PJ_2008_1.jpgஆந்திரப் பிரதேச மாநிலத்தில், விசாகப்பட்டினம் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாகப்பள்ளி, கோண்ட் பழங்குடியினர் வசித்து வரும் மலைக் கிராமம். நேற்றுவரை வெளியுலகம் அறிந்திராத சாதாரண கிராமமாக இருந்த வாகப்பள்ளி, இன்று ஆந்திரப் போலீசாரின் ரவுடித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் எதிர்த்து நிற்கும் போராட்ட மையமாக மாறியிருக்கிறது.

 

ஆந்திர மாநில அரசால், நக்சல்பாரிப் போராளிகளை வேட்டையாடுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் போலீசுப் படைப்பிரிவான ""வேட்டை நாய்'' (எணூஞுதூடணிதணஞீண்) போலீசார் கடந்த ஆகஸ்டு 20 அன்று, வாகப்பள்ளிக் கிராமத்திற்குள் நுழைந்தனர். கணேஷ் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு "தீவிரவாதியை'த் தேடுவது என்ற பெயரில், அக்கிராமத்திற்குள் நுழைந்த இந்த ""வேட்டை நாய்கள்'', அப்பழங்குடியினரின் வீடுகளுக்குள் அத்து மீறிப் புகுந்து துவம்சம் செய்ததோடு, 11 பெண்களைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தி னர். சமீபத்தில் குழந்தையை ஈன்றெடுத்த ஒரு இளம்தாய்கூட, இம்மிருகங்களின் பாலியல் வேட்டைக்குப் பலியாகியுள்ளார்.

 

அப்பெண்களும் பழங்குடியினரும் அவமானத்திற்குப் பயந்து, இப்பாலியல் பலாத்காரத் தாக்குதலை வெளியே சொல்ல முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போய் விடுவார்கள் என ஆந்திர போலீசு இறுமாந்து கிடந்தது. ஆனால், அவர்களோ இவ்வேட்டை நாய்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவமானத்திற்கும் நீதி பெறாமல் விடப்போவதில்லை என்ற முடிவோடு போராட்டத்தில் குதித்து விட்டனர்.

 

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் சம்பவம் நடந்த அன்றே, வாகப்பள்ளிக்கு அருகேயுள்ள நுர்மதி கிராமத் தலைவரிடம் சென்று உதவி கோரினர்; பிறகு, வாகப்பள்ளி, நுர்மதி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் அணிதிரண்டு சென்று, குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பதேரு போலீசு நிலையத்தில் முறையிட்டனர். அங்கிருந்த போலீசு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யாமல், இப்பாலியல் வன்கொடுமையை மூடிமறைத்து விடும் சதித்தனத்தில் இறங்கிய பொழுது, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லேக் ராஜாராவ் இப்பிரச்சினையில் தலையிட்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வைத்தார்.

 

ஆந்திரப் போலீசின் இந்த அத்துமீறல் வெளியே தெரிய ஆரம்பித்தவுடனேயே, மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், அகுன் சபர்லால், ""வேட்டை நாய் போலீசுப் படைப் பிரிவு அக்கிராமத்தின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை'' எனத் தடாலடியாக மறுத்தார். வேட்டை நாய் படையைச் சேர்ந்த போலீசார் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற விவரங்கள் ஒரு சில உயர் போலீசு அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அப்படையைச் சேர்ந்த போலீசார் சீருடை அணியத் தேவையில்லை; பெயர் மற்றும் பதவியைக் குறிக்கும் பட்டைகளை (badge) அணிந்திருக்கத் தேவையில்லை. அவர்கள் தேடுதல் வேட்டைக்குச் செல்லும் வாகனங்களில் பதிவு எண் இருக்க வேண்டிய அவசியமில்லை; அப்படையின் நடமாட்டம் குறித்து எந்த ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டியதில்லை என அப்படையின் நடவடிக்கைகள் அனைத்தும் இரகசியமாகப் பாதுகாக்கப்படுவதால், வாகப்பள்ளி கிராமத்தில் அவர்கள் நடத்திய பாலியல் வேட்டையை எளிதாக மறைத்துவிட முடியும் என ஆந்திர உயர் போலீசு அதிகாரிகள் மட்டுமின்றி, ஆந்திர முதலமைச்சர், உள்துறை அமைச்சரும் கூட நம்பினார்கள்.

 

எனினும், ""ஒரு குற்றச்சாட்டு பற்றி ஆரம்ப கட்ட விசாரணை கூட நடத்தாமல், அதனை எப்படி மறுக்க முடியும்?'' எனப் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், அறிவுலகத் துறையினரும் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல், போலீசு அதிகாரிகள் திணறிப் போனார்கள். பிறகு, நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, ""அப்படையினர் வாகப்பள்ளிக் கிராமத்திற்குப் போனார்களே தவிர, எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை'' என அரை உண்மையைக் கக்கினார், அகுன் சபர்லால்.

 

அம்மாவட்டக் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் ஐந்து இலட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து, அப்பெண்களின் வாயை அடைக்க முயற்சி செய்தார். அப்பெண்களோ, ""குற்றவாளிகளைத் தண்டியுங்கள்; இதைவிட அதிகமான பணத்தை உங்களுக்குத் தருகிறோம்'' எனப் பதிலடி கொடுத்து, போலீசின் முகத்தில் கரியைப் பூசினார்கள்.

 

தங்களை அவமானப்படுத்திய பெண்களைப் பழிவாங்கும் விதமாக, ஆந்திர மாநில போலீசு இயக்குநர் பஸ்தி, ""ஆந்திர போலீசாரின் தேடுதல் வேட்டையைத் தடுக்கும் நோக்கத் தோடுதான், அப்பெண்கள் இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள்; இதன் மூலம், அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவுகிறார்கள்'' எனக்கூறி அப்பெண்களை இரண்டாம் முறையாக அவமானப்படுத்தினார். அதேசமயம் ஆந்திர அரசோ, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பத்து கிலோ அரிசியும், ஒரு பாட்டில் மண்ணெண்ணெயும் கொடுப்பதாகக் கூறி, பழங்குடி இனப் பெண்களின் ""கற்புக்கு'' விலை நிர்ணயித்தது.

 

காங்கிரசு அரசின், போலீசு அதிகாரியின் இந்த பாசிசக் கொழுப்பிற்குப் பொதுமக்கள் பதிலடி கொடுத்தார்கள். புரட்சிகரஜனநாயக இயக்கங்களும், மகளிர் அமைப்புகளும் மட்டுமின்றி, காங்கிரசைத் தவிர பிற ஓட்டுக்கட்சிகளும் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரிப் போராட்டத்தில் குதித்தன. பழங்குடி இன மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து, ""குற்றவாளிகளைப் பணி இடை நீக்கம் செய்யக்கோரி'' ஆக.22 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கதவடைப்புப் போராட்டம் நடத்தின; மாவோயிஸ்டு அமைப்பினர் ஆகஸ்டு 27 அன்று விசாகப்பட்டினத்தின் கிழக்கு மண்டலத்திலும், மல்காகிரி மாவட்டத்திலும் கதவடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அரண்டு போன காங்கிரசு அரசு, ""குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டிப்போம்'' என நடுநிலையாளனைப் போலப் பேசத் தொடங்கியது.

 

குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள போலீசோ , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணையின் தொடக்க நிலையிலேயே குற்றத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி வேலைகளில் இறங்கியது. பதேரு போலீசு நிலையத்திற்கு அருகில் உள்ள அங்கப்பள்ளி அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனை செய்யும் ஆய்வக வசதி கிடையாது எனத் தெரிந்திருந்தும், அப்பெண்களை அம்மருத்துவமனைக்கே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் சதித்தனத்தைக் கண்டித்துப் பல்வேறு அமைப்புகளும் போராடிய பிறகுதான், அப்பெண்கள் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆக.21 அன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

சம்பவம் நடந்த ஆகஸ்டு 20 அன்றே மருத்துவப் பரிசோதனையை நடத்தாமல், வேண்டுமென்றே ஒருநாள் தாமதித்ததன் மூலம் முக்கியமான சாட்சியத்தை போலீசார் திட்டமிட்டே அழித்தனர். போலீசார் எதிர்பார்த்தபடியே, ஆந்திர அரசின் தடய அறிவியல் துறையும் அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என மருத்துவ அறிக்கை கொடுத்துவிட்டது. இதனைக்காட்டி, அப்பெண்கள் புளுகி வருவதாக போலீசார் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

ஒரு பெண், தான் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாக போலீசு நிலையத்தில் புகார் செய்தால், போலீசார் அப்புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 376ஆம் பிரிவு கூறுகிறது; அப்பெண் தரும் புகாரின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தலாம் என இந்தியச் சாட்சியச் சட்டப் பிரிவுகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்டவராகவோ/பழங்குடியினராகவோ இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாகக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வன்கொடுமை தடுப்புச் சட்டம் கூறுகிறது. போலீசாரோ, இவ்வழக்கில் சட்டப்படி நடக்கவே மறுத்து வருகின்றனர்.

 

ஆந்திர அரசும், போலீசாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, இச்சம்பவத்தைக் குழி தோண்டி புதைத்துவிட எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மையடையவே, இப்பிரச்சினையில் தலையிட்ட ஆந்திர உயர்நீதி மன்றம், ""இக்குற்றச்சாட்டு பற்றி ஆந்திர மாநில இரகசியப் போலீசார் விசாரிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. உயர்நீதி மன்றத்தின் உத்தரவு வெளியாகி ஏழு வாரங்கள் கழிந்த பிறகும் விசாரணை தொடங்காததால், பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். பங்கி சிறீதேவி, ஜனகாம்மா என்ற இரு பெண்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர். இதன்பின், இப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்ட உயர்நீதி மன்றம், ""ஏதாவது நிவாரண உதவி வழங்குமாறு'' கூறியதே தவிர, தனது உத்தரவு போலீசாரால் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது.

 

வேட்டை நாய் போலீசுப் படையின் கடந்த கால வரலாறை புரட்டிப் பார்த்தாலே, இச்சட்டப்பூர்வ சமூக விரோதக் கும்பலை விசாரணையின்றித் தண்டிக்கக் கோர முடியும். நக்சலைட்டு ஒழிப்பு என்ற போர்வையில், 1987ஆம் ஆண்டு 45 பழங்குடியினக் கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தியது, இப்படை. 1993ஆம் ஆண்டு இன்னிகருவு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்கள், வேட்டை நாய்களால் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டனர். சின்ன புல்லக்கா, ருப்பி, துப்ரி உள்ளிட்டு, நூற்றுக்கணக்கான பழங்குடி இனப் பெண்கள், மாவோயிஸ்டு அமைப்பில் இணைந்து பணியாற்றிய ஒரே காரணத்திற்காகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திரப் புரட்சிக் கலைஞர் கத்தாரைக் கொல்ல முயற்சித்தது மட்டுமின்றி, இப்படையினரால் இரகசியமாகக் கொன்றொழிக்கப்பட்ட புரட்சியாளர்கள்மனித உரிமைப் போராளிகளின் எண்ணிக்கையைப் பட்டியல் போட்டு மாள முடியாது.

 

இச்சம்பவத்தைப் பொறுத்தவரை, பழங்குடி இன நலத்துறையின் செயலர் நாகிரெட்டி, இந்த அத்துமீறல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தியிருப்பதோடு, பதேரு போலீசு நிலைய துணை ஆய்வாளர் உள்ளிட்ட 21போலீசாரைக் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டுத் தக்க ஆதாரங்களோடு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறார். உயர்நீதி மன்றம் கேட்டுக் கொண்ட பிறகும், இந்த அறிக்கையை வெளியிட மறுத்து வருகிறது, ஆந்திர அரசு.

 

வேட்டை நாய்கள் படைப் பிரிவு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை நிரூபிப்பதற்கு வேறு சில சாட்சியங்களும் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கு வசதியாக, அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். குட்டு அம்பலப்பட்டுப் போய் விடும் என்ற பயம் காரணமாக, அடையாள அணிவகுப்பு நடத்த மறுத்து வருகிறது, ஆந்திர அரசு.

 

பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரான பங்கி சிறீதேவியை, ""உண்மையைச் சொன்னால், உன் கணவரைக் கொன்று விடுவோம்'' என மிரட்டியிருக்கிறது, ஆந்திர போலீசு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் சட்டமன்ற உறுப்பினர் லேக் ராஜாராவின் மீது, ""போலீசுக்கு எதிராகப் பழங்குடி இனப் பெண்களைத் தூண்டிவிடுவதாக''ப் பொய்வழக்குப் போட்டு, அவரின் செயல்பாடுகளை முடக்க எத்தணிக்கிறது.

 

பழங்குடி இன மக்கள் நக்சல்பாரி போராளிகளுக்கு உதவக் கூடாது; அவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இப்படிப்பட்ட அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. எனினும், வாகப்பள்ளி பழங்குடி இனப் பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இன்னொரு நோக்கமும் உண்டு எனக் கூறப்படுகிறது.

 

வடக்கு ஆந்திராவின் வனப் பகுதிகளில் இரும்பு, நிலக்கரி, பாக்சைட் போன்ற கனிமவளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இச்செல்வங்களை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது, அரசு. இதனைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அப்பகுதிகளில் வாழும் பழங்குடி இன மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான அரங்கேற்றம்தான் வாகப்பள்ளியில் நடந்திருக்கிறது. 200க்கும் குறைவான பழங்குடி இன மக்கள் வாழும் வாகப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமத்து ஆண்கள் வேலைக்குச் சென்ற நேரமாகப் பார்த்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, அரசின் இந்த நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

 

பழங்குடி இனப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தியதன் மூலம், போலீசு வேட்டை நாய்கள் அம்பலமாகி நிற்கின்றன; ஆனால், நாட்டின் செல்வங்களைக் கூறு போட்டு விற்கும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போன்ற வேட்டை நாய்களோ, "வளர்ச்சி' என்ற பெயரில் தங்களின் அத்துமீறல்களை மூடி மறைத்துக் கொள்கின்றன.


· செல்வம்