தண்ணீர்க் கொள்ளையர்களின் படையெடுப்பு!
இயற்கையின் கொடையான தண்ணீர் அனை வருக்கும் பொதுவானது, அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது என்ற நியதிக்கு, முதலாளித்துவம் என்றுமே கட்டுப்பட்டதில்லை. மற்ற வளங்களைப் போலவே தண்ணீரையும் ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிடவே, அது துடித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்ற உலக வங்கியின் துணையுடன் பல வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, "இந்தியாவின் வளர்ந்து வரும் தண்ணீர் வர்த்தகத் துறையின் 50 பில்லியன் டாலர் (2,50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றுவோம்'' என்ற முழக்கத்துடன் அமெரிக்க கார்பரேட் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சென்றுள்ளது.