ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!
http://siruvarpaadal.blogspot.com/
கல்வி என்பது
கண்களைத் திறப்பது!
கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!
செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!
இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!
எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!
பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!
அல்லும் பகலும்
அணையா விளக்கது!
கல்லில் பதியும்
கலையா எழுத்தது!
சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!
வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது!
-
தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.
இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-
உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!
கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!
கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!
மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!
பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!
தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!
-தெ.சாந்தகுமார்.
உப்போ உப்பு தங்கச்சி
ஒசத்தி உப்பு தங்கச்சி
பொட்டு கூடையை கொண்டாயேன்
போணி பண்ணிட்டு நான் போறேன்
எட்டு தெரு சுத்தனும்
ஏழு மூட்டை விக்கனும்
செல்லா காசு தங்கச்சி
சீசீ தப்பு தங்கச்சி
மனதில்...
காற்றாய்,
நீயும்-
கலந்திட வேண்டும்!
நாற்றாய்,
நீயும்-
நின்றிட வேண்டும்!
மலராய்,
நீயும்-
மணம் வீசிட வேண்டும்!
தேனாய்,
நீயும்-
இனித்திட வேண்டும்
தென்றலாய்,
நீயும்-
இருந்திட வேண்டும்
மலராய்,
நீயும்-
பூத்திட வேண்டும்
மணமாய்,
நீயும்-
பரவிட வேண்டும்
மனிதனாக,
நீயும்-
உயர்ந்திட வேண்டும்!
மண்னெங்கும்
உன் பெருமையே
பேசப்பட வேண்டும்!
மனதில் கொள் தம்பி!
-இரா.நவமணி
உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!
கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!
உப்பின் தந்தை கடலாகும்
உப்பளம் உப்பின் இடமாகும்!
உப்பில் அயோடின் இருந்தால் தான்
உடலும் நலமாய் இருந்திடுமே!
உப்பை அதிகம் சேர்த்தாலே
உயரும் ரத்த அழுத்தமே!
எப்பவும் அளவாய் இருந்தாலே
என்றும் நலமாய் வாழ்ந்திடலாம்!
உப்பு யாத்திரை குஜராத்தில்
உத்தமர் காந்தி தலைமையிலே!
உப்புக் காகப் போராட்டம்
உலகை உலுக்கி எடுத்ததுவே!
உப்பே உணவுக்குச் சுவையாகும்
உப்பின்றேல் அது குப்பையாகும்!
உப்பும் உணவும் போலவே நாம்
உலகில் ஒன்றாய் வாழ்வோமே!
பி. வி.கிரி
பூனைக்குட்டி
மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசை வச்ச பூனைக்குட்டி
பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி
பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு
விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்
அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி
விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே
-கொல்லங்குடி உடையப்பன்
கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!
வெட்டுது பார் மின்னல்!
பார்க்காதே அது இன்னல்!
முழங்குது பார் இடி!
வெளியே போவது எப்படி?
பொழியுது பார் முகில்!
விளைந்திடும் பார் வயல்!
கூவுது பார் குயில்!
ஆடுது பார் மயில்!
மழை பெய்தாலே மகிழ்வுதான்!
மறைந்திடும் நம் வறட்சிதான்!
நன்றி - குறும்பலாப்பேரி பாண்டியன் - தினத்தந்தி
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாரும் இல்லார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்.
ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!
கூடு கட்ட பறவைகள்
கூடி அங்கே சென்றிடுமாம்
நாடி நாமும் செல்லலாம்
நல்ல காற்று பெற்றிடலாம்!
சிறிய விதையிலிருந்து
சிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமே
பெரிய படையும் தங்கிட
படர்ந்த நிழலைத் தந்திடுமே!
தளர்ச்சி மரத்தில் தோன்றினால்
தாமாய் விழுதுகள் இறங்கியே
வளர்ச்சி காக்கும் ஆலமரம்
வீழ்ச்சி காணா ஆலமரம்!
ஆல விழுதைப் போலவே
அன்னை தந்தை தளர்ச்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுவோம்
நல்ல பாடம் கற்றிடுவோம்!
நன்றி - புலவர்,ப.தேவகுரு தேவதானப்பட்டி
பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனதும்
பலமாய் நானும் ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்
ஹையா !!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ !
ஹெக்கே பெக்கெ ஹெக்கே பெக்கெ ஹா ஹா ஹா :)
அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..
- விபாகை
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.
அழ.வள்ளியப்பா.
-- விழியன்
http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html
அசைந்தா டம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு
உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஔவிய மின்றி அசைந்தாடு
-சாரணா கையூம்
சாஞ்சாடம்மா சாஞ்சாடு
தங்கக் குடமே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
காவேரித் தாயே சாஞ்சாடு
- பாஸிடிவ் ராமா
பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா
உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா
ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா
இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.
-- தேன் துளி
ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.
விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்.
பழக்க மில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.
-சாரணா கையூம்
துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!
துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள்!
வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!
சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே!
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!
(எழுதிய கவிஞருக்கும் அதை எனக்கு அனுப்பி வைத்தவருக்கும் நன்றி)
-- பாஸிடிவ் ராமா
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை
நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)
அ, ஆ சொல்லலாம்
அரிசி பொறி திங்கலாம்
இ, ஈ சொல்லலாம்
இடியாப்பம் திங்கலாம்
உ, ஊ சொல்லலாம்
உளுந்து வடை திங்கலாம்
எ, ஏ சொல்லலாம்
எள்ளுருண்டை திங்கலாம்
ஐ எழுத்து சொல்லலாம்
ஐங் கரனை வணங்கலாம்
ஒ, ஓ சொல்லலாம்
ஓமப் பொடி திங்கலாம்
ஔ எழுத்து சொல்லலாம்
ஔவையாரை வணங்கலாம்.
அக் என்று சொல்லலாம்.
அக்தோட முடிக்கலாம்
- பாசிட்டிவ்ராமா
தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது
சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே
-- பாசிட்டிவ்ராமா
(நன்றி : இதை அனுப்பிய என் அன்பு நண்பருக்கு)
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகைச் சிறகை அடித்து வா
கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்திக் கொத்தித் தின்னவா
ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய்
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய்
உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயரச் செல்லணும்
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு
-- பாசிட்டிவ்ராமா
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்
ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்
குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?
சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!
தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை
சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை
அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது
நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்
கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
காம்பு நீண்ட கத்திரிக்கா
புத்தம் புது கத்திரிக்கா
புதுச்சேரி கத்திரிக்கா
நாராயணன் தோட்டத்துல
நட்டுவச்ச கத்திரிக்கா
பறிச்சு நீயும் கொண்டு வா
கூட்டு பண்ணி தின்னலாம்
நன்றி: சகோதரி தேன் துளி
வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்
ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.
ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்
கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.
பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.
'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ
நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3)
நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்
சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!
தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!-
-- பெருஞ்சித்திரனார்
மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து...
நன்றி: பாஸிடிவ் ராமா– நம்பிக்கை கூகிள் குழுமம்
தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.
பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை.
-சாரண கையூம்
எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை
எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை
பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை
தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை
நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை
காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை
பகை = பகைவனான காட்டுப் பூனை :)
சகோதரி பொன்ஸ் (http://www.blogger.com/profile/650829) தன் வீட்டு பூனையின் புகழ் பாடி எழுதிய பாடல்.
கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
மஞ்சுளாசுந்தர்.
முத்தமிழ் மன்றம்
சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி
பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி
சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி
உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!
துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் தூக்கலாம்
வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!
சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியும் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!
வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!
குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா
கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா
அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது
வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!
எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது
ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"
-- முத்தமிழ் மன்றம்
ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா
ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்ல சொல்லித்தா!
பறந்து திரியும் காக்கா வா
பகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!
பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா
தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா
கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!
தாவித் திரியும் அணிலே வா
சுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா!
குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழும் வழி சொல்லித்தா!
கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழிலில் பேச சொல்லித்தா!
வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்கும் கலையை சொல்லித்தா!
கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?
மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,
முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,
சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டி
அம்மா என்றழைக்குது கன்னுக்குட்டி
நாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு
பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்
பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்
மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!
பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே
பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே
கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே
பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!
***பாவண்ணன்
காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன
உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.
எலியே எலியே கதை கேளாய்!
வீட்டெலியே கதை கேளாய்!!
பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!
உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!
ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!
வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!
எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!
கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!
தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!
கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!
மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே
டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது
அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது
ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது
கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி
காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது
அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது
பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!
மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!
பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!
ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!
நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்