எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம்
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னராக இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசினால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை முகம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு மக்கள், அரசின் யுத்தநிறுத்தமும் இந்திய மத்தியத்துடனான திம்புப் பேச்சுவார்த்தையும் இனப்பிரச்சினைக்கொரு நிரந்தரத் தீர்வையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்த்தவர்களாகக் காணப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களுக்குப் பின்னான இந்திய அரசின் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த "அக்கறை"யும் "ஆதரவும்", இந்தியாவில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியுடன் ஆயுதங்கள் வழங்கியமையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியமையும் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய மத்தியத்துவதுடனான பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணமாய் அமைந்திருந்தது.