கடந்த 2008ஆம் ஆண்டில் விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம், விருத்தாசலம் நகரிலுள்ள ஆலடிரோடு, எம்.ஆர்.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சி வியாபாரம் செய்ய முயற்சித்தது. இதனால் ஆலடி ரோடு பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.நகர், முல்லைநகர், வீ.என்.ஆர்.நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகள் பாலைவனமாகும் அபாயத்தை உணர்ந்த இப்பகுதிவாழ் மக்கள் இத்தண்ணீர்க் கொள்ளையை எதிர்த்து ஊர் வலம், ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து போராடியதையடுத்து இந்நிறுவனம் மூடப்பட்டது. இருப்பினும், இரவில் இரகசியமாகத் தண்ணீரை உறிஞ்சிப் பகலில் குடுவைகளில் தண்ணீரை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் இத்தண்ணீர்க் கொள்ளை அவ்வப்போது நடந்துவந்தது.