சொல்லாத சேதிகள்

கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட செல்வியின்(செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்


இடம்:

Scarborough Village Recreation Centre

3600 Kingston Road

Toronto ON M1M 1R9

Markham Road & Kingston Road

காலம்: October 16, 2011 (Sunday)

3:00 pm – 6:00 pm

 

‘தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாக இருந்தவேளையில் கடத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.

 

 

 

செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பான Amnesty International தனது1994ம் ஆண்டு மார்ச் இதழில் செல்வியின் விடுதலையைக் கோரி எழுதியது. இந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists அமைப்பால் வழங்கப்பட்டது.