாடு இவ்வளவிலாவது இருக்கிறது.

மணி : மற்ற இலாக்காக்களில் நம்மிடவாள் இல்லையென்றா சொல்லுகிறாய்.

சேஷன் : இருந்தென்ன பிரயோஜனம். நாமே ஏகபோகமாய் அனுபவித்து வந்தது போய் இப்போது அவர்களும் நமக்கு கிட்டக் கிட்ட சரியாய் வந்து விடுவார்களே. மெடிகல் இலாக்கா என்கிற வைத்திய இலாக்காவிலும் இந்த பனகால் வெள்ளைக்காரன்கள் தலையிலும் கையை வைத்து எல்லாம் சூத்திரன்களாகவே கொண்டு வந்தாய் விட்டது. அதனால்தான் வெள்ளைக்காரர்களுக்கும் பனகாலைக் கண்டால் பிடிக்கிறதில்லை.

மணி : வெள்ளைக்காரனை ஒழித்தது நல்லது தானே?

சேஷன் : நீ சுத்த அசடாயிருக்கிறாயே! நீ பிராமண விந்தே அல்ல போல் இருக்கிறது. வெள்ளைக்காரன் இல்லாவிட்டால் நம்ம பாடு ஆபத்துதானே. அது தெரியுமா? வெள்ளைக்காரனை எப்படியாவது சரிபடுத்திக் கொண்டு நாம் சுகமாக காலம் கழிக்கலாம். சூத்திரன்கள் வந்து விட்டால் நம்ம கதி அதோகதிதான். அவன் சூத்திரன்களையே தேடித் தேடி உத்தியோகத்திற்கு நியமிப்பான். வெள்ளைக்காரனைச் சரிபடுத்த நமக்குத் தெரிந்த தந்திரமும் நமக்குள்ள செளகரியமும் சூத்திரன்களுக்குக் கிடையாது. இருந்தாலும் செய்ய மாட்டார்கள். பிராமணாதிக்கம் வேண்டுமானால் வெள்ளைக்கார உத்தியோகமும் ஆதிக்கமும் இருப்பதே மேல்.

மணி : அப்படியானால் நம்ம பிராமணாள்தானே சுயராஜ்யம் வேணும், சுயராஜ்யம் வேணும் என்றும், இரட்டை ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், பூரா சுயராஜ்யம் அதாவது வெள்ளைக்கார ஆதிக்கமேகூடாது என்றும் சத்தம் போடுகிறார்கள். அப்படி இருக்க நீ வெள்ளைக்கார ஆதிக்கம்தான் பிராமணாளுக்கு நல்லது என்கிறாயே! அதன் இரகசியமென்ன?

சேஷன் : அட கேனமே! அதெல்லாம் சும்மா, சும்மா வெள்ளைக்காரருக்கும் நமக்கும் இரகசிய ஒப்பந்தம். "நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு" என்கிற மாதிரி சூத்திரன்களை ஏமாற்ற நம்மிட பெரியவாள் ஏற்பாடு செய்து வைத்த சுதந்திரம். உண்மையான சுயராஜ்யம் வந்தால் பிராமணாள் சங்கதி பெரிய ஆபத்தாயல்லவா முடியும். இவ்வளவு உத்தியோகமும், பணமும், அதிகாரமும், பதவியும் பிராமணர்களுக்குக் கிடைத்து விடுமா? எல்லாவற்றையும் சூத்திரன்கள் பிடுங்கிக் கொள்வார்கள். ஒரு சப்பட்டை மந்திரி உத்தியோகப் பனகாலால் எத்தனை சூத்திரன்களுக்கு உத்தியோகம் வந்து விட்டது. இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்பதன் இரகசியம் உனக்குத் தெரியாதா? எல்லா உத்தியோகமும் அதிகாரமும் வெள்ளைக்காரன் கையிலே இருக்க வேண்டும். எங்களுக்கு கொடுத்தது தப்பு. அது சூத்திரன்களுக்கே அநுகூலமாய் போய்விட்டது. இப்படி ஆகுமென்று தெரியாமல் கேட்டுவிட்டோம். ஆதலால் திரும்பவும் நீயே எடுத்துக் கொண்டு ஒத்தை ஆட்சி ஆக்கிக் கொள் என்பதுதான் அதன் தத்துவம்.

மணி : அது சரி, பூரா சுதந்திரம் என்பது என்ன?

சேஷன் : அது ரொம்ப இரகசியம். விளையாட்டுக்காவது அப்படிச் சொன்னால்தான் பாமர ஜனங்கள் நம்முடன் சேருவார்கள். தவிர, கதர், தீண்டாமை, மதுவிலக்கு இதெல்லாம் பனகால் எடுத்துக் கொண்டு வேலை செய்யப்போவதாக கேள்விப்பட்டதால் அதற்கும் மேலாக மிகவும் தீவிரமான கொள்கை நம்மிடம் இருப்பதாக ஜனங்கள் நினைக்கும்படி காட்டிக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த தோது செய்தார்கள். தவிரவும் இப்படிச் சொன்னால்தான் வெள்ளைக்காரரும் நம்மையே நம்புவார்கள். ஏனென்றால் ஒரு சமயம் அம்மாதிரி கிளர்ச்சி ஏற்பட்டு விட்டால் என்ன செய்கிறது என்று பயந்து நம்மிடவாள் இடமே எல்லா பெரிய உத்தியோகத்தையும் நம்பிக் கொடுத்து வைப்பான். சூத்திரனிடம் கொடுத்தால் ஒரு சமயம் அவர்களை எதிர்த்தாலும் எதிர்த்து விடுவார்கள் என்கிற பயம் இப்போதும் வெள்ளைக்காரருக்கு உண்டு. உண்மையான முழுச் சுதந்திரம் கேட்பவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தே நீ தெரிந்து கொள்ளக் கூடாதா? விடிந் தெழுந்தால் வெள்ளைக்காரர்களிட கச்சேரிக்கு போய் அவர்களைக் கெஞ்சி 10,20 ஆயிரம் வக்கீலிலும், ஜட்ஜிலும், முனிசீப்பிலும், கலெக்டர் முதலிய பல உத்தியோகத்திலும் சம்பாதிப்பவர்கள் வெள்ளைக்காரர்களை ஓட்டுவதாக சொல்ல முடியுமா?

மணி : சரி, அப்படியானால் பனகால் போனது பிராமணாளுக்கு நல்லதாச்சுது. சில சூத்திரன்களும் பனகால் போகணும் போகணும் என்று கத்தினான்களே அதென்ன?

சேஷன் : அதெல்லாம் நம் சீனிவாசய்யங்கார் மடாதிபதிகளிடம் வாங்கின பணத்தைக்கொண்டு சூத்திரன்களுக்கு கூலி கொடுத்து கத்தச் சொன்னதுதானே. நிஜமாலுமா அவன்கள் கத்தினான்கள்?

மணி : அது சரி, மறுபடியும் வந்திருக்கும் சூத்திர மந்திரிகள் பனகால் மாதிரி ஆகமாட்டார்களா?

சேஷன் : ஒருக்காலும் ஆகமாட்டார்கள்.

மணி : அதென்ன அவ்வளவு தைரியம்?

சேஷன் : இந்த மந்திரிகள் மூன்று பேரும் நம் தலைவர்களால் சாணியில் பிடித்த பிள்ளையார்கள் போல்தானே. நாம் சொல்லுகிறபடி கேட்டுக் கொண்டிருக்கிற வரையில் அவர்கள் பிள்ளையார்கள் (மந்திரிகள்) தான். கொஞ்சம் தவறினால் உடனே சாணிப் பிள்ளையாரை எருவாமுட்டை (நம்பிக்கை இல்லாத தீர்மானம்) தட்டி விட மாட்டார்களா? அந்த பயம் அவர்களுக்கும் உண்டு. இவ்வளவு பாடுபட்ட நம்மவாளுக்கு இது தெரியாமல் இருக்குமென்றா நினைத்தாய்? தவிரவும் சூத்திரன்களைக் கொண்டே சூத்திரன்கள் கண்ணைக் குத்துவது நல்லதே ஒழிய நாம் பிரவேசித்தால் பார்ப்பான் செய்து விட்டான் என்று கூப்பாடு போடுவான்கள். உதாரணமாக காஞ்சீபுரம் மகாநாட்டில் ஒருவன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒரு சூத்திரன் பிரசிடெண்டாயிருந்ததினால்தான் நமது தலைவர்கள் வெகு சுலபத்தில் அத் தீர்மானத்தை மீட்டிங்குக் கூட கொண்டு வராமல் கொள்ளச் செய்ய சவுகரியமாயிருந்தது. பாமர ஜனங்களும் நம்பினார்கள். அப்படிக் கில்லாமல் ஒரு பிராமணன் அந்த ஸ்தானத்தில் இருந்திருந்தால் கட்டாயம் அத்தீர்மானம் நிறைவேறியேயிருக்கும். அல்லாமலும் அத்தீர்மானத்தை ஒரு பிராமணன் தள்ளியிருந்தால் பெரிய கூப்பாடு போட்டிருப்பான்கள். ஆதலால் இப்படி இருப்பதுதான் நல்லது.

மணி : சரி! சரி! எனக்கு இப்போதுதான் புரிந்தது. நானும் இம்முறைகளைக் கையாளுகிறேன்.


("குடிஅரசு" சித்திரபுத்திரன் என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் எழுதியது - 19.12.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_05.html



என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

 

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன்.

இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம், ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே.

நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள். இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர். அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள்.

இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன். இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும்.

இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே 1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம்.

ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது. சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.

(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/76.html

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.

 

சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10- வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம் போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே!

 

இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது. ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.

 

ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.

 

சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது. பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள்.

 

இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது. சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.

 

நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப் படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார். சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார்.

 

இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா? இது தருமந்தானா? என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது!

 

இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்? பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது?

 

இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும். சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு?

 

துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது. இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது. ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.

 

("குடி அரசு" தந்தை பெரியார் : 20.12.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_09.html

*
"இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்ராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்லர் என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்டவேண்டும்?

 

சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதிதிராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக்கலாகாது? பட்சிகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்து சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்.

 

"நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிக வேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும், ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிறவர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம்.

 

அதாவது, இந்தியாவின் நன்மைக்காக ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத்தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை." 'பறையர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால் தான் பிசூத்திரர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. 'பறையர்' என்கிற ஜாதிப் பெயரை விட 'சூத்திரர்' என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை.

 

ஏனென்றால் 'சூத்திரச்சி' என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். 'சூத்திரன்' என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால் என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன் 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல.

 

ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

 

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வ தில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும், குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர்கள் உணருவதில்லை.

 

உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி. வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும், நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன். குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்துவிட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும், வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

 

நாமே ஒருவனை பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் 'பாவி'யென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் 'பறையர்'களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல.

 

உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமிசத்தை அநுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியரும், கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தரித்திரந்தான் முக்கியக் காரணம்.

 

அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்கு களையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு "ராமணர்கள்' முதல் தென்னாட்டு 'சூத்திரர்கள்' வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயுமிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களையெல்லாம் 'தொடாதே' , 'தெருவில் நடக்காதே' , 'குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே', 'ஊருக்குள் குடியிருக்காதே' என்று சொல்லுகிறார்களா?

 

இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக மதுவையும், மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்கமாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை.

 

நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15,20 - கோடி ரூபாய் பொரும்படியானதையெல்லாம் நீங்களேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டுவிட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும். மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக்கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதை சொல்லாமலிருக்க முடியவில்லை.

 

அதாவது, நீங்களாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அநாவசியமாய் யாரைக் கண்டாலும் 'சுவாமி' என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் 'சுவாமி' என்று கூப்பிடக் கூடாது. வேண்டுமானால் 'ஐயா' என்று கூப்பிடுங்கள்.

 

நீங்களாகவே பதுங்குவதும், ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.


 (காரைக்குடி-சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில் 06-04-1926 - ந்தேதி ஆற்றிய சொற்பொழிவு) (குடிஅரசு-25.04.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_11.html

''ஈ.வே. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகின்றேன். இதைத் தவிர வேறு பற்றி ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்''.

 

இவ்வாறு ஈ.வெ.ரா. தன்னையும் தன் பாணியையும் குறித்து வெளியிட்ட பிரகடனம் நமது கவனிப்புக்குரியது.

 

தான் எத்தகைய சமுதாயப் பின்புலத்தில் பணி செய்ய வந்தேன் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட பிரகடனத்தை முன் வைத்தார். பெரியார் பல்வேறு சமயங்களில் பல்வேறு முழக்கங்களையும், குறிக்கோள்களையும் முன் வைத்துப் பிரச்சாரம், இயக்கம், கிளர்ச்சிகள் ஆகியவற்றை நடத்தி வந்தார். இருப்பினும் இவற்றினூடே தொடர் சரடாக இருப்பதும், பிரதானமாக வெளிப்படுவதும் 'சாதி ஒழிப்பு' என்பதாகவே இருந்தது.

 

சாதிப் படிநிலை அமைப்பைத் தகர்க்கக்கூடிய சாதி சமத்துவத்தை நிறுவக்கூடிய கோரிக்கைகளுக்காகப் போராடுவது என்பதை ஒருபுறமும், சாதியக் கருத்தியலின் மொத்தப் பின்புலத்தையும் சாதியத்தின் சட்டமான பார்ப்பனியத்தையும் அவை சார்ந்த குறியீடுகள் புனைவுகள் ஆகியவற்றையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்பதை மறுபுறமும் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளாய் பெரியார் மேற்கொண்டார். ஆகவே, சாதிய ஒழிப்பைப் பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்பட்ட பாங்கு 'பெரியாரியம்' என்பதாகவும் புரிந்து கொள்ள முடியும்.

 

காங்கிரஸ் கட்சியில் பெரியார் இணைந்து செயல்பட்ட காலத்தில் - திலகர் சகாப்தம் முடிவடைந்து காந்தி சகாப்தம் தொடங்கியதிலிருந்து- சட்டசபையில் நுழையாமை, ஒத்துழையாமை, கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமைஒழிப்பு ஆகியவற்றின் காரணமாகக் காங்கிரஸ் மீது ஈடுபாடு இருந்தாலும் எல்லாவற்றையும் விட தீண்டாமை ஒழிப்புதான் தனக்கு முக்கியமானதாகப்பட்டது என்கிறார்.

 

1920-களின் தொடக்கத்தில் திருச்செங்கோட்டில் ராஜாஜி ஒரு ஆசிரமம் தொடங்கியபோது அதனைத் திறந்து வைத்துப் பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

''மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரிக் கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ? இம்மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட அவர்கள் இம் முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?''

 

என்ற உரத்தக் கேள்வி - சிந்தனை, தீண்டாமை ஒழிப்பு என்பதை மேலும் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்பதுடன் தொடர்புபடுத்திப் பார்த்தார்.தீண்டாமை ஒழிப்பு, தீண்டாதார் முன்னேற்றம் என்பதையே தனது கொள்கையாக வரித்துக் கொள்ளத் தொடங்கினார்.''நம்முடைய முன்னோர்களான அரசர்கள் அனைவரும் சாதியைக் காப்பாற்றினார்கள்.நம் முன்னோர்களான மூவேந்தர்கள் -ஐந்து வேந்தர்கள் - வெங்காய வேந்தர்கள் எல்லாம் சாதியைக் காப்பாற்றித்தான் புகழ் பெற்றார்கள். அவர்களுக்கு எல்லாம் என்ன உயர்ந்த பட்டம் என்றால் 'மனு நீதி தவறாத குணசீலர்கள்' என்பது. இதை யாரும் மறுக்க முடியாது. மனுநீதிக்குப் புறம்பாக அரசன் ஆண்டதாக இல்லை.சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைத்தானே இன்று நாம் வணங்குகிறோம்?

 

நாம் வணங்குகின்ற கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள் அல்ல என்று எவராவது சொல்லட்டுமே! நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று.''

 

இவ்வாறு கூறிச் செல்லும் பெரியார் 'சாதி ஒழிப்பு' என்பதன் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.''சாதி ஒழிப்புக்காரர்கள் எங்கே கொசு உற்பத்தியாகின்றதோ அங்கே போக வேண்டும்.சாதிக்கு ஆதாரம் கடவுள்; அதற்கு ஆதாரம் - புராணம்; சாதிக்குத் துணை அதன் பாதுகாப்பாளர்கள். இத்தனை பேரையும் ஒழித்தால்தானே சாதி நோய் வராமலிருக்கும்? கடவுளை வைத்துக் கொண்டு- சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஒழிக்க முடியும்?'' எனக் கேட்டதன் மூலம் சாதிய வேரின் ஆழத்தை நன்கு உணர்ந்து அதனை அடியோடு சாய்க்க வேண்டும் என்பதையே தனது சிந்தனையின் அடிநாதமாகக் கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிய வருகிறது.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_12.html

 

 இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

 

இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் " அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.

 

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது? இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது.

 

அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை.

 

(தந்தை பெரியார் - 1923)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_13.html

**
இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது. ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம்.

நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல், வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா?

குத்துவேன், வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள்.

 

குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்! ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 - பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல். குத்துகிறேன், வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.

 

சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியதுதானா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும், வடநாட்டானுக்கும் தானா?

 

தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனை பேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

 

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது. ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்)

 

நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 - க்கு 97 -பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

 

இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.

 

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100 - க்கு 10 - பேர்தான் இருக்கும். 100- க்கு 90 - பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

(03-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் சொற்பொழிவு : (விடுதலை 08-11-1957)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_17.html

எந்த ஒரு மனிதனும் திடீரென்று புனிதனாகி விடுவதுமில்லை, தீவிரவாதமுள்ள அரக்கனாகவும் மாறிவிடுவதுமில்லை. சமூகத்தில் நிகழும் சம்பவங்களும், வாழ்வில் அமையும் சூழ்நிலைகளுமே மனிதனின் வாழ்வில் திருப்பு முனைகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவைகள் ஊழ்வினையால் தான் ஏற்படுகின்றன என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு பகுத்தறிய வேண்டிய சிந்தனை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பகுத்தறிவுப் பகலவனான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அவரது வாழ்க்கை குறிப்பில் இவ்வாறு...

 

"கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்து விட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான்.

 

அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை. அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும் பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின:

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர். திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன. “ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.

 

காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு வழி கோலிவிட்டது.

 

இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள் அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்." காசி சத்திரத்தில் நடந்த இச்சம்பவம், ஈ.வெ.ரா.என்ற நாயக்கனை சரித்திர நாயகனாக மாற்றியது எனலாம். அன்று தாழ்த்தப்படத் தொடங்கிய தாழ்த்தப்பட்ட சமுதாயக் கொடுமைகள் இன்று வரை தாழ்த்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டியது பெரியார் என்ற அன்றைய இளைஞனின் அறிவொளியைத் தான். இனி சாதிகள் சாகட்டும். சமத்துவம் பெருகட்டும்.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_18.html

சிறீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் கும்பகோணத்தில் பேசிய பேச்சைப் பற்றி 18.08.1926- இல் 'சுதேசமித்திரன்' தனது உப தலையங்கத்தில் 'அபத்தப் பஞ்சாங்கம்' என்ற தலைப்பின் கீழ் சிறீமான் இராமசாமி நாயக்கர் எழுத்தும், பிரசங்கங்களும் வரவர விபரீதமாயிருக்கிறது என்றும், நாயக்கருக்கு சீக்கிரத்தில் கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும் என்றும், நாயக்கர் பேசுகையில் எவ்வித காரணமில்லாமல் சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன் என்றும், பிராமண சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்றும் சொன்னதாக எழுதி, இதன் மூலம் நாயக்கருக்கு அசட்டுப் பட்டம் ஏற்பட்டு விட்டதாகவும், நாயக்கரை ஒரு பிராமணனும் ஏமாற்றி சிறைக்கனுப்பவில்லை என்றும் காங்கிரசினால்தான் பனகால் ராஜாவுக்கு மந்திரியானதென்றும் நாயக்கருக்கு ராஜீய உலகில் ஒரு முக்கிய ஸ்தானம் கிடைத்ததென்றும் அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும் எழுதுகிறான்.

 

இவற்றை நன்றாய் ஆராய்ந்து நாயக்கர் மாதுரு துரோகியா அல்லது 'மித்திரன்' கூட்டத்தார் மாதுரு காமியா என்பதை கவனிப்போம். இப்பார்ப்பன 'மித்திரன்' யோக்கியனாயும் பயங்காளியாயில்லாதவனாயுமிருந்தால் கும்பகோணத்தில் நாயக்கர் இரண்டரை மணி நேரம் பேசிய பேச்சை கொஞ்சமாவது எழுதியிருக்க வேண்டும். 'மித்திரனே' நாயக்கரைப் பற்றி எழுதுகையில் நாயக்கர் வெறும் ஆளல்ல, ராஜீய உலகத்தில் (எந்த விதத்திலோ) ஒரு முக்கிய ஸ்தானம் அடைந்தவர் என்று ஒப்புக் கொள்ளுகிறான். அப்படியிருக்க, அப்படிப்பட்டவர் பேசியதை பிரசுரிக்காமல் விட்டது எவ்வளவு அக்கிரமம் என்பதை வாசகர்களே உணர வேண்டும்.

 

நாயக்கர் ஜெயிலுக்குப் போனதைப் பற்றி சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் இந்த பார்ப்பனர்களை நம்பி சுயராஜ்யத்திற்கு என்று ஜெயிலுக்குப் போனது முட்டாள்தனமென்று உணருவதுடன் இப்படிப்பட்டவர்களை நம்பி ஜெயிலுக்குப் போனோமே, இப்போது அதன் பலன்கள் சுயராஜ்யத் திற்கு உதவாமல் பார்ப்பனராட்சிக்கு உதவுவதோடு பார்ப்பனரல்லா தாரின் அடிமைத்தனத்திற்கும் நிரந்தர தாழ்வுக்கும் உபயோகப்படும் படியாய் விட்டதே என்று வருத்தப்படுவதுடன் இக்காரியத்திற்கு நாமும் துணை நின்றோமே என்று நினைத்து வெட்கப்படவேண்டியதாயுமிருக்கிறது என்றே பேசினார்.

 

அல்லாமலும் இனியும் இந்த பார்ப்பன ஆதிக்கமிருக்கும் வரை சுயராஜ்யத்திற்கென்று ஜெயிலுக்குப் போவது பயித்தியக்காரத்தனமாய் முடியுமென்றே இன்னமும் சொல்லுகிறோம். ஏனெனில் சிறீமான்கள் நாயக்கர், நாயுடு முதலிய பல ஆயிரக் கணக்கான பேர்கள் நமது நாட்டில் ஜெயிலுக்குப் போனதை சொல்லிக்கொண்டு அதன் பலனை நமது பார்ப்பனரே அனுபவிக் கிறார்கள். தேச மக்களுக்கு அது கொஞ்சமும் உபயோகப்படாமலே செய்து விட்டார்கள். பார்ப்பன சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்று சொல்ல வரவில்லை. பார்ப்பனர்களை நம்பினேன் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொன்னோம்.

 

சிறீமான்கள் சீனிவாசய்யங்காரையும், எ. ரெங்கசாமி அய்யங்காரையும், எஸ். சத்தியமூர்த்தி அய்யரையும் நாம் எப்பொழுதுமே நம்பவில்லை. அவர்களால் ஏமாந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் சிறீமான் சி.இராஜகோபாலாச்சாரியாரை நம்பினோம்; அவர் மோசம் செய்து விட்டார். அவரை நம்பி மோசம் போனோமே என்றுதான் வருத்தப்பட்டோம். இதை மகாத்மா காந்தியிடமும் நேரில் சொன்னோம். இதற்காக 'மித்திரன்' நாயக்கர் ஏமாறுவதற்கு அவர் சிறு பிள்ளையா சிறுபிள்ளைத் தனமா? என்று எழுதியிருக்கிறான்.

 

நாயக்கர் சிறு பிள்ளையா? கிழவனா? என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாயக்கர் மாத்திரம் பார்ப்பனர்களால் ஏமாறவில்லை. கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத ஜனங்கள் ஏமாந்து போனார்கள்; ஏமாந்து போகிறார்கள்; இன்னமும் பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் வருகிறார்கள். இவ்வளவும் போதாமல் மகாத்மா காந்தியே இப்பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து போய்விட்ட தோடு "படித்தவர்களை நான் நம்பினேன் நம்பின அளவு பலனடைய வில்லை" என்றே சொல்லியிருக்கிறார். படித்தவர்கள் யார் என்று கூட சொல்ல வேண்டுமா? நிற்க, ஜெயிலுக்குப் போவதில் இன்னமும் நமக்கு சலிப்பு ஏற்பட்டுப் போகவில்லை.

பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஜெயிலுக்குப் போவது தப்பு என்று மாத்திரம் எண்ணுகிறோமே ஒழிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு நாமும் நம் குடும்பமும் நண்பர்களும் இனியும் எத்தனை தடவையானாலும் ஜெயிலுக்குப் போகக் காத்துக் கொண்டுதானிருக்கிறோம். சட்டசபைத் தேர்தல்கள் முடிந்தவுடன் கண்டிப்பாய் அந்த பாக்கியம் கிடைக்குமென்றே மனைவியார் சகிதம் சந்தோஷத்துடன் காத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கு வேண்டிய காரியங்கள் நமது பார்ப்பனர்களால் வெகு நாளாகவே நடந்து வருவதையும் நாம் அறிவோம். தவிர காங்கிரசினால்தான் நமக்கு யோக்கியதை வந்ததாக 'மித்திரன்' எழுதுகிறான். காங்கிரசினால் நமக்கு யோக்கியதை வந்ததா?

 

நம் போன்றவர்களால் காங்கிரசுக்கும் 'மித்திரன்' கூட்டத்தாராய இப்பார்ப்பனர்களுக்கும் யோக்கியதை வந்ததா? என்பதை வாசகர்களே தான் அறிய வேண்டும். நாயக்கர் காங்கிரசுக்கு வரும்போது காங்கிரசுக்கு நாட்டில் இருந்த யோக்கியதை யாரும் அறியாததல்ல. யாரோ நான்கு படித்த பார்ப்பனர்களான அனாமதேயங்களும், அன்னக் காவடிகளும் அதில் சேர்ந்து பணம் சம்பாதித்து வந்தார்கள். அவைகளை வைத்துக்கொண்டு மாதம் 10 -ரூபாய்கூட தங்கள் வக்கீல் உத்தியோகத்தில் சம்பாதிக்க முடியாமலிருந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து, பத்திரிகைகள் போட்டு, வெறும் அபத்தப் பஞ்சாங்கத்தையே எழுதி அதன் பேரால் மாதம் 1000,2000,5000 வீதம் நமது பொருளைக் கொள்ளை அடித்துக் கொண்டு வந்தார்கள். அதல்லாமலும் தாங்கள் காங்கிரசில் இருப்பதன் மூலம் சர்க்காருக்கு தேசத்தை காட்டிக் கொடுத்தும் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதித்து கொடுத்துக் கொண்டும் வந்தார்கள்.

 

இந்த மாதிரி காங்கிரசைப் பற்றி 100-க்கு 99 - பேர் பார்ப்பனரல்லாதாருக்கு யாதொரு விஷயமும் தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தாரை ஒழிக்க சர்க்காரார் அடக்கு முறைச் சட்டங்கள் போட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியார் உதைபோட ஆரம்பித்ததற்கும் பயந்து கொண்டு மகாத்மாவையும், நம் போன்றவர்களையும் தஞ்சமடைந்து அதிலிருந்து தப்பினார்கள். இந்த நிலையில் நாயக்கர் போன்றவர்கள் காங்கிரசுக்குள் வரும்போது அவருடைய யோக்கியதையும் காங்கிரசுக்குப் போன பின்பு அவருடைய யோக்கியதையும் யோசித்துப் பார்த்தால் 'மித்திரனின்' கூட்டத்தாருக்கு யோக்கியதை கிடைத்ததா?

 

நாயக்கருக்கு யோக்கியதை கிடைத்ததா? என்பது விளங்காமல் போகாது. சிறீமான்கள் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் வருஷம் 1000 - ரூபாய் வருமானவரி செலுத்தி வந்தார். பல பெரிய மில்லுகளுக்கு ஏஜண்டாகயிருந்தார். சொந்தத்தில் யந்திரசாலைகள் வைத்து நடத்தி வந்தார். இப்போது அவருக்கு வியாபாரத்தில் ஒரு காசுகூட வருமானவரி இல்லை. அவர் இருந்த ஏஜெண்டு வேலைகளுக்கு அவருக்குப் பின்னால் வந்தவர்கள் 4 லட்சம் 5 லட்சக் கணக்கான பணம் சம்பாதிக்கிறார்கள்.

 

ஒத்துழையாமையின் போது பதினாயிரக்கணக்கான ரூபாய் பத்திரங்கள் ஆதாரங்கள் வாய்தா கடந்து நஷ்டமேற்பட்டது. உதாரணமாக ஒரு முப்பது ஆயிரம் ரூபாய் பத்திரம் சம்பந்தமான விவகாரத்தில் வழக்காடாமல் அப்படியே அடியோடு விட்டு விடப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் பிரசிடெண்டான சிறீமான் சி.விஜயராகவாச்சாரியாருக்கு இது நன்றாய் தெரியும். அதோடு அவர் எதிர் வழக்காடும்படியும், கண்டிப்பாய் ஜெயித்து 30 - ஆயிரம் ரூபாயை பெறலாம் என்றும், தானே பீசில்லாமல் வந்து பேசுவதாகவும் நாயக்கரை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார். சிறீமான் ஆச்சாரியார் இப்போது சேலத்தில் இருக்கிறார். யார் வேண்டுமானாலும் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம். இன்னும் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் முனிசிபல் சேர்மென், ஜில்லா தாலுக்கா போர்டு மெம்பர், ஆனரரி மேஜிட்ரேட்டு முதலிய சர்க்கார் சம்பந்தப்பட்ட பதவி வேலையிலும் இருந்து வந்ததோடு ஒரே தாளில் இவை அனைத்தையும் ராஜினாமா கொடுத்தார்.

 

ராஜினாமா செய்த பிறகும் இரட்டை முதல் வகுப்பு பிரயாணப்படியும், நாள் ஒன்றுக்கு 100- ரூபாய் வீதம் கெளரவப் படிப்பணமும் சர்க்கார் கொடுப்பதாகவும் தெரிவித்து, இன்கம்டாக்ஸ் அப்பீல் போர்ட்டில் கமிஷனராக இந்தியா கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டவராகவுமிருந்தார். சர்க்காரிலும் அசிஸ்டெண்ட் ரெக்ரு ட்டிங் ஆபீசர் வேலை கொடுக்கத்தக்க நம்பிக்கையுடையவராகவும் இருந்தார். (இது ராணுவ சம்மந்தமான உத்தியோகம்) இன்னும் பல வகைகள் இருந்தாலும் இவைகளைப் பற்றி எழுதுவது தற்பெருமைக்கு இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கருதப்படும் என்று அஞ்சுவதோடு இதையும் தற்பெருமைக்கு எழுதுவதாகவே சிலர் கருதுவார்கள் என்று பயப்படுகிறோம். ஆனாலும் இப்பார்ப்பனர்களின் அக்கிரமத்திற்குப் பதில் சொல்லாமலிருக்க முடிவதில்லை. இவ்வைந் தாறு வருஷ காலத்தில் வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பார்த்தனையும் போய், கை முதலும் எவ்வளவோ நஷ்டப்பட்டுமிருக்கிறோம்.

 

சிறீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கோ, எ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ, எஸ். சீனிவாசய்யங்காருக்கோ, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிக்கோ பி.என். சர்மாவுக்கோ, எம்.கே.ஆச்சாரிக்கோ மற்றும் பல அய்யர், ஆச்சாரியார், சர்மாவுக்கோ காங்கிரசில் சேர்ந்து எவ்வளவு ரூபாய் எவ்வளவு கெளரவ நஷ்டம் ஏற்பட்டது? இவர்களிடம் இருந்து காங்கிரசைக் கழித்து விட்டால் மீதி என்ன என்பதை இவர்களே யோசித்துப் பார்க்கட்டும். இப்படி இருக்க நாம் காங்கிரசின் மூலம் யோக்கியதை அடைந்து விட்டதாக சொல்லுகிறார்கள். இவ்வளவும் போதாமல் நம்மிடம் பிராமணத் துவேஷமிருக்கிறது என்கிறார்கள். நம்மிடம் உண்மையில் துவேஷமிருக்கிறதா, இவர்களிடம் இருக்கிறதா? நம்மிடம் இருக்குமானால் குறைந்த அளவு அவர்கள் நம்மைச் சொல்லுவது போலவாவது நாமும் அவர்களைச் சொல்ல மாட்டோமா?

 

அவர்கள் நம்மை சூத்திரன் என்று கூப்பிடுவதோடு, சூத்திரன் என்றால் வைப்பாட்டி மகன், தாசி மகன் என்று எழுதியே வைத்துக் கொண்டிருக்கிறார்களே, நாமும் அவர்களை அந்த மாதிரி சொல்ல மாட்டோமா? சொன்னால் தலை போய்விடுமா? பார்ப்பனர் விஷயத்தில் அவர்கள் யோக்கியதையைப் பற்றி எவ்வளவோ உண்மை களைக்கூட நாம் சொல்லப் பயப்படுகிறோமே. இப்படியெல்லாம் நாம் பயப்படும்போதே இவர்கள் நம்மை இவ்வளவு தூரம் ஒழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இவைகளை எதிர்பார்த்தே இக்கருமத்தில் இரங்கினோமானதால் இவைகளைப் பற்றி ஒரு சிறிதும் நாம் கவலைப்படாமல் இன்னும் இப் பார்ப்பனர்கள் வெடிகுண்டுக்கு மார்பைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.

 

(குடி அரசு 29.08.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_23.html

காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும்,ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை. காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்?

 

வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தேவையில்லை. நாட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை, ஏனெனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

 

காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம். வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?

 

நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள்!

 

காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும். கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்?

 

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு?

 

பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா? நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

 

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவு நாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம் தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன்.

 

அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள், இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் “நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்கவேண்டும். வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன்அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான். காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது?

 

நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே! பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60 -க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

 

(கும்பகோணத்தில் 18-08-1946 – ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் தந்தைபெரியார் ஈ.வெ.ரா. உரை (‘குடிஅரசு’ தலையங்கம்- 09-10-1946)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_27.html

என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.

 

உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 -கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்தவர் இவர்கள் நிலை என்ன? கிறித்தவர், முகம்மதியர்களுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்தவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான்.

 

ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்திருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

 

யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக்குக் கடவுள்கள், இவை எல்லாம் எதற்காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 - முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை? எதற்காக கடவுள் அம்சங்களைக் குறைவாக அவமானமாக நம்மிடையே புகுத்த வேண்டும்? இதைப்பற்றி யார் சிந்தித்தார்கள்?

 

1,500 - வருடங்களுக்கு முன்பு புத்தர்தான் கேட்டார். முதலில் அறிவுக்கு வேலை கொடு, சுதந்திரமாக இருக்கவிடு, எதையும் ஏன்? எப்பொழுது? எப்படி? என்று கேள் என்றார்; மகான் சொன்னார்; ரிஷி சொன்னார், கடவுள் சொன்னாரென்று எதையும் நம்பிவிடாதே என்றார். அவர் பேச்சை யார் கேட்டார்கள்? புத்தர்களை நாட்டை விட்டே ஓட்டினார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்தார்கள். வீடுகளைக் கொளுத்திப் போட்டார்கள். கொன்று விடுவேன் என்று அவரது சீடர்களைப் பயமுறுத்தினார்கள். ஏன் புத்தர் பிறந்த இடத்தில் அவர் கொள்கைகள் இல்லை? வெளிநாடுகளில் எப்படி பரவியது? பரவியதற்குக் காரணம் என்ன? அதற்குப் பிறகு வள்ளுவர் சொன்னார், எதிலும் உன் அறிவுக்கு வேலை கொடு என்று. அவர் சொன்னது எங்கே போயிற்று? எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.

 

பரம முட்டாள்தனமான மனுதர்மம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம் இவற்றைத்தானே மக்கள் கையாண்டார்கள்? எத்தனை பேருக்குத் தெரியும் இப்படித் தானே மகான் சொன்னார். ரிஷி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், வெங்காயம் சொன்னார் என்று நம் எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். அமெரிக்கா, துருக்கியில் இராமாயணக் கதையைச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? சங்கராச்சாரியார் ஒரு மாத காலமாகச் சுற்றினார். அவரைப்பற்றி நம்மவனே அருள்வாக்கு என்று எழுதுகிறான். சங்கராச்சாரியாருக்கு அத்வைத மதம், இரண்டு கடவுள் கிடையாது. ஒரே ஒரு கடவுள் அதுவும் நான்தான் என்பார். உண்மையிலேயே சங்கராச்சாரியாருக்கு கடவுள் கிடையாது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அவர் கடைப்பிடிப்பது மாயாவாதம், பூசுவது திருநீறு, பூசை செய்வது ஒரு பெண் கடவுள். இதுபோல்தான் தவிர வேறு என்ன? கடவுளுக்கு பிறப்பேது இறப்பேது?

 

நம் கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? இதையெல்லாம் இந்த 1958 - ஆம் வருடத்திலேகூட ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே இதற்கெல்லாம் நாம்தானே பணம் கொடுக்கிறோம். எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்? நம்முடைய ஆள் பணம் கொடுத்தால் பார்ப்பான் கடவுள் சிலையைச் சிங்காரிக்கிறானே தவிர அந்தப் பார்ப்பான் ஒரு நாளைக்காவது கடவுளைச் சிங்காரித்ததுண்டா? இவ்வளவு செய்தும் நாம் எல்லோரும் தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே?கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை துலுக்க நாச்சியார் என்கிற தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?

 

இங்கிருக்கின்ற முகமதியர்கள் மைனாரிட்டிகள் மெஜாரிட்டியாக இருந்திருந்தால், எங்கள் ஜாதிப் பெண் உங்கள் கடவுளுக்குத் தாசியா என்று உதைப்பான், ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீங்கள் ஜாதித்தது என்ன? கிறிஸ்துவரையும் முகமதியரையும் உங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று கேட்டுப் பாருங்கள். அன்பாலும் அருளாலும் ஆனவன் ஆண்டவன் என்று கூறுவார்கள். நம் கடவுள்களைப் பாருங்கள்; ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்? ஆச்சாரியார், ஒரே கடவுள்தான் நம்மையெல்லாம் படைத்தார்; நடுவில் யாரோ இப்படிச் செய்துவிட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லுகிறார். அப்படியானால் அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு எங்கே போய்விட்டது புத்தி? ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?

 

அன்புமிக்க தோழர்களே! இதுமாதிரியான கேடான காரியங்களைப்பற்றி எனக்குமேல் நிறைய அநேகருக்குத் தெரியும். ரொம்பப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் என் போல் வெளியே சொல்ல முடியவில்லை. எங்கே தங்கள் வயிற்றில் மண்விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஏன் ஒவ்வொருவனும் எதற்கெடுத்தாலும் கடவுள் கடவுள் என்கிறான்? சதிரானால், பாட்டுப்பாடினால் எல்லாக் காரியங்களுக்கும் கடவுள் பெயராலேயே செய்கிறார்கள். இது மாதிரியான கொடுமைகளை நீக்க நாட்டில் ஆள் இல்லையே, 1000, 2000 - வருடமாக சூத்திரன், வேசிமகன் என்று இருக்கும் பட்டத்தை நீக்க இந்த நாட்டில் இருக்கிற கட்சிகள் என்ன பரிகாரம் செய்தன? மனிதர்களுள் பிரிக்கும் சக்தியை எதிர்த்து எந்தக் கட்சி என்ன செய்தது?

 

(தந்தை பெரியார் -"விடுதலை" -25-12-1958)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_29.html

 

 

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒருவித பக்தியும், மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்று தான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண்டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம்.

 

நாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ, அதுபோல் பாதிரிமார்களை அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒருவித தந்திரம். உதாரணமாக, நமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தைக் காக்க -பரப்ப - தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும், ஆச்சாரியார் என்றும், மடாதிபதிகள் என்றும், மகந்துகள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்தி கொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கை வாய் பொத்திப் பேசுவதும், சுவாமிகள், சுவாமிகள் என்று கூப்பிடுவதும், அடியேன், அடியேன் என்று சொல்லிக் கொள்ளுவதுமான தந்திரங்களைச் செய்து தங்கள் மதப் பிரசாரம் செய்து (மதப் பிரசாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலைநிறுத்த ஆக்கந்தேடிக் கொள்ளுகிறார்களோ, அதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதக்குரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும், அவர் நமது நாட்டின் இரகசியங்களையும் இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரசாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம் பொருள், ஏவல் என்கிற செளகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கொண்டு தங்கள் சுவாதீனமும் செய்து கொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது.

 

இந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்பவர்களா யிருந்தாலும், அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப் போலவே பெரிய ராஜதந்திரிகளாய்த்தான் இருப்பார்கள். (ராஜதந்திரம் என்றால்தான் தெரியுமே! அதாவது, பொய் சொல்லலாம்; உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசலாம்; மோசம் செய்யலாம்; நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்; அதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இதற்கு ஒரு விலக்குண்டு.

 

அதாவது இவ்வளவும் தனது சுயநலத்திற்காகச் செய்யக்கூடாது; பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் "பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில்" என்கிற குறளையும் சொல்லி விடுவார்கள். இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக் கொண்டாலும் நமது ராஜீய வாதிகளில் 100 - க்கு 69 முக்கால் பேர் ஒப்புக்கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜ தந்திரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும், வாத்சல்லியத்தாலும், கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக்கூடும். ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜதந்திரத்தில் நம்பிக்கையுண்டு)

 

ஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சி, பிரதி கட்சி உண்டாக்கி ஆளைத்தூக்கி ஆள்மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொண்டு பீசில்லாமல் பேசுவதும், விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அது போலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும், தங்களுக்கு அநுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.

 

ராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு எப்படி நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்களோ அது போலும் ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் சொல்லிக் கொண்டு, எப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோ, அது போலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும், இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்ட்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அக்கட்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அநுபோகத்தில் பார்த்து வருகிறோம்.

 

அப்படிக் கில்லாமல் இருந்தால் அஹிம்சை, சத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள் பொய்யும் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களா? ஆதரிப்பார்களா? என்பதை நுட்பமாய் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது. இந்தியர்களுக்கு சுவாமியார், குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியாதை செய்யத்தக்கதாகி விட்டதால், நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படிக்கில்லாமலிருக்கும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரி மார்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும், லோக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா?

 

(குடிஅரசு-07.03.1926)

அக்கிராசனாதிபதியவர்களே! சகோதரர்களே! நேற்று நான் இங்கு வந்து பிரசங்கம் செய்தேன். இன்றும் என்னை வரும்படி சிலர் அழைத்தார்கள். நான் இன்று ஊருக்குப் போகிறபடியால் என்னால் அதிக நேரம் பேசமுடியாது. இன்றைய மாநாட்டில் சில தீர்மானங்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில் முதல் தீர்மானம் “ஆறரைக்கோடி ஆதிதிராவிட மக்களை இந்து மதஸ்தர்கள் என்று அரசாங்கத்தில் பதிவு செய்திருப்பதால் எங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவமில்லாததால் எங்களை இந்து மதத்திலிருந்து நீக்கிவிடும்படி சட்டசபை அங்கத்தினர்களை வேண்டிக் கொள்ளுகிறது.”

 

இத்தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன், எனக்கும் சம்மதம்தான். ஆதிதிராவிடர்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூட்டத்தார் எங்களை நாஸ்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கின்றனர். அதோடல்லாமல் இரத்தக் குறியிட்ட சிவப்புக் கடிதங்களும் எங்களுக்கு வருகின்றது. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்றால், “ஏ! ராமசாமி நாயக்கரே! நீ மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று பார்க்கிறாய். ஆகையால், உன்னைக் கொல்லப் போகிறோம்” என்று எழுதியிருக்கிறது. (வெட்கம், வெட்கம்) இப்பேர்ப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் வருகிறார்கள்; அனுப்பிக் கொண்டும் வருகிறார்கள். அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நான் ஒருவன் போய்விட்டால் ‘பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கு சிறிது பாரம் குறையும்’ என்றுதான் நினைக்கிறேன்!

 

நாம், தேசத்திற்கு நன்மை செய்வதற்காகவே இந்த இயக்கத்தைத் தோற்றியுள்ளோம். ஆகையால், இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் பயந்தவர்களுமல்லோம், சிறிதும் இளைத்தவர்களுமல்லோம், தேசியத் தலைவர்கள் நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பெருமையையோ, உரிமையையோ விட சுயமரியாதைக்காரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாதென்று நினைக்கிறார்கள். நாம் இதுவரை சுயமரியாதை என்னும் பெயரால் ஒரு கெடுதியும் ஜனங்களுக்குச் செய்ததாகத் தெரியவில்லை. ஜாதி வித்தியாசம் ஓட்டலிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும், மற்றும் ஒவ்வொன்றிலும் இருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், அவன் மதத்துரோகி, நாஸ்திகன் என்கிறார்கள்.

 

தற்காலம் வெள்ளையர்கள் ஆண்டு வரும் பொழுதுகூட நம் இந்துக்களில் உயர்ந்த ஜாதியெனப்படுபவர்கள் சிலர் வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லிவரும் பொழுது, வெள்ளையர்கள் நமக்கு சுய ஆட்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நாம் என்ன கதியாகுவோமென்பதையறிந்து கொள்ளுங்கள் (கரகோஷம்). வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு அவர்கள் நாளைப் போகட்டுமென்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், நான் இன்றே போகட்டும் என்று சொல்லுகிறேன். அதுவும் எனக்கு சம்மதம் (கரகோஷம்).

 

வெள்ளையருக்கு நாங்கள் உள்ளாளாக இருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். நாங்கள் உள் ஆளா? அவர்கள் உள் ஆளா? என்று கேட்கிறேன். நாங்கள் பிற மதஸ்தர்களுக்கனுகூலமாகப் பிரசாரம் செய்வதாகவும் சொல்கிறார்கள். நமக்கு நம் மதத்திலேயே சுயமரியாதையில்லையே. அப்படியிருக்க, அம்மதம் நமக்கு எதற்கு? ஒரு அப்துல் ரகிமானோ, ஜோசப்போ வந்துவிட்டால் தொலைந்துபோ என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் இந்து மதத்தில் உரிமை கொடு என்றால், மதத்துரோகி, தேசத்துரோகி என்கிறார்கள்.துரோகிகள் யார்? நாமா? அவர்களா? இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே! அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது?

 

ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமில்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் திரு. கண்ணப்பர் சென்று வழக்கு நடக்கும் போதுகூட ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் நீதிமன்றத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை என்றும், இந்து மதத்தை நம்புகிறவர்கள் இந்துக்கள் என்றும், ஆதிதிராவிடர்களும் இந்துக்களே என்றும், அவர்களும் கோயிலுக்குள் போக அனுமதியுண்டு என்றும் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதற்கும் தேசியப் பார்ப்பனர்கள் அவரைத் தூற்றினார்கள்.

 

வேதங்கள் அநாநிக் கடவுளால் சொல்லப்பட்டவைகளே என்றும், அதில் சொல்லியிருக்கும் சட்டங்கள் நியாயமானது என்றும், அவர்கள் கேட்டால் இனி பெண்களை சிறு வயதில் மணம் செய்து கொடுத்தல் கூடாது என்றும், 15 வயதிற்கு மேல்தான் மணம் செய்வித்தல் வேண்டுமென்றும், அதற்காக ஓர் கமிட்டியும் ஏற்படுத்தி விசாரணை புரிந்து வந்தனர். அக்கமிட்டியில் திரு. ஏ. ராமசாமி முதலியாரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில வருணாசிரம தர்மப் பார்ப்பனர்களும், தேசியப் பார்ப்பனர்களும் மதம் போச்சு; கடவுள் போச்சு; இது மத சம்பந்தமானது; இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூக்குரலிட்டனர். இதை நீங்கள் யோசித்து இம்மணத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் சுத்தமில்லாததாலும், மதுபானம், மாமிசம் முதலியவைகள் சாப்பிடுவதினாலும், அவர்களைத் தீண்டக் கூடாதென்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் மயிலாப்பூரும் உங்களோடு சேர வேண்டியதுதான். மயிலாப்பூரிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மது, மாமிசம் உண்ணாமலில்லை.

 

சமீபத்தில் கும்பகோணத்தில் யாகம் ஒன்று நடத்தினார்கள்; பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் ஆடு, மாடுகளின் பீஜத்தை நசுக்கி யாகத்தின் பேரால் சாப்பிட்டார்கள். அதைப்பற்றி பத்திரிகையில் எழுதினோம். அதற்காக நம்மை நாஸ்திகர்களென்றும், மதத்துரோகிகளென்றும் தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். இது என்ன அறிவீனம் பாருங்கள்.

 

(13-7-1929 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற ஆதிதிராவிடர்கள் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 16-07-1929 “திராவிடன்” நாளிதழில் வெளியானது)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_08.html

நம் நாட்டு பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர்களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுகளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக்கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப்படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர்களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக்கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக் கொண்டு நாம் எப்படி விடுதலையடைய முடியும்?

 

சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி 'இந்து','சுதேசமித்திரன்' பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதியிருப்பதானது வேண்டுமென்றே எழுதியிருக்கும் அயோக்கியத்தனமான எழுத்துக்களாகும். நல்ல ஜாதியான்களாயிருந்தால் நாயக்கர் பேசியவற்றை எழுதி அதற்கு தகுந்த மறுப்புகளை எழுதும். அப்படிக் கில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கிற ஜாதியானதால் பேசியவைகளையும் விட்டு, நடந்த விஷயங்களையும் விட்டு, நடக்காததையும் எழுதி வயிறு வளர்க்க ஆசைப்படுகிறது. அக்கூட்டத்தின் முடிவில் சங்க உதவி அக்கிராசனர் எழுந்து சிறீமான் நாயக்கரின் அபிப்ராயந்தான் தனது அபிப்ராயமென்றும் இவ்வருஷம் சங்க ஆண்டு விழாவுக்கு ஒரு தொழிலாளரையே அக்கிராசனராய்த் தேர்ந்தெடுக்கப் போவதாயும், ஆனால் சங்கத்தில் உள்ள சில அங்கத்தினர் ராஜீய விஷயங்களில் பிரவேஷித்து சங்க நடவடிக்கையைக் கெடுக்கிறார்கள் என்றும், உதாரணமாக சங்கத்தின் சார்பாய் ஒரு கதர் டிப்போ வைப்பதை சங்கத்தில் உள்ள சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர் கெடுத்தார் என்றும், இன்னும் பலவிதமாய் ராஜீய அபிப்ராயங்களை சங்கத்தில் கொண்டு வந்துவிட்டு சங்கத்தை ஒழுங்காய் நடைபெற முடியாமல் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்றும், ஆதலால் தான் இதில் ஸ்தானம் வைப்பதில் பிரயோஜனமென்ன என்று சொல்லி ராஜிநாமா கடிதத்தை வாசித்தார். சங்க காரியதரிசியும் இதை ஒட்டியே சில வார்த்தைகள் சொன்னார். பின்னர், பலர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டார்.

 

இப்படி இருக்க சிறீமான் நாயக்கர் சொல்லுவதைத் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அந்நியர்கள்தான் சங்கத்திற்கு உதவி தலைவராயிருக்க வேண்டுமென்று சொல்லி அதற்காகவே தான் ராஜிநாமா செய்வதாக சொன்னாரென்றும் ' இந்து', 'சுதேசமித்திரன்' பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இது யோக்கியமானதாகுமா? நாம் கடினமான பதம் உபயோகிப்பதாய்ச் சொல்லும் மிருதுவான பதக்காரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளி அல்லாதவர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால், இந்த ஐயர், ஐயங்கார் கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம் செய்வானேன்? டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் கூட தொழிலாளர் நிர்வாகத்தில் அந்நியர் கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். பாவம்! ஏழைத் தொழிலாளரான வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றி தலைவர்களாகி அவர்களின் ஓட்டு வாங்கி பிராமணரல்லாதார் தலையில் கையை வைப்பதற்கு யாராவது விரோதமாயிருந்தால் அவர்களை அடியோடு ஒழிப்பதற்கு இவ்வளவு கொலை பாதகம் செய்யவேண்டுமா?

 

இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் சிறீமதி அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள் சொன்ன காலத்திலும் இந்தப் பிராமணப் புலிகள் சீறி விழுந்தனர். இந்த பிராமண சிகாமணிகளுக்கு தொழிலாளிகளிடம் அன்பு இருக்குமானால் வெளியிலிருந்து செய்யட்டுமே. முனிசிபல் எலெக்ஷனில் யாராவது ஒரு தொழிலாளியை நிறுத்தி ஓட்டு வாங்கிக்கொடுக்கட்டுமே. சட்டசபைக்கு யாரையாவது நிறுத்தி ஓட்டு வாங்கிக் கொடுக்கட்டுமே. சிறீமான் புர்றா, பாஷ்யம், மல்லய்யா, ஈ.எல்.ஐயர் ஆகிய இந்த பிராமணர்களுக்காக பணம் சிலவு செய்து கவுன்சிலராக்குகிறவர்கள் ஏன் இந்த தொழிலாளிகளில் ஒன்று இரண்டு ஆள்களுக்கு செய்யக்கூடாது. அதையெல்லாம் விட்டு விட்டு தொழிலாளிகளுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாத சில பொறுப்பற்ற பிராமணர்கள் ஒன்று சேர்ந்து கொள்வதும், நாங்கள்தான் தொழிலாளிகளுக்கு தர்மகர்த்தா, எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்.

 

உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று அவர்களை ஏமாற்றுவதும் அதற்கேற்றாற் போல் தொழிலாளிகள் கூட்டத்தில் ஏதாவது ஒன்று இரண்டு வாயாடிகளை ஏதேனும் கொடுத்து சுவாதீனம் செய்துக் கொண்டு அவர்கள் தயவில் உபசாரப் பத்திரம், மாலை, வண்டி சவாரி, 'ஜேய்' முதலியவைகள் அநுபவிப்பதுமான காரியங்களுக்கு மாத்திரம் தொழிலாளிகளின் தலைவர்களாக வேண்டுமானால் இது எப்படி நடக்கும்? இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இந்த பொய்யர்கள், வம்பர்கள், சுயநலப் புலிகள் ஆகிய கூட்டத்தாருக்கு இடம் கொடுக்காமல் தங்கள் காலிலேயே தாங்கள் நிற்கும்படியான யோக்கியதையை அடைய வேண்டுகிறோம். அதோடு கூடவே இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

 

(குடிஅரசு-06.06.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_03.html

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்;
பரப்பியவன் அயோக்கியன்;
வணங்குகிறவன் காட்டுமிராண்டி -

என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

 

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்! மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

 

இப்போது நீ நினைத்துப்பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்! நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. "தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

 

ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14.-03-1970)

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள் தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

 

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்," "கருணையே வடிவானவர்," "அன்பு மயமானவர்," "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

 

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்? இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர். " அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

 

இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர்களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 -கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. படித்த மக்களும், புலவர்கள், வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண், பெண் கடவுள்களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம்.

 

அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! " கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள்.

 

" கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள், இவ்வளவு ஏன்?

 

நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள். உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள். எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14-04-1970)

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுதப்படுகிறேன். பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு, தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்து கொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான். இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

 

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

 

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி விளக்குகிறேன். நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்டவைகளையும் வணங்குகின்றான் என்பதே.

 

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும், ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன். மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன். மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய், அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன். மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - உண்மை 14-05-1970 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_05.html

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 - கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை.

நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை :
1. கடவுள், மதம், சாஸ்திரங்கள்
2. சாதி
3. ஜனநாயகம்

என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்:

1. பார்ப்பான்
2. பத்திரிகைகள்
3. அரசியல் கட்சிகள்
4. தேர்தல்கள்
5. சினிமா

ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்:

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும்.
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும்.

இவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 - ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் "ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும்.

இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100- க்கு 84 - போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 -ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும்.

நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன. இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.

ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


(தந்தை பெரியார் "விடுதலை" தலையங்கம் - 22.05.1959 )

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_06.html