Language Selection

குழந்தைகள்




குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.

இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டிது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.

கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.

'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.

சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.

குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.

துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.

இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.

"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.

முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.

அர்த்தநாரி

http://kulanthaikal.blogspot.com/2006/09/blog-post.html

உறவுகளையோ நட்புகளையோ சில சமயம் முடித்து கொள்ளும் போது நமக்கு அதை மனம் புண்படுத்தாமல் அல்லது நோகடிக்காமல் செய்ய தெரிவதில்லை. உறவை முடிந்த பின்னும் நாம் அதை பற்றி யாருடனாவது பேச நேர்ந்தால் அதில் நம் மீது தவறே இல்லை என்பதை நியாயப்படுத்த காரணங்கள் அடுக்குவதும் என்னைப்பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.

 

உறவுகள் முறிந்து போக இருவருக்கும் சரியான அலைவரிசை இல்லாதது காரணமாக இருக்கலாம். யார் மீதும் தவறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

நான் கவனித்தவரை பெற்றவர்கள் சில சமயம் குழந்தைகளிடம் ஒருவரை பற்றி தவறாக பேசுவது அவர்கள் மனதில் தவறான எண்ணம் தோன்ற காரணமாகிறது. பெற்றவர்கள் இடையே விவாதங்கள் நிகழ்வதில் தவறில்லை, அது ஒருவகையில் நல்ல ஆரோக்கியமான மன நிலைக்கு காரணமாகிறது. குழந்தைகளுக்கு வயது வந்த இருவர்கள் அபிப்ராய பேதங்கள் கொள்வதிலும் அதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறில்லை என்ற எண்ணத்தை தரும்.இது ஆரோக்கியமான சூழலை தரும். கருத்து வேற்றுமை இருந்தாலும் நேசம் கொள்வதில் தவறில்லை என்பதையும் காட்டும்.

 

ஆனால் அதுவே கோபமாகி கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்பு உணர்ச்சியை வெளியிட்டால், அது குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு பெற்றோர்கள் சமாதானமாகி போனாலும் குழந்தைகளால் மறக்க முடிவதில்லை.

 

சில வீடுகளில் மனைவையை தாழ்த்திப்பேசி, குழந்தைகளும் வளார்ந்தபினும் அம்மாவிற்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில் அவமதிக்கிறார்கள். சாதாரண நடைமுறையில் இது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் விவாகம் ரத்தானபின், குழந்தைகளை பகடைக்காய்களாக பயன் படுத்த தொடங்கும் போது குழந்தைகள் மனத்தை அளவிட முடியாத அளவு காயப்படுத்துகிறது.

 

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், தந்தைக்கு சில நாட்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டாலும், குழந்தைகளிடம் தவறாக நடந்ததாகவோ, மதுவிற்கோ, போதைப்பொருளிற்கோ அடிமையானவன் என்றோ சட்டப்படி எந்தவித ஆவணங்களும் இல்லாததால், குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது.

 

சின்ன குழந்தையின் மனதில் தந்தையை பற்றிய தவறான கருத்துக்கள் வித்திடப்பட்டிருக்கிறது. ஆகையால் அடிப்படையில் ஆழ்ந்த வெறுப்பு இருப்பதால், தந்தை வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் பயத்துடனேயே போகிறார்கள். அங்கிருந்து வந்தவுடன் உடனேயே தந்தையை பற்றிய விவரங்களை கேட்டு நச்சரிப்பதாலும், நாளடைவில் குழந்தைகள் யாருக்கு எது பிரியமோ அதை சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள விரும்புகிறார்கள்.

 

இரண்டு வீட்டில் மாறி மாறி இருபது குழந்தைகளுக்கு அதிக துன்பத்தை தரக்கூடிய ஒரு விஷயமாகும். அதை கூடுமானவரையில் எளிமையாக்குவது சால சிறந்தது. கணவன் மனைவி இருவரின் ego போராட்டத்தில் அடிக்கடி பள்ளி, மருத்துவர்கள் இவர்களை மாற்றுவதும், உன்னைவிட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கண வனும், நான் மட்டும் என்ன குறைந்தா போய் விட்டேன் என்று மனைவியும் போட்டியிடும் போது இடைப்பட்ட பிள்ளைகள் பாவம் தவிக்கிறார்கள்.இதற்கிடையில் பெண்ணை பெற்றவர்கள் மகளின் கணவனை வசை பாட, கண வனின் பெற்றவர்கள் மருமகளை வசை பாட, அதிக சினம் கொண்டவர்களாகவும் மனதில் வேரூன்றிவிட்ட வெறுப்போடும் தவிப்பது குழந்தைகள்தான்.

 

இதுவே நான் மேற்சொன்ன குடும்பத்தில் 6 வயது குழ்ந்தையின் தற்கொலையில் முடிந்திருக்கிறது. பள்ளி கவுன்சிலர் ஒரு வாரம் முன் பேசும் போது எதைச்சையாக மாணவன் தான் இறக்க விரும்புவதாக சொல்ல, அவர் அன்னையை அழைத்து பேசி இருக்கிறார். அம்மா மகனை அழைத்து, நான் படும் கஷ்டம் போதாதா, நீ வேறு படுத்த வந்தாயா என்று சொல்லி அடிக்க, அப்பாவும் கண்டு கொள்ளாமல் விட, அதை சாக்காக கொண்டு வழக்கறிஞரிடம், என் மனைவியே இதற்கு காரணம் என்று சொல்லி இன்னொரு குற்றப்பத்திரிக்கை தயாரிக்க கவனத்தை செலுத்தி இருக்கிறார்.

 

பள்ளி ஆசிரியை பெற்றவர்களிடம் சொன்னதுடன், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது. விவாகரத்து ஆன பின்னாலும் குழந்தைகள் நலன் கருதி, பெற்றவர்கள் நட்பு பாராட்ட முடியாமற்போனாலும், ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருக்கவாவது முயற்சிக்கலாம்.

 

http://reallogic.org/thenthuli/?p=32

tea.jpg

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

 

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

 

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

 

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

 

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

 

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

http://sirippu.wordpress.com/2008/01/29/coffee/

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.

 

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.

 

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

 

இப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

 

அதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

 

நுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.

 

மூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.

 

நாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.

 

தவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

 

http://sirippu.wordpress.com/2007/12/20/danger/

kid.jpg

தாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

பருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.

 

அதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

 

மார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.

 

இந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

மார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.

 

மார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

 

இத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

சரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.

 

http://sirippu.wordpress.com/2007/10/17/mother-2/

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

 

இப்போது முதன் முறையாக தாயின் உணவுப் பழக்கம். குறிப்பாக கருவுற்றிருக்கையில் தாய் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் குழந்தையின் மூளையில் பதிவாவதாகவும். அந்த பதிவுகளின் வெளிப்பாடுகளாக குழந்தையின் உணவுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

அதாவது கருவுற்றிருக்கையில் தாய் இனிப்புகள், பொரித்த உணவுகள் போன்றவற்றை அதிகமாய் உண்டால் குழந்தையும் அத்தகைய உணவுப் பொருட்களால் வசீகரிக்கப் படுகிறதாம்.

 

தாய்மை நிலையில் மிக அதிகமாக உண்பது, எப்போதும் எதையேனும் கொறித்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் குழந்தையும் அத்தகைய பழக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட வாய்ப்பு இருக்கிறதாம்.

 

இத்தகைய உணவுப் பழக்கங்களால் குழந்தை அதிக எடையுடன் வளரும் ஆபத்தும் இருக்கிறது என்பது தான் ஆராய்ச்சி தரும் எச்சரிக்கை.

 

தாய்மை நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உருவாகும் பந்தம் வெறும் வார்த்தைகளால் விளக்க முடிவதல்ல. அவை உணர்வு பூர்வமான பந்தம்.

தாயின் சிந்தனைகளும், தாயின் மனநிலையும், தாயின் உரையாடல்களும் கருவிலிருக்கும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே தான் தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல நேர் சிந்தனைகளும், பொறுமையும், அமைதியும் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இப்போது உணவு விஷயத்திலும் இது புகுந்திருக்கிறது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவெனில், இப்போதைக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளை வைத்துத் தான் இந்த ஆராய்ச்சி முடிவை ஆராய்சியாளர்கள் எட்டியிருக்கின்றனர்.

 

மனிதர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போது அந்த பார்வையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன

 

http://sirippu.wordpress.com/2007/08/18/mothers/

 தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.

 

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

 

அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

 

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.

 

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

 

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.

 

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

 

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

 

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

 

SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

 

பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

 

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

 

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

 

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

 

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

 

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

 

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்

 

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..

 

எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 

குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.

 

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.

 

உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.

 

தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.

 

http://xavi.wordpress.com/2008/08/04/breastfeeding/

சரியான அளவு தூக்கம் கிடைக்காத குழந்தைகள் அதிக எடை சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது என நியூசிலாந்திலுள்ள ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

 

குழந்தைகளின் தினசரி, வார, மாத, வருட தூக்கத்தின் அளவுகளையும் அவர்களுடைய மருத்துவ அறிக்கை பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

591 குழந்தைகளை அவர்களுடைய ஒரு வயது, மூன்றரை வயது, ஏழுவயது என மூன்று நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

சராசரியாக 9 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அதிக எடையுடன் மாறும் வாய்ப்புகள் 4 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

 

மூன்றரை வயது வரை குழந்தைகள் 11 முதல் 13 மணி நேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும், அந்த வயதைத் தாண்டிய பள்ளிக் குழந்தைகள் 10 முதல் 11 மணிநேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும் அமெரிக்க தூக்கம் தொடர்பான அகாடமி (American Academy of Sleep Medicine )தெரிவிக்கிறது.

 

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், படுக்கையில் அமர்ந்தபடி வீடியோ விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி பார்த்தல் இவற்றை ஊக்கப்படுத்தாமல் இருப்பதும் அவசியம் என அறிவுறுத்துகின்றனர் அவர்கள்.

 

http://sirippu.wordpress.com/2008/02/08/sleep-3/

தங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கின்றது என்பதை
எப்படி அதனது பெற்றோர் அறிந்து கொள்ளலாம்?

 

குழந்தை உங்களது அழைப்புக்கோ அல்லது கொஞ்சலுக்கோ சாதாரணமாகச் செய்யும் அதனது செய்கையையோ அல்லது சிரிப்பையோ செய்யாமலிருந்தால்,

குழந்தை எழும்பியவுடன் வழக்கம் போலல்லாமல் நித்திரைச் சோர்வாகக் காணப்பட்டால் அல்லது கண்ணைத் திறந்து யாரையும் பார்க்கப்பிடிக்காமல் அழுதால்.

 

பால் குடிக்கப் பிடிக்காமல் அழுதால்.

குழந்தையை நீங்கள் அணைக்கும் பொழுது அதன் உடம்போ அல்லது கை கால்களோ சோர்வுற்று வழங்காதது போல் காணப்பட்டால்.

 

குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருந்தால் அதாவது குழந்தை கீச்சிட்டு அல்லது அனுங்கிக்கொண்டிருந்தால்.


உங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கக் கூடும்.

 

குழந்தையில் மேலும் அவதானிக்கக்கூடிய வேறு அறிகுறிகள்:


குழந்தையின் தோல் வெளிறிய நிறத்தில் காணப்படல்.

 

தோலில் புதிதாக வித்தியாசமான நிறத்தில் கரப்பான் (rash) தோற்றமளித்தால் அல்லது கண்டியது போல் காணப்படல்.

 

குழந்தையின் உடம்பு அதிகம் சுட்டுக்கொண்டிருத்தல்.

 

குழந்தை மூச்சு வாங்க அவதிப்படுதல் அல்லது அதிகம் விரைவாக மூச்சு வாங்குதல்.

 

குழந்தை வாந்தி அதிகம் எடுத்தல்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, மற்றவர்களை விட உங்கள் குழந்தையின் நிலை பெற்றோர்களாகிய உங்களுக்கே முதலில் புரியும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=131&Itemid=60