Language Selection

பெரியார்

தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

நாம் தத்துவத்தையும், இயற்கையையும் வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை - தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும் கேள்வியாகவும்தான் இருக்கும் உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்லுகிறேன்.

ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால் அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது, அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது; வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டு பண்ணக்கூடியதாகும். இப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும் நிலைமையையும் நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும் அசூசையாகவும் அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

அதனால்தான் நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. யதார்த்தவாதி வெஹுஜன விரோதி’ என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. எது உண்மையோ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப் பெயர், மாற்றுக் குணம் பெற்று இருக்கிறது.

ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை விளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான், அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைப் பற்றி எடுத்துச் சொன்னதுபோல் நாஸ்திகன், மதத்துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர்வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிக மிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

என்றாலும் என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு - குறைகளுக்குச் சமாதானம் சொல்லும் முறையிலேயே என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவத்தைப் பற்றிச் சொல்ல முயலுகிறேன்.

ஏனெனில், இந்த இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைப்பற்றிப் பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்னை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில், இந்த மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி, அவைகளைப் பற்றிப் பேசலாம் என்றே நினைக்கிறேன்.

தோழர்களே, விஷயம் அற்பமானதாகவும் கருதப்படலாம், பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படியெனில், சாதாரண மக்களுக்குக் கடவுள், மதம், அரசியல் விஷயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும்; பெரிய அறிஞர்களுக்கு இந்த விஷயங்கள் அபாரமானதும் மிக நுணுக்கமாக அறிந்து பேசத் தகுந்ததுமாகும்.

ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வதன்மை உள்ளவர்களும் கலந்திருந்து கேட்பார்களானாலும் பாமர மக்கள் பாட்டின் வாசகங்களை சொற்களைப் பொறுத்த வரையில் கவனித்துவிட்டு, “இது ஏதோ சாமிமீதுப் பாடினான்,’’ “இது ஏதோ பெண்களைப் பற்றிப் பாடினான்’’ என்று அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் பாட்டுக் கச்சேரிக்குப் போன தன்மையை முடித்துக் கொள்ளுவர்.

அதே பாட்டுக்காரனிடம் பண்டிதத் தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலைஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள். ஆதலால் பாடுகிறவன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக்கொண்டு மிகக் கஷ்டத்தோடு கவலையோடு பாடவேண்டியிருக்கும். அதனால்தான் நான் பேச, எடுத்துக் கொண்ட விஷயங்கள் அலட்சியமானதும் அபாரமானதும் என்று சொன்னேன்.

தோழர்களே, தலைவர் கடவுளைக் குறிக்கும்போது, “எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவையும் செய்கிற தன்மை உள்ளவர்’’ என்று சொன்னார். அதோடு கூடவே தலைவர் மதத்தைப் பற்றிக் குறிக்கும்போது “மனிதனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தத்தை உண்டாக்குவதற்கு மதம்’’ என்று சொன்னார். இது மதபக்திக் கூட்டமல்ல; புராணப் பிரசங்க கூட்டமுமல்ல. ‘தத்துவ விளக்கம்’ என்னும் தலைப்பில் பேசுவதைக் கேட்க வந்திருக்கும் கூட்டம். ஆனதால், கடவுளுடையவும், மதத்தினுடையவும் தத்துவம், உண்மைத் தத்துவம் அதுவும் பச்சை உண்மையாம் பட்டாங்கமாய் உள்ள தத்துவம் பேசப்பட வேண்டியதாகும். ஆதலால், அந்தப்படி பேசுகிற முறையில் நான் பேசுகிறேன்.

உண்மையிலேயே என்னை நாஸ்திகன் என்றும், மதத்துவேஷி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் கருதியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாஸ்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆஸ்திகர்கள் என்பவர்கள் கருதி இருப்பார்களானால் அவர்களுக்காகப் பரிதாபப்படுவதுடன், இந்த மாதிரி மக்களிடையில் இருக்க வேண்டி இருக்கிறதே என்று என்னையே நான் வருந்திக் கொள்ளுகிறேன்.

தத்துவ வாசகத்துக்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் கூட, எனது தத்துவத்தை எடுத்துச் சொல்ல நான் பயப்பட்டால், அல்லது பித்தலாட்டம் செய்தால், நான் என்னையே வெறுத்துக்கொள்ள வேண்டியவனாவேன். ஆகவே, என்னை நாஸ்திகன், மதத்துவேஷி என்று ஆஸ்திகன் சொல்லுவது மகாமகா அறியாமையும் அலட்சிய புத்தியும் ஆகும்.
இதை ஒரு உதாரணம் காட்டி விளக்குகிறேன்.

ஒரு ஊரில் ஒரு பிச்சைப் பிழைப்பு பார்ப்பனன் ஒரு நல்ல காரியம் நடந்ததற்காகப் பிச்சைக் கொடுக்கும் ஒரு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான். அவ்வீட்டுக்காரர் மற்றவர்களுக்கு கொடுத்ததுபோல் இவனுக்கும் நான்கணா கொடுத்தார். அதற்கு அந்தப் பிச்சைக்காரப் பார்ப்பனன் அந்த வீட்டுக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு, “ஏ ஓய்! தற்பெருமை, அன்னியர்களைக் குறைகூறுதல், பணத்தாசை ஆகிய மூன்றையும் துறந்து, நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம். தர்க்கம், மீமாம்சை, தத்துவ ஞானம் ஆகியவைகளைக் கற்று மிக மேதாவியும், மகாபண்டிதனுமான எனக்கும் நாலு அணாவா? இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் கழுதைக்கும் நாலு அணாவா? வெகுயோக்கியமாய் இருக்கிறதே உம்முடைய தர்மம் என்று கேட்டானாம்.
அதுபோல் இருக்கிறது, ஒரு ஆஸ்திகன் என்பவன் ஒருவனைப் பார்த்து நாஸ்திகன் என்று சொல்லுவது என்கிறேன்.

ஏன் எனில், இந்த ஆஸ்திகன் கடவுளை எப்படி அறிந்திருக்கிறான் என்றால்,
“கடவுள் சர்வ வல்லமை உள்ளவர், சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) சர்வத்தையும் (எல்லா காரியங்களையும்) நடத்துகிறவர், அவருக்கு மேம்பட்டவர் எவரும் இல்லை, அவர் அன்றி (அவர் அனுமதியாமல்) ஒரு காரியமும் நடைபெறுவதில்லல்’’ என்பதாக அறிந்திருப்பதாகச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கடவுளை நான் இல்லை என்பதாகவோ, மறுப்பதாகவோ சொல்லுகிறார் என்றால், இது அந்தப் பார்ப்பனன் சொன்னதற்கே சமாதானமாகும்.

அந்தப் பார்ப்பனன் முதலில் தன்னிடம் ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவிய சுபேட்சை இல்லை என்றும், தான் அவைகளை வெறுத்து விட்டவன் என்றும் சொல்லி விட்டு உடனே நான் நாலு வேதம், ஆறு சாஸ்திரம் முதலியவைகளைப் படித்துக் கரைகண்ட மேதாவியாகிய மகாபண்டிதன் என்கிறான். இதில் அவன் தற்பெருமை வெறுத்த யோக்கியதை தெரிகிறது.

அதுபோலவே பரநிந்தை - அன்னியனை இழிவாக்குவது - வைவது தன்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் மடையனுக்குமா நாலணா?’’ என்கிறான்.

அடுத்தபடியாக தனக்குப் பண ஆசையே இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த நாலு அணாதானா எனக்குக் கொடுப்பது?’’ என்கிறான். எனவே தன்னைப்பற்றி அவன் சொன்னது அத்தனையும் பொய் என்பதும், கற்பனை என்பதும், அவன் பின்னால் சொல்லியதிலிருந்து வெளியாகிவிட்டன.

அதுபோலவே எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவற்றையும் செய்விக்கிற கடவுளை ஒரு மனிதன் இல்லை என்று சொல்லுகிறான் என்று சொன்னால், ஒன்று அந்த ஆஸ்திகன் கடவுளுக்கு மேல்கண்ட குணங்கள் இருப்பதாகச் சொன்னது பொய்யாகவும், கற்பனையாகவும் இருக்க வேண்டும் அல்லது மற்ற மனிதரைப் பார்த்து, நாஸ்திகன் கடவுள் இல்லை என்று சொன்னது தவறாக, அறியாமையாக யோசனையற்றதாக இருக்கவேண்டும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒரு வரைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில், கடவுளுக்குத் தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே, ஒரு மனிதன் இப்படி முட்டாள்தனமான காரியத்தைச் செய்வானா? அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை ‘நாஸ்திகன், கடவுளை மறுக்கிறவன்’ என்று குறைவோ, குற்றமோ சொல்ல மாட்டான்.

ஒருவனை ஒருவன் நாஸ்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாஸ்திகமாகும், கடவுளைச் சரியாக அறியாததேயாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாஸ்திகர்களாவர். கடவுள் இருந்தால், ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்காவது முடியுமா? ஆகவே, நாஸ்திகம் நாஸ்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளே ஆகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்த கவலையே இருக்க நியாயமில்லை.

கடவுள் பற்றிய தத்துவ விளக்கம் என்றால், கடவுள் நிர்வாணமாய், பட்டாங்கமாய் காணப்படும் வரையில் ஆராய்ச்சி செய்வது என்பதாகும். ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய, முதலில் என்ன, ஏன் எதற்காக, எப்படி, எங்கே, எப்போது என்பன போன்ற கேள்விகளைப் போட்டு திருப்தியான பதில் பெற வேண்டும். தயவு தாட்சண்யமற்ற கேள்வி போட வேண்டும். தத்துவ விசாரணை என்பதும் தர்க்க வாதம் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையதாகும். ஆகையால், சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வத்தையும் நடத்துதல் ஆகிய அபாரகுணங்களைக் கொண்ட ஒரு பரம்பொருளைப் பற்றித் தத்துவவிசாரணை செய்கிறவர்கள் இந்த 6, 7 கேள்வி மாத்திரமல்லாமல் இன்னும் 60, 70 சோதனைகளை செய்து பார்க்கவேண்டும்.

பக்தனுக்கு இது தேவை இருக்காது. தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமாகும். கடவுள் மூடபக்தியால், குருட்டு நம்பிக்கையால் விளங்குபவராக இருக்கக்கூடாது. வேறு யாருக்காகிலும் அப்படி விளங்கினாலும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு அதிலும் தத்துவ விசாரணைக்காரனுக்கு அப்படிக் குருட்டு நம்பிக்கையால் விளங்கக்கூடாது என்பேன்.

எதற்காகக் கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆகவேண்டும். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான். அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை, பணக்காரன் ஏன்? மேல் ஜாதி, கீழ் ஜாதி ஏன்? உழைப்பாளி அடிமையும் சோம்பேறி எஜமானனும் ஏன்? பிச்சைக்காரன், பிரபு ஏன்?

இந்தத் தன்மைகளை ஏற்படுத்தவும் நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் அல்லாமல் கடவுளால் கண்ட பயன் என்ன? அவர் செய்த நல்ல காரியம் என்ன? இந்த வேலைகளுக்கு ஒரு கடவுள் வேண்டுமா?

பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல் கவலையில், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம் கடவுள் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கக்கூடும்?

அவனவன் முட்டாள்தனம் காரணம் என்றால் பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள் தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள் இனவெறுப்புகள், துரோகங்கள் பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவுற்ற துஷ்ட ஜந்துக்களிடமும் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மைதான் என்ன?

 

http://karuppupaiyan.blogspot.com/2007/10/116.html

இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம்.

இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான் : முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.

அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது. திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.

தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன் மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல; ஆரியன் பிராமணன் அல்ல, மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல.

சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி. அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி! தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

(பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.6.1946)

http://karuppupaiyan.blogspot.com/2007/10/115.html

ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே பொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.

அதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.

எத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

உதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.

ஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.

வேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.

(20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை)

http://karuppupaiyan.blogspot.com/2007/10/114.html





சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!




இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை.

ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான். முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும்.

இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே
அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது.
திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.
தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான்.
காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட
நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன்
மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும்.
திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல;
ஆரியன் பிராமணன் அல்ல,மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல. சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா
பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி.
அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி!


தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

------------------ பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.06.1946

 

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_4233.html







பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!
வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!
கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.
கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

 

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_18.html

 


சகுனம்!

சகுனம் பார்ப்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக வாழ்கிறார்கள்; எத்தனை டிகிரி முட்டாள் என்பதை அளக்கப் பார்ப்பான் வைத்துள்ள அளவுகோலேயாகும்.

முகூர்த்தம் பார்ப்பது அஸ்திவாரமே இல்லாமல் ஆகாயத்திலே கட்டுகிற கோட்டைக்கு வாயிற்படி கிழக்கிலா? மேற்கிலா? என்று அடித்துக் கொள்வதாகும்.காலை 4-மணிக்குத் திருமணம் என்பார்கள். அப்போது தான் நல்ல நேரம் என்பார்கள். எந்த வேலைக்கும் சரியில்லாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் இடைஞ்சலான நேரத்தில் வைத்துக் கொண்டு நேரம், நேரம் என்று பறக்கிறார்களே எவ்வளவு முட்டாள்தனமிது? நல்ல ராகு காலத்தில் 3-மணிக்குக் கோர்ட்டிலே கூப்பிட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா? எக்ஸ்பார்டியாகி விடும். உடனே ஒடிவிடுவார்கள். நல்ல எமகண்டத்தில் ரயில் புறப்படுகிறது என்பதற்காக ஏறாமல் இருந்து விடுவார்களா? உலகமெல்லாம் முன்னேறுகின்ற சமயத்தில் நம்முடைய சங்கதியைப் பார்த்தால் எவ்வளவு பிற்போக்கு? முற்காலத்தில் முன்னேறி இருந்தவர்கள் இந்தக் காலத்தில் இம்மாதிரி இருக்கலாமா? நம்மிடமே வாங்கிக் கொண்டு நம்மையே கீழ்மகனாக ஆக்கி விட்டுப் போய் விடுகிறானே பார்ப்பான் என்பதற்காக எதிர்க்கிறோமே தவிர 2-படி அரிசி வாங்கிக் கொண்டு போகிறான் என்பதற்காகவா? எதிர்க்கிறோம். அந்தக் காலத்தில் மோட்டார் ஆகாய விமானம் ரயில் இல்லை. இப்போது அவைகளையும் பயன்படுத்திக் கொள்கிறோம். நாம் இழிவு படுத்தப்படுகிற சங்கதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு முன்னேற மறுக்கிறோம். எல்லாத்துறைகளிலும் எல்லோருக்குள்ளும் மாற்றஉணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற நம் சமூதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட – அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமூதாயத்திற்கும், விமோசனமில்லை.

------------- பெரியார் ஈ.வெ.ரா. - நூல்: "வாழ்க்கைத்துணை நலம்" பக்கம் - 34-35

 

http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_8447.html


கடவுளும், அரசனும், ஜனநாயகமும், சர்வாதிகாரமும்!


மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்கு பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான்.

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மம்ள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.

ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

 

'குடிஅரசு' 14.5.1933

தமிழ் நாட்டில் பொதுவுடைமைப் பிரச்சாரகர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொதுவுடைமை என்றாலும் இந்து மதம் என்றாலும் அல்லது வேறெந்த பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும், பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

பார்ப்பனர்களுக்கே நன்றாய்த் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்து விடும் என்றும், சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். ‏இந்நாட்டில், பார்ப்பனீயத்தால் சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உடைமை இருந்தாலும் சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டோமானால், தனிஉடைமையை மாற்ற அதிகப்பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும்.
குறிப்பமாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய், ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டியிருக்கிறது. இது, இன்றையப் பிரத்தியட்சக் காட்சியாகும்.

ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது, தமிழில் சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும். சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால், பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.

பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடைமை வேஷம் போடுவதால் சாதிச் சங்கதியை மூடிவிட்டு, காத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு உணர்ச்சியைப் பற்றிப் பேசி சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

திராவிட நாடு பிரிந்து - கிடைத்து, சுரண்டும் சாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்துகொள்ள முடியும். அந்தக் காரியத்திற்காகத்தான் சுயமரியாதைக் கட்சி முயலுகிறது. இந்தக் கட்சியில் இன்று மேல்சாதியானுக்கோ அல்லது சாதிப் பேய் - பார்ப்பனீயப் பேய் பிடித்த பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப்படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இக்கட்சி சாதியிலேயே தொழிலாளர்களாகவும், உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும்பான்மையான மக்களுடைய கட்சி என்பதாகவும் மக்கள் உணர வேண்டும்.

 

‘குடிஅரசு' 25.3.1944


http://www.keetru.com/rebel/periyar/2.php

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

 

'விடுதலை' 28.6.1973

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து

http://www.keetru.com/rebel/periyar/4.php

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' கட்டுரை 26.4.1931

http://www.keetru.com/rebel/periyar/5.php

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.

(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/6.php

‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.

அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.

சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/7.php

நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களõக ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள். ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.


(7.11.1954 அன்று திருச்சியில் ஆற்றிய சொற்பொழிவு ‘விடுதலை' 12.11.1954)

http://www.keetru.com/rebel/periyar/8.php

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதான÷காசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை ­டர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(‘குடி அரசு' தலையங்கம் 30.11.1930)

http://www.keetru.com/rebel/periyar/9.php

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

http://www.keetru.com/rebel/periyar/10.php

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)

http://www.keetru.com/rebel/periyar/11.php

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.


http://www.keetru.com/rebel/periyar/12.php

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு?

ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?

யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

http://www.keetru.com/rebel/periyar/13.php