குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.