Language Selection

சிறுவர் பாடல்கள்

கல்வி என்பது
கண்களைத் திறப்பது!

கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!

செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!

இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!

எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!

பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!

அல்லும் பகலும்
அணையா விளக்கது!

கல்லில் பதியும்
கலையா எழுத்தது!

சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!

வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது!
-

தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.

http://siruvarpaadal.blogspot.com/2006/01/2.html

இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-

உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!

கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!

மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!

பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!

தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!

-தெ.சாந்தகுமார்.

http://siruvarpaadal.blogspot.com/2006/01/3.html

உப்போ உப்பு தங்கச்சி
ஒசத்தி உப்பு தங்கச்சி
பொட்டு கூடையை கொண்டாயேன்
போணி பண்ணிட்டு நான் போறேன்
எட்டு தெரு சுத்தனும்
ஏழு மூட்டை விக்கனும்
செல்லா காசு தங்கச்சி
சீசீ தப்பு தங்கச்சி

 

பத்மா அர்விந்த்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html

மனதில்...
காற்றாய்,

நீயும்-
கலந்திட வேண்டும்!
நாற்றாய்,
நீயும்-
நின்றிட வேண்டும்!
மலராய்,
நீயும்-
மணம் வீசிட வேண்டும்!
தேனாய்,
நீயும்-
இனித்திட வேண்டும்
தென்றலாய்,
நீயும்-
இருந்திட வேண்டும்
மலராய்,
நீயும்-
பூத்திட வேண்டும்
மணமாய்,
நீயும்-
பரவிட வேண்டும்
மனிதனாக,
நீயும்-
உயர்ந்திட வேண்டும்!
மண்னெங்கும்
உன் பெருமையே
பேசப்பட வேண்டும்!
மனதில் கொள் தம்பி!

-இரா.நவமணி

http://siruvarpaadal.blogspot.com/2006/01/4.html

உணவில் உப்பு இருந்தால் தான்
உண்ண முடியும் நம்மாலே!

கணமும் உப்பு இல்லாமல்
காலம் தள்ள முடியாதே!

உப்பின் தந்தை கடலாகும்
உப்பளம் உப்பின் இடமாகும்!
உப்பில் அயோடின் இருந்தால் தான்
உடலும் நலமாய் இருந்திடுமே!

உப்பை அதிகம் சேர்த்தாலே
உயரும் ரத்த அழுத்தமே!
எப்பவும் அளவாய் இருந்தாலே
என்றும் நலமாய் வாழ்ந்திடலாம்!

உப்பு யாத்திரை குஜராத்தில்
உத்தமர் காந்தி தலைமையிலே!
உப்புக் காகப் போராட்டம்
உலகை உலுக்கி எடுத்ததுவே!

உப்பே உணவுக்குச் சுவையாகும்
உப்பின்றேல் அது குப்பையாகும்!
உப்பும் உணவும் போலவே நாம்
உலகில் ஒன்றாய் வாழ்வோமே!

பி. வி.கிரி

http://siruvarpaadal.blogspot.com/2006/02/blog-post.html

பூனைக்குட்டி


மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி

பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி

பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு

விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்

அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி

விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே

-கொல்லங்குடி உடையப்பன்

http://siruvarpaadal.blogspot.com/2006/02/6.html

கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!

வெட்டுது பார் மின்னல்!
பார்க்காதே அது இன்னல்!

முழங்குது பார் இடி!
வெளியே போவது எப்படி?

பொழியுது பார் முகில்!
விளைந்திடும் பார் வயல்!

கூவுது பார் குயில்!
ஆடுது பார் மயில்!

மழை பெய்தாலே மகிழ்வுதான்!
மறைந்திடும் நம் வறட்சிதான்!

நன்றி - குறும்பலாப்பேரி பாண்டியன் - தினத்தந்தி

http://siruvarpaadal.blogspot.com/2006/03/7.html

அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாரும் இல்லார்

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றி சொல்வேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஒளவை சொன்ன மொழியாம்

அஃதே நமக்கு வழியாம்.

http://siruvarpaadal.blogspot.com/2006/04/8.html

ஆல மரமாம் ஆலமரம்
அருமையான ஆலமரம்
காலம் காலமாய் நிழல்தந்து
காத்து வந்திடும் ஆலமரம்!

கூடு கட்ட பறவைகள்
கூடி அங்கே சென்றிடுமாம்
நாடி நாமும் செல்லலாம்
நல்ல காற்று பெற்றிடலாம்!

சிறிய விதையிலிருந்து
சிறப்பாய் பெரிதாய் வளர்ந்துமே
பெரிய படையும் தங்கிட
படர்ந்த நிழலைத் தந்திடுமே!

தளர்ச்சி மரத்தில் தோன்றினால்
தாமாய் விழுதுகள் இறங்கியே
வளர்ச்சி காக்கும் ஆலமரம்
வீழ்ச்சி காணா ஆலமரம்!

ஆல விழுதைப் போலவே
அன்னை தந்தை தளர்ச்சி கண்டு
நாளும் நாமும் காத்திடுவோம்
நல்ல பாடம் கற்றிடுவோம்!

நன்றி - புலவர்,ப.தேவகுரு தேவதானப்பட்டி

http://siruvarpaadal.blogspot.com/2006/04/9.html

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்

பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது
பந்து போல ஆனதும்
பலமாய் நானும் ஊதினேன்

பலமாய் நானும் ஊதவே
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்

விரைவில் வந்தால் பார்க்கலாம்
அல்லது வெடிக்கும் சத்தம் கேட்கலாம்


ஹையா !!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ !

ஹெக்கே பெக்கெ ஹெக்கே பெக்கெ ஹா ஹா ஹா :)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/10.html

அம்மா என்று சொல்
ஆளுமை வளர்
இலக்கை உயர்த்து
ஈன்றவள் மனம் குளிர்
உலகினை நேசி
ஊர் நலம் பேண்
எளிமை பயில்
ஏளனம் அகல்
ஐம்புலன் கல்
ஒற்றுமை பழகு
ஓங்கிய எண்ணம் கொள்
ஓளவை சொல் கேள்
அஃதே வாழ்க்கை..

- விபாகை

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/11.html

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.

 

அழ.வள்ளியப்பா.

-- விழியன்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html

 

 

சைந்தா டம்மா அசைந்தாடு
சைக் கிளியே அசைந்தாடு
சையோ டொன்றாய் அசைந்தாடு
ரக் குலையே அசைந்தாடு

தய நிலாவே அசைந்தாடு
தும் குழலே அசைந்தாடு
ழிலாய் வந்து அசைந்தாடு
ற்றத் தேடு அசைந்தாடு

யம் விட்டு அசைந்தாடு
ழுக்கம் பேணி அசைந்தாடு
விய நூலே அசைந்தாடு
விய மின்றி அசைந்தாடு

-சாரணா கையூம்

சாஞ்சாடம்மா சாஞ்சாடு
தங்கக் குடமே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
காவேரித் தாயே சாஞ்சாடு

- பாஸிடிவ் ராமா

http://siruvarpaadal.blogspot.com/2006/04/13.html

பாட்டி வீட்டு பழம்பானை
அந்த பானையில் ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டை வழியாய் சுண்டெலியும்
உள்ளே புகுந்து கொண்டதடா

உள்ளே புகுந்த சுண்டெலியும்
நெல் ஊதி புடைத்து உண்டதடா
நெல் உண்டு கொழுத்ததனால்
உடல் ஊதி பெருகி விட்டதடா

ஊதி பெருத்த உடலாலே
ஓட்டை வழியாய் வெளியே வரமுடியவில்லை.
காற்று எதுவும் இல்லாமல்
எலியும் உள்ளே இறந்ததடா


இந்த பாடல் திருடி தின்பதும் உழைக்காமல் தின்பதுவும் தவறு என்று சொல்ல வந்தது.

-- தேன் துளி

http://siruvarpaadal.blogspot.com/2006/04/14.html

ஆல மரத்து ஊஞ்சலாம்
அமர்ந்து ஆடிப் பாடலாம்
காலை உயர நீட்டியே
கீழும் மேலும் ஆடலாம்.

விண்ணை நோக்கிப் போகலாம்
வடக்குத் தெற்குப் பார்க்கலாம்
பண் இசைத்துப் பாடலாம்
பகல் முழுதும் ஆடலாம்.

பழக்க மில்லாப் பிள்ளைகள்
பையப் பைய ஆடலாம்
பழக்கமான போதிலே,
பறந்து விண்ணில் ஆடலாம்.

-சாரணா கையூம்

http://siruvarpaadal.blogspot.com/2006/04/15.html

துண்டுத் தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்!

துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்!
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய்ப் பொம்மை செய்தனள்!

வண்ணத் தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்!
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்!

சிறிய துரும்பும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே!
சின்னஞ் சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே!

(எழுதிய கவிஞருக்கும் அதை எனக்கு அனுப்பி வைத்தவருக்கும் நன்றி)

-- பாஸிடிவ் ராமா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/04/16.html

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

நன்றி - சுகா (http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/17.html

அ, ஆ சொல்லலாம்
அரிசி பொறி திங்கலாம்

இ, ஈ சொல்லலாம்
இடியாப்பம் திங்கலாம்

உ, ஊ சொல்லலாம்
உளுந்து வடை திங்கலாம்

எ, ஏ சொல்லலாம்
எள்ளுருண்டை திங்கலாம்

ஐ எழுத்து சொல்லலாம்
ஐங் கரனை வணங்கலாம்

ஒ, ஓ சொல்லலாம்
ஓமப் பொடி திங்கலாம்

ஔ எழுத்து சொல்லலாம்
ஔவையாரை வணங்கலாம்.

அக் என்று சொல்லலாம்.
அக்தோட முடிக்கலாம்

- பாசிட்டிவ்ராமா

http://siruvarpaadal.blogspot.com/2006/05/18.html

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது

பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது

அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது

சின்னஞ் சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே

-- பாசிட்டிவ்ராமா

(நன்றி : இதை அனுப்பிய என் அன்பு நண்பருக்கு)

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/19.html

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகைச் சிறகை அடித்து வா

கொட்டிக் கிடக்கும் மணிகளைக்
கொத்திக் கொத்தித் தின்னவா

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய்

சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய்

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயரச் செல்லணும்

என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு

-- பாசிட்டிவ்ராமா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/20.html

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்

ஊரைச் சுற்றி வருகுது
ஓரமாக நில்லுங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்

குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்

எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/21.html

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/22.html

சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
இது சீருடைய பொம்மை
என்தனது தாயாரு
எனக்கு தந்த பொம்மை
இது எனக்கு தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை
இது நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தா சிரிக்குமது
மணியடிச்சா தூங்கும்
இது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
செய்யும் இந்த பொம்மை
இது செய்யும் இந்த பொம்மை

அம்மாதந்த பொம்மையிது
சும்மா தருவேனோ
நான் சும்மா தருவேனோ
சுற்றி சுற்றி வந்தாலுமே சும்மாக்கிடைக்காது
இது சும்மாக்கிடைக்காது

நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/23.html

கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா
காம்பு நீண்ட கத்திரிக்கா
புத்தம் புது கத்திரிக்கா
புதுச்சேரி கத்திரிக்கா
நாராயணன் தோட்டத்துல
நட்டுவச்ச கத்திரிக்கா
பறிச்சு நீயும் கொண்டு வா
கூட்டு பண்ணி தின்னலாம்


நன்றி: சகோதரி தேன் துளி

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/24.html

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.

எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.

மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.

கிட்டு நான்கு லட்டு,
பட்டு நான்கு லட்டு,
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/25.html

ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.

எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.

ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.

ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்

கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.

பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;

மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.

பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.

'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.

பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.

ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.

கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ

நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென

அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------


எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1

பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபால்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/26.html

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்

அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்

அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்

எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்

சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்

தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்

நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3)



நன்றி: ஜெயந்தி அர்ஜீன் – நம்பிக்கை கூகிள் குழுமம்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/27.html

சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!

தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே

எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன

குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!-

-- பெருஞ்சித்திரனார்
மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து...



நன்றி: பாஸிடிவ் ராமா– நம்பிக்கை கூகிள் குழுமம்

http://siruvarpaadal.blogspot.com/2006/05/28.html

தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.

பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.

பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை.

-சாரண கையூம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/29.html

எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை

தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை

பகை = பகைவனான காட்டுப் பூனை :)

சகோதரி பொன்ஸ் (http://www.blogger.com/profile/650829) தன் வீட்டு பூனையின் புகழ் பாடி எழுதிய பாடல்.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/30.html

கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்

காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்

ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்

இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்

மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்

நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்

ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்

ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்

ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்

எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்

ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்

பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/31.html

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)

காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)

எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)

மஞ்சுளாசுந்தர்.
முத்தமிழ் மன்றம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/32.html

சின்னச் சின்ன நாய்க்குட்டி
தூய வெள்ளை நாய்க்குட்டி

பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி

சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி

உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளுமே!

துள்ளித் துள்ளி ஓடுவாய்
உன்னை அள்ளி அள்ளித் தூக்கலாம்

வாசலிலே மற்றவர் வந்து
நின்றால் போதுமே!
சிங்க கர்ஜனை செய்வாயே!

சிறுவர் விரும்பும் நாய்க்குட்டி
பாலும் ரொட்டியும் பாந்தமாய்
தந்து விட்டால் போதுமே!

வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/33.html

குட்டி குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தி தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா

கண்கள் உருட்டி மிரட்டுவாள்
வாய் பொத்தி சிரிக்கும் பாப்பா
சுட்டித்தனம் செய்திடும்
எங்கள் சக்தி பாப்பா

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/34.html

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்

கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/35.html

“வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது

வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!

எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது

ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது"

-- முத்தமிழ் மன்றம்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/36.html

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்ல சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகுதுண்ணும் பழக்கம் சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
சுவையான பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழும் வழி சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழிலில் பேச சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்கும் கலையை சொல்லித்தா!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/37.html

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல

மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்

புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்

மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.

பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.

பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.

அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.

பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.

எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

 

http://siruvarpaadal.blogspot.com/2006/05/38.html

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/39.html

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளி குதிக்குது கன்னுக்குட்டி
அம்மா என்றழைக்குது கன்னுக்குட்டி
நாவால் நக்கி கொடுக்குது வெள்ளைப்பசு

 

பத்மா அர்விந்த்

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html

பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!

***பாவண்ணன்

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/41.html

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/42.html

எலியே எலியே கதை கேளாய்!
வீட்டெலியே கதை கேளாய்!!

பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!

உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!

ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!

வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!

எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!

கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/43.html

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/44.html

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது

கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது

இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது

மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே

கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்

ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே

ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே

நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/45.html

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது

அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது

பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது

அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது

டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/46.html

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு

கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!

குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு

பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!

எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு

இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!

கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு

கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!

பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது

சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!

பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்

சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!

 

http://siruvarpaadal.blogspot.com/2006/06/47.html












ஆனை ஆனை
அழகர் ஆனை

அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை

கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை

காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

http://siruvarpaadal.blogspot.com/

 சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!


வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

http://siruvarpaadal.blogspot.com/