திரு. பிரபாகரனின் கடந்த மாவீரர்தினவுரையில் கொசோவோ குறித்தவொரு மேற்கோள் காட்டப்படுகிறது. கொசோவோ யுத்தஞ் செய்வதற்கானவொரு சூழலை அன்றைய ஒன்றிணைந்த யுக்கோஸ்லோவிய அரசியல் மற்றும் பொருளியல் ஆர்வங்கள்மட்டும் ஏற்படுத்தியிருக்கவில்லையென்பதும் அது வரலாற்று ரீதியாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறானது துருக்கிய ஒஸ்மானியச் சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடர்வதும் நாம் அறிந்த வரலாறுதாம். முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களும் அதற்குப் பின்பான சோசலிசத்துக்கெதிரான பனிப்போர்கள்-சூழ்ச்சிகளும் கிழக்கைரோப்பாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சிகளைத் திட்டுமிட்டுத் தாக்கி அழித்த வரலாறும் இந்த மேற்குலக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குமான தொடர்புகள் அதிகமாகவே இருக்கிறது.
இந்த வகையானவொரு அரசியல்,இனவொதுக்கல்-அழிப்புகளுக்கும் நிகராகத் தமிழ் பேசும் மக்களும் (ஒத்ததன்மையோடே) இலங்கையில் முகங்கொடுக்கிறார்கள். எனினும்,எமது போராட்டத்தைப் பயங்கரவாதமெனச் சொல்வதற்கான அரசியற்காரணங்களுக்கும் இன்றைய கொசோவோ அரசியல் தீர்வுக்கான அரசியில் பரிந்துரைப்புகளுக்குமான மேற்குலக ஆர்வங்கள் வெவ்வேறான திசைவழிகளில் நகரும் தரணத்தில்,நம்மைப் பயங்கரவாத முத்திரைக்குள் அடக்க முனையும் அரசியலைப் புலிகளுடாகச் செய்வித்த மேற்குலகமானது, இன்று கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அங்கீகரிக்க முனைகிறது. வரும் பெப்பரவரிமாதம் 2008 இல் கொசோவின் சுதந்திரப் பிரகடனம் அறைகூவலிடப்படுகிறது. இங்கே, அவற்றை ஏற்பதற்கான-அங்கீகரித்து ஆதரிப்பதற்கான முறைமைகளில் உலக ஆர்வங்கள் அரசியல் முன்னெடுப்பைச் செய்கின்றன.
கொசோவோ தனிநாடாவதற்கான பரிந்துரைப்புகள் ஐ. நா. வரை பேசப்படுகிறது. ஆர்வமுள்ள நாடுகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே அதை முன்னின்று செயற்படுத்தும் வகைகளிலான அழுத்தத்தைக் கொடுத்தபடி கொசோவோவின் பிரச்சனைகளைத் தீர்பதற்காக முனைந்து வருவதும்,இந்த அதீத விருப்புக்குள் ஐரோப்பாவின் கட்டம் கட்டமான ஆர்வங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. வளர்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய உள்ளிணைவுகளும் அதுசார்ந்த பொருளாதார மற்றும் கட்டுமானக்காரணங்களும் புதிய ஐரோப்பாவின் தலைமையைச் சில வளர்ந்த ஐரோப்பாவுக்கு(ஜேர்மனி,பிரான்ஸ்) வழங்கிய கையோடு,இத்தகைய நாடுகள் மிக ஆழமாகச் செரித்துவரும் பொருளியல் இலாபங்களை மேலும் நிலைப்படுத்தி வருவதற்கு, கொசோவோவின் இனப்பிரச்சனை முட்டுக்கட்டை இடுகிறது.
கொசோவோ முஸ்லீம்மக்கள் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்குள் உள்வாங்கப்படும் ஒவ்வொரு நிலைமைகளும் அகன்ற ஐரோப்பாவுக்கு எதிரானதாகவே இருக்குமென்பதை ஐரோப்பியப் பொருளியல் வல்லுநகர்கள் குறித்தே வருகிறார்கள். இது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கூடாக அந்த மக்களை ஏமாற்றிவிடத்துடிக்கும்(தனிநாடுண்டு விலங்குடன்) அரசியலைக் கொண்டிருப்பினும் அகன்ற ஐரோப்பிய இணைவுகளுக்கும் மற்றும் ஐரோப்பிய செங்கன் ஒப்பந்தக் காரணங்களுக்கும்-நலன்களுக்கும் மிகக் கெடுதியாக இருக்குமென்பதும் மிக முக்கிய காரணமாகிறது.
ஐரோப்பியப் பொருளாதார வலையமானது மிக இலகுவாகத் தங்கு தடங்கலின்றி முழுமொத்த ஐரோப்பாவையும் கட்டிப்போடுவதற்கு எல்லைகள் தகர்வது மிக அவசியமாக இருக்கிறது. இத்தகைய காரணத்தால் செங்கன் ஒப்பந்தம் அமூலக்கு வந்து தற்போது எல்லைகள் தகர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கூடாக இஸ்லாமியக் குண்டுகள் வருவதற்கான தளமாகக் கொசோவோ இருப்பதற்கான சில அசமாத்தங்களை முன்கூட்டியறிந்த ஜேர்மனிய மற்றும் ஐரோப்பியப் புலனாய்வுத்துறை மிகவும் நேர்த்தியாகச் சொல்லும் அறிவுரை:"அகன்ற ஐரோப்பாவில் எதிரிகளற்ற அரசியல்நகர்வு". இந்தப் பொறிக்குள் நிலவும் பாரிய ஒடுக்குமுறையானது அரசியல் மற்றும் சட்டங்களால்மட்டும் நிலை நாட்டத்தக்க பாதுகாப்புக் கிடையாது. எனவே, தேசங்களையும் அந்தந்த மக்களையும் உள்ளிருந்து கண்காணிப்பதற்கான குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவசியமாகிறது. கொசோவோ தினிநாடாவதும் அதன் பிறப்பில் அந்த நாட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையை ஐரோப்பியத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி"தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் குட்டி"வருவதற்கும் முழுப்பாத்திரையும் ஐரோப்பியத் துருப்புகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு அரசியல் சூதாட்டம் ஆரம்பமாகிறது.
மக்கள் உரிமை-இனங்களின் உரிமை ஆர்டிக்கல் 2 ஐ. நா-சபைச் சாசனம் கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தையும் அந்த நாடு செர்பியாவிலிருந்து பிரிந்த சுதந்திரமான தேசமாக ஏற்றுக்கொள்ளுமானால் இலங்கையிலும் மூன்று தசாப்பதாக நடக்கும் போரில் இலட்சம் மக்கள் அழிந்து,தமிழ் பேசும் மக்களின் தேசம் சுடுகாடாகியுள்ள இன்றைய நிலையில் தமிழ்பேசும் மக்களால் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டால்,அதாவது கொசோவோ பிரகடனப்படுத்திய ஒருசில மணி நேரத்தில் ஈழம் தன்னைப் பிரகடனப்படுத்தினால் இதை இந்த ஐ. நா. வவின் சாசனமும்,ஐரோப்பாவும் ஏற்கும் நிலை உள்ளதா?
இங்கேதாம் வருகிறது எது பயங்கரவாதமென்று.
இதுவொரு தரணம்.
இங்கே, நமது அரசியல் வெற்றிபெறும் ஒரு தரணம் வருகிறது.
இதைச் சாதகமாக நிலைப்படுத்தும் இராஜ தந்திரம் தமிழர்கள் தரப்பிடம் இருக்கிறதா?
கிறிஸ்த்துவுக்கு முன் 1000 ஆண்டளவில் கொசோவோவின் மக்கள் குடியேறிதற்கான தரவுகள் கிடைக்கின்றன. எனினும், அவர்களை ஐரோப்பியச் சில வரலாற்றாளர்கள் தனித்துவமான இனமில்லையென்றும் வாதாடுகிறார்கள்;(1000 v. Chr. : Verschiedene Stämme der Illyrer bewohnen die westliche Hälfte der Balkanhalbinsel vom Norden des heutigen Griechenlands bis nach Pannonien. Die albanische Forschung sieht die Albaner als Nachfahren der alten Illyrer. Westliche Forscher gehen davon aus, dass die Albaner aus einem altbalkanischen Volk hervorgingen, welches die Romanisierung im unzugänglichen Berggebiet Nordalbaniens überdauerte. )இரண்டு மில்லியன்கள் மக்கள் தொகையுடைய கொசோவோவின் மக்கள்தொகையில் 50 வீதமானவர்கள் எந்த வேலைவெட்டியுமற்ற வெறும் ஊர் சுற்றிகளாகவும் ,கிரிமினல்களாகவுமே இருப்பதாகக் குறிப்புகள் உண்டு. அதுவும் அவர்களின் சனத் தொகையில் எழுபது வீதமானவர்கள் 15-30 வயதுக்கு உட்டபட்ட குடிகள். கொசோவோவர்கள் தம்மைப் பிரிந்து செல்லக்கூடியவொரு இனமாகப் பிரகடனப்படுத்து ஒத்திசைவாக இருக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிகா நமது மக்கள் இலங்கையில் மூன்று மில்லியன் இருந்தும் கொசோவோவைவிடப் பன்மடங்கு பொருளாதாரப்பலத்தைக் கொண்டவொரு இனமான ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டத்தையும் எங்ஙனம் பயங்கர வாதப் போராட்டமென்கிறது?
இங்கேதாம் நமது புலிகளின் உலகத் தொடர்பு,பின்புலம் அவர்களின் தோற்றம் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் குறித்த அரசியல் ஆய்வு வருகிறது. அங்கே, புலிகள் தமிழ் இனவிடுதலைக்கு எதிரானவொரு பாத்திரத்தைக் கொண்டிருப்பதை நாம் பல்வேறு கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம். எனவே, இதை நீட்டிமுடக்காது மேலே தொடர்வோம்.
இன்றைய ஐரோப்பாவானது கொசோவோவை வேட்டையாடி போர்கள் எத்தனையோ செய்தது.
இது, உலகில் நிகழும் தேசிய விடுதலைப் போராட்டங்களைத் தடுத்தபடி இப்போது கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை ஊக்குவித்து அங்கீகரிக்கக் காத்திருக்கும் தரணத்தில் ஐரோப்பாவின் முகப்பில்-வாசலில் இனவொடுக்குதலுக்கு முகங்கொடுக்கும் பெருந்தொகையான மக்களினம் குர்தீஸ் மக்களாகவே இருக்கிறார்கள். குர்திஸ் இனமானது ஐரோப்பாவின் காற்பந்தாக இருக்கும் இன்றைய நிலையில், அவர்களின் சனத்தொகையானது 26 மில்லியன்களாகும். இவர்கள் துருக்கி,ஈராக்,சிரியா என்று பற்பல எல்லைகளில் கிடந்து தமது தேசத்துக்காப் போராடும்போது, பதின்நான்கு மில்லியன்கள் குர்தீஸ் மக்களைத் துருக்கியில் ஓடுக்கும் துருக்கி அரசோ நாடுவிட்டு நாடு தாண்டி ஈராக்கில் குர்த்தீஸ் வலயத்தில் அமெரிக்க ஒப்புதலோடு வான் தாக்குதல் செய்து வருகிறது. இங்கே, இந்த ஐரோப்பிய மனிதாபிமானம் கிழிந்த கதையாகவே இருக்கிறது.
இக்கட்டுரை தொடரும்.
ப. வி. ஸ்ரீரங்கன்
23. 12. 2007