Language Selection

பெரியார்

 




“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்
என்மீது வெறுப்புக் கொள்ளாது;
வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,
நான் அதற்கு அஞ்சவில்லை.
இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;
பாராட்டாவிட்டாலும்,
இன்று நான் சொன்னதைப் பின்பற்றி
வீரத்தோடு, மானவாழ்வு
வாழும் வழியில் இருப்பார்கள்.
சரியாகவோ, தப்பாகவோ,
நான் அதில் உறுதி கொண்டிருப்பதால்
எனக்கு எக்கேடு வருவதானாலும்,
மனக் குறையின்றி, நிறை மனதுடன்
அனுபவிப்பேன்-சாவேன்
என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

(தந்தை பெரியார் தமிழர் தலைவர் - நூல், பக்கம்: 15)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_8961.html

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:
1- Physicians Cure.
2- Surgeons Cure.

அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.


நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன்.

எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்! சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

("குடிஅரசு"- 1947)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008_05_01_archive.html


'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட 'சூத்திரர்' என்கிற சாதிப்பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரிகளில் பதிவிரதைகளுக்கும் - சரியான ஒரு தாய்க்கும், தகப்பனுக்கும்-பிறந்தவர்களும் இருக்கலாம். 'சூத்திரர்களில் அப்படி இருக்க இடமில்லை. ஏனென்றால், சூத்திரச்சி என்றால் தாசி, வேசி மகள் என்பதுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால், என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன், 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாக சொல்லுவதெல்லாம், 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல், வேறல்ல. ஆகையால் எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காக பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாகக் கருதும் பெண்களும், ஆண்களும், தாங்கள் பிறரால் உங்களை விடக் கேவலமாய்-தாழ்மையாய்க் கருதப்படுவதை அறிவதில்லை.

 

(சிராவயலில் 07.04.1926 அன்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் சில வரிகள்)

 http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_04.html

வாழ்க்கை இன்பத் துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா? இல்லையா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதிர்கள். உங்களுடைய செல்வப்பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

 

இன்று உலகில் கீழ்ச்சாதியார் என்பவர்களுக்குச் சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?அப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்களேயானால் அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன்?

 

புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும், பெண்ணுக்குச் சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படிச் சொல்லப்படுவதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக- நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் மனஉணர்ச்சி- ஆராய்ச்சித்திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமன்று, ஒரு கட்சியன்று, ஒரு மதமன்று. ஆகையால் இத்திருமண முறை மாறுதல்களில் நாஸ்திகத்துக்கு இடமில்லை.

 

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படிச் சொல்வதனால் எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் செய்யும் மற்ற அநேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அர்த்தம். ஆதலால் அதையும் நாம் லட்சியம் செய்ய வேண்டியரில்லை.

 

மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கிற சுயமரியாதை சிலருக்குப் பிடிக்கவில்லையானால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்பட்டால் என்ன செய்ய முடியும்?அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்குப் பாத்தியமுண்டு?

 

ஆகையால் வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சமச் சுதந்திரம் ஏற்பட்டுத் தான் ஆக வேண்டும்.சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள - ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத் தான் ஆகவேண்டும்.

 

தந்தை பெரியார்

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_7163.html

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும், பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், "பிராமணன்" என்கிற பார்ப்பன வருணா சிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள்.

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் "சுவாமி" என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்னும் மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்?

அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்கு கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நாம் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம்.

இந்த நிலை "ராமணனிடம்' கண்டாலும் சரி 'பஞ்சமனிடம்' கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது "பாயாசத்திற்கு குங்குமப்" போதவில்லை; அக்காரவடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் லோபிப் பயல்"என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

"ராமணன்' என்கிற ஒரு பத்திரிகை 'பஞ்சாங்கப்' பிராமணர் களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாகவும், அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகவும், ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் "இவ்விழிதொழில்"செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணஸ்தராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் 'தமிழ்நாடு' பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்திலொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கெளரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம் காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல் லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார்.

ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர்களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம். இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான சிறீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகா மகாகனம் பட்டம் பெற்ற சிறீனிவாச சாஸ்திரிகள், சர். சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும், வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை."பிராமணன்" உண்மையிலேயே இந்த 'இழி தொழிலாகிய' பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் "ராமணர்களை'க் கடைத் தேற்றி "ராமணன்' சொல்லுகிறபடி அவர்களை 'கெளரவமான' வாழ்க்கையில் நடக்கும்படி செய்யும் பிரசாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய 'இழிதொழிலை விட்ட பிராமணர்' பெயர்களையும் வாரா வாரம் "ராமணன்' பத்திரிகை கொண்டு வெளிவருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம்.அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டானவுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்து கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை.

வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம் பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.


(தந்தை பெரியார்- "குடி அரசு"- 19.09.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_06.html

பார்ப்பனனைக் காக்கவே மற்றவரைப் பிரித்தனர்!

எதற்காகப் பார்ப்பான் என்றும், சூத்திரர்கள் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள் என்றால் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதியே பார்ப்பான் இப்படிப் பிரித்தார்கள். தமிழர்களுக்குள்ளாவே நான் மேல்ஜாதி, நீ கீழ்ஜாதி என்று சண்டை போட்டுக் கொண்டால் தம்மிடம் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதாகக் கருதியே பார்ப்பான் இந்த மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறான்.

 

பூணூல் போட்டவன் மேல் ஜாதியா?

மற்றபடி வைசியன் ஏது? சூத்திரன் ஏது? ஆசாரி பூணூல் போட்டுக் கொள்வதாலேயே தன்னை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கிறான். அதுப்போல் தான் பார்ப்பனர் முதலியவர்களும். ஆந்திராவில் உள்ள நாயக்கர்களுக்குப் பூணூல் உண்டு.

 

எதற்காக?

தன்னை மேல் ஜாதி என்று மற்றவர்கள் நினைப்பதற்காகத் தான். புரோகிதன் எதற்கு? புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய சாதிக்காரனாக இருக்க வேண்டும். அவனுடைய நடத்தை, தன்மை முதலியவைகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பெரிதும் நமக்குத் தெரியாத மொழியில் அவனுக்குப் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லிப் பணம் வசுலித்துக் கொண்டு போகிறவனையே தான் இன்று புரோகிதன் என்கிறோம். மற்றும் அவன் காலில் நாமும், மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம். அவனைச் சாமி என்று அழைக்கின்றோம்.

 

இவற்றைத் தவிரப் புரோகிதனுக்கு வேறு லட்சணம் சொல்லுங்கள் பார்க்கலாம்! அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்! இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா?

 

புரோகிதர் எதிர்ப்பு?

நாம் செய்த முதல் மாறுதல் நம் திருமணங்களில் புரோகிதமோ, பார்ப்பானோ இல்லை என்பதாகும். ஒருவரை மேலான பிறவி தாழ்ந்த பிறவி என்பதாக நாம் ஒப்புக் கொள்வதில்லை. அதற்காகப் பார்ப்பனத் துவேஷமோ, அவர்களிடத்தில் வெறுப்போ நாம் கொள்வதில்லை. நாம் கீழான சாதி என ஒப்புக்கொள்வதில்லை. அவ்வளவு தான்.

 

மேலும் கூட்டங்களில் நெய் விட்டு நெருப்பு உண்டாக்குவது போன்ற புரியாத சடங்குகளையும் செய்வதில்லை. இது நமக்கும் தெரியாத ஏதோ ஒரு பழக்கம். அது எப்பொழுது உண்டாயிற்று என்று நமக்கும் தெரியாது. அதைச் செய்கின்ற புரோகிதனுக்கும் தெரியாது. நாம் உஷ்ண நாட்டில் வாழ்வதால் குளிர்காய நெருப்பு அவசியமில்லை.

 

சாப்பாட்டுக்கு போட்டுக் கொள்ள வேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றும் முட்டாள்தனத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டோம். அதுபோலவே வேறு பல காரியங்களையும் வெறுக்கின்றோம். ஏதோ காலத்திற்கு, உணர்ச்சிக்கு, பழக்கத்திற்கு அல்லாமல் இன்றும் ஆதாரத்தோடு இன்ன காரியம் செய்யப்பட்டது என்பதாக ஒன்றும் வரவில்லை. புராணத்தில் வேண்டுமானால் அதுமாதிரி இதுமாதிரி சொல்லியிருக்கிறது என்று சொல்வானே தவிர ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது.

  

(தந்தை பெரியாரின் "வாழ்க்கைத் துணைநலம்" என்ற நூலில் இருந்து சில…)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_09.html

பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை.

பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது? என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35- ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.

இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே? நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10- ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன்.

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன். தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும். நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது.

இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

தந்தை பெரியார்.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_6024.html

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.

ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும். நிற்க,

பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது.

இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும்.

நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.


(குடிஅரசு - 18.06.1949)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_14.html

தாய்மார்களே! தோழர்களே!

அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை.

சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன? ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும்.

இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 - வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு.

உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது. ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின.

கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.


(திருச்சியில் 1956-ல் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_16.html

" உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல.

உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை

வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும்

விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பலனை பகிர்ந்து,

தத்தம் தகுதிக்கும், தேவைக்கும் அவசியமான அளவு

அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்,

தேசீயம் என்றும், தேச சேவை என்றும், தேச பக்தி என்றும்,

தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும்,

ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும், பல பல சொற்களைக் காட்டி,

மெய்வருத்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொதுமக்களை,

கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல்

வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார் வஞ்சித்து ஏமாற்றி

வயிறு வளர்ப்பதை - ஏன்? உழைப்பாளிகளைவிட

அதிக சுகமான வாழ்வு வாழ்வதை - அடியோடு ஒழிக்க வேண்டும்

என்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன்."

 

 (தந்தை பெரியார், தமிழர் தலைவர் என்ற நூலலில் இருந்து .... ஆசிரியர் சாமி. சிதம்பரனார். பக்கம் : 149)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_4230.html

இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ஏற்படுத்தி அதனை நம்பும்படியாகச் செய்து விட்டதாலேயே ஆகும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே ஆவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே மற்ற நாட்டு மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனர்.கடவுள் நம்பிக்கையின் காரணமாகவே நம் நாட்டு மக்கள் இன்னும் அறிவு பெறாமல் வளர்ச்சியடையாமல் இருக்கிறார்கள். இந்தக் கடவுளில் நாம் கைவைக்க ஆரம்பித்த பின்தான் இன்று நம் மக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

நம் நாட்டிற்கு வந்த பெரிய கேடு கடவுள். கடவுளின் பெயரால் மதம், மதத்தின் பெயரால் சாஸ்திரம் என்பதெல்லாம் ஆகும். ஒரு மனிதன் இராமனை, முருகனை, கணபதியை நம்புகின்றான் என்றால் அவனை விட அடிமுட்டாள் எவனுமிருக்க முடியாது.இவற்றை உற்பத்தி செய்திருக்கின்ற கதைகளைப் பார்த்தால் பார்ப்பானைவிட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு மடத்தனமாக, காட்டுமிராண்டித் தன்மையுடையதாக அவற்றைக் கற்பித்திருக்கின்றான். அவனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களைத் தான் நம் மக்கள் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் மடையர்களாக இருப்பார்கள். இல்லாத சாமியை செருப்பாலடித்தது உன் மனதைப் புண்படுத்துகிறது என்றால், இத்தனை ஆயிரம் மக்களைச் சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நான் மட்டும் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய வகையில் நீ பூணூல் அணிந்து கொண்டிருப்பதும், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருப்பதும் வைத்துக் கொண்டிருப்பதும் எங்கள் மனதைப் புண்படுத்துமா இல்லையா? என்று கேட்கின்றேன்.

எங்களை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கிய கடவுளை செருப்பால் மட்டுமல்ல, வேறு எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாமே!இந்து மதக் கொள்கைகளும், சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள்களும் இருக்கின்ற வரை நாம் மனிதர்களாக முடியாது. சாஸ்திரப்படி எந்தக் கொலையும் செய்யலாம், எந்த அயோக்கியத்தனமான அதருமத்தையும் செய்யலாம்; என்பது தருமமாக இருக்கிற வரை எப்படி மனிதன் யோக்கியனாக இருக்க முடியும். இந்தக் கடவுள் மதம் சாஸ்திரங்களைக் காரித்துப்ப வேண்டும்; தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.இந்தக் காரியத்தை நான் இன்று செய்யவில்லை. 40 - வருடங்களாகச் செய்து வருகின்றேன். திருமதி. இந்திராகாந்தி அம்மையாரே நான் இதை 35- வருடங்களாகச் செய்து வருகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மனிதன் ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டால் அவன் செய்த பாவம் எல்லாம் போகும் என்று சொன்னால், எந்த மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான்? செம்மண் பட்டையடித்துக் கொண்டால் பாவம் போகும் என்றால், எந்த மனிதன் அயோக்கியத்தனம் செய்யாமல் இருப்பான்? நம் மக்கள் அறிவுள்ளவர்களாக வேண்டும். நம் நாடு மற்ற உலக நாடுகளைப் போன்று வளர்ச்சியடைய வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று நம் மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசையாகும்.

நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.

நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப்பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை.

பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பான் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.


(தந்தை பெரியார் அவர்கள் 13.04.1971 இல் திண்டுக்கல்லில் ஆற்றிய சொற்பொழிவு)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_593.html

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.

சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் சிறீமான் டி. ஆர். ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக்கூடாது, கண்ணில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகாசபை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்?

ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா? சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா? அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா? நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை.

இந்து மகாசபையின் ஸ்தாபகர் சிறீமான் மாளவியா அவர்களே, தீண்டாதவரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதாருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உழைக்க முன் வரவேண்டியதாயிற்று. இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதிய ரல்லாதவரைத் தாழ்மையாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக்கில்லாத வர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத்தானிருக்கிறது.

உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசிமகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை "காபர்" அதாவது நாஸ்திகர் என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று சொல்லுவதையும், தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத்தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நமது பொய்க்கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லாமல் இருக்கிறது. லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், " முஸ்லீம்கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் " வெகு எளிதில் சொல்லிவிட்டார்.இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா? இல்லையா? அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப் போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா?

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமாயுள்ள எந்தப் பிரதேசத் திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்களா? அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொருபங்கு எண்ணிக்கை உள்ளவர் தானே, அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று சிறீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால் அவ்விந்து மகாசபையை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி "இந்து"ப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது :

" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது" என்று எழுதியிருக்கிறது.

இந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங் களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகபலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா ? ஆதலால் இந்து மகா சமூகமானது, ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல், தேச பொதுநன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்,பரஸ்பர நம்பிக்கைக்கும், சஞ்சீவி என்பதையும் நாம் உறுதியாகச் சொல்லுவோம்.


(குடி அரசு - தலையங்கம் 13 . 12 . 1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_20.html

மகாராஷ்டிரர்கள் "நூல்வலை" யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த சிறீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய "பக்திவலை" யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே, இவ்வாறு இவர் களிக்கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர் பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம்.


சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து "இம்" என்றால் போதும்; உடனே "குடிமுழுகிற்று", "ஒற்றுமை குலைந்தது" என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட்டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். காந்தியடிகளை, காங்கிரஸை விட்டு விரட்டிவிடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராசனர் தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார்.
லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ வந்துவிட்டதென்று நமது நேயர்கள் வருத்தமுறுதல் கூடும். ஒரு விஷயம் அவர்களுக்கு ஆறுதலை அளிக்குமென நம்புகிறோம். மாகாண மகாநாட்டில் கூடிய மேதாவிகளின் அபிப்பிராயம் மகாராஷ்டிரர்களின் உண்மையபிப்பிராயம் அன்று என்றும், அம்மாகாணத்தில் பெரும்பான்மையோர் காந்தியடிகளிடத்தும் இராட்டையிடத்தும் அன்பு பூண்டவர்களென்றும் பம்பாய் "கிரானிகல்" பத்திரிகை கூறுகிறது. நூல் சந்தா விஷயமாக விவாதம் நேரிடலாமென்று எண்ணி ஒத்துழையாதோர் எவரும் அம்மகாநாட்டுக்குப் போகவில்லை.
இதில் நகைச்சுவை பொருந்திய அம்சம் யாதெனில் ஒத்துழையாதார் அம்மகாநாட்டுக்கு போகாமலிருந்ததும் அவர்களுடைய குற்றமாகிவிட்டது." வேண்டாமென்ற மனைவி கைப்பட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம்" என்பார்கள். ஒத்துழையாதார் மகாநாட்டிற்குச் சென்றிருந்து 'நூல் சந்தாவை' ஆதரித்திருந்தால் "சண்டையிட்டு ஒற்றுமையைக் கெடுக்க வந்தார்கள்" என்று குறை கூறப்பட்டிருக்கும்.


மகாநாட்டுக்கு வராதிருந்ததால் அவர்கள் அஹிம்சையைக் கைவிட்டு ஹிம்சைக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டனர் என்று அக்கிராசனர் தேசமுகர் இப்போது கூறுகிறார். அஹிம்சையின் தத்துவத்தைப்பற்றி உபதேசங்கேட்க காந்தியடிகள் இவரிடந்தான் வரவேண்டும். சட்டசபைக்குச் செல்லாதிருத்தலே ஹிம்சையென்று இனி இவர் சொல்வார் போலும்! ஏன்? ஒத்துழையாதார் உயிருடன் இருத்தலே ஒரு குற்றமாய்விடுதலுங்கூடும்.


காந்தியடிகளின் தலைமையின் கீழ் ஒத்துழையாதார் ஒவ்வொரு தடவையிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு விட்டுக்கொடுத்து வந்திருக்கும் விஷயம் உலகமறியும். இவர் பொருட்டு பகிஷ்காரப் பிரசாரத்தை, ஏன்? ஒத்துழையாமையையே ஓராண்டிற்கு நிறுத்தி வைத்ததோடன்றி, தமது திட்டத்தின் உயிர்நிலையான கதர் விஷயத்திலும் மகாத்மா இவர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தத்தை உண்மையுடன் நிறைவேற்றி வைப்பார்களென்று காந்தியடிகள் மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் சுயராஜ்யக் கட்சியினரோ தொடக்கத்திலிருந்து நூல் சந்தாத் திட்டம் தோற்றே போய் விடுமென்று உறுதிகொண்டுவிட்டார்கள். இவ்விஷயத்தில் இவர்களுக்கு "விரும்பும் எண்ணத்திற்கு தந்தை" யாயிருந்திருக்கின்றது.


மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் தீர்மானத்தைப் பற்றி முன்னர் கூறினோம். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சிறீமான் ஐயங்கார் இவர்களைவிட ஒருபடி முன்சென்றுவிட்டார். இவர் இந்திய சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியின் பிரபல அங்கத்தினராயிருப்பவர். காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர். நாகபுரி புகைவண்டி நிலையத்தில் இவர் காந்தியடிகளைப் பார்க்க வந்தபோது கதராடை அணிந்து வரவில்லையாம். தாம் காங்கிரஸ் காரியமாக வரவில்லையென்று சமாதானம் கூறினாராம். இச்சம்பவத்தைப் பற்றிக் காந்தியடிகள் "யங் இந்தியா" வில் மனம் வருந்தி எழுதியுள்ளார்.


தமது குடும்ப நலத்தை அறியும் பொருட்டு அவர் தம்மைப் பார்க்கவர நியாயமில்லையென்றும், அவர் கூறியது போலிச் சமாதானமென்றும் காந்தியடிகள் எடுத்துக் காட்டுகிறார். சுயராஜ்யக் கட்சியார் நூல் சந்தா திட்டத்தை மனப்பூர்வமாக நடத்தி வைப்பார்களென்று எண்ணி, மகாத்மா காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அநேகமாக எல்லோரையும் சுயராஜ்யக் கட்சியினராகவே பொறுக்கி எடுத்துக்கொண்டார். ஆகவே சிறீமான் ஐயங்காரின் செயல் அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.


(தலையங்கம் : குடி அரசு 17. 05.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/i.html

இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப்பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஒடுக்கப்பட்டவுடன், தேசவிடுதலையொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமையுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங் களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பவராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்து விட்டது; ஜாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவராயினர். 'எனது கடமை, எனது கடமை' என்றதற்குப் பதிலாக 'எனது உரிமை, எனது உரிமை' என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு ஜாதியினரும் தமது ஜாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு ஜாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு உழைத்தல் சாலவும் சிறந்ததே. தமது உழைப்பால் பிற ஜாதியினர்களின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படாதிருத்தல் வேண்டும் என்ற எண்ணமின்றி எவர் எக்கேடு கெடினும் தாம் மட்டும் பல உரிமைகளைப் பெறவேண்டுமென்ற குறுகிய நோக்கம் இதுகாலை நாட்டில் தலைவிரித்தாடுகிறது. சிறந்த அறிவாளிகளும், உயர்ந்த தேசாபிமானிகளும் இக்குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஜாதிப்பற்று என்னும் மாயவலையில் சிக்கி உழலுகின்றார்கள்.

" நீ யாவன்?" என என்னை ஒருவன் கேட்பானாயின்" இந்தியன், இந்தியன், இந்தியனே" என்று முக்காலும் மொழிவேன் எனக் கூறிய திரு.மகமதலி ஜின்னாவுங்கூட ஜாதிப்பற்று என்ற மாயையில் பாவம்! அழுந்திவிட்டார். ஹிந்துக்களும், முஸ்லிம்களும் அரசினர் சட்டசபையில் பெறும் பிரதிநிதித்துவ தொகையை வரம்பறுத்து, சென்ற 1916- ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்குத்தான் " லட்சுமணபுரி ஒப்பந்தம் " என்று பெயர். அவ்வொப்பந்தத்தை தமது ஜாதிக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென்று முஸ்லிம்கள் ஒரு பெரும் கிளர்ச்சி செய்து நிற்கின்றனர்.

ஜாதிமத பேதங்கடந்து சிறந்த தேசியவாதியாக இருந்து வந்த, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நாட்டின் நலனைக் கெடுப்பதாகும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த திரு. ஜின்னா நாட்டின் தற்கால நிலையில் தமது கொள்கைகளைச் சிறிது மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி முஸ்லிம்களின் கிளர்ச்சிக்குத் துணைசெய்து வருகின்றார். ஜாதிப்பற்றின் வலிமையே வலிமை! இப்பெருஞ் சமூகத்தினரும் ஒருங்குகூடிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தக்ககாரணமின்றி மாற்றுதல் கூடாதென்றும், அவ்விதம் மாற்றுதல் அவசியமாயின் தமது ஜாதியினரின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படக்கூடாதென்றும் இந்துக்கள் எதிர்வாதம் புரிந்து வருகின்றனர்.

இவ்விரு வாதங்களையும் முறையே ஆராய்ந்து முடிவுசெய்யக் கூடிய கூட்டமும், அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் போல் ஒன்றும் செய்யாமல் பயனில்வாதம் நிகழ்த்திக் கலைந்து விட்டது. தமிழ்நாட்டிலோ அரசியல் உலகத்தை ஜாதிச் சண்டை என்ற படலம் மூடிக் கொண்டிருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தோன்றி மக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை நாட்டி, தேசவிடுதலைக்குப் பதிலாக ஜாதிச்சண்டை மீண்டும் உயிர்த்தெழுந்து உறுமி நிற்கிறது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், ஆரியர் - தமிழர் என்ற பிரிவுச் சொற்களே எங்கும் முழங்குகின்றன. சுதந்திர வீரர்கள் சுயராஜ்ய வீரர்களாக இலங்கிய நம்மவர் இதுகாலை ஜாதி வீரர்களாகக் கோலங்கொண்டு நிற்கிறார்கள்.

தலைவர்களின் சொற்பொழிவுகளிலும், தமிழ்ப் பத்திரிகைகளிலும் காங்கிரஸ் என்ற பேச்சைக் காணோம்! கதர் என்ற பேச்சைக் காணோம்! எல்லாம் ஜாதி மயமாகவே விளங்குகின்றன. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்திய மக்கள்" என்ற உயரிய கொள்கை, சிறந்த எண்ணம் மக்களை விட்டு அகன்றோடிப் போய் விட்டது. பிறப்பால் உயர்வு, தாழ்வு என்ற கீழ் எண்ணம் நாட்டில் பரவிவிட்டது. எல்லோரும் ஒன்றென்று எண்ணி நாட்டின் நலத்திற்காக ஒன்றிய மனத்தினராய்த் தமிழ் மக்கள் உழைக்கும் நாள் எந்நாளோ? இதுகாறும் நாட்டின் அரசியல் நிலையைப் பற்றி பொதுநோக்காக ஆராய்ச்சி செய்தோம். இனி நாட்டின் கண்ணூள்ள பற்பல அரசியல் கட்சியினர்களைப் பற்றி சுருக்கமாக ஆராய்தல் செய்வோம்.

நமது நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிமுறையில் எவ்விதத் தொடர்பும் இன்றி, புறத்தே நின்று ஒத்துழையாமை செய்வதில் எவ்வித பயனுமில்லையெனக் கூறி, அரசினர் சட்டசபைகளில் நுழைந்து அங்கு ஒத்துழையாமையை நிகழ்த்தி ஆட்சிமுறை நடைபெறாவண்ணம் இடையறாது முட்டுக்கட்டை போட்டு, ஆட்சிமுறையை உடைத் தெறிதலே சாலவும் சிறந்ததெனக் கொண்டு காங்கிரஸ்வாதிகளில் ஒரு கூட்டத்தினர் "சுயராஜ்யக் கட்சி" என்ற ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். மத்திய மாகாணம், வங்காளம் என்னும் இரண்டு இடங்கள் தவிர மற்றைய இடங்களில் சுயராஜ்யக் கட்சியினர் போதிய ஆதரவு பெறவில்லை. இடத்திற்கும், காலத்திற்கும் தமது கட்சியின் பலத்திற்கும் தக்கவாறு தமது கொள்கைகளையும் முறைகளையும் மாற்றிக்கொண்டே வரலாயினர். சட்டசபைகளில் முழு ஒத்துழையாமை, இடையறாமல் முட்டுக்கட்டை என்று கூறியது பேச்சளவிலே நின்றுவிட்டது.

இந்திய சட்டசபையில் தமது கட்சிக்குப் பலமின்மை கருதி சுயேச்சைவாதிகள் சிலரோடு ஒருவகை ஒப்பந்தம் செய்து கொண்டு முட்டுக்கட்டை முறையை ஓராண்டு கையாண்டு வந்தனர். அதுவும் ஒருசில காரியங்களில் மட்டுமே. ஓராண்டுக்குப் பின்னர் சுயேச்சை வாதிகள் சுயராஜ்யக் கட்சியினரைக் கைவிட்டு விட்டனர். பாவம்! தன்னந்தனியராய் எடுத்த காரியம் யாவினும் தோல்வி மேல் தோல்வியே பெற்று வந்தனர். இவர்கள் அரும்பாடுபட்டு அரிதிற் பெற்ற சில வெற்றிகளும் அரசப் பிரதிநிதியின் தனி அதிகாரி எனும் பொருளுக்கு இரையாயின. சட்டசபைகள் ஏற்படுத்தும் சிறு கமிட்டிகளில் பதவி பெறலாகாதென்று கொண்டிருந்த நோக்கம் வெறும் எழுத்தளவிலேயே நின்றுவிட்டது.

மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும் சுயராஜ்யக் கட்சியினரின் முட்டுக்கட்டை ஒருவாறு நிறைவேறிற்றென்றே கூறுதல் வேண்டும். இருந்தாலும், ஏன்? மத்திய மாகாணத்தின் சட்டசபைத் தலைமையைப் பெற சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு, அதனையும் பெற்றுவிட்டனர். பதவிபெறுதல் கூடாது என்ற அவர்தம் கொள்கைக்கு வியாக்கியானம் போலும்!

சென்னை மாகாணத்தைப் பற்றியமட்டிலும் சுயராஜ்யக் கட்சியினரை பத்திரிகைகளிலும், பிரசங்க மேடைகளிலும் கண்டோமேயல்லாது சட்டசபையில் காணவே இல்லை. சென்னை சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியினரும் பிற கட்சியினரும் கையாண்டு வந்த முறைகளில் எவ்வித பேதமும் எமக்குப் புலனாகவில்லை. இதுபோன்ற மற்றைய மாகாண சட்டசபைகளிலும் சுயராஜ்யக் கட்சியினர் இருந்து வருகின்றனர் எனக் கூறுதல் மிகையாகாது. "சட்டசபைகளில் ஒத்துழையாமை நிகழ்த்துவோம்; முட்டுக்கட்டை போடுவோம்; ஆட்சிமுறையை அழிப்போம்" என்று சுயராஜ்யக் கட்சியினர் வீராவேசம் கொண்டு கூறிய முழக்கச் சொற்கள் பயனிலவாயின. பேச்சில் ஒத்துழையா வீரர்களாகவும், செய்கையில் ஒத்துழைப்பு வீரர்களாகவும் விளங்கி வருகின்றார்கள். அதுமட்டுமா? பேச்சிலுங்கூட அவ்வீரத்தன்மை ஒழிந்து வருகின்றது.

காந்தியடிகளுக்கும், சுயராஜ்யக் கட்சியினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒழித்துவிட சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டுவிட்டனர். அக்கட்சியினர்களுக்குள்ளேயே பற்பல மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றிவிட்டன. தாஸர் ஒன்று கூறுகிறார். மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் ஒன்று கூறுகின்றனர். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றி வைத்தல் வேண்டுமென திரு. தாஸர் கூறுகிறார். நூல் சந்தா தீர்மானத்தை எடுத்துவிட வேண்டுமென்றும், காந்தியடிகளை காங்கிரஸை விட்டு ஓட்டிவிட வேண்டுமென்றும் மகாராஷ்டிரத்தார் கூறுகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்குள் சுயராஜ்யக் கட்சியினர்களுக்குள்ளேயே பிளவு ஏற்படும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

திரு. தாஸர் இந்தியாவிலிருந்து கண் சிமிட்டுகிறார். திரு பர்க்கன் ஹெட் பிரபு இங்கிலாந்திலிருந்து கண் சிமிட்டுகிறார். யாரை யார் மயக்கப் போகிறார்களோ காலந்தான் காட்டும். 'தன்னைக் கண்டாரை மயக்கமுறச் செய்து கீழே வீழ்த்தும் கொல்லிப்பாவை'யென விளங்கும் அரசினர் சட்டசபைகளில் அடி வைத்தவர்களின் வழி இந்நிலையுறாது பின் எந்நிலையுறும்? சுருங்கக்கூறின் சுயராஜ்யக் கட்சியினர் தமது பண்டைக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டனர்; ஒத்துழைப்பாளர்களாயினார்கள். நிர்மாணத் திட்டத்திலும், காந்தியடிகளிடத்திலும் நம்பிக்கையிழந்தனர். அவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேதங்கள் தோன்றலாயின. பிளவு அதிவிரைவில் ஏற்படுதலுங்கூடும். சுயராஜ்யக் கட்சியினரின் தற்காலநிலை இதுவேயாகும்.

சிறீமதி அன்னி பெசண்டும் அவரது கூட்டத்தினரும் இந்திய அரசியல் உலகில் இதுகாலை மிக்க பாடுபட்டு வருகிறார்கள். "அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்" என்ற கொள்கையுடையவர்கள். இந்தியாவில் மட்டும் கிளர்ச்சி செய்தல் பலன் தராது என்றும், இந்திய அரசியல் கிளர்ச்சியை இங்கிலாந்திலும் நடத்துதல் வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள்.இந்திய மக்கள் உண்மையாகவே சுதந்திர தாகங்கொண்டுள்ளார்கள் என்று ஆங்கிலேயர்கள் அறிவார்களாயின் இந்தியாவின் ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு பெரும் பங்கு கொடுக்க ஆங்கிலேயர்களே முன்வருவார்களென்றும், இந்திய அரசியல் நிலையின் உண்மையையும் இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையையும் ஆங்கிலேயர் அறியாத குறையே அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதற்குக் காரணமென்றும், ஆங்கிலேயர்களை வற்புறுத்தினால் அவ்வாறு அவர்கள் இணங்கமாட்டார்களென்றும், ஆகையால் உருப்படியான அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத்தாரிடம் சமர்ப்பித்தல் வேண்டுமென்றும் இக்கூட்டத்தினர் கூறுகின்றனர்.

" இந்திய சுயஆட்சி மசோதா" ஒன்றினைத் தயாரித்து அதற்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெற இந்நாடு முழுவதும் சிறீமதி அன்னி பெசண்ட் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். சிறீமான் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி போன்ற பெரியோர்களினுடையவும், மகாராஷ்டிர மாகாண மகாநாடு போன்றவைகளினுடையவும் ஆதரவைத் தமது மசோதாவிற்குப் பெற்றிருக்கின்றனர். இதுகாறும் வெளிவந்துள்ள இந்திய அரசியல் திட்டங்களைக் காட்டிலும் இவர் தயாரித்த மசோதா பெரிதும் முற்போக்குடையதாகவும், இந்திய மக்களுக்கு ஆட்சி முறையில் அதிக அதிகாரமும், பொறுப்பும், தரத்தக்கதாகவும் இருக்கிறதென்றே கூறவேண்டும். எனினும் இந்திய நாகரிகத்திற்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பெரிதும் மாறுபட்ட அம்சங்களைத் தன்னகத்துத் தாங்கி நிற்கிறது.

ஆங்கிலேயர்களை எந்நாளும் சார்ந்து இந்திய மக்கள் பிழைக்க வேண்டுமென்ற கொள்கையை இம்மசோதா ஒப்புக்கொண்டு நிற்கிறது. இந்தியாவிற்கு ஆங்கில நாட்டுத் தொடர்பு இன்றியமையாததென்று வலியுறுத்திக் கூறுகின்றது. இந்தியாவின் காவலன் (Qrbtlectlbr) ஆக ஆங்கிலமன்னன் இருந்தேயாக வேண்டுமாம். இந்தியாவின் மீது ஆணை செலுத்திவரும் ஆங்கில நாட்டு " பிரிவு கவுன்சி" லின் ஆதிக்கம் இம் மசோதாவினால் ஒழிந்தபாடில்லை. பிறநாட்டாரின் வியாபாரப் பெருக்கால் இந்தியக் கைத்தொழில்கள் நாசமாக்கப்படாமல், நமது தொழில்களைக் காப்பாற்றிக் கொள்ள காப்புவரி முதலானவை விதிக்கும் உரிமைகள் இம்மசோதாவில் காணப்படவில்லை.இதுகாலை நடைபெற்றுவரும் இந்திய அரசாங்கத்தார் கண்மூடித் தனமாகவும், தந்நலத்தைப் பேணியும், பெருக்கி வைத்திருக்கும் கடன்களையும் வேறுசில பொறுப்புகளையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுவனவற்றை ஏற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ள முடியாதனவற்றை தள்ளவும் இம்மசோதா இந்திய மக்களுக்கு உரிமை அளிக்கக் காணோம். இதுபோன்ற குறைகள் பலவும் இம்மசோதாவில் மல்கிக் கிடக்கின்றன.

ஆங்கில நாட்டுத் தொடர்பை எக்காலத்தும் இந்தியா விடக்கூடாதென்று அம்மையார் கூறுதல் இயல்பே. அவரும் ஒரு ஆங்கிலராதலின், செருப்புக்கடியின் துன்பத்தை செருப்பணிந்த வனன்றோ அறிவான்? ஆங்கில நாட்டுத் தொடர்பை அறுத்தெறிய வேண்டுமென்பது இந்தியர்களின் எண்ணமுமன்று. அத்தொடர்பு இரு நாட்டிற்கும் நன்மை பயப்பதாயின் யாவரே வேண்டாமெனக் கூறுவர்? அத்தொடர்பால் நமது நாட்டின் நலத்திற்குக் கேடு விளைவதாயின் நாம் தனித்து நிற்கும் உரிமை நமக்கு இல்லையா? என்பதே கேள்வி. இக்கேள்விகளுக்கு தக்க விடை இம்மசோதாவில் காணோம்.

நாட்டில் இன்னும் வேறுபல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவைகள் தொகையில் சுருங்கினவாகவும் செல்வாக்கில் குறைந்தனவாகவும் வெறும் பெயரளவிலேயே நின்று விடுகின்றன. " கடப்பார் எவரோ கடுவினையை" என்ற கொள்கையையுடைவர்கள்; அதிகம் கேட்போம்; கொடுத்தால் அனுபவிப்போம்; சிறிது கொடுப்பினும் வந்தனம் கூறுவோம்; மேலும் மேலும் கேட்டுக் கொண்டேயிருத்தல் வேண்டும். அதுதான் நமது கடமையென்ற சித்தாந்தமுடையவர்கள். இவர்கள்தான் நிஷ்காமயாகம் யோகிகள் போலும்.இதுதான் இந்தியாவின் அரசியல் உலகம். இதுதான் நமது நாட்டின் அரசியல் நிலை.இத்தகைய காட்சியை வேறெந்நாட்டு அரசியல் உலகிலும் காண்பதரிது. இங்ஙனம் பலதிறப்பட்ட அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளைக் கண்டு மக்கள் மனங்கலங்கி நிற்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. அடுத்த கட்டுரையில் காந்தியுலகைப் பற்றியும் மக்கள் கடைப்பிடித்தொழுக வேண்டிய அரசியல் நெறியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வோம்.

( தலையங்கம் : குடி அரசு 24 . 05 . 1925 )

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/ii.html

காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைப்பற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு ராஜதந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலேயர்களின் உள்ளங்கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையவராய் உழைத்து வந்தனர். தன்னம்பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலேயர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர்.

சுயராஜ்யம் ஆங்கிலேயர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிரஸ் மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு "எமக்கு இன்ன குறை உளது. அதனை தயவு செய்து நீக்க வேண்டும்" என்று அடிமைக்குணம் அரும்பிய விண்ணப்பத் தீர்மானங்களும், வேண்டுகோள்களுமே காங்கிரஸ் மகாசபையில் செய்யப்பட்டு தாழ்மையுடன் அனுப்பப்பட்டுவந்தன.

இந்திய அரசாங்க ஊழியம் இந்தியமயமாக்கப்படின் அதுவே தேசவிடுதலையெனக் கருதி உத்தியோகங்கள் பெறப்பட்டுவந்தன. படித்த வகுப்பினரே இந்திய மக்கள் என்றும், சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பட்டினங்களே இந்தியாவென்றும் கருதி அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கிலரின் மனப்பான்மையை உள்ளபடி ஒருவரும் அறிந்தவர்களில்லை. அறிந்த ஒருசிலரும் அதற்கேற்ப தக்க முறைகளை மக்களுக்கு காட்டத் துணிந்து முன் வந்தார்களில்லை.

ஆங்கிலர்களின் உண்மையான மனப்பான்மையை உள்ளபடி அறிந்தவர் உத்தமர் காந்தியடிகளேயாவார். ஆங்கில ராஜதந்திரிகள் போன்ற நிபுணர்களை இவ்வுலகில் எங்கும் காண்டல் அரிது என்றும், அவர்களை அம்முறை கொண்டே வெல்லுதல் அரிது என்றும் இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யம் வேண்டி ஆங்கிலர்களிடத்து அடிபணிந்து நிற்பது இழிவு என்றும், சுயராஜ்யம் என்பது ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்று அனுபவிக்கும் பொருள் அல்லவென்றும், நாமாகவே அடைந்த சுயராஜ்யமே நிலைத்து நிற்கும் என்றும் காந்தியடிகள்
மக்களுக்கு எடுத்தோதினார்.

சுயநலமும், லாபமும் கருதியே ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் அரசு செலுத்தி வருகிறார்கள் ஆதலின் அவர்களாகவே மனமிரங்கி இந்தியாவிற்கு சுயராஜ்யம் அளிப்பார்களென எதிர்பார்ப்பது பகற்கனவேயாகும். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் மனிதன் ஒருவனையேனும் இவ்வுலகில் காண்டல் அரிது. நமது நாட்டின் மக்கள் திரண்ட செல்வம் அடைந்து இன்பம் நுகர்வதற்கு கருவியாக அமைந்திருக்கும் இந்தியாவை விட்டுச் செல்லவும் ஆங்கிலர் ஒருப்படுவாரா?

ஆகையினால் அவர்பால் உதவியை எதிர்பார்ப்பது இந்தியரின் தன்மதிப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரிதோர் குறைவு என்று இடித்துக் கூறினார். நூற்றைம்பது ஆண்டுகளாக இந்தியர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைக்குழியில் வீழ்த்தின இந்திய ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழையாமையைக் கைக்கொள்வதே சுயராஜ்யம் பெறும் வழியென ஓர்ந்து இந்திய மக்களுக்கு அரிய உபதேசம் செய்தனர். காங்கிரஸ் மகாசபை படித்த வகுப்பினர் கூட்டமாக விளங்காமல் உண்மையான இந்திய மக்களின் பிரதிநிதி சபையாகத் திகழல் வேண்டுமானால் இந்தியமக்கள் அனைவரும் அதில் சேர்ந்து கலந்து உழைத்தல் வேண்டுமென வழிகள் வகுத்தனர்.

தேசமும், தேச உரிமையும் இன்னதென்றறியாது கிணற்றுத் தவளையென வாளாக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு உழைக்கும்படிச் செய்தனர். இந்தியாவிற்கு சுயராஜ்யம் வேண்டுவது பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மக்கள் விடுதலை பெறவே என்ற உண்மையைக் கண்டு, இதுகாறும் இந்திய மக்களைப் புறக்கணித்து நடைபெற்றுவந்த இந்திய அரசியல் நெறியை மாற்றி படித்த வகுப்பினருக்கும் பாமர மக்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்தனர்.

இந்தியா என்பது படித்த வகுப்பினரும் பட்டினங்களும் அல்ல; ஏழு லட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமேயாவர். சுயராஜ்யம் படித்த வகுப்பினருக்கு மட்டுமல்ல; உத்தியோகங்களை இந்தியமயமாக்குவதும் சுயராஜ்யமாகாது, வறுமைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும் அகால மரணத்திற்கும் ஆளாகி எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நன்னிலையடைந்து உண்ண உணவிற்கும் உடுக்கத் துணிக்கும் வாடி நிற்காமல் நிமிர்ந்த தலையினராய் ஏறுபோல் நடையினராய் வாழ்ந்து இன்பம் நுகரச் செய்வதே சுயராஜ்யமாகும்.

நமது கிராம வாழ்க்கை மீண்டும் பழைய நன்னிலைமை அடைந்தால் அல்லாது சுயராஜ்யம் பெறமுடியாது என்பது காந்தியடிகளின் முடிந்த கொள்கை. இவ்வாக்க வேலைக்கு இந்திய அரசாங்கம் உதவிபுரியுமென எதிர்பார்த்தால் வீணே கிராம வாழ்க்கையைக் குலைத்து, கிராம வாசிகளின் கைத்தொழிலைத் தொலைத்து, அதன்மேலேயே இவ்வர சாங்கம் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காந்தியடிகள் கண்டார்.

இவைகளை எல்லாம் நன்றாய் ஆராய்ந்த பின்னரே தேசம் விடுதலை பெற வேண்டுமானால், சுயராஜ்யம் அடையவிரும்பினால் ஆக்க முறைகளையும் அழிவு முறைகளையும் இந்திய மக்கள் ஒருங்கே கைக்கொண்டு உழைக்க வேண்டுமெனக் கூறினார். அப்பெரியாரின் கொள்கையைக் காங்கிரஸ் மகாசபையும் ஏற்றுக்கொண்டு ஒழுகியது. அழிவுமுறை எனப்படுவது இந்நாட்டில் ஆங்கில அரசாங்கம் நடைபெறுவதற்கு உதவியாக இருப்பவைகளோடு மக்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது ஆகும். ஆக்க முறையாவது சுயராஜ்யத்தை நல்குவதான நிர்மாண வேலைகளை நிறைவேற்றி வைப்பது ஆகும்.

அரசாங்கத்தார் அளிக்கும் பட்டங்களையும், கவுரவப் பதவிகளையும் துறத்தல், சட்டசபைகளை விட்டு விலகல், அரசாங்கப் பாடசாலைகளையும் நீதி மன்றங்களையும் விலக்குதல் ஆகிய இவைகளே அழிவு முறைகளாம். அவ்வரசாங்கத்தாரின் அட்டூழியங்களினால் நசுக்கப்பட்டு இறந்துபோன குடிசைத் தொழிலாகிய இராட்டினத்தில் நூல் நூற்று கைத்தறியால் நெசவு நெய்தல், உயிர்ப்பித்தல், இருபெரும் வகுப்பினராகிய இந்துக்களும், முஸ்லிம்களும் எவ்வித வேற்றுமையுமின்றி நட்புரிமை பூண்டு உடன்பிறந்தார் களைப்போல ஒன்றி வாழ்தல், இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், கேவலம் மனித உரிமையை மறுப்பதும் ஆகிய தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தை ஒழித்தல் ஆகிய இவைகளே ஆக்கமுறைகளாகும்.

பற்பல காரணங்களினால் காந்தியடிகள் கோலிய அழிவுமுறைகள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. ஆக்கமுறைகளும்கூட புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு முறைகளே இந்தியாவிற்கு சுயராஜ்யம் தரவல்லது. வேறு எம்முறையும் தராது என்பது உறுதி. ஆங்கிலர்களின் ராஜதந்திரத்தின் முன் நம்மவர் தந்திரம் ஒருக்காலும் தலைதூக்காது. காலத்திற்கேற்ற பேச்சும், வாக்குறுதியைக் காக்கும் குணமின்மையும், வஞ்சகமும், பொய்க்கோட்டையும் பொதிந்துகிடக்கும் ஆங்கில ராஜதந்திரத்தின் வலிமையை பாவம்! ஏழை இந்தியர் அறிய முடியுமோ? சட்டசபை சென்றவர்களின் கதி என்னவாயிற்று? "பழைய கருப்பனே கருப்பன்" என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஆங்கில நாட்டுத் தொழிலாளர் கட்சியினரை எதிர்பார்த்து நின்றவர்களின் கதிஎன்ன? ஏமாற்றமல்லாது வேறுண்டோ? விளங்கும் தீண்டாமையை ஒழித்து மக்கள் ஒற்றுமையாக வாழவும் பாடுபடுதல் அரசியல் முறையின் பாற்பட்டதாகாதோ? சுயராஜ்யம் எனின் இதுபோன்று நடைபெறும் ஆட்சிமுறையைத் திருத்தியோ ஒழித்தோ மக்கள் பிறப்புரிமை களைப்பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமெய்தி வாழ்வதுதானே. இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையின் அடிப்படைகளாக இருக்கும் நாட்டின் செல்வத்தை கொள்ளை கொள்ளும் வியாபாரம், பிரித்தாளுதல் ஆகியவைகளை ஒழிக்கும் முறைகள் அரசியல் முறைகள் அல்லவெனின் பின் எதுதான் அரசியல் முறையோ?

தமிழ் மக்களே! பட்ட வேட்டையிலும், பதவி மோகத்திலும் அமிழ்ந்து அலைந்து திரிவோர்களின் மயக்க வார்த்தைகளில் ஈடுபட்டு ஏமாந்து போகாதீர்கள். கதர், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழித்தல் ஆகிய இம்மூன்றுமே சுயராஜ்யம் நல்கும். இதுவே எனது சித்தாந்தம் எனக் காந்தியடிகள் கூறும் அரிய மொழிகளை ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையைக் கண்டு தேறி, காந்தியடிகள் வழிநின்று தேசவிடுதலைக்காக உழைப்பீர்களாக!


(தலையங்கம் : குடி அரசு 31. 05.1925 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/iii.html

இன்றையத் தினம் நாம் இங்கு பகுத்தறிவாளர் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்றால், அதன் பொருள் மனிதர்கள் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்பதே ஆகும். பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர். பகுத்தறிவு இருந்தும் அதைப் பயன்படுத்தாத காரணத்தால் இதுவரை வெறும் மனிதர்களாக வாழ்ந்து வந்தோம். இனி இக்கழகத்தின் மூலமாகத் தான் பகுத்தறிவாளர்களாக வாழப் போகிறோம்.

மனிதன் தோன்றிய காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு 5- ஆயிரம் வருட சரித்திரம் தெரிகிறது. இந்த 5 - ஆயிரம் வருடமாக அறிவு இருந்தும். மாறிக் கொள்ளக் கூடிய நிலை இருந்தும் மனிதன் 5 - ஆயிரம் வருடங்களாகப் பல மதங்கள், பல ஜாதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றான். இது பகுத்தறிவுள்ள தன்மையா என்று சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் ஒரு கடவுள் இருக்கிறார் என்கிறான். ஆனால் பல கடவுள்களை வணங்குபவனாக இருக்கிறான்.

மனிதன் கட்டுப்பட்டு நடக்க மதம் என்கின்றான். ஆனால் அது ஒரு மதமாக இல்லை. ஒரே கொள்கையுடையதாகவும் இல்லை. பல மதங்களைச் சார்ந்தவனாகவும் இருக்கின்றான். இதன் காரணமாக மனிதன் வளர்ச்சியடையாமல் போய்விட்டான். சாதாரணமாக இந்த இரு நூறு ஆண்டுகளில் மனிதன் பெற்றிருக்கிற வளர்ச்சியினை ஏன் இதற்கு முன் பெறவில்லை. இன்றுள்ள அறிவுதானே அன்றுமிருந்தது. அன்று முடியாதது இன்று எப்படி முடிகிறது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் சராசரி ஆயுள் அய்ந்து வயதாக இருந்தது. இன்றைய தினம் மனிதனின் சராசரி வயது என்ன என்றால், நம் நாட்டில் 50, வெளிநாடுகளில் 70. இன்னும் 10, 20 - ஆண்டுகளில் 70 ஆண்டுகள் சராசரியாக வாழ்வோம். வெளிநாட்டானின் சராசரி வயது 100 ஆக இருக்கும். 2000 - ஆண்டுகளுக்கு முன் கடவுள், மதம், மதத்தலைவர்கள், வள்ளுவன் எல்லாமிருந்தும் அன்று ஏன் மனிதனின் சராசரி வயது அய்ந்தாக இருக்க வேண்டும்?

அன்று உலக ஜனத்தொகையே 20 - கோடிதான். கி.பி.1465 - இல் உலக ஜனத்தொகை 45 - கோடி. 1650 -இல் 47 - கோடி; 1800 -இல் 70 - கோடியாயிற்று. கிட்டத்தட்ட 135 - வருடத்தில் 23 - கோடி பேர்தான் அதிகமானார்கள். 1900 -த்தில் 165 - கோடி; 1914 - க்கும் 1954 -க்கும் இடையில் 40 - வருடத்தில் உலக ஜனத்தொகை 320 - கோடி ஆயிற்று. இந்த 40 - ஆண்டுகளில் மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி இருக்கின்றான்.

மனிதனின் அறிவு வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் போக்குப் போனால் வெளிநாட்டு மக்கள் சராசரி 100 - ஆண்டுகள் வாழ்வார்கள். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தியதால் வளர்ந்திருக்கின்றான் என்பதற்கே. வள்ளுவன் காலத்தில் 100 -க்கு ஒருவன் கூடப் படித்தவன் இருக்கமாட்டான்.

நம் நாட்டை எடுத்துக் கொண்டால் 1920 -இல் நாம் 100 -க்கு 5 - பேர்தான் படித்திருந்தோம். வெளிநாட்டான் 100 -க்கு 60, 65 - பேர்தான் படித்திருந்தான். இப்போது நம்மவன் 100 - க்கு 50 - க்கு மேல் படித்திருக்கிறான். வெளிநாட்டான் 100 - க்கு 94, 97 - பேர் படித்திருக்கிறான். நமக்கும் அறிவிருக்கிறது மற்றவனுக்கும் அறிவிருக்கிறது; இருந்தும் நம்நாட்டில் நாம் 100 - க்கு 97 - பேராக இருக்கிறவர்கள் கீழ்ச் சாதியாகவும், 100 -க்கு 3 - பேராக இருக்கிறவன் உயர்ந்த சாதியாகவும் இருக்கிறான் என்றால், இதற்குக் காரணம் என்ன? 100 - க்கு 97 - பேராக இருக்கிற இந்நாட்டு மக்கள் ஏன் கீழ் மக்களாகவும், சூத்திரர்களாகவும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாகவும் இருக்க வேண்டும்?

நம் தாய்மார்கள் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டு காலம் இருந்து அடைந்த பலன் என்ன? என்பதைச் சிந்திப்பதோடு இதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டாமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் என்று தெரியும் போது அவற்றை அழித்து ஒழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன்.வள்ளுவன் பெரியவன். அவன் பார்ப்பானை ஒத்துக் கொள்கிறான். பார்ப்பானின் நடப்புகளை, சாஸ்திரங்களை ஒத்துக் கொள்கின்றான். அவன் வாழ்ந்த காலம் 2000 - ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போதிருந்த அறிவு அவ்வளவு தான். அந்த அறிவு இன்றைக்குப் பயன்படாது.

இராமலிங்கம் சொன்னார் என்றால், அதுவும் வைதீகக் கருத்துத்தான். பல மூடநம்பிக்கைகள் நிரம்பி இருக்கின்றன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் கடவுளைக் குறிப்பிட்டே பாடியிருக்கிறார். நான் எந்த இலக்கியத்தையும் தொட்டவனல்ல. என் அறிவைக் கொண்டு சிந்தித்ததைச் சொல்கின்றேன். எவன் மீது பற்றுக் கொண்டாலும் அவன் பின்னால் தான் செல்லத் தோன்றுமே தவிர, அவன் தன் சொந்த அறிவுப்படி செல்லத் தோன்றாது. மனிதன் மாறுதலுக்கு ஆளாக வேண்டும். மாறுதல் என்றால் சிந்தனைக்கு ஆளாக வேண்டும். சிந்தனை என்றால் பற்றற்றுச் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்வது? வள்ளுவனைப் பின்பற்றினால், இன்னொருவனைப் பின்பற்றினால் பகுத்தறிவுவாதியாக முடியுமா?


(02.12.1970 அன்று சேலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 15.03.1971)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_23.html

நான் ஒரு பிறவித் தொண்டன்;

தொண்டிலேயே தான்

எனது உற்சாகமும், ஆசையும்

இருந்து வருகிறது.

தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது.

தலைவனாக இருப்பது என்பது,

எனக்கு இஷ்டமில்லாததும்

எனக்குத் தொல்லையானதுமான காரியம்.

ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும்,

எனது உண்மைத் தோழரும்

கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின்

அபிப்பிராயத்தையும், வேண்டுகோளையும்

மறுக்க முடியாமலும், தலைமைப் பதவியை

ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய,

இதில் எனக்கு மனச் சாந்தியோ,

உற்சாகமோ இல்லை.

இருந்தாலும் என் இயற்கைக்கும்,

சக்திக்கும் தக்கபடி

நான் நடந்து வருகிறேன் என்றாலும்,

அதன் மூலம் எல்லோரையும்

திருப்தி செய்ய முடியவில்லை.

 

(சென்னை கன்னிமரா ஒட்டலில் 06.10.1940 - இல் சொற்பொழிவு,

குடிஅரசு, 13.10.1940)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_24.html

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?

பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது.

2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது.

3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.

4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும், சின்னங்களையும் அணியக்கூடாது.

5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது.

6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது.

7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.

8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது.

9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

 

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

 

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

 

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

 

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

 

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

 

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

 

(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் 09.02.1959 அன்று நிகழ்த்திய உரையாடல் )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_27.html