சிவகுமாரன் தொடங்கி பிரபாகரன் வரை முன்னெடுத்த தனிநபர் பயங்கரவாத அரசியலானது, தாமல்லாத அனைவரையும் "துரோகியாக்கியது". ஜனநாயகத்தை ஒடுக்கியதன் மூலம் - ஏகப்பிரதிநிதித்துவ சிந்தனையை உருவாக்கினர். இதில் தேர்தல் ஜனநாயகம் விதிவிலக்கல்ல. 1970 களின் பின்னான வரலாறும் - தமிழ் அடையாளங்களும், ஜனநாயக மறுப்பில் எழுந்த வன்முறையிலான வலதுசாரிய வெள்ளாளிய வக்கிரங்களே.
1970க்கு பின்னான இன்றைய தமிழ் தேர்தல் அரசியலின் எதார்த்தம் என்ன? வன்முறை மூலம் போலித் தமிழ் தேசியத்தை பாதுகாத்த துப்பாக்கிகளில்லை, துரோகிகளைச் சுட்டுக்கொல்ல தனிநபர் பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபட்ட லும்பன்கள் இல்லை.
50 ஆண்டுக்குப் பின்பாக, அதாவது 1970க்கு முந்தைய தேர்தல் அரசியல் வரலாறு தெரியாத தலைமுறைக்கு, இன்றைய தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளித்து இருக்கின்றது.
தமிழரின் ஒற்றுமை, தமிழ் வாக்குகள் சிதறாமை, பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் .. என்று 1970க்கு பின் வன்முறை மூலம் கட்டமைக்கப்பட்ட, தமிழ் தேசிய சிந்தனை முறையை, 2020 தேர்தல் தகர்த்திருக்கின்றது.
"துரோகிகள்" குறித்தும், ஒன்றுபட்ட "தேசியம்" குறித்தும் புலம்பும் அளவுக்கு, ஜனநாயக மறுப்பு "மனநோயாக" முற்றி இருக்கின்றது. முன்பு துப்பாக்கி முனையில் சாதித்த தங்கள் ஜனநாயக விரோத சிந்தனைமுறையானது, இன்று நடைமுறையிழந்து நிற்கின்றது. தாங்கள் விரும்புவதும், தங்கள் விருப்பே துரோகமல்லாதவொன்று என கட்டமைத்த தங்கள் சுய விம்பங்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால்களில் புதைந்தது போக – எஞ்சியது 2020 தேர்தலில் பின் தனிப்பட்ட மனிதனின் மனநோயாகிவிட்டது. தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு முரணாக - தங்கள் மனநோய் கண்ணோட்டத்தையே - தமிழனின் கண்ணோட்டமாக்க புலம்புகின்றனர்.