Language Selection

ஏகலைவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன்  கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!  ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க

 அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன.

 

நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவரொட்டிகள் விளம்பரம் செய்தன. இந்த ஆர்ப்பாட்டம் போலீசிடம் அனுமதி வாங்கி நடத்த முடியாது என்பதால் ‘சட்ட விரோதமாகவே ‘ நடத்தத் திட்டமிடப்பட்டது.

 

மேலும் குடியரசு தினத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை போலீசும் அரசும் மிகக் கடுமையாகவே எடுத்துக் கொள்ளும் என்பதால் கைது இருக்கலாம் என்பதை எதிர்பார்த்தும் தயாரிப்பு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணிக்கு ஆயிரக்கணக்கான தோழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் எழுச்சியுடன் நடந்த்து. தலைவர்கள் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து எழுச்சியுரை ஆற்றினர். சுவரொட்டியைக் கண்டு போலிசும் சுமார் பத்து வண்டிகளைக் கொண்டு வந்து தயாராக இருந்த்து. இருப்பினும் போலீசின் கெடுபிடிகளைத் தாண்டி ஆர்ப்பாட்டம் வீச்சுடன் நடந்தது.

 

பின்னர் தோழர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அருகிலிருக்கும் மைதானத்திற்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது வந்துள்ள கடைசிச் செய்தியின்படி தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குடியரசு நாளில் இந்திய அரசு ஈழமக்களுக்கு செய்யும் துரோகம் மக்களிடையே அம்பலப்படுத்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் புகைப்படங்களை சில மணிநேரத்தில் வலையேற்றம் செய்கிறோம். இந்த எழுச்சியான ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சியை நாளை வெளியிடுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 

ஈழத்தமிழ் மக்கள் மீதான

சிங்கள இனவெறி அரசின்

இன ஒடுக்குமுறைப் போரை

தடுத்து நிறுத்துவோம்!

ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

ஈழத் தமிழ் மக்களின்

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய

சுய நிர்ணய உரிமைக்குக்

குரல் கொடுப்போம்!

ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

டாடா அம்பானி

தரகு முதலாளிகள் நலனுக்காக

சிங்கள இனவெறிப் போருக்குத்

துணை நிற்கும் இந்திய அரசின்

பிராந்திய மேலாதிக்கத்தை

முறியடிப்போம்!

ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

இந்திய அரசே,

சிங்கள இராணுவத்துக்கு

ஆயுதம், நிதி, பயிற்சி

அளிப்பதை நிறுத்து!

இலங்கை அரசுடன்

தூதரக உறவுகளை முறி!

ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

………………………………………………………………………………..

உழைக்கும் மக்களே,

சிங்கள இனவெறி அரசின்

ஏஜெண்டுகளாகச் செயல்படும்

ஜெ., சு.சாமி, சோ, இந்து ராம்

பார்ப்பனக் கும்பலுக்கும்

காங்கிரசுக்கும்

தக்க பாடம் புகட்டுவோம்!

ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

…………………………………………………………………………………..

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி




















தொடர்புடைய பதிவு :
ஈழம்: 
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

நன்றி: தோழர் மதிமாறன் (படங்கள்), வினவு வலைதளம் (செய்தி)