Language Selection

குழந்தைகள்

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து போவதை தொட்டில் மரணம் (கிரடில் டெத்) என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் நடந்தது?

அதிகாலை நேரம்... குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டவுடனே மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த அந்தத் தாய்க்கு ஸ்விட்சை ஆன் செய்ததுபோல் சட்டென்று விழிப்பு தட்டியது. குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில்... அதுவும் சிஸேரியன் பிரசவம் என்பதால் அவரால் எழ முடியவில்லை. துணைக்கு வந்திருந்த சகோதரியை எழுப்பினார். வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த சகோதரி, மடமடவென்று குழந்தைக்குப் பால் புகட்டினார். பாலைக் குடித்த குழந்தை உறக்கத்தில் ஆழ்ந்தது. அந்த உறக்கம், குழந்தையை மீளாத துயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை என்பதை உணராமல் வெளியே இருள் பிரிந்து கொண்டிருந்தது.

விடிந்தது... அன்றாட செக்_அப் செய்ய வந்த நர்ஸ், குழந்தையின் உயிர்மூச்சு நின்று போயிருந்ததை உணர்ந்து கொண்டார். தயக்கத்துடன் அவர் விஷயத்தைச் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தத் தாயின் உள்ளம். ‘குழந்தை நல்லாத்தானே இருந்துச்சு. நைட்டு பாலுக்கு அழுதுச்சே! நல்லா பால்கூட குடிச்சுச்சே... அதுக்குள்ள என்ன ஆச்சு?’ என்று கேவலுடன் வெடித்து அழுதார் அந்தப் பெண்.

சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம், (சுருக்கமாக ‘சிட்ஸ்’), கிரெடில் டெத் என்று விதவிதமான பெயர்களில் இதைப்பற்றி டாக்டர்கள் விளக்கிச் சொன்னாலும் அந்தத் தாய்க்கு தன் குழந்தை கிடைக்கப் போவதில்லை!

சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி இப்படி கொடூரம் செய்யும் இந்த தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான இந்தக் கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன்.

‘‘நல்லபடியாக, ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்குக்கூட இதுபோன்ற அபாயம் நேரலாம். ஒரு விஷயம்... குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்தான் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது.

அதிலேயும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில்தான் இந்த ஆபத்து அதிகம் நிகழ்கிறதாம். குறிப்பாக, குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து நாலு மாதம் வரைதான் ஆபத்து மிக அதிகம்.

சத்தம் இல்லாமல்... வலி இல்லாமல்... எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்... குழந்தைகள் உறங்கும்போது திடுதிப்பென்று நிகழும் மரணம் இது.

பெரும்பாலும் இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி, எந்த மாதிரியான குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்?

லிஸ்ட்டில் முதலில் வருவது ப்ரீமெச்சூர் குழந்தைகள்! அடுத்து குறிப்பிட்ட அளவு இல்லாமல், எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம்... ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் ஒரு பொதுவான கணக்குதான். இந்த பிரிவுகளில் உட்படாத குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும்.

குழந்தைக்கு இப்படியரு ஆபத்து ஏற்படுவதில் தாய்மார்கள் எந்த வகையிலாவது காரணமாகிறார்களா?

ஆமாம்.. இருக்கிறது! அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ.. அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நிகழலாம்.

தவிர, புகை பிடிப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற பழக்கங்களை உடைய தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த ஆபத்து நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

இதையும் பொதுவாகத்தான் சொல்லலாமே தவிர, இந்தக் காரணத்தினால் இந்த ஆபத்து ஏற்படும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது! மேலே குறிப்பிட்ட பழக்கங்களோ, பிரச்சினைகளோ இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் கூட, சத்தமில்லாத இந்த தொட்டில் மரணம் நிகழலாம் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை!

சரி இப்படியரு ஆபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?

காரணம் என்னவென்று தெரிந்தால்தான், சத்தமில்லாமல் வரும் இந்த அசுரனை முற்றிலும் தடுத்துவிட முடியுமே! எதனால் இந்த ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன... கூடவே அவற்றைப் பற்றியஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! ஆனாலும்கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆபத்தை பெரிய அளவில் தடுக்க முடியும். இதோ கீழே சொல்லப்படும் விஷயங்களை கவனமாகப் பின்பற்றுங்கள்..

முதலாவது, குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிருங்கள். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்கவேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30_50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்!

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் புகைப்பிடிக்கக் கூடாது. நம்மூரில் பெண்களிடம் இந்தப் புகைப்பிடிக்கும் வழக்கம் அதிகம் இல்லைதான். ஆனால், தவிர்க்க முடியாமல் புகைப்பிடிப்பவர்களின் அருகாமையில் சில பெண்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதைத் தவிர்த்து விடுங்கள்.

கிராமப்புறங்களில் சுருட்டு போன்றவை பிடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களும் இதைத் தவிர்த்துவிட வேண்டும்!

குழந்தைக்கு மனத்திருப்தியுடன் தாய்ப்பால் தாருங்கள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது.

கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டாதீர்கள். அது பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்துங்கள்!

பொதுக் பொதுக் என்று அமுங்காத, உறுதியான ஒரு படுக்கையில் குழந்தையைப் படுக்க வையுங்கள்!

குழந்தை படுத்திருக்கும் அறையில் ‘நோ ஸ்மோக்கிங்’ என்று போர்டு வையுங்கள்.

குழந்தை அருகே கொசுவத்தி சுருள் ஏற்றி வைப்பதையும்கூட தவிர்க்கவும். அதன் புகையும்கூட குழந்தைக்குக் கெடுதல் விளைவிக்கும். கொசுவலை பயன்படுத்தி பழக்குங்கள்.

குடிப்பழக்கம் அல்லது போதை மருந்து பழக்கம் உடையவர்கள் யாராவது இருந்தால், கண்டிப்பாக அவர்களை குழந்தையின் அருகில் படுக்க அனுமதிக்க வேண்டாம்!

மொத்தத்தில் உங்கள் பட்டுப் பாப்பாவை கவனமாக பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு உண்மை என்ன தெரியுமா?

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான்.

காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்! இதைப் போன்ற சமயங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்மூர்களில் பெரும்பாலும் நாம் நம் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது! அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்!

ஒரு விஷயத்தை நான் முக்கியமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எதிர்பாராத நிலையில் இதுபோன்ற சத்தமில்லாத ஆபத்தால் தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்... குறிப்பாக அந்தத் தாய், தன் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகி அவர்கள் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதுண்டு. இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாலும் சத்தமில்லாத, சரியாகக் காரணங்கள் தெரியாத இந்த ஆபத்து நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போகலாம்.

தேவையில்லாமல் உங்களை நீங்களே வதைத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. இப்படி பாதிப்பு ஏற்பட்டவர்கள் முதலில் ஒரு நல்ல மனோநல நிபுணரிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது!’’ என்றார் டாக்டர் பாலச்சந்திரன்.

சு.சசிரேகா
நன்றி - குமுதம்

http://kulanthaikal.blogspot.com/2004/04/blog-post.html

மருச்சரன்

பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வயதுக்குள்ளே கிரகிக்கப்படுவதாக புதிய உலகம் அறிந்திருக்கிறது.

மரபு வழிப் பண்புகளும் சூழ்நிலையும்தான் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. ஒரு குழந்தையின் சூழ்நிலை பெற்றோரால் மாற்றக் கூடியது. ஆனால் மரபு வழிப் பண்புகள் என்பது பெற்றோரையே மாற்றக் கூடியது. ஆகவே பிறந்து விட்ட பிறகு மாற்ற முடியாத ஒன்று மரபு வழிப் பண்பாகும்.

குழந்தைகள் தனது புதிய இதயத்தில் பதிவுகள் எதுவும் செய்யப்படாத மலர் இதழ் போன்ற மனத்தில், பெற்றோர் மற்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அணுகுமுறையிலிருந்தும் அறிவிலிருந்தும் அவர்கள் நடவடிக்கையிலிருந்தும் கற்கத் துவங்குகிறது. மலர் இதழ் போன்ற பிஞ்சு மனதில் எத்தகைய பாடங்களும் பழக்க வழக்கங் களும் பதிய வேண்டும் என்பதைப் பற்றி பெற்றோர்கள் தான் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளின் எதிர்கால லட்சியத்திற்கு ஏற்புடைய எண்ணங்களும் பழக்க வழக்கங்களும் பதிவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது பெற்றோரது கடமையாகும்.

ஆளுமை வளர்ச்சி என்பது ஒருவன் இவ்வுலகில் பிறந்த சில நாட்களில் வளரத் தொடங்குகிறது. சில குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாய்ச் செயல்பட ஆரம்பிக்கின்றன. சில குழந்தைகள் மந்தமாய் உள்ளன. சிலர் மிகுதியாய் அழுகின்றனர். சிலர் அடங்கிப் போகின்றனர். சிலர் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் மனமிழக்கின்றனர். இவை அனைத்துமே அந்தக் குழந்தைகள் தன் தாயின் கருப்பையில் கருவாக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகளை பிரதிபலிப்பதே. இதனோடு குரோமோசோம்களின் அமைப்பினால் ஏற்படும் மாற்றம். இதையே பெற்றோருடைய மரபுவழிப் பண்பு என்பர்.

உளவியல் அறிஞர்கள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்? எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பார்ப்போம்.

1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.

2. பகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.

3. பயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.

4. பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.

5. பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

6. பாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.

7. புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.

8. சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.

9. பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.

10. உற்சாகப்படுத்தப்படும் சூழýல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது.

11. முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.

12. பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.

13. நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.

14. பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.

"வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு' இது போன்ற பழமொழிகள் உருவாகக் காரணமே நல்ல பெற்றோருக்குப் பிறந்தும் தகாத சூழ்நிலை அமைந்து விடுவதுதான். நம் முன்னோர்கள் வேண்டுமானால் சூழ்நிலையின் சூட்சுமத்தை கருதாதிருக்கலாம். காலம் மாறி வரும் வேளையில் நம் வாரிசுகளுக்கும் நம் நாட்டின் வாரிசுகளுக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம். அவர்கள் நாட்டிற்கு சுபநிலையை உருவாக்கித் தருவார்கள்.

nantri - tamil.sify.com

 

http://kulanthaikal.blogspot.com/2004/05/blog-post_28.html

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.

குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.


--------------------------------------------------------------------------------

புட்டிப்பால்

குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம்.

ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. பாலில் கால்ஷியம் சத்து ஏராளம். பலவித வைட்டமின்களும் உண்டு. ஆனால் இரும்புச்சத்து என்பது கிடையாது. குழந்தை நன்கு வளர இரும்புச் சத்தும் தேவை. இரும்புச்சத்து அடங்கிய வைட்டமின் சொட்டுமருந்துகள் உண்டு. அவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய? பசும்பால்தானே அடுத்த சாய்ஸ்? அல்லது ஆவின் போன்ற பால் வகைகளைக் கொடுக்கலாமா? இதில் எதையும் கொடுக்கலாம். ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பவுடர் பால் கொடுக்கும்போது ஒரு விஷயத்தை மறக்காதீர்கள். எந்த அளவு பவுடருக்கு எவ்வளவு நீர் கலக்கவேண்டும் என்பது போன்ற விவரத்தை பால் டின்னின் மேற்பகுதியிலேயே அச்சடித்திருப்பார்கள். அதன்படிச் செயல்படுங்கள். (குழந்தையின் முதல் இரண்டு மாதங்களுக்கு வேண்டுமானால் பாலைச் சற்று நீர்க்கக் கொடுக்கலாம்). பால் பவுடர் தயாரிப்பாளரின் ஆலோசனையை அப்படியே கடைப்பிடியுங்கள். காரணம், பலவித சோதனைகளுக்குப் பிறகு அனுபவபூர்வமாக வந்த தீர்மானமாக அது இருக்கும்.

முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்றுநோய்கள் உண்டாகக்கூடும்.

தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப் பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி.

ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.

வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்கமுடியாத துரதிர்ஷ்டமான நிலை ஏற்படக்கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம்போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.


--------------------------------------------------------------------------------

திடஉணவு

குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை அளிக்கலாம்.

ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆறாவது மாதத்தில் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தையின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் ‘கன’வான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.

இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்குப் பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.

ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கூட கொடுக்கலாம். குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கிக் கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே ஒரு வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.

எப்போதுமே ஒரே நாளில் புதிதாக இரண்டு வித உணவு வகைகளைக் குழந்தைக்குக் கொடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

சுமார் ஐந்து மாதம் ஆகும்போதே குழந்தைக்குப் பழங்களைக் கொடுக்கத் தொடங்கிவிடலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி வாழை அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் ‘சி’ சத்து நிறைய அடங்கியவை _ சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.

காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்துவிடுங்கள்.


--------------------------------------------------------------------------------

நாப்கின்

குழந்தைகளின் இடுப்பில் துணியைக் கட்டிவைப்பதா அல்லது இப்போது பரவலாகிவரும் பயன்படுத்தி எறிந்துவிடும் டயபர்களைப் பயன்படுத்தலாமா?

துணியில் சிலவகை சாதகங்கள் உண்டு. மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதோடு சீப்பானதும்கூட. குழந்தைக்கும் இது அதிக வசதியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், நனையும் ஒவ்வொரு முறையும் துவைத்துக் காயவைக்கும் சிரமம் உண்டு.

பயன்படுத்தி தூர எறிந்துவிடும் (டிஸ்போஸபிள்) டயபர்களில் துவைப்பது, பிழிவது போன்ற பிரச்னைகளே இல்லை. சுலபத்தில் அணிவிக்கலாம், கழற்றலாம், என்ன, விலைதான் அதிகம் என்பதோடு வீட்டில் குப்பையும் அதிகம் சேரும்.

சிலர், டயபர்களைக் குழந்தை நனைத்தபிறகும் வெகுநேரம் அதை மாற்றாமல் இருக்கிறார்கள். அது தப்பு. வெளியே போகும்போது வேறுவழியில்லையென்றால் பரவாயில்லை. மற்றபடி பார்த்து உடனுக்குடன் மாற்றாவிட்டால் குழந்தைக்கு ஏதாவது நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தையின் தோல் எவ்வளவு மென்மையானது என்பது உங்களுக்குத் தெரியாதா? உள்ளாடையை மாற்றும் ஒவ்வொரு முறையும், குழந்தையின் அடிப்பகுதியை மறக்காமல் கழுவுங்கள். இதற்கு சோப்பு கலந்த தண்ணீரில் நனைத்த துண்டைப் பயன்படுத்துங்கள். அப்புறம் ஈரமில்லாத இன்னொரு டவலால் துடைக்கவேண்டும்.

தோலை எதற்கு அலம்பவேண்டும்? சுத்தமாக இருப்பதற்காக மட்டுமல்ல. சிரங்கு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பாக்டீரியாவையும் இது நீக்கிவிடுமே.

சில பேர் ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உள்ளாடைகளை குழந்தைக்கு அணிவிக்கிறார்கள். முடிந்தவரை இதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் இது சூட்டை உள்ளே வைத்துக் கொள்கிறது. எனவே சிரங்கு உண்டாகவும், சிரங்கு உண்டாகியிருந்தால் அதை மேலும் மோசமாக்கவும் செய்யும்.


--------------------------------------------------------------------------------

உடை

குழந்தைதானே... இதற்கென்ன பெரிதாக உடைகள் தேவைப்பட்டுவிடப் போகிறது என்று கூறிவிட முடியாது. அதன் அம்மாவைக் கேட்டுப்பாருங்கள். ‘‘ஒவ்வொரு நாளும் இதுக்கு டிரஸ் மாத்தி கட்டுப்படி ஆகலே’’ என்று ஆனந்தமாகச் சலித்துக்கொள்வாள். தினமும் நான்கு முறையாவது உடை மாற்றவேண்டியிருக்கலாம். (நனைத்துக்கெண்டு விடுகிறதே.)

குழந்தைகளுக்கு உடை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. தலைவழியாக அணிந்துகொள்ளும் உடைகளை குழந்தைகள் வெறுக்கின்றன. தலையிலிருந்து கழுத்துக்குக் கீழ்பகுதிக்கு அந்த உடை இறங்குவதற்குள் ஏதோ காரிருளில் மூச்சுமுட்ட நிற்பதுபோன்ற ஒரு பயம் அதற்கு. எனவே முன்புறம் பட்டன் போடுவது அல்லது முடி போடுவது போன்ற வகையினாலான உடைகளையே வாங்குங்கள். குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணிவிக்க மறக்கவேண்டாம். அதேபோல் அதன் கால்களை குளிரிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஷ¨க்களையும் வாங்கிவிடுங்கள்.

வாஷிங்மெஷினில் போட்டு எடுக்கும்படியான உடைகளை வாங்குவதே வசதி. ஏகப்பட்ட அலங்காரங்களுடன் விதவிதமான வளைவுகளைக் கொண்ட உடை என்றால் இதற்கு வசதிப் படாது.

பெரியவர்களின் துணிகளில் அவை உலர்ந்த பிறகும் ஓரளவு துணி சோப்போ, டிடர்ஜெண்டோ ஒட்டிக்கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இவை தோலுக்குக் கெடுதல். எனவே கவனம் தேவை.

சின்னக் குழந்தைகளின் சாக்ஸ் போன்றவற்றை வாஷிங்மெஷினில் போடும்போது அப்படியே போடாமல் ஒரு தலையணை உறைக்குள் போட்டுவிட்டுச் சுற்றினால் மெஷினில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும்.

பெண் குழந்தைகளுக்கு கையில்லாத உடைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கடும்கோடை, கடும்குளிர் ஆகிய இருவேறு வெப்பங்களிலுமே இந்த வகை உடை தொல்லைதான்.

பெரியோர்களுக்கான உடையை அணிந்துகொள்ள கொஞ்சம் வளர்ந்த குழந்தை, ஆசைப்படும். அவ்வப்போது இதை அனுமதித்து குழந்தையை சந்தோஷப்படுத்தலாமே.


--------------------------------------------------------------------------------

குளியல்

ஆவிபறக்கும் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தையைப் பிடித்திருக்கும் சகலவியாதிகளும் பறந்துபோய்விடும் என்பதெல்லாம் தப்பு. மிகவும் சூடான தண்ணீர் வேண்டாம். கதகதப்பான நீரே போதுமானது.

உச்சிமுதல் பாதம்வரை தினசரி குழந்தையை நனைத்தெடுக்க வேண்டும் என்பதில்லை. கழுத்துக்குக் கீழே குளிப்பாட்டினால் போதும். மற்றபடி முகத்தைத் துடைத்துவிடுங்கள். தலையை நனைக்க வேண்டாமா? என்று லேசான அதிர்ச்சியோடு கேட்கும் தாய்மார்களுக்கு என் பதில் இதுதான். வாரம் ஒருமுறை தலைக்குக் குளிப்பாட்டுங்கள்.

குழந்தையின் முகத்தைப் பார்த்து மெய்மறந்து போவது இயல்பானதுதான். நடுநடுவே குழந்தையின் நாக்கையும் பாருங்கள். அதில் மாவுபோல ஒரு படலம் ஒட்டிக் கொண்டிருக்கும். குளிப்பாட்டும்போது அந்தப் படலத்தை மென்மையான முறையில் அகற்றிவிடுங்கள். ‘‘டங்க் க்ளீனர்’’ என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான். சிறுகுழந்தைகளுக்கு வேண்டாமே.

நாக்கைப் பார்க்க மறக்கும் அம்மாக்கள்கூட தவறாமல் பார்ப்பது குழந்தையின் காதுகளை. ‘‘ஐயையோ அழுக்கு’’ என்று பதறி பஞ்சையோ, தீuபீடையோ எடுத்துக்கொண்டு சுத்தம் செய்யத் தொடங்கிவிட வேண்டாம். குளிக்கும்போது, குழந்தையின் காதின் வெளிப்பகுதியை மட்டும் சுத்தம் செய்யுங்கள் போதும். சுத்தம் செய்வதாக எண்ணிக்கொண்டு காதுகளின் மென்மையான உட்புறத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்கிவிடக்கூடாது.

எந்தவித சோப்பைப் பயன்படுத்துவது? தரமான எந்த சோப்பையுமே பயன்படுத்தலாம். நேரடியாக அதைக் குழந்தையின் உடலில் தேய்ப்பதைவிட, உங்கள் கையில் சோப்பைக் குழைத்துக்கொண்டு அதை உங்கள் செல்லத்தின் உடலில் தேய்ப்பது சரியான வழி.

முகத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க கடலைமாவும், பளபளப்பான கூந்தலுக்கு சீயக்காயும் ஏற்றது என்பதை மேலை நாட்டு அழகுக்குறிப்புகள்கூட ஒத்துக்கொள்கின்றன. ஆனால் குழந்தைக்கு இவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இவை குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்க வாய்ப்பு உண்டு.

காலம் காலமாக நடந்துவரும் பட்டிமன்றம், குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது நல்லதா, இல்லையா என்பது. கெடுதல் இல்லை. அதேசமயம் குழந்தையின் உடலுக்குள் புதிதாக எந்தவித சத்தோ, மாற்றமோ இதனால் சேர்ந்துவிடுவதில்லை. ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும். உலர்ந்த சருமத்துக்கு எண்ணெய் நல்லதுதான்.


--------------------------------------------------------------------------------

தூக்கம்

ராத்திரியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஓவென்று அலறி ஊரைக் கூட்டும் குழந்தைகள் பல வீடுகளில் உண்டு. காரணம் பசியாக இருந்தால் பிரச்னையில்லை. பால் கொடுத்தால் அலறல் அடங்கிவிடும். வேறு ஏதாவது உடல் உபாதை என்றால் என்ன செய்வது?

‘பாதித் தூக்கத்தில் இரவுகளில் என் குழந்தை எதற்காக விழித்துக் கொள்ளவேண்டும்? அதுவும் ஒவ்வொரு நாளும்’ என்று விசனப்படும் அம்மாவா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் ஒரு கேள்வி. குழந்தைக்கு, இரவில் பால் கொடுக்கும்போதே அதைத் தட்டித் தூங்கச் செய்கிறீர்களா? அப்படியானால் அந்தப் பழக்கத்தை மாற்றுங்கள்.

இரவு உணவை உட்கொண்ட பிறகு தூங்க வையுங்கள். ஏனென்றால் உணவை அருந்தும்போதே தூங்கும் குழந்தை, தாயிடமிருந்தோ ஃபீடிங் பாட்டிலிலிருந்தோ தூங்கிக் கொண்டிருக்கும்போது பிரிக்கப்பட்டால், உள்மனதில் ஒருவித பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்பட்டு பாதித் தூக்கத்தில் விழிப்பு ஏற்படலாம்.

சில மேலை நாடுகளை விட்டுவிட்டால் குழந்தைகள் அம்மாவோடுதான் இரவில் படுத்துக்கொள்கின்றன. தாய்ப்பால் கொடுப்பதற்கும் இது சௌகர்யம்.

பொதுவாக கைக்குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் பதினாறு மணி நேரம் தூங்குகின்றன. ஆனால் ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதாகவே இருக்கிறது. அதனால்தான் நடுநடுவே கனவுகண்டு உலுக்கிப் போட்டதுபோல் விழித்துக் கொண்டு அழுகின்றன.

கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்றால் தூங்குவதற்குமுன் கதை சொல்லுங்கள். தெரிந்த ஒரே கதையையே அடுத்தடுத்த நாட்களில் சொல்வதில் இரு சௌகர்யங்கள். அம்மாவின் ஞாபக சக்திக்கு சோதனை வருவதில்லை. இரண்டாவது, ‘‘கதையின் க்ளைமாக்ஸ் என்ன?’’ என்பது குழந்தைக்குத் தெரிந்திருப்பதால் அதன் ஆவல் உணர்வு தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக சீக்கிரமே தூங்கிவிடுகிறது. குளிப்பதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் குளியல். மெல்லிய இசை. விளக்கு வெளிச்சம் (அதிகம்) இல்லாமல் இருப்பது, தாலாட்டுப் பாடுவது போன்றவை நிம்மதியான வேகமான தூக்கத்துக்கு உத்தரவாதமென்றே கூறலாம்.


--------------------------------------------------------------------------------

அழுகை

இந்த உலகில் பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே செய்யும் முதல் காரியம் அழுவதுதான்! இந்த உலகில் தோன்றிவிட்ட சோகம் அதற்குக் காரணமல்ல. அந்தக் குழந்தைக்குள் இருக்கும் இரண்டு சிறிய நுரையீரல்களும் வேலை செய்யத் தொடங்குவதற்கான ஒரு பயிற்சிதான் அந்த அழுகை. பெரும்பாலும் பிறந்த ஆறு வாரத்துக்குள் குழந்தையின் அழுகை ஒரு எல்லைக்குள் வந்துவிடுகிறது. அதற்குப் பிறகும் குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால் அம்மா கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

குழந்தை பாத்ரூம் போய்விட, அதன் உடைகளும் உடலும் நனைந்துவிட்டதா? இதற்கு அழுகை காரணமென்றால் உடையை மாற்றவேண்டும்.

பசியாக இருக்க வாய்ப்பு உண்டு என்றால் தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

எதையாவது பார்த்து பயந்ததனாலும் அந்த அழுகை இருக்கலாம். குழந்தையைக் கையில் எடுத்து சமாதானப்படுத்தினாலே போதும், பிரச்னை தீர்ந்தது.

ஏதாவது பூச்சியோ, கூர்மையான பொருளோ அதன் உடலைக் குத்திக் கொண்டிருக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

வயிற்றில் வலியோ அல்லது வாயுவோ இருந்தாலும் குழந்தை அழலாம். கிரைப்வாட்டர் இதற்கு எந்த அளவு பலனளிக்கும் என்பது குறித்து இருவேறு கருத்துகள். எனவே குழந்தையின் வயிற்றை மெதுவாகத் தடவிவிடுங்கள். பிறகு தோளில் தூக்கிக்கொண்டு முதுகைத் தடவியபடி கொஞ்சநேரம் நடந்துபாருங்கள். அம்மாவின் உடலில் உள்ள காஃபின் நஞ்சு (காபியில் உள்ளது), சாக்லெட், வெங்காயம், பூண்டு ஆகியவை அதிக அளவில் அம்மாவின் உடலில் சேர்ந்தாலும் வயிற்றில் மேற்படி சங்கடம் ஏற்பட்டு குழந்தை அழலாம்.

காய்ச்சல் காரணமாகக் குழந்தை அழுதால் என்ன செய்ய? க்ரோஸின், மெடாஸின் போன்ற பாரஸிட்டமால் மாத்திரைகளைப் பொடி பண்ணிக் கொடுக்கலாமா? வேண்டாம். ஆனால் இதே மருந்துகள் சொட்டு மருந்து வடிவத்திலும் கிடைக்கின்றன. அவற்றைக் கொடுக்கலாம். ஒருமுறை சொட்டு மருந்தை அளித்தால் அதற்கு ஆறுமணி நேரத்துக்குப் பிறகுதான் மீண்டும் அளிக்கப்பட வேண்டும். இருமுறை இப்படிக் கொடுத்தும் ஜுரம் நிற்கவில்லையென்றால் டாக்டரைத்தான் அணுக வேண்டும்.

எப்படியிருந்தாலும் தொடர்ந்து அழுதால் டாக்டரிடம்தான் செல்ல வேண்டும். சிலசமயம் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்திய பிறகும் அம்மாவின் அழுகை தொடர்ந்து கொண்டிருக்கும்!


--------------------------------------------------------------------------------

வயிற்றுவலி

வலி என்பது ஒருவிதத்தில் நல்லதொரு எச்சரிக்கை மணியாகப் பயன்படுகிறது. வலி ஏற்பட்டால் குழந்தை அழுகிறது. நாமும் என்னவென்று கவனிப்போம். தேவைப்பட்டால் டாக்டரிடம் அழைத்துச் சென்று குழந்தையின் உடல் நோயை சரி செய்வோம்.

மூன்று சக்கர சைக்கிள் விடும்போதும் சரி, உயரக் குறைவான இரண்டு சக்கர சைக்கிள் ஓட்டும்போதும் சரி, குழந்தை, பெரும்பாலும் அடிபட்டுக் கொள்வது கணுக்காலில்தான். வலியில் கத்தும்.

சராசரியாக மாதத்துக்கு ஒரு குழந்தையையாவது குறிப்பிட்ட காரணத்துக்காகச் சிகிச்சைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். விரைப்பகுதியில் வீக்கம் ஏற்படுவதுதான் அந்தக் காரணம்.

நாற்காலியில் குதித்து விளையாடும்போது கீழே விழ, அதற்குப் பிறகு விரைவீங்கத் தொடங்கியிருக்கலாம். சில சமயம் சாதாரண எறும்புக்கடியில்கூட இந்தப் பகுதி பெரிதாக வீங்கலாம். அப்படியானால் அது தானாகவே சரியாகிவிடும். ஆனால் கீழே விழுவதால் வீக்கம் தோன்றியிருந்தால், ரத்தம் அங்கு அதிகம் சேர்ந்து அடைத்துக் கொண்டிருக்கலாம். அப்படியானால் அறுவை சிகிச்சை அவசியமாகிவிடுகிறது.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. வெறும் வீக்கமென்றால் பொறுத்திருந்து பார்க்கலாம். வலியோடு கூடிய வீக்கமென்றால் உடனே மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

குழந்தை தொடர்ந்து வீறிட்டு அழுகிறது. அதே சமயம் ஏதோ வலியில் அவஸ்தைப் படுவதுபோல் தன் முழங்கால்களை அடிக்கடி மேற்புறமாகத் தூக்கிக் கொள்கிறது என்றால் குழந்தைக்கு வயிற்றுவலி இருக்க வாய்ப்பு உண்டு. பசும்பால் அலர்ஜியாலும் இந்த வலி ஏற்படக்கூடும். அல்லது உணவு கொடுக்கும்போது இடையே காற்று போவதாலும் அந்த வலி உண்டாகியிருக்கலாம்.


--------------------------------------------------------------------------------

பல்

குழந்தைக்கு ஆறு வயதாகும்போது அதன் தாற்காலிகப் பற்கள் விழத்தொடங்குகின்றன. நிரந்தரப் பற்கள் உருவாகின்றன. அதற்குப் பிறகு பற்கள் முளைப்பதற்கு இயற்கை ஒரு கணக்கு வைத்திருக்கிறது.

ஆறு அல்லது ஏழு வயதிலிருந்து வருடத்திற்கு நான்கு பற்கள் முளைக்கின்றன. இப்படித் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்குப் புதுப்பற்கள் முளைத்துக் கொண்டிருக்கும்.

குழந்தைக்கு இந்தக் காலகட்டத்தில் மறக்காமல் நாம் உணர்த்தவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தன் பற்களையும் வாயின் பிறபகுதிகளையும் மிகவும் சுத்தமாக குழந்தை வைத்திருக்கவேண்டியது அவசியம்.

நிரந்தரப் பற்கள் முளைக்கும் காலகட்டத்தில்தான் குழந்தைக்கு டான்சில்ஸ், சைனஸ், காதுவலி போன்ற அவஸ்தைகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

உப்பு நீரால் வாய் கொப்பளித்து வெளியேற்றுவது (நிஷீரீரீறீவீஸீரீ) வாய்ப்பகுதிக்கும், தொண்டைக்கும் மிக நல்லது. இந்தப் பழக்கத்தை குழந்தைக்கு ஆறேழு வயதாகும்போதே அறிமுகப்படுத்திவிடுவது நல்லது.

சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பல் இருக்கும். ஆனால் பொதுவாக ஆறு மாதமாகும்போது கீழ் வரிசையின் முன் பக்கத்தில் இரண்டு அரிசிப் பற்கள் முளைக்கும். அதற்குப் பிறகு மேல் வரிசையின் முன்பக்கத்தில் இரண்டு பற்கள்.

ஆறேழு மாதங்களாகியும் குழந்தைக்குப் பல் முளைக்கவில்லையென்றால் பதற்றப்பட வேண்டாம். பல் முளைப்பதற்காக ஒரு வருடம் வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு மருத்துவ ஆலோசனை பெறலாம். நெல்லால் ஈறுப் பகுதியைக் கீறினால் பல் முளைக்கும் என்பதற்கெல்லாம் எந்த விஞ்ஞான ஆதாரமுமில்லை.

பொதுவாகக் குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது அதற்கு இருபது பற்கள் இருக்கவேண்டும். பல் முளைப்பதனாலேயே வயிற்றுப்போக்கு உண்டாவதில்லை. பல் அப்போது ஊறுவதனால் கையில் கிடைத்ததையெல்லாம் குழந்தை வாயில் போட்டுக் கொள்கிறது. அது வேண்டுமானால் வயிற்றுப் போக்குக்கு வழிவகுக்கலாம்.

கிட்டத்தட்ட பல் முளைக்கும் காலகட்டத்தில்தான் குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளும் கூடவே நடைபெறத் தொடங்குகின்றன. குப்புறப்படுத்துக்கொள்வது, தாய்ப்பாலோடு வேறு திரவ உணவும் அளிக்கப்படுவது _ இப்படிப்பட்ட காரணங்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்றாலும் எல்லாப் பழிகளுமே பெரிதாக முளைக்கும் பற்களின் மீதே விழுகின்றன.

பல் முளைக்கும் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரிசிக்கஞ்சியும் நெஸ்டமும் கலந்து கொடுக்கலாம்.


--------------------------------------------------------------------------------

நோய்த்தடுப்பு

பலவித நோய்களுக்கு தடுப்பூசிகள் இப்போது உள்ளன. அவற்றை உரிய கால கட்டங்களில் குழந்தைக்கு அளிக்கவேண்டியது பெற்றோரின் கடமை என்றே கூறலாம்.

காசநோய்க்கான தடுப்பு மருந்தை (ஙிசிநி) குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்று ஐந்து தடவைகள் அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.

முத்தடுப்பு ஊசி என்பது டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6,10,14 வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.

எய்ட்ஸைவிட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் ‘பி’ எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸ§ம், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் ஏ_க்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.


--------------------------------------------------------------------------------

உடல் நலக் குறைவு


பசியில்லாமல் போகிறது. வழக்கமான சுறுசுறுப்பு குறைந்து குழந்தை முடங்கிப் போய் கிடக்கிறது. பார்வை கொஞ்சம் வெளிறிப்போய்விட்டது. அடிக்கடி (கொஞ்சம் தண்ணீராகவே) மலம் கழிக்கிறது. போதாக்குறைக்கு வாந்தி அல்லது ஜுரம். இவற்றில் சில அறிகுறிகள் இருந்தாலே குழந்தைக்கு உடல் நலமில்லை என்றுதான் பொருள்.

பொதுவாகவே காலை வேளையைவிட மாலை வேளையில் குழந்தையின் உடல் வெப்பம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். பகல்வேளையைவிட சுமார் இரண்டு டிகிரி ஃபாரன்ஹீட்வரை அதிகமாக இருந்தால் அதற்காகக் கவலைப்படவேண்டாம். ஆனால் நூறு டிகிரியைத் தாண்டினால் அது உடனடியாகச் செயல்பட வேண்டிய கட்டம்.

காய்ச்சல் மட்டுமல்லாது கூடவே குழந்தைக்கு உடலும் நடுங்கினால் டாக்டரிடம் அழைத்துச் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் இது ஒரு வேளை வலிப்பு நோயில் கொண்டுவிடலாம். அதற்காக குழந்தையின் உடலில் காய்ச்சலும் நடுக்கமும் ஏற்பட்டால் பயந்து நடுங்கவேண்டாம்.

போதாதவேளை. வலிப்பு வந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வது? குழந்தையைப் பக்கவாட்டில் படுக்கவையுங்கள். நாக்கைக் கடிக்காமல் தடுக்க ஒரு ஸ்பூனை சுத்தமான துணியில் சுற்றி பற்களுக்கு நடுவே வையுங்கள். பிறகு டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

தும்மல் ஏற்பட்டால் ‘‘கிருஷ்ண கிருஷ்ணா’’ என்று உடனே கூறும் வழக்கம் சிலருக்கு உண்டு. பிறந்து சில மாதங்களே ஆன பாப்பா அடுக்குத் தும்மலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் அதற்குச் சமமாக கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்வதோடு அம்மா நிறுத்திக் கொள்ளவேண்டாம். ‘‘ஜலதோஷம். இது ஜலதோஷத்தைத் தவிர வேறில்லை’’ என்றும் முடிவெடுத்துவிட வேண்டாம். தும்மல் என்பது என்ன? மூக்குப் பகுதியில் ஏதோ வேண்டாத எதிராளி வந்துசேர்ந்திருக்கிறான். அதை வெளியேற்றும் முயற்சிதான் தும்மல். எனவே மூக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள உலர்ந்த அடைப்பை லேசான உப்புக் கரைசலைவிட்டுக்கூட கரைத்துவிடலாம்.

குழந்தைக்குக் காதிலிருந்து சீழ் வடிந்தாலோ மூச்சு விடும்போது விசித்திரமான ஒலி உண்டானாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தை கீழே விழுந்தவுடனே மயக்கமடைந்தால் அதுவும் உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.


--------------------------------------------------------------------------------

நோய்கள்

சின்னச் சின்ன உடல் அசௌகரியங்களுக்கு வீட்டிலேயே சில நிவாரணிகள்.

குழந்தைக்கு தலைக்குள் நீர் கோத்துக் கொண்டிருந்தால் _ நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைச் சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி உருண்டைகளை வைக்கலாம்.

காய்ச்சல்: க்ரோசின், ப்ரூஃபென் போன்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும்.

தொண்டை தொடர்பான சிக்கல்கள் _ உப்புத் தண்ணீரில் தொண்டையை கார்கிள் செய்து கொள்வதுதான். குழந்தைக்கு சுமார் மூன்று வயதாகும்போதே இந்தப் பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

தசைப்பிடிப்புகளும் சுளுக்கும்: விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெயைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).

விஷப்பூச்சிக்கடி: டாக்டரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் கடிவாய்ப் பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியமான முதலுதவி.

கீழே விழுந்து அடி: பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. (மஞ்சள் பொடி, சர்க்கரை, காபிப்பொடி என்று அப்புவது வேண்டாம்.)


--------------------------------------------------------------------------------

பொம்மைகளுடன்

கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.

சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.

பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.

ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.

பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.

வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்துகொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.


--------------------------------------------------------------------------------

மசாஜ்

குழந்தையை மசாஜ் செய்வதில் பலவித நன்மைகள் உண்டு. இதனால் தாய்க்கும் குழந்தைக்குமிடையே உள்ள பந்தம் மேலும் உறுதியாகிறது. குழந்தையின் உடலில் உள்ள தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

தவிர, சமீபத்திய ஆராய்ச்சிகள் இன்னொரு நன்மையையும் குறிப்பிடுகின்றன. மசாஜ் செய்யப்பட்ட குழந்தை, அதிக நேரம் தடையில்லாது தூங்குகிறது. இந்த ஆராய்ச்சியில் இருபது தாய்மார்கள் கலந்து கொண்டார்கள். அத்தனைபேரும் இரு வாரங்களே நிரம்பிய குழந்தைகளுக்குத் தாய்மார்கள். இவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் குழந்தையை அரை மணி நேர மசாஜிற்கு உட்படுத்தினார்கள். இதில்தான் மேற்படி கண்டுபிடிப்பு.

‘‘சரியா ராத்திரியானா அழ ஆரம்பிச்சுடும். எனக்குத் தினமும் சிவராத்திரிதான்’’ என்று அம்மாக்கள் இனி அலுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதற்குமுன் சரியான விதத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளை மசாஜ் செய்வதற்கென்றே உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பு இருக்கிறது (மிஸீtமீrஸீணீtவீஷீஸீணீறீ கிssஷீநீவீணீtவீஷீஸீ ஷீயீ மிஸீயீணீஸீt விணீssணீரீமீ). இதில் 1996_ல் மட்டும் பத்தாயிரம் பெற்றோர்கள் குழந்தைக்கு மசாஜ் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார்களாம்.

மசாஜ் செய்வது குழந்தைக்கு மட்டுமல்ல; அந்த நேரத்தில் அம்மாவுக்கும்கூட பெரும் மனநிம்மதியையும் புத்துணர்வையும் அளிக்கிறது என்கிறது அந்த அமைப்பு.

மசாஜ் செய்ய இயலாதவர்களோ தெரியாதவர்களோகூட குழந்தையை அணைத்துக் கொள்வது, அதன் முதுகைத் தடவிக்கொடுப்பது என்பதைச் செய்யலாமே.

மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தேவைப்படும் அளவுக்கு எடைபோடும் என்கிறார்கள் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்ல, வயிற்று வலியிலிருந்து அளவுக்கதிகமான செயல்பாடுகள் வரை பல சங்கடங்களுக்கு மசாஜ் ஒரு சிறந்த நிவாரணி என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------

பயணம்

குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயதானால் போதும். வெளியில் செல்லத் துடிக்கும். மற்றவர்களின் செருப்புகளைப் போட்டுக் கொள்ளத் தொடங்கும். அதாவது, டாட்டா சொல்ல வேண்டுமாம்! எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

‘எங்க இவளை அழைச்சிக்கிட்டு ஷாப்பிங் போவது? இவளைப் பாத்துக்கத்தான் நேரம் சரியா இருக்கும்’ என்ற அம்மாவின் புகார் நியாயமானதுதான். ஷாப்பிங்கின்போது குழந்தையை அழைத்துச் சென்றால், பார்த்துப் பொருள்களை வாங்கவும் முடியாது, குழந்தையை சரியாகக் கண்காணித்துக் கொள்வதும் கஷ்டம்.

ஆனால், பூங்கா போன்ற இடங்களுக்கு குழந்தையை அழைத்துச் செல்வதில் என்ன தடை? குழந்தை நடக்கவும், ஓடவும் பயிற்சி பெற பூங்காக்கள்தான் ஏற்றவை. காற்றும் கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.

குழந்தையைப் பூங்காவில் சுதந்திரமாக நடக்கவோ, ஓடவோ விடுங்கள். வழியில் காலிலோ, கையிலோ தட்டுப்படும் ஒவ்வொரு பொருளும் அதற்குப் புதிய அனுபவம். ஏதாவது ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் காக்கையுடனோ அணிலுடனோ குழந்தை பேசலாம். இதெல்லாம் குழந்தைக்கு அற்புதமான அனுபவங்கள்.

பூங்காவில் பிறகு குழந்தைகளும் வந்திருக்கலாமே. அறிமுகமாகாத குழந்தைகளோடு உங்கள் குழந்தை விளையாடத் தொடங்கினால் கவனம் தேவை. மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாத காலகட்டம். சண்டை சச்சரவு ஏற்பட்டால் தவிர்த்து விடுங்கள்.

பஸ்ஸிலோ காரிலோ பயணமா? குழந்தைக்கான நாப்கினை எடுத்துச் செல்லுங்கள். பயணத்தின்போது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படலாம். பயணத்தில் வாந்தி எடுத்தால் குழந்தையை உட்கார வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தால் ஜன்னலோரமாகக் குழந்தையை உட்கார வைத்துக் கொள்ளுங்கள். புதிய காற்று வீசுவது நல்லதுதான்.

பொதுவாக வீட்டில் சாப்பிடுவதைவிட குறைந்த அளவு உணவைத்தான் குழந்தை பயணத்தின்போது சாப்பிடும். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகத் தடவைகளில் இப்படிச் சாப்பிடும். எனவே பயணத்தின்போது, எதையும் சாப்பிடும்படி குழந்தையைக் கட்டாயப்படுத்த வேண்டாம். காய்ச்சிய நீரை எடுத்துச் செல்ல மறந்துவிடப் போகிறீர்கள். பெரும்பாலான நோய்கள் தண்ணீரின் மூலமாகத்தான் பரவுகின்றன.


--------------------------------------------------------------------------------

பாதுகாப்பு

தரையில் சின்னச் சின்ன பொருள்கள் இருந்தால் பாய்ந்து சென்று எடுத்துவிடுங்கள். குழந்தை வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொண்டால் யாருக்கு அவஸ்தை.

ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். இல்லையென்றால் மறக்காமல் உள்ளாடை அணிவித்தபிறகு மட்டுமே அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

சுமார் ஒரு வயதுவரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும்.

சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப்பார்க்க ஆசைப்படுகிறது.

சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றையெல்லாம் குழந்தைக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்துவிடவேண்டாம்.

சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள். கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.


--------------------------------------------------------------------------------

முதலுதவி

குழந்தைக்கான முதலுதவிப் பெட்டியில் கட்டாயம் இருக்கவேண்டியவை என்று ஒரு பட்டியல் உண்டு. ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பஞ்சு, பாண்டேஜ், ஆன்ட்டிசெப்டிக் க்ரீம் ஆகியவை முக்கியமானவை.

இரண்டு மூன்று அளவுள்ள பாண்ட்_எய்டுகள் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் காயங்கள் எந்த அளவில் எங்கு ஏற்படும் என்பதை முன்னதாகவே யூகிக்கமுடியாதே!

காயங்களைக் கழுவ டெட்டால் போன்ற திரவங்கள் இருக்கட்டும். தெர்மாமீட்டரும் அவசியம் தேவை.

குழந்தையின் கண்களில் தூசு விழுந்தால் நீரினால் அந்தப் பகுதியைத் துடைத்துவிடலாம். கண்ணில் ஏதாவது சிறுபொருள் காணப்பட்டால் சுத்தமான கைக்குட்டையின் முனையின் மூலம் அதை வெளியே எடுக்கலாம். ஆனால் ஒன்று, ஒருபோதும் குழந்தை தன் கண்களைக் கசக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும். காதுகளில் ஏதாவது சிறு பொருள் சென்றுவிட்டால் அதை எடுக்க எந்த முயற்சியும் செய்யவேண்டாம். நேரே டாக்டரிடம்தான் போகவேண்டும். ஆனால் காதுக்குள் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றலாம். பூச்சி மேலே வந்து மிதக்கும். எடுத்துவிடலாம்.

குழந்தையின் மூக்கிலிருந்து சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்க, அது விடாமல் அழவும் செய்தால் எதையோ மூக்கிற்குள் அது செலுத்திக்கொண்டுவிட்டது என்று யூகிக்கலாம். பாதிக்கப்படாத மூக்கின் பாதியை நீங்கள் விரலால் அழுத்திக்கொண்டு மற்றொரு பாதியின் மூலம் வேகமாக வெளியே மூச்சை விடச் சொல்லலாம். இதன்மூலம் அந்தப் பொருள் வெளியே வரவில்லையென்றால் டாக்டரிடம்தான் போயாகவேண்டும்.

குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்லவேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

எதையாவது வாய்க்குள் போட்டுக்கொள்வது குழந்தைகளின் வழக்கம். பெரும்பாலும் இவை ஜீரணப்பாதை வழியாக வெளிவந்துவிடும். ஆனால் உணவுக்குழாயிலோ, காற்றுக்குழாயிலோ சிக்கிக் கொண்டு பெரும் அவஸ்தை கொடுத்தாலோ, உள்ளே விழுங்கிய பொருள் கூர்முனைகளைக் கொண்டது என்றாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


ஆலோசனை:குழந்தை நல மருத்துவர்
டாக்டர் நிகிலா ஷர்மா
ஆக்கம்: ஜி.எஸ்.எஸ்.


நன்றி - குமுதம்

http://kulanthaikal.blogspot.com/2003/08/blog-post_13.html

குழந்தைகளைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்

விஞ்ஞானி ஐன்ஸ்டினும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கனும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். ஆனால், இரண்டு பேருக்கும் இடையே இரண்டு ஒற்றுமைகள் உண்டு. முதல் ஒற்றுமை, இரண்டு பேருமே சாதாரண வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். அதைவிட முக்கியமான ஒற்றுமை, குழந்தை ஐன்ஸ்டினுக்கும், குழந்தை ஆபிரஹாம் லிங்கனுக்கும் இடையே உள்ளதுதான். இரண்டு பேரிடமும் ஆங்கில எழுத்து ரி_ஐ எழுதச் சொன்னால், இப்படி எழுதுவார்களாம். 7_ஐ எழுதச் சொன்னால் என்று எழுதுவார்களாம், நம்மூரில், அ_வை என்று எழுதும் குழந்தைகளைப் போல். அ_வை என்று எழுதும் நம்மூர் குழந்தைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் அடித்துத் துவைத்து ஒருவழிக்குக் கொண்டு வருவார்கள். ஆனால், ஐன்ஸ்டினின் பெற்றோரும், ஆபிரஹாம் லிங்கனின் பெற்றோரும் அவர்களை அடித்துத் துவைக்கவில்லை. மாறாக, அவர்களது வழியிலேயே விட்டுவிட்டார்கள். இரண்டு பேருமே பெரிய மேதைகளாக இதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

எப்படி?

குழந்தைகள் வளரும் பருவத்தில், குறிப்பாக ஒரு வயது முதல், பத்து வயதுக்குள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள்தான் அவர்களுடைய பிந்தைய நாட்களைத் தீர்மானிக்கும். உண்மையில், ஆபிரஹாம் லிங்கனுக்கும், ஐன்ஸ்டினுக்கும் இருந்தது கற்றுக்கொள்வதிலுள்ள குறைபாடு அல்ல; மாறாக, அவர்களுக்கு, தேவையைவிட அதிக திறமை இருந்தது. சுயமாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல், இரண்டு பேருக்குமே அதிகம்.

நம்மூர் ஆசிரியர்களைப் போல், அவர்களைத் துன்புறுத்தி, ‘நான் கற்றுத் தருவதைத்தான் நீ படிக்க வேண்டும்’ என்றிருந்தால், அவர்களது சுயசிந்தனை ஆற்றல் மழுங்கிப் போயிருந்திருக்கும். அவர்களது போக்கிலேயே விட்டுவிட்டதால், அவர்கள் சுயமாகக் கற்றுக்கொண்டு, பெரிய மேதைகளாகிவிட்டார்கள். இதுதான் நம்மூரில் குழந்தை வளர்க்கும் முறைக்கும், மேலைநாடுகளில் குழந்தை வளர்க்கும் முறைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

நாம் திட்டமிடுவது போல்தான் குழந்தை வளரவேண்டும்; சொல்லித் தரும்படிதான் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களை நமது ஒழுங்குக்குள் கொண்டு வருவது, குழந்தைகளின் ஆற்றலை மழுங்கடிக்கத்தான் செய்யும்.

அதோடு நிற்பதில்லை, தவறான வழியில் போய் வேறு பல பிரச்னைகள் உருவாகவும் இது காரணமாகிவிடுகிறது. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பதுதான் சரியான வழிமுறை.

இயல்பாகவே, குழந்தைகளிடம் எதிர்ப்புக் குணம் அதிகம். ஒன்றைச் செய்யக்கூடாது என்று அவர்களை அடித்துத் துன்புறுத்தினால், அதற்காகவே தொடர்ந்து அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களால் பெற்றோர்களைத் திருப்பி அடிக்க முடியாது. ஆனால், செய்யக்கூடாது என்று சொல்லப்படுவதைச் செய்வதன் மூலம், அடித்தவர்களை ஜெயிக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, மிகவும் கவனமாக அவர்களது மனநிலையைப் புரிந்துகொண்டுதான் அவர்களுடன் நடந்துகொள்ள வேண்டும்.

ரி_ஐ என்று ஐன்ஸ்டின் எழுதியதுபோல் நம்மூர் குழந்தைகளிடம் காணப்படும் பிரச்னைகளையும், அப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பார்ப்போம்.

கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போடுவது:

ஒரு வயதிலிருந்து இரண்டரை வயதுக்குள் எல்லா குழந்தைகளிடம் உள்ள பழக்கம் இது. அப்போதுதான் குழந்தை ஒவ்வொன்றாக அறிய ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு அப்போது தெரிந்த ஒரே உணர்வு சுவைதான். எனவே, அவர்கள் எல்லா பொருட்களையும் சுவை மூலமே அறிகிறார்கள். ஆனால், மூன்று வயதுக்கு மேலும் இது தொடர்ந்தால், அது இயல்பானதல்ல. இதற்கு மருத்துவத்தில் ‘பைக்கா’ (ஙிவீநீணீ) என்று பெயர். அதாவது, இம்மனநிலை உள்ள குழந்தைகள், உணவைத் தவிர, மண், விபூதி, சாம்பல், சாக்லேட், சாக்பீஸ், குப்பை ஆகியவற்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். இப்படிக் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டால், பொருட்களிலுள்ள விஷத்தன்மை காரணமாக வயிற்றுவலி வரும். புராணத்திலேயே கிருஷ்ணன் மண்ணைத் தின்றிருக்கிறான். கால்சியம், இரும்பு, துத்தநாகச் சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளிடம், இந்தப் பழக்கம் உள்ளது என்று கருதப்படுகிறது. பழக்கவழக்கங்களில் உள்ள ஒரு சீரற்ற தன்மை காரணமாகவும் இது நடக்கலாம்.

மண் சாப்பிடும் குழந்தையை, அடித்துத் துன்புறுத்தி, மண் சாப்பிடக்கூடாது என்று சொல்வதால் எந்தப் பயனும் இருக்காது. செய்யக்கூடாது என்று சொல்வதற்குப் பதிலாக, குழந்தையின் கவனத்தைத் திசை திருப்பலாம். விளையாடச் சொல்லலாம் அல்லது அவர்களுக்குப் பிடிக்கும் ஏதாவது ஒன்றைத் தரலாம்.

தேம்பித் தேம்பி அழுவது:

தேம்பித் தேம்பி அழுதுகொண்டே போய் கடைசியில் மூச்சை நிறுத்திவிடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கிறது. அல்லது அதைத் தொடர்ந்து காக்காய் வலிப்பு போல் வரும். கோபம் அதிகமுள்ள குழந்தைகள் இதுபோல் செய்யும். சில பெரியவர்களிடம் குழந்தைகளைச் சீண்டி அழவைத்துப் பார்த்து மகிழும் பழக்கம் இருக்கிறது. இதுதான் குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுவதற்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. எனவே, குழந்தைகளைச் சீண்டி அழ வைப்பதைத் தொடரக்கூடாது. குழந்தை தேம்பித் தேம்பி அழும்போது, அடிப்பது அல்லது அதனைத் தேற்றுவது இரண்டுமே தவறான வழிமுறைகள். தேற்றுவது அல்லது அழுகையை நிறுத்துவதற்காக எதையாவது வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றால் அழுது காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் குழந்தையிடம் பதிந்துவிடும். அழும்போது குழந்தையைக் கவனிக்காதது போல் இருந்துவிட வேண்டும். இதனால், கொஞ்ச நேரத்தில் குழந்தை அதன் போக்கிலேயே இயல்புக்கு வந்துவிடும்.

கோபமானால் பொருட்களைப் போட்டு உடைப்பது, தரையில் விழுந்து உருள்வது போன்ற செயல்களை குழந்தைகள் செய்யும் போதும், இதுபோல் கவனிக்காதது மாதிரி இருந்து விட்டால், குழந்தை தானாகவே இயல்புக்குத் திரும்பிவிடும். பிறகும் குறையாமல் இருந்தால், மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லலாம். எக்காரணத்தைக் கொண்டும் அடிப்பது நல்லதல்ல.

படுக்கையில் சிறுநீர் கழிப்பது:

படுக்கையில் சிறுநீர் போகும் பழக்கம், பெரும்பாலும் மனரீதியான ஒரு பிரச்னைதான். தொண்ணூறு சதவிகிதம் உணர்ச்சித் தழுதழுப்பால் நிகழ்கிறது. பத்து சதவிகிதம் உடற்கூறு பிரச்னைகளினால் நடக்கிறது. ஆரம்பத்தில் சரியான பயிற்சி இல்லாததால் இது அதிகம் ஆகிறது. அப்புறம், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு ‘‘அவனைப் பார், உன்னை மாதிரியா அவன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறான்’’ என்று சொல்லும்போது ஏற்படும் குற்றவுணர்வு, பயம், அவமானம் காரணமாக இது அதிகமாகும். வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் நடக்கும் பிரச்னைகளும், படுக்கையில் சிறுநீர் போவதற்குக் காரணமாக இருக்கும். எனவே, குழந்தை எதனால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று கண்டுபிடித்து, அதை முதலில் சரிசெய்ய வேண்டும்.

இரவு தூங்கப்போகும் முன்பு, குழந்தையைச் சிறுநீர் போகச் சொல்லவேண்டும். நடு இரவில் எழுப்பி மீண்டும் ஒருமுறை சிறுநீர் போகச் சொல்லவேண்டும். இருக்கையில் சிறுநீர் போகாத நாட்களில், ஏதாவது பரிசு தரலாம். சிறுநீர் சென்று கொண்டிருக்கும்போது நிறுத்தி, மீண்டும் போகச் சொல்லலாம். இதன் மூலம், சிறுநீர் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

திக்குவாய்:

குழந்தைகள் பிறந்த நாள் தொடங்கி, தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே வருகிறார்கள். சுற்றிலும் பெரியவர்கள் பேசுவதையெல்லாம், கிரகித்துக் கொள்வார்கள். குழந்தை பேசத் தொடங்கும்போது, ஏற்கெனவே இப்படி அதன் மூளைக்குள் நிறைய வார்த்தைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில குழந்தைகள் பேசத் தொடங்கும்போது, ஒரே சமயத்தில் அத்தனை வார்த்தைகளையும் பேசிவிட வேண்டும் என்று துடிக்கிறது. இதனால், டிராபிக்ஜாம் ஆகி, எதைச் சொல்வது என்று தெரியாமல், குழந்தை திக்க ஆரம்பிக்கிறது. அப்போது ‘சீக்கிரம் சொல்லு, சீக்கிரம் சொல்லு’ என்று அவசரப்படுத்தினால், திக்குவது அதிகமாகும். இது அப்படியே தொடர்ந்துதான் திக்குவாய் பெரும்பாலான நேரங்களில் உருவாகி விடுகிறது. எனவே, குழந்தை பேசத் தொடங்கும்போது திக்கினால், பயந்து அவசரப்படுத்தாமல், ‘பரவாயில்லை. நிதானமாகச் சொல்லு’ என்று ஆசுவாசப்படுத்த வேண்டும். நிறைய நேரமிருக்கிறது ஒன்றும் அவசரமில்லை என்பதுபோல் நடந்துகொள்ள வேண்டும். இப்படி நடந்துகொண்டால், ஆறேழு மாதத்தில் குழந்தை இயல்புக்குத் திரும்பி விடும். இல்லாவிட்டால், பேச்சுப் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

விரல் சூப்புவது, நகம் கடிப்பது:

விரலைச் சூப்புவது, நகத்தைக் கடிப்பது இரண்டையுமே முதலில் குழந்தைகள் மற்றவர்களைப் பார்த்துத்தான் தொடங்குகிறார்கள். விளக்கெண்ணெயைத் தடவுவது போன்ற முறைகள் இதற்குச் செய்யப்படுகின்றன. இதைவிட கைகளுக்கு வேலை தரும்படி, குழந்தையின் கவனத்தை திசை திருப்புவது நல்ல பலனைத் தரும். விளையாடச் சொல்லலாம். பிடித்த பொருட்களை கையில் தந்து வைத்திருக்கச் சொல்லலாம்.

தனிமை:

சில குழந்தைகள் எப்போதும் தனிமையிலேயே இருப்பதைப் பெரிதும் விரும்புவார்கள். அவர்களது உலகத்தில் தனியாக அவர்கள் பாட்டுக்கு ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்வதிலும் ஒன்றின் மேல் கவனத்தைக் குவிப்பதிலும் சிரமம் இருக்கும். இந்தக் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்போது, முதலில் தனிக் கவனம் எடுத்து கவனிக்க வேண்டும். கண்ணால் நேரடியாகப் பார்த்துக் கொண்டே பேசுவது நல்ல பயிற்சி. இதன் மூலம் தனிமை உணர்வு குறையும். அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்.

குழந்தைகள் பொதுவாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைப்பதைவிட அதிகம் கற்றுக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்தான். ஆனால், அவர்களது கற்றுக்கொள்ளும் ஆற்றலைக் கணக்கிலெடுக்காமல், விருப்பங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் நமக்குச் சரி என்று படும்படி அவர்களைத் திருப்புவதுதான் பெரும்பாலும் தவறான வழிக்கு அவர்களைக் கொண்டு போய் விடுகிறது. எனவே, குழந்தைகளைப் புரிந்துகொண்டு, அவர்களது போக்கிலேயே போய் வளர்ப்பதுதான் சிறந்த ஒரு ஆளுமையாக, குழந்தை வளர்வதற்குக் காரணமாக இருக்கும்.

ஐன்ஸ்டினைப் போல், ஆபிரஹாம் லிங்கனைப் போல் உங்கள் குழந்தையிடமும் ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கலாம். அதனைத் சொல்ல அவர்களுக்குத் தெரியாது. நாம்தான் அதைக் கண்டுபிடித்து அதனை வளர்க்கும்படி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டினைப் போல் ஒரு மேதையாக வளர வாய்ப்புகள் உள்ளது. வாழ்த்துக்கள்!

தொகுப்பு: தளவாய் சுந்தரம்
http://kulanthaikal.blogspot.com/2003/08/blog-post.html

குழந்தைதானே! பாவம், அதற்கென்ன தெரியும்?“

„போகப்போகத் தானா எல்லாம் தெரிஞ்சுக்கும்.“

குழந்தைகள் விஷயத்தில் இப்படி ஒரு போக்கைக் கடப்பிடிப்பதுதான் பல சமயங்களில், அந்தக் குழந்தையின் குணநலன்களைச் சிக்கலானதாக ஆக்கிவிடுகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாவிட்டாலும் அதான் உண்மை.

மூன்று வயதாகும்போதே குழந்தக்குத் தன்னப் பற்றிய பல விவரங்கள் புரிகின்றன. „நான் எங்கேயிருநது; வந்தேன்?“ என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்கத் தெரிகிறது அதற்கு.

முக்கியமாக, ஐந்திலிருந்து எட்டு வயது என்பது, குழந்தயின் குணநலன்களை உருவாக்குவதில் மிக முக்கியமான பருவம்.

மூன்று சக்கர சக்கிளை எடுத்து ஓடும் குழந்தை கடைசியில் அந்த சக்கிளை எடுத்த இடத்திலேயே வைக்கிறதா? என்ன செய்வீர்கள்?

கீழே எதையாவது சிந்திவிட்டால், பக்கத்தில் இருக்கும் துணியால் அதைத் துடைக்க முயற்சிக்கிறதா? என்ன செய்வீர்கள்?

இதென்ன கேள்வி? பார்த்து மகிழ்வேன். மனதிற்குள் பெருமைப்படுவேன். தெரிந்தவர்களிடம் இதைக்கூறி ஆனந்தப்படுவேன் என்கிறீர்களா? இவற்றோடு நின்றுவிட்டால் போதாது. நேரடியாகக் குழந்தையைப் பாராட்ட வேண்டும்.

ஒரு வேளை, தற்செயலாக (எடுத்த இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே கூட) சக்கிளை அந்த இடத்தில் குழந்தை வைத்திருக்கலாம். அப்போ உங்கள் பாராட்டின் காரணமாக, இதுதான் சரியான வழிமுறை என்பது குழந்தயின் மனதில் பதியும்.

அதேபோல், அடுத்த முறை எதயாவது கீழே கொட்டிவிடும்போது, அம்மா இல்லாவிட்டால் கூட அவள் „வெரிகுட்“ வார்த்தை, குழந்தையின் மனதில் தோன்றும். துடைப்பதற்குத் தானாக முயற்சிக்கும்.

நல்ல பழக்கங்கள மட்டுமல்ல, குழந்தை தப்பு செய்யும் போதும் உடனடியாக சுட்டிக்காட்ட வேண்டும். தான் செய்வது தப்பு என்பது தெரிந்தால்தானே குழந்தையால் அதைத் திருத்திக்கொள்ள முடியும்? தொடர்ந்து தப்பு செய்து பழகினால், அதை மாற்றிக் கொள்வது கஷ்டம். எனவே, தொடக்க காலத்திலேயே அதை மாற்றிவிட வேண்டும்.


கண்ணாடி டம்ளரை வைத்துக்கொண்டு, அடிக்கடி விளயாடினால், கீழே விழுந்தால் உடந்து விடும். எனவே இந்த விளயாட்டு வேண்டாம்’’ என்பதைக் கண்டிப்பாகவே சொல்லிவிடலாம். தவறு செய்தால் லேசான தண்டனை கொடுப்பதும் நல்லதுதான். லேசான என்பது நினவில் இருக்கட்டும். ஆனால், அதே சமயம், அந்தத் தண்டனைக்குப் பிறகு குழநதையக் கட்டிக்கொண்டு, ‘‘நான் இப்படி செய்துட்டேனே?... சாரி’’ என்றெல்லாம் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டாம். ‘நாம செஞ்ச தப்பில்லே போல இருக்கு. அதுக்கு அம்மா கண்டிச்சதுதான் தப்பு’ என்ற எண்ணம் குழந்தக்கு வந்துவிடும்.

அதிகம் இல்லயென்றாலும், சின்னச்சின்ன உதவிகளைக் குழந்தை பிறருக்குச் செய்யும். தன் குட்டித் தம்பியின் கையிலிருந்து பந்து நழுவி ஓடினால், அதை எடுத்துக் கொடுக்கலாம். தாத்தாவுக்கு அவரது கைத்தடியை எடுத்துக் கொடுக்கலாம். இதுபோன்ற செயல்களை உன்னிப்பாக கவனித்து உடனடியாக குழந்தையைப் பாராட்டுங்கள். குழந்தையின் எதிரிலேயே பிறரிடம், அந்த உதவிகளக் குறிப்பிட்டு பெருமைப்பட்டால் மேலும் நல்லது.

ஆத்திகம், நாத்திகம் ஆகிய கருத்துச் சண்டகள் ஒருபுறம் இருக்கட்டும். இறை நம்பிக்கை என்பது குழந்தகளிடையே ஒருவித ஒழுக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலும், இறை நம்பிக்கயும், ஒழுக்க நெறிகளும் சேர்ந்தே இருப்பதால், ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குச் செல்வது குழந்தைக்கு எளிதாக இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் (மூன்றிலிருந்து எட்டு வயதிற்குள்) குழந்தைக்கு ஒன்று பிடித்துவிட்டால், அதையே திரும்பத் திரும்பக் கேட்கும். சாம்பார் சாதம் பிடித்துவிட்டதா, அதையேதான் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பிடித்து விட்டதா, அந்த வீடியோ அல்ல சி.டி. யைத்தான் தொடர்ந்து போட வேண்டும். இராமாயணம் மனதை ஈர்த்துவிட்டதா, அதே கதையத்தான் வீட்டில் உள்ளவர்கள் தினம் தினம் சொல்லவேண்டும். இது போன்ற தொடர்ந்து விரும்பும் இயல்புகளில் தவறில்லை. குறிப்பிட்ட கதைகளையே கேட்பதன் மூலம் குழந்தை, தனக்குள் ஒருவித நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிறது. நல்ல விஷயங்களப் போதிப்பதற்கு இது மிகவும் ஏற்ற பருவம்.

‘‘தினமும் பதினொரு மணிக்குத்தான் படுக்கப் போறான். அவரது டி.வி. பார்க்கிறான். காலையிலே எவ்வளவு எழுப்பினாலும் சுலபத்தில் எழுந்திருக்க மாட்டேன் என்கிறான். அப்புறம் கடசி நிமிஷத்திலே அரக்கபரக்க ஸ்கூலுக்கு ஓடறான்.’’ இப்படிச் சொல்லும் பல அம்மாக்கள நான் சந்தித்து வருகிறேன்.

மூன்று வயதுவரை ஒருவிதத்தில் பழக்கி விட்டு, குழந்தை பள்ளியில் சேர்ந்தவுடன், அதன் து}ங்கியெழும் நேரங்கள் சட்டென்று மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கும் முன்பிருந்தே அதற்கான பயிற்சியைக் கொடுங்கள். குழந்தைக்கு இரண்டு வயதாகும்போதே இரவு எட்டு மணிக்குள் உணவ அளித்துவிடுங்கள். பிறகு கை கால்களச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பல் தேய்த்துக் கொள்ளவேண்டும். படுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தினசரி பழக்கமாக்கிவிடுங்கள். அப்புறம், பள்ளிக்குப் போகும்போது எந்தவித சிரமத்தயும் உணரமாட்டீர்கள்.

சொல்லப்போனால், குழந்தைக்கு ஆறுமாதமானவுடனேயே நள்ளிரவில் ஒருமுறை பால் கொடுப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதை நிறுத்திவிடுங்கள்.

சில சமயம் ஆழ்ந்த து}க்கம் இல்லாத காரணத்தினாலும், காலயில் சுறுசுறுப்பாக எழுந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆழ்ந்த து}க்கம் இல்லாததற்குப் பல காரணங்கள். கெட்ட கனவுகள் அவற்றில் ஒன்று (ஆழ்ந்த து}க்கம் இல்லாதபோதான் கனவுகள் வருகின்றன என்பதைப்போல, கெட்ட கனவினால் பயமேற்பட்டு, இருக்கும் து}க்கமும் போகிறது என்பதும் உண்மையே). தொலைக்காட்சி, குழந்தைகள் மனதில் பலவித குழப்பங்களையும், பயங்களையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, சரியான நிகழ்ச்சிகளயே தேர்ந்தெடுத்துப் பார்க்க வைப்பது முக்கியம்.

இந்தக் காலகட்டத்தில் சில குழந்தைகளுக்குத் து}க்கத்தில் நடக்கும் பழக்கம்கூட இருக்கலாம். உடனே பயப்பட்டுப் பதறவேண்டாம். பெரும்பாலும் இதெல்லாம் தானாக மறந்துவிடும். உடனே, மனநல மருத்வரிடம் ஓடவேண்டும் என்பதில்லை. பரம்பரை காரணமாகவும், து}க்கத்தில் நடக்கும் வியாதி வரக்கூடும். டாக்டரிடம் அடுத்த செக்கப் செய்து கொள்ளும்போது, இதைப் பற்றியும் குறிப்பிடலாம்.

இந்தக் காலகட்டத்தில் து}க்கத்தில் நடக்கும் வியாதி வரவில்லயென்றால், நீங்கள் ஒருவிதத்தில் அமைதி கொள்ளலாம். பின்னாளில் இந்தக் கோளாறு வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறவு. மூளைக்கோளாறுகளினால் வருவதல்ல இந்தப் பழக்கம்.

குழந்தை பொய் சொல்வது மற்றும் திருடுவது குறித்து ஏற்கெனவே கொஞ்சம் பேசியிருக்கிறோம். இப்போ இன்னும் கொஞ்சம் ஆழமாக அந்தப் பிரச்சனைக்குள் செல்வோமே...

பெற்றோரின் எதிர்பார்ப்பு அளவுக்கு வரமுடியாதபோதான் குழந்தை பெரும்பாலும் பொய் சொல்வது, திருட்டுத்தனம் செய்வது போன்ற வழிகளில் ஈடுபடுகிறது என்கிறார்கள் மனநல மருத்வர்கள். புரியாத ஒரு பாடத்தைக்கூட அம்மாவிடம் ‘‘புரியுது’’ என்று குழந்தை கூறுவதும், வீட்டில் நல்ல பெயர் வாங்கவேண்டும் (அல்லது) திட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பரீட்சையில் கொப்பியடிப்பதும் இதுபோன்ற செயல்கள்தான்.

மற்றவர்களிடையே தான் பிரபல்யமடைய வேண்டும் (‘வர்ற வழியிலே ஒரு பாம்பு இருந்தது. என் செருப்பாலை அதை அடிச்சுக் கொன்றேன்’) என்பதற்காகப் பொய் கூறுவது ஒரு வகை. இன்னொரு வகை, பிறரின் பெயரைக் கெடுப்பதற்காகக் கூறும் பொய். சிறு குழந்தையைக் கிள்ளிவிட்டு, அந்தப் பழியை வேறொரு சிறுவன் மீது போடுவதும் இந்த வகைதான்.

முதல் வகைப் பொய்யையாவது, அவ்வளவு பெரிதுபடுத்த வேண்டாம். இரண்டாம் வகைப் பொய்யை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு மூன்று வயது குழந்தை, மேலே உள்ளது போல் நடந்து கொண்டால், (உண்மையத் தெரிந்து கொண்டும்) அந்த வேறொரு சிறுவன ஒப்புக்காகவாவது திட்டி, உங்கள் குழந்தையின் மனதை மகிழ்விப்பது ஆபத்தான செயல். சொல்லப்போனால், இபோன்ற பொய்களினால் மற்றவர்களுக்கு என்னென்ன விதமான துயரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை அப்படிப் பொய் சொல்லும் முதல் நாளிலேயே விளக்கி, அந்தப் பழக்கத்தைக் கைவிட வைக்க வேண்டும்.

சந்திப்பு, ஆக்கம்: ஜி.எஸ்.எஸ்.
நன்றி - குமுதம்

 

http://kulanthaikal.blogspot.com/2004/04/blog-post_02.html

பிறந்த குழந்தையை முதல் ஒரு வருடம் வளர்ப்பது என்பது எல்லாப் பெண்களுக்குமே ஒரு சவாலான விடயம். மிக ஜாக்கிரதையாக, மிக கவனமாக பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டிய நேரம் அது. சின்னப் பிரச்னைகூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக்கூட வரலாம். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத இளம் தாய்களுக்கு கைக் குழந்தையை வளர்ப்பதில் பல சந்தேகங்கள் தோன்றும். அவர்களுக்குரிய அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கம் தருகிறார் டொக்டர் பாலச்சந்திரன்.

குழந்தை பிறந்தவுடன் எத்தனை நாளில் தாய்ப்பால் தர வேண்டும்?
எத்தனையாவது நாளிலா? பிறந்த அரை மணி நேரத்திலேயே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் துவங்கிவிட வேண்டும். சொல்லப்-போனால்... தாய்ப்பால் கொடுப்பது-தான் குழந்தைக்காக எடுக்கப்படும் முதல் நோய் தடுப்பு முயற்சி! தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வு, குழந்தைக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. பால் கொடுக்கப் போகும் மார்பகத்தின் காம்புப் பகுதியை குழந்தையின் கன்னத்தில் தேய்த்தால் போதும்... குழந்தை தலையைத் திருப்பி மார்பகத்தின் வட்டப் பகுதியை, அழகாக வாயில் கவ்விக் கொள்ளும்! பொதுவாகவே, மார்பகத்தின் காம்புப் பகுதி உள்ளடங்கி இருக்கும். குழந்தை கவ்விப் பிடித்து உறிஞ்சும்போது, இந்த காம்புப் பகுதிகள் வெளியே நீண்டுவிடும்!

என் மார்பகம் சிறியதாக இருக்கிறது... தாய்ப்-பால் சுரக்குமா? சுரக்கும் தாய்ப்பால் குழந்-தைக்கு போதுமானதாக இருக்குமா?
மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பலமுறை பலராலும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், விளக்கமாச் சொல்கிறேன்! குழந்தை மார்பகத்தை கவ்விப் பிடிக்கும்போது, தாயினுடைய பெருமூளைப் பகுதியின் அடிப்-பாகத்தில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி, ஆக்ஸிடோஸின் என்ற திரவத்தை சுரக்கிறது. உடனடியாக... மார்பகத்தில் தாய்ப்பால் சுரக்கும்.

இதை-யும் தெரிந்து கொள்ளுங்கள்... குழந்தை பால் குடிக்கும் அந்தந்த நேரத்தில் ஃப்ரஷ்ஷாக அது குடிப்ப-தற்கேற்ற சரியான வெதுவெதுப்பில், குடிப்பதற்கேற்ற அடர்த்தியில்தான் தாய்ப்பால் சுரக்கிறது!

குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கும், தாயிடம் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே! இது குழந்தைக்கு நல்லதா?
ரொம்ப ரொம்ப! குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால்தான் கொலஸ்டிரம் என்றழைக்கப் படுகிறது. வெண்மைக்கும், மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிறத்தில் தண்ணீரைப் போல இருக்கும் கொலஸ்டிரத்தில், திடப்பொருள்கள் அதிகமாக இருக்காது. ஆனால், சுகர், லேக்டோஸ் மற்றும் புரதச் சத்துக்கள் இந்த சீம்பாலில் எக்கச்சக்கம்! தாயின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்துக்கள் சீம்பால் மூலமாக குழந்தைக்கு முழுமையாகக் கிடைக்கிறது. அதனால், முதல் மூன்று நாட்களுக்குச் சுரக்கும் சீம்பாலை, கண்டிப்பாக குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

ஆனால், சீம்பால் கொடுத்தால் பேதியாகும் என்று கூறுகிறார்களே?
கொலஸ்டிரம் குடலைச் சுத்தம் செய்வதால், அப்போது வெளியேறும் மலம், பேதி போலத்தான் இருக்கும். இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை! இதற்கு பயந்து, பலவகை சத்துக்களை உள்ளடக்கிய ‘கொலஸ்டிரம்’ பாலை குழந்தைக்குக் கொடுக்கத் தவறவே கூடாது. ஒரு சிலர், குழந்தைக்கு முதலில் கழுதைப் பால் தான் கொடுக்க வேண்டும் என்ற சடங்கைப் பின்பற்றுவதற்காக, சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தரையில் பிழிந்துவிட்டு விடுவார்கள். இது மாதிரி நாம் நம்முடைய குழந்தைக்கு வேறு எந்தக் கொடுமையையும் செய்ய முடியாது! இன்றும், பல பிரசவ மருத்துவமனைகளுக்கு வெளியே கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆனால், சுகாதாரமற்ற கண்ட கண்ட பாலையும் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டுவது, தொற்று நோய்களை வரவேற்பதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதற்கு சமம்! இது தேவையா?

ப்ரீமெச்சூர் அதாவது குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே பிறந்துவிடும் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கும் சக்தி இருக்காது என்கிறார்களே?
உண்மைதான்! ஆனால்... தாய் மனது வைத்தால் குழந்தைக்கு மென்மையாக, உறிஞ்சக் கற்றக் கொடுக்கலாம். ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கு தேவைப்படுவது தாயின் வெதுவெதுப்பும், அரவணைப்பும்தான். குழந்தையை உடலோடு அணைத்துக் கொண்டு, உணர்வுரீதியான ஒரு ஒட்டுறவை தாய் முதலில் குழந்தையுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உறவுப் பாலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. அப்புறம் அடுத்தடுத்த ஸ்டெப்களில் மெல்ல மெல்ல குழந்தை, பாலை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கும். போகப் போக, பால் குடிக்கும் ஸ்பீடு அதிகரித்து, நார்மல் குழந்தையின் வேகத்தை எட்டிவிடும்...!

குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
ரொம்ப சிம்பிள்! ஒரு நாளில் குழந்தை கிட்டத்தட்ட நான்கு முறைகள் மலம் கழிப்பதாலும், ஆறு டயப்பர்களை நனைக்கும் அளவுக்கு மூச்சா போவதாலும், பொதுவாகவே பிறந்தவுடனே குழந்தைகளின் எடை குறையும். போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்தால், பதினைந்தே நாட்களில் வெயிட் ஏறி, பிறக்கும் போது இருந்த எடைக்கு மீண்டும் திரும்பி விடும். இதற்குப் பிறகு, வாரத்திற்கு 150_250 கிராம் என்ற கணக்கில் குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும். இந்தக் கணக்கு சரியாக இருந்தால், உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்-கிறது என்றுதான் அர்த்தம்!

தாய்ப்பாலை பிழிந்தெடுத்து, சேமித்து வைக்கலாமா?
வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு, இப்படி தாய்ப்பாலை பிழிந்தெடுத்து சேமிப்பது உபயோகமாக இருக்கும். பிழிந்த தாய்ப்பாலை 5_7 நாட்கள் வரை Fridge இல் சேமித்து வைக்கலாம். Freezer இல் வைத்தால், 6 மாதங்கள் வரைகூட பாதுகாக்கலாம். Fridge இல் இருந்து எடுத்ததும் அப்படியே குழந்தைக்குத் தரக்கூடாது. ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிறைத்து, உறைந்த தாய்ப்பாலை அதில் அமிழ்த்தி, சில மணி நேரங்கள் கழித்து, குழந்தைக்குத் தேவைப்படும் வெதுவெதுப்பான டெம்பரேச்சரில்தான் கொடுக்க வேண்டும்!

இரண்டே மாதங்களான சில குழந்தைகளுக்கு மாறுகண் போலத் தெரிகிறதே?
பயப்பட வேண்டாம்! பிறந்த சில நாட்களில், குழந்தை அருகில் உள்ள பொருட்களை வேடிக்கை பார்க்கத் துவங்கும். அப்படி பார்க்கும்போது, சில நேரங்களில் மாறுகண் விழுவது சகஜம்தான்! 4 மாதங்கள் வரை இப்படி மாறுகண் தோன்றுவதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு பிறகும் தொடர்ந்தால்... மருத்துவரை அணுகலாம்.

குழந்தையின் மார்புக் காம்பில் வீக்கம் இருக்கிறது. சில நேரங்களில் வெள்ளைத் திரவம் வெளியேறுகிறது. இதைப் பிழிந்து எடுக்கலாமா?
தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் இயற்கையான ஹார்மோன்களால், சில நேரங்களில், குழந்தையின் மார்புக் காம்புகளிலிருந்து வெள்ளைத் திரவம் கசிகிறது. இதைப் பிழிந்து எடுக்கக்கூடாது. 3_4 மாதங்களில் இந்தக் கசிவு தானாகவே நின்றுவிடும்.

பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பிலிருந்து வெள்ளை திரவம் கசிகிறது. சில நேரங்களில் பீரியட்ஸ் ஆனது போல இரத்தம் கூட வெளியேறுகிறதே?
இதற்கும் காரணம் அம்மாவின் பாலில் இருந்து கிடைக்கும் இயற்கை ஹார்மோன்கள்-தான். குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலை தானாகவே சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

பிறந்த ஆண் குழந்தையின் விதைப் பையில் வீக்கம் இருக்கிறதே?
விதைப்பையில், ஹைட்ரோஸீல் (Hydrocele) என்ற ஒரு வகை திரவம் தேங்கி இருப்பதால், வீக்கம் உண்டாகக்கூடும். குழந்தை பிறந்து முதல் சில மாதங்களில் வீக்கம் சரியாகவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

குழந்தைக்கு இன்னும் உச்சந்தலையில் உள்ள எலும்புகள் சேரவில்லையெனில்! அங்குத் தண்ணீர் படலாமா?
தாராளமாக! தலையை தண்ணீர் விட்டு அலசலாம். பயம் ஒன்றும் இல்லை.

பிறந்த குழந்தையின் உடல் திட்டு திட்டாக பச்சை நிறமாக இருக்கிறதே? குழந்தைக்கு ஆபத்தோ என்று பயமாக இருக்கிறது!
கவலை வேண்டாம்! தோலின் நிறத்தை தீர்மானிக்கும் மெலனின் என்ற வஸ்துதான் பச்சை நிறத்தில் திட்டு திட்டாக காட்சியளிக்கிறது. குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் முடிவதற்குள், இந்த நிலைமை சரியாகிவிடும்.

குழந்தையின் உடலெங்கும் சிகப்பு முடிச்சுக்கள் இருக்கிறதே... ஏதாவது அலர்ஜியா?
இல்லை! சில நேரங்களில், இரத்தக் குழாய்கள் தோலுக்கு வெளியே இப்படி ஸ்பெஷல் தரிசனம் கொடுப்பதுண்டு. இந்த நிலைக்குப் பேர் ‘ஹிமாஞ்சியோமா’ என்பார்கள். இந்த முடிச்சுகளை கையால் அழுத்தக்கூடாது. சிறிது காலத்தில் தானே போய்விடும் என்றாலும், மருத்துவ ஆலோசனை பெறுவதில் தவறொன்றும் இல்லை.

குழந்தைக்கு, தொப்புள் கொடி விழுந்த போது, சில இரத்தத் துளிகள் வெளியேறியது. இப்போது அந்த இடத்திலிருந்து ஒரு வகை திரவம் சுரக்கிறது. தொப்புள் வேறு துருத்திக் கொண்டு நிற்கிறது. ஏதாவது பிரச்சினையா?
தொப்புள் துருத்திக் கொண்டு நிற்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை. கொடி விழுந்த ரணப்பகுதி ஆறுவதற்கு ஒரு சிம்பிள் வைத்தியம் இருக்கிறது. ரணப் பகுதியில் சிட்டிகை உப்புத் தூளைப் போட்டு இரண்டு துளி வெந்நீரை தெளித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த வைத்தியத்தை தினமும் இரண்டு முறை தொடர்ந்து நாலைந்து நாட்களுக்கு செய்து வந்தால், ரணம் ஆறிவிடும். ஆனால்... தொப்புளைச் சுற்றி சிகப்பு கோடுகளோ அல்லத ஒருவித துர்நாற்றமோ இருந்தால், மருத்துவரைத்தான் அணுக வேண்டும்.

குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல், வயிற்றுப் போக்கு என்று வருகிறதே...? இது சகஜமாக வந்து போவதுதான் என்றாலும், இதுபோன்ற நோய் வரும்போது, அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது?
கவலைவேண்டாம் இதோ, கீழேயுள்ள அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு வரும் பட்சத்தில் குழந்தை சீரியஸாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்...
சளியின்போது...
- 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்...
- இருமலில் மஞ்சள் நிற சளி வெளியேறினால்...
- மூக்கிலிருந்து பச்சைநிற திரவம் ஒழுகினால்...
- குழந்தைக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால்...
- ஜுரம் வரும்போது...
- குழந்தையின் வயது இரண்டு மாதத்திற்கும் குறைவாக இருந்தால்...
- மருந்துக்கு கட்டுப்படாத... 105 டிகிரிக்கும் கூடுதலான ஜுரம் என்றால்...
- மூச்சுவிட சிரமப்பட்டால்...
- குழந்தைக்கு மயக்கநிலை ஏற்பட்டால்.
- இருமல் வரும்போது...
- வறட்டு இருமலாக இருந்தால்...
- மூச்சுத் திணறல் ஏற்பட்டால்...
- குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு மோசமான இருமலாக இருந்தால்.
- வயிற்றுப் போக்கு வரும்போது...
- இரண்டு வார காலத்துக்கும் கூடுதலாக வயிற்றுப் போக்கு தொடர்ந்தால்...
- மலத்தில் இரத்தம் வெளியேறினால்...
- 3 நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்தால்...
- யூரின் அளவு குறைவாக இருந்தால் (ஒரு தினத்துக்கு 3 டயப்பர்களைக்கூட பயன்படுத்தாத நிலை)
- குழந்தையின் நாக்கு, உதடு உலர்ந்து போதல், கண் சொருகுதல் போன்றவை இருந்தால்...
- மூச்சுவிட சிரமப்பட்டால்...
- தாய்ப்பால் குடிக்க மறுத்தால்...
வாந்தி வரும்போது...
- 24 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து குழந்தை வாந்தி எடுத்தால்...
- யூரின் அளவு குறைந்தால்...
- உதடும், நாக்கும் உலர்ந்து போய், குழந்தையின் கண் சொருகினால்...
- வாந்தியில் இரத்தம் வந்தால்...
- கரும்பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால்...
- மயக்கநிலை ஏற்பட்டால்...
இதுபோல எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

பிறந்த இரண்டு மாதத்திற்குள் குழந்தைக்கு ஜுரம் வந்தால் ஆபத்தா, ஏன்?
நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்க் கிருமிகளுடன் போராடும் போதுதான் ஜுரம் உண்டாகிறது, இரண்டு மாதக் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் இருப்பதால்தான், அந்த நிலையில் ஜுரம் ஏற்படும் போது, டாக்டர்களுக்கு கவலையைத் தரு-கிறது.

வயிற்றுப் போக்கு ஏற்படும்போது, தெளிவான திரவ உணவு (Clear liquids) கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ‘கிளியர் லிக்விட்ஸ்’ என்றால்?
கட்டிகள் இல்லாத திரவ உணவு. உதாரணமாக இளநீர், சாதம் வடித்த கஞ்சி + உப்பு, காய்கறி வேகவைத்த நீர் + உப்பு, பருப்பு வேகவைத்த நீர் + உப்பு, ஓ.ஆர்.எஸ். (ORS - Oral Rehydration Solution) (தண்-ணீர் + உப்பு + சர்க்கரை கலவை).

உடல் சரியில்லாத நிலையில், குழந்தைகளை குளிப்பாட்டாமல் இருக்கும்போது, தலையில் குழந்தைகளுக்கு அடை அடையாக அழுக்கு நிற்கிறதே! அதற்கு என்ன செய்வது?
சரிதான் போங்க! ஏதோ குழந்தையை குளிப்பாட்ட வேண்டாமென்றால் உடம்பைக் கூடவா துடைக்காமல் இருப்பது? வெது வெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த டவலைக் கொண்டு, குழந்தையின் தலை மற்றும் உடலை தினசரி துடைத்து வந்தால், இதைப் போன்ற அழுக்கடைகள் நிற்காது. சரி, வந்துவிட்டது! இனி என்ன செய்யலாம்? சிட்ரிமைட் லோஷனை (Cetrimide Lotion) பயன்படுத்தினால், அழுக்கடைகள் போயே போச்சு! இட்ஸ் கான்!

குழந்தையின் மூக்கடைப்பை சரி செய்வதற்கு, மூக்கில் மெடிகேட்டட் டிராப்ஸ் விடுவது நல்லதா?
மெடிகேட்டட் டிராப்ஸை அளவாக, டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், சளி ஜவ்வு பாதிக்கப் படக்கூடிய ஆபத்து இருக்கிறது. மெடிகேட்டட் டிராப்சுக்கு பதிலாக நேஸல் சலைன் டிராப்ஸை பயன் படுத்தலாம். இப்போது கடைகளில், சளியை உறிஞ்சக் கூடிய மியூக்கஸ் ஸக்கர் பல்புகள் (Mucus Sucker bulbs) கிடைக்கிறது. மருத்துவ ஆலோசனை பெற்று இதையும் பயன் படுத்தலாம்.

குழந்தைக்கு சளி பிடித்திருக்கும்போது திரவ ஆகாரம் தந்தால் நல்லது என்கிறார்களே! நிஜமா?
ரொம்பச்சரி.. காரணம், சளி உள்ளபோது மூச்சு அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள நீரின் அளவு குறைகிறது. அதை ஈடுகட்டுவதற்காக திரவ ஆகாரத்தை அதிகமாக உட்கொள்ளலாம். கைக் குழந்தைகளுக்கு, தாய்ப்-பாலின் அளவை அதிகரியுங்கள்.

சு. சசிரேகா
நன்றி - குமுதம்

 

http://kulanthaikal.blogspot.com/2003/12/blog-post.html

நான் வளர்கிறேனே மம்மி!

குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.

குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட உங்களது சிறிய தூண்டுதல் போதுமானது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், பரிசோதனைகளைச் செய்யவும், பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் குழந்தைகளிடம் ஏராளமான ஆற்றல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பீஜோ என்ற மேல்நாட்டு கல்வி நிபுணர், வளரும் குழந்தைகளின் பாடத்திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவது... குழந்தைகள் தங்கள் சூழலில் அதிகபட்ச வளர்ச்சியை அடைய உதவ வேண்டும் என்பதுதான்.

ஜோஹன் பெஸ்ட்லோசிஸ் என்ற மேல்நாட்டு அறிஞர், ‘குழந்தைகளின் கல்வியானது, அவர்களது இயற்கையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்', என்று வலியுறுத்தினார். அம்மாக்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும், வீடுதான் சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகள் விளையாட்டின் மூலம் பாடம் பயிலும், கிண்டர்கார்டன் என்ற முறை 1930 ஜெர்மனியில் உருவானது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவாக இந்த கிண்டர் கார்டன் கல்வி முறை உதவும் என்ற எண்ணத்தில் ஃபிரெட்ரிக் ஃப்ரீவெல் என்பவர் உருவாக்கினார். வளர்ந்த குழந்தைகளின் பாடத்திட்டத்தைவிட வித்தியாசமான கல்வித்திட்டம் இளங்குழந்தைகளுக்கு தேவை என்பதால், களிமண் பொம்மை செய்தல், வரைதல், பிளாக்குகளைப் பயன்படுத்தி கற்றல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். கே.ஜி. வகுப்புகளிலிருந்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைக்கு பய உணர்ச்சி ஏற்படுவது இயற்கையே. கே.ஜி. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாக வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை அதிகம் திணிக்க மாட்டார்கள். விரும்பிய நேரத்திற்கு பள்ளிக் கூடத்துக்கு பெற்றோருடன் சென்று கொண்டிருந்த குழந்தை, முதல் வகுப்பிற்குள் நுழையும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. பசிக்கும் போது சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம் என்று கேஜி. வகுப்புகளில் பழகிய குழந்தைக்கு முதல் வகுப்பின் சூழல் முற்றிலும் புதிதாயிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பிற்கு வந்தாக வேண்டும், உணவு இடைவேளையின் போதுதான் சாப்பிட வேண்டும் என்பன போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது. இதனால்தான் முதல் வகுப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.இரண்டு வருடங்களாக அனுப்பிய அதே பள்ளிதானே.அப்போதெல்லாம் அழாமல் சென்ற குழந்தை இப்போது ஏன் அடம் பிடிக்கிறது என்று புரியாமல் பெற்றோர்கள் விழிப்பார்கள். காரணம் இதுதான்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. அடுத்து, இதுவரை குழந்தையாக மதிக்கப்பட்ட நம்மை இப்போது பெரியவனாக்கி பார்ப்பதையும், திடீரென தம் மேல் பொறுப்புகள் சுமத்தப்படுவதையும் அது விரும்புவதில்லை.

இந்நிலையைத் தவிர்க்கத்தான் ‘இயற்கையோடு இணைந்த கல்விமுறை’ என்ற அமைப்பை ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தினார். மேலை நாடுகளில் பிரபலமானமுறை இது. வகுப்பறை, மேஜை, நாற்காலி, பிரம்பு என பயமுறுத்தும் வழக்கமான விஷயங்கள் இல்லாமல், மரம், செடி கொடிகளுக்கிடையே வகுப்புகள் நடத்தும் வித்தியாசமான முறை இது. இந்த முறை எல்லா பள்ளிகளிலும் பின்பற்றலாம். பள்ளி என்றாலே ஏற்படும் பயத்தை அகற்றி, விருப்பத்தோடு முன் வந்து மாணவர்களே கற்றுக் கொள்வர்.

முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடல்களைக் கற்றுத்தரும் முறை நம் பள்ளிகளில் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பாடமுறை. வகுப்பறையில் இப்படி பாட்டுப் பாடி விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தை வீட்டிலும் ராகம் போட்டுப் பேசும். வாய்விட்டு, சத்தமாக எல்லாரும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதால், வகுப்பறையில் சக மாணவர்களோடு சேர்ந்து சத்தமாக பாட்டுப் பாடும் குழந்தை வீட்டில் ‘சாப்பாடு வேண்டுமா?’ என்று கேட்டால் கூட ‘ஆமாம், வேண்டும்...’ என்பதை பத்து வீட்டிற்கு கேட்கும்படி சத்தமாய் சொல்லும். வகுப்பறையில் சத்தமாகப் பேசிப் பழகியதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘ஏன் எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தற?’ என்று முதுகில் அடிக்கக்கூடாது.

இந்த வயதுக் குழந்தைகள் வீட்டில் நாம் சொல்லித் தரும் பாடங்களை உன்னிப்பாகக் கவனிக்கமாட்டார்கள். ம்...ம் என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். திடீரென 'அம்மா, பக்கத்து வீட்டுல சினிமா ஓடுது. நாமும் டி.வி போடலாம்...' என்பார்கள். ‘அப்ப, இவ்வளவு நேரம் நான் சொல்லிக் கொடுத்த பாடத்தை கவனிக்காம, பாட்டு கேட்டுகிட்டிருந்தியா?’ என்று கேள்வியெழுப்பாதீர்கள். இந்த வயதில் கவனக்குறைவும், கவனச்சிதைவும் ஏற்படுவது இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் அதிகநேரம் ஒரே மூச்சாய், கவனமாய் பாடத்தை கவனிக்க முடியாது. சில குழந்தைகள் பாதிபடிப்பிலேயே தூங்கி வழியும். புத்தகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கவும் முடியாது. பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பாடம் சொல்லித் தந்து வெறுப்பேற்றாதீர்கள். அவ்வப்போது இடைவெளி அவசியம். பதினைந்து நிமிடங்கள் படித்தாயா? சரி, கொஞ்ச நேரம் விளையாடு’ என்று அனுப்பி வையுங்கள்.

இல்லாவிட்டால் படிக்கும் முறையையாவது மாற்றுங்கள். பத்து நிமிடங்கள் கணக்குபாடம் படித்துவிட்டால், அடுத்து தமிழ் அல்லது ஆங்கில ரைம்ஸ்களுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். அதுவும், உட்கார வைத்து சொல்லித் தராமல் ரைம்ஸ் அடங்கிய ஒலிநாடா, அல்லது சி.டி.களைப் போட்டு அதைக் கேட்கச் செய்யலாம். இப்படி டேப்பில் பாடலாக கேட்கும்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும்.

இதே போல் கதைகள் அடங்கிய ஒலிநாடாக்களையும் கேட்கச் செய்யலாம். வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பழக இவை உதவும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்க வைத்து, புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங் கள். அதே போல், க்ரெயான்கள் மற்றும், கலர் பென்சில்களால் அவர்கள் வரையும் படங்களை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள். மறக் காமல் உங்கள் உறவினர் கள் வரும்போது, இது இவன் வரைந்த படம் என்று பெருமையாய் சொல்லுங்கள். மற்றவர்களின் பாராட்டு, ஆதரவும் இன்னும் இதைப் போல நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகத் தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். நேரடியாக வற்புறுத்தி செய்யச் சொல்வதை விட, இப்படி பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தையின் திறமையை வளர்க்கலாம்.

நன்றி - அரும்பு

http://kulanthaikal.blogspot.com/2003/10/blog-post.html

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்து படுக்கையை நனைப்பது என்பது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா நாடுகளிலும் குழந்தைகளிடையே காணப்படும் ஒரு பொதுவான குறைபாடு ஆகும்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் இக்குறைபாடு காணப்படும். பிறந்ததிலிருந்தே படுக்கையை நனைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு வகையாகவும், சிறுநீரைக் கட்டுப்படுத்தி வெளியேற்றும் திறமை வந்தபின்பு சில காலம் இந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்து திரும்பவும் ஆரம்பிக்கும் குழந்தைகளை மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம். இதில் முதல் வகை குழந்தைகளைக் காட்டிலும் இரண்டாம் வகை குழந்தைகளை விரைவில் குணப்படுத்த முடிகிறது.

பெரும்பாலான குழந்தைகள் ‘நாம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றோம்’ என்ற உணர்வு இல்லாமலேயோ அல்லது கனவில்தான் நாம் சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்ற உணர்விலோ படுக்கையை நனைக்கின்றனர். அதே சமயம் பல குழந்தைகளுக்கு நாம் படுக்கையில்தான் சிறுநீர் கழித்துக்கொண்டு உள்ளோம் என்ற உணர்வு இருந்தபோதும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றன.

காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையை நனைப்பதற்கான காரணங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. உடலியல் காரணங்கள்
2. மனதியல் காரணங்கள்.
காரணங்கள் பல்வேறாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்த உடன் முறையான டாய்லெட் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்காமல் போவதே அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

உடலியல் காரணங்கள்:
சிறுநீர் வழிப்பாதை நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இருப்பது, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் சில நரம்பியல் குறைபாடுகள், சிறுநீர் வழிப்பாதையில் பிறப்பிலிருந்தே காணப்படும் குறைபாடு, சிறுநீர்ப்பை வீக்கமும், சிறு வயது சர்க்கரை நோய், குடலில் காணப்படும் பூச்சிகள் போன்றவை உடலியல் காரணங்களாகும். இருந்தாலும் மிகமிகக் குறைவான அளவு குழந்தைகளே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மனதியல் காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களில் மனதியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் நடக்கும் சுற்றுப்புற நிகழ்ச்சிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக் கூடத்திற்கு அல்லது புது வீட்டுக்கு மாறுவது, வீட்டிற்குப் புதிதாக ஒரு குழந்தை (தம்பி அல்லது தங்கை) வருவது, குழந்தையிடம் நெருக்கமாக இருக்கும் யாராவது இறந்து போவது போன்ற நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் வெளிப்பாடாக படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகின்றது.


குழந்தைகளின் அடி மனதில் பதிந்து போன சில பய உணர்வுகள் (குழந்தையை பயப்படுத்தி சாப்பிட வைப்பதற்காகக் கூறப்படும் பயங்கர கதைகள் மற்றும் சில விலங்குகளைப் பற்றிய பயம்), குழந்தையின் மனதில் தோன்றும் பாதுகாப்பற்றத் தன்மை, குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய தவறுகளுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள், பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள், குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போவது, குழந்தையை எப்போதும் கேலி செய்து கொண்டு இருப்பது, அவர்களைத் தாழ்த்திப் பேசிக் கொண்டு இருப்பது போன்ற செயல்கள்கூட குழந்தையின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

நமது விருப்பு, வெறுப்புகளைக் குழந்தைகளின் மேல் திணிப்பதும், யார் மீதோ இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்குக் குழந்தைகளை வடிகாலாக (அடிப்பது, கடுமையாகத் திட்டுவது) பயன்படுத்துவது போன்ற செயல்களால், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய குறைபாடுகள் முதல், ஒரு குடும்பத்தை மட்டுமல்லாமல், சமூகத்தையும் சேர்த்து பாதிக்கும் நடத்தைக் குறைபாடு போன்ற மனதியல் பாதிப்புகள் வரை ஏற்படலாம். Acid phos, Aconite, Cimicifuga, Aloes, Sulphur போன்ற ஹோமியோபதி மருந்துகளை அறிகுறிகளுக்கு ஏற்ப மாற்றி, மாற்றி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். படுக்கையை நனைக்கும் பரிதாபக் குழந்தைகளும் பலன் பெறும்.

http://kulanthaikal.blogspot.com/2004/07/blog-post.html

 

பிறந்த உடனே குழந்தை பாலுப்கு அழுதால் என்ன செய்வது?
டொக்டர் - ஜெயசிறீ கஜராஜ்

அப்...பாடா!... இத்தனை கஷ்டப்பட்டு ஒருவழியாக நல்லபடியா குழந்தை பிறந்துவிட்டது! பெரிய தொல்லைவிட்டது... என்று எந்தத் தாயும் பிரசவத்துக்குப் பின் நினைத்துவிட முடியாது.!

கர்ப்பப்பைக்குள் இருந்தவரை குழந்தைக்கான ஆகாரத் தேவையை தாய்தான் மறைமுகமாகப் பார்த்துக்கொண்டாள். அதாவது, அவள் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் குழந்தைக்கு, தொப்புள்கொடி மூலம் சென்றடைந்தன. குழந்தை வெளியே வந்ததும் தாயின் பொறுப்புகள் பல மடங்கு கூடித்தான் போகிறதே தவிர குறைவதில்லை! அதில் முக்கியமான பொறுப்பு, குழந்தையின் ஆகாரத் தேவையை வேளாவேளைக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

பிரசவித்த தாய் அதற்கு ஏற்பாடு செய்யப் பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்றும், பூ போன்ற பட்டுப் பாப்பாவுக்கு பரிசுத்தமான, சத்தான ஆகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும்தான் கடவுள், அந்த ஆகாரத்தையும் தாயின் உடலில் இருந்தே பாப்பாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்திருக்கிறார்.

ஆனால், அதன் அருமை புரியாமல் இன்று பல பெண்கள், தங்கள் அழகு கெட்டுப் போய்விடுமோ என்கிற பயத்தில், குழந்தைக்கு, அதற்குக் கட்டாயம் கிடைக்க வேண்டிய இயற்கையான உணவைக் கிடைக்காமல் செய்துவிடுகின்றனர். இது மிகவும் வருத்தப்பட வைக்கிற விஷயம்.

கருத்தரித்த காலம் தொடங்கி தாயின் மார்பகம், குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏதுவாக அளவில் பெரிதாகத் தொடங்கும். அதிலும் குறிப்பாக, குழந்தை பிறக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சமயத்தில் மார்பகத்தின் வளர்ச்சி அதிகப்படியாக இருக்கும். நிலிகிழிஞிஹிலிகிஸி ஜிமிஷிஷிஹிணிஷி என்னும் ஒருவித திசுக்களாலானது நம்முடைய மார்பகம். அதிலுள்ள சுரப்பிகள் வளர வளரத்தான் தாயின் மார்பகமும் அளவில் பெரிதாகத் தொடங்குகிறது.

குழந்தை பிறந்ததும் தாயின் உடல் தாய்ப்பால் ஊட்ட தன்னையும் அறியாமல் தயாராகிறது.

பிறந்த குழந்தைக்கு யாரும் கற்றுத்தராமலேயே தாயின் மார்பகத்தைக் கண்டுகொண்டு பாலை உறிஞ்சத் தொடங்குகிறது. அதுதான் தாயின் உடலுக்கு முக்கியமான ஒரு சமிக்ஞையாக அமைகிறது. பால் வராவிட்டாலும் குழந்தை, பாலை உறிஞ்சிக்கொள்ள முயலும்போது அந்தச் செய்கையானது தாயின் மூளைக்கு, குழந்தை பிறந்தாகிவிட்டது என்கிற செய்தியைத் தெரிவிக்கிறது.

மூளைக்கு சமிக்ஞை கிடைத்ததும் பால் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்தே கட்டளை மார்பகத்தைச் சென்றடைகிறது. இந்த சமிக்ஞை சரியானபடி மூளைக்குச் சென்றடைந்து கட்டளையாகத் திரும்பி வர சற்றே தாமதமாகலாம். அதனால் பாப்பாவுக்குப் பால் கிடைக்க 24_48 மணிநேரம் வரை கூட ஆகலாம்.

தாயின் மூளையிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போவது மட்டும் தாய்ப்பால் சுரக்கத் தாமதமாவதற்குக் காரணமில்லை.. பாலை உறிஞ்சிக் குடிப்பது என்பது பாப்பாவுக்கும் புதிது என்பதாலும்கூட பால் சுரக்காமல் போகலாம்.

எனக்குத் தெரிந்து குழந்தை பிரசவமான ஓரிரு மணிநேரத்தில் வரக்கூடிய முதல் புகாரே, ‘‘அம்மாவுக்கு பால் வரலே... என்ன பண்ணறது டாக்டர்..?’’ என்ற, அம்மாவையும் பாப்பாவையும் சுற்றியிருக்கும் அத்தை, அம்மா, அக்கா போன்ற சொந்தக்காரர்களின் கேள்விதான். இவர்களில் பலர், பல குழந்தைகள் பெற்ற அனுபவம் உடையவராக இருந்தாலும் டென்ஷனாகின்றனர். இவர்கள் பதறுவதோடு அம்மாவையும் பதறச் செய்வதுதான் கொடுமை.

புதிதாகப் பிறந்த குழந்தையை எப்படித் தூக்குவது, கையாள்வது என்றுகூட அனுபவமில்லாத தாய்க்கு, இதனாலெல்லாம் பதற்றம் ஏற்பட்டு, பால் வராது தடைப்பட்டுக்கூடப் போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அம்மாவைச் சுற்றியுள்ள சொந்தபந்தங்கள் அவரை டென்ஷன் படுத்தாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்!

இயற்கையில் எந்த ஒரு தாய்க்கும் தாய்ப்பால் சுரக்காமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தை பிறந்தால் பால் சுரந்தே தீரவேண்டும். இது, ஒரு மாதிரியான சுழற்சி முறையில் வரக்கூடிய விஷயம். அதற்காக நாம்தான் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

‘‘குழந்தை பசியால் அழுகிறதே... அதுவரைக்கும் எப்படிக் காத்திருப்பது?’’ என்று சிலர் கேட்பது புரிகிறது.. பிரசவமாகி மூன்று நாட்கள் வரை, எந்தவிதமான உணவும் இல்லாமல் இருக்க பாப்பாவின் உடல் தயார் நிலையில்தான் இருக்கிறது. நிலிசீசிளிநிணிழி ஷிஜிளிஸிணிஷி என்கிற, குழந்தையின் உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துக்களை, உணவு கிடைக்காத அந்த ஆரம்ப நாட்களில் பாப்பாவின் உடல் தன்னால் பயன்படுத்திக் கொள்ளமுடியும்! அதுவரை நாமும் பெரிதாகக் கவலைப்படத்தேவையில்லை.

இது புரியாமல் பலர் பாப்பா அழுகிறது என்று சொல்லி, அதற்கு சர்க்கரைத் தண்ணீரையோ பால் பவுடரையோ கலக்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தேவையில்லாதது. குழந்தைக்கு தேவைப்படும் போது தாய்தான் பால் தரவேண்டும். இது ஒரு சைக்கிள் ரியாக்ஷன். இடையில் நாம் புகும்போதுதான் எல்லாமே குளறுபடியாகிவிடுகிறது. எப்படி?

குழந்தை அழுகிறது என்று நாம் சர்க்கரைத் தண்ணீர் அல்லது பால்பவுடர் போன்ற எதையோ கொடுக்க, அதுவும் திருப்தியாகி அழுகையை நிறுத்திவிடுகிறது. இப்படி நாம் தாய்ப்பாலுக்குப் பதிலாக எதையோ கொடுப்பதால் குழந்தைக்குத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிடுகிறோம். மேலும், தாய்ப்பால் இயற்கையில் இனிப்பில்லாமல் சப்பென்றுதான் இருக்கும். தாய்ப்பாலுக்குப் பதிலாக இனிப்பானதொரு விஷயம் கிடைத்து விடுவதால் குழந்தை, சுவைக் காரணமாகக்கூட தாய்ப்பாலை நிராகரித்துவிடும் வாய்ப்புள்ளது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தாயின் மார்பிலிருந்து குழந்தை உறிஞ்ச உறிஞ்சத்தான் பால் கொஞ்சம் கொஞ்சமாக சுரக்கும். புட்டிப்பாலில் உள்ள நிப்பிளில் துளை பெரிதாக இருப்பதால் ஒருமுறை உறிஞ்சும்போதே குழந்தைக்கு அதிகப்படியாகப் பால் கிடைத்துவிடுகிறது. எளிதாகவும், அதே சமயம் இனிப்பாகவும் பால் கிடைத்து விடுவதால் குழந்தை புட்டிப்பாலையே அதிகம் விரும்பி, தாய்ப்பால் குடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடும். பிறகெப்படி அம்மாவுக்குத் தொடர்ந்து பால் சுரக்க முடியும்?

அழும் குழந்தையை எப்படித்தான் சமாதானப்படுத்துவது என்றுதானே கேட்கிறீர்கள்.. பிறந்த குழந்தை சிறிது நேரம் அழுதால், தவறொன்றும் இல்லை. தொடர்ந்து அதிகநேரம் அழுது கொண்டே இருந்தால் மட்டும் குழந்தையை மருத்துவரிடம் காட்டலாம்..

சந்திப்பு: ஜி. கிருஷ்ணகுமாரி
nantri-kumutham-sinehithy

http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post.html

குழந்தைகளின் ஜீரணம் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.

‘‘இப்பவெல்லாம் இவனுக்கு பசியே எடுக்கறதில்லே, " "பாலை வாய்கிட்டே எடுத்துக் கொண்டுபோனாலே குமட்டுகிறது இவளுக்கு,’’ ‘‘டாக்டர், இப்போதெல்லாம் இவன் சரியாகவே சாப்பிடுவதில்லையே’’ _ இவையெல்லாம் மிகப் பெரும்பாலான இளம் அம்மாக்கள் மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகள்.

குழந்தைக்கு சிகிச்சை இருக்கட்டும். அம்மா முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அன்னை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் குழந்தைகளைப் படைத்துப் பாதுகாக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதன் உடலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஜீரண சுரப்பிகளிலிருந்து எல்லாமே வேலை செய்கின்றன. எனவே அம்மா மேற்படி புகார்களை அடிக்கடி கூறி அல்லல் படவேண்டாம்.

குழந்தையைச் சாப்பிட வைக்க அம்மா பலவித யுக்திகளைப் பயன்படுத்துகிறாள். ‘‘ப்ளீஸ் சாப்பிடு கண்ணா, அம்மாவுக்கு வேறே வேலை இருக்குது ராஜாத்தி’’ என்பதுபோல் அவள் கொஞ்சக் கூடும். ‘‘நீ இதை சாப்பிட்டாதான் இன்னிக்கி வீட்டிலே டி.வி. போடுவேன்’’ என்பது போன்ற பயமுறுத்தல்களாக அவைகள் இருக்கலாம். ‘‘நீ இதைக் காலி பண்ணினால் நான் உனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தருவேன்’’ என்பது போன்ற லஞ்ச பேரத்தில் அவள் இறங்கலாம்.

இவ்வளவு பாடுகளும் வேண்டாமே!

குழந்தை தன் உடலின் தேவையை _ அதாவது உணவு தேவை என்ற உணர்வைதானே வெளிப்படுத்தும். அப்போது உணவளித்தால் போதுமானது. இதைப் புரிந்து கொள்ளாமல் அம்மா தன் முழுக் கற்பனை சக்தியையும் செலவழித்து குழந்தையின் வாயில் தொடர்ந்து உணவை அடைத்தால் அது வாந்தி எடுக்கக்கூடும். அல்லது வயிற்றை வலிக்குது என்ற பொய்க் காரணங்களைக் கூறலாம். தலைவலி நாடகம் கூட போடலாம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் பசிக்கும்போது (உங்களுக்கு அல்ல, குழந்தைக்கு) மட்டுமே பிள்ளைகளுக்கு உணவளித்து சந்தோஷப்படுங்கள்.

இதைவிடுத்து குழந்தையின் பசியை அம்மா தானாக அதிகப்படியாக கணித்து வருத்தப்படுவதோ, வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டாமா என்றபடி (அதாவது வேளாவேளைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணவாம்!) தவறு செய்வதும் வேண்டாமே.

போதாக்குறைக்கு சில அம்மாக்கள், குழந்தையை எடைபார்க்கும் இயந்திரத்தின் மீது நிற்க வைத்து, அட்டவணைப்படி இருக்க வேண்டிய எடைக்குக் கொஞ்சம் குறைந்தாலும் ஏதோ குடிமுழுகியதுபோல் கவலைப்படுவதும், அதிகப்படி உணவைத் திணிப்பதும்... தவிர்க்க வேண்டிய செயல்கள் என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல?

குழந்தையின் எடை என்பது பெரும்பாலும் அவனது தாத்தா போன்றவர்களால் நிர்ணயக்கப்படுகிறது. அதாவது பரம்பரைதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புரியாமல் குழந்தையின் வாயில் உணவைத் திணிக்கும்போது, அது உணவைக் கக்குகிறது. அல்லது வாந்தி வருவதுபோல் பாவனை செய்கிறது.

கவலைப்படாதீர்கள். தனக்குத் தேவையான உணவைச் சாப்பிட்டு உங்கள் குழந்தை நன்றாகவே வளருவான்.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டங்களில் குழந்தைக்கு மருத்துவப்பரிசோதனை செய்து நோய்கள் எதுவும் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஜீரணம் என்பது வாயிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். டைலின் என்ற சுரப்பி எச்சிலில் கலக்கிறது. இது ஜீரணத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகத்தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாயில் சிறிது நேரம் உணவு இருந்தால்தான் இதுபோன்ற திரவங்கள் போதிய அளவு உணவோடு கலந்து ஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

உணவுப்பாதையைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவு சிறுகுடலில் நான்கிலிருந்து ஆறுமணி வரை தங்குகிறது. அங்கு உணவு நன்கு அரைக்கப்படுகிறது. அதிலுள்ள புரதம் போன்ற சத்துக்கள் ரத்தத்தினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. உடலுக்குத் தேவையில்லாத அநாவசியப் பொருளும் அதிகப் படியான நீரும் பெருங்குடலுக்குச் செல்கின்றன. அங்கே நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள திடப்பொருள்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுகின்றன.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு அவஸ்தை மலச்சிக்கல். உணவில் நீர்ச்சத்து அதிகமில்லாத போது மலச்சிக்கல் ஏற்படும். அப்போது மலம் இறுகிவிடுவதால், இந்த அவஸ்தை மேலும் மேலும் அதிகமாகவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு அதிக அளவில் சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுத்தாலே இந்த சிக்கல் தீர்ந்துவிடும். இல்லையென்றால் நார்ச்சத்து நிரம்பிய உணவை அளிக்க வேண்டும். வாழைத்தண்டு, கீரைவகைகள், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமுண்டு.

எனவே மருந்துகள் மூலம் குழந்தையின் மலச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பதை அம்மா மாற்றிக்கொள்ளவேண்டும். முதலில் மேலே குறிப்பிட்டபடி இயல்பான, இயற்கையான முறையில் மலச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். நம் உடலில் ஆசனவாய் உட்பட சுருங்கிவிரியும் தன்மை கொண்ட வால்வுகள் உண்டு. இவை முழுசக்தியுடன் செயல்பட முடியாமல் போனாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.

‘‘டாக்டர், என் பொண்ணு அடிக்கடி நிறைய இனிப்புகளாக உள்ளே தள்றா. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. அவ வயித்தில நிறைய பூச்சி வளர்ந்திருக்குமோன்னு கவலையா இருக்கு’’ என்று பல தாய்மார்கள் முறையிடுவதுண்டு.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இனிப்புகள் மூலமாகத்தான் குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் வரவேண்டும் என்றில்லை. மாறாக அசுத்தமான சூழல் காரணமாக இந்த நிலை ஏற்படவே வாய்ப்பு மிக மிக அதிகம். காய்கறிகளைச் சரியாகக் கழுவாமல் சமைப்பதன் மூலமாகக் கூட குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் சேரலாம்.

‘‘பேதி மாத்திரையைக் கொடுத்து என் மகன் வயிற்றிலே இருக்கிற பூச்சிகளையெல்லாம் எடுத்துடுங்க டாக்டர்’’ என்று கேட்டுக் கொள்ளும் அம்மாக்களுக்கு ஒரு ஆலோசனை. உடலில் சேர்ந்துவிட்ட புழுக்களை நீக்கிவிடுவது நல்லதுதான். ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாவது ஆனபிறகு இப்படிச் செய்வது நல்லது. அதற்குப் பிறகு வருடத்துக்கு மூன்றுமுறை இப்படிச் செய்தால் போதுமானது.

வயிற்றில் பூச்சி இருந்தால் அது மலத்தில் தெரியவரும் என்று சொல்லிவிட முடியாது. நாக்குப்பூச்சி மட்டுமே இப்படித் தென்படும். பிறவகைப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே வேதனையை ஏற்படுத்தும்.

‘‘கண்ட இடத்திலே சொறிஞ்சிக்கிட்டே இருக்கா. ஆகையினாலே அங்கெல்லாம் விளக்கெண்ணெய் பூசலாமா?’’ என்று சில அம்மாக்கள் சுற்றி வளைத்துக் குறிப்பிடுவது ஆசவாயைத்தான். எண்ணெய் தடவுவது தவறில்லை. ஆனால் குழந்தை தொடர்ந்து சொறியும்போது அதன் கவனத்தைத் திசைத் திருப்புவதும் உள்ளுக்குள் பூச்சி ஒழிப்பு மருந்தை அளிப்பதும்தான் சரியான தீர்வுகள்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் குழந்தை மலம் கழிக்காமலே இருந்தால் அதில் கவலைப்பட எதுவுமில்லை. சொல்லப்போனால் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் காலகட்டத்தில் இதெல்லாம் வெகுசகஜம். குழந்தைக்கு ஒருவருடம் நிறைந்தவுடனேயே உட்கார்ந்து டாய்லெட் போகப் பழக்க வேண்டும்.

சிலசமயம் ஆசனவாயில் ஏதாவது கீறல் (நகத்தினால் ஏற்பட்டிருக்கலாம்) ஏற்பட்டிருந்து, டாய்லெட் போகும்போது வலிக்கிறது என்கிற காரணத்தினாலேயே குழந்தை டாய்லெட் போவதைத் தள்ளிப்போட்டு இதன் காரணமாக மலச்சிக்கல் உண்டாகி இருக்கக்கூடும். மலத்தை இளக்கச் செய்ய பலவித மருந்துகள் உண்டு. அவற்றை வேறுவழியில்லை என்றால் பயன்படுத்தலாம்.

சந்திப்பு, கட்டுரை: ஜி.எஸ்.எஸ்.
nantri -Kumutham Health

 

http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post_18.html




குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.

இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டிது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.

கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.

'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.

சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.

குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.

துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.

இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.

"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.

முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.

அர்த்தநாரி

http://kulanthaikal.blogspot.com/2006/09/blog-post.html

உறவுகளையோ நட்புகளையோ சில சமயம் முடித்து கொள்ளும் போது நமக்கு அதை மனம் புண்படுத்தாமல் அல்லது நோகடிக்காமல் செய்ய தெரிவதில்லை. உறவை முடிந்த பின்னும் நாம் அதை பற்றி யாருடனாவது பேச நேர்ந்தால் அதில் நம் மீது தவறே இல்லை என்பதை நியாயப்படுத்த காரணங்கள் அடுக்குவதும் என்னைப்பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.

 

உறவுகள் முறிந்து போக இருவருக்கும் சரியான அலைவரிசை இல்லாதது காரணமாக இருக்கலாம். யார் மீதும் தவறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

நான் கவனித்தவரை பெற்றவர்கள் சில சமயம் குழந்தைகளிடம் ஒருவரை பற்றி தவறாக பேசுவது அவர்கள் மனதில் தவறான எண்ணம் தோன்ற காரணமாகிறது. பெற்றவர்கள் இடையே விவாதங்கள் நிகழ்வதில் தவறில்லை, அது ஒருவகையில் நல்ல ஆரோக்கியமான மன நிலைக்கு காரணமாகிறது. குழந்தைகளுக்கு வயது வந்த இருவர்கள் அபிப்ராய பேதங்கள் கொள்வதிலும் அதைப்பற்றி விவாதிப்பதிலும் தவறில்லை என்ற எண்ணத்தை தரும்.இது ஆரோக்கியமான சூழலை தரும். கருத்து வேற்றுமை இருந்தாலும் நேசம் கொள்வதில் தவறில்லை என்பதையும் காட்டும்.

 

ஆனால் அதுவே கோபமாகி கணவன் மனைவி இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்பு உணர்ச்சியை வெளியிட்டால், அது குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு பெற்றோர்கள் சமாதானமாகி போனாலும் குழந்தைகளால் மறக்க முடிவதில்லை.

 

சில வீடுகளில் மனைவையை தாழ்த்திப்பேசி, குழந்தைகளும் வளார்ந்தபினும் அம்மாவிற்கு எதுவும் தெரியாது என்ற நினைப்பில் அவமதிக்கிறார்கள். சாதாரண நடைமுறையில் இது பெரிதுபடுத்தப்படுவதில்லை. ஆனால் விவாகம் ரத்தானபின், குழந்தைகளை பகடைக்காய்களாக பயன் படுத்த தொடங்கும் போது குழந்தைகள் மனத்தை அளவிட முடியாத அளவு காயப்படுத்துகிறது.

 

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றில், தந்தைக்கு சில நாட்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டாலும், குழந்தைகளிடம் தவறாக நடந்ததாகவோ, மதுவிற்கோ, போதைப்பொருளிற்கோ அடிமையானவன் என்றோ சட்டப்படி எந்தவித ஆவணங்களும் இல்லாததால், குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது.

 

சின்ன குழந்தையின் மனதில் தந்தையை பற்றிய தவறான கருத்துக்கள் வித்திடப்பட்டிருக்கிறது. ஆகையால் அடிப்படையில் ஆழ்ந்த வெறுப்பு இருப்பதால், தந்தை வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் பயத்துடனேயே போகிறார்கள். அங்கிருந்து வந்தவுடன் உடனேயே தந்தையை பற்றிய விவரங்களை கேட்டு நச்சரிப்பதாலும், நாளடைவில் குழந்தைகள் யாருக்கு எது பிரியமோ அதை சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள விரும்புகிறார்கள்.

 

இரண்டு வீட்டில் மாறி மாறி இருபது குழந்தைகளுக்கு அதிக துன்பத்தை தரக்கூடிய ஒரு விஷயமாகும். அதை கூடுமானவரையில் எளிமையாக்குவது சால சிறந்தது. கணவன் மனைவி இருவரின் ego போராட்டத்தில் அடிக்கடி பள்ளி, மருத்துவர்கள் இவர்களை மாற்றுவதும், உன்னைவிட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று கண வனும், நான் மட்டும் என்ன குறைந்தா போய் விட்டேன் என்று மனைவியும் போட்டியிடும் போது இடைப்பட்ட பிள்ளைகள் பாவம் தவிக்கிறார்கள்.இதற்கிடையில் பெண்ணை பெற்றவர்கள் மகளின் கணவனை வசை பாட, கண வனின் பெற்றவர்கள் மருமகளை வசை பாட, அதிக சினம் கொண்டவர்களாகவும் மனதில் வேரூன்றிவிட்ட வெறுப்போடும் தவிப்பது குழந்தைகள்தான்.

 

இதுவே நான் மேற்சொன்ன குடும்பத்தில் 6 வயது குழ்ந்தையின் தற்கொலையில் முடிந்திருக்கிறது. பள்ளி கவுன்சிலர் ஒரு வாரம் முன் பேசும் போது எதைச்சையாக மாணவன் தான் இறக்க விரும்புவதாக சொல்ல, அவர் அன்னையை அழைத்து பேசி இருக்கிறார். அம்மா மகனை அழைத்து, நான் படும் கஷ்டம் போதாதா, நீ வேறு படுத்த வந்தாயா என்று சொல்லி அடிக்க, அப்பாவும் கண்டு கொள்ளாமல் விட, அதை சாக்காக கொண்டு வழக்கறிஞரிடம், என் மனைவியே இதற்கு காரணம் என்று சொல்லி இன்னொரு குற்றப்பத்திரிக்கை தயாரிக்க கவனத்தை செலுத்தி இருக்கிறார்.

 

பள்ளி ஆசிரியை பெற்றவர்களிடம் சொன்னதுடன், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது. விவாகரத்து ஆன பின்னாலும் குழந்தைகள் நலன் கருதி, பெற்றவர்கள் நட்பு பாராட்ட முடியாமற்போனாலும், ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருக்கவாவது முயற்சிக்கலாம்.

 

http://reallogic.org/thenthuli/?p=32

tea.jpg

தினமும் இரண்டு டம்பர் அல்லது அதற்கு மேல் காஃபி குடிப்பது தாய்மை நிலையிலிருப்பவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. கருச்சிதைவு ஏற்படக் கூடிய வாய்ப்பை அது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்னும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

 

குறிப்பாக கருவுற்ற முதல் சில மாதங்கள் தொடர்ந்து இரண்டு கப் காஃபி குடித்து வருவது கருச்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

வெறும் காஃபி என்று மட்டுமில்லாமல் காஃபைன் மூலக்கூறு உள்ள எந்த ஒரு பொருளை உண்பதும் ஆபத்தானதே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குளிர்ந்த காப்பி, பெப்சி கோக் போன்ற குளிர்பானங்கள், டீ, சில வகை சாக்லேட்கள் போன்றவற்றிலும் காஃபைன் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

 

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அதிக அளவில் காஃபைன் உட்கொள்வது அங்கே ஆண்டுதோறும் நிகழும் 2,50,000 கருச்சிதைவுகளுக்கான காரணமாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஐந்துக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அங்கே கருச்சிதைவுகள் நிகழ்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

 

மருத்துவர் டி-குன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாய்மை நிலையில் இருப்பவர்களும், தாய்மை நிலையை அடைய முயல்பவர்களும் காஃபியை முற்றிலும் விலக்கி விடுவதே நல்லது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

 

காஃபைன் என்னும் பொருள் கருவுக்குச் செல்லவேண்டிய இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

 

இதுவரை சுமார் பதினைந்து ஆராய்ச்சி முடிவுகள் காப்பி அருந்துவதற்கும், கருச்சிதைவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை விளக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

http://sirippu.wordpress.com/2008/01/29/coffee/

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி.

 

ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சாஸ்திர சம்பிரதாயம் எனும் மூடக் கட்டுக்குள் மூழ்கிக் கிடப்பவர்கள் எந்த நாள் எந்த நேரத்தில் குழந்தை எடுக்கப்படவேண்டும் என்பதை சோதிடம் மூலம் முடிவு செய்து மருத்துவரிடம் விண்ணப்பிக்கின்றனராம்.

 

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திரத்தில், யோகத்தில் குழந்தை பிறக்கும் என்று சிரிக்காமல் அவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

 

இப்படி அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்னும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. நுரையீரலில் இயல்பான வளர்ச்சியைக் கூட இது பாதிக்கும் எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

 

அதிலும் குறிப்பாக குறைந்தபட்சம் 39 வாரங்களாவது தாய்மை நிலையில் இருக்காத பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தைக்கு நுரையீரல் சார்பான நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

 

நுரையீரலில் இருக்கும் திரவம் முழுவதுமாக வெளியேற முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதும் இந்த அறுவை சிகிச்சை முறையில் நிகழக்கூடிய சிக்கல்களில் ஒன்று என்கின்றனர் மருத்துவர்.

 

மூச்சு தொடர்பான பல சிக்கல்கலுக்கு இந்த அறுவை சிகிச்சை காரணமாகி விடக் கூடும் என்னும் அறிவு அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றும், தேவையற்ற சூழலில் அறுவை சிகிச்சையை முழுவதுமாக தவிர்க்க வேண்டுமென்றும் யூ.கே மருத்துவர் மேகி பிளோட் அறிவுறுத்துகிறார்.

 

நாள் நட்சத்திரம் சூரியன் சந்திரன் கோள்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தேவையற்ற அறுவை சிகிச்சை செய்வதை விட்டு விட்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வரவேற்பதே தாய்க்கும் சேய்க்கும் நலன் பயப்பதாகும்.

 

தவிர்க்க முடியா சூழலுக்கென வந்த அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

 

http://sirippu.wordpress.com/2007/12/20/danger/

kid.jpg

தாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

பருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.

 

அதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

 

மார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.

 

இந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

மார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.

 

மார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

 

இத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

சரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.

 

http://sirippu.wordpress.com/2007/10/17/mother-2/

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் பிறக்கப்போகும் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

 

தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதும், குழந்தையின் தேவைக்காகவும் சேர்த்து ‘இருவருக்காக’ உண்பதும் வழக்கம். இப்படி தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் உண்ணும் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று தான் ஆராய்சிகள் இதுவரை கருதியிருந்தன.

 

இப்போது முதன் முறையாக தாயின் உணவுப் பழக்கம். குறிப்பாக கருவுற்றிருக்கையில் தாய் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் குழந்தையின் மூளையில் பதிவாவதாகவும். அந்த பதிவுகளின் வெளிப்பாடுகளாக குழந்தையின் உணவுப் பழக்கம் இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 

அதாவது கருவுற்றிருக்கையில் தாய் இனிப்புகள், பொரித்த உணவுகள் போன்றவற்றை அதிகமாய் உண்டால் குழந்தையும் அத்தகைய உணவுப் பொருட்களால் வசீகரிக்கப் படுகிறதாம்.

 

தாய்மை நிலையில் மிக அதிகமாக உண்பது, எப்போதும் எதையேனும் கொறித்துக் கொண்டிருப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் குழந்தையும் அத்தகைய பழக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட வாய்ப்பு இருக்கிறதாம்.

 

இத்தகைய உணவுப் பழக்கங்களால் குழந்தை அதிக எடையுடன் வளரும் ஆபத்தும் இருக்கிறது என்பது தான் ஆராய்ச்சி தரும் எச்சரிக்கை.

 

தாய்மை நிலையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உருவாகும் பந்தம் வெறும் வார்த்தைகளால் விளக்க முடிவதல்ல. அவை உணர்வு பூர்வமான பந்தம்.

தாயின் சிந்தனைகளும், தாயின் மனநிலையும், தாயின் உரையாடல்களும் கருவிலிருக்கும் குழந்தையால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே தான் தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல நேர் சிந்தனைகளும், பொறுமையும், அமைதியும் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இப்போது உணவு விஷயத்திலும் இது புகுந்திருக்கிறது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவெனில், இப்போதைக்கு ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளை வைத்துத் தான் இந்த ஆராய்ச்சி முடிவை ஆராய்சியாளர்கள் எட்டியிருக்கின்றனர்.

 

மனிதர்களுக்கும் இது பொருந்தும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போது அந்த பார்வையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன

 

http://sirippu.wordpress.com/2007/08/18/mothers/

 தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.

 

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

 

அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

 

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.

 

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

 

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.

 

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

 

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

 

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

 

SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

 

பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

 

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

 

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

 

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

 

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

 

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

 

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்

 

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..

 

எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 

குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.

 

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

 

குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.

 

உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.

 

தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.

 

http://xavi.wordpress.com/2008/08/04/breastfeeding/

சரியான அளவு தூக்கம் கிடைக்காத குழந்தைகள் அதிக எடை சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது என நியூசிலாந்திலுள்ள ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

 

குழந்தைகளின் தினசரி, வார, மாத, வருட தூக்கத்தின் அளவுகளையும் அவர்களுடைய மருத்துவ அறிக்கை பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

591 குழந்தைகளை அவர்களுடைய ஒரு வயது, மூன்றரை வயது, ஏழுவயது என மூன்று நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

சராசரியாக 9 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அதிக எடையுடன் மாறும் வாய்ப்புகள் 4 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

 

மூன்றரை வயது வரை குழந்தைகள் 11 முதல் 13 மணி நேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும், அந்த வயதைத் தாண்டிய பள்ளிக் குழந்தைகள் 10 முதல் 11 மணிநேரம் இரவில் தூங்க வேண்டுமென்றும் அமெரிக்க தூக்கம் தொடர்பான அகாடமி (American Academy of Sleep Medicine )தெரிவிக்கிறது.

 

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், படுக்கையில் அமர்ந்தபடி வீடியோ விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி பார்த்தல் இவற்றை ஊக்கப்படுத்தாமல் இருப்பதும் அவசியம் என அறிவுறுத்துகின்றனர் அவர்கள்.

 

http://sirippu.wordpress.com/2008/02/08/sleep-3/

தங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கின்றது என்பதை
எப்படி அதனது பெற்றோர் அறிந்து கொள்ளலாம்?

 

குழந்தை உங்களது அழைப்புக்கோ அல்லது கொஞ்சலுக்கோ சாதாரணமாகச் செய்யும் அதனது செய்கையையோ அல்லது சிரிப்பையோ செய்யாமலிருந்தால்,

குழந்தை எழும்பியவுடன் வழக்கம் போலல்லாமல் நித்திரைச் சோர்வாகக் காணப்பட்டால் அல்லது கண்ணைத் திறந்து யாரையும் பார்க்கப்பிடிக்காமல் அழுதால்.

 

பால் குடிக்கப் பிடிக்காமல் அழுதால்.

குழந்தையை நீங்கள் அணைக்கும் பொழுது அதன் உடம்போ அல்லது கை கால்களோ சோர்வுற்று வழங்காதது போல் காணப்பட்டால்.

 

குழந்தையின் அழுகை வித்தியாசமாக இருந்தால் அதாவது குழந்தை கீச்சிட்டு அல்லது அனுங்கிக்கொண்டிருந்தால்.


உங்கள் குழந்தை உடம்பு சுகவீனமுற்று இருக்கக் கூடும்.

 

குழந்தையில் மேலும் அவதானிக்கக்கூடிய வேறு அறிகுறிகள்:


குழந்தையின் தோல் வெளிறிய நிறத்தில் காணப்படல்.

 

தோலில் புதிதாக வித்தியாசமான நிறத்தில் கரப்பான் (rash) தோற்றமளித்தால் அல்லது கண்டியது போல் காணப்படல்.

 

குழந்தையின் உடம்பு அதிகம் சுட்டுக்கொண்டிருத்தல்.

 

குழந்தை மூச்சு வாங்க அவதிப்படுதல் அல்லது அதிகம் விரைவாக மூச்சு வாங்குதல்.

 

குழந்தை வாந்தி அதிகம் எடுத்தல்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது, மற்றவர்களை விட உங்கள் குழந்தையின் நிலை பெற்றோர்களாகிய உங்களுக்கே முதலில் புரியும்.

 

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=131&Itemid=60