இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி
70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் " உணர்ச்சி பொங்கும் " மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.
சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்தபோது ஏற்பட்டவையே. இச்சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.