பகுதி 41

டெல்லியில் எமது பத்திரிகையாளர் தொடர்புகளும் மிகவும் விரிவாக இருந்தது. குறிப்பாக டெய்லி ஹிந்து பத்திரிக்கை ஆசிரியர் ஜிகே ரெட்டி, ஹிந்துஸ்தான் டைம் ஆசிரியர் பட்னிஸ்(இந்த தொடர்பு தோழர் ஜெயபாலன் மூலம் ஏற்பட்டது), இடதுசாரி சிந்தனையுள்ள மிகப் பிரபலமான ஜான் தயால் டெல்லியில் வெளிவரும் patriot, மற்றும் மும்பையில் இருந்து வெளிவரும் blize பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் முக்கியத்துவம் பெறும். இவர் ஜான் தயால் எமது டெல்லி அலுவலக வீட்டுக்கே வந்து செயலதிபர் உமா மகேஸ்வரனை பேட்டி கண்டு ஒரு பக்க அளவுக்கு அந்தப் பேட்டி வந்திருந்தது. டெல்லியில் வந்திருந்த தோழர் சைமன், ஜோன் தயல் அவர்களுடன் மிக நீண்ட நேரம் விவாதித்து பேசிக்கொண்டிருப்பார். அடிக்கடி சந்திப்பார். மற்றும் பிபிசி புகழ்பெற்ற டெல்லி நிருபர் மர்க்டெலி, அவுஸ்திரேலிய வானொலி நிருபர் இவர்கள் எமது அலுவலகத்துக்கே வந்து செயலதிபர் உமாமகேஸ்வரனை பேட்டி கண்டு ரேடியோவில் ஒலிபரப்பினார்கள்.

மற்றும் PTI டெல்லி பொறுப்பாளர் எனது நெருங்கிய நண்பர் சந்திரசேகரன் எப்போது செயலதிபர் டெல்லி வந்தாலும் உடனடியாக சிறு பேட்டி எடுத்து போடுவார். PTI செய்தி ஸ்தாபனம் போடும் செய்திகளை இந்தியாவில், உலக நாடுகளில் உள்ள பத்திரிகைகள் எடுத்து போடுவார்கள். இதே மாதிரி ஜெர்மனியைச் சேர்ந்த ரைட்டர் செய்தி ஸ்தாபனமும் பேட்டி கண்டார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் பெண் செய்தியாளர் அவர்களும் வீட்டுக்கே வந்து பேட்டி கண்டார்கள். பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது செயலதிபர் உமாமகேஸ்வரனின் ஆளுமை மிகச் சிறந்ததாக இருக்கும். இவ்வளவு திறமை உள்ளவர் எப்படி அத்துலத் முதலியின் வலையில் விழுந்தார், என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் போல. 83, 84 ஆம் ஆண்டுகளில் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திறமையை பார்த்து சந்தோசப் பட்டவர்கள் நாங்கள். 83 ஆம் ஆண்டு செயலதிபர் உமாமகேஸ்வரன், சந்ததியார் இருவரும் சிலவேளைகளில் ஜோதிஸ்வரன் என்ற கண்ணனும் அமர்ந்து பல மணி நேரம் இயக்க வளர்ச்சி மற்றும் போராட்டம், மற்ற இயக்கங்கள் பற்றி பல மணி நேரம் அமர்ந்து விவாதிப்பதை, நான், மாதவன் அண்ணா, மாறன், கந்தசாமி, சிலவேளைகளில் செந்தில் தூர இருந்து இவர்களையே பார்த்துக்கொண்டு இருப்போம். எங்கள் வேலை அவர்களுக்கு தேநீர் உணவு போன்றவற்றை வழங்குவது. சந்ததியாரும், செயலதிபர் உமாமகேஸ்வரனும் குறிப்புகள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் விவாதத்தில் களைத்து போய்விட்டால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க எங்களோடு பேசி எங்களை கிண்டல் பண்ணுவார்கள். மிகவும் அருமையான ஆரம்பகால நிகழ்வுகள்.

என்று ஷெர்லி கந்தப்பா எமது இயக்கத்துக்குள் அடி எடுத்து வைத்தாரோ எல்லாம் மாறிவிட்டது. ஷெர்லி நம்பிக்கைக்கு உரிய ஆள் இல்லை இலங்கை உளவுத்துறையின் ஆள் என்று சந்ததியார செயல் அதிபரிடம் கூற அதைக் கேட்காமல் எமது செயலதிபர் ஷெர்லி கந்தப்பாவுக்கு இயக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்க எமது இயக்கத்தில் தலைவர்கள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதை நான் டெல்லியில் இருக்கும் போது, சென்னையில் இருந்து சக நண்ப நிர்வாக பொறுப்பாளர்கள் கவலையுடன் பரிமாறிக்கொண்ட செய்திகள். அதோடு செயலதிபர் உமாமகேஸ்வரன் மூடிய அறைக்குள் ஷெர்லி கந்தப்பா உடன் ரகசியமாக பேசும் பழக்கம் மட்டுமே தொடர்வதாக குறிப்பிட்டு சக சென்னை நிர்வாகிகள் கவலைப்படுவார்கள்.

சென்னை இலங்கை துணைத் தூதுவர் அலுவலகத்துக்கு ஒரு துணை தூதர் இருக்கும்போது, இன்னொரு துணைத் தூதர் வழமைக்கு மாறாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் அலுவலகம் சென்னை தாஜ் ஓட்டலில், அங்குதான் அவர் தங்கியிருந்தார். அவரின் பெயர் திஸ்ஸ ஜெயக்கொடி. சென்னை raw அதிகாரி உன்னி கிருஷ்ணன் CIA உளவாளியாக மாறியதற்கும் இவருக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு.

இவரது தாஜ் ஹோட்டல் ரூமுக்கு ஷெர்லி கந்தப்ப்பாவும், செயலதிபர் உமாமகேஸ்வரனும் இரவு 10 மணிக்கு மேல் மாதத்தில் பல நாட்கள் போய் தங்கியிருந்து காலை ஐந்து மணிக்குத்தான் திரும்புவார்களாம். துணைத் தூதுவர் திஸ்ஸா ஜெயக்கொடி கண்காணிக்கவென்று இருந்த இந்திய IB அதிகாரிகள், செயலதிபர் உமாமகேஸ்வரனை டெல்லிக்கு வரவழைத்து விபரங்கள் கேட்டபோது நானும் உடன் இருந்தேன். அவர் மழுப்பலான பதில் சொல்லியே கூறினார். இலங்கை துணைத் தூதுவர் எமது இயக்க ஷெர்லி கந்தப்பாவின் நெருங்கிய நண்பர் என்றும், தானும் போய் ஓரிரு முறை சந்தித்தேன் என்றும் பொய் கூறினார். இந்திய அதிகாரிகளை சந்தித்து விட்டு நாங்கள் இருவரும் வரும்போது, செயலதிபர் உமாமகேஸ்வரன் இவங்க லேசுப்பட்ட ஆளில்லை, எல்லாரையும் மிக நெருக்கமாக உளவு பார்க்கிறார்கள், நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறினார். இலங்கை துணைத் தூதரை சந்தித்து விசாரிக்கப்பட்டவர்களில் ஈரோஸ் அமைப்பின் பாலகுமாரன் ஒருவர்.

இந்த இலங்கை தொடர்புகள் கிடைத்த பின்பு தான் சந்ததியார் கொலை, எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் தடம் புரள துடங்கியது எல்லாம் ஆரம்பமாயின. இதைப்பற்றி நாங்கள் ஒரு சில முக்கிய தோழர்கள் பல செய்திகள் எங்களுக்குள் பரிமாறி., இது பெரியவரின் அதாவது செயல் அதிபரின் ராஜதந்திரமாக இருக்கக்கூடும் எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் கொழும்பில் இயங்கிய போது, அவருக்கு முழு உதவியும் லலித் அத்துலத் முதலி, முன்பு துணை தூதுவராக இருந்த திச ஜெயக்கொடி தான். கொழும்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீடு மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ள லலித் அத்துலத் முதலியின் சகோதரியின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விஜயகுமாரதுங்க எமது தோழர்கள் தங்கவும், அலுவலகம் நடத்தவும் வேறு வீடுகள் உதவி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் எனது பதிவுகளைப் பார்த்த, சென்னையில் உமாமகேஸ்வரனின் வீட்டில் மெய்பாதுகாப்பாளர் ஆக இருந்த ஒரு தோழர் தன்னை அடையாளம் காட்ட வேண்டாம் என்றும் பல செய்திகளை கூறினார். சென்னை வரும்போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். தற்சமயம் வெளிநாட்டில் வசிப்பதாக கூறினார். அவர் கூறிய விஷயங்கள் எல்லாம் தாஜ் ஹோட்டலுக்கு செயலதிபர் போய் விடிய வரும்வரை, அவருக்காக தன் காரில் தூங்குவதாகவும், ஆனால் யாரை சந்திப்பார் என்று தனக்கு தெரியாது என்றும் கூறினார். அதோடு அவர் கூறிய மற்றொரு விடயம் சந்ததியாரை பிடித்து வர செய்ய, சங்கிலி கந்தசாமி இடம் செயலதிபர் உமாமகேஸ்வரன் கோர, கந்தசாமி பெரிய ஐயா இது மட்டும் என்னால் முடியாது என்று கூறியிருக்கிறார். கந்தசாமி செயலதிபர் இடம் முதன்முறையாக இப்படிக் கூறியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் கூறினார். இவர் சென்னையில் கந்தசாமியின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர். சென்னையில் கே.கே நகரில் இருக்கும் உமாமகேஸ்வரன் வீட்டுக்கு சாதாரண தோழர்கள் யாரும் வந்து விட முடியாதாம். கந்தசாமி, கந்தசாமியின் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்கள் மட்டும் தான் நடமாடுவார்களாம்.

ஒரு நாள் மொக்கு மூர்த்தி வந்திருக்கிறார். இவர்கள் அவரை தடுக்க செயலதிபர் வெளியில் வந்து தான்தான் வரச்சொன்னேன் என்று கூறி வீட்டுக்குள் அழைத்துப் போய் பேசி இருக்கிறார். இதன் பின்புதான் மொக்கு மூர்த்தியின் உளவுப்படை, வாமதேவன் ஆகியோர் சந்ததியாரை கடத்தி கொலை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்குப் பின் மொக்கு மூர்த்தி செயலதிபர் உமாமகேஸ்வரன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

கந்தசாமியின் உளவுப்பிரிவு என்றாலும் மூர்த்தி கந்தசாமிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை. செயலதிபர் உமாமகேஸ்வரன் மூர்த்தி தொடர்பின் பின் மூர்த்தி பல இயக்கத் தோழர்களை தன்னிச்சையாக விசாரித்து கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக பழியும் சங்கிலி கந்தசாமி மேல் விழுந்துள்ளது. அவர் கூறிய இன்னொரு விடயம் தளத்தில் இருந்த எமது ராணுவ தளபதி மென்டிஸை, 1986 கடைசிப் பகுதியில் கிட்டு கைது செய்ய முன்பு, செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மிக அவசர செய்தி ஒன்று கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட நாள் நேரத்தில் தன்னுடன் வயர்லெஸ் இல் பேசும்படி. அதோடு அங்கு தங்களுக்கு நெருக்கடியான நேரமாக இருப்பதாகவும் உடனடியாக பல தோழர்களையும் ஆயுதங்களையும் தளத்துக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். செயலதிபர் உமாமகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் கூறிய விடயம் இயக்க வயர்லெஸ் ரகசிய அலுவலகம் சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்ததாகவும், மென்டிஸ் குறிப்பிட்ட நாள் நேரத்தில் செயலதிபர் போய் மென்டிஸ் உடன் பேசவில்லையாம். தான் செயலதிபர் இடம் நினைவுபடுத்த அவர் கந்தசாமியை அனுப்பி விட்டேன் என்று கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில் கந்தசாமி எல்லா பொறுப்புகளும் பறிக்கப்பட்டு சும்மா இருந்திருக்கிறார். தான் கந்தசாமியை பார்த்து மென்டிஸ் உடன் பேசினீர்களா என்று கேட்க, தனக்கு ஒன்றும் தெரியாது பெரிய ஐயா எனக்கு எந்த வேலைகளும் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார். அப்போது ஏன் மெண்டிஸ் உடன் பேசாமல் தவிர்த்தார் என தான் ஆச்சரியப்பட்டதாக அந்த மெய்ப்பாதுகாவலர் கூறினார். இது நடந்து இரண்டு நாட்களின் பின் சின்ன மெண்டிஸ் 1987 ஜனவரியில் பிரபாகரனால் நேரடியாக கொலை செய்யப்படும்போது செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லியில்இருந்தார். ஒருநாள் காலை சென்னையிலிருந்து மாதவன் அண்ணா தொலைபேசி மூலம் மெண்டிஸ் முதுகு முழுக்க அயன் பாக்ஸ் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக செய்தி வந்திருப்பதாக கூறினார். இந்தக் கொலையை பிரபாகரன் நேரடியாக செய்ததாகவும், காரணம் கிட்டு மெண்டிசை பிடித்து, சித்திரவதைகள் ஒன்றும் செய்யாமல் நல்லவிதமாக நடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் மெண்டிஸை சேரும்படி வற்புறுத்தி கொண்டிருந்ததாகவும், காரணம் முன்பு பலமுறை கிட்டுவை கொல்ல கூடிய சந்தர்ப்பம் இருந்தும், மெண்டிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டதால் கிட்டு மெண்டிஸ் மேல் ஒரு மதிப்பு வைத்திருந்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் பிரபாகரனை விட உலக நாடுகள் பத்திரிகைகள் எல்லாம் கிட்டுவின் புகழை தான் பாடின. கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் கிட்டு என்று தமிழ்நாட்டில் எல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வரும். இதனால் கிட்டு மேல் பிரபாகரன் கடுங்கோபத்தில் இருந்ததாகவும், ஆனால் இலங்கை போய் முழு பொறுப்புகளையும் தானே எடுத்து, கிட்டுவின் மேல் உள்ள ஆத்திரத்தில் கிட்டு தடுக்க தடுக்க சின்னமேண்டிசை, சுடும் அயன்பாக்ஸ் ஆல் சுட்டு உடம்பு தோலை முழுக்க உரித்து பிரபாகரன் நேரடியாக கொலை செய்ததாக தகவல்கள் வந்தன. இது பற்றி மேலும் உண்மைகளை அறிந்த தோழர்கள் உண்மையில் நடந்த விஷயங்களை பதிவுகளாக போட்டால் எல்லோருமே அறியக்கூடியதாக இருக்கும்.

மெண்டிஸ் கொலை பற்றிய தகவல் ஒரு தவறு நடந்துள்ளது. அதாவது மென்டிஸை அயன்பாக்ஸில் சூடு வைத்து கொலை செய்தது மாத்தையா என்று என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நேரம் பிரபாகரன் அங்கு இருக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். கிட்டு, மாத்தையா போட்டியில் இது நடந்ததாகவும் கூறுகிறார்கள். இது அந்த நேரம் கேள்விப்பட்ட தகவல் என்றபடியால் நான் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

பல நண்பர்கள் கேள்விப்பட்டசெய்திகளை எழுத வேண்டாம் என்று கூறுகிறார்கள். உண்மைதான். ஆனால் அன்று சின்ன மென்டிஸ் கொலை தொடர்பாக டெல்லியில் செயலதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் நான் பத்திரிகையாளர் மற்றும் எங்கள் தொடர்பு உள்ளவர்களிடம் பிரபாகரன் இந்தக் கொலையை நேரடியாக செய்தார் என்று தான் பிரச்சாரம் செய்தோம். அது எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது. அதைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் தவிர புதிதாக கேள்விப்பட்ட சம்பவத்தை எழுதவில்லை. இது எனது நேரடி அனுபவம்.

41A

எனது 41 ஆவது பதிவுக்கு, குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தள ராணுவ தளபதி விஜயபாலன் என்கிற மென்டிஸ் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பந்தமான பலவித கருத்துக்கள் இடம்பெற்றன. மானிப்பாய் இந்துக்கல்லூரியில் எனக்கு இளையோர் ஆக படித்த, என்னை தெரிந்த என்னோடு நெருங்கிப் பழகிய விஜயபாலன் என்ற மென்டிஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் சேர்ந்த டேவிட்சன், அவரது தம்பி ரோபின், எமது இயக்கத்தைச் சேர்ந்த சிவா ரஞ்சன் போன்ற பலர் வேறுவேறு இயக்கங்களில் இருந்தாலும், எல்லோரும் மிக நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுடன் படித்து நெருங்கிப் பழகிய விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கிய சிவபரன் என்ற நண்பர், நட்பை விட துரோகம் தான் சிறந்தது என்று, நம்பிக்கை துரோகம் செய்து விஜயபாலன் என்ற மெண்டிசை பிடித்துப்போன செய்தியை, அக் காலகட்டங்களில் மென்டிஸ் உடன் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் டேவிட்சனின் தம்பி ராபின் முழு விபரங்களையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைக் கீழே தருகிறேன். நன்றி தம்பி.

மானிப்பாய் பிரதேசத்தில் EPRLF இயக்கத்தில் அரசியல் வேலை செய்துகொண்டிருந்த றொபின் என்ற பெயர் கொண்ட நான் (அதே இயக்கத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த டேவிட்சனின் தம்பி) PLOTE போராளி மெண்டிஸ் அவர்களின் இறுதிக் காலத்தை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை இங்கு ஆவணப்படுத்த வேண்டியது அவசியமானது எனக் கருதுகின்றேன். 1986 ம் ஆண்டு இறுதி பகுதியில். PLOTE இயக்கத்தின் மேல் மக்களும், PLOTE போராளிகளும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர். உள்ளியக்க மோதல்களால் பல போராளிகள் விரக்தியின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டனர். ஆனால் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற, உடுவிலை சேர்ந்த PLOTE போராளி மெண்டிஸ் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையும், மரியாதையும் இருந்தது. இதுவும் புலிகள், குறிப்பாக கிட்டு, அவர் மீது பொறாமைப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. ஒரு இயக்கத்துக்குள் உள்ளியக்க மோதல்கள் ஆரம்பமானவுடன் அந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி, சக விடுதலை அமைப்புகளை அழித்தொழித்து வந்தார்கள், புலிகள். போராளி மெண்டிசையும் முடித்துவிட வேண்டும் என புலிகள் கங்கணம் கட்டினார்கள். குறிப்பாக கிட்டு முனைப்புக் காட்டினார்.

1986 மார்கழி 13ம் திகதி EPRLF மீதான தாக்குதலை ஆரம்பித்தார்கள் புலிகள். நானும் மற்றும் பல EPRLF போராளிகளும் அன்று புலிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் மோட்டார் ஷெல் உற்பத்தி செய்யும், ஆனைக்கோட்டையில் அமைந்திருந்த அப்பையா முகாமில் தடுத்து வைக்கப்பட்டோம். மறுநாள் எம்மை அவர்களின் சித்திரவதை, கொலைகூடமான, கந்தன் கருணை முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நான் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டேன்.

அரசியல் பிரச்சாரத்தில் எம்மை வாய்க்கு வந்தபடி விமர்சிப்பீர்களோ எனக் கேட்டு, கிட்டு, வாசு போன்ற பல புலிகள் எம்மை தாக்கினார்கள். Iron box ஐ சூடு படுத்தி எனது பின்புறத்தில் சூடு வைத்தார்கள். நான் சித்திரவதைகளை அனுபவித்த அதே முகாமில் தான் போராளி மெண்டிசும் மற்றும் EPRLF போராளிகளான கபூர், திலக், ஈஸ்வரன், பெஞ்சமின் போன்ற பல நூற்றுக்கணக்கான தோழர்களும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருந்தோம். போராளி மெண்டிஸ் பக்கத்து அறையில் கிட்டுவினால் மோசமாக தாக்கப்பட்ட காட்சிகளையும், அவரின் அழுகுரலையும் இப்போது நினைத்துப் பார்க்கின்ற போதும் கொதிப்படைகின்றேன். தோழர் பெஞ்சமின் EPRLF இயக்கத்தின் டாக்டர். அவரையும் சித்திரவதை செய்தார்கள். அவர் தனது சித்திரவதைக் காயங்களினால் அவஸ்தைபட்டுக்கொண்டிருந்த போதும், எனக்கு வைக்கப்பட்ட Iron box சூட்டுக் காயம் அழுகிக்கொண்டு செல்கின்றது, மருத்துவ உதவி கொடுக்கும்படி எனக்காக மனிதாபிமானக் குரல் கொடுத்தார். தோழர்கள் கபூர், பெஞ்சமின், ஈஸ்வரன், மெண்டிஸ் போன்றோரை இந்த அரக்கர்கள் கொன்றுவிட்டார்கள். அதிஷ்டவசமாக நான் விடுதலை செய்யப்பட்டேன். போராளி மெண்டிஸ் 1987 தைப்பொங்கல் தினத்துக்கு முன்னரே கொல்லப்பட்டுவிட்டார் என அறிகின்றேன். விடுதலையான என்னை போராளி மெண்டிசின் சகோதரி சந்தித்தார். நடந்தவற்றை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். மானிப்பாய் இந்துவில் கல்வி கற்ற சக பாடசாலை மாணவர்களான புலிகள் அமைப்பை சேர்ந்த சிவபரனும், PLOTE அமைப்பைச் சேர்ந்த மெண்டிசும் கல்லூரி காலங்களில் இருந்தே நண்பர்கள். மாறுபட்ட இயக்கங்களில் வேலைகள் செய்யும் போதும் நண்பர்களாக பழகியிருக்கின்றார்கள். மென்டிசின் வீடு நோக்கி புலிகளின் வாகனம் ஒன்று சென்றிருக்கின்றது. தப்பி ஓடுகின்றார் மெண்டிஸ். அப்போது சிவபரனை கண்ட சகோதரி, உனது நண்பன் தான் வருகின்றான் ஓடாதே என்று சொல்ல, மெண்டிசும், சிவபரனும் பேசியிருக்கின்றார்கள்.

தன்னை நம்பி வரும்படியும், விசாரித்துவிட்டு விட்டு விடுவதாகவும் கூறியிருக்கின்றான் சிவபரன். அவனை நம்பி சென்ற மெண்டிஸ் பிணமாக கூட வீடு திரும்பவில்லை. தைப்பொங்கலுக்குப் பின்னர் தமது வீட்டுக்கு வந்த புலிப்படையினர் மெண்டிஸின் மோதிரத்தை ஒப்படைத்து, மெண்டிஸின் படுகொலையையை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை அவர் சகோதரி மூலம் அறிந்தேன்.

அவர் கிட்டுவிடம் சென்று விசாரித்தபோது,மாத்தையா பொறுப்பெடுத்துவிட்டார், எல்லாம் அவரின் முடிவு தான் என்று, மாத்தையாவின் தலையில் பழியை போட்டிருக்கின்றார் கிட்டு. அக் காலகட்டத்தில் மாத்தையாவின் கை, யாழ்ப்பாணத்தில் ஓங்கியிருக்கவில்லை. சாகசங்களினாலும், உள்ளூர் வெளியூர், ஊடகங்களின் பரபரப்பு செய்திகளாலும், யாழ்ப்பாணத்தில் கிட்டு பரபரப்பாக பேசப்பட்டார். எப்போதும் தாழ்வுச் சிக்கலில் தடுமாறும் பிரபாகரன் அவசரமாக யாழ்ப்பாணம் வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பாரிய தாக்குதல்களை நடாத்தி கிட்டுவின் பிரபல்யத்தை மட்டுப்படுத்த முயற்சியும் செய்தார். எதிர்பார்த்த பலனை பெற முடியவில்லை. மாத்தையாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த நாவற்குழி பௌஸர் தாக்குதல் தோல்வி கண்டது. விரக்தியடைந்த பிரபா - மாத்தையா பிரிவினரால் கிட்டு மீது கிரானைட் தாக்குதல் நடத்தப்பட்டது, கிட்டு காலை இழந்தார். ஒரு முறை லண்டனில் தட்டுக்குப் பெயர் போன கிட்டு, உரையாற்றும் போது, தனது கால் இழப்பிற்கு உள்வீட்டுச் சதியே காரணம் என்பதை, கிட்டு,பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11