புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில்
(ஜே.ஆர் ஜெயவர்த்தனா)
அநுராதபுரநகரில் நிராயுதபாணிகளான நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்களப் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவமானது " போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற சுலோகத்துடன் சிறுபான்மை இனங்கள் மீது வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கியபடி பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பெரும் அடியாக இருந்தது. இந்திய அரசின் முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அலட்சியம் செய்துவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அனுராதபுரம் நகர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலானது தனது போர் அறைகூவலுக்கான பதிலாக தனது வாசல்படிக்கே வந்திருப்பதை கண்டுகொண்டிருந்தார். இதனால் சிறுபான்மை இனங்கள் மீது போர் தொடுப்பதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தற்காலிக "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களைப் பலியெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளும், குமுதினிப் படகிலும் நற்பிட்டிமுனையிலும் அப்பாவித் தமிழ்மக்களைப் பலியெடுத்த இலங்கை அரசும் தமது இரத்தக்கறை படிந்த கரங்களுடன் "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு தயாராகினர்.