1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

சிறிய நாடுகளை தனது இராணுவ கட்டமைப்புக்குள் இணைக்கும் அமெரிக்க தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாதக் கொள்கையானது, மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்களாக மாறி இருக்கின்றது. நடந்து கொண்டிருக்கும் உக்கிரைன் யுத்தமானது, மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் நடத்துகின்ற மறைமுகமான யுத்தமே.

இந்த ஏகாதிபத்தியங்களின் கெடுபிடியான யுத்தமானது, ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பாக மாறி, பொருளாதார - இராணுவ மண்டலங்கள் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் இடம் மாறி வருகின்றது.

இந்தக் கெடுபிடியான சூழலிலேயே, அமெரிக்காவின் மூக்கில் ஹமாஸ் பாரியத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. அரபு உலகில் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்ட இஸ்ரேல், நிலைதடுமாறி விழுமளவுக்கான தாக்குதல் நடந்தேறி இருக்கின்றது. 

முற்றிவரும் ஏகாதிபத்திய முரண்பாடுகளே, ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் காணமுடியும். ஒருங்கிணைந்த தாக்குதல், புலனாய்வுக்கு எதிரான அதிரடி வியூகங்கள், அமெரிக்க - மேற்கு ஆயுதங்களைக் கொண்ட பாரிய தாக்குதலானது, உக்கிரன் போர் முனையை காசாவுக்கு இடமாறி இருக்கின்றது. 

எதிர்காலத்தில் பல போர் முனைகள் உலகெங்கும் தோன்றுவதற்கும், விடுதலையின் பெயரில் கூலிக் குழுக்கள் உருவாவதற்குமான வரலாற்று கட்டத்தில், உலகம் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.              

உலகை மேலாதிக்கம் செய்ய மேற்கு ஏகாதிபத்தியங்கள் வாய் கிழியப் பேசுகின்ற ஜனநாயக முகமூடிகள் எல்லாம், கிழியத் தொடங்கியிருக்கிறது. சமகாலத்தில் உக்கிரைன் - பாலஸ்தீனம் மீதான இரட்டை நிலைப்பாடு, போலியான அவர்களது ஏகாதிபத்திய ஜனநாயக முகத்தை மூடிமறைக்க இயலாது செய்துள்ளது.

சுதந்திர ஊடகங்கள் என்று கூறிக்கொண்டு, அறிவாளிகள் - புத்திஜீவிகள் என்று கூறிக்கொண்டு கும்மியடித்த கும்பலின் ஜனநாயக வேசங்கள், போலியான சுதந்திர எண்ணங்கள் அம்மணமாகி முதுகு சொறிகின்றது.  

தேர்தல் ஜனநாயகத்தையே மனித ஜனநாயகம் என்று வாய்கிழிய முழங்கிக் கொண்டு, உலகைப் பங்கிட்டவர்கள் எல்லாம், ருசியா - இஸ்ரேல் விவகாரத்தில் யுத்தத்தை ஒருதரப்பாக முன்னின்று நடத்துபவர்களாக - நியாயப்;படுத்துபவர்களாக மாறியுள்ளனர்;. ஒருபுறம் உக்கிரனைக்கு ஆயுதத்தை கொடுக்கும் அதே கையால், இஸ்ரேலுக்கு ஆயுதத்தைக் கொடுக்கின்றனர். ஏகாதிபத்திய நலன் சார்ந்து, நீதியான - அநீதியான யுத்தங்கள் பற்றி ஒப்பாரி இடுகின்றனர். மேற்கு சார்ந்த ஊடக "சுதந்திர" வியாபாரம் செய்யும் ஊடகங்களோ, இவற்றையெல்லாம் கூட்டியள்ளி வாந்தி எடுக்கின்றனர்.    

பாலஸ்தீனம் என்ற நாட்டை 75 வருடங்களுக்கு முன் இல்லாதாக்கி மேற்கு ஏகாதிபத்தியம், மத்தியகிழக்கை அடக்கியாளும் அமெரிக்காவின் கூலிப்படையாக உருவாக்கப்பட்டதே இஸ்ரேல் என்ற நாடு.  

இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லரின் தலைமையிலான நாசிகள் எப்படி யூதர்களை வேட்டையாடி கொன்று குவித்தனரோ, அதே போன்று யூதரின் பெயரால் இஸ்ரேல் மத்தியகிழக்கில்; பாலஸ்தீன மக்களை இனவழிப்பு செய்து வருகின்றனர்;. இந்த இனவழிப்பின் பின் இருப்பது, அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளே.    

பாலஸ்தீனம் என்ற நாடு மட்டுமின்றி, பாலஸ்தீன மக்களின் குரல்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்ற மேற்கத்தைய இன்றைய உலக ஒழுங்கில், ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல் உலக மேலாதிக்கத்தின் கதவுப் பூட்டை உடைத்திருக்கின்றது.   

மத்தியகிழக்கில் கம்யூனிசத்தையும் - மக்கள் திரள் போராட்டத்தையும் ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் உருவாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமானது, இன்று உருவாக்கியவர்களையும் வேட்டையாடுகின்றது.

இஸ்லாமிய அடிப்படைவாதம், மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதமானது தங்கள் தேவை முடிய கைவிடப்பட்ட சூழலில், தன் இருப்பு சார்ந்து  சுதந்திரமானதாக மாறி உருவாக்கியவர்களையே குதறிவிடுகின்றது. அதே நேரம் பிற ஏகாதிபத்தியங்களின் கூலிக்குழுவாக மாறிவிடுகின்றது. 

ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு அரபாத் தலைமையிலான மக்களைச் சார்ந்த போராட்டத்தை ஒடுக்க, மேற்கு ஏகாதிபத்தியம் - இஸ்ரேல் இணைந்து உருவாக்;கிய பயங்கரவாத அமைப்பே. அரபாத் தலைமையிலான பாலஸ்தீன இயக்கத்தின் போர்க்குணாம்சத்தை பல்வேறு வழிகளில் காய் அடித்ததன் பின், ஹமாஸ் கைவிடப்பட்டது. இந்த சூழலில் மேற்குக்கு எதிரான சக்திகளின் நலன்களுடன் பின்னிப்பிணைந்த அமைப்பாக, ஹமாஸ் தன்னை உருமாற்றிக் கொண்டது. 

இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. ஈழத்தில் மக்கள் போராட்டத்தை முறியடிக்க, இந்தியா - அமெரிக்கா தனித்தனியான கூலிக்குழுக்களாக இயக்கங்களை உருவாக்கியது. இது போன்று சீக்கிய போராட்டம், வங்க விடுதலை போராட்டம், ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்கைதா என்று வரலாறு எங்கும் இதைக் காணமுடியும். உருவாக்கியவர்களையே திருப்பித் தாக்கியதை காணமுடியும். 

இந்த வகையில் ஹமாஸ் மக்களைச் சாராத வலதுசாரிய மத அடிப்படைவாத குழுவே. மக்கள் திரள் போராட்ட அரசியல் வழிமுறைகளை எதிர்க்கின்ற, பயங்கரவாத வழிமுறைகளை முன்னிறுத்துகின்ற குழு. புலிகளின் அரசியலும் இது தான்.

மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்துவது, தங்கள் ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதை மட்டுமே. இதில் இருந்து மாறுபட்டதே பயங்கரவாதம் என்ற அரசியல். மக்கள் திரள் பாதையை நிராகரிக்கிற, பயங்கரவாத வழிமுறைகளை பின்பற்றுகின்ற செயற்பாடு என்பது, கொள்கையளவில் பயங்கரவாத அமைப்பாக தன்னைதான் பிரகடனம் செய்து கொள்கின்றது. புலிகள் இதைத்தான் முன்வைத்தனர். 

இவர்கள் மக்களை மந்தைகளாக, விசிலடிக்கும் லும்பன் கூட்டமாக மாற்றி, அதை மக்கள் போராட்டமாக காட்டுகின்ற அரசியல் பயங்கரவாதத்தாலானது. ஹமாஸ் அதைத்தான் செய்கின்றது. மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றது. மக்கள் இதில் பங்குபற்றுவதில்லை. அவர்கள் தப்பியோடுவதைத் தவிர, மாற்று வழி இருப்பதில்லை. இந்தத் தாக்குதல் மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பிற ஏகாதிபத்தியங்களுக்கே சேவை செய்கின்றது. 

எவ்வளவு தியாயங்களைச் செய்தாலும், வீரம் செறிந்த யுத்தத்தைச் செய்தாலும், சொந்த மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்காது, இஸ்ரேலிய மக்களைச் சாராத - உலக மக்களை அணிதிரட்டாத யுத்தம் பிற்போக்கானது - மக்களுக்கு எதிரானது. இதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.  

17.10.2023