இலங்கையில் பேரினவாதம் புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இதற்கு தமிழகத்தில் நடந்தேறும் இனவாத போராட்டங்கள் மேலும் உதவுகின்றது. தமிழகத்தில் நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் இனவாதமும் இதைத் தான் இன்று செய்கின்றது. இந்தவகையில் தமிழக அரசும், அதே அரசியல் அடிப்படையிலான மாணவர்களின் இனவாதப் போராட்டங்கள் வரை, மீண்டும் இலங்கையில் இனவழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.
இன்று இவ்விரண்டு இனவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி செயற்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கும், அங்கு ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதம் செயற்படுகின்றது. தமிழகத்தில் மீண்டும் கட்டமைக்கும் இனவாதத்தை, இலங்கை வாழ் மக்களின் போராட்டமாக காட்டுகின்றனர். இதன் மூலம் மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அகற்றுகின்ற அரசியல் செயற்பாடு இந்தியாவில் நடந்தேறுகின்றது. 1983 இல் நடந்த அதே இனவாத அரசியல் செயற்பாடுகள். அன்று இந்த இனவாதப் போராட்டங்கள் மக்கள் போராட்டத்தை அழிக்கவும், ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இன்று அதே அரசியல் பின்னணியில், மீண்டும் வேறு வடிவில் இன்று அரங்கேறுகின்றது.