Language Selection

பெரியார்

தாய்மார்களே! தோழர்களே! இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் அழைக்கப்படுவதன் மூலம் பலர் இதுவரை நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியைச் செய்து வந்த முறைகளில் உள்ளவைகளை விளக்கி அவைகள் நமது அறிவுக்குப் பொருத்தமானவைகளா, இல்லையா என்பதைச் சிந்திக்கும்படி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நான் பேசுகிறவைகள் இதுவரை இருந்து வந்த பழக்கவழக்கங்களுக்கு மாறான முறைகளில் இருக்கும். இப்படிக் கூறுவது நான் வேறுயாரையும் ஆதாரங்காட்டியோ, முனிவர்கள் - பெரியவர்கள் சொன்னார்கள் என்பதைக் காட்டியோ, அல்லது பழைய புராணங்கள் கூறுகின்றன என்பதைக் காட்டியோ இல்லை. என்னுடைய மனதிற்குத் தென்பட்டவைகளைக் கூறுகிறேன். “நீ உன்னுடைய மூளைக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்; இல்லையேல் சும்மா இரு,’’ என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். அன்றி “நீ நம்பத்தான் வேண்டும். நான் கூறுவதுதான் முடிந்த முடிவு. ஆகவே நம்பு! நம்பினால் மோட்சம்! நம்பாவிடில் நரகம்’’ என்று கூறுவதில்லை.

நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் என் வேலை. எத்தனை நாளைக்குத்தான் மக்கள் மடையர்களாக இருக்கப் போகிறார்கள்? என்றைக்காவது ஒருநாள் மனதில் பட்டு தங்கள் கருத்துக்குச் சரியென்று தோன்றாதா? அதன் மூலம் என்றைக்காவது நம் மக்கள் நாகரிகத்துடன் பகுத்தறிவு பெற்றவர்களாக வாழ மாட்டார்களா என்ற விருப்பத்தைக் கொண்டே எங்கிலும் என் கருத்துக்களைச் சொல்லி வருகின்றேன்.

பொதுவாக மனித ஜீவனுக்கு எதையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவுத்தன்மை இயற்கையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மனிதனைத் தவிர மற்ற ஜீவன்களெல்லாம் அப்படி இல்லை. அவை என்றென்றும் ஒரே விதமான வாழ்க்கையிலேயே இருக்கின்றன. ஆனால் மனிதனோ ஆண்டுக்கு ஆண்டு மாற்றமடைகிறான். 50 வருடத்திற்கு முன் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வருடத்திற்கு வருடம் புதுப் புதுவிதமாக வாழுகிறான். மணிக்கு மணி எவ்வளவோ மாற்றத்தை அடைகிறான். இப்படி மிக வேகமாக மனித சமுதாயத்தில் புதிய மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

கட்டை வண்டியில் இருந்த வாழ்க்கை இன்று இரயில், மோட்டார், ஆகாய விமானத்தில் பறக்கும் அளவுக்கு வந்துவிட்டது. நாய் கூட ஆகாய விமானத்தில் மணிக்கு 500-600 மைல் வேகத்தில் பறக்கிறது. சக்கி முக்கி கல் இருந்த காலம் போய் இன்றைக்குப் பெட்ரோமாக்ஸ் லைட், மின்சார விளக்கு முதலியவை வந்து விட்டன. இரவு பன்னிரண்டு மணி நேரத்தில் ஒரு மயிர்க் கால் நுனியில் வெளிச்சத்தைக் காட்டி அந்நேரத்தை பகல் 12 மணி நேரத்தின் வெளிச்சத்திற்கு ஒப்பிடும்படியான மின்சார விளக்குச் சாதனங்களைக் காண்கிறோம்.

சுருட்டு, பீடி, சிகரட் ஊதும் மைனர்கள் பாக்கட்டிலிருந்து சிறிய தகர டப்பாவைப் போன்றுள்ள கருவியை எடுத்து ஒரு தட்டுத் தட்டினால் குப்பென்று எரியும் கருவியைக் கையாளுகின்றனர். இங்கிருந்து இரவில் அயல் ஊருக்குச் செல்லுகையில் வெளிச்சத்திற்காக முன்னெல்லாம் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு செல்வார்கள். இப்போதோ இரண்டு ரூபாயில் “பேட்டரி லைட்’’ கையில் நாசுக்காக வைத்துக் கொண்டு பொத்தானை அழுத்தினால் பளிச் சென்று வெளிச்சம் வருகிறது.

இது மட்டுமா? இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலிஃபோன் (தொலை பேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து வடகோடி இமயமலை அடி வாரத்தில் உள்ளவரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.

இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயா ஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் மனித வாழ்க்கையே! மற்ற ஜீவன்களின் வாழ்க்கையைவிட மாறானது; எதையும் தன் அறிவு கொண்டு ஆராயும் தன்மையுடன் இருப்பதால் இப்படி அதன் பலனால் மாறிக் கொண்டே போகிறான்.

மற்ற ஜீவன்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கின்றன; ஏதாவது ஓரிரு மிருகம் தன் வாழ்க்கையில் சிறிது மாற்றமடைந்திருக்குமானால் அது மனிதனால் புகுத்தப்பட்டிருக்கும். அதை அன்றி அதற்குத் தன் சொந்தமான புத்தியை உபயோகித்து நல்லது கெட்டது உணர்ந்து அதன்படி நடப்பது கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட உயர்ந்த குணத்தையடைந்த மனிதனின் வாழ்க்கை உள்ள நிலை இன்றைக்கு நம் நாட்டில் மிக மோசமாக இருக்கிறது.

இதுவரை கூறிய அதிசய அற்புதங்களில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்த அறிவாளி நம் நாட்டு மனிதனாக இருக்கவில்லை. எல்லாம் மேனாடுகளில் தான் பகுத்தறிவாளி தோன்றுகிறான். அயல்நாட்டில்தான் விஞ்ஞானி தோன்றுகிறான்; பெரிய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனங்களைக் காணும் அறிவுபெற்ற நிபுணர்கள் தோன்றுகிறார்கள். ஆனால் இந்நாட்டில் இதுவரை தோன்றியவர்கள் எல்லாரும் பக்தர்கள், பரமாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள், ரிஷிகள், முனிவர்கள்; இப்படிபட்ட அயோக்கியர்கள் தான் தோன்றியதாகப் பார்ப்பனப் புராணங்கள் கூறுகின்றன. அதுவும் இன்றி இப்போது நம் கண் முன்பாகவே தோன்றிய மகாத்மா இராமராஜ்யத்தை உண்டாக்கத் தோன்றினார்.

இன்னும் இப்போதுள்ள மந்திரிகள் அரசியல் தலைவர்கூட காந்தி ஏற்படுத்திய இராமராஜ்யத்திற்குதான் தலைவர்களே அன்றி ஜனநாயக நாட்டிற்குத் தலைவர்கள் அல்லர். இராமராஜ்யத்தில் எந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதோ அதே முறையைத் தான் இன்றைய ஆட்சியிலும் கையாளுகின்றனர். இப்படி நம் நாட்டில் ஒன்றுக்கும் உபயோகமற்ற அயோக்கியர்கள்தான் இதுவரைக்கும் தோன்றி நம் நாட்டைப் பாழாக்கி விட்டனர். இதனால் யாரைக் கேட்டாலும் சாஸ்திரம் சொல்லுகிறது; புராணம் சொல்லுகிறது; ரிஷிகள் சொன்னார்கள்; கடவுள் அவதாரங்கள் சொன்னார்கள் என்று தான் கூறுகிறார்களே அன்றி ஏன் அப்படி சொன்னார்கள்? அதனால் நன்மை என்ன தீமை என்ன என்பவைகளை ஆராய்ந்து சொல்வது கிடையாது.

இப்படியே நம் மக்கள் முன்னோர்கள் சொன்னதையும், பார்ப்பனர்கள் சொன்னதையும் ஆராய்ந்து பார்க்காமல் இன்றைக்கும் மடையர்களாக இருக்கிறார்கள். மேனாட்டில் காணப்படும் புதிய முறைகள் இங்கேயும் ஏன் தோன்றக்கூடாது? அந் நாட்டில் உள்ள மனிதன் அநேக அதிசய அற்புதத்தைக் காணுகிற போது உன்னாலும் ஏன் காண முடியாது? காரணம் அறிவைப் பயன்படுத்தாததே.

அதற்கேற்ற வண்ணம் பாழாய்ப் போன சாஸ்திர புராணங்களும் கடவுள்களும் இந்நாட்டில் மலிந்து விட்டன. கடவுள் என்ற சொல்லப்படாத பொருளே இல்லை. மரம், கல், சாணி, முதற்கொண்டு எல்லாம் கடவுள்; காக்காய், கழுகு, மாடு முதற்கொண்டு எல்லா மிருகங்களும், எல்லா பட்சிகளும், மரம், கொடி, செடி, புல்பூண்டு முதல் உயிருள்ள பொருள் அத்தனையும், மற்றும் உயிரற்ற பொருள் சாணி, மூத்திரம் வரை எல்லாம் கடவுள்கள் மயமாகவே இருக்கின்றன. இப்படி எண்ணிக்கையற்ற கடவுள்கள், பேர் சொல்லத் தெரியாத கடவுள்கள் எங்கும் கடவுள்கள் மயமாகவே இருந்தும், இதுவரை ஒரு விதப் பலனும் ஏற்படவில்லை என்பதுமட்டுமல்ல; நம் மக்களைப் புத்தியற்றவர்களாகவே ஆக்கிவிட்டன. சுலபத்தில் திருத்தமுடியாத அளவுக்கு இத்தனையும் சேர்ந்து நம் மக்களின் அறிவைப் பாழாக்கிவிட்டன.

இத்தனையும் இந்நாட்டில் நிலைபெற்றிருந்தால் தான் ஒரு சிலர் சுகமாக வாழமுடியும். அவர்களின் வாழ்க்கைக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமோ. அவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் புராணங்கள் எழுதப்பட்டன. எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் எண்ணற்ற கடவுள்கள் இருப்பதற்குக் காரணம் வேண்டும்? எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருப்பதே அதற்குக் காரணம். கடவுள்களும், சாஸ்திர புராணங்களும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சுக வாழ்க்கைக்கும் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட வைதீகத் தன்மைகளை நிலைநாட்டவே மோட்சம், நரகம் உண்டாக்கப்பட்டன. ‘சாஸ்திர புராணங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது. காதால் கேட்கவும் கூடாது; படித்துப் பார்க்கவும் கூடாது’ என்ற நிபந்தனையும் ஏற்படுத்தி அவைகளுக்கு இன்னின்ன தண்டனைகள் என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள். மனிதன் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் கூறியபடி கேட்க வேண்டும்; கடவுள் கூறியதற்கு மாறாக நடக்கக்கூடாது. அப்படி நடந்தவன் நரகம் சேருவான்; பார்ப்பனப் புரட்டுகளை ஒப்புக் கொள்கிறவன் மோட்சம் சேருவான் என்பதையும் கூறினர்.

மேலும் மதம், மக்களை மடமையிலேயே என்றென்றும் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்பதற்கே ஏற்படுத்தப்பட்டது. அவனவன் ‘என் மதத்தில் கூறி இருக்கிறது. அதன் உட்பிரிவுகளான பல்வேறு’ ஜாதிகளைக் காட்டி ‘என்னுடைய ஜாதி பழக்க வழக்கம்’ என்று கூறி கண் மூடத்தனமாகப் பின்பற்றுதலும் அறிவை உபயோகிக்காததேயாகும். எதற்காக அப்படிச் சொல்லி இருக்கிறது என்பதைச் சிந்திப்பதே இல்லை. எனவே இன்றைக்கு நடைபெறும் இதுபோன்ற நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சிக்குக் கூட இங்கு ஒரு பார்ப்பான் வந்து நடத்துவானாகில் இயற்கை எய்தியவர் என்ன ஜாதி, அவர் ஜாதிக்கு என்ன பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டு வந்தார்கள் என்பதை அனுசரித்தே நடத்துவான்.

இதனால் என்ன விளங்குகிறதென்றால், இயற்கை எய்தியவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதையும், அந்த ஜாதிப் பழக்க வழக்கம் என்பதால் அந்த ஜாதி மறைந்துபோகாமல் என்றைக்கும் இருக்க வேண்டும் என்பதற்குமே செய்யப்படுகிறது. இப்படியே இன்னமும் கல்யாணம், கருமாதி, திவசம், இப்படிப் பலவகைகளை உண்டாக்கி அவைகளில் அந்த ஜாதிக்கு ஒவ்வொரு முறையை உண்டாக்கி அந்த ஜாதிகளை நிலைநாட்டவே செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலை இன்றைக்கு மாற்றமடைந்து கொண்டுதான் வருகின்றது. எங்களின் முயற்சியும் ஓரளவு பயன் அளித்துக் கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பான்மையினர் முன்பு இருந்ததைப் போன்று பயங்கொள்ளாமல் துணிந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் கூட்டம் என்றால் வருவதற்கே மக்கள் பயப்படுவார்கள். எங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயப்படுவார்கள். அது மட்டும் அல்ல. நாங்கள் பேச முடியாதபடி தொல்லைகள் கொடுப்பார்கள். அப்படியெல்லாம் செய்த இதே மக்கள் இன்றைக்கு எங்கள் கூட்டம் என்றால் வேறு எந்தக் கூட்டத்திற்கும் இல்லாத முறையில் அதிக அளவு வந்து குவிந்து விடுகின்றனர்.

நாங்கள் பேசுவதில் என்ன தான் உண்மை இருக்கிறது என்பதைக் கேட்கும் அளவுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் நாத்திகர்கள்; எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று தூற்றிய மக்களே மன தைரியம் கொண்டு எங்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்; அது மட்டும் இல்லாமல் இன்றைக்கு எங்கள் கருத்தைக் கடைபிடித்து அதன்படி நடக்கும் பகுத்தறிவு கொண்டவர்கள் மலிந்து விட்டார்கள். வீண் வெளிப் பகட்டுக்கும், பிறரை ஏமாற்றவும், காசு சம்பாதிக்கவும், மற்றவன் தயவு வேண்டும் என்பதற்காக மட்டும் சாம்பலைப் பூசியும், கொட்டையைக் கழுத்தில் கட்டிக் கொண்டும் திரிகிறார்களே அன்றி உண்மையில் பக்திக்காக என்று கூறுவதற்கு இல்லை. இன்னமும் சிலர் பார்ப்பனத் தெருவில் பொறுக்கித் தின்னலாமே என்பதற்காக எங்களிடம் வெறுப்புக் காட்டுகிறார்களே அன்றி உண்மையில் வெறுப்பு என்று கூற முடி யாது.

பார்ப்பான் கூட எங்கள் பேச்சுக்களை மறுத்துக் கூறமுடியாது; இன்றைக்கு இதுவரை நாங்கள் ஆராய்ச்சி செய்து விளக்கிக் கூறி இராமாயணத்தைப் பற்றி யாருக்காவது சரியானபடி யார் ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள்? சென்னையில் பார்ப்பனத் தெருவில் இராமாயணத்தின் யோக்கியதைகளை எடுத்துக் கூறினோம். அதைக் கேட்ட பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் “இராமசாமி உண்மையைத்தான் சொல்லுகிறான். நாம் என்ன செய்ய முடியும்? இராமாயணப் புத்தகத்திலேயே பக்கம் பக்கமாக எடுத்துக்காட்டி அல்லவா சொல்லுகிறான்? நாம் என்ன அதற்குச் செய்ய முடியும்?’’ என்றுதான் கூறினார்களே அன்றி ஆதாரத்துடன் என்னிடம் நேரில் மறுத்துக் கேட்க முடியவில்லை.

எனவே இன்றைக்கு எங்களின். பிரச்சாரத்தின் பலனாய், பார்ப்பனர்கள் “இனி மேல் நம் அயோக்கியத்தனம் எல்லாம் இவர்களிடம் செல்லாது’’ என்று உணர்ந்து கொண்டது மட்டுமன்றிப் பார்ப்பனப் புரட்டுகளையே நம்பி அறிவற்றவர்களாக இருந்தவர்கள் எல்லாரும் ஒருவாறு தம் சொந்தப் புத்தியை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனியும் இந்நிலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதன் ஒருவன் இயற்கை எய்தியவுடன் அதற்கு இறந்தார், செத்தார் என்றும், ஈசன் திருவடியை அடைந்தார் - பரமபதம் அடைந்தார், வைகுண்ட பதவி அடைந்தார் - இப்படிப் பலவிதமான பெயர்களைக் கூறுவார்கள். மனிதன் பிறக்கிறான் என்றவுடன் அவன் இறந்துவிடுதல் என்பதும் அதில் மறைந்துதான் நிற்கிறது. எப்போது பிறப்பு ஏற்பட்டதோ அதற்கு இறப்பு என்பது உண்டு என்பதும் இயற்கையின் தன்மையாகும். இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் இருக்கும் சம்பவம் வாழ்வது என்பது. இந்த வாழ்க்கையில் மனிதன் இன்பமடைய விரும்புதல் இயற்கையாகும். எந்த மனிதனும் சுகமாக வாழுவதை விரும்பாமல் இருக்க மாட்டான். இந்த இன்பத்தைத் தேடும் பொருட்டே வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் ஈடுபடுகிறான்.

மேலும் ஜீவராசிகளுக்கு இயற்கையில் பசி, தாகம், காம இச்சை இவைகள் உள்ளன. இவைகள் அத்தனையும் அதனதன் பருவத்திற்கும் சமயத்திற்கும் தக்கப்படி உண்டாக்கப்படுகின்றன. மனிதனுக்கு எப்போதும் பசி ஏற்படுவதில்லை. அதைப் போல எப்போதும் தாகம் எடுப்பதும் இல்லை. அவையவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் உண்டாகும். காம இச்சை வருவதும், தக்க பருவம் வந்த பின்புதான் வருவது இயற்கையாகும். இப்படி வரும் காலத்தில் பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதன் மூலம் மனிதன் இன்பமடைகிறான். இவ்விதம் மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு இச்சைகளைக் கொண்டவனாக இருக்கிறான்.

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கையின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆதாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும்.

இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது. பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன. நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப்பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான்.

கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன்மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும் அதைப் பக்குவம் செய்து சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய் உணவும் செய்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்றுதான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புகள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.

இறுதியில் அந்தப் பலம்கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிதுகூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய் உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப்பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.

ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக்கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடிக் கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டுவிடுமானால் அந்த உடல் அழுகிக் கொழகொழுத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனையையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.

இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான். மேல்ஜாதி, கடவுளுக்கும் அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும், இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன் மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமானாலும், இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும்; இது இயற்கையேச் ஆகும்.

இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத் தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய்விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக் கட்டையாக ஆகிவிடுகிறது. இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.

செத்துப் போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.

மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக்கிறோம். நாய், மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சிபிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகி விடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும் வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதியடைந்து போய்விடுகிறது.

பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட்பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக் கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னா ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும்கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான். அத்துடன் விடவில்லை. செத்துப் போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து விடுகிறதாம்.

அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல்உலகம் சென்று அங்கு அது இங்கு செய்த பாவபுண்ணியத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப்படுகிறதாம்.

இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதைவிட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்று தான் சொல்லத் தெரியுமே தவிர தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.

மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட்கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றபடி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத்மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவுபடுத்த வேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற்கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம் நரகத்தில் போய்ச் சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படியானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்ச் சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள்தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக் கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால்கூட கடன் வாங்கியாவது திவசமும் கருமாதியும் செய்கிறான்.

இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும் நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?

அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும். நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்க வேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என்றாலும் ஒரு சிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும்.

ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்து விடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல் உலகத்துக்கு? போக முடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்னவென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படுகிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.

கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும்போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும்,” என்றானாம்.

அதற்குப் புரோகிதன் “அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்?” என்று கேட்க அதற்கு இவன் “நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காணமுடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிறபொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்.

நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.

 நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.

கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!

இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா' என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்' என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்' என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?

சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?

இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!

சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்' என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?

திருச்சியில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரை
'விடுதலை' 6.12.1973