சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப் பார்ப்போம்.

 

" சோவியத்ஒன்றியம் ஒரு சமுக ஏகாதிபத்தியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடான ஒன்றல்ல. அது மூன்றாம் உலக நாடுகளின் ஒரே இரட்சகன் என்ற விதமான கருத்து. அதே அளவுக்கு நிராகரிக்கத்தக்கது."" என சிவசேகரம் கூறுகிறார்.

 

அப்படியாயின் தமிழ் தேசியவிடுதலைப்போராட்டத்தில் இந்தியத் தலையீட்டை ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதிலும் உடன்பாடில்லை. இந்தியா தேசியவிடுதலைப்போரின் ஆதரவாளர் என்பதிலும் உடன்பாடில்லை என்ற கூற்றுக்கு ஒப்பானது.

 

அப்படியாயின் அது என்ன? இந்தியா ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதை எப்படி மறைக்க சிலர் முனைகின்றனரோ அதேபோல் சோவியத் ஒரு சமூக ஏகாதிபத்தியம் என்பதை மறைப்பது சிலருக்கு அவசியமாகவுள்ளது.

 

சீனாவில் மாவோவை மறுத்ததைத் தொடர்ந்து இவர்களும் ( சிவசேகரம் மற்றவர்களும் ) மறுக்கின்றனர்;. அதன் காரணத்தால் மாவோவும் சில கொம்யூனிஸ்ட்டுக்களும் கலாச்சாரப் புரட்சி எதற்காக தொடங்கினாரோ அதை மறுத்துப் புதியஜனநாயககட்சியும் சிவசேகரமும் அடிப்படை வர்க்க முரண்பாட்டை மறுதலிக்கின்றனர். அதனால் தான் சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக இருந்ததை மறுத்து இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவம் தேடுகின்றனர்.

 

அதாவது தமது அரசியல் பிழைப்புவாதத்துடன் வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட ஒரு வடிவம் தேவை. அதற்கு ஒரு கோட்பாடு தேவை, அது இரண்டுமல்லாத ஒன்றாகக் காட்டுவது தான் தமது இருப்பை தக்கவைக்க உதவும் என்ற கனவு.