உ.பி.உணவு ஊழல்: ஏழைகளின் பெயரால் நடந்த பகற்கொள்ளை!
""அரசின் உணவு தானியக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் ஒரு தானியத்தைக்கூட ஏழை மக்களுக்கு இலவசமாகத் தர மாட்டேன்'' என அடித்துப் பேசி வருகிறார், மன்மோகன் சிங். இன்னொருபுறமோ, உ.பி. மாநிலத்தில் ரேஷன் கடைகளின் மூலமும் சமூக நலத் திட்டங்களின் மூலமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு விநியோகித்திருக்க வேண்டிய இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான உணவு தானியங்களைக் கடத்திக் கொண்டு போய், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ள ஊழல் நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அலைக்கற்றை ஊழல் பிரபலமான அளவிற்கு, உ.பி. மாநிலத்தில் நடந்துள்ள இந்த உணவு ஊழல் ஊடகங்கள் மத்தியில்கூட விரிவாகப் பேசப்படவில்லை.