லங்கா நியூஸ் வெப் இணையம் தங்கள் ஊடகவியல் தில்லுமுல்லுகளை ஒத்துக்கொள்ள மறுக்கும் போது, அதன் பின்னணியும் அதன் நோக்கமும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

 

மூன்று மொழியில் வெளிவரும் லங்கா நியூஸ் வெப் இணையம், மகிந்த புதல்வர் நாமல் தாக்கப்பட்டதாக கூறிய ஒரு செய்தியை முதலில் வெளியிட்டது. இதன் போது, தனது தில்லுமுல்லுகளுடன் கூடிய ஒரு போலிப்படத்தை தயாரித்து செய்தியை வெளியிட்டது. தில்லுமுல்லை அடிப்படையாக கொண்டு அந்தப் படத்தின் மூலம், இந்தப் படம் போலியானது என்பதை அம்பலப்படுத்;தினோம். பின் அதன் மூலப்படத்தையும் வெளியிட்டோம். (இதில் வெளியிட்ட படத்தை தங்கள் படமாக, குளோபல் தமிழ் நியூஸ்; படத்தின் மேல் தங்கள் இணையப் பெயரை போட்டு இருந்தனர். இங்கு மூலம் குறிப்பிடப்படவில்லை. இங்கு இரண்டு இணையத்துக்கும் உள்ளது, ஓரே மூலமா? இப்படி இந்த தில்லுமுல்லில் இவர்களுக்கும் பங்கு உண்டு.)  

 

இதன் பின் லங்கா நியூஸ் வெப் ஒரு சுயவிளக்கத்தை வெளியிட்டுள்ளனர். 'மஹிந்தவின் மூத்த புதல்வருக்கு வவுனியா முகாமில் மக்கள் கல்வீச்சு மற்றும் சேறடிப்பு - செய்தி தொடர்பான தெளிவுபடுத்தல்" என்ற தலைப்பில், தங்கள் சொந்த தில்லுமுல்லை புலிகள் போலவே இங்கு ஓப்புக்கொள்ளவில்லை.

 

மாறாக "இந்தச் செய்தியுடன் பிரசுரிக்கப்பட்ட நாமல் ராஜபக்~வின் புகைப்படம், வவுனியா முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது அல்லவெனவும், அதனடிப்படையில் இந்தச் செய்தி பொய்யான தகவல் எனக் கூறுவதற்கும் அந்தக் குழு முயற்சித்து வருகின்றது.

 

அத்துடன், குறித்த செய்தி பொய்யானது என்று விமர்சிக்கும் வகையிலான தகவல்களை மின்னஞ்சல் மூலம் சங்கிலித் தொடராக அந்தக் குழு அனுப்பி வருகின்றது. நாங்கள் செய்திகள் வெளியிடும்போது, அதனுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடவே முயற்சித்து வருகின்றோம். எனினும், இலங்கைக்கு வெளியிலிருந்து செயற்படும் எம்மால் செய்திகளுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக பெற்றுக்கொள்வது சகல சந்தர்ப்பங்களிலும் சாத்தியமாவதில்லை. இதனால், செய்தியுடன் தொடர்புடைய அல்லது அதற்குப் பொருத்தமான வைப்பகப் படங்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

 

இதனடிப்படையில், ஜனாதிபதியின் புதல்வர் மீது வவுனியா முகாமில் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமான செய்தியுடன் நாம் வெளியிட்ட புகைப்படம், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதையும் அது வைப்பகப் படம் என்பதையும் இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்.

 

அன்றைய தினம் செய்தி வெளியிடப்பட்டபோது, அந்தப் புகைப்படத்தை எங்கிருந்து பெற்றுக்கொண்டோம் அல்லது அதற்கான ஆதராத்தை வெளியிடத் தவறிவிட்டதை எமது தவறாகக் கருதுகிறோம். இதற்காக நாம் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்." என்கின்றனர். இப்படி கூறும் இவர்கள், தாங்கள் இதில் செய்த தில்லுமுல்லை தவறானதாக கூறவில்லை.

 

குறித்த சம்பவம் இவர்கள் கூறுவது போல் உண்மையா பொய்யா என்பது எமக்கு தெரியாது. ஆனால் இவர்கள் இதில் செய்த தில்லுமுல்லை ஒத்துக்கொள்ள மறுப்பது தான்;, இவர்களின் செய்திகள் மீதான நம்பிக்கையீனத்தை உருவாக்குகின்றது. குறித்த படம் உங்கள் "வைப்பகப் படம்" என்றால், இந்த படத்தின் பின்னணிக் காட்சிகளை நீங்கள் சிதைத்தது ஏன்? படத்தில் உண்மையான முழுக் காட்சியும் மக்களுக்கு தெரியக் கூடாது என்பது உங்கள் நோக்கமாக இருந்தது. இதை வைத்து மக்களை மேசாடி செய்து ஏமாற்ற வேண்டும் என்பது, உங்கள் குறிக்கோளாக இருந்தது. இதற்காக நீங்கள் மனம் வருந்தவில்லை. அதைத் தவறு என்று ஓப்புக்கொள்ளவில்லை. மாறாக "அது வைப்பகப் படம்" என்று கூறி, நீங்கள் படத்தில்  செய்த மாற்றத்தை தவறாக பார்க்க மறுப்பது புலனாகின்றது. 

 

உண்மையான ஒரு படத்தை நீங்கள் உருச் சிதைத்ததுடன், குறித்த படத்தை தேர்ந்தெடுத்து திட்டமிட்டே போட்ட நோக்கம், இங்கு தெளிவாக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான். இதற்காக நீங்கள் மனவருந்தவில்லை, அதை தவறு என்று ஓத்துக் கொள்ளவில்லை.

 

இப்படியான உங்கள் ஊடக நடத்தையை வைத்துக்கொண்டு "இந்தச் செய்தி பொய்யான தகவல் எனக் கூறுவதற்கும் அந்தக் குழு முயற்சித்து வருகின்றது." என்று, மற்றவர்களை குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமும் அற்றது. இப்படிப்பட்ட நேர்மையற்ற செயல், உண்மைகளைக் கூட பொய்யாக்கிவிடும். மக்கள் எதிரிகள் இதைக் கூட தமக்கு சாதகமாகவே பயன்படுத்துவர். "இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்பதை தற்போதும் நிச்சயமாகக் கூறுகின்றோம்" என்கின்றீர்கள். இருக்கலாம், ஆனால் உங்கள் நேர்மையற்ற ஊடகத்தனம் இயல்பாகவே நம்பகமற்ற தன்மையை உருவாக்கி தந்துள்ளது. இங்கு நீங்கள் படத்தின் பின்னணியை மறைக்க செய்த தில்லுமுல்லுகளை ஓத்துக்கொள்ளாத வரை, உங்கள் "உண்மைகள்" சமூக உண்மையாக மாறிவிடாது.
 
பி.இரயாகரன்
24.07.2009