Language Selection

குழந்தைகள்

பிறந்த குழந்தையை முதல் ஒரு வருடம் வளர்ப்பது என்பது எல்லாப் பெண்களுக்குமே ஒரு சவாலான விடயம். மிக ஜாக்கிரதையாக, மிக கவனமாக பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டிய நேரம் அது. சின்னப் பிரச்னைகூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக்கூட வரலாம். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத இளம் தாய்களுக்கு கைக் குழந்தையை வளர்ப்பதில் பல சந்தேகங்கள் தோன்றும். அவர்களுக்குரிய அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார் டொக்டர் பாலச்சந்திரன்.

குழந்தை பிறந்தவுடன் எத்தனை நாளில் தாய்ப்பால் தர வேண்டும்?
எத்தனையாவது நாளிலா? பிறந்த அரை மணி நேரத்திலேயே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட வேண்டும். சொல்லப்-போனால்... தாய்ப்பால் கொடுப்பது-தான் குழந்தைக்காக எடுக்கப்படும் முதல் நோய் தடுப்பு முயற்சி! தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வு, குழந்தைக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. பால் கொடுக்கப் போகும் மார்பகத்தின் காம்புப் பகுதியை குழந்தையின் கன்னத்தில் தேய்த்தால் போதும்... குழந்தை தலையைத் திருப்பி மார்பகத்தின் வட்டப் பகுதியை, அழகாக வாயில் கவ்விக் கொள்ளும்! பொதுவாகவே, மார்பகத்தின் காம்புப் பகுதி உள்ளடங்கி இருக்கும். குழந்தை கவ்விப் பிடித்து உறிஞ்சும்போது, இந்த காம்புப் பகுதிகள் வெளியே நீண்டுவிடும்!

என் மார்பகம் சிறியதாக இருக்கிறது... தாய்ப்-பால் சுரக்குமா? சுரக்கும் தாய்ப்பால் குழந்-தைக்கு போதுமானதாக இருக்குமா?
மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பலமுறை பலராலும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், விளக்கமாச் சொல்கிறேன்! குழந்தை மார்பகத்தை கவ்விப் பிடிக்கும்போது, தாயினுடைய பெருமூளைப் பகுதியின் அடிப்-பாகத்தில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, ஆக்ஸிடோஸின் என்ற திரவத்தை சுரக்கிறது. உடனடியாக... மார்பகத்தில் தாய்ப்பால் சுரக்கும்.

இதை-யும் தெரிந்து கொள்ளுங்கள்... குழந்தை பால் குடிக்கும் அந்தந்த நேரத்தில் ஃப்ரஷ்ஷாக அது குடிப்ப-தற்கேற்ற சரியான வெதுவெதுப்பில், குடிப்பதற்கேற்ற அடர்த்தியில்தான் தாய்ப்பால் சுரக்கிறது!

குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கும், தாயிடம் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே! இது குழந்தைக்கு நல்லதா?
ரொம்ப ரொம்ப! குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால்தான் கொலஸ்டிரம் என்றழைக்கப் படுகிறது. வெண்மைக்கும், மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிறத்தில் தண்ணீரைப் போல இருக்கும் கொலஸ்டிரத்தில், திடப்பொருள்கள் அதிகமாக இருக்காது. ஆனால், சுகர், லேக்டோஸ் மற்றும் புரதச் சத்துக்கள் இந்த சீம்பாலில் எக்கச்சக்கம்! தாயின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்துக்கள் சீம்பால் மூலமாக குழந்தைக்கு முழுமையாகக் கிடைக்கிறது. அதனால், முதல் மூன்று நாட்களுக்குச் சுரக்கும் சீம்பாலை, கண்டிப்பாக குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

ஆனால், சீம்பால் கொடுத்தால் பேதியாகும் என்று கூறுகிறார்களே?
கொலஸ்டிரம் குடலைச் சுத்தம் செய்வதால், அப்போது வெளியேறும் மலம், பேதி போலத்தான் இருக்கும். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை! இதற்கு பயந்து, பலவகை சத்துக்களை உள்ளடக்கிய ‘கொலஸ்டிரம்’ பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறவே கூடாது. ஒரு சிலர், குழந்தைக்கு முதலில் கழுதைப் பால் தான் கொடுக்க வேண்டும் என்ற சடங்கைப் பின்பற்றுவதற்காக, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தரையில் பிழிந்துவிட்டு விடுவார்கள். இது மாதிரி நாம் நம்முடைய குழந்தைக்கு வேறு எந்தக் கொடுமையையும் செய்ய முடியாது! இன்றும், பல பிரசவ மருத்துவமனைகளுக்கு வெளியே கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆனால், சுகாதாரமற்ற கண்ட கண்ட பாலையும் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டுவது, தொற்று நோய்களை வரவேற்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதற்கு சமம்! இது தேவையா?

ப்ரீமெச்சூர் அதாவது குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே பிறந்துவிடும் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கும் சக்தி இருக்காது என்கிறார்களே?
உண்மைதான்! ஆனால்... தாய் மனது வைத்தால் குழந்தைக்கு மென்மையாக, உறிஞ்சக் கற்றக் கொடுக்கலாம். ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கு தேவைப்படுவது தாயின் வெதுவெதுப்பும், அரவணைப்பும்தான். குழந்தையை உடலோடு அணைத்துக் கொண்டு, உணர்வுரீதியான ஒரு ஒட்டுறவை தாய் முதலில் குழந்தையுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உறவுப் பாலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. அப்புறம் அடுத்தடுத்த ஸ்டெப்களில் மெல்ல மெல்ல குழந்தை, பாலை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கும். போகப் போக, பால் குடிக்கும் ஸ்பீடு அதிகரித்து, நார்மல் குழந்தையின் வேகத்தை எட்டிவிடும்...!

குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
ரொம்ப சிம்பிள்! ஒரு நாளில் குழந்தை கிட்டத்தட்ட நான்கு முறைகள் மலம் கழிப்பதாலும், ஆறு டயப்பர்களை நனைக்கும் அளவுக்கு மூச்சா போவதாலும், பொதுவாகவே பிறந்தவுடனே குழந்தைகளின் எடை குறையும். போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்தால், பதினைந்தே நாட்களில் வெயிட் ஏறி, பிறக்கும் போது இருந்த எடைக்கு மீண்டும் திரும்பி விடும். இதற்குப் பிறகு, வாரத்திற்கு 150_250 கிராம் என்ற கணக்கில் குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும். இந்தக் கணக்கு சரியாக இருந்தால், உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்-கிறது என்றுதான் அர்த்தம்!

தாய்ப்பாலை பிழிந்தெடுத்து, சேமித்து வைக்கலாமா?
வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு, இப்படி தாய்ப்பாலை பிழிந்தெடுத்து சேமிப்பது உபயோகமாக இருக்கும். பிழிந்த தாய்ப்பாலை 5_7 நாட்கள் வரை Fridge இல் சேமித்து வைக்கலாம். Freezer இல் வைத்தால், 6 மாதங்கள் வரைகூட பாதுகாக்கலாம். Fridge இல் இருந்து எடுத்ததும் அப்படியே குழந்தைக்குத் தரக்கூடாது. ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிறைத்து, உறைந்த தாய்ப்பாலை அதில் அமிழ்த்தி, சில மணி நேரங்கள் கழித்து, குழந்தைக்குத் தேவைப்படும் வெதுவெதுப்பான டெம்பரேச்சரில்தான் கொடுக்க வேண்டும்!

இரண்டே மாதங்களான சில குழந்தைகளுக்கு மாறுகண் போலத் தெரிகிறதே?
பயப்பட வேண்டாம்! பிறந்த சில நாட்களில், குழந்தை அருகில் உள்ள பொருட்களை வேடிக்கை பார்க்கத் துவங்கும். அப்படி பார்க்கும்போது, சில நேரங்களில் மாறுகண் விழுவது சகஜம்தான்! 4 மாதங்கள் வரை இப்படி மாறுகண் தோன்றுவதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு பிறகும் தொடர்ந்தால்... மருத்துவரை அணுகலாம்.

குழந்தையின் மார்புக் காம்பில் வீக்கம் இருக்கிறது. சில நேரங்களில் வெள்ளைத் திரவம் வெளியேறுகிறது. இதைப் பிழிந்து எடுக்கலாமா?
தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் இயற்கையான ஹார்மோன்களால், சில நேரங்களில், குழந்தையின் மார்புக் காம்புகளிலிருந்து வெள்ளைத் திரவம் கசிகிறது. இதைப் பிழிந்து எடுக்கக்கூடாது. 3_4 மாதங்களில் இந்தக் கசிவு தானாகவே நின்றுவிடும்.

பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பிலிருந்து வெள்ளை திரவம் கசிகிறது. சில நேரங்களில் பீரியட்ஸ் ஆனது போல இரத்தம் கூட வெளியேறுகிறதே?
இதற்கும் காரணம் அம்மாவின் பாலில் இருந்து கிடைக்கும் இயற்கை ஹார்மோன்கள்-தான். குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலை தானாகவே சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

பிறந்த ஆண் குழந்தையின் விதைப் பையில் வீக்கம் இருக்கிறதே?
விதைப்பையில், ஹைட்ரோஸீல் (Hydrocele) என்ற ஒரு வகை திரவம் தேங்கி இருப்பதால், வீக்கம் உண்டாகக்கூடும். குழந்தை பிறந்து முதல் சில மாதங்களில் வீக்கம் சரியாகவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

குழந்தைக்கு இன்னும் உச்சந்தலையில் உள்ள எலும்புகள் சேரவில்லையெனில்! அங்குத் தண்ணீர் படலாமா?
தாராளமாக! தலையை தண்ணீர் விட்டு அலசலாம். பயம் ஒன்றும் இல்லை.

பிறந்த குழந்தையின் உடல் திட்டு திட்டாக பச்சை நிறமாக இருக்கிறதே? குழந்தைக்கு ஆபத்தோ என்று பயமாக இருக்கிறது!
கவலை வேண்டாம்! தோலின் நிறத்தை தீர்மானிக்கும் மெலனின் என்ற வஸ்துதான் பச்சை நிறத்தில் திட்டு திட்டாக காட்சியளிக்கிறது. குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் முடிவதற்குள், இந்த நிலைமை சரியாகிவிடும்.

குழந்தையின் உடலெங்கும் சிகப்பு முடிச்சுக்கள் இருக்கிறதே... ஏதாவது அலர்ஜியா?
இல்லை! சில நேரங்களில், இரத்தக் குழாய்கள் தோலுக்கு வெளியே இப்படி ஸ்பெஷல் தரிசனம் கொடுப்பதுண்டு. இந்த நிலைக்குப் பேர் ‘ஹிமாஞ்சியோமா’ என்பார்கள். இந்த முடிச்சுகளை கையால் அழுத்தக்கூடாது. சிறிது காலத்தில் தானே போய்விடும் என்றாலும், மருத்துவ ஆலோசனை பெறுவதில் தவறொன்றும் இல்லை.

குழந்தைக்கு, தொப்புள் கொடி விழுந்த போது, சில இரத்தத் துளிகள் வெளியேறியது. இப்போது அந்த இடத்திலிருந்து ஒரு வகை திரவம் சுரக்கிறது. தொப்புள் வேறு துருத்திக் கொண்டு நிற்கிறது. ஏதாவது பிரச்சினையா?
தொப்புள் துருத்திக் கொண்டு நிற்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை. கொடி விழுந்த ரணப்பகுதி ஆறுவதற்கு ஒரு சிம்பிள் வைத்தியம் இருக்கிறது. ரணப் பகுதியில் சிட்டிகை உப்புத் தூளைப் போட்டு இரண்டு துளி வெந்நீரை தெளித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த வைத்தியத்தை தினமும் இரண்டு முறை தொடர்ந்து நாலைந்து நாட்களுக்கு செய்து வந்தால், ரணம் ஆறிவிடும். ஆனால்... தொப்புளைச் சுற்றி சிகப்பு கோடுகளோ அல்லத ஒருவித துர்நாற்றமோ இருந்தால், மருத்துவரைத்தான் அணுக வேண்டும்.

குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல், வயிற்றுப் போக்கு என்று வருகிறதே...? இது சகஜமாக வந்து போவதுதான் என்றாலும், இதுபோன்ற நோய் வரும்போது, அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது?
கவலைவேண்டாம் இதோ, கீழேயுள்ள அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு வரும் பட்சத்தில் குழந்தை சீரியஸாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்...
சளியின்போது...
- 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்...
- இருமலில் மஞ்சள் நிற சளி வெளியேறினால்...
- மூக்கிலிருந்து பச்சைநிற திரவம் ஒழுகினால்...
- குழந்தைக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால்...
- ஜுரம் வரும்போது...
- குழந்தையின் வயது இரண்டு மாதத்திற்கும் குறைவாக இருந்தால்...
- மருந்துக்கு கட்டுப்படாத... 105 டிகிரிக்கும் கூடுதலான ஜுரம் என்றால்...
- மூச்சுவிட சிரமப்பட்டால்...
- குழந்தைக்கு மயக்கநிலை ஏற்பட்டால்.
- இருமல் வரும்போது...
- வறட்டு இருமலாக இருந்தால்...
- மூச்சுத் திணறல் ஏற்பட்டால்...
- குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு மோசமான இருமலாக இருந்தால்.
- வயிற்றுப் போக்கு வரும்போது...
- இரண்டு வார காலத்துக்கும் கூடுதலாக வயிற்றுப் போக்கு தொடர்ந்தால்...
- மலத்தில் இரத்தம் வெளியேறினால்...
- 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்...
- யூரின் அளவு குறைவாக இருந்தால் (ஒரு தினத்துக்கு 3 டயப்பர்களைக்கூட பயன்படுத்தாத நிலை)
- குழந்தையின் நாக்கு, உதடு உலர்ந்து போதல், கண் சொருகுதல் போன்றவை இருந்தால்...
- மூச்சுவிட சிரமப்பட்டால்...
- தாய்ப்பால் குடிக்க மறுத்தால்...
வாந்தி வரும்போது...
- 24 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து குழந்தை வாந்தி எடுத்தால்...
- யூரின் அளவு குறைந்தால்...
- உதடும், நாக்கும் உலர்ந்து போய், குழந்தையின் கண் சொருகினால்...
- வாந்தியில் இரத்தம் வந்தால்...
- கரும்பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால்...
- மயக்கநிலை ஏற்பட்டால்...
இதுபோல எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

பிறந்த இரண்டு மாதத்திற்குள் குழந்தைக்கு ஜுரம் வந்தால் ஆபத்தா, ஏன்?
நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்க் கிருமிகளுடன் போராடும் போதுதான் ஜுரம் உண்டாகிறது, இரண்டு மாதக் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் இருப்பதால்தான், அந்த நிலையில் ஜுரம் ஏற்படும் போது, டாக்டர்களுக்கு கவலையைத் தரு-கிறது.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது, தெளிவான திரவ உணவு (Clear liquids) கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ‘கிளியர் லிக்விட்ஸ்’ என்றால்?
கட்டிகள் இல்லாத திரவ உணவு. உதாரணமாக இளநீர், சாதம் வடித்த கஞ்சி + உப்பு, காய்கறி வேகவைத்த நீர் + உப்பு, பருப்பு வேகவைத்த நீர் + உப்பு, ஓ.ஆர்.எஸ். (ORS - Oral Rehydration Solution) (தண்-ணீர் + உப்பு + சர்க்கரை கலவை).

உடல் சரியில்லாத நிலையில், குழந்தைகளை குளிப்பாட்டாமல் இருக்கும்போது, தலையில் குழந்தைகளுக்கு அடை அடையாக அழுக்கு நிற்கிறதே! அதற்கு என்ன செய்வது?
சரிதான் போங்க! ஏதோ குழந்தையை குளிப்பாட்ட வேண்டாமென்றால் உடம்பைக் கூடவா துடைக்காமல் இருப்பது? வெது வெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த டவலைக் கொண்டு, குழந்தையின் தலை மற்றும் உடலை தினசரி துடைத்து வந்தால், இதைப் போன்ற அழுக்கடைகள் நிற்காது. சரி, வந்துவிட்டது! இனி என்ன செய்யலாம்? சிட்ரிமைட் லோஷனை (Cetrimide Lotion) பயன்படுத்தினால், அழுக்கடைகள் போயே போச்சு! இட்ஸ் கான்!

குழந்தையின் மூக்கடைப்பை சரி செய்வதற்கு, மூக்கில் மெடிகேட்டட் டிராப்ஸ் விடுவது நல்லதா?
மெடிகேட்டட் டிராப்ஸை அளவாக, டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், சளி ஜவ்வு பாதிக்கப் படக்கூடிய ஆபத்து இருக்கிறது. மெடிகேட்டட் டிராப்சுக்கு பதிலாக நேஸல் சலைன் டிராப்ஸை பயன் படுத்தலாம். இப்போது கடைகளில், சளியை உறிஞ்சக் கூடிய மியூக்கஸ் ஸக்கர் பல்புகள் (Mucus Sucker bulbs) கிடைக்கிறது. மருத்துவ ஆலோசனை பெற்று இதையும் பயன் படுத்தலாம்.

குழந்தைக்கு சளி பிடித்திருக்கும்போது திரவ ஆகாரம் தந்தால் நல்லது என்கிறார்களே! நிஜமா?
ரொம்பச்சரி.. காரணம், சளி உள்ளபோது மூச்சு அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. அதை ஈடுகட்டுவதற்காக திரவ ஆகாரத்தை அதிகமாக உட்கொள்ளலாம். கைக் குழந்தைகளுக்கு, தாய்ப்-பாலின் அளவை அதிகரியுங்கள்.

சு. சசிரேகா
நன்றி - குமுதம்

 

http://kulanthaikal.blogspot.com/2003/12/blog-post.html

நான் வளர்கிறேனே மம்மி!

குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.

குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட உங்களது சிறிய தூண்டுதல் போதுமானது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், பரிசோதனைகளைச் செய்யவும், பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் குழந்தைகளிடம் ஏராளமான ஆற்றல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பீஜோ என்ற மேல்நாட்டு கல்வி நிபுணர், வளரும் குழந்தைகளின் பாடத்திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவது... குழந்தைகள் தங்கள் சூழலில் அதிகபட்ச வளர்ச்சியை அடைய உதவ வேண்டும் என்பதுதான்.

ஜோஹன் பெஸ்ட்லோசிஸ் என்ற மேல்நாட்டு அறிஞர், ‘குழந்தைகளின் கல்வியானது, அவர்களது இயற்கையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்', என்று வலியுறுத்தினார். அம்மாக்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும், வீடுதான் சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகள் விளையாட்டின் மூலம் பாடம் பயிலும், கிண்டர்கார்டன் என்ற முறை 1930 ஜெர்மனியில் உருவானது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவாக இந்த கிண்டர் கார்டன் கல்வி முறை உதவும் என்ற எண்ணத்தில் ஃபிரெட்ரிக் ஃப்ரீவெல் என்பவர் உருவாக்கினார். வளர்ந்த குழந்தைகளின் பாடத்திட்டத்தைவிட வித்தியாசமான கல்வித்திட்டம் இளங்குழந்தைகளுக்கு தேவை என்பதால், களிமண் பொம்மை செய்தல், வரைதல், பிளாக்குகளைப் பயன்படுத்தி கற்றல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். கே.ஜி. வகுப்புகளிலிருந்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைக்கு பய உணர்ச்சி ஏற்படுவது இயற்கையே. கே.ஜி. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாக வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை அதிகம் திணிக்க மாட்டார்கள். விரும்பிய நேரத்திற்கு பள்ளிக் கூடத்துக்கு பெற்றோருடன் சென்று கொண்டிருந்த குழந்தை, முதல் வகுப்பிற்குள் நுழையும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. பசிக்கும் போது சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம் என்று கேஜி. வகுப்புகளில் பழகிய குழந்தைக்கு முதல் வகுப்பின் சூழல் முற்றிலும் புதிதாயிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பிற்கு வந்தாக வேண்டும், உணவு இடைவேளையின் போதுதான் சாப்பிட வேண்டும் என்பன போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது. இதனால்தான் முதல் வகுப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.இரண்டு வருடங்களாக அனுப்பிய அதே பள்ளிதானே.அப்போதெல்லாம் அழாமல் சென்ற குழந்தை இப்போது ஏன் அடம் பிடிக்கிறது என்று புரியாமல் பெற்றோர்கள் விழிப்பார்கள். காரணம் இதுதான்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. அடுத்து, இதுவரை குழந்தையாக மதிக்கப்பட்ட நம்மை இப்போது பெரியவனாக்கி பார்ப்பதையும், திடீரென தம் மேல் பொறுப்புகள் சுமத்தப்படுவதையும் அது விரும்புவதில்லை.

இந்நிலையைத் தவிர்க்கத்தான் ‘இயற்கையோடு இணைந்த கல்விமுறை’ என்ற அமைப்பை ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தினார். மேலை நாடுகளில் பிரபலமானமுறை இது. வகுப்பறை, மேஜை, நாற்காலி, பிரம்பு என பயமுறுத்தும் வழக்கமான விஷயங்கள் இல்லாமல், மரம், செடி கொடிகளுக்கிடையே வகுப்புகள் நடத்தும் வித்தியாசமான முறை இது. இந்த முறை எல்லா பள்ளிகளிலும் பின்பற்றலாம். பள்ளி என்றாலே ஏற்படும் பயத்தை அகற்றி, விருப்பத்தோடு முன் வந்து மாணவர்களே கற்றுக் கொள்வர்.

முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடல்களைக் கற்றுத்தரும் முறை நம் பள்ளிகளில் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பாடமுறை. வகுப்பறையில் இப்படி பாட்டுப் பாடி விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தை வீட்டிலும் ராகம் போட்டுப் பேசும். வாய்விட்டு, சத்தமாக எல்லாரும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதால், வகுப்பறையில் சக மாணவர்களோடு சேர்ந்து சத்தமாக பாட்டுப் பாடும் குழந்தை வீட்டில் ‘சாப்பாடு வேண்டுமா?’ என்று கேட்டால் கூட ‘ஆமாம், வேண்டும்...’ என்பதை பத்து வீட்டிற்கு கேட்கும்படி சத்தமாய் சொல்லும். வகுப்பறையில் சத்தமாகப் பேசிப் பழகியதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘ஏன் எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தற?’ என்று முதுகில் அடிக்கக்கூடாது.

இந்த வயதுக் குழந்தைகள் வீட்டில் நாம் சொல்லித் தரும் பாடங்களை உன்னிப்பாகக் கவனிக்கமாட்டார்கள். ம்...ம் என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். திடீரென 'அம்மா, பக்கத்து வீட்டுல சினிமா ஓடுது. நாமும் டி.வி போடலாம்...' என்பார்கள். ‘அப்ப, இவ்வளவு நேரம் நான் சொல்லிக் கொடுத்த பாடத்தை கவனிக்காம, பாட்டு கேட்டுகிட்டிருந்தியா?’ என்று கேள்வியெழுப்பாதீர்கள். இந்த வயதில் கவனக்குறைவும், கவனச்சிதைவும் ஏற்படுவது இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் அதிகநேரம் ஒரே மூச்சாய், கவனமாய் பாடத்தை கவனிக்க முடியாது. சில குழந்தைகள் பாதிபடிப்பிலேயே தூங்கி வழியும். புத்தகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கவும் முடியாது. பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பாடம் சொல்லித் தந்து வெறுப்பேற்றாதீர்கள். அவ்வப்போது இடைவெளி அவசியம். பதினைந்து நிமிடங்கள் படித்தாயா? சரி, கொஞ்ச நேரம் விளையாடு’ என்று அனுப்பி வையுங்கள்.

இல்லாவிட்டால் படிக்கும் முறையையாவது மாற்றுங்கள். பத்து நிமிடங்கள் கணக்குபாடம் படித்துவிட்டால், அடுத்து தமிழ் அல்லது ஆங்கில ரைம்ஸ்களுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். அதுவும், உட்கார வைத்து சொல்லித் தராமல் ரைம்ஸ் அடங்கிய ஒலிநாடா, அல்லது சி.டி.களைப் போட்டு அதைக் கேட்கச் செய்யலாம். இப்படி டேப்பில் பாடலாக கேட்கும்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும்.

இதே போல் கதைகள் அடங்கிய ஒலிநாடாக்களையும் கேட்கச் செய்யலாம். வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பழக இவை உதவும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்க வைத்து, புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங் கள். அதே போல், க்ரெயான்கள் மற்றும், கலர் பென்சில்களால் அவர்கள் வரையும் படங்களை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள். மறக் காமல் உங்கள் உறவினர் கள் வரும்போது, இது இவன் வரைந்த படம் என்று பெருமையாய் சொல்லுங்கள். மற்றவர்களின் பாராட்டு, ஆதரவும் இன்னும் இதைப் போல நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகத் தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். நேரடியாக வற்புறுத்தி செய்யச் சொல்வதை விட, இப்படி பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தையின் திறமையை வளர்க்கலாம்.

நன்றி - அரும்பு

http://kulanthaikal.blogspot.com/2003/10/blog-post.html

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்து படுக்கையை நனைப்பது என்பது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா நாடுகளிலும் குழந்தைகளிடையே காணப்படும் ஒரு பொதுவான குறைபாடு ஆகும்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் இக்குறைபாடு காணப்படும். பிறந்ததிலிருந்தே படுக்கையை நனைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு வகையாகவும், சிறுநீரைக் கட்டுப்படுத்தி வெளியேற்றும் திறமை வந்தபின்பு சில காலம் இந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்து திரும்பவும் ஆரம்பிக்கும் குழந்தைகளை மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம். இதில் முதல் வகை குழந்தைகளைக் காட்டிலும் இரண்டாம் வகை குழந்தைகளை விரைவில் குணப்படுத்த முடிகிறது.

பெரும்பாலான குழந்தைகள் ‘நாம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றோம்’ என்ற உணர்வு இல்லாமலேயோ அல்லது கனவில்தான் நாம் சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்ற உணர்விலோ படுக்கையை நனைக்கின்றனர். அதே சமயம் பல குழந்தைகளுக்கு நாம் படுக்கையில்தான் சிறுநீர் கழித்துக்கொண்டு உள்ளோம் என்ற உணர்வு இருந்தபோதும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றன.

காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையை நனைப்பதற்கான காரணங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. உடலியல் காரணங்கள்
2. மனதியல் காரணங்கள்.
காரணங்கள் பல்வேறாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்த உடன் முறையான டாய்லெட் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்காமல் போவதே அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

உடலியல் காரணங்கள்:
சிறுநீர் வழிப்பாதை நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இருப்பது, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் சில நரம்பியல் குறைபாடுகள், சிறுநீர் வழிப்பாதையில் பிறப்பிலிருந்தே காணப்படும் குறைபாடு, சிறுநீர்ப்பை வீக்கமும், சிறு வயது சர்க்கரை நோய், குடலில் காணப்படும் பூச்சிகள் போன்றவை உடலியல் காரணங்களாகும். இருந்தாலும் மிகமிகக் குறைவான அளவு குழந்தைகளே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மனதியல் காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களில் மனதியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் நடக்கும் சுற்றுப்புற நிகழ்ச்சிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக் கூடத்திற்கு அல்லது புது வீட்டுக்கு மாறுவது, வீட்டிற்குப் புதிதாக ஒரு குழந்தை (தம்பி அல்லது தங்கை) வருவது, குழந்தையிடம் நெருக்கமாக இருக்கும் யாராவது இறந்து போவது போன்ற நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் வெளிப்பாடாக படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகின்றது.


குழந்தைகளின் அடி மனதில் பதிந்து போன சில பய உணர்வுகள் (குழந்தையை பயப்படுத்தி சாப்பிட வைப்பதற்காகக் கூறப்படும் பயங்கர கதைகள் மற்றும் சில விலங்குகளைப் பற்றிய பயம்), குழந்தையின் மனதில் தோன்றும் பாதுகாப்பற்றத் தன்மை, குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய தவறுகளுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள், பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள், குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போவது, குழந்தையை எப்போதும் கேலி செய்து கொண்டு இருப்பது, அவர்களைத் தாழ்த்திப் பேசிக் கொண்டு இருப்பது போன்ற செயல்கள்கூட குழந்தையின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

நமது விருப்பு, வெறுப்புகளைக் குழந்தைகளின் மேல் திணிப்பதும், யார் மீதோ இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்குக் குழந்தைகளை வடிகாலாக (அடிப்பது, கடுமையாகத் திட்டுவது) பயன்படுத்துவது போன்ற செயல்களால், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய குறைபாடுகள் முதல், ஒரு குடும்பத்தை மட்டுமல்லாமல், சமூகத்தையும் சேர்த்து பாதிக்கும் நடத்தைக் குறைபாடு போன்ற மனதியல் பாதிப்புகள் வரை ஏற்படலாம். Acid phos, Aconite, Cimicifuga, Aloes, Sulphur போன்ற ஹோமியோபதி மருந்துகளை அறிகுறிகளுக்கு ஏற்ப மாற்றி, மாற்றி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். படுக்கையை நனைக்கும் பரிதாபக் குழந்தைகளும் பலன் பெறும்.

http://kulanthaikal.blogspot.com/2004/07/blog-post.html

 

பிறந்த உடனே குழந்தை பாலுப்கு அழுதால் என்ன செய்வது?
டொக்டர் - ஜெயசிறீ கஜராஜ்

அப்...பாடா!... இத்தனை கஷ்டப்பட்டு ஒருவழியாக நல்லபடியா குழந்தை பிறந்துவிட்டது! பெரிய தொல்லைவிட்டது... என்று எந்தத் தாயும் பிரசவத்துக்குப் பின் நினைத்துவிட முடியாது.!

கர்ப்பப்பைக்குள் இருந்தவரை குழந்தைக்கான ஆகாரத் தேவையை தாய்தான் மறைமுகமாகப் பார்த்துக்கொண்டாள். அதாவது, அவள் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் குழந்தைக்கு, தொப்புள்கொடி மூலம் சென்றடைந்தன. குழந்தை வெளியே வந்ததும் தாயின் பொறுப்புகள் பல மடங்கு கூடித்தான் போகிறதே தவிர குறைவதில்லை! அதில் முக்கியமான பொறுப்பு, குழந்தையின் ஆகாரத் தேவையை வேளாவேளைக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

பிரசவித்த தாய் அதற்கு ஏற்பாடு செய்யப் பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்றும், பூ போன்ற பட்டுப் பாப்பாவுக்கு பரிசுத்தமான, சத்தான ஆகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும்தான் கடவுள், அந்த ஆகாரத்தையும் தாயின் உடலில் இருந்தே பாப்பாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்திருக்கிறார்.

ஆனால், அதன் அருமை புரியாமல் இன்று பல பெண்கள், தங்கள் அழகு கெட்டுப் போய்விடுமோ என்கிற பயத்தில், குழந்தைக்கு, அதற்குக் கட்டாயம் கிடைக்க வேண்டிய இயற்கையான உணவைக் கிடைக்காமல் செய்துவிடுகின்றனர். இது மிகவும் வருத்தப்பட வைக்கிற விஷயம்.

கருத்தரித்த காலம் தொடங்கி தாயின் மார்பகம், குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏதுவாக அளவில் பெரிதாகத் தொடங்கும். அதிலும் குறிப்பாக, குழந்தை பிறக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சமயத்தில் மார்பகத்தின் வளர்ச்சி அதிகப்படியாக இருக்கும். நிலிகிழிஞிஹிலிகிஸி ஜிமிஷிஷிஹிணிஷி என்னும் ஒருவித திசுக்களாலானது நம்முடைய மார்பகம். அதிலுள்ள சுரப்பிகள் வளர வளரத்தான் தாயின் மார்பகமும் அளவில் பெரிதாகத் தொடங்குகிறது.

குழந்தை பிறந்ததும் தாயின் உடல் தாய்ப்பால் ஊட்ட தன்னையும் அறியாமல் தயாராகிறது.

பிறந்த குழந்தைக்கு யாரும் கற்றுத்தராமலேயே தாயின் மார்பகத்தைக் கண்டுகொண்டு பாலை உறிஞ்சத் தொடங்குகிறது. அதுதான் தாயின் உடலுக்கு முக்கியமான ஒரு சமிக்ஞையாக அமைகிறது. பால் வராவிட்டாலும் குழந்தை, பாலை உறிஞ்சிக்கொள்ள முயலும்போது அந்தச் செய்கையானது தாயின் மூளைக்கு, குழந்தை பிறந்தாகிவிட்டது என்கிற செய்தியைத் தெரிவிக்கிறது.

மூளைக்கு சமிக்ஞை கிடைத்ததும் பால் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்தே கட்டளை மார்பகத்தைச் சென்றடைகிறது. இந்த சமிக்ஞை சரியானபடி மூளைக்குச் சென்றடைந்து கட்டளையாகத் திரும்பி வர சற்றே தாமதமாகலாம். அதனால் பாப்பாவுக்குப் பால் கிடைக்க 24_48 மணிநேரம் வரை கூட ஆகலாம்.

தாயின் மூளையிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போவது மட்டும் தாய்ப்பால் சுரக்கத் தாமதமாவதற்குக் காரணமில்லை.. பாலை உறிஞ்சிக் குடிப்பது என்பது பாப்பாவுக்கும் புதிது என்பதாலும்கூட பால் சுரக்காமல் போகலாம்.

எனக்குத் தெரிந்து குழந்தை பிரசவமான ஓரிரு மணிநேரத்தில் வரக்கூடிய முதல் புகாரே, ‘‘அம்மாவுக்கு பால் வரலே... என்ன பண்ணறது டாக்டர்..?’’ என்ற, அம்மாவையும் பாப்பாவையும் சுற்றியிருக்கும் அத்தை, அம்மா, அக்கா போன்ற சொந்தக்காரர்களின் கேள்விதான். இவர்களில் பலர், பல குழந்தைகள் பெற்ற அனுபவம் உடையவராக இருந்தாலும் டென்ஷனாகின்றனர். இவர்கள் பதறுவதோடு அம்மாவையும் பதறச் செய்வதுதான் கொடுமை.

புதிதாகப் பிறந்த குழந்தையை எப்படித் தூக்குவது, கையாள்வது என்றுகூட அனுபவமில்லாத தாய்க்கு, இதனாலெல்லாம் பதற்றம் ஏற்பட்டு, பால் வராது தடைப்பட்டுக்கூடப் போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அம்மாவைச் சுற்றியுள்ள சொந்தபந்தங்கள் அவரை டென்ஷன் படுத்தாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்!

இயற்கையில் எந்த ஒரு தாய்க்கும் தாய்ப்பால் சுரக்காமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தை பிறந்தால் பால் சுரந்தே தீரவேண்டும். இது, ஒரு மாதிரியான சுழற்சி முறையில் வரக்கூடிய விஷயம். அதற்காக நாம்தான் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

‘‘குழந்தை பசியால் அழுகிறதே... அதுவரைக்கும் எப்படிக் காத்திருப்பது?’’ என்று சிலர் கேட்பது புரிகிறது.. பிரசவமாகி மூன்று நாட்கள் வரை, எந்தவிதமான உணவும் இல்லாமல் இருக்க பாப்பாவின் உடல் தயார் நிலையில்தான் இருக்கிறது. நிலிசீசிளிநிணிழி ஷிஜிளிஸிணிஷி என்கிற, குழந்தையின் உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துக்களை, உணவு கிடைக்காத அந்த ஆரம்ப நாட்களில் பாப்பாவின் உடல் தன்னால் பயன்படுத்திக் கொள்ளமுடியும்! அதுவரை நாமும் பெரிதாகக் கவலைப்படத்தேவையில்லை.

இது புரியாமல் பலர் பாப்பா அழுகிறது என்று சொல்லி, அதற்கு சர்க்கரைத் தண்ணீரையோ பால் பவுடரையோ கலக்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தேவையில்லாதது. குழந்தைக்கு தேவைப்படும் போது தாய்தான் பால் தரவேண்டும். இது ஒரு சைக்கிள் ரியாக்ஷன். இடையில் நாம் புகும்போதுதான் எல்லாமே குளறுபடியாகிவிடுகிறது. எப்படி?

குழந்தை அழுகிறது என்று நாம் சர்க்கரைத் தண்ணீர் அல்லது பால்பவுடர் போன்ற எதையோ கொடுக்க, அதுவும் திருப்தியாகி அழுகையை நிறுத்திவிடுகிறது. இப்படி நாம் தாய்ப்பாலுக்குப் பதிலாக எதையோ கொடுப்பதால் குழந்தைக்குத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிடுகிறோம். மேலும், தாய்ப்பால் இயற்கையில் இனிப்பில்லாமல் சப்பென்றுதான் இருக்கும். தாய்ப்பாலுக்குப் பதிலாக இனிப்பானதொரு விஷயம் கிடைத்து விடுவதால் குழந்தை, சுவைக் காரணமாகக்கூட தாய்ப்பாலை நிராகரித்துவிடும் வாய்ப்புள்ளது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தாயின் மார்பிலிருந்து குழந்தை உறிஞ்ச உறிஞ்சத்தான் பால் கொஞ்சம் கொஞ்சமாக சுரக்கும். புட்டிப்பாலில் உள்ள நிப்பிளில் துளை பெரிதாக இருப்பதால் ஒருமுறை உறிஞ்சும்போதே குழந்தைக்கு அதிகப்படியாகப் பால் கிடைத்துவிடுகிறது. எளிதாகவும், அதே சமயம் இனிப்பாகவும் பால் கிடைத்து விடுவதால் குழந்தை புட்டிப்பாலையே அதிகம் விரும்பி, தாய்ப்பால் குடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடும். பிறகெப்படி அம்மாவுக்குத் தொடர்ந்து பால் சுரக்க முடியும்?

அழும் குழந்தையை எப்படித்தான் சமாதானப்படுத்துவது என்றுதானே கேட்கிறீர்கள்.. பிறந்த குழந்தை சிறிது நேரம் அழுதால், தவறொன்றும் இல்லை. தொடர்ந்து அதிகநேரம் அழுது கொண்டே இருந்தால் மட்டும் குழந்தையை மருத்துவரிடம் காட்டலாம்..

சந்திப்பு: ஜி. கிருஷ்ணகுமாரி
nantri-kumutham-sinehithy

http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post.html

குழந்தைகளின் ஜீரணம் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.

‘‘இப்பவெல்லாம் இவனுக்கு பசியே எடுக்கறதில்லே, " "பாலை வாய்கிட்டே எடுத்துக் கொண்டுபோனாலே குமட்டுகிறது இவளுக்கு,’’ ‘‘டாக்டர், இப்போதெல்லாம் இவன் சரியாகவே சாப்பிடுவதில்லையே’’ _ இவையெல்லாம் மிகப் பெரும்பாலான இளம் அம்மாக்கள் மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகள்.

குழந்தைக்கு சிகிச்சை இருக்கட்டும். அம்மா முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அன்னை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் குழந்தைகளைப் படைத்துப் பாதுகாக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதன் உடலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஜீரண சுரப்பிகளிலிருந்து எல்லாமே வேலை செய்கின்றன. எனவே அம்மா மேற்படி புகார்களை அடிக்கடி கூறி அல்லல் படவேண்டாம்.

குழந்தையைச் சாப்பிட வைக்க அம்மா பலவித யுக்திகளைப் பயன்படுத்துகிறாள். ‘‘ப்ளீஸ் சாப்பிடு கண்ணா, அம்மாவுக்கு வேறே வேலை இருக்குது ராஜாத்தி’’ என்பதுபோல் அவள் கொஞ்சக் கூடும். ‘‘நீ இதை சாப்பிட்டாதான் இன்னிக்கி வீட்டிலே டி.வி. போடுவேன்’’ என்பது போன்ற பயமுறுத்தல்களாக அவைகள் இருக்கலாம். ‘‘நீ இதைக் காலி பண்ணினால் நான் உனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தருவேன்’’ என்பது போன்ற லஞ்ச பேரத்தில் அவள் இறங்கலாம்.

இவ்வளவு பாடுகளும் வேண்டாமே!

குழந்தை தன் உடலின் தேவையை _ அதாவது உணவு தேவை என்ற உணர்வைதானே வெளிப்படுத்தும். அப்போது உணவளித்தால் போதுமானது. இதைப் புரிந்து கொள்ளாமல் அம்மா தன் முழுக் கற்பனை சக்தியையும் செலவழித்து குழந்தையின் வாயில் தொடர்ந்து உணவை அடைத்தால் அது வாந்தி எடுக்கக்கூடும். அல்லது வயிற்றை வலிக்குது என்ற பொய்க் காரணங்களைக் கூறலாம். தலைவலி நாடகம் கூட போடலாம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் பசிக்கும்போது (உங்களுக்கு அல்ல, குழந்தைக்கு) மட்டுமே பிள்ளைகளுக்கு உணவளித்து சந்தோஷப்படுங்கள்.

இதைவிடுத்து குழந்தையின் பசியை அம்மா தானாக அதிகப்படியாக கணித்து வருத்தப்படுவதோ, வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டாமா என்றபடி (அதாவது வேளாவேளைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணவாம்!) தவறு செய்வதும் வேண்டாமே.

போதாக்குறைக்கு சில அம்மாக்கள், குழந்தையை எடைபார்க்கும் இயந்திரத்தின் மீது நிற்க வைத்து, அட்டவணைப்படி இருக்க வேண்டிய எடைக்குக் கொஞ்சம் குறைந்தாலும் ஏதோ குடிமுழுகியதுபோல் கவலைப்படுவதும், அதிகப்படி உணவைத் திணிப்பதும்... தவிர்க்க வேண்டிய செயல்கள் என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல?

குழந்தையின் எடை என்பது பெரும்பாலும் அவனது தாத்தா போன்றவர்களால் நிர்ணயக்கப்படுகிறது. அதாவது பரம்பரைதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புரியாமல் குழந்தையின் வாயில் உணவைத் திணிக்கும்போது, அது உணவைக் கக்குகிறது. அல்லது வாந்தி வருவதுபோல் பாவனை செய்கிறது.

கவலைப்படாதீர்கள். தனக்குத் தேவையான உணவைச் சாப்பிட்டு உங்கள் குழந்தை நன்றாகவே வளருவான்.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டங்களில் குழந்தைக்கு மருத்துவப்பரிசோதனை செய்து நோய்கள் எதுவும் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஜீரணம் என்பது வாயிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். டைலின் என்ற சுரப்பி எச்சிலில் கலக்கிறது. இது ஜீரணத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகத்தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாயில் சிறிது நேரம் உணவு இருந்தால்தான் இதுபோன்ற திரவங்கள் போதிய அளவு உணவோடு கலந்து ஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

உணவுப்பாதையைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவு சிறுகுடலில் நான்கிலிருந்து ஆறுமணி வரை தங்குகிறது. அங்கு உணவு நன்கு அரைக்கப்படுகிறது. அதிலுள்ள புரதம் போன்ற சத்துக்கள் ரத்தத்தினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. உடலுக்குத் தேவையில்லாத அநாவசியப் பொருளும் அதிகப் படியான நீரும் பெருங்குடலுக்குச் செல்கின்றன. அங்கே நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள திடப்பொருள்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுகின்றன.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு அவஸ்தை மலச்சிக்கல். உணவில் நீர்ச்சத்து அதிகமில்லாத போது மலச்சிக்கல் ஏற்படும். அப்போது மலம் இறுகிவிடுவதால், இந்த அவஸ்தை மேலும் மேலும் அதிகமாகவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு அதிக அளவில் சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுத்தாலே இந்த சிக்கல் தீர்ந்துவிடும். இல்லையென்றால் நார்ச்சத்து நிரம்பிய உணவை அளிக்க வேண்டும். வாழைத்தண்டு, கீரைவகைகள், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமுண்டு.

எனவே மருந்துகள் மூலம் குழந்தையின் மலச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பதை அம்மா மாற்றிக்கொள்ளவேண்டும். முதலில் மேலே குறிப்பிட்டபடி இயல்பான, இயற்கையான முறையில் மலச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். நம் உடலில் ஆசனவாய் உட்பட சுருங்கிவிரியும் தன்மை கொண்ட வால்வுகள் உண்டு. இவை முழுசக்தியுடன் செயல்பட முடியாமல் போனாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.

‘‘டாக்டர், என் பொண்ணு அடிக்கடி நிறைய இனிப்புகளாக உள்ளே தள்றா. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. அவ வயித்தில நிறைய பூச்சி வளர்ந்திருக்குமோன்னு கவலையா இருக்கு’’ என்று பல தாய்மார்கள் முறையிடுவதுண்டு.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இனிப்புகள் மூலமாகத்தான் குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் வரவேண்டும் என்றில்லை. மாறாக அசுத்தமான சூழல் காரணமாக இந்த நிலை ஏற்படவே வாய்ப்பு மிக மிக அதிகம். காய்கறிகளைச் சரியாகக் கழுவாமல் சமைப்பதன் மூலமாகக் கூட குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் சேரலாம்.

‘‘பேதி மாத்திரையைக் கொடுத்து என் மகன் வயிற்றிலே இருக்கிற பூச்சிகளையெல்லாம் எடுத்துடுங்க டாக்டர்’’ என்று கேட்டுக் கொள்ளும் அம்மாக்களுக்கு ஒரு ஆலோசனை. உடலில் சேர்ந்துவிட்ட புழுக்களை நீக்கிவிடுவது நல்லதுதான். ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாவது ஆனபிறகு இப்படிச் செய்வது நல்லது. அதற்குப் பிறகு வருடத்துக்கு மூன்றுமுறை இப்படிச் செய்தால் போதுமானது.

வயிற்றில் பூச்சி இருந்தால் அது மலத்தில் தெரியவரும் என்று சொல்லிவிட முடியாது. நாக்குப்பூச்சி மட்டுமே இப்படித் தென்படும். பிறவகைப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே வேதனையை ஏற்படுத்தும்.

‘‘கண்ட இடத்திலே சொறிஞ்சிக்கிட்டே இருக்கா. ஆகையினாலே அங்கெல்லாம் விளக்கெண்ணெய் பூசலாமா?’’ என்று சில அம்மாக்கள் சுற்றி வளைத்துக் குறிப்பிடுவது ஆசவாயைத்தான். எண்ணெய் தடவுவது தவறில்லை. ஆனால் குழந்தை தொடர்ந்து சொறியும்போது அதன் கவனத்தைத் திசைத் திருப்புவதும் உள்ளுக்குள் பூச்சி ஒழிப்பு மருந்தை அளிப்பதும்தான் சரியான தீர்வுகள்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் குழந்தை மலம் கழிக்காமலே இருந்தால் அதில் கவலைப்பட எதுவுமில்லை. சொல்லப்போனால் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் காலகட்டத்தில் இதெல்லாம் வெகுசகஜம். குழந்தைக்கு ஒருவருடம் நிறைந்தவுடனேயே உட்கார்ந்து டாய்லெட் போகப் பழக்க வேண்டும்.

சிலசமயம் ஆசனவாயில் ஏதாவது கீறல் (நகத்தினால் ஏற்பட்டிருக்கலாம்) ஏற்பட்டிருந்து, டாய்லெட் போகும்போது வலிக்கிறது என்கிற காரணத்தினாலேயே குழந்தை டாய்லெட் போவதைத் தள்ளிப்போட்டு இதன் காரணமாக மலச்சிக்கல் உண்டாகி இருக்கக்கூடும். மலத்தை இளக்கச் செய்ய பலவித மருந்துகள் உண்டு. அவற்றை வேறுவழியில்லை என்றால் பயன்படுத்தலாம்.

சந்திப்பு, கட்டுரை: ஜி.எஸ்.எஸ்.
nantri -Kumutham Health

 

http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post_18.html




குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.

இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டிது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.

கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.

'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.

சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.

குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.

துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.

இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.

"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.

முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.

அர்த்தநாரி

http://kulanthaikal.blogspot.com/2006/09/blog-post.html

உறவுகளையோ நட்புகளையோ சில சமயம் முடித்து கொள்ளும் போது நமக்கு அதை மனம் புண்படுத்தாமல் அல்லது நோகடிக்காமல் செய்ய தெரிவதில்லை. உறவை முடிந்த பின்னும் நாம் அதை பற்றி யாருடனாவது பேச நேர்ந்தால் அதில் நம் மீது தவறே இல்லை என்பதை நியாயப்படுத்த காரணங்கள் அடுக்குவதும் என்னைப்பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.

 

உறவுகள் முறிந்து போக இருவருக்கும் சரியான அலைவரிசை இல்லாதது காரணமாக இருக்கலாம். யார் மீதும் தவறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

நான் கவனித்தவரை பெற்றவர்கள் சில சமயம் குழந்தைகளிடம் ஒருவரை பற்றி தவறாக பேசுவது அவர்கள் மனதில் தவறான எண்ணம் தோன்ற காரணமாகிறது. பெற்றவர்கள் இடையே விவாதங்கள் நிகழ்வதில் தவறில்லை, அது ஒருவகையில் நல்ல ஆரோக்கியமான மன நிலைக்கு காரணமாகிறது. குழந்தைகளுக்கு வயது வந்த இருவர்கள் அபிப்ராய பேதங்கள் கொள்வதிலும் அதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறில்லை என்ற எண்ணத்தை தரும்.இது ஆரோக்கியமான சூழலை தரும். கருத்து வேற்றுமை இருந்தாலும் நேசம் கொள்வதில் தவறில்லை என்பதையும் காட்டும்.

 

ஆனால் அதுவே கோபமாகி கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்பு உணர்ச்சியை வெளியிட்டால், அது குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு பெற்றோர்கள் சமாதானமாகி போனாலும் குழந்தைகளால் மறக்க முடிவதில்லை.

 

சில வீடுகளில் மனைவையை தாழ்த்திப்பேசி, குழந்தைகளும் வளார்ந்தபினும் அம்மாவிற்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில் அவமதிக்கிறார்கள். சாதாரண நடைமுறையில் இது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் விவாகம் ரத்தானபின், குழந்தைகளை பகடைக்காய்களாக பயன் படுத்த தொடங்கும் போது குழந்தைகள் மனத்தை அளவிட முடியாத அளவு காயப்படுத்துகிறது.

 

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், தந்தைக்கு சில நாட்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டாலும், குழந்தைகளிடம் தவறாக நடந்ததாகவோ, மதுவிற்கோ, போதைப்பொருளிற்கோ அடிமையானவன் என்றோ சட்டப்படி எந்தவித ஆவணங்களும் இல்லாததால், குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது.

 

சின்ன குழந்தையின் மனதில் தந்தையை பற்றிய தவறான கருத்துக்கள் வித்திடப்பட்டிருக்கிறது. ஆகையால் அடிப்படையில் ஆழ்ந்த வெறுப்பு இருப்பதால், தந்தை வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் பயத்துடனேயே போகிறார்கள். அங்கிருந்து வந்தவுடன் உடனேயே தந்தையை பற்றிய விவரங்களை கேட்டு நச்சரிப்பதாலும், நாளடைவில் குழந்தைகள் யாருக்கு எது பிரியமோ அதை சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள விரும்புகிறார்கள்.

 

இரண்டு வீட்டில் மாறி மாறி இருபது குழந்தைகளுக்கு அதிக துன்பத்தை தரக்கூடிய ஒரு விஷயமாகும். அதை கூடுமானவரையில் எளிமையாக்குவது சால சிறந்தது. கணவன் மனைவி இருவரின் ego போராட்டத்தில் அடிக்கடி பள்ளி, மருத்துவர்கள் இவர்களை மாற்றுவதும், உன்னைவிட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கண வனும், நான் மட்டும் என்ன குறைந்தா போய் விட்டேன் என்று மனைவியும் போட்டியிடும் போது இடைப்பட்ட பிள்ளைகள் பாவம் தவிக்கிறார்கள்.இதற்கிடையில் பெண்ணை பெற்றவர்கள் மகளின் கணவனை வசை பாட, கண வனின் பெற்றவர்கள் மருமகளை வசை பாட, அதிக சினம் கொண்டவர்களாகவும் மனதில் வேரூன்றிவிட்ட வெறுப்போடும் தவிப்பது குழந்தைகள்தான்.

 

இதுவே நான் மேற்சொன்ன குடும்பத்தில் 6 வயது குழ்ந்தையின் தற்கொலையில் முடிந்திருக்கிறது. பள்ளி கவுன்சிலர் ஒரு வாரம் முன் பேசும் போது எதைச்சையாக மாணவன் தான் இறக்க விரும்புவதாக சொல்ல, அவர் அன்னையை அழைத்து பேசி இருக்கிறார். அம்மா மகனை அழைத்து, நான் படும் கஷ்டம் போதாதா, நீ வேறு படுத்த வந்தாயா என்று சொல்லி அடிக்க, அப்பாவும் கண்டு கொள்ளாமல் விட, அதை சாக்காக கொண்டு வழக்கறிஞரிடம், என் மனைவியே இதற்கு காரணம் என்று சொல்லி இன்னொரு குற்றப்பத்திரிக்கை தயாரிக்க கவனத்தை செலுத்தி இருக்கிறார்.

 

பள்ளி ஆசிரியை பெற்றவர்களிடம் சொன்னதுடன், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது. விவாகரத்து ஆன பின்னாலும் குழந்தைகள் நலன் கருதி, பெற்றவர்கள் நட்பு பாராட்ட முடியாமற்போனாலும், ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருக்கவாவது முயற்சிக்கலாம்.

 

http://reallogic.org/thenthuli/?p=32

tea.jpg

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

 

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

 

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

 

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

 

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

 

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

http://sirippu.wordpress.com/2008/01/29/coffee/

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.

 

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.

 

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

 

இப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

 

அதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

 

நுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.

 

மூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.

 

நாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.

 

தவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

 

http://sirippu.wordpress.com/2007/12/20/danger/

kid.jpg

தாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

பருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.

 

அதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

 

மார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.

 

இந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

மார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.

 

மார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

 

இத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

சரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.

 

http://sirippu.wordpress.com/2007/10/17/mother-2/

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

 

இப்போது முதன் முறையாக தாயின் உணவுப் பழக்கம். குறிப்பாக கருவுற்றிருக்கையில் தாய் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் குழந்தையின் மூளையில் பதிவாவதாகவும். அந்த பதிவுகளின் வெளிப்பாடுகளாக குழந்தையின் உணவுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

அதாவது கருவுற்றிருக்கையில் தாய் இனிப்புகள், பொரித்த உணவுகள் போன்றவற்றை அதிகமாய் உண்டால் குழந்தையும் அத்தகைய உணவுப் பொருட்களால் வசீகரிக்கப் படுகிறதாம்.

 

தாய்மை நிலையில் மிக அதிகமாக உண்பது, எப்போதும் எதையேனும் கொறித்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் குழந்தையும் அத்தகைய பழக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட வாய்ப்பு இருக்கிறதாம்.

 

இத்தகைய உணவுப் பழக்கங்களால் குழந்தை அதிக எடையுடன் வளரும் ஆபத்தும் இருக்கிறது என்பது தான் ஆராய்ச்சி தரும் எச்சரிக்கை.

 

தாய்மை நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உருவாகும் பந்தம் வெறும் வார்த்தைகளால் விளக்க முடிவதல்ல. அவை உணர்வு பூர்வமான பந்தம்.

தாயின் சிந்தனைகளும், தாயின் மனநிலையும், தாயின் உரையாடல்களும் கருவிலிருக்கும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே தான் தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல நேர் சிந்தனைகளும், பொறுமையும், அமைதியும் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இப்போது உணவு விஷயத்திலும் இது புகுந்திருக்கிறது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவெனில், இப்போதைக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளை வைத்துத் தான் இந்த ஆராய்ச்சி முடிவை ஆராய்சியாளர்கள் எட்டியிருக்கின்றனர்.

 

மனிதர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போது அந்த பார்வையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன

 

http://sirippu.wordpress.com/2007/08/18/mothers/

 தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.

 

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

 

அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

 

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.

 

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

 

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.

 

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

 

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

 

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

 

SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

 

பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

 

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

 

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

 

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

 

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

 

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

 

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்

 

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..

 

எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 

குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.

 

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.

 

உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.

 

தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.

 

http://xavi.wordpress.com/2008/08/04/breastfeeding/

சரியான அளவு தூக்கம் கிடைக்காத குழந்தைகள் அதிக எடை சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது என நியூசிலாந்திலுள்ள ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

 

குழந்தைகளின் தினசரி, வார, மாத, வருட தூக்கத்தின் அளவுகளையும் அவர்களுடைய மருத்துவ அறிக்கை பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

591 குழந்தைகளை அவர்களுடைய ஒரு வயது, மூன்றரை வயது, ஏழுவயது என மூன்று நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

சராசரியாக 9 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அதிக எடையுடன் மாறும் வாய்ப்புகள் 4 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

 

மூன்றரை வயது வரை குழந்தைகள் 11 முதல் 13 மணி நேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும், அந்த வயதைத் தாண்டிய பள்ளிக் குழந்தைகள் 10 முதல் 11 மணிநேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும் அமெரிக்க தூக்கம் தொடர்பான அகாடமி (American Academy of Sleep Medicine )தெரிவிக்கிறது.

 

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், படுக்கையில் அமர்ந்தபடி வீடியோ விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி பார்த்தல் இவற்றை ஊக்கப்படுத்தாமல் இருப்பதும் அவசியம் என அறிவுறுத்துகின்றனர் அவர்கள்.

 

http://sirippu.wordpress.com/2008/02/08/sleep-3/

தங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கின்றது என்பதை
எப்படி அதனது பெற்றோர் அறிந்து கொள்ளலாம்?

 

குழந்தை உங்களது அழைப்புக்கோ அல்லது கொஞ்சலுக்கோ சாதாரணமாகச் செய்யும் அதனது செய்கையையோ அல்லது சிரிப்பையோ செய்யாமலிருந்தால்,

குழந்தை எழும்பியவுடன் வழக்கம் போலல்லாமல் நித்திரைச் சோர்வாகக் காணப்பட்டால் அல்லது கண்ணைத் திறந்து யாரையும் பார்க்கப்பிடிக்காமல் அழுதால்.

 

பால் குடிக்கப் பிடிக்காமல் அழுதால்.

குழந்தையை நீங்கள் அணைக்கும் பொழுது அதன் உடம்போ அல்லது கை கால்களோ சோர்வுற்று வழங்காதது போல் காணப்பட்டால்.

 

குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருந்தால் அதாவது குழந்தை கீச்சிட்டு அல்லது அனுங்கிக்கொண்டிருந்தால்.


உங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கக் கூடும்.

 

குழந்தையில் மேலும் அவதானிக்கக்கூடிய வேறு அறிகுறிகள்:


குழந்தையின் தோல் வெளிறிய நிறத்தில் காணப்படல்.

 

தோலில் புதிதாக வித்தியாசமான நிறத்தில் கரப்பான் (rash) தோற்றமளித்தால் அல்லது கண்டியது போல் காணப்படல்.

 

குழந்தையின் உடம்பு அதிகம் சுட்டுக்கொண்டிருத்தல்.

 

குழந்தை மூச்சு வாங்க அவதிப்படுதல் அல்லது அதிகம் விரைவாக மூச்சு வாங்குதல்.

 

குழந்தை வாந்தி அதிகம் எடுத்தல்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, மற்றவர்களை விட உங்கள் குழந்தையின் நிலை பெற்றோர்களாகிய உங்களுக்கே முதலில் புரியும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=131&Itemid=60