Language Selection

பெரியார்

ஜீவப் பிராணிகளில் மனிதனையும் மிருகம் பறவை முதலிய மற்ற பிராணிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு அறிகுறியாய் உள்ள குணங்கள் இரண்டே இரண்டு குணங்கள் தாம். அவை, பகுத்தறிவு - தன்மானம் என்பனவாகிய இரண்டுமேயாம். அதாவது, ‘அறிவும் மானமுமே மக்கள் தன்மை’ என்பதற்கு ஒப்ப அவை இரண்டும் இல்லாதார் மக்களல்லாதாரேயாவர். இன்றைய மனித வாழ்வில் அவ்விரண்டிற்கும் இடமில்லாமலே போய்விட்டது.

மனிதன் பிறக்கும் போது அப்பிறப்பு இயற்கை அமைப்பில் அறிவு பெறும் சக்தி தான் அமையப் பெற்று இருக்கிறான். அனால், அறிவு பெற்று இருக்கவில்லை என்றாலும் வளர்ச்சியில் அறிவு பெற வேண்டியவனாகிறான்.

அப்படிப் பெறவேண்டிய அறிவில் தலையாயதும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்கதும் ஆனது இயற்கையின் இயல்பை, தன்மையை உணர்வதேயாகும்.

ஆனால், மனிதப் பிறவியில் மனிதன் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாதபடி மதத்தையும் கடவுளையும் கொண்டு தடுக்கப்பட்டுவிட்டான். கடவுளும் மதமும் தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிட்டன.

கடவுளும் மதமும் இயற்கையை அறியுந் தன்மையைக் கெடுத்து விட்டன என்பது மாத்திரமே அல்லாமல், நமது கல்வி என்பதும் ‘புண்ணில், புழுவும் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்வதற்கு ஒப்ப, கடவுளையும் மதத்தையும் தாண்டித் தானாக வளர வாய்ப்பிருக்கும் துறையையும் அடைத்துவிட்டது. மதத்தால் ஏற்படும் முட்டாள் தனத்தைவிட, ‘கல்வி’யால் ஏற்படும் முட்டாள்தனம் மிகவும் கேடானது என்று சொல்லும்படியாகக் கல்வி ஏற்பட்டுவிட்டது.

எப்படி எனில், மதத்தால் அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டு விட்டால், ‘கல்வியால்’ அயோக்கியத் தன்மை - அதாவது மனிதனை மனிதன் மோசடி செய்து வாழும் தன்மை ஏற்பட்டு, பொய் பித்தலாட்டங்களாலேயே மனிதன் வாழ்வு நடத்தும்படியான - நடத்தித் தீர வேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம், கல்வியை மதக் கல்வியாக - மதத்தை அனுசரித்த கல்வியாக ஆக்கியதும், ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்களாய் இல்லாமல் வயிறு வளர்க்க ஆசிரியர் வேலை கற்ற ஆசிரியர்களைக் கொண்டும் - அந்த ஆசிரியர்களும் அடிமைக் கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும், இருப்பது மேயாகும்.

ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக - அதில் மேம்பட்டவனாக - உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் ஆசிரியர் தன்மைக்கு அருகதை உடையவனாவான். நம் ஆசிரியர்களுக்கு - அதாவது, ‘வைஸ்சான்ஸ்லர்’, ‘டைரக்டன் ஆஃப் எஜுகேஷன்’, ‘பிரின்ஸ் பால்கள்’ முதற்கொண்டு ‘செகண்டரி கிரேட் டீச்சர்’, ‘எஜுகேஷன் மினிஸ்டர்’ என்பவர்கள் வரை யாருக்காவது அத்தன்மை உண்டா? சிலருக்குக் கொஞ்சம் உண்டு என்றாலும் - அதை அவர்கள் கல்வித் துறையில் பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா?

ஆகவேதான், மக்கள் அறிவு வளர்ச்சியைக் கடவுள், மதம் ஆகியவை கெடுத்ததானது ஒரு பகுதி என்றும், ‘கல்வி’ கெடுத்தது மற்ற மீதிப் பகுதி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

அறிவின் தன்மை இத்தகையது என்றால், இனி மானத்தின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், அடியோடு மானம் கெட்டவனே சிறந்த மனிதனாகப் பாவிக்கும் படியான அளவுக்கு மானமற்ற தன்மை மதிப்புப் பெற்று விட்டது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும் ஒழுக்கக்கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதினாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு - காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக மனிதன் நிலைமை ஆகிவிட்டது. நம் நாட்டில் மக்களிடத்தில் மான உணர்ச்சியைத் தூண்ட சாதனமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு நம் சமுதாய வாழ்வு அமைப்பும், பொருளாதார அமைப்பும் பெரும் காரணமாக இருந்தாலும், இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேம்பட்ட காரணமாக இருந்துவருகிறது.

சமுதாயத் துறையில், மேல்பிறப்பு - கீழ்ப்பிறப்பு என மக்களைப் பிரித்து அமைத்த பிறகு, கீழ்ப்பிறப்பில் பட்ட மக்களுக்குமான உணர்ச்சி என்பது செயற்கையால் போலியாகத் தோன்றி மறையுமே அல்லாது இயற்கையான உணர்ச்சி அச்சமுதாயதுக்கு எப்படி இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் அதோடு கூடவே ‘குச்சிக்கார தாசி பிழைப்பு’ - அதற்கொரு சமுதாயம்; துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்துறை - அதற்கொடு கூட்டம்; பொய்யும் பித்தலாட்டமும் மனதறிந்து பயன்படுத்தித் தொழில் செய்து வாழும் வக்கீல் துறை - அதற்குப் பெரும் ஸ்தாபனம் ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில் மரியாதையும் உயர் வாழ்வும் ஆகிய தன்மைகளும் இருந்து வருமானால், மக்களுக்கு மானத்தைப் பற்றிய, ஒழுக்கத்தைப் பற்றிய கவலை எதற்காக வரவேண்டும்?

ஒழுக்ககேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது.

அறிவுள்ளவன், இயற்கைவாதியாய் இருப்பான்; இயற்கைவாதி, அறிவாளியாய் இருப்பான். ஒழுக்கம் என்றால் மானம் என்றும் -ஒழுக்கமுடையவன் என்றால் மானி என்றும் கொள்ளலாம். அதுபோல், அறிவு என்றால் இயற்கை என்றும் அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன் என்றும் கொள்ளலாம்.

ஆகவே, மனித சமுதாயத்துக்கு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைக்கும் மனிதன் ஓர் உயர்ந்த பிறவி என்பதற்கும் அத்தியாவசியமானவை அறிவும் மானம் ஆம் என்பதும், இவை இரண்டும் இன்று மக்களிடையில் இல்லாமல் போய்விட்டன என்பதும், அதற்கு முக்கியக் காரணம் கடவுளும் மதமும் கல்வியும் சமுதாய - பொருளாதார அரசியல் அமைப்பும் ஆம் என்பதும் எனது அபிப்பிராயமாகும்.

(‘விடுதலை’ - தலையங்கம், 2.1.1950)

http://www.keetru.com/rebel/periyar/56.php

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
(‘விடுதலை’ - 14-1-1972)
http://www.keetru.com/rebel/periyar/57.php

இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் சட்டத்தில் இருந்து வருகின்றன அவை: 1. "பிராமண' சாதி 2. "சூத்திர' சாதி. அதாவது மேல் சாதி; கீழ் சாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம், அந்த இரு ஜாதிகளின் அதாவது "பிராமண ஜாதி', "சூத்திர ஜாதி' என்பதன் உட்பிவுகள் தானே அல்லாமல் தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. எனவே, இன்று ஒழிக்கப்பட வேண்டிய ஜாதிகள், மேற்கண்ட"பிராமணன்' "சூத்திரன்' எனப்பட்ட ஜாதிகளே ஆகும்.

அதாவது, மொத்த ஜனத் தொகையில் 100க்கு 3 பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100க்கு 75க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணர்' 100க்கு 50க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, 100க்கு 97 விகிதம் உள்ள "சூத்திரர்'கள் இத்துறைகளில் தலை எடுக்கவிடாமல் அழுத்தி வரப்படுகிறது. இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக் கேட்டைப் பெருமளவு ஒழிக்க முடியும்.

இதற்கு அரசாங்க, அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால், ஒரே ஒரு காயம்தான் உண்டு. அதாவது, இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, ஜாதிவாரி உரிமை அளித்து, அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காயம் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுக்கோ போவதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது.

""இந்தக் காயங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ' என்று தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: "தம்பீ! ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியம், முதலாவதுமான காரியம் என்று நீ நினைக்கிறாயா?'' என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்' என்றால், "அதற்காக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜு (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?' என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும். "அதற்காக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன், பார்லிமெண்டுக்குப் போனேன்'' என்று நீ சொல்லக்கூடும்.

சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா? ""கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை'' என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல. ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. பிறகு, இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி மறந்தே விட்டாய் அவ்வளவுதான்.

"அந்தப் பேச்சு' என்பதற்கு ஒரு கதை உண்டு. அதாவது: ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?'' என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன், ""நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது தெரியுமா?'' என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன், ""கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்'' என்ற மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்று கொண்டு சுருட்டைப் பற்ற வைக்க, ஒரு பெட்டி நெருப்புக் குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான்.

சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப் பெட்டி நெருப்புக் குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே இதுதான் யோக்கியமா? என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்குமேல் ஆத்திரம் கோபம் வந்து, ""அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தப் பேச்சே இங்குப் பேசக்கூடாது'' என்று சொன்னேனே; அப்புறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?'' என்று கேட்டான்.

உடனே சுருட்டு வாங்கினவன், ""சரி! சரி! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போடவேண்டும் பழைய செருப்பாலே'' என்று சொல்லிக் கொண்டு, குளத்துக்குச் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி, அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு, தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்கும் போனான்'' என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) "உனக்குப் புத்தி இல்லையா?'' என்கிறான்.

.ஆகவே, என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை. ஆனால், முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு! இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து; முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காயங்களை உடல் பொருள் "ஆவி'யைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.

(13.12.1960 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/58.php

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

('பகுத்தறிவு’ - 1938)

http://www.keetru.com/rebel/periyar/59.php

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

http://www.keetru.com/rebel/periyar/61.php

நமது கட்சி ஓர் அலாதியான தன்மை கொண்டதாகும்; நம் கட்சியைப் போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம்! நம்மைத்தவிர மற்ற எவரும், எந்தக் கட்சியாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத்தக்க நிலையில் இருக்கிறோம்.

உதாரணமாக, நாம் ஒரு கட்சியார்தான் தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம்; தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நம் கட்சியார் தான் சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப் பைத்தியங்கள், சாதித் தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளைக் கண்டித்துப் பேசுகிறோம். அனேகத்தை ‘கூடவே கூடாது’ என்று மறுத்தும், இழித்தும் பேசி பிரச்சாரம் செய்து, மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம்.

இதை, இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஓர் அரசியலுக்கும், நல்ல ஓர் அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், நல்வாழ்வுக்கும் இந்தக் கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல், பொருளாதார இயல், சமய - சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள்? நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால், நாம் பொறுப்பை உணருகிறோம்; நம் மக்களை அவர்கள் விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள் தாம் படிக்கட்டு - ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில், அதாவது சாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத் தத்துவக் கொள்கை, மததர்மம், சாதி, சாதி வகுப்பு பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசீயம் முதலியவைகளேயாகும். ஆதலால், அடிப்படையாக - பயனுள்ளதான இந்த ஆக்க வேலை செய்ய முயற்சிக்கிறோம். இந்த நமது முயற்சிக்கு, இதனால் பாதிக்கப்படும் எவரும் எதிரிகளாய்த்தான் இருப்பார்கள். இவர்கள் யாவரும் நமக்கு எதிரிகள் என்றால் - இவர்களது கூட்டுறவால், ஆதரவால், ஒப்பந்தத்தால் அரசு செலுத்தி இவர்களுக்குப் பங்களிக்கும் அரசாங்கமும் நமக்கு எதிரியாய் இருப்பதில் அதிசயமென்ன இருக்க முடியும்?

இப்படி எல்லாம் இருந்தும், நாம் நம் முயற்சியில் மேலும் மேலும் ஊக்கம் ஏற்படத்தக்க நிலையில் இருக்கிறோம். நம் கொள்கைகள், திட்டங்கள் எல்லாம் இன்று மக்கள் சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகி வருகின்றன.

(சென்னையில், 11-10-1945-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’, 27-10-1945)

திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை, ‘திராவிடர்’ என்றும்; ‘இந்தியா’ ‘இந்தியர்’ ‘இந்து’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்றும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள், இதிகாசங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ்வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம். நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ‘இந்து’ என்பதாகும்.

இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவற்றில்கூட ‘இந்தியா’ என்பதோ ‘இந்து’ என்பதோ, ‘இந்தியர்’ என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் ‘திராவிடர்’ என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம்; அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும், அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக் கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே ‘இந்து’ என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா, இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.

‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்? நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

- லால்குடியில், 23-5-1944-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 3-6-1944
http://www.keetru.com/rebel/periyar/60.php

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

http://www.keetru.com/rebel/periyar/63.php

சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்? ‘பிராமணன்', ‘சூத்திரன்', ‘பறையன்', ‘சண்டாளன்' என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல, மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன. பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல், கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது, இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி, இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகம்மதியர், பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து, யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும், இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.

ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல், தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில், ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், நல்லவர்களும்கூட, பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான ‘கிருஷ்ணன் சம்பாஷனை' என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க, இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன், பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். ‘‘நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன்'' என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன், சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

சாதிப் பிரிவுக்கும், அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்தரத்துக்கும், ஒற்றுமையின்மைக்கும், இந்து மதம், மநுதரும சாஸ்திரம், பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ, அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான். காங்கிரசுக்காரர்களே, பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ, கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை. நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள்.

நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு (அ) தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும், அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது, கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை, ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும், அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது, முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும், வைணவன்களும் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.

ஆனால், தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும், சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால், காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.

நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது, ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும், அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு, நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

'பெரியார் களஞ்சியம்': ஜாதி - தீண்டாமை பாகம் 11; பக்கம்: 35

http://www.keetru.com/rebel/periyar/62.php

தமிழர்கள் (திராவிடர்கள்) ஆகிய நமக்குள்ள ஆதரவற்ற நிலையையும், மானமற்ற நிலையையும், இழிவு நிலையையும் நிரந்தரப்படுத்தி சிறிதும் மாற்றம் அடைய முடியாமல் பாதுகாப்பதற்கு கோயில், மதம், மத நடப்புகளின் நிர்ப்பந்தம் ஆகியவை, எப்படி இருக்கின்றனவோ, அதுபோலவே இன்றைய நிலைமையில் இந்த அய்க்கோர்ட்டுகளும், வக்கீல்களும் இருந்து வருகின்றன. இவை இதுபோல் இருந்து வரும் வரையிலும், நம் நிலை ஒரு சிறிதும் மாறப்போவதில்லை என்பதோடு, நம் இழிநிலை வளர்ந்து கொண்டே வருகிறது! அய்க்கோர்ட் நீதிமன்றங்கள் - வக்கீல்கள் இந்த ஸ்தாபனங்கள் நம் பரம்பரை எதிரிகளான பார்ப்பனர் கையிலும், பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்து வருவதால் நம்முடைய முயற்சிகள் எதுவும் பலன் தராமலே போகின்றன. ஆகையால் இந்த நிலையை மாற்றவேண்டும். முடியாவிட்டால் அழிக்க வேண்டும்.

சட்டம் நீதிக்கு ஏற்பட்டதல்ல. ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்டது. ஆதலால் அதில் பரிகாரத்துக்கு மார்க்கம் காண முடியாது. நீண்ட நாளாகப் பார்ப்பன ஆதிக்கம், ஏகபோகமாய் எல்லாத் துறைகளிலும் இருந்து வந்ததனால் அவர்களது ஏகபோக உரிமைக்கு ஏற்றபடி சட்டம் செய்துகொண்டு அச்சட்டத்தைக் காட்டி நம்மைப் பார்ப்பனர்கள் இதுவரை அழுத்தியே வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், இன்னமும் அழுத்தவே துணிகிறார்கள் சட்டப்படி.

காலஞ்சென்ற பட்டேல் சொன்னார் “சட்டம் ஒரு கழுதை” என்று. அதாவது முன்னாலே போகிறவன் எப்போதும் தப்பித்துக் கொள்வான். பின்னாலே போகிறவனுக்குத்தான் உதை விழுந்து கொண்டிருக்கும். அதைப் பயன்படுத்தும் முறையிருக்கிறதே அது நமக்கு இன்னமும் கேடு உண்டாகிறத் தன்மையில்தான் உள்ளது.
சட்டத்தை எழுதினவன் பார்ப்பான். அந்த சட்டத்தை அமல் நடத்துகிறவன் பார்ப்பான். நிர்வாகத் துறையில், நீதித்துறையில் பார்ப்பனன் ஆதிக்கமே இருப்பதால் அது நமக்கு மேலும் மேலும் கேட்டையே அளித்து வருகிறது. கேடாகவே இருக்கிறது. அந்த வாய்ப்பால் நம் ஆட்கள் இரண்டொருவர் இருந்தாலும்கூட, அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவேதான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் சுயநல வாழ்வு கெட்டுவிடும். அதனால் நம்மவர்களும் வாலை அடக்கிக்கொண்டு பார்ப்பனர்களுக்கு ஏற்றபடி நடந்து விடுகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் நமக்கு என்ன கேடு வருவதானாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்டை ஒழிக்க நாம் துணிந்து பாடுபட வேண்டியிருக்கிறது.

முதலாவது பார்ப்பானிடத்தில் பார்ப்பன இனக் கட்டுப்பாடு, இன உணர்ச்சி இருக்கிறது. நம்மிடத்திலே அது இல்லை. நம்மில் ஒவ்வொருவனும் அவனவன் குடும்பம், சொத்து, வருமானம், பதவி இதைப் பற்றிக் கவலைகொண்டு அலைவதைத்தவிர, நம் இன நலத்தில் லட்சியம் இல்லாமல் இருக்கிறான். இதை தெரிந்துதான், பார்ப்பான் எது செய்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, நம்மை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே கருதிக் கொண்டு துணிந்து வேலை செய்கிறார்கள். அதை எதிர்க்க நம் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவர்களால் இது மாதிரி காரியங்களில் பிரவேசிக்கிறது என்பது ரொம்ப கடினமான காரியமாகும்.

அய்க்கோர்ட் ஜட்ஜு என்றால், ரொம்பப் பெரிய மனுஷர்கள் என்று கருதுவதுண்டு. வெள்ளைக்காரன் இதனால்தான் ஜட்ஜை கடவுளுக்குச் சமமாக்கி (My lord) என்று அழைக்கிறான். நீதிபரிபாலனம் செய்வதில் “கடவுளுக்கு”ச் சமமானவர்கள் என்ற கருத்தில் அவன் வைத்திருந்தான். அந்த மாதிரி இடத்தில் எப்படி இருக்க வேண்டும்? காலித்தனமான கோர்ட்டுக்குத் தேவை இல்லாத வகையில் எல்லாம், ரொம்பக் காலித்தனமாக நடந்து கோர்ட்டின் பெருமையைக் கெடுத்து வருகிறார்கள். கோர்ட்டு இப்படியே இருக்குமானால் நம் கதி என்னாவது?

இந்த மாதிரியான பார்ப்பனர்களிடமல்லவா நம் தலையெழுத்து இருந்து வருகிறது? அதுவும் பார்ப்பானுக்கும் நமக்கும் எல்லாத் துறையிலும் பெரிய போராட்டம் நடக்கிற இந்த நேரத்திலே இப்படி என்றால், நாம் எப்படி இதை சகித்துக் கொள்ள முடியும்? அதிலும் நம்மவர்கள் மந்திரிகளாக வந்து நம் மக்களுக்கு நன்மை செய்து - பொது ஜன செல்வாக்குடன் மக்களிடம் நல்ல மதிப்போடு இருக்கிறார்கள் என்றவுடன், மறுபடியும் எங்கு இவர்கள் பதவிக்கு வந்து விடுவார்களோ என்று கருதி, அதை ஒழித்துக் கட்டுவதற்காக இப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பார்ப்பன வக்கீல்கள், நீதிபதிகள் செய்கிறார்கள் என்கிறபோது, நம்மை மீறி அடக்க முடியாத ஆத்திரம் வருகிறது. ஆகவேதான் ஆத்திரம் தீரப் பேசிவிட்டு இரண்டிலொன்று பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னால் டெல்லியில் ரயில்வே மந்திரி திரு.ஜகஜீவன்ராம் ரெயில்வே இலாகாவில் உத்தியோகத்திற்கு நியமனம் செய்வதில் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி ஒதுக்கப்படுகிறதோ, அதே தன்மையில் அவர்களுக்குப் புரோமோஷன் கொடுப்பதிலும் கூட அதே சலுகை காட்டப்படவேண்டும் என்று, இந்தியா பூராவுக்கும் ஒரு உத்தரவு போட்டார். நம்நாட்டுப் பார்ப்பனர் (திரு.ரெங்காச்சாரி) என்பவர் சென்னை அய்க்கோட்டில் கேசு போடச் செய்து அதை ஒரு பார்ப்பன ஜட்ஜ் விசாரித்து அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு எழுதி விட்டார். அதே மாதிரி இந்த ஊரில், கலெக்டராக ரொம்ப நல்ல பேருடன் இருந்த திரு.மலையப்பனைப் பற்றி எப்படி இரண்டு பார்ப்பன நீதிபதிகளும் தாறுமாறாக எழுதி, அவர் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று நடை-பெற்ற திரு.அழகிரிசாமி (சர்க்கார் வக்கீல்) கேசிலே திரு.பாலகிருஷ்ணய்யர், திரு.ஜெகதீச அய்யர் தீர்ப்பு எழுதியது பற்றித்தான் இப்போது விவகாரம்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் பொம்மையை உடைச்சதுக்காக ஒரு ஆள் என்மீது கேசு போட்டார் அதுமுல்லே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப்பிறகு அப்பீலில்! சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு, அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதிவிட்டானே! சாதாரணமாக கீழே உள்ள கோர்ட்டிலே இப்படி இரண்டு, அப்படி இரண்டு என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இப்படி சுப்ரீம் கோர்ட்டிலே தீர்ப்புச் சொல்லுவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கமுடியும்? கீழே மூணு 4 கோர்ட்டிலே எழுதிய தீர்ப்பு என்னாவது? இந்தத் தீர்ப்பு எதுக்குப் பயன்படும்? நம்மமாதிரி காரியங்களைப் பண்ணுகிறவர்களை அடக்கத்தான் உதவுமே தவிர, பிள்ளையார் பொம்மையை உடைக்கிறவனையோ, சரஸ்வதி படத்தைக் கிழக்கிறவனையோ ஜெயிலில் போடுவதற்காக உதவும்? இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது. அதனால் நீதிமுறைக்கேட்டிற்கு இருக்கிறது காரணம் அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

http://www.keetru.com/rebel/periyar/64.php

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை

 

http://www.keetru.com/rebel/periyar/65.php

எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக் குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக - ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது 'கடவுள், மதம்' மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தை யும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல; நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி - செய்கையாலும், காட்டிக் கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்லவண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, 'கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி' நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா? - என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து - அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், 'கடவுளாவது வெங்காயமாவது' என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில் 'எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும், மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.

கடவுள், மதம், சாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் காரணமாகும்.'

இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு 'நான் ஏன் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று' என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகின்றேன்.

அதாவது, 'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய - சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு - 230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து - அதன் அளவுக்குமேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.
இந்த நிலையில், நான் நமது மக்களை அடி பணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும். மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஒரு மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன். இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.

93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971

http://www.keetru.com/rebel/periyar/66.php

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக - இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே இலட்சியமுடையவர் - என்கிற நிலையை அடையவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமானபிறகு தான் அவர்கள் முன்னேறவும், விடுதலை பெற்றுச் சுதந்திரமடையவும் முடிந்தது.

ஆனால், நமது இந்தியாவைப் பற்றிப் பேசப் புறப்படுவோமானால், இது ஒரு சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே இலட்சியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், இந்தியாவானது பல மதங்களாய், பல சாதிகளாய் இருப்பதோடு, மொழிகளிலும் நடை, உடை, பாவனைகளிலும் பலப்பல மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசங்கள் என்று தொலைவது? மக்கள் எந்தக் காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி, ஒரே இட்சியம் கொள்ளுவது என்பவைகளை நினைத்தால், மனம் ஓடிய வேண்டியிருக்கிறதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை. என்றாலும், மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது, - அதாவது மனிதனுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற்கில்லாமல் செய்துவிட்டால் - பிறகு ஒவ்வொருவரும் தன்தன் மதம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவைகளைக் காட்டியபின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும், அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமை உணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.

ஆதலால், ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்தவேண்டியது முக்கியமானதாகும்.

உதாரணமாக, மற்ற நாட்டினரான சைனாக்காரரையோ, ஜப்பான்காரரையோ எடுத்துக் கொண்டால், அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும் உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.

இந்த உண்மையையும் இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால்பாட்சா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடை அணிந்து ஒரு சாயலாகவே இருக்கவேண்டுமென்று உத்தரவிட்டார். அதன் மூலம், துருக்கி நாடு சிறியதாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசு என்று மதிக்கும்படி செய்துகொண்டது. இதைப் பின்பற்றியே தான் ஆப்கானிஸ்தானமும் முயல்கின்றது.

நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும் சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்யவேண்டியது அவசியம். இந்த எண்ணம் நமக்கும் நமது நண்பர்களில் பலருக்கும் வெகுநாளாகவே இருந்து வந்தாலும், என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத்தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்படுத்தப்பட்டுவிட்டது. அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும்படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனையும் இருந்து வந்தது.

சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ, கவலையோ நம்மவர்களுக்குச் சிறிதும் கிடையாதாதலினாலும், அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெருமைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாய் இருப்பதாக மக்கள் கருதி வந்ததாலும், இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.

மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும், அதை ஒரேயடியாய் அய்ரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் - அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும், அதை எல்லாக் கண்டங்களிலுள்ள வெள்ளைக்காரரும் பின்பற்றுவதையும் பார்த்தாலே போதுமானதாகும்.

அவசியம் என்றோ, கட்டுப்பாடு என்றோ அவர்களுக்குத் தோன்றிவிடுமானால், எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைபோல் பாவித்து, எல்லோரும் உடனே கீழ்ப்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப்பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகின்றோம்.

அதாவது, அய்ரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டதில் சில உயர் குடும்பங்கள் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும், ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளாததில் சற்று அதிருப்தியுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம். இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனை இளவரசியை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது.

ஆனால், நம் நாட்டிலோ எப்பேர்ப்பட் மாறுதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும் இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழைய வழக்கம் என்னும் ‘பேய்க்கு’ - அதாவது மூடபயத்திற்கு அடிமையாகி, உடனே அதைக் குற்றம் சொல்லவும், உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர்ப் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு, பிரிந்து, துவஷேங்கொண்டு, அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று கருதி, பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றித் துணிந்து தெரிவிக்கிறேன்.

(‘குடி அரசு’ - தலையங்கம், 9-11-1930)
http://www.keetru.com/rebel/periyar/67.php

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியங்கள் என்ன?

 

மொத்த விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பாக பரப்புக்கு மேல் ஜமீன்முறை ஆட்சியில் இருக்கும் இந்தச் சேலம் ஜில்லாவில், முதல் முதலாக இன்று - இங்கு, ஜமீன்தாரர் அல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது, எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம், இம்மாதிரியாகப் பல அல்லாதார்கள் மாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கிறது. இன்னும் இதுபோலவே பல மாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகாநாடுகள், அடிக்கடி கூட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

உதாரணமாக, லேவா தேவிக்காரர்கள் அல்லாதார் மாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை அல்லாதார் மாநாடு, வீடுகளின் சொந்தக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு, மேல் சாதிக்காரர் அல்லாதார் மாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மாநாடு என்பன போன்ற பல மாநாடுகள் கூட்டி, இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி, அவற்றை ஒழிக்கச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்.

உலகில் எந்தெந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவத்திற்குத் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக் கட்டைகளும் இருக்கின்றனவோ, இவை எல்லாம் அழிந்தொழிந்து என்றும் தலை தூக்காமலும் இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமுதாயத்திற்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால், தத்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல் வகுப்பார் இல்லாவிட்டால், கீழ் வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி "அல்லாதார்கள்” மாநாடு கூட்ட வேண்டும் என்கிறோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டினோம் என்றால், இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு முன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது. அதற்காகவே நம் இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபச் சங்கங்களும், புதிய முறையில் தோற்றுவித்தும், பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒருவாறு பாமர மக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலை செய்ததன் பயனாய் ஓர் அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள், அதற்குப் பதிலாக அது போன்ற கொடுமையும் மோசமான ஜமீன்தார் ஆதிக்கம் தலை தூக்கித் தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல், ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்து வருகின்றன.

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்குத் தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர்களும் ஆவார்கள். இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்து கவனித்தால், பெரும்பாலும் ஒவ்வொருவருடைய யோக்கியதையும் விளங்கும்.

ஏழைகளும், விவசாயக் கூலிக்காரர்களும் தங்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தினம் 8 மணி முதல் 15 மணி வரையில் வியர்வையைப் பிழிந்து சொட்டு சொட்டாய்ச் சேர்த்த ரத்தத்திற்குச் சமமான செல்வத்தை, ஒரு கஷ்டம் ஒரு விவரம் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள், சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற, வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றிப் பாழாக்குவது என்றால், இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? இவர்களின் தன்மையையும் ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம், சுயமரியாதையை உணர்ந்த சமூகமாகுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மேல் ஜாதி கீழ் ஜாதி முறை கூடாது என்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ, அது போலவேதான் ஜமீன்தாரன் - குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாது என்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்.

(27.8.1933 அன்று சேலத்தில் ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டில் ஆற்றிய உரை)

 

http://www.keetru.com/rebel/periyar/68.php

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

உலகத்திலேயே நாகரிகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் நம்நாடே சுகாதார விஷயத்தில் மிகவும் கேவலமாக இருந்து வருகிறது. இது வெளிநாடு சென்று வந்தவர்களுக்குத் தெரியும்.

வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும் அனுஷ்டிப்பு முறைகளும் நேர் தலைகீழாக இருக்கின்றன. அதாவது, நமது நாட்டுச் சுகாதாரமெல்லாம் - ஒரு சாதி மனிதனை மற்றொரு சாதி மனிதன் தொட்டால் தோஷம்; பார்த்தால் தோஷம்; நிழல் பட்டாலே தோஷம்; தெருவில் நடந்தால் தோஷம் என்கின்ற முறையிலிருக்கின்றதே தவிர - மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது; துர்நாற்றம் வீசக்கூடாது; கெட்டுப்போன பதார்த்தமாக இருக்கக் கூடாது என்கின்ற கவலைகள் சுத்தமாய்க் கிடையாது.

இதன் காரணமெல்லாம் சுகாதார அறிவு இல்லாததேயாகும். ஒரு மனிதன் பணக்காரனாக வேண்டும்; பெரிய உத்தியோகஸ்தனாக வேண்டும்; பெரிய பண்டிதனாக வேண்டும்; பெருமையுடையவனாக வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் அதிகக் கவலை வைத்திருக்கிறானே ஒழிய - நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும்; சுகஜீவியாக இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் கவலைப் படுவதில்லை.

மேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற்கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும், சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தமது பொருளாதார நிலைமையென்றும் கருதி, அதற்கே தமது கவனத்தில் பெரும்பாகத்தைச் செலவு செய்கிறார்கள். அதனாலேயே மேல்நாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாகவும், சுகசரீரியாகவும், அதிகப் புத்திக்கூர்மையும் +69மனோஉறுதியும் உடையவனாகவும், நம்மைவிட இரட்டிப்பு வயது ஜீவியாகவுமிருந்து வருகிறான்.

நமது மக்களின் சராசரி வயது 24; வெள்ளைக்காரரின் சராசரி வயது 45. இதற்குக் காரணம் என்ன? சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் உண்டு. நமக்குக் ‘காலரா’வந்தால் ‘ஓங்காளியம்மன்’குற்றமென்று பொங்கல் வைக்கவும்; வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மன் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம். வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதல் செய்வோம். நரம்புச் சிலந்தி வந்தால் சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படி என்றால், குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ‘பாலாரிஷ்டம்’என்போம்; கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது! ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது.

நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாய்க் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்; பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூசுகள்.

- (ஈரோட்டில், 27-8-1930-ல் சொற்பொழிவு - ‘குடிஅரசு’, 21-9-1930)

--------------------------------------------------------------------------------

தென் ஆப்பிரிக்கா தினம்!

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும் சென்ற 11-ந் தேதி இந்தியாவெங்கும் பொதுத் தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதாரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களுடைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதாரென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார், இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா? இதை அறிந்த தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார்களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால், வீணாக ஒரு நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

(‘குடிஅரசு’, தலையங்கம் - 18-10-1925)
http://www.keetru.com/rebel/periyar/69.php

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு; மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

- ‘பகுத்தறிவு’, 1936

http://www.keetru.com/rebel/periyar/70.php

தாய்மார்களே! தோழர்களே!

சாதாரணமாக, மனிதருக்குப் பெயர் என்பது ஒவ்வொரு நபருக்கும், அந்தந்த நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும். மனித சமுதாயத்தில் இம்மாதிரியான ஒரு குறியீட்டுச் சொல் அவரவர்களுக்கு அடையாளஞ் சொல்லக்கூடிய சொல் என்பது சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.

பெயர் சூட்டுவதில்....சாதாரணமாக, மனிதர்களுக்கு ஒரு குறியீடு என்கிற தன்மையில் சூட்டப்படுகிற பெயர் என்கிற போதிலும், பெயர் சூட்டுவது என்பதில் ஒரு கொள்கை, தத்துவம் உள்ளே இருந்து வந்திருக்கிறது.

முதலாவது, சாதாரணமாக மக்களுக்குள் இன்றைய தினம் இருந்துவரும் பெயர்ளைப் பார்த்தால் பெரும்பாலும் மதத்தின் அடிப்படையிலேயே இருந்து வருகின்றன. சாதாரணமாக, உலகத்தில் மதத்திற்குச் செல்வாக்கு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மதத்தாருக்கும் அந்தந்த மதத்தின் பெயரால் அந்தந்த மதத் தத்துவம் மதக் குறிப்பின் படியாகப் பெயர்கள் இருந்து வருகின்றன.

கிறித்தவர்களுக்கு கிறித்துவ மத சம்பந்தமான பெயர்களும், முஸ்லீம்களுக்கு முஸ்லிம் மார்க்க படியான பெயர்களும், பவுத்தர்களுக்கு பவுத்த தன்மைப்படியான பெயர்களும், இந்துக்கள் என்பவர்களுக்கு இந்துமதம் என்பவைகளின் சாஸ்திர சம்பிரதாயப்படியும் பெயர்கள் இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், மத ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் மதத்தின் தன்மைப்படி பெயர் வைத்துக்கொள்வது என்பது புண்ணியம், பெருமைக்கு உகந்தது, உயர்ந்தது என்கிறதான கருத்தும் மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டதுதான் ஆகும்.

நம்மைப் பொறுத்தவரையில் - தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றவையாக, மதத்திற்கு முற்பட்டு வெறும் பெயரீட்டுக் குறிச்சொல் என்கிற முறையில்தான் இருந்து வந்திருக்கின்றன. மதச் சம்பிரதாயத்தின் அடிப்படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்ததில்லை. தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்; இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் நூல்களில் - 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத, கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை.

நாளாக ஆக மத ஆதிக்கம் வந்து குவிந்துவிட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மத ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்களைப் புகுத்திவிட்டார்கள்.

அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்துவிட்டது. அதுவும் இந்த மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாகப் புகுந்ததெல்லாம் பெண்களிடத்தில்தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர், மத சம்பந்தமான பெயர் என்று வந்து புகுந்துவிட்டது.

இந்தப்படியான, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு, மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக் கொண்டார்கள்.

நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம். இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வருணாசிரமமுறை இருந்து வந்திருக்கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவதும் - அதாவது மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் கடவுள், மத சம்பந்தமான பெயர்களை மேல்சாதிக்காரர்கள் வைத்துக் கொள்வது என்றும், அந்த மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களைக் கீழ்ச்சாதி மக்கள் என்போர் - அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது, வைத்துக் கொள்வது பாவம் எனவும் கருதப்பட்டது. சாதாரணமாக, இந்த ராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற பெயர்கள் மேல் சாதிக்காரர்கள் பெயராகவும்; கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாவாயி, கருப்பாயி என்பன போன்ற பெயர்கள் கீழ்ச்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.

வரவர மதத்திற்கும் மதத் தன்மைக்கும், எதிர்ப்பும் - தங்களுடைய இழிவைப் பற்றியதுமான உணர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில் எல்லோரும் எல்லாப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றதான நிலைமை வந்தது.

சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால் மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள், பெயர் சொல்லிக் கூப்பிடும் போது இழிசாதி மக்களை, ‘சாமி!’ என்றும் ‘அப்பன்!’ என்றும் கூப்பிடவேண்டியிருக்கிறது என்பதால் - அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால் அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த ‘சாமி’ ‘அப்பன்’ என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ‘ராமா’, ‘கந்தா’ என்றுதான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மதசாஸ்திர சம்பிரதாயத்தின் பேராலும் அவற்றை வகுத்த வருணாசிரம மேல் - கீழ்சாதி முறைப்பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவைகளுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும், நின்று நிலவி வருகின்றன.

இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்றுதான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம், அது மிக ஆபாசமான அர்த்தமுடையதாக இருக்கிறதே என்று கவலைப்பட மாட்டார்கள்.

சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சிதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாகவெல்லாம் பெயர் வைக்கிறார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு ஆபாசமும் அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன! ஆனால், மக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்மாதிரியான பெயர்களையே ஏற்றுக் கொண்டும் சூட்டிக் கொண்டும் ஏன் இருக்கிறார்கள் என்றால், நான் முன்னே சொன்னது போல், இந்தப்படியான பெயர்கள் என்பவைகள் கடவுள், மத சாஸ்திரங்களின் பேரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்பதால் தான்.

இப்படியாக மத, சாஸ்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர் முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்குமான உணர்ச்சி யும், இந்தக் கடவுள், மத, சாஸ்திரங்கள் என்பவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இழிசாதி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை - கடவுள், மத, சாஸ்திரத் துறையிலே இழிசாதி மக்கள்; பொருளாதாரத் துறையிலே ஏழை மக்கள்; அழிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலை மையை உணர்ந்து - மக்கள் தங்கள் இழிவையும் ஏழ்மையையும் அடிமையையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி, ஏற்பட்டு வருவதால் இந்தப்படியான தங்கள் இழிவுக்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமான எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றனவோ அந்த அமைப்பு முறைகளை நம்முடைய விடுதலையைக் கோரி மாற்ற வேண்டும்; ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில்தான் திருமணத் துறை, சாதித்துறை, கிரஹப்பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத - இலக்கியத்துறை போன்ற எல்லாத்துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி, கிளர்ச்சி நடத்துவதுபோல இந்தப் பெயர்த் துறையிலும் இது மாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்தப்படுகிறது.

இதற்குமுன் மக்களிடத்தில் இவ்வளவு உணர்ச்சி இருந்ததில்லை. வர, வர இப்போது மக்களிடத்தில் மான உணர்ச்சியும், பகுத்தறிவும் பெரும் அளவுக்கு வளர்ந்து வருகிறது; பலருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தப்படியான உணர்ச்சி பெற்றவர்கள் செய்கிற காரியத்தில் எல்லாம் இம்மாதிரியான மாறுதல், அறிவுக்குப் பொருந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இன்றைக்கு ஏராளமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த மாதிரித் தன்மையில்தான் இந்தப் பெயர் சூட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் சூட்டப்படுகிற பெயர்கள் சாதாரணமாக மடமையான மதத்துக்கோ அறிவற்ற தன்மைக்கோ ஏற்றதாக இல்லாமல் பகுத்தறிவுத் தன்மைக்கேற்றதாகவே சூட்டப்படும்.

சாதாரணமாக, குழந்தைகள் பிறக்கும்போது இருந்தே இந்த மாதிரியான புதுமைப் பெயர் வைத்துவிட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்துவிடும். இப்போது என் பெயரையே எடுத்துக் கொள்ளுங்களேன். இது இந்துமதம் என்கிறதன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாததுதான். ஆனால், இந்தப் பெயராலே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்பரமாகி விட்டது; ‘யார் ராமசாமியா! அட! அதுதான் இந்த ஆள்!’ என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகி விட்டது! இனி என் பெயரை மாற்றுவது என்றால் - இது ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப்பெயரால், பெயர் வைக்கிற தத்துவத்தின்படி இன்னாருக்கு இந்தப் பெயர் என்று புரிந்துகொள்ளுகின்ற மாதிரியில் இருக்க முடியாது. ஆகவேதான் சொல்லுகிறேன், குழந்தையாய் இருக்கும்போதே புதுமைப்பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதாக. இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமையான, பகுத்தறிவான பெயராக - ஆரியமத, சாஸ்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்க வேண்டும்.

- உளுந்தூர் பேட்டையில், 15-3-1953-இல் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 24-3-1953

http://www.keetru.com/rebel/periyar/71.php

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறை வாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும்போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக்கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதிமுறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

http://www.keetru.com/rebel/periyar/72.php

அய்க்கோர்ட் நீதிப்போக்கே இவ்வாறு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற அடிப்படையே தப்பாக இருப்பதுதான். இந்த நீதிபதிகள் எல்லாம் யார்? அத்தனை பேரும் வக்கீலாக இருந்து, வக்கீல் தொழிலில் பயிற்சி பெற்றுத் தேறிவந்தவர்கள். வக்கீல் வேலை என்பது என்ன? பொய்யை மெய்யாக்கி, மெய்யைப் பொய்யாக்கி, பணம் கொடுத்தவனுக்கு அனுகூலமாகத் தனது மனசாட்சி அறியப் பித்தலாட்டமாக வாழ்க்கை நடத்துவதும், பணம், பெருமை, கெட்டிக்காரத்தனம் மூலம் சம்பாதிப்பதும்தானே வக்கீல் வேலை என்பது? அதில் தேர்ச்சி பெற்றவர்தானே ஜட்ஜ் ஆகிறார்.

எவனாவது நீதிமான், நேர்மைவான், அநியாயத்துக்கு - பொய்க்கு - பித்தலாட்டத்திற்கு பயப்படுகிறவர் இவர்களில் யாராவது ஜட்ஜாக இருந்தால்தானே உண்மை நீதி கிடைக்கும்? ஆனால், இங்கே இந்நிலையோடு கூடவே பார்ப்பான் கிட்டேயே எல்லா ஆதிக்கமும் இருந்து வருகின்றன. வக்கீலாக இருந்துதான் சப்மாஜிஸ்திரேட், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜு, அய்கோர்ட் ஜட்ஜு, சீப் ஜட்ஜு என்று வருகிறார்கள். காசு கொடுத்தவர்களுக்காக வாதாடி மனசாட்சியைப் பழக்கிய வக்கீல்கள் இருந்தால், இவர்கள் நீதிபதியாய் இருந்தாலும் தங்கள் சுயகுணம் எப்படி மாறும்? ஆதலால்தான் ஜட்ஜ்கள் அடிப்படையே மோசம் என்று நான் சொல்கிறேன். சட்டத்தில் இவர்களை யோக்கியர்கள் - நீதிபதிகள் என்று கருத வேண்டும் என்று எழுதிக் கொண்டால், இவர்களிடம் எளிதில் மாற்றம் காண முடியுமா?

இன்றைக்கு நாட்டில் உள்ள அரசியல்வாதிகளால் நடத்தப் பெற்று வரும் இன்றைய சர்க்காருக்கு, உண்மையிலேயே நாணயமான கவலை, நாட்டு மக்கள் நலத்திலே அக்கறை இருக்குமானால், ஏதோ போக்கிரித்தனமாகக் கள்ளுக்கடை கூடாது, சூதாடக் கூடாது, தேவடியாள் கூடாது என்று சட்டம் போடுவதை விட்டுவிட்டு, இந்த வக்கீல்கள் ஸ்தாபனத்தை (Bar council) அல்லவா முதலாவது ஒழிக்க வேண்டும்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் உடைச்சதுக்காக ஓர் ஆள் என் மீது வழக்குப் போட்டார். அது முதலிலே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு. அதற்குப் பிறகு அப்பீலில் மேல்முறையீட்டில் சப்ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு, அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளி விட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு. அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 34 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதி விட்டானே!

இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது; அதனால் நீதி முறைக்கேட்டிற்கு இடம் இருக்கிறது. காரணம், நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

இந்த நாட்டுக்கு (தமிழகத்துக்கு) நீதிபதிகளாக இருப்பவர்களை, எதற்காக டெல்லியில் இருக்கிற ‘பிரசிடெண்டு' நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்? நாம் எதற்காக டெல்லிக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? பொதுவான பாதுகாப்பு, படை - அதுக்காக அவருக்கு அதிகாரம் என்றாலாவது ஓரளவு அர்த்தம் இருக்க முடியும். இந்த அதிகாரங்களை அங்கே கொடுத்துவிட்டு, நாம் பார்ப்பானிடம் சிக்கிக் கொண்டு எதற்காக அவஸ்தைப்பட வேணும்? ரொம்பக் கஷ்டப்பட்டுப் பெரிய கிளர்ச்சி பண்ணினால்தானே, நாம் இதிலிருந்து விடுபட முடியும்.

ஓர் அய்க்கோர்ட் ஜட்ஜ் என்றால், அவர் தீர்ப்பு எழுதுவதன் மூலம்தான் நம்மவர்களுக்குக் கேடு விளைவிக்க முடியும் என்பது அல்ல; இன்னும் பல வழிகளில் செய்ய முடியும். கீழே இருக்கிற நீதித் துறையில் (Subordinate Judges) உள்ள அத்தனை அதிகாரிகள், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், சப்மாஜிஸ்திரேட் முதலிய பல உத்தியோகத்திலுள்ளவர்களின் வேலையைப் பற்றி விமர்சனம் செய்து தூக்கியும் விடலாம் - கீழே அழுத்தியும் விடமுடியும். தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக்கட்டி விடுவதற்கு முழுவாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஜட்ஜுக்கும் ஒவ்வொரு ஜில்லா என்று பிரித்துக் கொடுத்து, அந்த ஜில்லாவில் உள்ள நீதித் துறை அதிகாரிகளின் குடுமிகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பான் கையில் தமிழன் குடுமி சிக்கினால் அவ்வளவு தான். அவன் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட முடியும்.

பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இப்போது நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தின் ஓர் அம்சம்தான் இந்த நிகழ்ச்சிகள் என்பதை, நம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி இருந்தபோதிலும், நாம் இந்த மாதிரி நீதிப்போக்கின் கொடுமையைக் கண்டிக்காமல் இருந்துவிட முடியாது. ஆகவே விளைவு என்னவானாலும் சந்தோஷத்தோடு அதை ஏற்பது என்ற முடிவோடு, இந்தக் கேட்டைக் கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும்.

(23.10.1960 அன்று திருச்சியில் ஆற்றிய உரை)

http://www.keetru.com/rebel/periyar/73.php

பொதுவாக, ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) சீக்கிரத்தில் பிரிந்தால் நல்லது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை. மேலும், சென்னை மாகாணத்தில் 7ல் ஒரு பாகத்தினராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்லவதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் சீக்கிரம் பிரியட்டுமென்றே கருதி வந்தேன்; அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும், மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டுக் கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும், இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்றும் கருதுகிறேன்.

ஆனால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கு இருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்பு கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் 'சென்னை நாடு' என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்; எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது. இதைத் திருத்தத் தமிழ் நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை - கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

('தனி அரசு', அறிக்கை 25-10-1955)

பெரியோர்களே! தோழர்களே!

திராவிட நாடு எது? இதற்கு முன் - 1956-க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் 'திராவிட நாடு' என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை, மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது 'தமிழ்நாடு' என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம். வெள்ளையர் ஆண்ட காலத்தில் பார்ப்பனரின் அக்கிரமங்களைச் சொல்ல வழி இருந்தது. அவர்களும் நாம் சொல்வதைக் கேட்டுச் சிலவற்றைக் கவனித்து வந்தார்கள். இப்பொழுது நம் நாடு வடநாட்டிற்கு நிபந்தனையில்லா அடிமை நாடாகிவிட்டது. நாங்கள் வெள்ளையரை அப்பொழுதே கேட்டோம்: 'நாங்கள், உங்களை யுத்த காலத்தில் ஆதரித்தோம். பார்ப்பனரும் வடநாட்டுக்காரரும் உங்களை எதிர்த்தார்கள்; எங்கள் இனம் வேறு; அவர்கள் கலை, பழக்க வழக்கங்கள் வேறு' என்று சொன்னோம். அதற்கு வெள்ளைக்காரர்கள், 'நீங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைத்து இருந்தோம். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நாங்கள் சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் போய்விடப் போகிறோம்' என்று கூறி, முஸ்லிம்களுக்கு சிறு இராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர்.

இப்பொழுது நாம் வடநாட்டு ஆட்சியில் இருந்து பிரிந்து தனிநாடு ஆகவேண்டுமென்று கூச்சல் போடுகிறோம். தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக்கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும்பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது. நமக்கு நாடு கிடைத்து வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் இந்த வடநாட்டான் ஓடிவிடுவானே!

(திருவண்ணாமலையில், 19-8-1956-ல் சொற்பொழிவு, 'விடுதலை' 29-8-1956)

http://www.keetru.com/rebel/periyar/74.php

நம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.

இன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது? அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே!

இன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.

இதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே! அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது? இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.

இது மாத்திரமா? தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே! அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்? என்று கேட்கிறேன்.

சராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்!

மக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.

(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/75.php