வரலாற்றைப் புரட்டுபவர்கள், அதைத் திரித்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த அரசியலை மறுத்து, நிகழ்காலத்தில் தங்கள் எதிர்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் கடந்த காலத்தில் இயங்கங்களுக்கு எதிராக மக்களுக்காக நடந்த புரட்சிகரமான போராட்டத்தை மறுப்பதும், அதை இருட்டடிப்பு செய்வதும், அதை எதுவுமற்றதாக காட்டுவதே, இன்று திடீர் புரட்சி பேசுவோரின் எதிர்ப்புரட்சி அரசியல் உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான் எந்த சமூக நோக்கமுமற்ற, தன் மூடிமறைத்த அரசியல் பின்னணியுடன் தேசம்நெற் இயங்குகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திரித்துப் புரட்டிவிடுகின்றனர். அன்று இயக்கங்களின் மக்கள்விரோத போக்குக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, கொச்சைப்படுத்தி திரித்து விடுகின்றனர்.
ரஜனி திரணகம "முறிந்தபனை" என்ற தன் நூலில்
"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள்."
இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தையே, தேசம்நெற் தன் பிற்போக்கு அரசியல் நோக்குடன் புரட்டித் திரித்து கொச்சைப்படுத்துகின்றது.