ஜார்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும். 10 ஒ 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார். எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும். அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும். சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர்குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும். ஒருஇரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், "சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்' எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.