‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.
ஓர் தேசத்தின் பல்லின மக்களுக்குள் உடைப்புகள் – பிரிப்புகள் செய்து, இலங்கைப் பாசிச அரசின் ‘இன அழிப்புத் திட்டத்தை” இவர்களே ஆரம்பித்தார்கள். தற்போதும் அதற்கான வழிகளையே தேடிச் செல்கின்றார்கள். ஓர் பல்லின மக்கள் வாழும் நாட்டில், அனைத்து இன மக்களையும் சிதறடித்துச் சின்னாபின்னம் ஆக்கியுள்ளார்கள். அந்த மக்களின் அனைத்துப் பலங்களையும் – வளங்களையும் சதிகளால் இழக்கவைத்து, தனித்தனிக் கூறாக்கியுள்ளார்கள். அத்தனை தேசிய இனங்கள் மீதும், இந்த ‘தமிழ்க் குறுந் தேசியத் தந்திரிகள்” அன்றுமுதல் இன்றுவரை ‘தொலை நோக்கு அரசியல்” அற்ற, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் – பாசிசக் கட்சிகளுடன் எதிரணி கட்டி, அவர்களை ‘பாசிச தேசிய மணிமுடி அரசு” என்ற வரையில் வளர்த்துள்ளார்கள். இந்த வகையில், இதன் பன்முகப் பரிமாணமே, இலங்கைத் தமிழ்த் தேசிய மக்களின் உயிர்களை, ‘சிறிலங்காவின் சிங்கவாள் கொடிக்கு அமைய” பகுதி பகுதியாய் அறுத்து, கணக்கற்று அழித்துப் புதைத்த, யுத்ததிலும் துரோகத்தனம் உச்சமடைந்த இடமான ‘முள்ளிவாய்க்கால்” என்ற வன்னி நிலப்பகுதி, உலகினில் இன்று சர்வதேசப் பெயராகியுள்ளது.