முன்பக்கம்

உலாவுவோர்

We have 226 guests online

உலாவியோர்

Content View Hits : 5127984
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
315
1735
1544

+191
This week:
Last week:
Week before last week:
2050
16038
22142

-6104
செவ்வாய், 07 புரட்டாதி 2010
 


புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவனார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம்;. சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடியாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சிறிமா சஸ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்களின் பிரச்சனைக்கு, அமைதியாக நாடு கடத்தல் என்ற தீர்வு எட்டப்பட்டது. வக்கிரமான தீர்வுகளை அமைதியாக அழுல் நடத்த, மலையக பிற்போக்கு பிரதிநிதிகளுக்கு சலுகைகள் வழங்கினர். தங்கள்  மந்திரி சபையில் இணைப்பது முதல் கொண்டு சுரண்டி வாழும் உரிமைகள் சலுகைகள் வாரி வழங்கப்பட்டது. ஜே.வி.பி நடத்திய போராட்டம் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் கூர்மையான போது, வலது பிரிவுகள் தமக்குள் ஒற்றுமை கண்டனர். இந்த ஒற்றுமை மூலம், இடது போராட்டங்களை ஒடுக்க விரும்பினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கில் சாதிய போராட்டங்களை எதிர்கொண்ட போது, அரசு மற்றும் பொலிஸ் உதவியை நாடி நின்றனர். இதை ஒடுக்குவதற்கு பாசிச அரசின் உதவியை நாடிய அதேநேரம், மக்களைப் பிளக்க வலதுசாரிகள் விரும்பினர். தமிழ் பகுதிகளில் சாதியப் போராட்டங்களால் வர்க்க அடையாளம் கண்டு அணி திரள்வது கூர்மையானது. இதுபோல் சிங்களப் பகுதியிலும் இது காணப்பட்டது. அதேநேரம் ஜே.வி.பியின்; இடது போராட்டங்களும்; கூர்மையாக வளர்ச்சி பெற்றது. தமிழ் சிங்கள வலதுசாரிய தலைவர்கள் இதை தடுக்கும் அரசியல் வழிகளைத் தேடினர். இனப் பிளவை கூர்மையாக்கி மக்களை பிளந்து மோதவிட, இரு பகுதியினரும் குறிப்பாக ஒரே நேரத்தில் முன்கையெடுத்தனர். வர்க்கப்; போராட்டங்கள் கூர்மையடைந்ததால், வலது பிரிவுகள் தமது வர்க்க அரசியலாக இனப் பிளவுகளை ஆணையில் வைத்தனர். 1970 களில் நடந்த தேர்தலில், நாட்டில் நிலவிய பொதுவான இடது அரசியல் போக்கு, அரசியல் மயமாகத இடதுசாரிய கண்ணோட்டம் சார்ந்த ஆட்சியை அதிகாரத்தில் அமர்த்தியது.   

நாட்டில் இருந்த இடதுசாரிப் போக்கு, வலதுசாரிகளுக்கான அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. 1970 இல் ஆட்சிக்கு வந்த போலி இடதுசாரி அரசாங்கம், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் அடிப்படைகளை தகர்க்க இன தேசியவாதத்தை முன் தள்ளியது. இதில் தேசிய உற்பத்தி என்ற பெயரில், சில பொருட்களை  இறக்குமதி செய்வதை தடை செய்தது. தேசிய கல்வி போன்ற பல்துறை சார்ந்து கட்டுமானங்களை மேல் இருந்து மக்கள் மேல் திணித்தனர். அதே நேரம் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முதல் பலவற்றைத் திணித்தனர். இதை அழுல் செய்ய முன்பாகவே ஜே.வி.பியை சேர்ந்த 20 ஆயிரம் பேரை கொன்றதுடன், சண் தலைமையிலான கட்சியை சிதைத்து சிறையிலும் தள்ளியது. உண்மையில் எழுந்து வந்த இடதுசாரி வீச்சை அடக்கியொடுக்கியபடி, வலது மற்றும் இடது கண்ணோட்டம் சார்ந்த வகையில் உற்பத்தி மற்றும் நடைமுறைகளை மேல் இருந்து திணித்தனர். மறு தளத்தில் இளைஞர்களை திசை திருப்ப, இனவாதத்தை ஒரு சமூக கண்ணோட்டமாகவே திணித்தனர். இதனால் இடது கண்ணோட்டம் நாட்டில் முற்றாக சிதைந்து சீராழிந்தது. வலது கண்ணோட்டம், இடது வேடத்துடன் முன்னணிக்கு வந்தது.

ஆனால் உற்பத்திதுறை சார்ந்த சலுகை சார்ந்த இடது கண்ணோட்டம், உழைக்கும் மக்களைச் சுரண்டும் வலது கண்ணோட்டத்துக்கு ஆழமான நெருக்கடியைக் கொடுத்தது. இதற்கமைய சர்வதேச நெருக்கடிகளும் இணைந்த கொள்ள, சுரண்டல் என்பது தரகுத் தன்மை சார்ந்து வளர்ச்சி பெறமுடியாத மந்தநிலை நீடித்தது. சர்வதேச ரீதியாக எண்ணை நெருக்கடி, உலகை மேலும் ஆழமாக சுரண்டுவதன் மூலம், மூலதனத்தின் இழப்பை ஈடுசெய்ய கோரியது. ஆனால் இலங்கையில் அரசின் சில கொள்கைகள் இதற்கு தடையாக இருந்தது. வலது கண்ணோட்டம் உலகளவிலும், உள் நாட்டிலும் ஆழமான கோரிக்கையை முன்வைக்க தொடங்கியது. இலங்கையில் வலதுசாரிப் பிரிவுகள் தத்தம் இனப்பிரிவு சார்ந்து தம்மை நுட்பமாக ஒருங்கிணைத்துக் கொண்டன. இடதுசாரி அரசின் இனவிரோதக் கொள்கை இதற்கு எண்ணை வார்த்தது. இனம் சார்ந்து வலது குழுக்களின் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாகியது.

இனப்பிளவு மேலும் துல்லியமாக மாறி, பண்பு வழியில் வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த இனப்பிளவு சார்ந்த இன தேசிய அடிப்படைகள் எந்த விதத்திலும், தனது வலதுசாரி அரசியல் எல்லையை தண்டவில்லை. மேல் இருந்து திணித்த பொருளாதார கொள்கைகள் எதிர்த்து வளர்ச்சி பெற்ற இனவாத வலதுபிரிவுகள், 1977 இல் தேர்தலில் பெரு வெற்றி பெற்றது. தமிழ் சிங்களம் என்று இன அடிப்படையில், இலங்கையில் உயர்ந்த பட்சமான நிலையில் இனவாத சக்திகள் வெற்றிபெற்றது. இந்த வெற்றி இடது எதிர்ப்பை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட, ஒரு பாசிச கண்ணோட்டமாக வளர்ச்சி பெற்றது. இதில் தமிழ் சிங்களம் என்று வேறுபாடு இருக்கவில்லை. உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டவதற்கு, இந்த வலது பாசிச இனவாதக் கண்ணோட்டத்தை ஆளும் வர்க்கம் தன் அரசியல் சித்தாந்தமாக வரிந்து கொண்டது. இந்த போக்கிலான இனவாத அடிப்படையில் உருவான கட்சிகள், தத்தம் நிலையில் வலது நிலைப்பாட்டை உறுதியாக்கிக் கொண்டன. இந்த வராலாற்று போக்குப் பின்பாக, இலங்கையில் இடதுசாரிகளின் வர்க்க போராட்டம் தன் வர்க்கத்தின் நலனுக்காக இதுவரை மீண்டுவிடவில்லை.

இன அடிப்படையில் தனது பாசிச கட்டமைப்பில் உருவான வலதுசாரி அரசாங்கம், என்று இல்லாத வகையில் இனவாதத்தை ஆணையில் வைத்தது. முன்னைய அரசுகளின் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி, மேலும் அதை ஆழமாக்கியதன் மூலம் சுரண்டலை தீவிரமாக்கியது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் நலன்களை பாதுகாத்து, மக்களை கொள்ளையிடவும் சூறையாடவும் தாரளமாக அனுமதித்தது. வலது தமிழ் தலைமை, தமிழ் மக்களை சூறையாட அனுமதிக்கும் உரிமையை தன்னிடம் தரும்படி கோரி, சமுகத்தை என்றுமில்லாத வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எதிர்மறையில் இருந்த சிங்கள அரசு தமிழ் மக்களை ஒடுக்கியபடி, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்தது. இந்த போக்கில் அதிர்த்தியுற்ற தமிழ் பிரிவு, அந்த உரிமை தமக்கு உண்டு என்ற கோரினர். அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்க்காது, அதே நேரம் சிங்கள இன ஒடுக்குமுறையை எதிர்த்தனர். ஏன் சிங்கள அரசு இன ஒடுக்குமுறையைக் ஏன் கையாளுகின்றது என்ற அடிப்படைக் காரணத்தை எதிர்க்காது, வடிவத்தை மட்டும் எதிர்த்தனர். இங்கு வர்க்க நலன்களே, துல்லியமாக குறிப்பாகவும் சேவை செய்தது. இந்த எதிர்நிலைத் தன்மை, இனங்களுக்கு இடையில் இனப் பிளவைக் கட்டமைத்தது.

தமிழ் தலைமை சலுகைகளை பேரம் பேசி பெறுவதன் மூலம், இதை சாதிக்க முனைப்பு பெற்றது. ஆனால் மக்கள் மத்தியில், ஆயுதப் போராட்டம் பற்றி பீற்றினர். இந்த முரண்நிலையை இனம் காணமுடியாத நிலையில், மக்களை மந்தைக் கூட்டமாக்கினர். பேரினவாத அரசு இனவாத கண்ணோட்டத்தில் இருந்து, எந்த விட்டுக் கொடுப்;பையும் செய்ய மறுத்தது. தான் மட்டும் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்து, எலும்புகளை நக்கிக் கொள்வதை தங்கள் அரசியல் நடைமுறையாக்கினர். ஏகாதிபத்திய சுரண்டல் தீவிரமாக, அதற்கு நேர்வீகிதத்தில் இனவாதம் வளர்ச்சியுற்றது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகாரித்துச் சென்றது. இதை எதிர்கொள்ள, பராளுமன்ற தலைமையில் இருந்த இனவாதப் பிரிவால் ஈடுகொடுக்க முடியவில்லை. தமது தரகு அரசியல் வாழ்வு வன்முறைக்கு ஊடாக சிதைந்து போவதை, அவர்களில் வர்க்க அரசியல் வாழ்நிலை அனுமதிக்கவில்லை. இப்படி புதிய முரண்நிலை உருவானது.

தமிழ் பராளுமன்ற உறுப்பினர்கள் 1970 களின் பின் இடதுசாரி வர்க்க கண்ணோட்டத்துக்கு எதிராகவும், பராளுமன்றம் மேல் இருந்து திணித்த தேசிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும், தனது வலதுசாரி இனவாத அடிப்படையில் தன்னைத் தான் ஒரு வன்முறைக்கு தயாரான அமைப்பாக காட்டிக் கொண்டது. இதனால் அந்த அமைபின் மீது மிகவும் தீவிரமான பற்றுக் கொண்ட குட்டிபூர்சுவா வர்க்க இளைஞர்கள், தீவிரமான செயல்களில் இறங்கினர். இவர்கள் பராளுமன்ற உறுப்பினர்களின் வளர்ப்பு நாயாக இருந்தனர். முன்னைநாள் கதநாயகர்கள் அனைவரும், கூட்டணியின் வளர்ப்பு நாய்கள் தான். தமிழ் பராளுமன்ற உறுப்பினர்கள் எதிரியாக யாரை காட்டினரோ, அவர்களை போட்டுத் தள்ளினர், அவர்கள் மேல் வன்முறைகளை கையாளத் தொடங்கினர். இப்படி வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிறை சென்ற போது, அவற்றையும் பராளுமன்றத் தலைமை அறுவடை செய்தது. கூட்டணியின் வழிகாட்டுதல் மூலம் படுகொலை அரசியல் செய்தவர்களை, பொலிஸ் தேடி அலைந்த போது அவர்களை பாதுகாக்காது கூட்டணியினர் நழுவினர். ஆனால் பூர்சுவா வர்க்க இளைஞர்கள் வீரர்களான போது, கூட்டணியினர் அதை அறுவடை செய்தனர்.

1970க்கு பின் தொடர்ச்சியான 10 வருடத்தில், குட்டிபூர்சுவா இளைஞர்களுக்கும் கூட்டணிக்கும் இருந்த உறவு மெதுவாகவே வெடிப்பு கண்டது. நெருக்கடிகளின் போது இளைஞர்களை காட்டிக் கொடுத்தனர். மற்றைய நேரத்தில் அரவணைத்து அனுசரித்து போன போக்கு, பிளவுக்கான அடித்தளமாக இருந்தது. சிங்கள இனவாத அரசு ஏகாதிபத்திய சுரண்டலை மேலும் ஆழமாக உடூருவிச் சுரண்டவும், சூறையாட உதவுகின்ற அதே வீச்சில், இனவாதத்தை மேலும் தீவிரமாக்கியது. இதை ஈடுகொடுக்க தமிழ் தலைமையிலான கூட்டணியால் முடியவில்லை. குட்டிபூர்சுவா வர்க்க இளைஞர்களுக்கும் கூட்டணிக்கு இடையில் முரண்பாடுகள் எற்பட்டது. குட்டிபூர்சுவா இளைஞர்கள் கூட்டணிக்கு தெரியாத, தமது சொந்த ஆயுதக் குழுக்களை கட்டமைக்கவும் தொடங்கினர். ஆனால் அரசியல் ரீதியாக கூட்டணியின் வலது இனவாத அரசியலையே, தமது தேசியக் கொள்கையாக வரிந்து கொண்டனர். உண்மையில் போராட்டத்தில் வடிவ மாற்றம் எற்பட்டது. இந்த வடிவ மாற்றத்தில் எது வெற்றி பெறும் என்பது, இந்த இரண்டு பிரிவும் தீர்மானிக்கும் நிலையில் அன்று இருக்கவில்லை. சிங்கள அரசே அதில் எதை வளர்ப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. சிங்கள அரசு தன்னுடன் நேரடியாக அரசியல் ரீதியாக முட்டி மோதிய கூட்டணியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வரவிரும்பியது.

கூட்டணியில் இருந்து தன்னை வேறுபடுத்தி குட்டிபூர்சுவா இளைஞர்கள், தமது அரசியலை கூட்டணியின் அரசியலாகவே வரிந்து கொண்டனர். போராடும் வடிவத்தில் மட்டும் தம்மை வேறுபடுத்தினர். வர்க்க அடிப்படையில் தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ அடிப்படையை கொண்டிருந்த கூட்டணி, குட்டிப+ர்சுவா சிந்தனையுடன் பிரிந்த தீவிரவாத இளைஞர்களில் இருந்த வேறுபட்டது உண்மைதான். ஆனால் குட்டிபூர்சுவா இளைஞர்களின் சிந்தனைக்கும் நடைமுறைக்குரிய சமூக அடிப்படை இன்மையால், அதை இனம் காண முடியாத வண்ணம் கூட்டணியின் அரசியலால் வழிநடத்தப்பட்டு இருந்தது. இதனால் கூட்டணியின் அரசியல் எல்லையை தாண்டிவிட, இவர்களை அந்த அரசியல் அனுமதிக்கவில்லை. கூட்டணி தனது வர்க்க அடிப்படையில் இருந்த உருவான பொருளாதார நலன்கள், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுத்தது. ஆனால் இளைஞர்கள் வர்க்க அடிப்படைக்கான பொருளாதார அடிப்படை இன்மையால், விரைவாக ஆயுத போரட்டத்தில் ஈடுபடுவதை துரிதமாக்கியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் வடிவ மற்றத்தை மட்டும் இந்த ப+ர்சுவா இளைஞர்கள் ஏற்படுத்தினர். சித்தாந்த ரீதியாக, பழைய அதே கொள்கையை தமது கொள்கையாக கொண்டு இருந்தனர். கூட்டணியின் நிலப்பிரபுத்துவ தரகு தன்மையை ஆதாரமாக கொண்ட, அதே தளத்தில் குட்டிபூர்சுவா கனவுகள் வெளிப்பட்ட போது எல்லாம், அவை படுகொலை அரசியலுக்குள் வழிகாட்டி அழிக்கப்பட்டது. கூட்டணியின் வர்க்க சித்தாந்தமே, பின்பு புலியின் சிந்தாந்தமாக மாறியது. பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் அரசியல் எடுபிடியாக வாழ்ந்த காலத்தில், எதை தனது அரசியலாக வரிந்து கொண்டிருந்தனோ அதுவே ~மேதகு| தேசிய தலைவரான பின்பும் நீடித்தது. இதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலபிரபுத்துவ தரகு கண்ணோட்டம் சார்ந்த குட்டிபூர்சுவக் கனவு, பாசிசத்தின் மைய ஊற்று மூலமாகும். குட்டிபூர்சுவா உதிரிக் கனவுகளை உள்ளடக்கிய தனது அரசியல் வழியை, நேரடியாக கூட்டணியில் இருந்து புலிகள் பெற்றனர்.  இது இயல்பாகவே இடது தன்மைக்கு எதிரான அடிப்படைக் கோட்பாட்டில் இருந்தே, தன்னை தகவமைத்துக் கொண்டது. புலிகளின் ~மேதகு| தலைவர் பிரபாகரன் உட்பட பலரும், கூட்டணியின் வளர்ப்பு நாய்களாகவே இருந்தவர்கள் தான். சொன்னதை வாலாட்டியபடி ஈவிரக்கமின்றி செய்தவர்கள் தான் இவர்கள்.

1970 களில் குட்டிப+ர்சுவா வர்க்க இளைஞர்கள் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள், தூப்பாக்கிச் சூட்டுகளை நடத்தினர். இதற்கு பலியானவர்கள் அனைவரும் கூட்டணியின் அரசியல் எதிரிகளாக இனம் காட்டப்பட்டவர்கள். கூட்டணியினால் துரோகியாக முத்திரை குத்தப்பட்டவர்கள். இங்கு துரோகிகள் யார் என்றால், கூட்டணிக்கு எதிரான கருத்துடையோராக இருந்தோரை குறித்து கருதப்பட்டது. கூட்டணியின் கருத்துக்கு எதிரானவர்கள், தேசியத்தின் எதிரிகளாக கருதி அழிக்கப்பட்டனர். பாசிசத்தின் அரசியல் உள்ளடகத்தை, கூட்டணியின் அரசியல் வெளிப்படுத்தி நின்றது. கூட்டணியுடன் முரண்பட்டவர்கள் தேசியத்தின் எதிரியாக அடையாளம் காட்டினர். இவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டனர் அல்லது துரோக முத்திரை இடப்பட்டனர். இப்படி முத்திரை இடப்பட்டவர்களை தேடி அளிப்பது, தமிழ் தேசிய போராட்டமாகியது. அதுவே ஆயுதப் போராட்டமாக வளர்க்கப்பட்டது. இங்கு இந்த தேசியம் பராளுமன்றத்துக்கு வெளியில், ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்த காலத்தில், துரோகம் என்பது ஒரு குறித்த கட்சிக்கு எதிரானதை மட்டுமே விளிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக இந்த துரோகம் என்பது வரையறுக்கப்பட்டவில்லை. பராளுமன்ற அரசியலுக்கு பதில் ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்று, அதுவே தமிழ் மக்களின் அதிகார பிரதிநிதியாக மாறிய போதும் சரி, துரோகம் என்பது ஒரு குறித்த கட்சிக்கு அல்லது இயக்கத்துக்கு எதிரானதை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டது. தேசிய அரசியல் என்ன என்பதில் இருந்து, துரோகம் இன்று வரை வரையறுபக்கப்படவில்லை. இந்த துரோகம் மக்களின் அடிப்படையான சமூக அரசியல் நலன்களில் இருந்து, வரையறுக்கப்படவில்லை.

பாசிசத்தின் பண்பியல் கூறுகளை கூட்டணியின் வலதுசாரி அரசியலில் இருந்தே உருவாகியது. தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலன்களை சார்ந்து நின்ற கூட்டணி, ஏகாதிபத்திய நலன்களுக்காக மக்களிடையே பிளவை எண்ணை ஊற்றி வளர்த்தனர். இனவாதத்தை மூலதனமாக்கினர். இதே போன்ற பேரினவாத அரசு இனவாதத்தை அடிப்படையாக கொண்டு தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை பேணிபாதுகாத்தது. இதன் மூலம் ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிகத்தை நிறுவும் ஒரு பகுதியாக, இலங்கையிலும் ஆழமாக ஊடுருவி மறுகானியாதிக்கத்தை விரைவுபடுத்தி வந்தது.

இந்த நிகழ்ச்சி நிரலில் துல்லியமாக்க, இரு தரப்பினரும் பாசிசத்தை ஒரு சமூகக் கூறாக தத்தம் இனவாத செயல்பாட்டில் மையக் கூறாக கட்டமைத்தனர். கூட்டணியின் பராளுமன்றம் சார்ந்த வீரவாசனப் போராட்டமும், குட்டிபூர்சுவா இளைஞர்களின் ஆயுதம் எந்திய தனிநபர் பயங்கரவாத போராட்டமும் அக்கம் பக்கமாக நிலவின. இந்த இரண்டு போக்கும், ஐக்கியப்பட்ட வழிகளில் நடைபோட்டன. இந்த இனவாதப் போக்கில் எற்பட்டு வந்த வளர்ச்சியை மிஞ்சும் வகையில், சிங்கள இனவாதம் தன்னை விரிவுபடுத்தியது. இதனால் தமிழ் இனவாதத்தில் உள்ளார்ந்தமான அரசியல் நெருக்கடி ஆரம்பமாகியது. ஆயுதம் எந்தியோருக்கும், பராளுமன்றவாதிகளுக்கு இடையில் முரண்பாடாக பரிணமித்தது. இந்த முரண்பாடு படிப்படியாகவே வளர்ச்சி பெற்றது. தமிழ் மக்கள் மேலான அதிகாரம், ஒன்றில் இருந்த ஒன்று கைமாறிய போக்கு படிப்படியாக நிகழ்ந்தது. இந்த நிகழ்வும், அதன் வளர்ச்சியும் கூட பாசிச வழிகளில் அரங்கேறியது. இங்கு துரோகம் என்பது மீண்டும் கட்சி சார்ந்தாக இருந்தது. அரசியல் வழிப்பட்டதாக மாறவில்லை. அதாவது எந்தக் கட்சி மற்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி அழித்ததோ, அந்தக் கட்சிக்கு மேல் ஆயுதம் எந்திய குழுக்கள் துரோக முத்திரை குத்தினர். ஆனால் அரசியல் ரீதியாக எந்த விமர்சனமும் இருக்கவில்லை. இது இன்று வரை தொடர்கின்றது. இது பின்னனியில் தான் தனிநபர் அதிகாரம் வரை விரிவு பெற்றது. அதாவது தலைவர் யார் என்ற அதிகாரப் போட்டியும், துரோக முத்திரை குத்தி அழிக்கப்படுவதை நியாயப்படுத்துவதுமே, தேசிய அரசியலாகியது.

1.தேசியம் என்றும் அரசியல் வழிப்பட்டதாக அடையாளம் காணப்படவில்லை.

2.துரோகம் என்பது குறித்த கட்சிக்கு எதிரானதாகவும், தனிப்பட்ட ஒரு தலைவருக்கு எதிரானதாகவும் வரையறுக்கப்பட்டதே ஒழிய, அரசியல் வழிப்பட்டதாக இருக்கவில்லை.

3.ஆயுதம் எந்திய பூர்சுவா இளைஞர்களின் கைகளுக்கு, தமிழ் மக்கள் மேலான தேசிய அதிகாரம் கைமாறிய போது, கூட்டணியின் அரசியல் வழியில் இருந்து தன்னை சுய விமர்சனம் செய்யவில்லை. அதே அரசியலை தொடர்ச்சியாக பேனினர். இதை அடையும் வழியை மட்டும் மாற்றினர்.
 
4.மக்களை அடிமைப்படுத்துவது, அவர்களின் உழைப்பை சூறையாடுவது, சமூக ஒடுக்கு முறைகளை தொடர்ந்து பேனுவது என்ற, தமிழ் தேசிய பாராளுமன்ற அரசியல் வழிகளில் இருந்து குட்டிபூர்சுவா இளைஞர்களின் ஆயுதம் எந்திய வடிவமாக அது கைமாறியது. இது பாராளுமன்ற வழிகளுக்கு பதில், தூப்பாக்கி முனையிலான நேரடி ஒடுக்கு முறையாக மாறியது. இது அன்றாடம் வெளிப்பட்டலும், மக்கள் நடைமுறையில் உணர்ந்தாலும், சிங்கள இனவாத பாசிசத்தால் மூலமிடப்பட்டு இருந்தால்  தன்னை மூடிமறைத்துக் கொண்டது.

இப்படி கைமாறிய அதிகாரம் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கச் சார்பை, கூட்டணியிடம் இடம் இருந்து கைமாற்றி அப்படியே தன் ஆணையில் வைத்தது. அதே நேரம் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் குறுகிய நலன்களையும் ஒன்று இனைத்த, ஒரு கலவையாக தன்னை இனம் காட்டியது. இதன் வளர்ச்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களை உருவாக்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள், வௌ;வேறு ஏகாதிபத்திய தரகுகளாக செயற்படும் அரசியல் வரையறையை, தமது அரசியலாக வரையறுத்துக் கொண்டன. ரூசியா மற்,ம் அமெரிக்க ஏகாதியத்திய நலன்களை அடிப்படையாக கொண்டு உருவான இக் குழுக்கள், இடைநிலை பிரதிநிதிகள் ஊடாக வழிநடத்தப்பட்டனர். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் முதல் மாபிய குழுக்கள் என்று ஒரு விரிந்த தளத்தில் இடைத் தரகு குழுக்களே, இந்த குட்டிபூர்சுவா இளைஞர்களின் அரசியலை நடவடிக்கைகளை வழிநடத்தினர். முரண்பட்ட குழுக்கள் முரண்பட்ட கலவைக் கோட்hபாடுகளை முன் தள்ளினர். இந்த முரண்பாடுகள், கலவையான கோட்பாட்டின் ஒருமைக்குள் நகர்த்தியது. இதற்கு வெளியில் இடது வழியிலான ஒரு சில குழுக்கள் உருவானது. இது விதிவிலக்கு மட்டுமே.

இப்படி உருவாகிய இந்த குட்டிபூர்சுவா வர்க்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பை என்றும் முன் வைத்ததில்லை. உள்நாட்டு எதிரிகளை அடையாளம் காட்டவில்லை. இனவாத எல்லைக்குள், மொழி ரீதியாகவே எதிரியை அடையாளம் காட்டினர். எதிரியைப் பற்றி தெளிவற்ற நிலையில் உருவாகிய ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள், தமது அரசியல் வழியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்ச்சியாகவும், குட்டிபூர்சுவா நலன்களையும் ஒன்று இணைத்து ஒரு கலவையாக தன்னை ஒழுங்கமைத்தது. இவை அனைத்தும் தேசிய நலனை, அதாவது மக்களின் அடிப்படையான தேசிய நலனை முன்வைத்த போராட முன்வரவில்லை. மாறாக மக்களின் அடிப்படையான தேசிய கோரிக்கை மீது ஒடுக்கு முறையைக் கையாண்டனர். அத்துடன் மார்க்சியத்தின் சொற் களஞ்சியங்களில் இருந்த சில சொற்களை உள்வாங்கி, அதை கலவையாக்கி தம்மைத் தாம் அலங்கரித்தனர். இதனால் இந்த கலவை இனம் காண முடியாத ஒரு அரசியல் வழியாக, எட்ட நிற்போரை மயக்கி நின்றது.

உருவான ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் தனது அரசியலாக, துப்பாக்கியை ஆணையில் வைத்தனர். ஆயுதமே அனைத்துமாகி, அதுவே ஒரு தமிழ் தேசிய மொழியாகியது. ஒட்டுமொத்தத்தில் துப்பாக்கியே அரசியல் ஆணையாகியது. ஆயுதம் எந்தியவனின் சிந்தனை தேசியமாகவும், எதிரானது துரோகமாகவும் வரையறுக்கப்பட்டது. அதிகாரம் தேசியமாக, அதிகாரமற்றவை துரோகமாகியது. இப்படி உருவான அமைப்புகள், கொள்கை வழிப்பட்ட ஐனநாயக பூர்வமான ஸ்தாபன ஒழுங்கில் தன்னை கட்டமைக்கவில்லை. சில விதிவிலக்கு இருந்த போதும், அது ஒரு தலைப்டசமாக ஜனநாயக விரோதமான வகையிலான அதிகார மையங்களை உருவாக்கியது. உருவான இயக்கங்களை உருவாக்கியவர் தலைவராகவும் அல்லது ஆயுதத்தை சிறப்பாக பயன்படுத்தியவர் அல்லது மற்றவாகள் மேல் அச்சத்தை எற்படுத்தும் கொலைகாரர்கள் தலைவர்களானர்கள். இது போன்ற எதோ ஒன்றை அடிப்படையாக கொண்டே, அமைப்புகளின் வளர்ச்சியும் அதன் ஒழுங்கமைப்பும் வரையறுக்கப்பட்டது.

இப்படி உருவான போது, இதுவே அமைப்பின் ஜனநாயக வாழ்வை மறுத்து நின்றது. அவ்வமைப்பு உருவான நோக்கத்திலேயே, முரண்பாடுகள் ஒட்டிப் பிறந்தது அதன் விதியாகியது. ஒவ்வொரு விடையத்திலும் எற்பட்ட முரண்பாடுகளை, துரோகமாக வரையறை செய்து அதை அழித் தொழித்தனர். உருவான அமைப்புகளின் கலப்புக் கோட்பாடுகள், மற்றொரு பக்கத்தில் அடிப்படையான போராட்ட வழி தொடர்பான முரண்பாட்டுக்கு அடித்தளமிட்டது. முரண்பாடுகள் இந்த அமைப்புகளின் இயங்கியல் விதியாக, அதை அழிப்பது தேசியதத்தின் பண்பியல் கூறாகியது.

உண்மையில் எமது நிலப்பிரபுத்துவ சாதிய ஆணாதிக்க சமூக அமைப்பில் செறிந்துள்ள பாசிச பண்பியல் கூறுகள், ஆயுதம் எந்தியோரின் அரசியல் சித்தாந்தமாகியது. பாசிசமே, தேச விடுதலை இயக்கமாக நீடிப்பதற்குரிய அடிப்படையாகவும் ஆதாரமாகவும் மாறியது. தனது சொந்த அமைப்பிலும், மக்களின் மேலும் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தைக் கைவிட்டால், போராட்டமே சிதைந்து விடுமளவுக்கு போராட்டம் பாசிசப் பண்பாகியது. அரசியல் ரீதியாக மக்களையும் சொந்த அணியையும் தேசிய விடுதலைப் போராட்டம் கட்டமைப்பதற்கு பதில், பாசிச பண்பியல் வழியில் பாசிசத்தையே தேசியமாக உருவாக்கினர். இதைத் துல்லியமாக புலி சார்ந்து ஆராய்வோம்.

பி.இரயாகரன்
தொடரும்

10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01) 

 

Trackback(0)
கருத்துக்கள் (0)Add Comment

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
Last Updated ( Tuesday, 27 July 2010 07:32 )  
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner