புலிகள் ஒரு மனிதனை அயன்(ஸ்திரிப்பெட்டியால் சுட்டு சூடு வைத்து) பண்ணிக் கொன்ற நிகழ்வு பற்றி - (வதைமுகாமில் நான் : பாகம் - 47)
குறிப்பு : பாசையூரில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி கேட்டேன். அதற்கு தண்டனை வழங்கியதாகச் சொன்னார்.
விளக்கம் : பாசையூர் சம்பவம் என்ன? புலிகளின் மக்கள்விரோத பாசிச நடத்தைகளை கேள்வி கேட்டு பாசையூர் பொதுமகன் ஒருவனை, புலிகள் வழமை போல் பழி-பலிவாங்க விரும்பினர். அவனை வேட்டையாட புலிகள் முயன்ற போது, அந்த அப்பாவி மனிதன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் புகுந்து ஒரு குருவிடம் சரண் அடைந்தான். அங்கு புகுந்த புலிகள் குருவைத் தாக்கிவிட்டு விசாரணையின் பெயரில், அந்த நேர்மையான அப்பாவி மனினை கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அதில் ஒரு பக்கமாக அந்த மனிதனை உயிருடன் வைத்து முதுகை ஸ்திரிப்பெட்டியால் (அயன்பொக்ஸ்சால்) அயன் பண்ணினர். பாசிசம் கொழுப்பேற அயன் பண்ணியே, அந்த மனிதனைக் கொன்றனர். பாசையூர் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் அடக்குமுறை அவர்களுக்கு பரிசாக கிடைத்தது. அடி உதை சித்திரவதை கைது மூலம் தேசியத்தின் பெயரில் புலிகள் அவர்களை ஒடுக்கினர். இந்த மக்கள் நெஞ்சில் பாசிசத்துக்கு எதிரான போர்க் குணாம்சம், தணலாக புகைந்து கொண்டிருந்தது.