அழகுபடுத்தும் வீதிகட்காக
தகரங்களால் மூடப்பட்ட தெருவோரக் குடியிருப்புகள்
யாருக்காக அவசரமாகவே இடிக்கப்படுகிறது
ஆழிப்பேரலை விழுங்கிய குடிசைகள்
அடுக்குமாடி உல்லாச விடுதிகளாக எதற்காய் நிமிர்கிறது
வயிற்றுப் பசிக்கு கைநீட்டி அலைந்து
வாகன இரைச்சலிடையே கண்ணயர்ந்தவர்கள்
‘பிச்சைக்காரர் கொலை செய்யப்படுகிறார்களாம்’
எமது தேசத்தில் இரத்தம் தோயவும்
எமது உறவை அறுத்துப் போட்டதும்
எமது தலைமுறையை ஊனமாக்கிப்போட்டதற்கும்
சொந்தமானவர்கள் சொகுசு வாகனங்களில்...
இவர்கள் மட்டுமே பிச்சைக்காரர்கள்
வாழ்வையும் வளத்தையும் கொள்ளையிட்டவர்
நோவிலும் வலியிலும் கொட்டமடித்தவர்
சாவிலும் துயரிலும் வாக்குப் பொறுக்கியோர்
ஆம் நண்பன் கமகே......
நீயும் நானுமாய் என்றுமே மோதியது கிடையாது
இனவெறியும் மதவெறியும் யாரிடம் கிடந்தது
குப்பி கட்டிய பிள்ளைகள் உயிரில்
புலத்து வெறியர் கப்பல் ஓட்டினர்-வெட்டிமுழங்கிய
கயவர் கூட்டம் சுருட்டிய பணத்தோடு சோரம்போனது
செல் வீசிக்கொன்ற தேசத்தில்
வீதியில் படுத்துறங்கும் ஏழை எந்த இனம்
ஏழையை நோக்கி கல்வீசுகின்ற புண்ணியவான்கள்
பன்னாட்டு முதலைகளின்
பட்டுக்கம்பளத்தில் அழுக்குப்படிகிறதாம்
நாம் தோழமை கொள்ளும் காலம்
தொலைதூரமில்லை நண்பனே...........