இயற்கையில் மனிதன் தனது வாழ்வுக்கான போராட்டத்தை எதிர் கொண்ட போது அவனுக்கு இயற்கையே புதிராக இருந்தது. இயற்கையின் எழுச்சிகள், அழிவுகள் எல்லாம் மனிதனுக்கு அழிவையும், ஆக்கத்தையும் கொடுத்த போது, அதன் மீதான கட்டுப்பாட்டைச் செலுத்தமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டான். இது போல், தனது உடல் சார்ந்த மாற்றங்கள் எப்படி? எதனால? ஏற்படுகின்றன என்பதை அறிய முடியாத மனிதனாகப் புதிர்களின் முன் வெறுமையாக நின்றான்.
எல்லா உயிரினங்களையும் போல் மனிதனும் இயற்கையைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து மாறி, உழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தத் தொடங்கியவுடன், அது சார்ந்து சிந்தனையும் அதன் மேல் உருவாகத் தொடங்கியது. உழைப்பு மூலம் இயற்கையை மனிதன் தனது தேவைக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியபோது, இயற்கை மற்றும் மனித உடலியல் புதிர்களைப் பற்றிய தேடுதலும் ஆரம்பமாகியது. இந்தக் கேள்விகளை ஒட்டி இயற்கைச் சீற்றங்களின் போதும், அழிவுகளின் போதும் மனித உழைப்பால் எதையும் செய்ய முடியாத போக்கில், இந்த இயற்கை நெருக்கடி மனித அழிவுகளை ஏற்படுத்தியது. இதை மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதை மாற்ற முடியாத நிலையில், அதை அன்னியமான சக்தி ஒன்றின் செயலாக எண்ணத் தொடங்கினான். இதனால் இயற்கை சார்ந்து அழிவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை நோக்கி அஞ்சத் தொடங்கினான். இது போல் போராடி வெல்ல முடியாத மிருகங்களையும் கண்டு அஞ்சுவதன் மூலமும், மனித ஆற்றலால் முடியாத விசயங்களை நோக்கி கெஞ்சுவதன் மூலமும் அதைத் தடுக்க முயன்றான். இந்தக் கெஞ்சுவதும், அஞ்சுவதும் மனிதன் இயற்கையில் இருந்து வெளிவந்து, செயற்கையில் இயற்கையை மாற்றத் தொடங்கிய மனித வரலாற்றில் நடந்தது. மனித உழைப்புக்கு அன்னியப்பட்டுக் கட்டுப்பட மறுத்த இயற்கையின் மீதும், அது சார்ந்த விசயங்கள் மீதும் இவை நிகழ்ந்தன. பின்னால் அதைத் தொடர்ந்து விளக்குவதும் மனிதப் போக்காகியது.